தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Global parasitism creates conditions for a new financial meltdown உலகளாவிய ஒட்டுண்ணித்தனம் ஒரு புதிய நிதியியல் நிலைகுலைவிற்கு நிலைமைகளை உருவாக்குகிறதுNick
Beams Use this version to print| Send feedback அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் குறைந்த வட்டி பண கொள்கைகளால் வளர்க்கப்பட்ட நிதியியல் ஒட்டுண்ணித்தனம், மற்றொரு நெருக்கடிக்கு எந்த விதத்தில் நிலைமைகளை உருவாக்கி வருகிறதோ, அது இந்த ஆண்டின் முதல் பாதியில் நிறுவனங்களை கையகப்படுத்தல்கள் மற்றும் இணைப்புகள் பற்றிய புள்ளிவிபரங்களில் வெளிப்படுகிறது. செவ்வாயன்று பைனான்சியல் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கையின்படி, "அதிமலிவு நிதியியல் செலவுகளின் பலமான விருந்து", இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 1 ட்ரில்லியன் டாலருக்கு, அமெரிக்க நிறுவனங்களின் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கையை உயர்த்தியுள்ளது. இது 2014 இன் இதே காலத்தை விட 60 சதவீதம் அதிகம் என்பதுடன், இது 1980 இல் விபரங்களைப் பதிவு செய்ய தொடங்கியதற்குப் பிந்தைய அதிகபட்ச அளவாகும். நிறுவனங்களை விலைக்கு வாங்குவதற்கு வழங்கப்படும் விலை, புதிய உச்சங்களை எட்டியுள்ளது. வட்டி, வரிகள், மதிப்பு குறைப்புகள் மற்றும் கடன்கள் தீர்க்கப்படல் ஆகியவற்றிற்கு முன்னர் சராசரியாக 16 மடங்கு வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு பாரிய கையகப்படுத்தலில் இது 20 இற்கு 1 என்ற விகிதமாக உள்ளது. இந்த அவா மிக்க வெறி, 2008 நிதியியல் நெருக்கடிக்கு முன்னர் இருந்ததை விட இப்போது அதிகமாக இருக்கிறது என்பதுடன் அது அமெரிக்காவுடன் மட்டுப்படுத்தப்படவில்லை. உலகளாவிய இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கை ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில் 2015 இன் முதல் பாதியில் 38 சதவீத அளவிற்கு, 2.18 ட்ரில்லியன் டாலரை எட்டி, 2007க்கு பிந்தைய அதன் அதிகபட்ச மட்டத்திற்கு உயர்ந்துள்ளது. பெரும்பாலும் மிக குறைந்த வட்டிவிகிதத்தில் பெறப்பட்ட கடன் பணத்திலிருந்து ஒரு நிறுவனத்தை வாங்குகிற மற்றும் அதன் சொத்துக்களை சுற்றிவளைத்துக்கொள்ளும் ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கை, அதிகரித்தளவில் இலாபங்களின் ஆதாரமான உற்பத்தி முதலீட்டை இது பிரதியீடு செய்து வருகிறது என்ற உண்மைக்கு இத்தகைய புள்ளிவிபரங்கள் மற்றொரு வெளிப்பாடாக உள்ளன. ஆனால், பங்கெடுத்து வருபவர்களின் மத்தியிலும் கூட, இந்த பணவிரயம் காலவரையின்றி தொடர முடியாது என்ற உணர்வு நிலவுகிறது. இந்த ஆண்டு "பொம்பியின் (Pompeii) இறுதி நாட்களைப் போல உணர செய்கிறது: ஒவ்வொருவரும் எப்போது எரிமலை வெடிக்குமென எதிர்பார்த்திருக்கின்றனர்” என்று பைனான்சியல் டைம்ஸிற்கு ஒரு "மூத்த வங்கியாளர்" தெரிவித்தார். மற்றொரு நிதியியல் வெடிப்பின் எச்சரிக்கைகளும், அதை கையாள்வதற்கு மத்திய வங்கிகள் மற்றும் நிதியியல் ஆணையங்களின் இலாயக்கின்மையும், ஞாயிறன்று வெளியிடப்பட்ட சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியின் (BIS) ஆண்டு அறிக்கையின் மையத்தில் இருந்தன. மத்திய வங்கிகளின் வங்கி என்று சிலநேரங்களில் அழைக்கப்படும் BIS, மத்திய வங்கிகளால் நிதியியல் சந்தைகளுக்குள் பணம் பாய்ச்சப்பட்டதிலிருந்து உருவான குறைந்த-வட்டிவிகித முறை பற்றி கடுமையான விமர்சனத்தை கொண்டிருந்தது. 