தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
New York Times publishes new “revelations” on North Korea நியூ யோர்க் டைம்ஸ் வட கொரியா குறித்து புதிய "வெளியீடுகளை" பிரசுரிக்கிறது
By Patrick Martin Use this version to print| Send feedback நியூ யோர்க் டைம்ஸ் திங்களன்று அமெரிக்க இராணுவம்-உளவுத்துறை எந்திரத்தால் வழங்கப்பட்ட ஒரு புதிய பிரச்சார செய்தியைப் பிரசுரித்தது. அந்த நீண்ட, முதல் பக்க கட்டுரை டேவிட் ஈ சன்கெர் மற்றும் மார்டின் ஃபக்லெரின் பெயரில் இருந்தது, ஆனால் “சோனி தாக்குதலுக்கு முன்னரே NSA வட கொரிய வலையமைப்புகளை ஊடுருவியது, அதிகாரிகள் கூறுகின்றனர்" என்ற அதன் தலைப்பே, அக்கட்டுரையின் உண்மையான உரிமையாளர்களை எடுத்துக்காட்டுகிறது. 2,000கும் அதிகமான வார்த்தைகளில், அந்த "அதிகாரிகள்" நிறைய கூற வேண்டி இருந்தது. சொல்லப்போனால் அதில் எந்தவொரு அதிகாரிகளினது பெயர்களோ அல்லது ஆவணங்களின் மேற்கோள்களோ குறிப்பிடாமலேயே, இந்த சாட்டி ஒப்படைக்கும் தன்மை, அக்கட்டுரை முழுவதும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டப்படுகிறது. முதல் பத்தி "அமெரிக்க அதிகாரிகள்" என்று குறிப்பிடுகிறது; இரண்டாவது பத்தி, “முன்னாள் அமெரிக்க மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள்" என்றும்; மூன்றாவது பத்தி, “அதிகாரிகள்" என்றும்; நான்காவது பத்தி, “அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள்" என்றும் குறிப்பிடுகிறது. ஆறாவது பத்தி பெயரிடாமல் "ஒபாமா கூட்டாளிகள்", "ஒரு மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி" என்று குறிப்பிடுகிறது. இது இதழியல் அல்ல, மாறாக குறிப்பெடுக்கப்பட்ட கருத்துரை. தொலைக்காட்சி வலையமைப்புகள் மற்றும் பெரும்பாலான தினசரி பத்திரிகை செய்திகளை வழிநடத்தி, (சான்றாக டைம்ஸ் கட்டுரை திங்களன்று இரவு கேள்விக்கிடமில்லா உண்மையாக NBC Newsஇல் அறிவிக்கப்பட்டது) அமெரிக்க பொது மக்களின் கருத்துகளின் மீது செல்வாக்கு செலுத்தும் முயற்சியில், டைம்ஸிற்கான பிரதான வாஷிங்டன் செய்தியாளர் சன்கெர், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து கருத்துக்களைப் பெறுகிறார், அதன் விளைவாக அது மிக முக்கிய அமெரிக்க நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வருகின்றன. சொல்லப்போனால், விமர்சனரீதியில் செய்தி எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே அந்த கட்டுரை முடிந்துவிடுகிறது. பெயர் குறிப்பிடப்படாத இந்த அதிகாரிகள் யார்? அவர்களை ஏன் நம்ப வேண்டும்? எந்த சுதந்திரமான, புறநிலை ஆதாரம் அவர்களது வாதங்களை ஆதரிக்கிறது? டைம்ஸின் கணக்கில் கூறப்பட்ட அந்த தகவலை அளிப்பதில் அவர்களின் நோக்கங்கள் என்ன? அவர்கள் என்ன அமெரிக்க அரசாங்க கொள்கைகளை ஊக்குவிக்க முனைகிறார்கள்? அமெரிக்க அரசாங்கத்தினதா அல்லது வெளிநாட்டு அரசாங்கங்களினதா, என்ன கொள்கைகளை அவர்கள் தடுக்க முனைகிறார்கள்? அந்த கட்டுரை இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்த கேள்விகள் எதையும் அது முன்வைக்கவும் கூட இல்லை, ஏனென்றால் அமெரிக்க இராணுவ-உளவுத்துறை எந்திரம் அன்றாட செய்திகளுக்குள் எதை செலுத்த விரும்புகிறதோ அதன் ஒரு அரசாங்க-அனுமதி பெற்ற விற்பகராக டைம்ஸ் செயல்படுகிறது. சன்கெர்-பிரக்லெர் ஆக்கப்படைப்பில் வலியுறுத்தப்பட்ட எந்தவொரு பிரதான உண்மையையும் நம்புவதற்கு அங்கே எந்த காரணமும் இல்லை. அவை சுதந்திரமாக சரிபார்க்கப்பட்டிருக்கவில்லை, அதற்கு பதிலாக அவை வெறுமனே டைம்ஸூடன் பேசிய பெயர் வெளியிடாத உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் வலியுறுத்தல்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அத்தகைய ஆதாரமற்ற வலியுறுத்துதல்களில் சில: * வட கொரியாவின் உளவுத்துறை சேவையான உளவுத்துறை பொது ஆணையம் (Reconnaissance General Bureau), சீனாவில் உள்ள ஒரு மிகப்பெரிய புறச்சாவடி உடன் சேர்ந்து, Bureau 121 என்றழைக்கப்பட்ட, ஒரு இரகசிய இணைய ஊடுருவல் பிரிவைச் செயல்படுத்துகிறது. * சோனி பிக்சர்ஸ் கணினி வலையமைப்பு மீது வட கொரியாவின் ஒரு தாக்குதல் நடந்து வந்ததைக் குறித்து அறிந்து கொள்வதற்கு உதவியாக, அமெரிக்க அரசாங்கம் அந்த ஊடுருவல் பிரிவால் பயன்படுத்தப்பட்ட கணினி வலையமைப்புகள் மீது மால்வேர்களைச் (malware - கணினிகளின் தரவுகளை ஊடுருவி எடுக்கும் நிரல்கள்) செலுத்தியது. * இணையவழி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதற்காக, வட கொரியா, ஈரான் மற்றும் சீனா உட்பட இலக்கில் வைக்கப்பட்ட நாடுகளின் கணினி வலையமைப்புகளை கண்காணிக்க அனுமதிக்கும் வகையில், அமெரிக்க அரசாங்கம் "கண்காணிப்பு நிரல்களைச்" (beacons) செயல்படுத்துகிறது. * சோனி மீதான ஆரம்ப "கூர்மையான பிஷ்ஷிங்" தாக்குதல்களைக் குறித்து அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் அந்நாட்டின் வலையமைப்புகளில் ஊடுருவும் மற்றும் கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியின் "முக்கியத்துவம் குறித்து உண்மையில் அறிந்திருக்கவில்லை". இந்த "உண்மைகள்" வெறுமனே நிரூபிக்கப்படாதவை என்பது மட்டுமல்ல, அவை புதிய கேள்விகளையும் எழுப்புகின்றன. அமெரிக்க அரசாங்கம் சோனி மீதான வட கொரியா தாக்குதலை பார்த்துக் கொண்டிருந்தது என்றால், அது ஏன் அந்நிறுவனத்திற்கு அதை தெரிவிக்கவில்லை அல்லது அந்த தாக்குதலுக்கு எதிராக போராட அதற்கு உதவவில்லை? வட கொரிய வலையமைப்புகளை "வெளிச்சமிட்டு காட்ட" மற்றும் அமெரிக்க கண்காணிப்பைப் பலப்படுத்த செத் ரோகனின் The Interview திரைப்படம் தான் ஒரு பெருபிரயத்தன முயற்சியா? (அமெரிக்க உளவுத்துறை கையாட்களுடன் கலந்தாலோசித்தே அப்படத்தை எடுத்ததாக ரோகன் தெரிவித்துள்ளார்.) விமர்சனரீதியில் நுண்ணிய ஆய்வானது, டைம்ஸ் செய்தியின் இரண்டு நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. சோனி பிக்சர்ஸ் மீதான இணையவழி ஊடுருவலுக்கு வட கொரியாவே பொறுப்பு என்பதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் ஆதாரம் உள்ளது