தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை ஐ.நா வில் இலங்கை போர்க் குற்ற விசாரணை அறிக்கை ஒத்திவைப்பும் யாழ்ப்பாண அமைதி ஊர்வலமும்By
S. Jayanth Use this version to print| Send feedback இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் விசாரணைகளுக்கான உயர் ஸ்தானிகரின் ஐ.நா அலுவலகம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான அதன் விசாரணை அறிக்கையை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (யுஎன்எச்ஆர்சி) சமர்ப்பிப்பதை ஒத்திவைத்ததையிட்டு கவலை தெரிவித்தும், வலதுசாரி மாற்று ஆலோசனைகள் வழங்கியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த அமைதி ஊர்வலம் கடந்த செய்வாய் கிழமை நடைபெற்றது. சுமார் 2000 பேர் பங்குபற்றிய இந்த ஊர்வலத்தில் டஜன் கணக்கான காணாமல் போனோரின் உறவினர்களும் பங்குபற்றி இருந்தனர். செவ்வாய் அன்று நடந்த ஊர்வலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக பிரதிநிதிகள், தென்னிலங்கை மாணவ பிரதிநிதிகள், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி மற்றும் மத தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர். யாழ். ஊடக அமையம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு என பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இந்த ஊர்வலத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன. யாழ்பாணத்தில் உள்ள ஐ,நா அதிகாரிகளிடம் மகஜரை கையளிப்பதாக தெரிவித்திருந்தும், அங்குள்ள அலுவலர்கள் அதை ஒரு பொருட்டாக கருதி ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. இறுதியாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், இந்துக் குருமார் ஒன்றியத்தின் வாசுதேவக் குருக்கள் ஆகியோர் அதை கொழும்புக்கு கொண்டு செல்கின்றனர். விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதை ஒத்தி வைத்தமை ஈழத் தமிழ் இனத்திற்கு மிகவும் வேதனையான விடையமாகும், அறிக்கை காலந்தாழ்த்தப்படும் பட்சத்தில், அதை மேலும் வலுவூட்டுவதாக இருந்தால் ஐ.நா அதிகாரிகள் இலங்கை வந்து விசாரணை செய்யவேண்டும், மற்றும் அறிக்கை வெளியிடப்பட்டு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆகிய கோரிக்கைகள் அந்த மகஜரில் அடங்கியுள்ளதாக ஊர்வலத்தின் இறுதியில் தெரிவித்தனர். யுத்தத்தில் கொல்லப்பட்டோர், காணாமல்போனோர் மற்றும் இன்னமும் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின் நிலை என்ன என்ற கேள்விகள் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அன்றாடம் விடைகாண துடித்துக்கொண்டிருக்கும் கேள்விகளாகும். இதற்காக கடந்த 6 வருடங்களாக தமக்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கையில் ஒரு படத்தோடும் கண்ணீரோடும் அவர்கள் போராடி வந்த போதிலும், தமது உறவினர்களுக்கு என்னதான் நடந்தது என்பதை அவர்களால் இன்னமும் அறிய முடியவில்லை. அவர்களின் கவலைகள், புதிய அமெரிக்க-சார்பு அரசாங்கத்தாலோ அல்லது அதை ஆட்சிக்கு கொண்டுவர திரைமறைவிலும், வெளிப்படையாகவும் ஆதரவளித்து செயல்பட்ட சக்திகளாலோ தீர்க்கப்பட முடியாதவை. இலங்கை மீதான மனித உரிமை மீறல் விசாரணை அமைப்பானது, கடந்த ஆண்டு யுஎன்எச்ஆர்சியில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கான பதிலிறுப்பாகவே ஸ்தாபிக்கப்பட்டது. அமெரிக்கா இந்த பிரேரணையை முன்வைத்தது, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி அதற்கு உள்ள அக்கறையினால் அல்ல. மாறாக, பிராந்தியத்தில் வாஷிங்டனின் போட்டியாளனான சீனாவுடன் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஏற்படுத்திக்கொண்டிருந்த