World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The UK general election and the growth of class antagonisms

இங்கிலாந்து பொது தேர்தலும், வர்க்க பகைமைகளின் அதிகரிப்பும்

By Chris Marsden
7 May 2015

Back to screen version

இந்த உரையானது மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தின கூட்டத்தில் இங்கிலாந்து சோசலிச சமத்துவ கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவமாகும்.

வேறு எந்த நாட்டையும் விட மக்கட்தொகை தலைவீத அடிப்படையில் பிரிட்டன் அதிக பில்லியனர்களைக் கொண்டிருப்பதாக, இந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தலுக்கு பன்னிரெண்டு நாட்கள் முன்னர், சண்டே டைம்ஸின் வருடாந்த செல்வந்தர் பட்டியல் எடுத்துக்காட்டியது.

ஆயிரம் பேர், 856 பில்லியன் அமெரிக்க டாலர்களை அவர்களது ஒட்டுமொத்த செல்வவளமாக கொண்டுள்ளனர். மிகவும் செல்வம் படைத்த வெறும் 117 பேர் 503 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் பிரிட்டனின் முழு மக்கள்தொகையில் அடியிலுள்ள 40 சதவீதத்தினர் கொண்டிருப்பதை விடவும் அதிகமாக கொண்டுள்ளனர்.

வெறும் ஓராண்டிலேயே, அவர்களது செல்வம் 43 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது. இதைப்பற்றி சிந்தித்து பாருங்கள். இந்த அதிகரிப்புக்கு நிதியளிப்பதற்கு மட்டும், குறைந்தபட்ச கூலி பெறும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் உழைக்க வேண்டும். 100க்கு மேற்பட்டவர்கள் தற்போது சொந்தமாக்கி கொண்டிருப்பதை வழங்க 23 மில்லியன் பேர் உழைக்க வேண்டும்.

2008-09 பெரும் பொறிவிற்குப் பின்னரிலிருந்து மிகப்பெரிய செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ளனர். அவர்கள், அரசாங்கங்களால் கையளிக்கப்பட்ட பணத்தைப் பயன்படுத்தியோ அல்லது சம்பள வெட்டுக்கள், வேலைகளைத் துரிதப்படுத்தல் மற்றும் சேவைகளை வெட்டுவதனூடாக உழைக்கும் மக்களிடமிருந்து உறிஞ்சி எடுப்பதன் மூலமாகவோ அல்லது பணத்தை கட்டுக்கடங்கா ஊகவணிகத்திற்குள் புகுத்துவதன் மூலமாகவோ இதனை செய்துள்ளனர்.

இங்கே, ஐரோப்பாவின் இரண்டாவது மிக செல்வச்செழிப்பான பொருளாதாரத்தில், இது மிகவும் வறுமை நிறைந்த 20 சதவீதத்தினரின் நிலைமையை 2009 இல் இருந்ததை விடவும் 57 சதவீதம் மிக மோசமானதாக ஆக்கியுள்ளது. மிக ஏழ்மைமிக்க பத்து சதவீதத்தினர் வாரத்திற்கு வெறும் 160 பவுண்டு மட்டுமே சம்பாதிக்கக்கூடிய வகையில், வருமானங்கள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் உட்பட, 13 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர்.

இரு நகரங்களின் கதை (A Tale of Two Cities) என்பதில் சார்லஸ் டிக்கன்ஸ் பிரெஞ்சுப் புரட்சிக்கு இட்டுச்சென்ற ஆண்டுகளைக் குறித்து குறிப்பிடுகையில், “ஒளியின் பருவம்.....இருளின் பருவம்” என குறிப்பிடுவார். அதாவது “அதீதமானவை இலகுவாக கீழ்நோக்கி சரியும் அளவிற்கு, காகித பணத்தைத் தயாரித்து, அதை செலவழித்து” புரளும் ஆளும் செல்வந்த மேற்தட்டைக் குறிப்பது ஒளி. புராதன ஆட்சிக்கு எதிராக எழுச்சி பெறவிருந்த சுரண்டப்படும் மக்களைக் குறிப்பது இருள்.