என்ற அதன் வாதங்கள் மீது தொழில்ரீதியிலான தகவல் தொழில் நுட்ப கண்காணிப்பு ஆலோசகர்களிடையே ஐயவாதம் நிலவுகின்ற நிலையில், அமெரிக்க அரசாங்கம் நிச்சயமாக இருந்ததாகவும், ஏனென்றால் அதுவே வட கொரிய இணையவழி தாக்குதல் பிரிவுக்குள் ஊடுருவல் செய்திருந்தது என்பதையும் அக்கட்டுரை வலியுறுத்துகிறது. அதற்கு கூடுதலாக, இணையத்தில் வட கொரியாவுடன் தொடர்புபட்டிருந்த பிரதான தொடர்பாளராக சீனாவின் பாத்திரம் மீது கவனத்தைத் திசைதிருப்பவும், மற்றும் வட கொரியாவிற்கு எதிரான பிரச்சாரத்தில் பெய்ஜிங் போதுமான அளவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் சீனாவின் இலக்குகளைக் கீழறுக்க பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்ப உடைமைகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்று சீனாவிற்கு ஒரு பொது எச்சரிக்கையை விடுக்கவும் அமெரிக்க அதிகாரிகள் விரும்புகிறார்கள். NSA, வட கொரிய கணினிகளுக்குள் ஊடுருவல் செய்துள்ளது என்பதற்கு பெரிதும் சாத்தியமுள்ளது என்பது உண்மையே. இரகசிய ஆவணங்களைப் பகிரங்கப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டென் சில விபரங்களில் அம்பலப்படுத்தியதைப் போல, அமெரிக்க உளவுத்துறை முகமை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தகவல் தொடர்பையும் இலக்கில் வைக்கிறது. இங்கே வெளிப்படையாக இரட்டை நிலைப்பாடு உள்ளது: அதாவது சட்டவிரோதமான அமெரிக்க உளவுத்துறை குறித்த உண்மையைக் கூறியதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் ஸ்னோவ்டென் நிந்திக்கப்பட்டு, இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்ற அதேவேளையில், அதுவே சிஐஏ மற்றும் என்எஸ்ஏ ஆகியவற்றால் கேட்டுக் கொள்ளப்பட்ட போது மட்டும், டைம்ஸ் செய்தி ஒரு உயர்மட்ட இரகசிய நடவடிக்கையை "அம்பலப்படுத்துகிறது". அக்கட்டுரையின் எஞ்சியபகுதி நாட்டை விட்டோடிவந்த இரண்டு நபர்களுடன் வட கொரிய இணையவழி போர் முயற்சி பற்றிய ஃபக்லெரின் நேர்காணல்களின் அடிப்படையில் இருந்தது. அவர்களில் ஒருவர் 2007இல் அந்நாட்டை விட்டு வெளியேறி இருந்த ஜாங் செ-யுல் ஆவார், மற்றவர் தேதி தெரிவிக்கப்படவில்லை என்றபோதினும் அதற்கும் முன்னரே, வெளிப்படையாக நாட்டை விட்டு வெளியேறிய கிம் ஹென்ங்-க்வாங் ஆவார். இங்கே இரண்டு விடயங்களைப் பார்க்க வேண்டி உள்ளது. ஒன்று, அவ்விரு நபர்களுமே தெளிவாக தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் பாதுகாப்பின் கீழ் வேலை செய்கின்றனர், ஆகவே அந்த முகமைகளின் நலன்களுக்கு சேவை செய்கிறது என்பதால் மட்டுமே டைம்ஸ் உடனான நேர்காணல்களுக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கலாம். இரண்டாவது அவ்விருவருக்குமே சோனி மீதான இணையவழி ஊடுருவல் குறித்து எந்தவித விபரமும் தெரிந்திருக்காது, அச்சம்பவம் ஜாங் வட கொரியாவிலிருந்து வெளியேறி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்திருந்தது. வட கொரியாவின் இணையவழி அமெரிக்க