தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் After Charlie Hebdo attack, France announces draconian anti-terror law சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸ் கடுமையான பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தை அறிவிக்கிறது
By Alex Lantier Use this version to print| Send feedback நேற்று காலை எலிசே ஜனாதிபதி மாளிகையில் ஒரு மந்திரிசபை கூட்டத்திற்குப் பின்னர், பிரெஞ்சு பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் ஒரு கடுமையான புதிய பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தை அறிவித்தார். ஒரு "பிரெஞ்சு பாணியிலான தேசிய பாதுகாப்பு சட்டம்" மீதான தீவிர ஊடக விவாதங்கள் மற்றும் புருசெல்ஸில் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு ஆகியவற்றிற்குப் பின்னர் வால்ஸ் அந்த பரிந்துரைகளை அறிவித்தார். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட பொலிஸ்-அரசு முறைமைகளைப் போன்றவொரு வகையைக் கொண்டு வருவதற்காக, சார்லி ஹெப்டோ பயங்கரவாத தாக்குதல்களைச் சுரண்டுவதற்கு, ஐரோப்பாவெங்கிலும் அரசாங்கங்களால் செய்யப்பட்டுவரும் முயற்சிகளின் பாகமாக அந்த பரிந்துரைகள் இருக்கின்றன. மக்களைக் கண்காணிப்பதற்காக பிரெஞ்சு இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளில் 2,680 புதிய பணியிடங்களை உருவாக்குவதையும், மற்றும் சுமார் 3,000 மக்களைக் கண்காணிக்கும் திட்டங்களையும் வால்ஸ் அறிவித்தார். அந்த வேலைத்திட்டத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 425 மில்லியன் யூரோ (492 மில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும், நியமிக்கப்பட இருப்பவர்களின் செலவுகளையும் உள்ளடக்கினால் அது 735 மில்லியன் யூரோவாக அதிகரிக்கும். “சிரியாவிலோ அல்லது ஈராக்கிலோ உள்ள பயங்கரவாத வலையமைப்புகளுடன் சம்பந்தப்பட்டுள்ள, பிரான்சில் உள்ள சுமார் 1,300 பிரெஞ்சு மக்களையோ அல்லது வெளிநாட்டவர்களையோ இன்று நாம் கண்காணிக்க வேண்டியுள்ளது. இது ஒரேயாண்டில் 130 சதவீத உயர்வாகும்,” என்று வால்ஸ் தெரிவித்தார். “இதனுடன் பழைய வலையமைப்புகளில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அல்லது ஏனைய நாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளவர்கள், அத்துடன் பிரெஞ்சு மொழி பேசும் இணையவழி-ஜிஹாதிஸ்ட் வட்டாரங்களின் முக்கிய நகர்வாளர்கள் என 400இல் இருந்து 500 பேரையும் ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக, சுமார் 3,000 பேரைக் கண்காணிக்க வேண்டியுள்ளது,” என்றார். வால்ஸ் உரையாற்றிய போதே, ஆயிரக் கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவ படைகள் பிரான்சின் வீதிகளில் ரோந்து சுற்றி வந்தன, மேலும் பிரான்சிலிருந்து பெல்ஜியம், பிரிட்டன், ஜேர்மனி மற்றும் கிரீஸ் வரையில் பொலிஸ் சோதனை வேட்டைகள் பரவி இருந்தன. பிரான்ஸ் முழுவதும் 122,000 பொலிஸ், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஆயுதந்தாங்கிய காவல்படைகளை ஒன்றுதிரட்ட வேண்டியுள்ளதாக வால்ஸ் தெரிவித்தார். "ஒரு பாரிய முயற்சி தான், ஆனால் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அவசியமானது" என்று கூறி அவர், இராணுவம் மற்றும் உளவுத்துறையில் புதிய வேலைகளை உருவாக்குவதற்கு அவர் அழைப்புவிடுத்தார். அந்த சட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று, இணையம் மற்றும் சமூக ஊடக தளங்களின் மீது பாரிய அரசு கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதாகும் என்பதை வால்ஸ் தெளிவுபடுத்தினார். “பயங்கரவாதிகள் பெரும்பாலும் பொது மக்கள் பயன்படுத்தும் அதே சமூக வலைத் தளங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். சட்டவிரோதமான செய்திகளைக் குறிப்பிட்டுக் காட்டும் எங்களின் கருவி, ஜனவரி 