தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Social inequality and the disintegration of the American middle class சமூக சமத்துவமின்மையும், அமெரிக்க நடுத்தர வர்க்கத்தின் சிதைவும்David
Walsh Use this version to print| Send feedback நடுத்தர வருமான குடும்பங்களின் எண்ணிக்கை கூர்மையாக குறைந்து வருவதைக் குறித்த பியூ ஆய்வு மையத்தின் (Pew Research Center) சமீபத்திய கண்டுபிடிப்புகள், அமெரிக்க சமூக வாழ்க்கை மாற்றங்களில் பிரமாண்ட தாக்கங்கள் இருப்பதை எடுத்துக்காட்டின. பியூ ஆல் வரையறுக்கப்படும் நடுத்தர வருமான குடும்பங்கள், அமெரிக்க சமூகத்தில் முதல்முறையாக இப்போது பெரும்பான்மையில் இல்லை என்பதை அப்புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தின.. அப்புள்ளிவிபரங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். தேசிய செல்வவளம் உருவாக்குவதில் நடுத்தர-வருமான குடும்பங்களது பங்கு, 1970 இல் 62 சதவீதமாக இருந்ததிலிருந்து வீழ்ச்சியடைந்து, 2014 இல் 43 சதவீதமாக இருப்பதாக அந்த ஆய்வு குறிப்பிட்டது. நடுத்தர-வருமான குடும்பங்களின் நடுத்தர செல்வவளம் கடந்த ஒன்றரை தசாப்தத்தில் 28 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே காலகட்டத்தில் உயர்-வருமான குடும்பங்களுக்கு போகும் வருவாய் பங்கு 29 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க சமூகத்தின் அபாயகரமான வர்க்க பிளவைக் குறிப்பிட்டுக் காட்டும் பல ஆய்வுகளில் இந்த பியூ அறிக்கை சமீபத்தியது மட்டுமேயாகும். அமெரிக்க பொருளாதாரம் கடந்த நான்கு தசாப்தங்களில், பெருநிறுவன-நிதியியல் பிரபுத்துவத்தின் ஆதாயத்திற்கேற்ப ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டுள்ளது. மிகப் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே செழிப்படைந்துள்ளனர். அமெரிக்கா இப்போது முழு அளவில் ஊதிப்பெருத்த செல்வந்தர் இராஜ்ஜியமாக உள்ளது. மக்களில் பெரும் பெரும்பான்மையினர், அவர்களது வருமானம், சலுகைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளில் இடைவிடாத சரிவை அனுபவித்து வருகிறார்கள். மிகவும் வறியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் நடைமுறையில் ஏறக்குறைய ஒன்றுமில்லாமல் உயிர் வாழ்கின்றனர். 50 அமெரிக்கர்களில் ஒருவர் சுத்தமாக வருமானம் எதுவுமின்றி, உணவு சீட்டுக்களை நம்பி உயிர்வாழ்கிறார். வருடாந்தர அடிப்படையில் ஐம்பது மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்றி உள்ளர். அமெரிக்காவில் பதினைந்து மில்லியன் பேர் ஒரு மணி நேரத்திற்கு 10 டாலர் அல்லது அதற்கு குறைவாகவே சம்பாதிக்கின்றனர். நுகர்வு சக்தியின் வரையறையில் பார்த்தால், குறைந்தபட்ச ஊதியம் ஈட்டுபவரின் வருடாந்தர வருமானம், 1968 க்குப் பின்னரில் இருந்து 32 