2008க்குப் பிந்தைய ஆண்டுகளில் ஒரு நெருக்கடிக்கான நிலைமைகள் கட்டமைந்து வருவதைக் குறித்து எச்சரித்த மற்றும் அப்போதிருந்து பின்பற்றப்பட்ட கொள்கைகளை விமர்சித்துள்ள ஒருசில உத்தியோகப்பூர்வ அமைப்புகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. BIS இன் தகவல்படி, “சில அதிகார எல்லைக்குள், நாணய கொள்கை சிந்திக்கவியலாத எல்லைகள்வரை செல்லும் புள்ளிக்கு, அதன் கடக்க கூடாத-வெளிப்புற- வரம்புகளை ஏற்கனவே பரிசோதித்து வருகிறது.” அந்நெருக்கடியின் வேர்கள் 1980களில் தொடங்கிய நிஜமான வட்டிவிகிதங்களின் சீரான வீழ்ச்சியில் காணக்கூடியதாக இருப்பதாக அதன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வட்டிவிகித வீழ்ச்சி கடன் உயர்வை அதிகரித்தது, அதன் அர்த்தம் என்னவென்றால் இந்த நெருக்கடியை தீர்த்துக்கொள்ளாமல் வட்டிவிகிதங்களை உயர்த்துவது அதிகரித்தளவில் சிரமமாகும். ஒரு நெருக்கடி எழுந்த போதெல்லாம், வட்டிவிகிதங்களை இன்னும் மேற்கொண்டு குறைப்பதே விடையிறுப்பாக இருந்தது. அந்த அறிக்கை குறித்த அவரது கருத்துரையில், BIS இன் நாணய மற்றும் பொருளாதாரத்துறை தலைவர் Claudio Borio கூறுகையில், பிரதான நாடுகளின் நிஜமான வட்டிவிகிதங்கள் இதுவரையில் இந்தளவிற்கு குறைவாக இருந்ததே இல்லை என்றார். “தற்போதைய பலவீனத்தைப் பிரதிபலிப்பதற்கு மாறாக, அவை [குறைந்த வட்டிவிகிதங்கள்] செலவுமிகுந்த நிதியியல் உயர்வுகள் மற்றும் ஆர்ப்பரிப்புகள் மற்றும் தாமதப்படுத்தும் சமாளிப்புகளுக்கு எரியூட்டியதன் மூலமாக அதில் பகுதியாக பங்களிப்பு செய்திருக்கலாம். அதன் விளைவு மிக அதிகளவிலான கடன், மிக குறைந்தளவிலான வளர்ச்சி மற்றும் மிக குறைந்தளவிலான வட்டிவிகிதங்களாக உள்ளன,” என்று Borio தெரிவித்தார். மத்திய வங்கியாளர்களும் மற்றும் நாணய கட்டுப்பாட்டு ஆணையங்களும் ஓரளவிற்கு உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன மற்றும், அவை என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதைக் குறித்து ஒரு தெளிவான கருத்தைக் கொண்டிருக்கின்றன என்ற கட்டுக்கதையைப் பொய்யாக்கும் விதத்தில், BIS அறிக்கை குறிப்பிடுவதாவது, “பொருளாதாரம் எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்து அங்கே பெருமளவில் நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது.” “நிதியியல் சந்தைகளில் அபாயகரமான நடவடிக்கையில் இறங்குதல் என்பது நீண்டதூரம் சென்றுவிட்டது,” மற்றும் "அழுத்தத்தின் கீழும் சந்தைகள் பணப்புழக்கத்தில் இருக்கும் என்ற பிரமை மிகவும் ஊடுருவி பரவியுள்ளது,” என்றது கூறுகிறது. பணப்புழக்கம் மீதான "பிரமை" குறித்த அச்சங்கள், எல்லா முதலீட்டாளர்களும் மற்றும் ஊகவணிகர்களும் வாங்குபவர்களைக் காண முடியாமல் திடீரென விற்றுத்தள்ளும் ஒரு சூழலைக் குறிக்கிறது. சாதனையளவிற்கான குறைந்த வட்டிவிகிதங்களின் அதிகரிப்பிற்கு காரணமாகி, சந்தைகளுக்குள் பணத்தைப் பாய்ச்சுவது ஒரு நெருக்கடிக்கான நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், அதை மத்திய வங்கிகளது முந்தைய கொள்கைகளின் காரணமாக அவற்றை கட்டுப்படுத்தவியலாது என்றும் BIS எச்சரித்தது. “ஒருவர் நெகிழும் நாடாவை -ரப்பர்பேண்டை- எந்தளவிற்கு அதிகமாக இழுக்கிறாரோ, அந்தளவிற்கு அது வேகத்தோடு திரும்ப வந்து அடிக்கும்,” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. ஆகவே அடுத்த பின்னடைவு வரும் போது அந்த நிலைமையைச் சந்திக்க நாணய கட்டுப்பாட்டு கொள்கையை வழமைக்குரியதாக ஆக்கும் ஒரு நடவடிக்கை அங்கே இருக்க வேண்டும். “அது [அடுத்த பின்னடைவு] ஐயத்திற்கிடமின்றி ஏதேனும் புள்ளியில் உருவாகும்.” மத்திய வங்கிகளால் வட்டிவிகிதங்களைக் குறைப்பதன் மூலமாக அந்த நிலைமையைக் கையாள முடியாது ஏனென்றால் அவை ஏற்கனவே பூஜ்ஜியத்திற்கு அண்மித்தளவில் உள்ளன. “தோட்டா இல்லாத துப்பாக்கியால் என்ன பிரயோஜனம்?” என்று அந்த அறிக்கை கேள்வி எழுப்புகிறது. ஊதிப்பெருக்கச் செய்யப்பட்ட பங்குகளின் வாங்கிவிற்றல்கள் மற்றும் நிறுவன இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல் உடன்படிக்கைகளுக்கு எரியூட்டிய நிதியியல் குமிழிகள் குறுகிய காலத்திற்குத் தீர்வுகளை அளிப்பதாக இருந்தாலும், நீண்டகால ஓட்டத்தில் அவை வெறுமனே மற்றொரு நெருக்கடிக்கு$jதான் நிலைமைகளை உருவாக்குகின்றன என்பதே BIS அறிக்கையின் அடிப்படை இடிப்புரையாக உள்ளது. அது நேரடியாக உச்சரிக்கப்படவில்லை என்றபோதினும், நடப்பு கொள்கைகளைக் குறித்த BIS இன் விமர்சனம் ஓர் உண்மையின் வெளிப்பாடாகும், அதாவது, பகுப்பாய்வின் இறுதியில், இலாபத்தின் எல்லா வடிவங்களின் மூலஆதாரங்களும் தொழிலாள வர்க்கத்திலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட உபரிமதிப்பே ஆகும். ஆகவே, அதன் நெருக்கடியைக் கடந்துவர மற்றும் ஸ்திரப்பாட்டை மீட்டமைக்க மூலதனத்திற்கான ஒரே வழி, பாரியளவில் சுரண்டலை அதிகரிப்பதாக உள்ளது. இவ்விதத்தில், அந்த அறிக்கையில் உள்ள மத்திய கொள்கை பரிந்துரை என்னவென்றால் நாணய கட்டுப்பாட்டு கொள்கை மீது தங்கியிருப்பது என்பதிலிருந்து "அதிக கட்டமைப்புரீதியிலான குணாம்சத்தைக் கொண்ட நடவடிக்கைகளைத்" திணிப்பதற்கு மாற வேண்டும் என்பதாகும். கடந்த தசாப்தத்தின் கசப்பான அனுபவங்கள் ஏற்கனவே இது என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை, அதாவது தொழிலாளர் சந்தைகளில் "இலகுத்தன்மை" உடன் சேர்ந்து, வேலையிட நிலைமைகளைச் சீரழிப்பது மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளை மற்றும் ஏனைய அரசு நிதியுதவிகளை வெட்டுவது ஆகியவற்றை அடிகோடிட்டுக் காட்டியுள்ளன. “கண்டுபிடிப்பு மற்றும் சுயதொழில்முனைவுக்கு" உகந்த ஒரு சூழலை, அதாவது, வியாபாரம் சுதந்திரமாக இயங்குவது ஸ்தாபிக்க வேண்டும் என்பதே BIS இன் கருத்தாகும். மேலும் அது "தொழிலாளர் சக்தி பங்கெடுப்பை அதிகரிக்கும்" நோக்கில் நடவடிக்கை எடுக்க அழைப்புவிடுக்கிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் தொழிலாளர் சக்தியின் சமூக உரிமைகள் வெட்டப்படுகையில் அவர்களுக்குள் திரும்பவும் இயலாமைக்காக வழங்கப்படும் அல்லது ஏனைய வடிவங்களில் உள்ள ஓய்வூதியங்களை அவர்கள் மீது திணிப்பதன் மூலமாக மலிவு