தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Racist provocation and the “war on terror” இனவாத ஆத்திரமூட்டலும் “பயங்கரவாதத்தின் மீதான போரும்”
Patrick Martin Use this version to print| Send feedback புதனன்று அதிகாலை, சார்லி ஹெப்டோவின் புதிய பதிப்பு பிரான்ஸ் எங்கிலும் விற்பனையாகியது, முதற்பதிப்பு பிரதிகளின் எண்ணிக்கை வழக்கமான 60,000 இல் இருந்து 5 மில்லியனுக்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. முகமது நபியை சிறுமைப்படுத்துகின்றதொரு கேலிச்சித்திரத்தை தனது அட்டைப்படத்தில் தாங்கி வந்திருந்த இந்தப் புதிய இதழானது, ஊடகங்களது சித்தரிப்புகளைப் போல “ஊடக சுதந்திர”த்தின் ஒரு நினைவுச்சின்னம் அல்ல, மாறாக அரசு-ஆதரவுடனான ஒரு ஆத்திரமூட்டலே ஆகும். மிகச் சமீபகாலம் வரையிலும் நவ-பாசிச தேசிய முன்னணியின் இராச்சியமாக இருந்த ஒரு முஸ்லீம்-விரோதப் பிரச்சாரமானது, இந்த வெளியீட்டின் மூலமாகவும் ஊடகங்கள் முழுவதிலுமான அதன் எதிரொலிகள் மூலமாகவும், மில்லியன் கணக்கான பிரெஞ்சு குடிமக்கள் மீது குண்டுமழை போல பொழியப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் புதுப்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு ஆதரவுத் தளத்தை வழங்குவதற்காகவே இந்த மனோநிலைகள் திட்டமிட்டு கிளறிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. “பயங்கரவாதத்தின் மீதான போர்” நடத்தப்படும் விதமானது முன்னெப்போதையும் விட வெளிப்படையாக ஒரு இனவாத குணாம்சத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப்பெரும் அளவில் விரிவாக்கப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கைக்காய் பிரெஞ்சு அரசாங்கம் நிதியுதவி அளித்த அதேவேளை, பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முன்னிலை இதழ்கள் இதனை சாத்தியமாக்கின —Le Monde கணினிகள் வழங்கியது, Libération தனது அலுவலகங்களை எஞ்சியிருக்கும் சார்லி ஹெப்டோ ஊழியர்களுக்காய் திறந்தது— என்ற உண்மையானது இந்தப் பிரச்சாரம் மிகக் கவனமாக ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை தெளிவாக்கியிருக்கிறது. பிரதமர் மானுவல் வால்ஸ் தனது ஆதரவை வெளிப்படுத்தும் பொருட்டு வந்து பார்த்துச் சென்றார். பிரெஞ்சு அரசாங்கம் சிறிதும் நேரத்தை வீணடிக்காமல் மத்திய கிழக்கிலான தனது போர் உந்துதலை ஊக்குவிக்க ஜனவரி 7 தாக்குதல்களை பயன்படுத்தியது. ஈராக்கில் வான் தாக்குதல்களை விரிவுபடுத்த பிரான்சின் தேசிய நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று 488 க்கு 1 என்ற விகிதத்தில் ஆதரவு வாக்குகள் கிட்டியதன் பின்னர், மிகச் சமீபம் வரை பிரான்சின் மிக வெறுக்கப்பட்ட தலைவராக இருந்த ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், மத்திய கிழக்கு செல்லவிருந்த சார்ல்ஸ் டு கோல் (Charles de Gaulle) விமானந்தாங்கிக் கப்பலில் செல்லும் ஊழியர்களுக்கு உரையாற்ற அங்கு பிரசன்னமாகி இருந்தார். பாரிஸில் 20 பேர் மரணிக்கக் காரணமாக அமைந்த முந்தைய வார நிகழ்வுகளை சுட்டிக் காட்டிய அவர் “நமது விமானந்தாங்கிக் கப்பல் அங்கு இருப்பதை சூழ்நிலை நியாயப்படுத்துவதாக” கூறினார். இந்தக் கப்பல் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து கொள்ளவிருக்கிறது. அங்கு, பஷார் அல்-அசாத்தின் சிரிய ஆட்சி அடுத்த இலக்காக இருக்க, இப்போதைக்கு ஈராக் மற்றும் சிரியாவிலான இஸ்லாமிய அரசை (ISIS) குறிவைத்து நடக்கின்ற போரின் பாகமாக மேற்கு ஈராக் மற்றும் கிழக்கு சிரியப் பகுதிகளின் மீது அமெரிக்கப் படைகள் குண்டுகளை மழை போல் பொழிந்து கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்திய சக்திகளும் வளைகுடா ஷேக்குகளது ஆட்சிகளும் கொண்ட அமெரிக்க தலைமையிலான கூட்டணியானது, திங்களன்று மட்டும் 18 வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. சென்ற வாரத்தில் பாரிஸில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான அளவில் அப்பாவி மக்கள் இதுபோன்ற தாக்குதல்களில் அன்றாடம் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை, ஆனாலும் மேற்கத்திய ஊடகங்களில் இருந்து இதற்கு மிக மிகக் குறைந்த கவனமே கிட்டும் என்பது தெரிந்ததே. பாரசீக வளைகுடா செல்லும் வழியில், சார்ல்ஸ் டு கோல் போர்க்கப்பல் ஏமன் கடலோரப் பகுதியின் வழி சென்று, அந்த நாட்டில் இருக்கக் கூடிய இலக்குகளின் மீது வான் தாக்குதலை நடத்துவதற்கான திறனையும் ஹாலண்ட் அரசாங்கத்திற்கு வழங்கும். சாய்த் கௌச்சி ஏமனில் அரேபியத் தீபகற்ப அல்கெய்தாவிடம் இருந்து இராணுவப் பயிற்சியும் வழிகாட்டல்களையும் பெற்றிருக்கலாம் என்பதாகவே அமெரிக்க மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். ஏமன் மீது பிரெஞ்சு போர் விமானங்களோ அல்லது அமெரிக்காவின் ஆளில்லா விமான ஏவுகணைகளோ அல்லது இரண்டுமோ பாரிய தாக்குதல் ஒன்றை வெகுவிரைவில் நடத்தவிருப்பது நிச்சயம் என்ற ஊர்ஜிதமற்ற தகவல்கள் ஊடகங்களில் உலாவிக் கொண்டிருக்கின்றன. சொந்த நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவது என்ற “பயங்கரவாதத்தின் மீதான போரின்” இன்னுமொரு பகுதியை துரிதமாக அதிகரிப்பதற்கும் சார்லி ஹெப்டோ தாக்குதல் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுப் போக்குவரத்து மையங்கள், பள்ளிகள் மற்றும் தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய பிற இடங்களில் காவல் பணிக்கு 10,000 பிரெஞ்சு துருப்புகள் அணிதிரட்டப்பட்டிருப்பது குறித்து செவ்வாயன்று விவரித்த பாதுகாப்பு அமைச்சரான ஜோன்-ஈவ் லு திரியோன், இது “அதே எதிரியின்” மீது ”வெளிநாடுகளில் நாம் மேற்கொள்ளக் கூடிய இராணுவ நடவடிக்கைகளை ஒத்த ஒரு நடவடிக்கை” என்றார். “இன்று வெளியிலிருந்தான அச்சுறுத்தலுக்கும் உள்ளிருந்தான அச்சுறுத்தலுக்கும் இடையிலான பிரிப்புக் கோடு எதுவுமில்லை என்பதே புதிய மற்றும் ஆழ்ந்த கவனத்துக்குரிய அம்சமாகும்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். சார்லி ஹெப்டோவின் “கருத்து சுதந்திர”த்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டே, பிரெஞ்சு அதிகாரிகள் “பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களுக்காக” —அதாவது, சமூக ஊடகங்களில் பதிவிட்டது உள்ளிட்ட பேச்சுகளுக்காக— குறைந்தபட்சம் 54 பேரைக் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் சிறார்கள், சிலர் துரிதமான விசாரணைகளுக்கு வழிசெய்யும் சட்டத்தின் மூலமாக ஏற்கனவே குற்றம் உறுதியாக்கப்பட்டு தண்டனையும் பெற்று விட்டிருக்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அனுதாபம் காட்டுகின்ற விதமான பொது வெளிப்பாடுகள் மீதான அடக்குமுறையுடன் சேர்த்து, மலை போல் குவிக்கப்படுகின்ற போலிஸ்-அரசு அதிகாரங்கள் வெறும் இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது பாய்வதுடன் நின்று விடாது, பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு எதிரான, எல்லாவற்றுக்கும் மேல் தொழிலாள வர்க்கத்தில் இருந்தான எதிர்ப்பின் மீதும் ஏவப்படும். விரிவான தொலைபேசி ஒட்டுக்கேட்பு மற்றும் இணையக் கண்காணிப்பு நடவடிக்கைகள், மற்றும் பிரெஞ்சுக் கல்வி அமைப்புமுறையை மறுகட்டுமானம் செய்வதற்கும் நாட்டின் வீட்டுவசதிக் கொள்கையை மாற்றுவதற்குமான (பெரிய நகரங்களைச் சுற்றிய ஏழ்மைப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் வாழும் முஸ்லீம் சமூகங்களை தகர்க்கும் நோக்கத்துடன்) நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான புதிய சட்டங்களை மூன்று மாதங்களுக்குள்ளாக தனது அரசாங்கம் வரைவு செய்து முடிக்கும் என்று வால்ஸ் வாக்குறுதியளித்தார். சுமார் ஐந்து