பிரமிப்பூட்டும் வகையில் அவரது காலத்திய சமூக அவலங்களைப் காலவரிசை பட்டியலிட்டு புரட்சிக்கு முந்தைய பிரான்சை அவர் படம் பிடித்துக்காட்டியதே, தற்போதைய பிரிட்டனில் எதிரொலிக்கிறது என்பதைப் பெரிதும் உணர முடியும். அதிகரித்து வரும் ஒரு பரந்த சமூக இடைவெளி, பிரித்தானிய வாழ்வில் தீர்மானகரமான அம்சமாகியுள்ளது. இதுதான், இந்த தேர்தல்களில் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் நெருக்கடியின் ஆழமான உணர்வுகளைக் கணக்கில் கொண்டு வருகிறது.

ஒரு பெரும்பான்மை அரசாங்கத்தை ஓரளவாவது அமைக்கக்கூடிய கட்சி எங்கும் இல்லை. டோரிகளும் தொழிற்கட்சியினரும் மதிப்பிழந்து போயுள்ளனர் ஏனென்றால் அவர்கள் சிக்கன கொள்கைக்கு அர்ப்பணித்துக் கொண்டுவிட்டனர். முடிவில்லா சமூக வேதனைகளிலிருந்து ஸ்காட்டிஷ் தேசிய கட்சியோ, பிளைட் சிம்ரு (Plaid Cymru) அல்லது பசுமை கட்சியோ தற்காலிக நிவாரணம் அளிப்பர் என நம்பிக்கையுடன், மில்லியன் கணக்கானோர் ஒரு மாற்றீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் அதை வழங்கமாட்டார்கள். அதற்கு பதிலாக, டோரிகள், தாராள ஜனநாயக கட்சியினர் மற்றும் ஏனையோருடன் ஒரு கூட்டணி அமைப்பதில் தோல்வியுற்றால், தொழிற் கட்சி அதனைப் பொறுப்பெடுக்கக் கூடிய வகையில் அவர்கள் தொழிற் கட்சியினரை தாங்கிப் பிடிக்க விரும்புகின்றனர்.

இக்கட்சிகளின் எவ்விதமான கூட்டிலிருந்து உருவாகும் ஓர் அரசாங்கம், அது தொழிற் கட்சியினரால் ஆகட்டும் அல்லது பழமைவாதிகளாலே தலைமை தாங்கப்பட்டாலும் சரி, அது பெரிதும் ஸ்திரமற்றதாகவே இருக்கும். அது பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க செய்வதா வேண்டாமா அல்லது பிரிட்டனை ஒரு ஒன்றுபட்ட அரசாகவே கூட பேணலாமா என்பதன் மீது ஓர் ஆழமான அபாய பகுதியை நோக்கி அது செல்லும்.

மிக முக்கியமாக, உழைக்கும் மக்களின் கண்கள் முன்னே அது அதன் நியாயபூர்வ தன்மையை இழந்துவிடும். நம்பமுடியாத அளவு செல்வம் படைத்தோரை மற்றும் ஒட்டுண்ணி சிறுபான்மையினரை மேலும் கொழுக்க வைப்பதற்காக, பரந்த பெரும்பான்மையினர் மீது நடத்தப்படும் ஒரு முடிவற்ற தாக்குதலுக்காக, ஜனநாயக முறையில் நீங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியாது .

சோசலிச சமத்துவக் கட்சி எமது தேர்தல் அறிக்கையில் பின்வருமாறு வலியுறுத்துகிறது: “உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள பெரும் பிரச்சினைகளில் ஒன்று கூட நிதி ஆதிக்க செல்வந்தர் குழுவின் சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டாமல் தீர்க்கப்பட முடியாது. அது சமுதாயத்தின் மீதான ஒரு புற்றுநோய், கட்டாயம் அதை அகற்றியே ஆக வேண்டும்.“

இதனை நிரூபிப்பதற்கு ஒரேயொரு உதாரணத்தை மட்டும் குறிப்பிட என்னை அனுமதியுங்கள்: மிகப்பெரிய செல்வந்தர்கள், சொத்து ஊக வணிகத்தில் ஈடுபட்டு பில்லியன் கணக்கில் பணம் சுருட்டுவதில் மும்முரமாக உள்ளனர். இதன் விளைவாக பிரிட்டனில் ஒரு வீட்டின் சராசரி விலை 419,000 அமெரிக்க டாலரை எட்டியுள்ளது —இது சராசரி ஆண்டு சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் சராசரி ஊதியத்தை விட அதிகமாக அதிகரித்து, இலண்டனில் இந்த மதிப்பு 806,000 டாலராகி உள்ளது.

அரசு நிதியுதவியளிக்கும் வீடுகளில் வாழ்பவர்கள் மத்தியில் கூட வாடகைகள் அதிகமாக உள்ளது. அரைவாசிப்பேர் தங்கள் வாடகைகளைச் செலுத்த முடியாது திணறி வருகின்றனர். மூன்றில் ஒரு பங்கினரை விட அதிகமானோர் அதனைத் தீர்ப்பதற்காக இடையிடையே சாப்பாடுகளையே தவிர்த்து வருகின்றனர்.

கடந்த மூன்றாண்டுகளில் 50,000 குடும்பங்களுக்கும் அதிகமானோர் சமூகத் தூய்மை எனும் அப்பட்டமான நடவடிக்கையில் லண்டன் நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக இவ்வார The Independent செய்தி வெளியிட்டது. அதிகரித்து வரும் வாடகைகள் மற்றும் சமூகநல உதவிகளில் செய்யப்படும் வெட்டுக்கள், குடும்பங்களால் வாரத்திற்கு 500 பவுண்டுகள் என்ற வாடகை கூட செலுத்த முடியாதளவிற்கு ஏழைகளை வீடுகளை விட்டுக் காலி செய்யுமாறு நிர்பந்திக்கிறது. இந்த விதமான குற்றகரமான பத்து நகரசபைகளில் ஏழு தொழிற் கட்சியினரால் நிர்வகிக்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் முதலாளித்துவம், வெடிப்பார்ந்த வர்க்க மோதல்களைக் கொண்டு வரக்கூடிய, ஓர் அடிப்படை ஆட்சி நெருக்கடியை முகங்கொடுக்கிறது.

இது மிகவும் நிச்சயமானதாக ஆக்கப்பட்டுவிட்டது, ஏனெனில் அடுத்த அரசாங்கம், குற்றம் இழைப்பதில் அமெரிக்காவின் முதன்மை பங்காளியாக அதன் அந்தஸ்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு, அது ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராகவும், அத்துடன் மத்திய கிழக்கிலும் அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களைக் கட்டாயம் உக்கிரப்படுத்தும்.

பரந்த போர் எதிர்ப்பு உணர்வு தற்போது அரசியல் வெளிப்பாட்டை காணமுடியாது இருப்பதற்கான காரணம் சிக்கன கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகளே இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்கான கட்சிகளாகவும் இருக்கின்றன. இது மாற்றப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே நிலவும் சமூக மற்றும் அரசியல் ஒழுங்கமைப்பிற்கு ஓர் உண்மையான அரசியல் எதிர்ப்பினை பிரதிநிதித்துவம் செய்கிறது.