உழைப்பின் புதிய மூலஆதாரங்கள் கிடைக்குமாறு செய்தல் என்பதாகும். ஏற்கனவே பிரதான பொருளாதாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அதுபோன்ற முறைமைகள் எவ்வாறு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறித்து அந்த அறிக்கை எதுவும் கூறவில்லை, ஆனால் அதை கூறுவதற்கு பதிலாக அது "அரசியல்ரீதியில் சிரமமாக" இருக்குமென குறிப்பிட்டது. அந்த சிரமங்கள், அவற்றை திணிப்பது எந்தவித ஜனநாயக ஆட்சியைப் பேணுவதுடனும் அடிப்படைரீதியில் பொருத்தமற்றதாக இருக்கும் என்ற உண்மையைக் குறிக்கின்றன. அதன் பரிந்துரைகள் அரசியல்ரீதியில் என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதன் மீது BIS மௌனமாக இருந்துவிட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க வங்கியியல் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஜேபிமோர்கன் சேஸ் வெளியிட்ட ஓர் அறிக்கை, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலி உட்பட ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளின் அரசியல் அமைப்புமுறையின் பிரதான பிரச்சினைகளாக அது எதை காண்கிறது என்பதை மிகத் தெளிவாக கூறியிருந்தது. அது குறிப்பிட்டது, பாசிசம் தோற்கடிக்கப்பட்டதற்குப் பின்னர் வரையப்பட்ட இந்த நாடுகளின் அரசியலமைப்புகள், நிதியியல் நெருக்கடியால் உருவாகும் மூலதன பிரச்சினைகளின் ஒரு தீர்வுக்கு தீங்குவிளைவிக்கின்ற அம்சங்களை உள்ளடக்கி கொண்டன. இவற்றில், "பலவீனமான நிறைவேற்றுஅதிகாரங்கள், பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் பலவீனமான பலவீனமான மத்திய அரசுகள், அரசியலமைப்புரீதியில் தொழிலாளர் உரிமைகளின் பாதுகாப்பு; அரசியல்ரீதியில் சலுகைவழங்கு முறைக்கு (clientalism) ஆதரவளிக்கும் கூட்டாக பிரச்சனைகள தீர்க்கும் முறைகள், மற்றும் நடைமுறையில் இருப்பதில் வரவேற்பில்லாத மாற்றங்கள் செய்யப்படுகையில் போராடுவதற்கு உரிமை" ஆகியவையும் உள்ளடங்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மூலதனம் தடையில்லா சுதந்திர செயல்பாட்டைக் கொண்டிருந்த பாசிச ஆட்சிகளில் மேலோங்கியிருந்த அந்த விதமான அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் கட்டளைகள் மூலமாக, இரண்டாண்டுகளாக, கிரீஸில் இந்த நிகழ்ச்சிநிரல் தான் நடத்தப்பட்டு வருகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் மட்டுப்படுத்தப்பட்ட கட்டமைப்பிற்குள்ளேயே கூட, பாரிய பெருந்திரளான மக்களது நலன்களுக்கான எந்தவித வெளிப்பாடும் இலாப அமைப்புமுறையின் நலன்களுக்காக வெறுப்புடன் முரட்டுத்தனமாக தூக்கியெறியப்பட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. கிரீஸில் பொருளாதார மற்றும் சமூக சீரழிவு அந்நாட்டிற்கு வினோதமான நிலைமைகளில் இருந்து எழவில்லை, மாறாக உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் உடைவிலிருந்து எழுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அதேவிதமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த கிரீஸ் பரிசோதனை களமாக உள்ளது, இது, BIS அறிக்கையே தெளிவுபடுத்துவதைப் போல, நிதியியல் மற்றும் பெருநிறுவன உயரடுக்குகளுக்கு முன்பினும் அதிக அவசர தேவையாக உருவாகி வருகிறது. |
|
|