சதவீத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.. ஒரு “நியாயமான ஒரு நாள் சம்பளம்" மற்றும் ஒரு "கண்ணியமான வேலை" என்பது பெரும்பாலான மக்களுக்கு கடந்த கால விடயங்களாகிவிட்டன. தொழில்துறை தொழிலாளர்கள், அவர்கள் தொழிற்சங்கத்தில் இருந்தாலும் சரி அல்லது தொழிற்சங்கத்தில் இல்லாமல் இருந்தாலும் சரி, சமீபத்திய தசாப்தங்களில் ஒடுக்கிக் கீழ்ப்படிய செய்யப்பட்டிருக்கிறார்கள். வாகனத்துறை தொழிலாளர்களின் ஆரம்ப சம்பளங்கள் பாதியாக குறைக்கப்பட்டு சலுகைகள் வெறுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் அனுபவம் ஒரு பொதுவான நிகழ்வுபோக்கினது கூர்மையான வெளிப்பாடுகளில் ஒன்றாக உள்ளது. ஸ்திரமான அமெரிக்க நடுத்தர வர்க்கம் என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க விகிதத்தினர், பியூ தரவு எடுத்துக்காட்டுவதைப் போல, அதிகரித்தளவில் படுமோசமான மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை முகங்கொடுத்துள்ளனர்: மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மருத்துவத்துறை நிபுணர்கள், உயர்-தொழில்நுட்ப தொழிலாளர்கள், எல்லா விதமான மற்றும் எல்லா வரையறையிலும் உள்ள அலுவலக தொழிலாளர்கள் ஆகியோர். ஒருகாலத்தில் சற்றே-நல்ல நிலையில் இருந்த குழுக்கள் சிலவற்றைக் குறித்த சில உதாரணங்களை மட்டும் வழங்குவதாயின்: 2009 இன் விபரங்களின்படி, அமெரிக்காவின் உயர்கல்விக்கான இரண்டு மற்றும் நான்காண்டு கால கல்விக்கூடங்களில், 1.8 மில்லியனுக்கு அண்மித்த விரிவுரையாளர் பணியிடங்களில் 75 சதவீதத்தினர் "அவர்கள் பதவி காலத்தில் பணிப்பாதுகாப்பற்ற நிலைமையில் நியமிக்கப்பட்டிருந்தனர் … அந்த பணிப்பாதுகாப்பற்ற நிலைமைகளில் சேவையாற்றிய பெரும்பாலான ஆசிரிய அங்கத்தவர்கள் முதுகலை பட்டங்கள் அல்லது அதற்கு மேலான பட்டங்களையும், ஏறத்தாழ அனைவருமே குறைந்தபட்சம் ஓர் இளங்கலைப் பட்டமாவது பெற்றிருந்தனர் என்றபோதினும், அவர்களது வருமானம் அவர்களின் கல்வி மற்றும் அனுபவத்திற்கு அறவே ஈடானதாக இருக்கவில்லை" என கல்வித்துறைசார் பணியாளர் கூட்டமைப்பு அறிவிக்கிறது. கருத்துரைத்த ஒருவர், "சட்டத்துறை தொழில்கள் அதிகரித்தளவில் பாட்டாளியமாக்கப்படுவதாக" (proletarianization) குறிப்பிடுகிறார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “சிறிது சிறிதாக, இத்தொழில்துறை தாராள மரபியத்தின் காட்சியிலிருந்து வெளியேறுகிறது. அரசின் ஒரு நீதிபதியாக, ஒரு வழக்கறிஞராக அல்லது ஒரு மக்கள் பாதுகாவலராக இருந்த சட்டத்துறை வல்லுனர் அதிகரித்தளவில் —ஒரு பெரிய வியாபாரத்தின்; அல்லது ஒரு சட்ட நிறுவனத்தின்— ஒரு பணியாளராக ஆகியுள்ளார்.” மற்றொருவர், மருத்துவர்களின் “அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார அங்கீகார இழப்பைக்" குறித்து கூறுகிறார். அமெரிக்க