தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை இலங்கை பொலிஸ் தமிழ் ஊடகவியலாளரை கைது செய்தது
By Subash Somachandran Use this version to print| Send feedback ஏப்பிரல் 8 அன்று வட இலங்கையில் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த ஊடகவியலாளரான லோகதயாளன், உதயன் பத்திரிகையில் எழுதிய செய்தி தொடர்பாக நெல்லியடிப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட்டார். இந்த சம்பவம் புதிய ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை போலவே ஊடகங்களை வாயடைப்புச் செய்ய முயற்சிப்பதையே வெளிப்படுத்துகிறது. சுயாதீன ஊடகவிலாளரான இவர், “நெல்லியடிப் பொலிசார் ஒருவர் பாடாசாலை மாணவி ஒருவருடன் தவறாக நடக்க முற்பட்டார்” என்று ஒரு செய்தியை எழுதியதே அவர் செய்த குற்றமாகும். லோகதயாளன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மறுநாள் வரை சிறையில் அடைக்கப்பட்ட அவர் சட்டத்தரணிகளின் முயற்சியால் பிணையிலேயே விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 29ம் திகதி அவர் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்கின்றார். இந்தச் செய்தி பொய்யானது என்பதே பொலிசாரின் குற்றச்சாட்டாகும். முதலில் பத்திரிகையின் ஆசிரியரை அழைத்து செய்தி தொடர்பாக நெல்லியடி பொலிசார் விசாரணை நடத்தினர். மறுநாள் விசாரணைக்காக நிருபரை அழத்த பொலிசார், அங்கே அவரை கைது செய்து அன்றே அவரை நீதவானிடம் கொண்டு சென்று விளக்க மறியலில் வைத்தனர். பிணையில் விடுவிக்கப்படும் போது இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்க கூடாது என எச்சரிக்கப்பட்டதால் லோகதயாளன் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஜனாதிபதி சிறிசேன சிரேஷ்ட அமைச்சராக இருந்த மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தின் கீழ், பாதுகாப்புப் படைகளின் குற்றங்கள் தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் சரீரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சிறிசேன தலைமையிலான “நல்லாட்சியின்” கீழ் செய்தி ஒன்று வெளியிடப்பட்டமை தொடர்பாக நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இது பாதுகாப்பு படைகளின் குற்றங்கள் தொடர்பாக செய்தி வெளியிடுவதை சட்டபூர்வமாக தடுப்பதற்கான முன் முயற்சியாகும் என உலக சோசலிச வலைத் தளம் எச்சரிக்கின்றது. அமெரிக்க சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக, இராஜபக்ஷவின் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளை சர்வாதிகாரமாக தூக்கிப் பிடித்து சிறிசேனவிற்கு ஜனநாயக சாயம் பூசும் வேலையில் உதயன் உட்பட தமிழ் முதலாளத்துவப் பத்திரிகைகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் ஈடுபட்டிருந்தன. லோகதயாளன் கைது செய்யப்பட்டமை, யுத்த காலத்தில் போலவே பத்திரிகையாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மீண்டும் தலையெடுப்பதன் பாகமாகவே இடம்பெற்றுள்ளது. கடந்த 7ம் திகதி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் ஊடகவியலாளர் ரி. வினோஜித், கொழும்பு ஊடகவியலாளரான ரி.பிரதீபன் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் மயூரப்பிரியன் ஆகியோர் இரகசியப் பொலிசார் எனச் சந்தேகிக்கப்படுவோரால், கத்தி போன்ற ஆயுதத்தினால் அச்சுறுத்தப்பட்டனர். அந்த நபர்கள் பின்னர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து அங்கு நின்ற பொலிசாருடன் சகஜமாக உரையாடியதை அந்த ஊடகவியலாளர்கள் அவதானித்துளளனர். ஆகவே இது பொலிசாரின் நடவடிக்கையே என ஊடகவியலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர். இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின்கீழ் ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். சிலர் கொல்லப்பட்டும் சிலர் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். யுத்தம் முடிந்த பின்னர் “சமாதானம் சுபீட்சம்” கிடைத்து விட்டதாக மகிந்த இராஜபக்ஷ தலமையிலான அரசாங்கம் கூறியது. ஆனால் தென் இலங்கை தொழிலாளர்கள் மீது ஒடுக்கு முறைகள்கள் தொடர்கின்ற அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் மீது இராணுவ மற்றும் பொலிஸ் ஒடுக்குமுறை தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை. தற்போதைய அரசாங்கமும் அதையே எதிரொலிக்கின்றது. “மாற்றம் மற்றும் ஜனநாயகம்” என்று கதையளப்புக்களுடன், ஆட்சிபீடமேறிய சிறிசேன அரசாங்கம் பிரேரித்த 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதுவித நலனும் ஏற்படவில்லை. வடக்கில் இராணுவத்தினால் ஆக்கிரிமிக்கப்பட்ட நிலங்களில் மிகச் சிறியளவே விடுவிக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை நடத்துவதற்காக வீதிக்கு வருவார்கள் என்று அச்சமடைந்துள்ள அரசாங்கம், முன் கூட்டியே தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் அச்சுறுத்துவதற்காக இத்தகைய தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது. இது பற்றி சர்வதச பத்திரிகையாளர் சம்மேளனம் (IFJ), “பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான இந்த தாக்குதல், ஊடகங்களை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது” என்று கூறுகின்றது. “இது தெளிவாக யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகையாளர்களை மிரட்டும் முயற்சியாகும் மற்றும் புதிய அரசாங்கம் பாதுகாப்பான நிலைமைகளை உருவாக்குவதாக வாக்குறுதியளித்த பின்னரும், ஊடக சுதந்திரம் தொடர்பான அலட்சிய நிலைமையை காட்டுகின்றது,” என அது மேலும் அறிவித்துள்ளது. அதேவேளை, சுதந்திர ஊடக அமைப்பு (FMM) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இந்த இரு சம்பவங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக சுதந்திர ஊடக அமைப்பு கருதுகிறது. சுதந்திர ஊடக அமைப்பு இந்த சம்பவங்களை விசாரிக்குமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுப்பதோடு எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தவிர்ப்பதற்காக அமைப்பு ரீதியான கொள்கை ரீதியான மாற்றங்களை அமுல்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றது”. இந்த அமைப்புகள் ஒடுக்கு முறைக்கு எதிராக கண்டனத்தினை தெரிவிக்கும் அதேவேளை, ஊடகங்களின் ஜனநாயக உரிமைகளப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கின்றன. எனினும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள், எந்தவிதமான ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு இலாயக்கற்றவர்கள் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. |
|
|