தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Syriza hands Greek defence ministry to right-wing nationalist கிரேக்க பாதுகாப்பு அமைச்சகத்தை சிரிசா வலதுசாரி தேசியவாதிகளிடம் ஒப்படைக்கிறது
By Robert Stevens Use this version to print| Send feedback அவரது அரசாங்கம் சர்வதேச நிதியியல் மேற்தட்டுடன் மோதலுக்கு வராது என்று பிரதம மந்திரியும் சிரிசா தலைவருமான அலெக்சிஸ் சிப்ராஸின் அறிவிப்புடன், சிரிசா-சுதந்திர கிரேக்கர்கள் (ANEL) கூட்டணி அரசாங்கத்தால் பெயரிடப்பட்ட மந்திரிசபையின் முதல் கூட்டம் புதனன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சிரிசா ஒரு "பரஸ்பர அழிவார்ந்த மோதலை" முயற்சிக்காது என்று கூறிய சிப்ராஸ், "எங்களின் பங்காளிகளுடன் ஒரு நேர்மையான, நம்பகமான மற்றும் பரஸ்பர ஆதாயம் பெறக்கூடிய தீர்வைக் கோரும், ஒரு புதிய மறுபேரமே எங்களின் முன்னுரிமையாகும்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார். அவர் அந்த கூட்டணி அரசாங்கத்தை "தேச இரட்சிப்பு" என்று அழைத்தார். வலதுசாரி தேசியவாத சுதந்திர கிரேக்கர்களின் தலைவர் பேனொஸ் கமெனொஸின் நியமனமே மிகவும் முக்கிய நியமனமாக இருந்தது, அவரிடம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாடு ஒப்படைக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் இராணுவத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கட்டமைத்துள்ள அவர், கூட்டணி அமைப்பதற்கு திங்களன்று சிப்ராஸூடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டை ANEL இடம் ஒப்படைக்க முறையிட்டிருந்தார். பொருளாதார நெருக்கடி ஆழமடையும் மற்றும் தொழிலாள வர்க்கத்திடையே புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தீவிரமடையும் ஏதாவதொரு புள்ளியில், சாத்தியமானால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இராணுவம் பின்னணியில் பரிசீலித்து வருகிறது என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை. வெகு சமீபமாக 1974இல் சிஐஏ ஆதரவிலான ஓர் இராணுவ ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒரு நாட்டில், கமெனொஸ் போன்ற ஒரு வலதுசாரி பிரமுகர் இராணுவத்தை மேற்பார்வையிடுவதன் தாக்கங்கள் பரந்தளவில் அச்சுறுத்தலானதாகும். சிரிசா என்பது ஸ்ராலினிஸ்டுகள், மாவோயிஸ்டுகள், முன்னாள் PASOK பிரமுகர்கள் மற்றும் சுற்றுச்சூழல் போக்குகள் உட்பட போலி-இடது சக்திகளின் ஒரு கூட்டணியாகும். இதன் முன்னணி அங்கத்தவர்களில் ஒருவர் ஆயுள்கால ஸ்ராலினிஸ்ட் Giannis Dragasakis ஆவார், இவர் சிப்ராஸின் நிர்வாகியாக சேவை செய்ய உள்ளார். வேலை வெட்டுக்கள், உற்பத்தி அதிகரிப்புகள் போன்ற பொதுத்துறை "சீர்திருத்தங்களுக்கு" Dragasakis ஒரு ஆதரவாளர் ஆவார். அவர் சமீபத்தில் கூறுகையில், “கடன் பூஜ்ஜியமாக இருந்தாலும் கூட, அரசு மற்றும் படைத்துறைசாரா நிர்வாகத்தில் அவசியமான சீர்திருத்தங்கள் இல்லையென்றால் நமக்கு பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்,” என்றார். கிரீஸின் கம்யூனிஸ்ட் கட்சியில் (KKE) Dragasakis இருந்தபோது, 1989-1990 “மதரீதியில் ஒருங்கிணைந்த" அரசாங்கத்தில் Dragasakis பல மாதங்கள் இளநிலை மந்திரியாக சேவை ஆற்றினார். அந்த அரசாங்கத்தில் KKE, வலதுசாரி புதிய ஜனநாயகம் (ND) மற்றும் சமூக ஜனநாயக PASOK கட்சியுடன் இணைந்திருந்தது. 