சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: President Mahinda Rajapakse concedes defeat in election

இலங்கை: ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தேர்தலில் தோல்வியை ஒத்துக்கொள்கிறார்

By Wasantha Rupasinghe and K. Ratnayake
9 January 2015

Use this version to printSend feedback

இன்று காலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, நேற்றைய ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க-சார்பு எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியை ஒப்புக் கொண்டார். இராஜபக்ஷ, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையை விட்டுவிலகியதாகவும், தனது அதிகாரத்தை சுமூகமாக ஒப்படைக்க வழிசெய்வதாகவும் தனது பேச்சாளர் மூலம் அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 ஒட்டுமொத்த முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாக இருக்கின்ற போதிலும், ஆரம்பத் தரவுகள், எண்ணப்பட்ட வாக்குகளில் சுமார் 51.25 சதவிகித வாக்குகளை சிறிசேன பெற்றுள்ளதாக குறிப்பிடுகின்றன. 15 மில்லியன் வாக்காளர்களில் சுமார் 75 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

இராஜபக்ஷ, மீண்டும் தேர்வாகும் நம்பிக்கையுடன் நவம்பர் 20 இல் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு பதிலாக, தனது அமைச்சரவையில் சிரேஷ்ட அமைச்சரும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீலசுக) பொதுச் செயலாளருமான சிறிசேனவின் வெளியேற்றத்தை எதிர்கொண்டார். சிறிசேன, தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததோடு உடனடியாக அவரை பிரதான எதிர்க் கட்சியான அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி (UNP) ஆதரித்தது.

இராஜபக்ஷவை சிறிசேன கைவிட்டமை, வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் யூஎன்பீ தலைவர் ரணில் விக்கிரமசிங்கவாலும் முன்கூட்டியே தயார்செய்யப்பட்டது. பேரினவாத ஜாதிக ஹெல உறுமய (JHU), ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (SLMC) மற்றும் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உட்பட இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் பல முக்கிய உறுப்பினர்களும், அரசாங்கத்திடம் இருந்து முறித்துக் கொண்டு, எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டன. பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA), தொழிற்சங்கங்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள், மற்றும் பல்வேறு போலி இடது மத்தியதர வர்க்க அமைப்புக்களும் சிறிசேனவை அங்கீகரித்தன.

இந்த சக்திகள் சிறிசேன பின்னால் அணிதிரண்டதும் தேர்தல் முடிவும் கூட திரைக்குப் பின்னாலான ஒபாமா நிர்வாகத்தின் தலையீட்டின் விளைவே ஆகும். இராணுவ உறவுகளை விரிவாக்குவது உள்ளிட்ட, அவரது அரசாங்கம் சீனாவுடன் உருவாக்கிக்கொண்டுள்ள நெருக்கமான உறவுகளில் இருந்து விலக்கி, இலங்கை வெளியுறவு கொள்கையை மாற்றும் பொருட்டு இராஜபக்ஷ அகற்றப்பட்ட வேண்டும் என்று வாஷிங்டனில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும், பெய்ஜிங்கின் செல்வாக்கை கீழறுப்பதற்காகவும் சீனாவிற்கு எதிரான யுத்தத்தை தயார் செய்யவும் ஒரு ஒருங்கிணைந்த இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலுக்கு சமமான நடவடிக்கையை குறிக்கும், அமெரிக்காவின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையில் இருந்தே இந்த தலையீடு நேரடியாக ஊற்றெடுக்கிறது.

சிறிசேனவும் அவரது கூட்டணியும் இராஜபக்ஷவின் ஜனாதிபதி முறையின் சர்வாதிகார மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை செய்யும் பண்பை தூக்கிப் பிடிப்பதன் மூலம் தமது அமெரிக்க-சார்பு நிகழ்ச்சி நிரலை மூடிமறைக்கின்றனர். "சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கான போராடம்," என்பதே அவர்களின் பிரதான முழக்கமாக இருந்தது. எவ்வாறெனினும், சிறிசேன, சீன முதலீடுகளின் அளவை கண்டித்து, வாஷிங்டனுடனான தனது அணிசேர்வை தெளிவுபடுத்திய அதேவேளை, யூஎன்பீ இராஜபக்ஷவை இலங்கையை "சீனாவின் செயற்கைக்கோளுக்குள்" திருப்பியுள்ளதாக கண்டனம் செய்தது.

தனது வெளியேற்றத்தை இராஜபக்ஷ வெளிப்படையாக சாந்தகுணமுள்ளவராக ஏற்றுக்கொண்டமை, தேர்தலானது எந்தளவுக்கு வாஷிங்டனின் நெருங்கிய கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது என்பதை பிரதிபலிக்கின்றது. வாக்களிப்பு தொடங்குவதற்கு சில மணிநேரம் முன்னர், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி பகிரங்கமாக இராஜபக்ஷவை தொடர்புகொண்டு, "ஜனவரி 8 தேர்தல்கள் வன்முறை மற்றும் மிரட்டல் இன்றி இடம்பெறுவதை உறுதிசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கை நம்பத்தகுந்ததாகவும் வெளிப்படையானதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜேன் சாகி, ஒபாமா நிர்வாகம் "நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும்," என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். அவர், "மோசடி அல்லது வன்முறை தொடர்பான எந்தவொரு குற்றச்சாட்டு தொடர்பாகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும்", என இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்புவிட்டிருந்தார்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது மோசடி தேர்தல் என வலியுறுத்தும் அமெரிக்கத் தலைமையிலான ஒரு கருத்தொருமித்த பிரச்சாரத்தை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்ற செய்தி, இலங்கை ஆளும் உயரடுக்கில் இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்கள், இராணுவம் மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கு தெளிவாகியிருக்க கூடும். இலங்கையில் அமெரிக்க சார்பு மாற்றுக் கொள்கைக்கான மையத்தின் பாக்கியசோதி சரவணமுத்து, நியூ யோர்க் டைம்ஸிடம் கூறியதாவது: "அவர் [இராஜபக்ஷ] சுவரிலேயே எழுதப்பட்டுள்ளதை கண்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்... அரச எந்திரத்துக்குள் உள்ள அவரது பிரதிநிதிகள், 'நாங்கள் மக்கள் விருப்பத்தை நிராகரிக்கப் போவதில்லை" என்று அவரிடம் சொல்லியிருக்கக் கூடும்.

