World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The crisis of capitalism and the reemergence of class struggle in the United States

முதலாளித்துவ நெருக்கடியும், அமெரிக்காவில் வர்க்க போராட்டத்தின் மீள்எழுச்சியும்

Joseph Kishore
May 14th, 2015

Back to screen version

இந்த உரையானது மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தினக் கூட்டத்தில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவமாகும்.

இன்றைய இந்த உரைகள், அபாயகரமான மற்றும் வெடிப்பார்ந்த உலக நிலைமைக்கு ஒரு தெளிவான பகுப்பாய்வை வழங்குகின்றன. உலகப் போரா அல்லது சோசலிசப் புரட்சியா என்ற இருகூறுகளும் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளன.

புறநிலைமை ஆழ்ந்த அபாயங்களை முன்னிறுத்துகிறது, ஆனால் அது அளப்பரிய வாய்ப்புவளங்களையும் வழங்குகிறது. பழைய ஒழுங்கமைப்பு உடைந்து வருவதுடன், பழைய அரசியல் கட்டமைப்புகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. நாம் ஒரு புரட்சிகர சகாப்தத்தினூடாக கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அத்தகையவொரு சகாப்தம் ஒரு திவாலான ,மற்றும் வழக்கற்றுபோன ஒரு சமூக ஒழுங்கை இறுதியாக ஒழித்துக் கட்டுவதற்கும் மற்றும் சமூக சமத்துவத்தின் மீது நிறுவப்பட்ட ஓர் உலகளாவிய ஒருங்கிணைந்த பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளங்களை நிறுவுதற்கும் சாத்தியமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

அபாயங்களைக் குறைமதிப்பீடு செய்துவிடக்கூடாது. உலக ஏகாதிபத்தியம் ஒரு பேரழிவுகரமான போக்கை எடுத்து வருகிறது.

உலகெங்கிலும் வங்கி பிணையெடுப்புகள் மற்றும் பணத்தைப் புழக்கத்தில் விடும் நடவடிக்கைகள் மூலமாக உருவாக்கப்பட்ட பாரிய ஊகவணிக குமிழிகளுடன் ஓர் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி; மற்றும், ஐரோப்பாவில் ஆழ்ந்த புவிசார் அரசியல் மோதல்களும், கிழக்கு ஐரோப்பாவில் இராணுவமயமாக்கலும்; சீனா உடன் அமெரிக்காவை மோதலுக்குள் கொண்டு வரும் ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு; இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பதட்டங்கள்; மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போர்; எதிர்கால குற்றங்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக வரலாறைத் திருத்தி எழுதுவதை உள்ளடக்கிய, ஜேர்மனி மற்றும் ஜப்பானின் மீள்இராணுவமயமாக்கல்; இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே பதட்டங்கள்; ஏகாதிபத்திய குற்றங்களால் தப்பியோடிவரும் புலம்பெயர்வோர் மீதான கொடூரமான தாக்குதல்; தேசியவாத மற்றும் பாசிசவாத பிற்போக்குத்தனத்தின் அதிகரிப்பு; அத்துடன் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முடிவில்லா சிக்கன நடவடிக்கைகள் என இன்று வழங்கப்பட்ட உரைகள், ஓர் உலகளாவிய புவிசார்அரசியல் மற்றும் சமூக வெடிஉலையைக் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை வழங்குகின்றன.

அவரது தொடக்க உரை குறிப்புகளில் தோழர் டேவிட் நோர்த் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய மற்றும் ஆழமான ஸ்திரமின்மைப்படுத்தும் பாத்திரத்தை சுட்டிக் காட்டினார். அமெரிக்கா சர்வதேச போரின் கட்டளை மையமாக உள்ளது. மோசடி மற்றும் ஊகவணிகம் மூலமாக திரட்டப்பட்ட செல்வத்தை முழுங்கியுள்ளதும் மற்றும், பூமியின் வேறு எதையும் சிறிதாக்கி விடும் அளவிலான ஓர் இராணுவத்துடன் ஆயுதமேந்தி நிற்கின்ற அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம், உலகையே அடிமைப்படுத்தும் ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

2003 ஈராக் போரின் ஆரம்ப நாட்களிலேயே, உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டது, அமெரிக்க ஏகாதிபத்தியம் "பேரழிவுடன் முன்செல்கிறது. அதனால் உலகை அடிமைப்படுத்த முடியாது. மத்திய கிழக்கின் மக்கள் மீது அது காலனித்துவ தளைகளை மீண்டும் திணிக்க முடியாது. அதன் உள்நாட்டு சிக்கல்களுக்கு போரைக் கொண்டு அது ஒரு நிரந்தர தீர்வைக் காண முடியாது.

