World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The crisis in Latin America and the fight for revolutionary leadership

இலத்தீன் அமெரிக்க நெருக்கடியும் புரட்சிகர தலைமைக்கான போராட்டமும்

By Bill Van Auken
7 May 2015

Back to screen version

இந்த உரையானது மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தின கூட்டத்தில் அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சியின் முன்னனி உறுப்பினர் பில் வான் ஆக்கென் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவமாகும்.

இந்த 2015 மே தினக் கொண்டாட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை என்ற அவர்களது பொதுவான எதிரிக்கு எதிராக வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடுவதில் அது தீர்மானகரமாக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த அரைக்கோளத்தின் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதலும், சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பும், இந்த ஐக்கியத்தை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதற்கு அவசியமான மிகச் சக்திவாய்ந்த புற நிலைமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இலத்தீன் அமெரிக்கா உலகின் மிகவும் சமத்துவமற்ற பிராந்தியமாகவே தொடர்ந்து இருக்கிறது. சுமார் 167 மில்லியன் மக்கள் இப்போது வறுமையில் வாழ்கிறார்கள், இன்னும் 200 மில்லியன் மக்கள் வறுமையில் வீழும் அபாயத்தில் இருக்கிறார்கள். பெருந்திரளான மக்களின் துயரகரமான நிலைக்கு மறுபக்கம், அப்பிராந்தியத்தின் மிக வசதிபடைத்த 1 சதவீதத்தினரோ மலைக்க வைக்கும் செல்வத்தைக் குவித்துள்ளனர். இலத்தீன் அமெரிக்க பில்லியனர்களின் எண்ணிக்கை 114 உயர்ந்துள்ளது, அவர்களது மொத்த சொத்துமதிப்பு 440 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவின் நான்கு மிகப்பெரிய தேசியப் பொருளாதாரங்கள் தவிர்த்த மற்ற அதன் அனைத்து நாடுகளது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மிஞ்சிய தொகையாகும்.

நாம், பிற பிராந்தியங்களில் காண்பது போல, பாரிய வறுமை, திட்டமிட்ட வன்முறை மற்றும் சமூக நிலைமுறிவு ஆகிய நிலைமைகள், அகதிகளாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற நிர்பந்தித்துள்ளது—அதுவும் குறிப்பாக மத்திய அமெரிக்க குறுகிய நிலப்பகுதிகளிலிருந்து, அங்கே தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்த சமூகங்களையும் சீரழித்து, இனப்படுகொலைக்கு ஒத்த ஒடுக்குமுறை போர்களை முடுக்கிவிட்டது.

இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் பொலிஸ் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் கரங்களில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்படாது, அவர்கள் விரும்பும் நாட்டில் அவர்கள் வாழ்வதற்கும் மற்றும் வேலைசெய்வதற்குமான உரிமையை அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி பாதுகாக்கிறது. முன்கண்டிராத எண்ணிக்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர் மக்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி விட்டுள்ள ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிரான மற்றும் புலம்பெயர்வுக்கு-விரோதமாக பேரினவாதத்தைத் தூண்டிவிட முனையும் குடியரசுக்கட்சி வலதின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் மற்றும் சொந்த நாட்டுத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்த எமது கட்சி போராடுகிறது.

சர்வதேசரீதியாக போர் உந்துதலை உருவாக்கிக் கொண்டிருக்கும் அதே அடிப்படை முரண்பாடுகளுக்கு இலத்தீன் அமெரிக்காவும் ஒரு களமாக உள்ளது. நீண்டகாலமாக இந்த பிராந்தியத்தை அதன் “கொல்லைப்புறமாக” அலட்சியத்துடன் விவரித்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது போட்டியாளர்களிடமிருந்து, குறிப்பாக சீனாவிடம் இருந்து, மேலாதிக்கத்திற்கான பெருகும் சவால்களுக்கு முகம்கொடுக்கிறது.