மில்லியன் முஸ்லீம்கள் பிரான்சில் வாழ்கிறார்கள் —மேற்கு ஐரோப்பாவில் மிக அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு— என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்த நடவடிக்கைகள் வெறும் ஜனநாயக-விரோதமானவையும் ஆத்திரமூட்டத்தக்கவையும் மட்டுமன்று, மிக அதீத அடாவடித்தனமானவையும் கூட ஆகும். சார்லி ஹெப்டோவின் துஷ்டத்தனமான ஆத்திரமூட்டல்கள் மீதான விமர்சனங்கள் அனைத்தும், “கருத்து சுதந்திரத்தின்” மீதான தாக்குதல் என்றும், இந்தப் பத்திரிகையை ஊக்குவிக்க பிரெஞ்சு அரசின் வளங்கள் திரட்டப்படுவதும் கூட ஒருவழியில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதே என்றும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பிரச்சாரத் தாக்குதலின் ஆதரவாளர்கள் பிரகடனம் செய்கின்றனர். ஒரு நச்சுத்தனமான, இனவாத, வலது-சாரிப் பத்திரிகை ஒன்றை வெளியிடுவதற்கான சட்டபூர்வ உரிமையைப் பாதுகாப்பதென்பது ஒரு விடயம். முதலாளித்துவ அரசு அப்பட்டமான பாசிச வெளியீடுகளைத் தடைசெய்வதையும் கூட மார்க்சிஸ்டுகள் எதிர்க்கிறார்கள், காரணம் என்னவென்றால் அதி-வலதுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்ற எந்தச் சட்டங்களும் அதனை விட மிக வன்முறையான விதத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் இடதுக்கு எதிராக ஏவப்படும். அதேநேரத்தில் இத்தகைய வெளியீடுகளின், வெறுக்கத்தக்க அரசியல் செய்திகளுக்காக வக்காலத்து வாங்குவதும், இன்னும் அதனை பெருமைபேசுவதும், என்பது முற்றிலும் மாறுபட்டதொரு விடயமாகும். முகமது நபியைத் திரித்து சிறுமைப்படுத்துகின்ற கேலிச்சித்திரங்களுக்கும் கு க்ளக்ஸ் கிளானின் (Ku Klux Klan) கறுப்பினத்தவர்-விரோத கேலிச்சித்திரங்களுக்கும், அல்லது இந்த விடயத்தில், நவ-பாசிச மற்றும் நவ-நாஜி குழாம்களில் நீண்ட பிரபலத்தைப் பெற்றிருக்கக் கூடிய யூத-விரோதக் கேலிச்சித்திரங்களுக்கும் கோட்பாட்டளவில் எந்த வித்தியாசமும் இல்லை. பிரெஞ்சு அரசியலின் தர்க்கத்தில் இது எடுத்துக்காட்டப் பெறுகிறது. ஜனாதிபதி ஹாலண்ட், சார்லி ஹெப்டோவின் முஸ்லீம்-விரோத கேலிச்சித்திரங்களுக்கு ஆதரவாய் நிற்பதாய் தெரிவித்து விட்டு, பாசிச தேசிய முன்னணியின் தலைவரான மரின் லு பென்னை எலிசே மாளிகைக்கு விவாதிக்க அழைப்பதை அதனுடன் ஒன்றுசேர்க்கிறார். மக்கள் கருத்து இடைவிடா மாசுபடுத்தலுக்கு ஆட்படுத்தப்பட்டு, பாரிஸ் படுகொலைகள் தொடர்பான இயல்பான கோபமும் அதிர்ச்சியும் திரிக்கப்பட்டு தவறானதிசையில் திருப்பி விடப்படுவதானது பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றும் ஒட்டுமொத்தமாக ஏகாதிபத்தியத்தின் சித்தாந்த திவால்நிலையையே வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் 9/11 இன் இரத்தக்கறை தோய்ந்த சட்டையை ஆட்டி ஆட்டிக் காட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிலான தனது போர்களுக்கு காரணம் கற்பித்தது, இப்போது அந்தப் போலிச்சாக்கு, முற்றிலும் பயன்படுத்தி தீர்ந்து விட்ட ஒன்றாகி விட்டது. பிரான்சிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், ஒரு புதிய சிலுவைப் போர் உண்மையாவதைப் போன்ற பரிணாமங்களை எடுத்துக் கொண்டிருக்கக் கூடிய புதிய இராணுவ சாகசங்களுக்கு சதித்திட்டம் தீட்டுகின்ற நிலையில், இனவாதம் என்னும் சீட்டைக் கொண்டு ஆடுகின்றனர். எப்படியிருப்பினும் பிரிக்கமுடியாதபடிக்கு அத்தனை பிரதான முதலாளித்துவ நாடுகளிலும் அடிப்படை வர்க்க முரண்பாடுகள் அவர்களை உணரும்படி செய்யும். தொழிலாள வர்க்கம் ஊடகப் பிரச்சார மழைகளின் முட்டாளாக்கும் விளைவுகளை களைந்தெறிந்து விட்டு, வேலைகளை, வாழ்க்கைத் தரங்களை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம் ஆகிய தனது சுயாதீனமான வர்க்க நலன்களுக்கான போராட்டத்தைக் கையிலெடுத்தாக வேண்டும். |
|
|