7இல் இருந்து 30,000 எச்சரிக்கைகளைப் பெற்றுள்ளது; அதாவது, இது வழக்கமானதை விட ஆறு மடங்கு அதிகமாகும்,” என்றார். “தீவிரமயப்படுத்தலை தடுப்பதற்கு" 60 மில்லியன் யூரோ ஒதுக்கப்படும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். சந்தேகத்திற்குரியவர்களின் கார்களிலும் மற்றும் மின்னணு சாதனங்களிலும் இடத்தை அறியும் கருவிகளைப் பிரயோகிக்கவும் மற்றும் அவர்களது வீடுகளில் மைக்ரோபோன்களை வைக்கவும் பிரெஞ்சு உள்நாட்டு உளவுத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட இருக்கிறது. “அச்சட்டம் நாங்கள் பின்தொடர்கிறவர்களின் உரையாடல்கள் மற்றும் ஆவணங்களைப் பார்ப்பதற்கு தேவையான ஆற்றலைச் சேவைகளுக்கு வழங்கும்,” என்று ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஒரு பிரதிநிதி ஜோன்-ஜாக் உர்வோஸ் (Jean-Jacques Urvoas) வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்குத் தெரிவித்தார். “நாம் யாரையேனும் கண்காணிக்கிறோம் என்றால், நம்மால் அவரது கணினிக்குள் நேரடியாக ஊடுருவ முடியக்கூடியதாக இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்,” என்றார். செப்டம்பர் 2015க்குள் விமானப் பயணிகளின் தகவல் களஞ்சியத்தையும் பிரெஞ்சு அதிகாரிகள் அமைக்க இருக்கிறார்கள், அத்துடன் விமானப் பயணிகளின் பிரத்யேக தகவல்களை ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துடன் விவாதம் நடந்து வருகிறது. இந்த அடிப்படையில், “பிரான்ஸ் அதன் உளவுத்துறை சேவைகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு இறுதியில் ஒரு சட்டரீதியான கட்டமைப்பைக் கொண்டிருக்கும்,” என்று வால்ஸ் தெரிவித்தார். எந்தவொரு சட்டரீதியிலான அடித்தளமும் இல்லாமல் உளவுத்துறை முகமைகள் பெரும் அதிகாரங்களைப் பெற்றிருக்கும் ஓர் ஆட்சி, பிரான்சிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதிகளிலும், கடந்த தசாப்தத்தின் போது கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை இந்த அறிக்கை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக உள்ளது. புதிய நடவடிக்கைகள் ஆரம்பத்தில் ஐரோப்பிய முஸ்லீம் மக்களை நோக்கி இருக்கின்ற போதினும், இத்தகைய பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்கள் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டிலும் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக எழும் எந்தவொரு எதிர்ப்புக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும். சார்லி ஹெப்டோ மீதான தாக்குதலுக்கு ஆளும் மேற்தட்டு காட்டும் விடையிறுப்பின் ஆக்ரோஷத்தன்மை, பல ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போரின் மூலமாக கட்டவிழ்ந்துள்ள சமூக பதட்டங்கள் மீது அதிகரித்துவரும் பீதியைப் பிரதிபலிக்கிறது. ஈராக் மீதான 2003 அமெரிக்க படையெடுப்புக்கு பிரெஞ்சு அரசாங்கம் எதிர்ப்பு காட்டுவதைத் தவிர்த்துக் கொள்ள எடுத்த முடிவும் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க தலைமையிலான போர் முனைவின் மீது அது வரிசையில் நின்றதும், பிரான்ஸை உள்நாட்டு போரின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ளது. முஸ்லீம் இளைஞர்கள் பாரிய வேலைவாய்ப்பின்மை, முஸ்லீம்-விரோத இனவாதத்தைத் தொடர்ச்சியாக ஊக்குவித்தல் மற்றும் பொலிஸூடனான மோதல்களால் மட்டும் அதிகளவில் அன்னியப்பட்டு இல்லை, மாறாக சிரியா போன்ற பிரான்சின் முன்னாள் முஸ்லீம் காலனிகளில் நேட்டோ போர்களை ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் ஆதரித்துள்ளதாலும் அவர்கள் அன்னியப்பட்டு உள்ளனர். அது பொலிஸ் அரசு முறைகளை நடைமுறைப்படுத்தி வருவதுடன் வெளிநாடுகளில் இராணுவ தீவிரப்படுத்தலையும் திட்டமிட்டு வருகின்ற நிலையில், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் முஸ்லீம்-விரோத இனவாதத்தை