எந்தளவிற்கு இந்த மதிப்பீடு சரியாக நிரூபிக்கப்பட்டுள்ளது பாருங்கள்! அமெரிக்காவினால் தொடங்கப்பட்ட ஒவ்வொரு போரும், பேரழிவில் போய் முடிந்துள்ளன. அதன் குண்டுகள் மற்றும் டிரோன்களைக் கொண்டு, அது தொடுகின்ற ஒவ்வொரு நாடும், குழப்பங்களுக்குள் ஆழ்கின்றன. இருந்தாலும், ஒவ்வொரு பேரழிவும் புதிய போர்களுக்கு அடித்தளமாக மாற்றப்படுகின்றன. முன்பின் சிந்தனையற்று பித்துப்பிடித்த நிலையில், அமெரிக்க ஆளும் உயரடுக்கு உலக வரலாற்றிலேயே முதல்முறையாக அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே ஒரு மோதலுக்கு களம் அமைத்து வருகிறது.

போருக்கு எதிரான எந்தவொரு இயக்கமாக இருந்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் அமெரிக்காவை பார்ப்பதோ, அதன் இராணுவ மற்றும் அரசு அதிகாரத்தை மட்டும் பார்ப்பதோ ஒரு பேராபத்தான பிழையாகிவிடும். உண்மையில், ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டை அது பாழாக்கி கொண்டிருக்கின்ற நிலையில், அதன் ஆளும் வர்க்கம் அதன் சொந்த எல்லைகளுக்குள்ளேயே அதன் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பலமான எதிரியான அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தை எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு மே தின கூட்டத்தில், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தை நாம் "உலக அரசியலில் உறங்கி கொண்டிருக்கும் பேராற்றல் மிக்கதாக" குறிப்பிட்டோம். அது விழிக்க தொடங்கி விட்டது என்பதை இந்த ஆண்டு நம்மால் கூற முடியும்.

25 வயதான பிரெட்டி க்ரேயின் பொலிஸ் படுகொலையை அடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக நடந்த மேரிலாந்தின் பால்டிமோர் சம்பவங்களை எண்ணிப்பாருங்கள். மற்றொரு நிராயுதபாணியான இளைஞரின் பொலிஸ் படுகொலை அம்பலமானதும், இதுபோல அமெரிக்காவில் ஏறத்தாழ அன்றாடம் நடக்கின்ற நிலையில், அது துரிதமாக ஆர்ப்பாட்டங்களைத் தூண்டிவிட்டது. அவை அந்நாட்டின் தலைநகரிலிருந்து வெறும் 40 மைல் தூரத்தில் உள்ள அந்த பிரதான பெருநகர பகுதியையே உலுக்கியது.

ஒரு சமூக வெடிப்பு ஏற்படுவதற்கு மிக குறைந்த நேரமே எடுக்கும் என்றளவிற்கு வர்க்க பதட்டங்கள் மிகவும் வெடிப்பார்ந்த நிலையில் உள்ளன. ஒரு பொலிஸ் படுகொலையோ அல்லது வேறு ஏதேனும் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மோசமான குற்றமோ, ஒரேயொரு சம்பவமே கூட ஒரு தொடர்ச்சியான எதிர்நடவடிக்கைகளை வேகமாக தூண்டிவிட்டு, அந்நாட்டு மில்லியன் கணக்கான மக்களின் ஆழ்ந்த சமூக மற்றும் பொருளாதார துன்பங்களின் மையப்புள்ளியாக மாறிவிட முடியும்.

