World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

The European Union and the return of European militarism

ஐரோப்பிய ஒன்றியமும் ஐரோப்பிய இராணுவவாதத்தின் மீள்வரவும்

By Peter Schwarz
6 May 2015

Back to screen version

இந்த உரையானது மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தின கூட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளர் பீட்டர் சுவார்ட்ஸ் வழங்கிய பேச்சின் உரைவடிவமாகும்.

தோழர்களே நண்பர்களே,

அடுத்த வெள்ளிக்கிழமை ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த எழுபதாவது ஆண்டு தினமாகும். மே 8, 1945 இல் தான் ஜேர்மன் இராணுவத்தின் (Wehrmacht) தலைமைத் தளபதி உத்தியோகபூர்வமாக சரணடைந்தார். 

வரலாற்றின் அளவுகோலில் பார்க்கும் போது, எழுபது ஆண்டுகள் என்பது ஒரு மிகக் குறுகிய காலமே. போர் முடிவடைந்த சமயத்தில்  குறைந்தபட்சம் பதினைந்து வயதில் இருந்தவர்கள் இன்னமும் ஜேர்மனியில் இரண்டு மில்லியன் பேர் உயிரோடிருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்டரீதியில் இளம்பருவத்தினராக அல்லது வயதுவந்தவர்களாக போரை அனுபவத்தில் கண்டனர். அதற்குப் பின்னர் பிறந்தவர்களுக்குமே கூட, அழிந்த நகரங்கள், துன்பப்பட்ட மக்கள் மற்றும் வதைமுகாம்களில் ஒட்டிப்போன உடம்புகளின் குவியல்களின் திகிலூட்டுகின்ற சித்திரங்கள் பரிச்சயமானவையாக இருக்கின்றன

அத்தகைய ஒரு படுபயங்கர பெருநாசம் ஐரோப்பாவில் மீண்டும் நிகழக் கூடுமா?

இல்லை என்பதே இந்தக் கேள்விக்கான உத்தியோகபூர்வ பதிலாக நீண்டகாலத்திற்கு இருந்து வந்தது. ஐரோப்பிய பொருளாதார ஒருங்கிணைப்பு, பொதுவான நாணயம் மற்றும் உள்நாட்டு எல்லைகளின் அகற்றம் ஆகியவையெல்லாம், ஐரோப்பாவை இரண்டு உலகப் போர்களின் மையமாக ஆக்கியிருந்த மோதல்களை அகற்றி விட்டிருந்ததாக கூறப்பட்டது. “ஐரோப்பிய ஐக்கியம்என்பதன் உருவடிவமாக ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதாக கூறப்பட்டது. ஐரோப்பியர்கள் மீண்டும் ஒருவருக்கு எதிராக ஒருவர் இனி ஒருபோதும் துப்பாக்கியை நீட்ட மாட்டார்கள் என்பதை து உறுதிப்படுத்துமென்று கூறப்பட்டது.

ஆனால் இது எப்போதுமே ஒரு பொய்யாகவே இருந்து வந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமானது ஐரோப்பிய மக்களை ஐக்கியப்படுத்தி இருக்கவில்லை. அது மிகவும் சக்திவாய்ந்த பொருளாதார மற்றும் நிதியியல் நலன்களுக்கு ஒரு கருவியாகவே இருந்துள்ளது. அவை அதனை உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் மற்றும் சர்வதேச அளவில் அவர்களது எதிரிகளுக்கு எதிராகவும் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன. 1914 மற்றும் 1945க்கு இடையே ஐரோப்பாவை ஒரு நரகமாக உருமாற்றிய முரண்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் தீர்த்துவிடவில்லை. மாறாக அவற்றை அது மறுஉற்பத்தி செய்தது.

இரண்டு உலகப் போர்களது பேரழிவுக்கு இட்டுச் சென்ற அத்தனை சமூக துயரங்கள் மற்றும் முரண்பாடுகளும் மீண்டுமொருமுறை தோன்றியிருப்பதையே, இன்று ஐரோப்பாவை குறித்த ஓர் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

முதலில் சமூக நிலைமைகளைப் பார்ப்போம். ஐரோப்பாவில் வர்க்க முரண்பாடுகள் முன்னொருபோதும் இல்லாத மட்டத்திற்கு மிகக் கூர்மையாகி உள்ளன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் மறுஅறிமுகம் செய்யப்பட்டபோது அதனுடன் இணைந்து செழுமை மற்றும் ஜனநாயகத்திற்கான வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. இப்போது, இந்த நாடுகளில் பல தொழிலாளர்களது வருமானங்கள் சீனாவைக் காட்டிலும் குறைவாக உள்ளன. சுகாதார மற்றும் கல்வி அமைப்புமுறைகள் உருக்குலைந்து விட்டிருக்கின்றன. அரசாங்கங்கள் ஊழலில் சிக்கிக் கொண்டுள்ளன.

