தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை பகிரங்க கூட்டங்கள் இலங்கை ஆட்சி மாற்றமும் தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்
By Socialist
Equality Party (Sri Lanka) and International Youth and Student For Social
Equality (IYSSE) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியும் ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனமும் ஆழமான அரசியல் நெருக்கடி ஊடாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பும், தொடர் பகிரங்கக் கூட்டங்கள் மூலம் இந்த அரசியல் நெருக்கடியையும் அதற்கு வழிவகுத்துள்ள அரசியல் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடியையும் தெளிவுபடுத்துவதற்கு ஏற்பாடு செயுதுள்ளன. ஜனவரி 8 அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலில் தலையீடு செய்த போலி இடது அமைப்புகள், பிரஜைகள் சக்தி மற்றும் சமூக நீதிக்கான இயக்கம் போன்ற மத்தியதர வர்க்க குழுக்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் பொலிஸ் ஆட்சிக்கும் வாழ்கைத் தரம் மற்றும் சமூக நிலைமைகளை வெட்டித் தள்ளுவதற்கும் எதிரான ஒரே மாற்றீடு சிறிசேனவை ஜனாதிபதி ஆக்குவதே என்ற மாபெரும் பொய்யை கட்டவிழித்து விட்டனர். இது அரசியல் மோசடி என்பது கடந்த மாதங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சகல குழுக்களும், சிறிசேன மற்றும் விக்ரமசிங்கவுடன் ஏகாதிபத்திய முகாமில் அணிசேர்ந்துகொண்டன. சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்இ மட்டுமே, இராஜபக்ஷ மற்றும் சிறிசேனவின் பிற்போக்கு திட்டங்களை அம்பலப்படுத்தி, அனைத்துலக சோசலிசத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்தின் பாகமாக, இலங்கையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அணிதிரளுமாறு தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தன. முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியும், அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சிகளதும் பிற்போக்கு தயாரிப்புகளும் இந்த வேலைத் திட்டத்துக்காகப் போராட வேண்டியதன் உடனடி அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான மக்கள் எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கியதும் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) அரசாங்கத்தை அமைத்ததும் அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் தலையிட்டு மேற்கொண்ட ஆட்சி மாற்றமாகவே இடம்பெற்றன. வாஷிங்டனின் இந்த நடவடிக்கையானது அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவுக்கு எதிராக “ஆசியாவில் முன்னிலை” கொள்கையின் கீழ் உக்கிரமாக்கப்பட்டுள்ள போர் தயாரிப்புகளின் ஒரு பாகமாக, இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங்குடன் கொண்டிருந்த உறவுகளை முறித்து தனது மூலோபாய வலையமைப்புக்குள் இலங்கையை இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்டதாகும். ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த சில மாதங்களுக்குள், சிறிசேன-விக்கிரமசிங்க ஆட்சியானது நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் சார்பாக மாற்றியமைத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மே மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு வந்து இந்த உறவுகளை பலப்படுத்துவதற்குச் செயற்பட்டார். அவர் இலங்கையை அமெரிக்க கடற் பாதுகாப்பு வேலைத் திட்டத்திற்குள்ளும் ஆசிய-பசுபிக் பொருளாதார கட்டமைப்புக்குள்ளும் இணைத்துக்கொள்வதாக அறிவித்தார். சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் மூலம் அந்த நாட்டுடனான போருக்கும் உலக யுத்த த்துக்குமான ஆபத்தை அமெரிக்கா உருவாக்கி விட்டுள்ளது. இந்த புவிசார்-அரசியல் நீர்ச்சுழிக்குள்ளேயே ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையும் சிக்கிக்கொண்டுள்ளது. நூறு நாள் நிகழ்ச்சி நிரல் மூலம் மக்களின் வாழ்க்கை நிலைமையை தூக்கி நிறுத்துவதாகவும் சர்வாதிகார நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றுவதாகவும் சிறிசேனவும் அவருக்கு ஆதரவளிக்க ஒன்று கூடிய யூஎன்பீ தொடக்கம் நவசமசமாஜக் கட்சி போன்ற போலி இடதுகள் வரையான பகுதியினர் வாக்குறுதியளித்தனர். மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) அதற்குப் பின்னால் அணிசேர்ந்த இன்னொரு இயக்கமாகும். நூறு நாட்களின் பின்னர் ஏப்பிரல் 23ம் திகதி அரசாங்கத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்தி புதிய அரசாங்கத்தை அமைப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. இப்போது என்ன நடக்கின்றது? அரசாங்கமும் எதிர்க் கட்சியும் அரசாங்கத்தின் பகுதியினரும் எதிர்க் கட்சியின் பகுதியினரும் ஒருவரோடு ஒருவர் கடித்துக் குதரிக்கொள்ளும் நாய்ச் சண்டையாகும். இந்த சண்டையின் காரணமாகவே அரைவேக்காடான 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சற்றே நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. இப்போது இருபதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பொதுத் தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் பயிற்சியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயகத்தை ஸ்தாபிக்கப் போராடும் மாவீரனாக காட்டிக்கொள்ளும் யூஎன்பீயும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீலசுக) ஆட்சி செய்து வந்த பிரதானமாக கடந்த மூன்று தசாப்த காலங்களிலேயே ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டு வந்துள்ளன. இந்த அரசாங்கங்களே, 30 ஆண்டுகள் இனவாத யுத்தத்தை முன்னெடுத்து, அதை நாட்டை இராணுவமயமாக்கவும் பொலிஸ்-அரச வழிமுறைகளை கூர்மைப்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்தன. தாம் சார்ந்துள்ள முதலாளித்துவ கும்பல்களின் சிறப்புரிமைகள் இழக்கப்பட்டுவிடுமோ என்ற பீதியே, அவர்களுக்கு இடையிலான நாய்ச் சண்டைக்கான பிரதான காரணமாகும். யூஎன்பீ ஆட்சியில் இருப்பதை ஸ்ரீலசுக முதலாளிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது. அவப்பேறுடன் தோல்வியடைந்த இராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை பகிரங்கமாக கிளறிவிடுவதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றார். அடுத்த தேர்தலில் எந்த கட்சி அல்லது எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், அமைக்கப்படும் அரசாங்கமும் ஜனாதிபதி சிறிசேனவும் கூட்டாகச் சேர்ந்து, அமெரிக்கச் சார்பு கொள்கைகளை முன்னெடுக்கும் அதே வேளை தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களின் ஜனநாயக உரிமைகளையும் அதே போல் வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக உரிமைகளை நசுக்கித் தள்ள செயற்படுவர். உலக முதலாளித்துவ நெருக்கடியினால் உக்கிரமாகியுள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது கொடூரமாக சுமத்துவதைத் தவிர வேறு மாற்றீடுகள் முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தவொரு குழுவிடமும் கிடையாது. எமது கூட்டத்தில் இந்த அபிவிருத்திகள் ஆராயப்பட்டு தொழிலாள வர்க்க சோசலிச மூலோபாயம் பற்றி கலந்துரையாடப்படும். இந்த கூட்டத்தில் பங்குபற்றி கலந்துரையாடலில் இணைந்துகொள்ளுமாறு நாம் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். கூட்டங்கள்: ஜூன் 17, கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம், மாலை 4 மணிக்கு ஜூன் 28, அம்பலங்கொட நகர சபை, மாலை 4 மணிக்கு ஜூன் 30, சிலாபம் ஷர்லி கொறயா மண்டபம், மாலை 4 மணிக்கு ஜூலை 7, கண்டி ஜனமெதுர மண்டபம், மாலை 4 மணிக்கு ஜூலை 12, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம், பி.ப. 2 மணிக்கு |
|
|