ஊக்குவித்தும், மரீன் லு பென்னின் வலதுசாரி பாசிச தேசிய முன்னணி (FN) கட்சியை சட்டபூர்வமாக அங்கீகரிக்கவும் முனைந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு லு பென்னை வரவழைத்திருந்தார். செவ்வாயன்று அளித்த ஓர் உரையில், அதற்கடுத்த நாள் பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளை கொண்டு வருவதற்கு தயாரிப்பு செய்யும் வகையில், பிரான்சில் 2005 மற்றும் 2007இல் நடந்ததைப் போல, புலம்பெயர்ந்தவர்கள் வாழும் புறநகர் பகுதிகளில் ஏற்படக்கூடிய பாரிய கிளர்ச்சிகளைக் குறித்து வால்ஸ் எச்சரித்தார். “2005 கலகங்களை யார் இன்று நினைவுகூர்கிறார்கள்? ஆனால் அந்த காயங்கள் இன்னமும் இருக்கின்றன,” என்றார். அவர் கூறினார், 10,000 கார்கள் எரிக்கப்பட்டன, அந்த சண்டையில் நூற்றுக் கணக்கான பொலிஸ் காயப்பட்டனர். அன்றையும் விட அதிகமாக பொருளாதாரரீதியில், அரசியல்ரீதியில் மற்றும் இராணுவரீதியில் செறிவு கொண்ட இன்றைய சூழலின்கீழ், கிளர்ச்சிகள் குறித்த அச்சம் தீவிரமடைந்து வருவதற்கு இடையே, பிரெஞ்சு ஆளும் வர்க்கமும் இராணுவமும் பிரான்சிற்குள் பெருமளவிலான இராணுவ நடவடிக்கைக்குத் திட்டமிட்டுள்ளன. இது குறிப்பாக, இதழாளர் Hacène Belmessousஆல், புறநகர்சார் நடவடிக்கை: அரசு எவ்வாறு புறநகர் பகுதி போர் திட்டங்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்ற அவரது நூலில் செய்த ஆராய்ச்சியின்படி, இராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மீதான ஒரு 2008 வெள்ளையறிக்கை புத்தகத்திலேயே கொண்டு வரப்பட்டுவிட்டது. பிரான்ஸிற்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக 10,000 துருப்புகளை நிலைநிறுத்துவதற்காக செய்யப்பட்ட திட்டங்களைத் தெரிவித்திருந்த லெப்டினென்ட்-கேர்னல் Didier Wioland ஐ Belmessous மேற்கோளிட்டுக் காட்டியிருந்தார்: “தேசிய மண்ணில் தீவிரமான நிலைமை உண்டாகும் போது, அரசியல் அதிகாரிகள் முறையிட்டால், அதில் இராணுவம் தலையிட்டு, இந்த அளவிலான படைகளை, அதுவும் குறிப்பாக தரைப்படை துருப்புகளை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்... இந்த 10,000 பேர் கொண்ட இராணுவ பிரிவை, பரந்தளவிலான சம்பவங்களில் தலையீடு செய்ய தயாராக, தேசிய மண்ணில் தற்போது ஏற்பாடு செய்ய முடியும்.” சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்குப் பின்னர் பிரான்சின் வீதிகளில் நிலைநிறுத்தப்பட்ட துருப்புகளின் எண்ணிக்கை, பொருந்திய விதத்திலோ அல்லது வேறு விதத்திலோ, 10,000ஆக இருந்தது. ஜனநாயக உரிமைகளுக்கான சமூக பிரிவு தொழிலாள வர்க்கமே ஆகும். சோசலிஸ்ட் கட்சி மற்றும் போலி-இடதுடன் இணைந்த மத்தியதர வர்க்கத்தின் தனிச்சலுகை படைத்த நிறைய அடுக்குகளின் பிரிவுகள் வால்ஸின் நடவடிக்கைகளை புகழ்ந்துரைத்து வருகின்றன. சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்த L’Obs இதழில் வெளியான ஒரு பிற்போக்குத்தனமான வன்முறைரீதியிலான கருத்துரையில், ஜோன் டேனியல் இஸ்லாமை ஒரு "சட்டம் ஒழுங்கு" பிரச்சினையாக வர்ணித்தார். அவர் அறிவிக்கிறார்: “ஆம், நாம் போரில் தான் உள்ளோம், அதுவொரு மதம் சார்ந்த போராகும்.” அவர் தொடர்ந்து எழுதினார், “நாம் இஸ்லாம் உலகின் பெரும்பகுதிகளைக் காலனிமயப்படுத்தினோம். எல்லா மட்டத்திலும், அனேகமாக வழிபாட்டு பிரச்சினை தவிர, அவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை நாம் அவர்களுக்குக் காட்டினோம். அவர்களை நாம் முதலில் அவமானப்படுத்திய பின்னர், அவர்களை நாம் ஏற்றுக் கொண்ட போது, அவர்கள் நம்மிடம் வருவதற்கு, ஆனால் பணிவுடன் வருவதற்கு, கடமைப்பட்டிருந்ததாக உணர்ந்தார்கள். காலங்கள் மாறிவிட்டன.” துல்லியமாக இனப் போர் மற்றும் இராணுவ ஆட்சிக்கு நியாயப்பாடுகளை வழங்கும் இதுபோன்ற கருத்துரைகள், ஐரோப்பாவில் முதலாளித்துவ மேற்தட்டு திவாலாகி போயிருப்பதையே பிரதிபலிக்கின்றன. |
|
|