தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Syriza leader issues nationalist appeal in speech to Greek parliament சிரிசா தலைவர் கிரேக்க நாடாளுமன்ற உரையில் தேசியவாத முறையீடு செய்கிறார்
By Nick Beams Use this version to print| Send feedback ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிரிசா கடன் மறுபேரங்களைக் கோரி வருகின்ற நிலையில், இரண்டு வாரங்களுக்கு முந்தைய அதன் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கிரேக்க பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் அவரது அரசாங்கத்திற்கு ஆதரவை வென்றெடுக்கும் நோக்கில், அவரது முதல் நாடாளுமன்ற உரையில் ஒரு தேசியவாத முறையீட்டை செய்தார். இந்த புதனன்று கிரீஸ் குறித்து யூரோ மண்டல நிதி மந்திரிகள் நடத்த உள்ள ஒரு விவாதம், அதைத் தொடர்ந்து வியாழனன்று ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஆகியவற்றுடன் அந்த அரசாங்கம் இவ்வாரம் தொடர்ச்சியான முக்கிய கூட்டங்களை முகங்கொடுக்கின்ற நிலையில் நேற்றைய உரை வழங்கப்பட்டது. கடந்த வாரம் ஐரோப்பிய மத்திய வங்கி, அந்நாட்டின் வங்கி கடன்களுக்கு உத்தரவாதமாக அதன் அரசு பத்திரங்களைப் பயன்படுத்துவதன் மீது வழங்கப்பட்ட சலுகையைத் திரும்ப பெற்றதன் மூலமாக, சிரிசா தலைமையிலான அரசாங்கத்தை இறுக்கியது. அந்த நகர்வு "முக்கூட்டின்" 240 பில்லியன் யூரோ பிணையெடுப்பு ஊக்கப்பொதி மீதான கட்டளைகளை சிரிசா ஏற்குமாறு செய்ய அதன்மீது அழுத்தங்களை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது. தற்போதைய உடன்படிக்கை பெப்ரவரி 28இல் முடிவுக்கு வருகிறது, ஆனால் "பிணையெடுப்பு தோல்வி அடைந்துவிட்டது" என்பதால் அரசாங்கம் ஒரு நீட்டிப்பைக் கோரவில்லையென சிப்ராஸ் அறிவித்தார். “நாங்கள் எதை பேரம்பேசவில்லை என்பதை நாங்கள் ஒவ்வொரு திசையிலும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் எங்களது தேசிய இறையாண்மையைப் பேரம்பேசவில்லை,” அவர் 300 உறுப்பினர்கள் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில் கைத்தட்டல்களுக்கு இடையே தெரிவித்தார். அவரது அரசாங்கத்தின் வலதுசாரி மற்றும் முதலாளித்துவ வர்க்க குணாம்சத்திற்கு மிகத் தெளிவான அறிகுறியாக, அவரது அரசாங்கம் ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்து இரண்டாம் உலக போரின் இழப்பீட்டுத் தொகைகளைக் கோருமென அறிவித்து, சிப்ராஸ் அவரது உரையை உச்சக்கட்டத்திற்கு கொண்டு வந்தார். அவரது நிர்வாகம் ஒரு "தேச மீட்சிக்கான அரசாங்கம்" என்று தெரிவித்த சிப்ராஸ், போர் காலத்தில் நாஜிகள் அந்நாட்டை ஆக்கிரமித்திருந்தபோது பெற்ற கடன்களைத் திரும்ப செலுத்துமாறு அழுத்தம் அளிக்கவிருப்பதாக அறிவித்தார். “ஒரு தார்மீக கடமையை, ஒரு வரலாற்று கடமையை … போர்கால கடனைத் திரும்ப கோருவதை, என்னால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது,” என்றார். ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளிடையே ஜேர்மன்-விரோத கூட்டணியை அமைக்கும் சிரிசாவினது முயற்சிகளின் பாகமாக அமைந்துள்ள இந்த வீராவேச வாய்ஜால முறையீடு, சிக்கன நிகழ்ச்சிநிரல் மீது விட்டுக்கொடுப்புகளைப் பெறுவதை நோக்கமாக கொண்டதாகும். அது, கிரீஸில் உள்ள அதிதீவிர வலதுசாரி, ஜேர்மன்-விரோத மற்றும் தேசியவாத சக்திகளுக்கு ஒரு நேரடி அழைப்பும் ஆகும். அது, சிரிசாவின் தேர்தல் வெற்றிக்கு ஒருசில நாளில் தேசியவாத சுதந்திர கிரேக்க கட்சி உடன் ஸ்தாபிக்கப்பட்ட அதன் கூட்டணியின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிடுகிறது. சிப்ராஸ் வாஷிங்டனிடமிருந்தும் ஆதரவை எதிர்நோக்கி வருகிறார். அங்கே வாஷிங்டனிலோ, ஏதேனும் சமரசம் எட்டப்படாமல் போனால், பூகோளமயப்பட்ட பொருளாதாரத்தில் பிரச்சினைகள் உண்டாகுமே என்றும், கிரீஸ் யூரோ மண்டலத்திலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டால் ஒரு புதிய நிதியியல் நெருக்கடி ஏற்படுமே என்றும் அச்சங்கள் உள்ளன. கிரீஸை நோக்கி கடுமையான போக்கை எடுப்பதற்கு எதிராக ஒபாமா நிர்வாகம் ஆதரவு நாடி வருவதாக பைனான்சியல் டைம்ஸ் அறிவித்தது. “இதுவொரு சிறப்பு முன்முயற்சி அல்ல. நமது மனோபாவம் மாறியுள்ளதாக நான் கருதவில்லை, ஆனால் என்ன மாறியுள்ளது என்றால் கிரீஸின் நிலைமை திடீரென்று மிகவும் பிரச்சினைக்குரியதாக தெரிகிறது”, இதை அந்த விவாதங்களில் ஈடுபட்டிருந்த ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி அப்பத்திரிகைக்குத் தெரிவித்தார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வாரம் CNNஇன் ஒரு நேர்காணலில், “ஒரு மந்தநிலைமைக்கு இடையில் இருக்கும் நாடுகளை நீங்கள் தொடர்ந்து ஓரங்கட்டிக் கொண்டே இருக்க முடியாது,” என்று கூறியபோது, அவர் சிக்கன நிகழ்ச்சிநிரலை தளர்த்துவதற்கு சிறிது ஆதரவு வழங்குவதாக தெரிந்தது. கிரீஸ் யூரோ மண்டலத்திலிருந்து வெளியேறுவதற்கு கேமரூன் அரசாங்கம் தற்காலிக திட்டங்களை வரைந்துள்ளதாகவும், அதுபோன்ற சம்பவம் நிதியியல் சந்தைகளுக்கு மட்டுமே ஒரு கடுமையான பாதிப்பாக இருக்காது மாறாக இங்கிலாந்தில் "நிஜமான கொந்தளிப்புகளையும்" உண்டாக்கும் என்று பிரிட்டிஷ் சான்சிலர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் இந்த வாரயிறுதியில் குறிப்பிட்டார். அமெரிக்க பெடரல் ரிசர்வ் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான், கிரீஸ் வெளியேறுவதென்பது ஒரு புதிய உலகளாவிய நிதியியல் நெருக்கடியைத் தூண்டிவிடும் என்று எச்சரித்த அதேவேளையில், அங்கே ஓர் உடன்படிக்கை எட்டப்பட போவதில்லை என்பதால் கிரீஸ் யூரோ மண்டலத்திலிருந்து வெளியேறுவது வெறும் நேரம் சார்ந்த ஒரு விடயமாகும் என்றார். அவரது நாடாளுமன்ற உரையில், சிப்ராஸ், ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்தி வைத்தல், சொத்து வரிகளைச் செப்பனிடுதல், மின்சாரம் வெட்டப்பட்டவர்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்குதல், மற்றும் குறைந்தபட்ச ஊதியங்களில் உயர்வு உட்பட பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் இந்த மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், அவை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட, கடந்த ஐந்து