300 பில்லியன் யூரோவிற்கு அதிகமான கிரீஸின் கடன்களைத் திரும்ப செலுத்துவது மீது ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் சர்வதேச வங்கிகள் உடன் வரவிருக்கும் அரசாங்க பேரம்பேசல்களை மேற்பார்வையிடும் பொறுப்பைக் கொண்ட நிதி அமைச்சகம் யானிஸ் வாரௌஃபாகிஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அமைச்சகத்திற்கு பொறுப்பேற்றதும், வாரௌஃபாகிஸ் சிப்ராஸ் கூறியதையே எதிரொலித்தார். “எங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அங்கே எந்த சண்டையும் இருக்காது. … எவ்வித அச்சுறுத்தலும் இருக்காது,” என்று அறிவித்தார். சமீபத்தில் வரை பொருளாதார தத்துவ பேராசிரியராக இருந்த வாரௌஃபாகிஸ் (Varoufakis) டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு பார்வையாளர் அந்தஸ்து பதவி வகித்து வந்தார். அவர் "யூரோ மண்டல நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒரு மிதமான பரிந்துரையின்" பல்வேறு பதிப்புகளை எழுதியுள்ளார். அவற்றில் முதலாவது இங்கிலாந்து தொழிற் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ருவார்ட் ஹோலாண்ட் உடன் எழுதப்பட்டது. 2013இல் வெளியான இறுதி பதிப்பு, அமெரிக்க பொருளாதார வல்லுனர் J. K. கால்பிரைத் உடன் கூட்டிணைந்து பிரசுரிக்கப்பட்டது. வாரௌஃபாகிஸ் மற்றும் கால்பிரைத் இருவரும், ஜூன் 2013, “சிரிசா மட்டுமே கிரிஸைக் காப்பாற்ற முடியும்" என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸில் ஒரு தலையங்கம் எழுதி இருந்தனர். ஒரு சிரிசா அரசாங்கம் "ஐரோப்பா அல்லது அமெரிக்காவிற்கு ஒரு மோசமான விடயமாக இருக்காது" என்று சர்வதேச ஆளும் மேற்தட்டுக்கு அவர்கள் உத்தரவாதமளித்தனர். சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டால், “அமெரிக்காவைப் பொறுத்த வரையில் முக்கியமாக ஒன்றும் மாறிவிடாது,” என்று அவர்கள் எழுதினார்கள். “சிரிசா நேட்டோவை விட்டு வெளியேறவோ அல்லது அமெரிக்க இராணுவ தளங்களை மூடவோ நோக்கம் கொண்டதில்லை,” என்று அவர்கள் தொடர்ந்தனர். வாரௌஃபாகிஸ் (Varoufakis) 2006 வரையில் மூன்று ஆண்டுகளுக்கு PASOKஇன் முன்னாள் தலைவர் ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூக்கு ஒரு பொருளாதார ஆலோசகராக இருந்து கிரேக்க முதலாளித்துவ அரசியலின் புரிதலை அறிவித்துள்ளார். பாப்பாண்ட்ரூ 2009 PASOK அரசாங்கம் தலைமை வகிக்க இட்டுச் சென்றார், அது கிரீஸில் சிக்கன வெட்டுக்களின் முதல் சுற்றைச் சுமத்தியது. PASOK கடந்த வாரம் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவதற்கு முன்னர் அடுத்தடுத்த கூட்டணி அரசாங்கங்களின் பாகமாக இருந்து இந்த பாத்திரத்தைத் தொடர்ந்து வகித்து வந்தது. வாரௌஃபாகிஸ் முதலாளித்துவத்தின் ஒரு பகிரங்க பாதுகாவலர் என்பதுடன் கிரீஸின் பெருநிறுவன வரி விகிதங்களை 15 சதவீதத்திற்கு குறைக்க அறிவுறுத்தி உள்ளார். "இந்நாட்டில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டி உள்ள உண்மையான சீர்திருத்தங்களுக்கான" சிரிசாவின் நோக்கங்கள் "அதிகாரத்துவத்திற்கு முடிவு கட்டுவதும்" மற்றும் "கடன் மறுசீரமைப்புக்கு ஒரு பகுத்தறிவார்ந்த திட்டத்தை