ஆளும் உயரடுக்கும், ஊடகங்களில் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் மற்றும் தொழிற்சங்கங்களும், 1950 களில் இருந்து "தலைசிறந்த அமெரிக்க நடுத்தர வர்க்க" புராணத்தைப் பரப்பி வந்துள்ளனர். இது, சோசலிச செல்வாக்கிற்கு எதிரான போராட்டத்தின் பாகமாக இருந்தது. ஒரு கலாச்சார விமர்சகர் குறிப்பிடுகையில், அமெரிக்க நடுத்தர வர்க்கம் மிகப்பெரியது மற்றும் இன்னும் தொடர்ந்து பெரியளவில் விரிவடையும் என்ற உண்மை, "தேசத்தின் பெருமை வாய்ந்த சாதனைகளில் ஒன்றாக இருந்தது" மற்றும் "கம்யூனிசத்தை எதிர்க்கும் தளவாடமாகவும்" இருந்தது என்கிறார். அமெரிக்க முதலாளித்துவ செழுமை உச்சக்கட்டத்தில், ஓர் உயர்ந்த புரவலனாக இருக்கையில், சுயசேவை ஆற்றிய பார்வையாளர்களே கூட மார்க்சிசம் தோற்றுவிட்டதாக அறிவித்தனர். 1960 கள் மற்றும் 1970 களில் முன்னணி ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளுடன் தொடர்புபட்டிருந்த ஓர் எழுத்தாளரும் விமர்சகருமான பென் வாட்டென்பேர்க் (Ben Wattenberg), மார்க்ஸிற்கு நேர்மாறாக, “அமெரிக்க தொழிலாள வர்க்கம்…நடுத்தர வர்க்கமாக மாறிவிட்டது,” என்று சுயதிருப்தி கொண்டு அறிவித்தார். Newsweek இதழின் கட்டுரையாளர் ஸ்டீவர்ட் அல்சொப், 1969 இல், பின்வருமாறு கருத்துரைத்தார், “யாரேனும் நல்ல மார்க்சிசவாதி உங்களுக்கு கூறினால், இந்நாட்டில் நடக்கக்கூடாத ஏதோவொன்று நடந்துவிட்டது … பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கமாக மாறிவிட்டது என்று தான் கூறுவார்.” இந்த காரணவிளக்கங்களின் கோர்வை, “புதிய இடது" எதிர்ப்பு அரசியலுக்கான அடித்தளமாக இருந்து, இன்று போலி-இடதின் ஒரு தண்டுவடமாகவும் இருக்கிறது என்பது உண்மை தான். அமெரிக்கா நடுத்தர வர்க்கம் மேலோங்கிய சமூகமாகும் என்ற வாதம், வர்க்க போராட்டத்தின் கொடூரங்களை மூடிமறைத்து, எப்போதுமே, போருக்குப் பிந்தைய செழுமையின் உச்சத்தில் கூட, ஒரு பொய்யாகவே இருந்தது. இப்போதோ அத்தகைய வாதங்கள் சமூக பரிணாம போக்கால் முற்றிலுமாக அம்பலப்பட்டு நிற்கின்றன. மார்க்சியவாதிகள் இத்தகைய அபிவிருத்திகளை நீண்டகாலத்திற்கு முன்னரே பகுத்தாராய்ந்து, அவற்றின் விளைவுகளையும் முன்கணித்தனர். ஏறத்தாழ துல்லியமாக 17 ஆண்டுகளுக்கு முன்னர், டிசம்பர் 21, 1998 இல், பில் கிளிண்டன் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்குப் பிரதிபலிப்பாக, உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு, “அமெரிக்கா உள்நாட்டு போரை நோக்கி நகர்கிறதா?” என்ற ஓர் அறிக்கையை பிரசுரித்தது. வாஷிங்டனின் நெருக்கடியானது, "சிக்கலான அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிகழ்வுபோக்குகள் ஒன்றோடொன்று சந்திக்கும் புள்ளியிலிருந்து" எழுகின்றன மற்றும் முதலாளித்துவ வர்க்க ஜனநாயகம் "தீர்க்கவியலாத