உறவை துண்டித்துக்கொள்ளுமாறு அவரது அரசாங்கத்தை நெருக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாகும். எனினும், தமிழ் தேசியவாத அமைப்புகளான தமிழ் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூகம் போன்றவையும் அவற்றின் செல்வாக்கிலான யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியமும், அன்றும் இன்றும் அமெரிக்காவின் மூலோபாய நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் நேரடி ஆதரவாளர்களாக செயற்பட்டு வந்துள்ளதோடு தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுகின்றன. யுஎன்எச்ஆர்சி பிரேரணைக்கு அமெரிக்கா அனுசரணை அளித்திருந்தாலும், தீவில் நடந்த அட்டூழியங்களுக்கு வாஷிங்டனும் பொறுப்பாளியாகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்திற்கு இதே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட வல்லரசுகளும் நிதி, இராணுவப் பயிற்சி மற்றும் போர் தளவாடங்களையும் வழங்கி உதவி செய்திருந்தன. போரின் கடைசி நாட்களில் இழைக்கப்பட்ட பேரழிவுகளை ஒபாமா நிர்வாகம் கண்டும் காணாதது போல் இருந்துவிட்டது. தமிழ் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் புலம் பெயர் தமிழ் தேசியவாத அமைப்புகளும் ஏகாதிபத்திய நலன்களின் பின்னால் அணிதிரள்வதன் மூலம் ஒரு நிச்சயமான குறிக்கோளைக் கொண்டுள்ளன. அது தமிழ் மக்களுக்கான ஒரு சுயாட்சி என்ற பெயரில், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை தக்கவைத்துக்கொள்வதற்காக கொழும்பு ஆளும் வர்க்கத்துடன் பேரம் பேசுவதற்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதே ஆகும். புதிதாக தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பலவீனமான நிலையில் இருப்பதோடு கொழும்பில் அரசியல் நிலைமைகள் ஸ்திரமற்றதாக உள்ள நிலைமையிலேயே வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்குச் சென்று ஒத்தி வைப்பதற்கான வேண்டுகோளை விடுத்தார். ஜூன் மாதமளவில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற நிலையில், இராஜபக்ஷ தேசப்பற்று உணவர்வுகளை தூண்டிவிடுட்டு மீண்டும் அரசாங்கத்துக்குள் நுழைவதற்கு யுஎன்எச்ஆர்சி அறிக்கையை பயன்படுத்திக்கொள்ளக் கூடும் என அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. அத்துடன் சிறிசேன அரசாங்கத்துக்குள்ளேயே சிங்கள அதிதீவிரவாத அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. சிறிசேனவை ஆட்சியில் இருத்துவதற்கு செயற்பட்ட ஒபாமா நிர்வாகம், சமரவீரவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளது. பிரித்தானியாவும் மற்றும் யுஎன்எச்ஆர்சியும் இதற்கு உடன்பட்டுள்ளன. இந்த ஏகாதிபத்திய சக்திகள் தமது பிராந்திய நலனுக்காக இலங்கையில் தமிழ் மக்களின் அவலங்களை வஞ்சத்தனமாக சுரண்டிக்கொண்டுள்ளனவே அன்றி, அவர்களது ஜனநயாக உரிமைகள் சம்பந்தமாக அவற்றுக்கு எந்த அக்கறையும் கிடையாது என்பதையே இந்த ஒத்திவைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஒத்திவைப்பு, தமிழ் தேசியவாதத்தின் வங்குரோத்து தனத்தின் மீதும் மேலும் வெளிச்சம் பாச்சுகிறது. ஏகாதிபத்தியங்களின் ஒத்துழைப்புடன் 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பும், தமிழ் முதலாளித்துவக் கட்சிகளும் இயக்கங்களும் ‘சர்வதேச சமூகத்தையும்’ ஐநாவையுமே தமிழ் வெகுஜனங்களின் பாதுகாவலனாக சித்தரித்து வந்தன. அஹிம்சை போராட்டமும் ஆயுதப்போராட்டமும் தோல்வியடைந்து விட்டது, நாம் தற்போது இராஜதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியடைந்து வருகிறோம் என்று அவை கூறிக்கொண்டன. தமிழ் வெகுஜனங்களை தமது பிடிக்குள் வைத்திருக்க