லண்டனைத் தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸ், தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் "வெற்றியின் இடைவெளி குறுகியதாகவே இருக்கும், வாக்கு மோசடி மற்றும் ஏனைய தேர்தல் தொடர்பான முறைகேடுகள் முன்னிலைப்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டிருக்கும்எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறைகளுக்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும்," என்று நேற்று கருத்து தெரிவித்திருந்தது. இந்த கருத்து, சிறிசேன வெற்றி பெறாவிட்டால், தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் மோசடி சம்பந்தமான ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்துக்கான ஒரு தளத்தை தயார் செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

அமெரிக்க நிதிய உயரடுக்கின் ஒரு ஊதுகுழலான புளூம்பேர்க், அமெரிக்க-சீன அழுத்தங்கள் தொடர்பில் இலங்கையின் நிலை பற்றி நேற்று வெளிப்படையாக சுட்டிக்காட்டியது. "இலங்கை தேர்தலில் இந்திய பெருங்கடல் செல்வாக்கு ஆபத்தில் உள்ளது," என்ற தலைப்பிலான ஒரு விமர்சனத்தில், அது சுட்டிக்காட்டியதாவது: "இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலின் நாளைய முடிவை எதிர்பார்த்திருக்கும் அனைத்து உலக தலைவர்களிலும், அதிக பணயத்தில் இருப்பவர் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் ஆவார்."

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் கொடுக்கும் கடன்களின் ஒன்றிணைந்த 211 மில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது இலங்கைக்கு சீன அரசாங்கம் கொடுக்கும் கடன்  490 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை, கடந்த பத்தாண்டுகளில் 50 மடங்கு அதிகரித்துள்ளது என்று புளூம்பேர்க் அறிக்கை கூறுகிறது. இலங்கையிலான ஏனைய சீன முதலீடுகள் இதே காலத்தில் 4 பில்லியன் டாலர்களையும் தாண்டி அதிகரித்துள்ளது.

 ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா வெளிப்படையாக கருத்து கூறாவிட்டாலும், அது இலங்கையையும் தனது செல்வாக்கு மண்டலத்தில் ஒன்றாக கருதுவதோடு சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு பற்றி மீண்டும் மீண்டும் கவலை தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு, இலங்கைக்கு ஜனாதிபதி ஷீ சென்றிருந்தபோது, கொழும்பு துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் தரிப்பதைப் பற்றி கடந்த செப்டம்பர் மாதம் கண்டனம் தெரிவித்திருந்தது. அது வழக்கமாக இடம்பெறுவதோடு அதனால் இந்தியாவிற்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று கொழும்பும் பெய்ஜிங்கும் அறிவித்திருந்தன.

இலங்கையானது ஆண்டுக்கு சுமார் 4,000 எண்ணெய் கப்பல்களால் பயன்படுத்தப்படும் இந்து சமுத்திரத்தின் முக்கிய கடல் பாதைக்கு அருகில் மூலோபாயரீதியாக அமைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற அதன் நட்பு நாடுகள் அத்தகைய கடல் பாதைகளை கட்டுப்படுத்துவதன் மூலம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் இருந்து எண்ணெய் மற்றும் பிற சக்தி வழங்களை இறக்குமதி செய்வதிலிருந்து சீனாவின் இயலுமையைத் தடுக்கலாம் என்று வாஷிங்டன் தீர்மானித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்கத் தலையீடானது இந்த பரிசீலனைகளுடன் பிணைந்துள்ளதுடன், தீவில் மட்டுமன்றி தெற்காசியா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு கடுமையான ஆபத்துக்களை முன்கொணர்கின்றது. அமெரிக்க "முன்னிலை" கொள்கையுடனான சிறிசேன ஜனாதிபதி பதவியின் அணிசேர்வு, ஆசியா முழுவதும் புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரிப்பதோடு போர் உந்துதலையும் தீவிரப்படுத்துகிறது.

நவ சம சமாஜ கட்சி (NSSP), ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி (FSP) போன்ற போலி இடதுகள் உட்பட சிறிசேன பிரச்சாரத்துடன் அணிசேர்ந்து முன்னிலைப்படுத்திய அனைத்து சக்திகளும், இந்த விளைவுகளுக்கு அரசியல் பொறுப்பை ஏற்கவேண்டும். வாழ்க்கைத் தரத்தின் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் பொலிஸ்-அரச வழிமுறைகளுக்கும் எதிராக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் நிலவிய உண்மையான விரோதத்தை, ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கு நோக்கங்களுக்கு சேவை செய்யும் நிகழ்ச்சி நிரலின் பக்கம் திருப்பிவிடுவதற்காக அவர்கள் அனைவரும் அமெரிக்க-சார்பு எதிர்க் கூட்டணிக்கு உதவியுள்ளனர்.