சீன வங்கிகள் சென்ற ஆண்டு இலத்தீன் அமெரிக்காவில் அவற்றின் முதலீடுகளை 71 சதவீதம் அதிகரித்தன. இது உலக வங்கி மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயான அபிவிருத்தி வங்கி இரண்டும் சேர்ந்து வழங்கிய தொகையை விடவும் அதிகமாகும். பிரேசில், அர்ஜென்டினா, பெரு மற்றும் வெனிசூலாவுடனான மொத்த இருதரப்பு வர்த்தகத்தில் சீனா ஏற்கனவே அமெரிக்காவை விஞ்சி விட்டிருக்கிறது.

பெண்டகன் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை” மேற்கொள்கின்ற அதேவேளையில், சீனா அதன் சொந்த “அமெரிக்காவை நோக்கிய முன்னெடுப்பில்” ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் தெற்கு கட்டளையகத்தின் தலைவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் அளித்த சாட்சியத்தில் கவலையுடன் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மேலாதிக்கத்தை அமைதியாக விட்டுக் கொடுத்துவிடாது, அது அதன் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்டும்விதமாக இன்னும் அதிகமாக இராணுவவாதத்தில் இறங்கும்.

1898 ஸ்பெயின்–அமெரிக்கா போருடன் வாஷிங்டன் ஓர் உலக ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சிபெற்றதற்குப் பிந்தைய நூற்றாண்டில், அமெரிக்கா நேரடி இராணுவ தலையீட்டின் மூலமாகவோ அல்லது, பெண்டகன் மற்றும் சிஐஏ ஒழுங்கமைத்த இராணுவ ஆட்சிகவிழ்ப்பு சதிகள் மூலமாகவோ இலத்தீன் அமெரிக்காவில் 40க்கும் அதிகமான அரசாங்கங்களை தூக்கிவீசியிருக்கிறது. மிக சமீப காலத்தை எடுத்துக் கொண்டால் 2002 இல், மறைந்த வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸை அகற்ற நடந்த தோல்விகரமான முயற்சி, 2004 இல் ஹைத்தியில் அரிஸ்டீட்டை அகற்றுவதற்கு நடந்த நடவடிக்கை மற்றும் 2009 இல் ஹோண்டுராஸில் சிலாயாவை வெளியேற்ற நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம்.

அப்பிராந்தியத்தில் இராணுவரீதியான தலையீட்டைத் தொடரும் அமெரிக்கா, வெளியே தெரியாதவாறு இராணுவத் தளங்களைக் கட்டியெழுப்பி வருவதோடு பூமியின் இந்த அரைக்கோளம் முழுவதிலும் இராணுவ பயிற்சிகளுக்கு என்று துருப்புகளை அனுப்பி வருகிறது.

ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பது என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தொழிலாளர்கள் உட்பட அமெரிக்காக்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் கடமையாகும். அந்த பணியை, முதலாளித்துவ அரசாங்கங்களிடமோ அல்லது இயக்கங்களிடமோ, அவை எந்தளவிற்கு "இடதாக" அவற்றை காட்டிக்கொண்டாலும், அவற்றிடம் ஒப்படைக்க முடியாது.

இதுவே இருபதாம் நூற்றாண்டின் மிகக் கசப்பான படிப்பினையாகும். அக்காலகட்டத்தில் அப்பிராந்தியத்தையே உலுக்கிய புரட்சிகரப் போராட்டங்கள், கியூபப் புரட்சியின் தன்மை தொடர்பாக உருவாக்கப்பட்ட குழப்பத்தாலும், கெரில்லா யுத்தமுறையை ஊக்குவித்ததன் மூலமாக அதனைப் மீண்டும் நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளாலும் காட்டிக்கொடுக்கப்பட்டன.