உருவாக்குவது" ஆகியவை ஆகும் என்று அவர் பிபிசி இன் Today நிகழ்ச்சிக்குத் தெரிவித்தார். சிரிசா முன்னதாக பரிந்துரைத்திருந்த விதத்தில், கிரீஸ் கடனில் பாதியை வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டுமென அவர் விரும்புகிறாரா என்று கேட்கப்பட்ட போது, அவர் பதிலுரைத்தார், “இல்லை, இல்லவே இல்லை, அங்கே ஒவ்வொரு பேரம்பேசலுக்கு முன்னரும் பல எதிர்பார்க்கும் பாங்கு உண்டு…எங்கள் தரப்பின் மீது ஒருசில எதிர்பார்ப்பு உள்ளது. நிஜமான விடயங்கள் என்னவென்றால், எங்கள் கடன்களை எவ்விதத்தில் வெட்டிக் குறைப்பது, கடன் மதிப்பைக் குறைப்பது என்பதைக் குறித்து நாங்கள் இப்போது உட்கார்ந்து பேச வேண்டும் என்பதாகும். எங்களால் கொடுக்க முடிந்ததையும் விட குறைவாக கொடுக்க நாங்கள் நினைக்கவில்லை,” என்றார். "நாங்கள் திரும்ப செலுத்த வேண்டியதுடன் எங்களின் வளர்ச்சியை பிணைக்க" சிரிசா திட்டமிடுவதாக அவர் சேர்த்துக் கொண்டார். “அவர்கள் [கிரீஸிற்கு கடன் வழங்கியவர்களை] நாங்கள் எங்களின் பொருளாதார மீட்சியின் பங்காளிகளாக ஆக்கிக் கொள்ள விரும்புகிறோம்,” என்றார். வாரௌஃபாகிஸால் பதவியேற்ற பின் அளிக்கப்பட்ட முதல் அறிக்கைகளில் ஒன்றை மேற்கோளிட்டுக் காட்டிய பின்னர், பைனான்சியல் டைம்ஸ் கருத்துரைக்கையில், கிரேக்கர்கள் எதிர்காலத்தில் "மிகவும் சிக்கனமான" வாழ்க்கை வாழ வேண்டும் என்றது. “புதிய நிர்வாகத்தால் பொது செலவினங்களுக்கு நிறைய செலவிட முடியாது என்பதற்கு திரு. வாரௌஃபாகிஸ் உறுதியளித்துள்ளார்.” சிப்ராஸ் இரண்டு பார்வையாளர்களுக்காக பேசி வருகிறார் என்பதோடு, அரசாங்கத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு நுண்மையான சமநிலைப்பட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறார். சிரிசா முற்போக்கான சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதை தேர்ந்தெடுத்தவர்களைச் சாந்தப்படுத்தவும் மற்றும் ஏமாற்றவும் சில உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதினும், கிரேக்க கடன்களைத் திருப்பி செலுத்தும் அதன் நோக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் உலகளாவிய மூலதனத்திற்கும் உத்தரவாதமளித்து வருகிறது. “நமக்கு வாக்களித்த வாக்காளர்களை" மந்திரிமார்கள் "ஏமாற்றக் கூடாது" என்று சிப்ராஸ் அவரது மந்திரிசபைக்குத் தெரிவித்தார். மற்றொரு மூத்த ஸ்ராலினிசவாதியும் கட்சியின் "இடது அடித்தளத்தின்" தலைவருமான Panagiotis Lafazanisயிடம் உற்பத்தி மறுசீரமைப்பு, சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி அமைச்சகம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மின்துறை நிறுவனம் மற்றும் சுதந்திரமான மின் வினியோக சேவை வழங்கும் நிறுவனம் உட்பட பல முன்மொழியப்பட்ட தனியார்மயமாக்கல்கள் நிறுத்தப்படும் என்று நேற்று அவர் அறிவித்தார். கிரீஸின் மிகப்பெரிய மற்றும் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் மிக்க துறைமுகம் பிரேயஸ் (Piraeus) இன் முழு தனியார்மயமாக்கல் ஒத்தி வைக்கப்படும், கடந்த அரசாங்கத்தின் "நகர்த்தும் திட்டத்தின்" கீழ் அதனால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட 595 பொதுத்துறை துப்புரவாளர்கள் மீண்டும் பணியில் நியமிக்கப்படுவார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் பெரும்பாலானவை