ஐரோப்பாவெங்கிலும் “சிக்கன நடவடிக்கை” என்ற வார்த்தையே ஊதியங்கள், ஓய்வூதியங்கள், வேலைகள் மற்றும் சமூக உதவிகள் மீதான முடிவில்லாத தாக்குதல்களைக் குறிக்கும் அடையாளச் சொல்லாக மாறியுள்ளது. கிரேக்கம் ஒரு வெள்ளோட்ட திட்டமாக சேவை செய்கிறது. முக்கூட்டின் உத்தரவுகள் மில்லியன் கணக்கான மக்களை ஏழைகளாக்கி விட்டிருக்கிறது.

அக்கண்டத்தின் முன்னணிப் பொருளாதாரமான ஜேர்மனியில் ஏழு பேரில் ஒருவர் ஏழையாக இருக்கிறார். வேலைசெய்பவர்களில் முப்பத்தி ஒன்பது சதவீதம் பேர் முழுநேர வேலை போலன்றி பகுதி-நேரமாகவோ, தற்காலிக வேலையிலோ சிறியவேலைகளிலோ அல்லது அதுபோன்ற ஏதோவொன்றில் வேலை செய்கின்றனர்.

சமூகத்தின் உயர் மட்டத்தில் செல்வம் பாய்ந்து வளர்கிறது. ஜேர்மன் பங்குச்சந்தை குறியீடு ஜேர்மனி ஐக்கியத்திற்கு முந்தைய 2,000 புள்ளிகளிலிருந்து இன்று 12,000 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது. இந்த மலைப்பூட்டும் அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சியின் விளைவல்ல; அது தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து நிதிய செல்வந்த தட்டு கட்டுப்பாடின்றி செழிப்படைந்துள்ளதை பிரதிபலிக்கிறது.

சமூக சமத்துவமின்மை, ஜனநாயகத்துக்கு இணக்கமில்லாத ஒரு பரிமாணத்தை எட்டியுள்ளது. சமூகம் பிளவுபட்டுச் செல்லும் வேளையில், அரசியல் கட்சிகளோ ஒன்றோடொன்று நெருங்கி செல்கின்றன. பெயரளவில் இடதுசாரி அல்லது வலதுசாரி என்பதெல்லாம் விடயமே அல்ல, அவை அனைத்துமே ஒரே பிற்போக்குத்தன கொள்கையை பின்பற்றுகின்றன. வாக்குப் பெட்டி மூலமாக அரசியல் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்துவது என்பதெல்லாம் இப்போது ஏறக்குறைய சாத்தியமில்லாதுள்ளது.

ஆளும் உயரடுக்குகள் ஒரு பிரம்மாண்டமான கண்காணிப்பு மற்றும் பொலிஸ் எந்திரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இதற்கு பிரதிபலிப்பைக் காட்டுகின்றன. அவர்கள், மக்களை அச்சுறுத்தி அடக்கி வைக்க வேண்டிய எதிரிகளாகக் காண்கின்றன.

ஐரோப்பிய வீழ்ச்சியின் மிகக் கேடான வெளிப்பாடாக இருப்பது இராணுவவாதத்தின் மீள்வரவாகும். 1990கள் முதலாக, பல்வேறு ஐரோப்பிய சக்திகள் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அமெரிக்க-தலைமையிலான ஏகாதிபத்திய போர்களில் பங்குபற்றியுள்ளன. ஆனால் மேற்கால் முடுக்கிவிடப்பட்ட உக்ரேனிய ஆட்சிக்கவிழ்ப்பு தொடங்கி, ஐரோப்பிய இராணுவவாதமானது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது

நேட்டோ அதன் மூலோபாயத்தை மறுதிருத்தம் செய்துள்ளது, மேலும் அது, அதன் மிகப்பெரும் ஆயுதக்குவியலை ரஷ்யாவிற்கு எதிராக திருப்பிக்கொண்டிருக்கிறது. ரஷ்யாவுடனான ஒரு அணுஆயுதப் போர் என்பது இனியும் தத்துவார்த்தரீதியாக சாத்தியமான ஒன்றுமட்டுமல்ல, மாறாக அது ஒரு நிஜமான அபாயமும் ஆகும்

உலகை ஒரு புதிய பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்வதற்கான சூறையாடும் ஏகாதிபத்திய உந்துதலில் பங்கெடுக்கும் பொருட்டு ஐரோப்பா அதன் இராணுவத்தைக் கட்டமைத்து வருகிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம், உக்ரேனுக்குள் நகர்வதன் மூலமாக, அதன் பாரம்பரிய விரிவாக்க திசையை மீண்டும் ஏற்று வருகிறது. ஆனால் ரஷ்யா மட்டுமே அதன் ஒரே நோக்கமல்ல. மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவிலும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பெரும் செயலூக்கத்துடன் இருக்கிறது.