பப்லோவாத திருத்தல்வாதமும், இலத்தீன் அமெரிக்காவில் அதன் மோரனோயிச -Morenotie- வடிவமும் இந்த காட்டிக்கொடுப்பில் ஒரு முக்கிய பாத்திரம் ஆற்றின. இத்தகைய சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தை நிராகரித்ததோடு, கியூபாவில் காஸ்ட்ரோயிசம் ஒரு தொழிலாளர் அரசை ஸ்தாபித்திருந்தது என்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத கெரில்லாவாதம் பொதுவாக சோசலிசத்துக்கான ஒரு புதிய பாதையைப் பிரதிநிதித்துவம் செய்தது என்றும் கூறப்படும் ஒரு முன்னோக்கினை முன்னெடுத்தன.

அமெரிக்க வர்த்தக சபையின் ஆதரவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் கியூப ஆட்சிக்கும் இடையிலான நல்லிணக்கமும், கடந்த மாதம் அது அமெரிக்க நாடுகளின் OAS உச்சி மாநாட்டில் கொண்டாடப்பட்டதும், இந்த ஆட்சியின் மற்றும் அதை அதிகாரத்திற்கு கொண்டு வந்த புரட்சியின் உண்மையான குணாம்சத்தை அடிக்கோடிடுகின்றன. இந்த அனுபவத்தின் ஒரு மதிப்பீட்டை வரைவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

“தொழிலாளர்களின் விடுதலை என்பது தொழிலாளர்களது பணியாகவே இருக்க முடியும்” என்று காரல் மார்க்ஸ் விவரித்த அடிப்படையான கருத்தாக்கத்தை பப்லோவாதிகள் நிராகரித்தனர். தொழிலாள வர்க்கத்தின் செயலூக்கமான மற்றும் நனவான தலையீடு இல்லாமலேயே சோசலிசம் சாதிக்கப்பட முடியும் என்றும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அவசியமான நனவினை தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக அபிவிருத்தி செய்யப் போராடுகின்ற ஒரு மார்க்சிச புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது இனியும் அவசியமாக இல்லை என்றும் அவர்கள் வாதிட்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே இந்த திருத்தல்வாத முன்னோக்கிற்கு எதிராக போராடியது. அதன் அரசியல் தாக்கங்கள், கியூபாவைக் கடந்தும் விரிந்து செல்பவை என்பதையும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அவை பேரழிவுகரமான பின்விளைவுகளை முன்வைத்தன என்பதையும் கூறி அது எச்சரித்தது.

இந்த எச்சரிக்கைகள் துயரகரமான வகையில் நிரூபணமாகின. காஸ்ட்ரோவாத கெரில்லாவாதத்தின் ஊக்குவிப்பானது இளைஞர்களின் தீவிரப்பட்ட பிரிவுகளை, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமைக்கான போராட்டத்திலிருந்து திசைதிருப்பி, அவர்களை இராணுவத்துடன் ஒரு தற்கொலைக்குச் சமமான போரில் இறக்கியது. இது ஸ்ராலினிச, சமூக ஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசியவாத அதிகாரத்துவங்கள் தொழிலாளர் இயக்கத்தின் மீதான அவற்றின் பிடியைப் பேணுவதற்கும் தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் உதவியது. அதேசமயத்தில் பாசிச-இராணுவ சர்வாதிகாரங்களைத் திணிப்பதற்கு ஒரு போலிக்காரணத்தையும் அது வழங்கியது. அதன் இறுதிவிளைவு என்னவென்றால், இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர எழுச்சி தோற்கடிக்கப்பட்டு, சர்வதேச அளவில் ஒரு செறிந்த புரட்சிகர நெருக்கடி காலகட்டத்தில் ஏகாதிபத்தியம் தப்பிப்பிழைப்பதற்கு பங்களிப்பு செய்தது.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்துலகக் குழு இந்த பப்லோவாத முன்னோக்கிற்கு எதிராக சமரசமற்று போராடியது. ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதற்கான போராட்டமானது தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ், அது அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக, சர்வதேச அளவில் புரட்சியை விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலமாக மட்டுமே வெற்றி பெற முடியும் என்று அது வலியுறுத்தியது.