அரிதாகவே பெரும் செலவை ஏற்கின்றன. இது சிரிசாவின் இணை சமூக பாதுகாப்பு மந்திரி டிமிட்ரிஸ் ஸ்ட்ராடௌலிஸால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அவர் தெரிவிக்கையில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் என்ன தெரிவித்தோமோ அதுவே எங்களின் வழிகாட்டியாகும், ஒரு பெரிய செலவு பிடிக்காத நடவடிக்கைகளுடன் தொடங்குகிறோம்,” என்றார். ஆனால் இந்த அடையாள பாசாங்குகளே கூட நிதியியல் மேற்தட்டின் பிரதிநிதிகளுக்கு மிக அதிகமாக தெரிகின்றன. யூரோ நிதியியல் மந்திரிகள் குழுவின் தலைவராக உள்ள டச் நிதி மந்திரி Jeroen Dijsselbloem புதிய அரசாங்கத்திற்கு விடையிறுத்து வலியுறுத்துகையில், “'உங்களது ஆதரவு வேண்டுமே ஒழிய உங்களது நிலைமைகள் எங்களுக்கு வேண்டியதில்லை' என்ற சேதி பறந்து போய்விடாது" என்றார். கிரீஸின் நான்கு மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கிகளான பைரியாஸ், கிரீஸின் தேசிய வங்கி, யூரோபேங்க் மற்றும் ஆல்ஃபா வங்கி ஆகியவற்றுடன் சேர்ந்து, கிரேக்க வங்கி பங்குகள் 25 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து, சாதனையளவிற்கு ஒரே நாளில் மோசமான வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டன. ஜேர்மன் பொருளாதார மந்திரி சிக்மர் கேப்ரியல் கருத்துரைக்கையில், “ஐக்கியத்திற்கான அவர்களது நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட உடன்படிக்கைகள் தாங்கிப்பிடிக்கப்படுவதை பார்க்கும் உரிமை ஏனைய யூரோ நாடுகளின் பிரஜைகளுக்கும் உண்டு,” என்றார். இது அதன் கடமைப்பாடு என்பதை சிரிசா அறியும், மேலும் அது ஏற்கனவே சமூக எதிர்ப்பின் மறுஎழுச்சிக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. இது தான் சிரிசாவிலிருந்து உடைந்து சென்ற ஒரு வலதுசாரி ஜனநாயக இடதின் ஒரு முன்னாள் சட்டமன்ற பிரதிநிதி யென்னிஸ் பனௌசிஸ் இன் முதல் அறிக்கையினது நிஜமான அர்த்தமாக இருந்தது. அவர் "குடிமக்களின் பாதுகாப்புக்கு" பணிக்கப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் ஒரு மாற்றீட்டு மந்திரியாக பெயரிடப்பட்டுள்ளார். முதலாளித்துவ அரசை பாதுகாக்க சிரிசா அதிகபட்சமாக அனைத்தையும் செய்யும் என்பதற்கு தெளிவான அறிகுறியாக பனௌசிஸ் கூறுகையில், “பொலிஸ் போராட்டங்களில் ஆயுதங்களைக் கொண்டிருக்கும், ஆனால் அதற்காக அவர்கள் பயமுறுத்தி பீதியூட்டுவார்கள் என்று அர்த்தமல்ல,” என்றார். சிரிசா முன்னதாக கலக பொலிஸ் பிரிவுகளைக் கலைத்துவிட்டு, அவர்களைப் பொது பொலிஸ் படையுடன் இணைக்க சூளுரைத்திருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக போராட்டக்காரர்களுக்கு எதிராக பொலிஸ் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்ற நிலையில், பனௌசிஸின் அறிவிப்பு தொழிலாளர்களால் இழிவுடன் நிராகரிக்கப்பட வேண்டும். கிரேக்க பொலிஸ் படை வலது சாரி மற்றும் பாசிச கட்சிகளுக்கு ஆதரவு வழங்குவதில் ஒரு நன்கறியப்பட்ட காவல் அரண் ஆகும். 2012 தேர்தலைப் போலவே அதே சதவீதத்திற்கு, ஞாயிறன்று தேர்தலில் 40 மற்றும் 50 சதவீதத்தினருக்கு இடையிலான பொலிஸ் அதிகாரிகள் பாசிச கோல்டன் டௌன் கட்சிக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. |
|
|