ஐரோப்பிய ஐக்கியம் என்ற மூடுதிரையின் பின்னால் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஐரோப்பாவை தலைமை தாங்குவதற்கு முயலும் பேர்லினின் அபிலாசைகள், பாரிசிலும் மற்றும் பிற ஐரோப்பிய தலைநகரங்களிலும் கவலையைத் தூண்டிவிடுகிறது.

ஐரோப்பாவை ஒரு யுத்தக்களமாக மாற்றிய அதே முரண்பாடுகள் மீண்டும் எழுச்சி காண்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் அதில் உள்ளடங்கிய தேசிய மற்றும் பிராந்திய பகுதிகளாக உடைவதே கூட தூரத்தில் தெரிகிறது. கிரீஸ் யூரோ மண்டலத்தில் இருந்து வெளியேறினால் (Grexit) அதனை ஐரோப்பிய ஒன்றியத்தால் தாங்க முடியுமா என்பதன் மீது ஒரு சூடான விவாதம் பல மாதங்களாக நடந்து வருகிறது. இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது (Brexit) இன்னும் பெரிய ஆபத்துகளைக் கொண்டது என்ற எச்சரிக்கைகளும் வெளிவருகின்றன.

அமெரிக்காவுடன் அட்லாண்டிக் கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளின் கூட்டணி (நேட்டோ), அதேபோன்ற பதட்டங்களால் பிளவுபட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான அவர்களது ஒருமித்த நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும், கிழக்கு ஐரோப்பாவில், கருங்கடல் பிராந்தியத்தில், ரஷ்யாவில் மற்றும் சீனாவில் ஜேர்மனியும் அமெரிக்காவும் மூலோபாய எதிராளிகளாக உள்ளன.

ஐரோப்பிய மக்களின் மிகப் பெரும்பான்மையினர், இராணுவவாதம், பேரினவாதம், வெளிநாட்டவர் மீதான வெறுப்பு மற்றும் சமூக சமத்துவமின்மையை நிராகரிக்கின்றனர். மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் இவற்றை எதிர்ப்பதற்கான வழிகளையும், முறைகளையும் தேடியவாறு உள்ளனர். கண்டம், அளவுக்குமீறி சூடேறி வெடிக்கும் நிலையிலுள்ள ஒரு கொதிகலனை ஒத்த நிலையில் உள்ளது.

இத்தகைய போராட்டத்திற்கு வெளிப்பாட்டை வழங்கும் ஒரு நம்பகமான முன்னோக்கும் மற்றும் ஓர் அரசியல் குரலும் தான் அங்கே இல்லாதுள்ளது.

ஐரோப்பா ஒன்றோடொன்று போட்டியிட்டும் அரசுகளாகவும் பிரதேசங்களாகவும் தங்களுக்குள் முட்டிமோதிக்கொள்வது ஒரு பேரழிவில் முடியும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாப்பது நிலைமைகளை இன்னும் மோசமாக்கும். சிக்கன நடவடிக்கை, சர்வாதிகாரம் மற்றும் இராணுவவாதம் போன்றவை, அதனது மையத்தில் இருந்து அதனை அழிக்கும் சக்திகளை தூண்டிக் கொண்டிருக்கிறது.

இது கிரேக்கத்தின் சமீபத்திய சம்பவங்களால் மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டப்பட்டது.

சிக்கன நடவடிக்கைகளை நிறுத்துவதாக கூறித்தான் தீவிர இடது கூட்டணி, சிரிசா, தேர்தல்களில் வெற்றி பெற்றது. ஆனால் அது ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறித்துக் கொள்ள போவதில்லை என்றும், ஐரோப்பிய மண்டலத்திற்குள்ளே இருக்கும் என்றும் உறுதியாக வலியுறுத்தியது.