அதிகரித்த முரண்பாடுகள் மற்றும் திரண்ட சுமையின் அடித்தளத்தில் உடைந்து வருகிறது" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. அனைத்திற்கும் மேலாக, “அமெரிக்க சமூகத்தின் பரந்த அடுக்குகள் பாட்டாளிமயமாக்கப்பட்டு வருவதை, மரபார்ந்த நடுத்தர வர்க்கங்களின் அளவும் மற்றும் பொருளாதார செல்வாக்கும் குறைந்து வருவதை, மற்றும் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பை, செல்வவளம் மற்றும் வருவாய் ஆகிய இரண்டினது பங்கீட்டில் வெளிப்பட்ட மலைப்பூட்டும் ஏற்றத்தாழ்வின் பிரதிபலிப்பைக் கொண்டு" ஆசிரியர் குழு சுட்டிக்காட்டியது. “வேலையில் கறைபடியாத பணியாளர்கள் (white-collar), தொழில்வல்லுனர்கள் மற்றும் நடுத்தர நிர்வாக தொழிலாளர்களில்" பெரும் எண்ணிக்கையினர், "பெருநிறுவன ஆட்குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் சம்பளங்கள், சலுகைகள் மற்றும் வேலை பாதுகாப்பு வேகமாக அழிக்கப்பட்டுள்ளது" என்றது குறிப்பிட்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் அந்த அறிக்கை தொடர்ந்து பின்வருமாறு குறிப்பிட்டது: “முன்னொருபோதும் இல்லாதளவிலான சமூக சமத்துவமின்மை, சமூகத்தின் மீது கடுமையான பதட்டங்களை ஏற்படுத்துகிறது. அங்கே செல்வந்தர்களுக்கும் மற்றும் உழைக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி நிலவுகிறது, இவற்றிற்கு இடையே ஒரு நடுத்தர வர்க்கம் மத்தியஸ்த நிலையில் இல்லை. ஒருகாலத்தில் ஒரு சமூக இடைதடையை வழங்கிய இந்த இடைப்பட்ட அடுக்குகள், முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான பிரதான ஆதரவு அடித்தளமாக இருந்த நிலையில், அவை இனியும் அப்பாத்திரம் வகிக்க முடியாது.” இந்த பகுப்பாய்வு முற்றிலும் சரியாக இருந்தது, இரண்டரை தசாப்தங்களுக்கு அதிகமான காலத்தில், புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் கீழ், பெரும் பணக்காரர்களின் உயர்மட்ட பிரிவுகளிடம் தேசிய செல்வ வளம் முன்பினும் அதிகமாக குவிந்த போது, அவை அத்தகைய "கடுமையான பதட்டங்களில்" இன்னும் அதிக கோபத்தை மற்றும் வெறுப்பை மட்டுமே அதிகரித்தன. அதிர்வுகரமான சமூக-பொருளாதார மாற்றங்கள், முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான அடித்தளத்தைப் புறநிலைரீதியிலும் மற்றும் தீர்க்கமாகவும் பலவீனப்படுத்தி உள்ளன. ஒரு ஸ்திரமான நடுத்தர வர்க்கம் எந்தவொரு நாடாளுமன்ற அமைப்புமுறைக்கும் அவசியமான அடித்தளமாக இருக்கிறது என்பது பொதுவான ஒன்று தான். பொதுவான கட்டவிழ்வின் பாகமாக, அமெரிக்க ஆளும் உயரடுக்கு அதுவே ஒரு மாற்றத்திற்குள் சென்றுள்ளது. அது நிதியியல் மோசடித்தனம் மற்றும் சூழ்ச்சியின் மீதமைந்த அதன் செல்வவளம் மற்றும் தனியந்தஸ்தை மிக மிக அதிகளவில் சார்ந்துள்ளது. ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பிரிவாக உள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்கமும் பங்குச்சந்தை கொழிப்பு மற்றும் ஒட்டுண்ணித்தனத்தின் ஏனைய வடிவங்களிலிருந்து ஆதாயமடைந்துள்ளது. அவர்களது முறையற்ற வகையில் சேர்த்த ஒவ்வொரு சல்லிக்காசையும் பாதுகாக்கும் நோக்கங்களில் இரக்கமின்றி தீர்மானகரமாக இருக்கும் ஆளும் உயரடுக்கும் மற்றும் இரண்டு பிரதான கட்சிகளில் உள்ள அதன் அரசியல் பிரதிநிதிகளும் மிக வேகமாக வலதிற்கு நகர்ந்துள்ளனர். அமெரிக்க ஸ்தாபகம், சில விடயங்களில் பகிரங்கமாகவே, மற்றவர்களை விட மிகவும் காலமறிந்து, எதேச்சதிகாரம், பொலிஸ் அரசு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க சுறுசுறுப்புடன் வேலை செய்து வருகிறது. இந்த பிற்போக்குத்தனமான முனைவு, இராணுவவாதம் மற்றும் முடிவில்லா உலகளாவிய போர்முறை கொள்கையுடன் கைகோர்த்துச் செல்கிறது. பாசிசவாத கூறுபாடுகள் அதிகரிப்பது, பில்லியனிய-அறிவிலி டோனால்ட் ட்ரம்ப் ரூபத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. அவரது வெளிநாட்டவர்-விரோத போக்கும் மற்றும் சில சமயங்களில் வெகுஜனவாத வீராவேசமும், குட்டி முதலாளித்துவத்தில் மூர்க்கமாக உள்ள ஸ்திரமற்ற அடுக்குகளை, குறிப்பாக ஆழ்ந்த பிற்போக்குத்தனமான திசையில் திருப்பிவிடும் ஒரு முயற்சியின் பாகமாக உள்ளன. அதுபோன்ற போக்குகளின் எழுச்சி தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாகும், இறுதியில் அதன் அடிகள் தொழிலாள வர்க்கத்தை நோக்கி தான் திரும்பும். அமெரிக்க சமூகத்தின் துருவமுனைப்பாடு, ஒருபுறம், செல்வம் கொழித்த பணக்கார உயரடுக்குக்குகளையும், மறுபுறம் (மிகச் சரியாக கூறுவதானால்) கூலிகளைச் சார்ந்துள்ள மக்களின் பரந்த பிரிவுகளின் அதிரவைக்கும் போராட்டங்களுக்கும் களம் அமைத்துள்ளது. ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையின் எல்லா புள்ளிவிபரங்களும் மற்றும் பியூ புள்ளிவிபரங்களும் ஒரு பெரும் அரசியல் யதார்த்தத்திற்கு இட்டுச் செல்கின்றன: இந்த அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடிக்கு எந்த சீர்திருத்த தீர்வும் கிடையாது என்பது தான் அது. அமெரிக்க முதலாளித்துவத்தின் துர்நாற்றம், ட்ரம்ப் மற்றும் கார்சன் போன்றவர்களை, அதேபோல ஒபாமா போன்றவர்களை, மட்டும் உருவாக்கவில்லை, அது உழைக்கும் மக்களின் ஒரு பாரிய கிளர்ச்சிக்கும் தயாரிப்பு செய்கிறது. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக, இவற்றிற்குப் பின்னால் தான் அரசு நிற்கின்ற போதினும், வாகனத்துறை தொழிலாளர்களின் ஒரு பகிரங்கமான கிளர்ச்சியாக எது மாறியுள்ளதோ, அது இந்த வரலாற்று தருணத்தைச் சேர்ந்ததாகும். முதலாளித்துவ வர்க்கம், வறுமை, சர்வாதிகாரம் மற்றும் போரை வழங்கும். தொழிலாள வர்க்கம் புரட்சியினூடாக அதன் முட்டுச்சந்திற்கு ஒரு பாதையைக் காணும். |
|
|