தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Greece’s Syriza government signals pension cuts கிரீஸின் சிரிசா அரசாங்கம் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு சமிக்ஞை செய்கிறது
By Christoph Dreier Use this version to print| Send feedback லாட்விய தலைநகர் ரிகாவில் வெள்ளியன்று நடந்த ஐரோப்பிய நிதி மந்திரிமார்களின் கூட்டத்தில், கடன் திருப்பி செலுத்துவதன் மீது கிரேக்க அரசாங்கத்துடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய முக்கூட்டுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்காக அவரது அரசாங்கம் பரந்த ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர் சந்தை "சீர்திருத்தங்களைத்" திணிக்க தயாராக இருப்பதைக் கிரேக்க நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸ் தெளிவுபடுத்தினார். நிதி மந்திரிகளின் கூட்டத்திற்கு முன்னதாகவே கூட, வாரௌஃபாகிஸ் அவரது வலைப்பதிவில் ஒரு கருத்துரையைப் பிரசுரித்தார், அதில் அவர் முக்கூட்டுக்கு நீண்டகால விட்டுக்கொடுப்புகளைத் தெரிவித்திருந்தார். ஜனவரி தேர்தலில் சிரிசா வெற்றி பெற்றதில் இருந்து நடந்துவரும் பேரம்பேசல்கள் ஏற்கனவே கிரீஸ் மற்றும் அதன் "ஐரோப்பிய கூட்டாகளுக்கு" இடையே "பெரிதும் இணக்கத்தை" கொண்டு வந்திருப்பதாக உறுதியாக தெரிவித்தார். அவர் கூறுகையில், எஞ்சியுள்ள கருத்துவேறுபாடுகள் "சீர்செய்ய முடியாதவை அல்ல" என்றார். அவர், சிரிசா தலைமையிலான அரசாங்கம் சுயதொழில்முனைவை ஊக்குவிக்கும், ஒரு சுதந்திரமான வரித்துறை கமிஷனை உருவாக்கும், அரசு சொத்துக்களின் தனியார்மயமாக்கலைத் தொடரும் மற்றும் "ஓய்வூதிய அமைப்புமுறையைச் சுருக்கும் (சான்றாக, முன்கூட்டியே ஓய்வு பெறுவதை மட்டுப்படுத்துவதன் மூலமாக)” என இவற்றிற்கு உறுதியளிக்கும் அளவிற்கு சென்றார். முக்கூட்டின் மத்திய கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பது முந்தைய ஓய்வூதிய நலன்களை நீக்குவதாகும். ஓய்வூதிய வயது ஏற்கனவே 2012இல் 67 ஆக உயர்த்தப்பட்டது. இருந்தபோதினும் பல சிறப்பு விலக்குரிமைகள், முன்கூட்டியே ஓய்வூ பெற பெரும்பாலான தொழிலாளர்களை அனுமதிக்கிறது. சிறப்பு விலக்குரிமைகளை "மட்டுப்படுத்தல்" என்பதன் அர்த்தம், அதிகபட்ச ஓய்வூதிய வயதை பூசிமொழுகி அமல்படுத்துவது என்பதற்கு குறைந்து ஒன்றுமில்லை. கிரேக்க குடிமக்களின் வேலையிட வாழ்வை இதுபோன்று நீடிப்பதென்பது பாரியளவில் ஓய்வூதிய வெட்டைக் குறிக்கிறது. உத்தியோகப்பூர்வ வேலையின்மை விகிதம் 25 சதவீதத்தில் இருக்கையில், சில தொழிலாளர்களோ அவர்கள் 67 வயதை எட்டும் வரையில் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். எல்லா குடும்பங்களும் உயிர்வாழ்வதற்கு ஏற்கனவே ஒரேயொருவரின் ஓய்வூதியத்தைச் சார்ந்துள்ளன. தீவிரகொள்கை இடதின் கூட்டணி எனும் சிரிசா, முன்னதாக ஓய்வூதிய வெட்டுக்களை ஒரு "சிவப்பு கோடாக" அறிவித்ததுடன், அதை அது தாண்டாது என்றும் அறிவித்திருந்தது. நிதி மந்திரிமார்களின் கூட்டத்திற்கு முன்னதாக இந்த கோட்டை வாரௌஃபாகிஸ் துடைத்தழித்திருக்கும் உண்மையானது, முக்கூட்டுடன் ஓர் உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த “இடது" அரசாங்கம் என்று கூறப்படுவது, தொழிலாளர் வர்க்கத்தின் மீது நடத்துவதற்கு தயாரிப்பு செய்துள்ள தாக்குதல்களுக்கு அங்கே வரம்புகளே இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பிரதம மந்திரியும் சிரிசா தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸ், அவரது அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளைக் கடைபிடிக்கும் என்பதற்கு அவரது சொந்த உறுதிமொழிகளைச் சேர்த்தார். வியாழனன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், புலம்பெயர்வோர் கொள்கை மீதான "பத்து-அம்ச திட்டம்" என்றழைக்கப்படுவதில் அவர் கையெழுத்திட்டார். புலம்பெயர்வோர்கள் ஐரோப்பிய கடற்கரைகளை எட்டாமல் தடுக்க பொலிஸ் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு அத்திட்டம் வகை செய்வதுடன், ஆபிரிக்காவில் பெரியளவிலான இராணுவ தலையீட்டிற்கு அடித்தளங்களை