ஆண்டுகளில் கிரேக்க மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதார பேரழிவைத் சரிசெய்வதற்கு அருகில் கூட வரப்போவதில்லை. சிரிசா ஆட்சியின் முதலாளித்துவ குணாம்சம், அது நிதியியல் செல்வந்த தட்டை வீழ்த்துவதையோ அல்லது அது திணித்துள்ள வறுமையைப் போக்குவதற்கோ அது முனையவில்லை, மாறாக வெறுமனே சில உபாயங்களுக்கு இடந்தேடுகிறது என்ற உண்மையால் தெளிவுபடுத்தப்படுகிறது. கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற சிரிசாவின் தேர்தல் வாக்குறுதி கைவிடப்பட்டுள்ள நிலையில், சிப்ராஸோ அவர் யாரை "நமது ஐரோப்பிய பங்காளிகள்" என்று குறிப்பிடுகிறோரோ அவர்களுடன் பிணையெடுப்பு உடன்படிக்கையின் மீது மறுபேரம் பேச இப்போது அழைப்புவிடுக்கிறார். கடந்த வாரம் ஐரோப்பிய தலைநகரங்களுக்கு பயணித்திருந்த போது நிதி மந்திரி யானிஸ் வாரௌஃபாகிஸால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி, ஒரு மறுபேர உடன்படிக்கையானது, கடனை மாற்றிக்கொள்ளும் பல தொடர்ச்சியான ஏற்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். இது திரும்ப பணம் செலுத்துவதன் உடனடி தாக்கத்தைக் குறைக்கும் விதத்தில் ஆனால் உண்மையில் அந்நாட்டின் கடன்களைத் தள்ளுபடி செய்யாமல் இருப்பதை நோக்கமாக கொண்டது. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கையிலேயே, அடுத்த மூன்று மாதங்களுக்கு கிரீஸிடம் போதுமான பணம் இருப்பதை உறுதிப்படுத்த குறைந்தபட்சம் 10 பில்லியன் டாலர் "இணைப்பு நிதியை" அந்த அரசாங்கம் குறுகிய காலத்தில் கோரி வருகிறது. “நாம் ஒரு புதிய உடன்பாட்டை, ஒரு இணைப்பு திட்டத்தை, விரும்புகிறோம். அதுவொரு நேர்மையான பேரத்திற்கு அவசியமான நிதிய கால அவகாசத்தை வழங்கும்,” என்று சிப்ராஸ் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்தார், அதேவேளையில் கிரீஸ் அதன் கடன்களை மதிக்கும் என்றும் வலியுறுத்தினார். அரசாங்கம் நடப்பு உடன்படிக்கைகளை நீடிக்குமாறு கோரவில்லை "ஏனென்றால் அது தவறுகளை நீடிப்பதற்கு கோராது,” என்றார். ஆனால் கிரேக்க பத்திரங்கள் மீதான சலுகைகளை திரும்பப் பெறுவதென்ற ECBஇன் முடிவு, அந்த கோரிக்கை மீதான அதன் எதிர்ப்பை எடுத்துக்காட்டியது. இது கடந்த வெள்ளியன்று, யூரோ மண்டல நாடுகளினது நிதி மந்திரிகளின் யூரோ குழுவிற்கு தலைமை தாங்கும் ஜிரோன் டிஜ்ஸ்செல்போமின் கருத்துக்களால் அடிக்கோடிடப்பட்டது. கிரீஸ் தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் ஓர் நீடிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டி இருக்குமென தெரிவித்த அவர்: “நாங்கள் இணைப்பு கடன்களை வழங்க முடியாது,” என்றார். இப்போது கவனம், புதனன்று நடக்கவுள்ள யூரோ மண்டல நிதியியல் மந்திரிகளின் கூட்டத்தின் மீது குவியும். உடன்படிக்கை எதுவும் எட்டப்படவில்லை என்றால், அது கிரேக்க வங்கியல் அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியையும் மற்றும் சாத்தியமான அளவில் பெரும் விளைவுகளோடு யூரோ மண்டலத்திலிருந்து அது வெளியேறுவதற்கு ஒரு சாத்தியக்கூறையும் நோக்கிய மற்றொரு படியைக் குறிப்பதாக இருக்கும். |
|
|