பிரிட்டனிலும் சர்வதேச ரீதியாகவும் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்று விழிப்புறச் செய்யவும், எல்லாவற்றுக்கும் மேலாக உக்ரேன், ஈராக் மற்றும் சிரியாவில் அதிகரித்துவரும் போர் அபாயம் மீதான மௌனமான சதியைத் தகர்க்கவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நாம் போராடி வருகிறோம். தொழிலாள வர்க்கம் அதன் அதன் சொந்த நலன்களை வலியுறுத்தவும் முதலாளித்துவத்திற்கு ஒரு முடிவு கட்டுவதற்கும் அடித்தளமாக, நாம் ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

நாம் வலியுறுத்தி வரும் முக்கிய விடயம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர தலைமையாக கட்டி எழுப்புவதன் தேவை பற்றியதாகும்.

டேவிட் ஓ'சுல்லிவனை வேட்பாளராக நிறுத்தியுள்ள ஹோல்போர்ன் (Holborn) மற்றும் செயின்ட் பான்கிராஸில் தான் (St Pancras), கார்ல் மார்க்ஸ் மூலதனத்தை எழுதினார், அங்கே தான் 1864 இல் முதலாம் அகிலம் நிறுவப்பட்டது. அங்கே தான் விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கியை 1902 இல் முதன்முதலில் சந்தித்தார்.

கேட்டி ரோட்ஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மத்திய கிளாஸ்கோவில் தான், ஜோன் மெக்ளீன் முதல் உலக போர் கொடூரங்களுக்கு எதிராக ஒரு வீரம் செறிந்த இயக்கத்திற்கு தலைமையேற்று நடத்தினார். 1918 இல் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டது. அவர் குற்றவாளி கூண்டில் இருந்து அவர் மீது குற்றஞ்சாட்டியவர்கள் மீதே திருப்பி குற்றஞ்சாட்டும் வகையில் அறிவித்தார்:

நான் இங்கு குற்றம் சாட்டப்பட்டவனாக நிற்கவில்லை. தலைமுதல் கால் வரை இரத்தம் சொட்டும் முதலாளித்துவத்தைக் குற்றம்சாட்டுபவனாக  இங்கே நான் நிற்கின்றேன்.”

“என்மீது சுமத்தப்படும் உங்கள் குற்றச்சாட்டுக்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனது கோரிக்கை எல்லாம் தொழிலாள வர்க்கத்திற்குத் தான்.”

“நான் பிரத்தியேகமாக அவர்களுக்கு மட்டும் கோரிக்கை விடுக்கிறேன், ஏனென்றால் அவர்கள் மட்டுமே, ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தில் முழு உலகமும் ஒரு சகோதரத்துவமாக இருக்கும் காலத்தைக் கொண்டு வரக் கூடியவர்கள். அது மட்டுமே, சமூகத்தை மறுஒழுங்கமைத்தலுக்கு கொண்டு வரக்கூடிய வழிவகையாக இருக்க முடியும். உலகின் அந்த மக்கள் உலகை கைப்பற்றும் போது, உலகை தக்கவைத்துக் கொள்ளும் போது மட்டுந்தான் அது அடையப்பட முடியும்.“

ஆழமான குற்றச்சாட்டுகளுக்கு உரையாற்றுகையில் வழங்கப்பட்ட இத்தகைய அருமையான வார்த்தைகள் ஒருகாலத்தில் தொழிலாள வர்க்கத்திற்குள் பரவலாக பரவியிருந்தன.

எதிர்வரும் காலத்தில், பிரிட்டனில் உள்ள தொழிலாளர்கள், தொழிற் கட்சிவாதம், தொழிற்சங்கவாதம் மற்றும் ஸ்ராலினிசம் ஆகியவற்றின் கனமான சுமையின் கீழ் பல தசாப்தங்களாக புதைக்கப்பட்டுள்ள—அவர்களது உண்மையான சோசலிச பாரம்பரியங்களை—திரும்பவும் கொண்டு வருவதற்குரிய பாதையை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் கண்டு கொள்வார்கள். இறுதியாக அவர்கள், வர்க்க சுரண்டல் மற்றும் இராணுவ மோதல் என்ற இரட்டை தீமைகளுக்கும் ஒரு முடிவு கட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.