அதன் தேர்தல் வேலைத்திட்டத்தை மறுத்தளிக்கவும் மற்றும் அதை அதிகாரத்திற்கு கொண்டு வர வாக்களித்த வறிய உழைக்கும் மக்களை, முற்றிலுமாக மற்றும் மொத்தமாக, காட்டிக்கொடுக்கவும் சிரிசா அரசாங்கத்திற்கு ஒரு மாதத்திற்கும் குறைந்த காலம் தான் ஆனது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைப் பொறுத்த வரை இந்த கேடுகெட்ட காட்டிக்கொடுப்பு அதற்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. ஏனென்றால் சிரிசா தொழிலாளர் வர்க்கத்திற்காக பேசவில்லை, மாறாக கிரேக்க ஆளும் மேற்தட்டிற்காக மற்றும் செல்வாக்கு மிகுந்த மத்திய மேல்தட்டு வர்க்கத்திற்காக பேசுகிறது.

அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் அவர்களது தந்திரோபாய கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம்; ஆனால் கிரீஸில் அவர்களது சொந்த பெருநிறுவன மற்றும் நிதியியல் நலன்களை அச்சுறுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், ஐரோப்பிய முதலாளித்துவத்தை நிலைகுலைக்க செய்யக்கூடிய நடவடிக்கைகளை கூட அவர்கள் விரும்பவில்லை.

அதனால் தான் அவர்கள் ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்திற்கு முறையிடவில்லை, மாறாக வெளிநாட்டவர் மீது விரோத போக்கு கொண்ட சுதந்திர கிரேக்கர்களுடன் ஒரு கூட்டணி அமைத்தனர். அதனால் தான் முக்கூட்டின் ஒவ்வொரு முறையீட்டிற்கும் அடிபணிந்தனர். இதற்கிடையே, அவர்கள் சமூக அமைதியின்மையை வன்முறையாக ஒடுக்கவும் தயாரிப்பு செய்து வருகின்றனர்.

கிரேக்க சம்பவங்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பிரதான அரசியல் அனுபவமாகும். சிரிசா வகித்த பாத்திரம் போலி-இடது மத்தியதர வர்க்க அரசியலின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை நாசகரமாக அம்பலப்படுத்துகிறது. இந்த போலி-இடது மத்தியதர வர்க்கம், பாட்டாளி வர்க்க போராட்டத்தை "அடையாள நிகழ்ச்சிநிரல்களின்" அங்கியைக் கொண்டு பிரதியீடு செய்துள்ளது.

ஜேர்மனியில் உள்ள இடது கட்சி, ஸ்பெயினில் உள்ள பெடெமோஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற சிறிய குழுக்களும் அதே நிகழ்ச்சிநிரலை பின்தொடர்கின்றன. அவை சிரிசாவின் உத்வேகமான ஆதரவாளர்கள் என்பதுடன், அதே செல்வாக்குமிக்க சமூக தட்டுக்களுக்காக பேசுகின்றன. அவை சமூகத்தின் மிக செல்வந்த 10 சதவீதத்திற்குள் இன்னும் அதிகளவில் சமமாக செல்வவளத்தைப் பங்கீடு செய்வதை முன்நிபந்தனையாக கொண்டுள்ளன. பெரும் செல்வந்தர்கள் மீது பொறாமை கொண்டிருக்கும் அவர்கள், தொழிலாள வர்க்கத்தை இழிவுபடுத்துவதுடன் அதைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாப்பதற்கும் தேசிய அரசை பலப்படுத்துவதற்கும் இடையே ஏதாவதொரு மாற்றீடைத் தேர்ந்தெடுப்பது என்பது ஒரு தவறான மாற்றீடாகும். நாம் பார்த்ததைப் போல, ஐரோப்பிய ஒன்றியமே ஐரோப்பாவை உடைக்கும் சக்திகளை உருவாக்கி வருகின்றன.

ஐரோப்பாவை அதன் மக்களின் நலன்களின் பொருட்டு ஐக்கியப்படுத்துவதற்கும், அதன் செறிந்த வளங்களை அனைவருக்குமான நலன்களுக்காய் பயன்படுத்துவதற்கும் மற்றும் இராணுவவாதத்தை தடுத்து நிறுத்துவதற்குமான ஒரே வழி  ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் மட்டுமே ஆகும்.

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரள்வால் மட்டுமே நிகழக் காத்திருக்கும் ஒரு பேரழிவைத் தடுத்து நிறுத்த முடியும்.

அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் ஸ்தாபனங்களுக்கும் எதிராக ஐக்கியப்பட வேண்டும். பெரும் செல்வங்களை, வங்கிகளை மற்றும் பிரதான பெருநிறுவனங்களை பறிமுதல் செய்து, பொருளாதாரத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்து, அதனை நிதியப் பிரபுத்துவத்தின் இலாப நலன்களுக்காய் இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கு சேவை செய்ய திசையமைவு செய்கின்ற தொழிலாளர்களது அரசாங்கங்களை அவர்கள் ஸ்தாபித்தாக வேண்டும்.