இந்த முன்னோக்கினை உணர்ந்து கொள்வதற்கான நிலைமைகள் இலத்தீன் அமெரிக்காவில் எழுச்சி கண்டுவருகின்றன. அதன் மக்கள்தொகையில் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியை விட அதிகமாக கணக்கில் கொண்டுள்ள மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய அப்பிராந்தியத்தின் இரண்டு மிகப்பெரிய நாடுகளின் அரசியல் நிலைமையைக் கருத்தில் எடுத்து பாருங்கள். மெக்சிகோவில் அயோற்சினாப்பா (Ayotzinapa) மாணவர்கள் படுகொலை மற்றும் காணாமல் போன சம்பவங்கள் சக்தி வாய்ந்த எழுச்சிகளைத் தூண்டியுள்ளது. PRD மற்றும் Morena இயக்கம் போன்ற "இடதுகள்" என்று கூறப்படுபவை உட்பட ஒவ்வொரு அரசியல் கட்சியும் மதிப்பிழந்து விட்டிருக்கின்றன. அவை அனைத்துமே, ஏகாதிபத்தியமும் மற்றும் மெக்சிகன் முதலாளித்துவமும் அவற்றின் சமூக எதிர்புரட்சியை நடத்துவதற்கு அவை பயன்படுத்திய முறைகளின் ஒரு நேரடியாக வெளிப்பாடாக உள்ள இந்த வரலாற்றுக் குற்றத்தில் உடந்தையாக இருந்துள்ளன.

பிரேசிலில், தொழிலாளர் கட்சி 13 ஆண்டுகளுக்கும் அதிகமாக பதவியில் இருந்த பின்னர், அது பெட்ரோப்பிராஸ் (Petrobras) ஊழல் மோசடியில் சிக்கி, தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது தாக்குதல்களை நடத்தியதற்காக, மற்றும் தன்னைத்தானே இன்னும் கூர்மையாக வலதிற்கு திருப்பியதன் மூலமாக வீதிகளில் வலது-சாரி அணிதிரட்டல்களுக்கு விடையிறுத்ததற்காக, முற்றிலும் மதிப்பிழந்துள்ளது.

மெக்சிகோவில் மற்றும் அமெரிக்காவில் மற்றும் உலகெங்கிலும் போலவே, பிரேசிலில் ஆளும் வர்க்கமும் அப்பட்டமாக அரசு வன்முறையை ஏற்றுள்ளது. இதைத் தான் தெற்கு நகரமான குரிடிபாவில் (Curitiba) கடந்த வாரம் நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தில் இராணுவம் பொலிஸின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பார்க்க வேண்டியிருந்தது. இந்த நிலைமைகளின் கீழ், முன்னர் பிரேசில் பப்லோவாத இயக்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்த மிகேய்ல் றொசேற்ரோ (Miguel Rosseto) தான் தொழிலாளர் கட்சி (PT) அரசாங்கத்தின் பிரதான செய்தித்தொடர்பாளராக இருக்கிறார் என்பது தற்செயலானதல்ல.

இலத்தீன் அமெரிக்காவில் முதலாளித்துவ வர்க்கம் அதன் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ள இத்தகைய உட்கூறுகளை நியமிக்கிறது என்ற உண்மையானது, ஒரு ஆழமான நெருக்கடி நிலவுகிறது என்பதற்கும் மற்றும் வரவிருக்கும் வர்க்க போராட்டத்தின் ஒரு வெடிப்பிற்கும் அறிகுறி காட்டுவதாக உள்ளது.

தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச சர்வதேசவாத தலைமையைக் கட்டியெழுப்புவதே—அதாவது அமெரிக்காக்களின் ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற ஒரு பொது முன்னோக்கிற்காகப் போராடுகின்ற, பூமியின் இந்த அரைகோளத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவதே—வரவிருக்கின்ற புரட்சிகர எழுச்சிகளின் அலைக்கு தயாரிப்பு செய்வதில் உள்ள தீர்க்கமான கேள்வியாகும்.