கையாண்ட முயற்சிகள் தொடர்ந்து அம்பலமாவதால் தமிழ் அரசியல் கட்சிகள் மதிப்பிழந்து போயுள்ள நிலையில், யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் முன்முயற்சி எடுத்து இந்த அமைதி ஊர்வலத்தை ஒழுங்கமைத்தனர். கடந்த 6 வருடங்களாக காணாமல் போனோரை தேடிக்கொண்டிருக்கும் உறவினர்கள் கட்டுக்கடங்காத கோபத்துடன் வருவார்கள் என்பதை சரியாக புரிந்துகொண்ட ஏற்பாட்டாளர்கள், இராணுவ கட்டுப்பாட்டு தன்மை கொண்ட கட்டளைகளை அறிவித்தனர். “இந்த அமைதி ஊர்வலத்தை மதத் தலைவர்கள் வழிநடத்துவார்கள், தொடக்கத்தில் கொண்டுசெல்லப்பட்ட பதாகை மற்றும் அமைப்பாளர்கள் வழங்கிய சுலோக அட்டைகள் தவிர்ந்த வேறு எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது, துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதற்கும் அனுமதி கிடையாது, அமைப்புக் குழுவின் தலைவர் மட்டுமே சிறு உரை ஆற்றுவார், பின்னர் மனித உரிமை ஆர்வலர்கள் அமைதியாகக் கலைந்து செல்லவேண்டும்” என அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் ஏற்பாட்டாளர்களின் ஜனநாயகமற்ற தன்மைக்கு சிறந்த உதாரணமாகும். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் ஒழுங்கமைப்பாளருமான திரு. அ. இராஜகுமாரன் இந்த அமைதி ஊர்வலத்தின் நோக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “நிச்சியமாக இதற்கு எந்த விதத்திலும் அரசியல் சாயம் பூசக்கூடாது…..” “தமிழ் தேசியத்திற்கு, அதற்கு எதிரான அடக்கு முறைகளுக்கு ஒரு பரிகாரத்தை ‘சர்வதேச சமூகம்’ தேடித்தரவேண்டும் என்பதை வெளிப்படுத்த இருக்கிறோம்” என்றார். இந்தக் கருத்துக்கள் ஏற்பாட்டாளர்களின் நோக்கங்களை மிக துல்லியமாக வெளிப்படுத்துகின்றன. ஊர்வலத்தின் முடிவில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த இராயப்பு ஜோசப், அமெரிக்கா உலகம் பூராவும் முன்னெடுக்கும் குற்றவியல் யுத்தங்களையும், அவற்றில் ஐ.நாவின் பங்கையும் மற்றும் இலங்கை மீதான யுஎன்எச்ஆர்சி தீர்மானத்தின் உள் நோக்கத்தையும் மூடி மறைத்துவிட்டு, “பாரபட்சமற்ற, தூய்மையான இதயம் கொண்ட, உலகசார்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பு இதை விசாரிக்க வேண்டும்” என்றார். இலங்கை போன்ற முன்னாள் காலனித்துவ நாடுகளில் உள்ள முதலாளி வர்க்கமும், அதன் பிரதிநிதிகளும் அத்தனை நெருக்கடியான நிலைமைகளின் மத்தியிலும், ஏகாதிபத்தியத்தின் சேவைக்கு எந்த அளவுக்கு செல்வார்கள் என்பதற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் ஒழுங்கமைத்த இன்றைய அமைதிப் பேரணி ஒரு உதாரணமாக உள்ளது. உலகம் முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதும், அதன் தலைவர்கள் உட்பட மில்லியன் கணக்கான அப்பாவி பொதுமக்களை கொல்வதும், தமக்கு சார்பான பொம்மை ஆட்சிகளை நிறுவுவதும், அப்பிராந்தியங்களில் உள்ள மூலவளங்களை கொள்ளையடிப்பதுமே அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் செயல்பாடாகும். உலகம் முழுவதும் கொலைக்குற்றங்களில் ஈடுபடுவோரை நீதிபதியாக கொண்டு இலங்கையில் நடந்த கொலைக்குற்றத்திற்கு நீதி காணவும் முடியாது. காணாமல் போனோரின் நிலையை அறிந்துகொள்ளவும் முடியாது. உலகம் முழுவதையும் யுத்த பேரழிவிற்குள் இழுத்துக் கொண்டிருக்கும் காலாவதியாகிப்போன முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு போராட்டத்திலேயே, இலங்கையில் நடந்த அழிவுக்கான நீதியை ஸ்தாபிக்கவும், தண்டனை வளங்கவும் முடியும். இதற்கு அவசியமானது சோசலிச புரட்சிக்கான உலக கட்சியை கட்டியெழுப்புவதாகும். இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே பல தசாப்தங்களாக இந்த நோக்கத்திற்காக போராடுகிறது. |
|
|