ஊடுருவல் என்று கூறப்படுவதன் மீதான செய்தி, ஒரு பிரதான அமெரிக்க வெளியுறவு கொள்கை முனைவுடன் ஒருங்கிணைந்ததாக தெரியும் பொய் தகவல்களை விதைக்க, பின்னோக்கி 2002 ஜுடித் மில்லரின் இழிபெயரெடுத்த செய்திகளில் இருந்து, டைம்ஸ் பயன்படுத்தி வந்திருக்கும் சம்பவங்களில் சமீபத்திய ஒன்று மட்டுமே ஆகும். அந்த இழிபெயரெடுத்த 2002 ஜுடித் மில்லர் செய்திகள், ஈராக் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கான புஷ் நிர்வாகத்தின் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க உதவுவதில், சதாம் ஹூசைன் ஓர் அணுகுண்டு தயாரிப்பதாக அத்திட்டத்தின் மீது "ஆதாரத்தை" வழங்கியது. செப்டம்பர் 2013இல், டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளில் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வீசப்பட்ட நரம்புகளைப் பாதிக்கும் விஷவாயு குண்டை அசாத் படைகளால் மட்டுமே வீசப்பட்டிருக்க முடியும் என்பதை நிரூபிப்பதாக கூறப்பட்ட ஒரு நீண்ட அறிக்கையுடன், சிரியாவில் அசாத் ஆட்சி மீதான திட்டமிட்ட அமெரிக்க விமான தாக்குதல்களை ஆதரிக்கும் ஒரு ஊடக பிரச்சாரத்தை டைம்ஸ் முன்னெடுத்தது. (பார்க்கவும்: New York Times on Syria: All the propaganda fit to print). அதற்கடுத்து நடந்த செமோர் ஹெர்ஸின் புலனாய்வு, அமெரிக்க தலையீட்டிற்கு ஒரு போலிக்காரணத்தை வழங்க கிளர்ச்சியாளர்களாலேயே தான் அந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது என்பதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரத்தைக் கண்டது. அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஆதரிக்கப்பட்ட ஒரு அதிதீவிர-வலது ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் கியேவில் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக, ரஷ்யாவை ஆதரிக்கும் போராளிகள் கிளர்ந்தெழுந்துள்ள கிழக்கு உக்ரேனில் ரஷ்ய துருப்புகள் செயல்பட்டு வந்தன என்பதை நிரூபிப்பதாக கூறப்பட்ட புகைப்படங்களை காட்டும் ஒரு செய்தியிலிருந்து, கடந்த ஏப்ரலில், டைம்ஸ் பின்வாங்க நிர்பந்திக்கப்பட்டது. (பார்க்கவும்: போலியான உக்ரேன் புகைப்படங்கள் வெளியீட்டை நியூ யோர்க் டைம்ஸ் மூடிமறைக்க முயற்சிக்கிறது) செமோர் ஹெர்ஸ் போன்ற ஒரு உண்மையான இதழாளர் இரகசிய ஆதாரங்களைப் பரந்தளவில் பயன்படுத்திக் கொள்கிறார். ஆனால் டைம்ஸ் போன்றில்லாமல், ஹெர்ஸ் தங்களின் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக ஆதாரங்களை வழங்கும் அரசு அதிகாரிகளும், ஆதார நபர்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாக்கப்பட வேண்டுமென எழுதுகிறார். டைம்ஸோ, லாங்லே மற்றும் போர்ட் மீட்டிலிருந்து நியூ யோர்க் நகரின் 42வது வீதி வரையில் இருக்கும் பரிவர்த்தனை பகுதியைக் குறித்து பொதுமக்களை இருட்டில் வைப்பதற்காக, உத்தியோகபூர்வ செய்தியைப் பத்திரிகைகளுக்கு வழங்க பணிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகளையே அனாமதேயராக (anonymous) காட்டுகிறது. |
|
|