அமைக்கிறது. அக்கூட்டத்தில் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் உடன் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக சிப்ராஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரப்பட்ட சீர்திருத்தங்களை வேகமாக நடைமுறைப்படுத்துமாறு மேர்க்கெல் கிரீஸை வலியுறுத்தியதாகவும், அதேவேளையில் சிப்ராஸ் அவரது நாடு ஏற்கனவே "போதுமான தியாங்களைச்" செய்திருப்பதாக கூறி போராடியதாகவும் ஜேர்மன் நாளிதழ் Die Zeit அறிவித்தது. கிரீஸும் ஐரோப்பிய ஒன்றியமும் ஏப்ரல் இறுதிக்குள் ஓர் உடன்பாட்டிற்கு வர முடியுமென சிப்ராஸ் நம்பிக்கை வெளியிட்டார். கிரீஸிற்கு நிலுவையில் உள்ள 7.2 பில்லியன் யூரோவிற்கு அதிகமாக கடன் நிலுவைத்தொகை அவசரமாக தேவைப்படுகிறது. சம்பளங்கள் வழங்க மற்றும் கடன் பொறுப்புறுதிகளைப் பூர்த்தி செய்ய, சிரிசா-தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே அரசு கஜானாவைச் சூறையாடி உள்ளது. ரிகாவில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர், வாரௌஃபாகிஸ், வேகமாக ஓர் உடன்பாட்டை எட்டுவது அவசியமாகும் என்றார். “ஓர் உடன்பாடு சிரமமானது தான், ஆனால் அது நிகழும், அதுவும் விரைவிலேயே நிகழும், ஏனென்றால் அந்த ஒரேயொரு சாத்தியக்கூறை மட்டுமே நாம் கொண்டுள்ளோம்,” என்றார். சிரிசா பரிதாபகரமாக மண்டியிட்டிருப்பதற்கு இடையே, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளோ வெகு வெகு சிறியளவிலேயே சமரசத்திற்கு அவர்களது விருப்பத்தையே காட்டினர். கிரேக்க அரசாங்கம் ஒரு விரிவான "சீர்திருத்த" திட்டத்தைச் சமர்பிக்காவிட்டால், அங்கே கடன்களைத் திருப்ப செலுத்த முடியாதென அந்த கூட்டம் முடிந்ததும் ஐரோப்பிய குழும தலைவர் ஜெரொன் திஜிஸ்செல்ப்லோம் தெரிவித்தார். ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கான காலம் கடந்து கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக தெரியும் என்றவர் தெரிவித்தார். அந்த பொறுப்பு கிரீஸ் மீது விழுந்துள்ளது என்றார். ஐரோப்பிய ஒன்றிய மந்திரிகளுக்கும் கிரீஸிற்கும் இடையே "கணிசமான வேறுபாடுகள் உள்ளன" என்பதை திஜிஸ்செல்ப்லோம் சேர்த்துக் கொண்டார். கிரேக்க அரசாங்கம் எந்தவொரு திடமான முன்மொழிவுகளையும் முன்வைக்காததற்காக ஆஸ்திரிய நிதிமந்திரி ஜோர்ஜ் ஸ்ச்செல்லிங் இடித்துரைத்தார். “முடிவு செய்யக்கூடிய வகையில் இந்த மேஜையில் ஏதாவதொன்றை இப்போது நாம் பெற வேண்டும் என்று நான் பலமாக வலியுறுத்துகிறேன்,” என்றவர் தெரிவித்தார். ஸ்லோவேனிய நிதி மந்திரி துசன் ராமொர் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வாரௌஃபாகிஸைச் சந்தித்ததாகவும் மற்றும் "B திட்டத்தை" (Plan B) அறிவுறுத்தியதாகவும், பின்னர் கிரேக்க நிதி மந்திரி அவரை "ஐரோப்பிய-விரோதி" என்று குறிப்பிட்டதாகவும் ராய்டர்ஸ் குறிப்பிட்டது. அங்கே இருந்தவர்களின் கருத்துப்படி, நிதி மந்திரிகள் கூட்டம் பகையுணர்ச்சியாக மாறியிருந்தது. ஒரு தொலைபேசி ஆலோசனை கூட்டத்தில் வாரௌஃபாகிஸ், வரவிருக்கும் வாரத்திய கடன் வழங்கல்களின் விபரங்களைத் தெளிவுபடுத்திய நிலையில், அவரது பேச்சுவார்த்தை கூட்டாளிகளில் ஒருவர் அவரை "நேரத்தை வீணடிப்பவராக, சூதாடியாக மற்றும் கத்துக்குட்டியாக" சாடினார். சிப்ராஸூம் நேரடியாக அவமதிக்கப்பட்டார். சமூக வெட்டுக்களை நடைமுறைப்படுத்துவதை வேகப்படுத்துமாறு பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு அவரை எச்சரித்தார். சிப்ராஸ் உடனான ஒரு சிறிய சந்திப்பிற்குப் பின்னர், அவர் கூறுகையில், “கிரீஸ் தேவையான தகவல்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும், மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து அது எடுக்கக்கூடிய முடிவுகளை எடுத்துக்காட்ட வேண்டும்,” என்றார். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் எந்தவித விட்டுக்கொடுப்புகளும் வழங்க தயாராக இல்லை என்பதையும், கிரீஸை ஒரு முன்மாதிரியாக ஆக்க நோக்கம் கொண்டுள்ளனர் என்பதையும் மிகவும் தெளிவுபடுத்தி உள்ளனர். என்ன விலை கொடுத்தாவது நடத்தப்பட உள்ள சமூக தாக்குதல், ஒட்டுமொத்த கண்டத்திற்குமே ஒரு முன்மாதிரியாக சேவை செய்ய உள்ளது. |
|
|