அதுபோன்றவொரு சாத்தியக்கூறு மீதான ஆளும் வர்க்கத்தின் அச்சம் தான், அதன் விடையிறுப்பில் எடுத்துக்காட்டப்படுகிறது. அந்த ஒட்டுமொத்த அரசியல் மேற்கட்டுமானமும், தேசிய பாதுகாப்பு படையின் ஆயிரக் கணக்கான துருப்புகளை நிலைநிறுத்தியதன் மூலமாக எதிர்வினையாற்றியது. பால்டிமோர் நகரம் முழுவதிலும் முக்கிய பொது இடங்களில் கனரக ஆயுதமேந்திய பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டு, அதனுடன் சேர்ந்து கவச வாகனங்கள் மற்றும் இராணுவ ஹெலிகாப்டர்களாலும் அந்நகரம் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது., அவசரகால நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, குடியிருப்போர் அனைவருக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மிசோரியின் ஃபேர்குசன் நகரிலும் இதேபோன்ற ஒடுக்குமுறை நடந்து, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பால்டிமோர் நடவடிக்கைகள் வருகின்றன. ஃபேர்குசனில் பொலிஸின் மைக்கேல் பிரவுன் படுகொலை மீது எழுந்த ஆர்ப்பாட்டங்களுக்கு விடையிறுப்பாக அந்நகரம் கடந்த ஆகஸ்டில் ஒரு போர்களமாக மாற்றப்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் என்னவொரு வெட்கக்கேடான அம்பலபாடு! உலகெங்கிலும் "ஜனநாயகம்" மனித உரிமைகள்" என்று உபதேசிக்கும் ஓர் அரசங்கம், இத்தகைய அடித்தளத்தில் எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்க உரிமை இருப்பதாக அறிவிக்கின்ற அது, அதன் எல்லைகளுக்குள் நிலவும் சமூக அமைதியின்மையின் எந்தவொரு அறிகுறிக்கும் விடையிறுப்பதில் அதிகளவில் இராணுவ சட்ட வழிமுறைகளை மற்றும் பாரிய ஒடுக்குமுறையை உண்மையில், பாதியளவிலான-சர்வாதிகாரத்தை சார்ந்துள்ளது.

உண்மையில் வெளிநாடுகளில் முடிவில்லா போர் நடத்தும் அதே ஆளும் வர்க்கம், அதே நிதியியல் பிரபுத்துவம் தான், உள்நாட்டில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போரில் ஈடுபடுகிறது.

ஊடகங்களும் அரசியல் எந்திரமும், அதை மறுக்க அவற்றால் ஆனமட்டும் அனைத்தும் செய்கின்ற போதினும், சமூக சமத்துவமின்மை அதாவது வர்க்க பிளவு அமெரிக்காவின் சமூக வாழ்வில் தீர்மானகரமான அம்சமாகியுள்ளது. இனம், பாலினம், ஆண்பால்/பெண்பால் அடையாள அரசியல் ஆகியவை ஒரு புதிய சமூகத்திற்கு பாதையைத் திறந்துவிடாது, மாறாக வர்க்க போராட்டமே அதை செய்யும்.

தொழில்துறைமயப்பட்ட உலகில் அமெரிக்கா மிகவும் சமநிலையற்ற நாடாகும். பால்டிமோர் மற்றும் டெட்ரோய்ட் போன்ற நகரங்களில், வங்கிகளின் அரசியல் பிரதிநிதிகள் நீர் வினியோகம் போன்ற வாழ்வின் மிக அத்தியாவசிய தேவையைக் கூட ஆயிரக் கணக்கான மக்களுக்கு நிறுத்திவிட நகர்ந்து வருகின்றனர். ஆனால் அந்நாட்டின் 400 மிகப்பெரிய செல்வந்தர்களோ தற்போது மலைப்பூட்டுமளவிற்கு 2.29 ட்ரில்லியன் டாலர் தனிப்பட்ட சொத்துக்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர்.

வங்கிகள் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு வரம்பில்லா ஆதாரவளங்கள் பாய்ச்சப்பட்டதை, 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய காலகட்டம், அதாவது ஒபாமா சகாப்தம் கண்டுள்ளது. பங்குச் சந்தை மற்றும் பெருநிறுவன இலாபங்கள் சாதனையளவிற்கு உயர்ந்துள்ளன. 2009க்கு பின்னரில் இருந்து, அண்மித்தளவில் அமெரிக்காவின் மொத்த வருவாய் ஆதாயங்களும் மக்கள்தொகையில் மேலே உள்ள ஒரு சதவீதத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

உலகின் மிகச் செல்வசெழிப்பான நாடாக கருதப்படும் ஒரு நாட்டின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அவர்களால் அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் கடந்த ஆண்டு ஏதோவொரு தருணத்தில் போதிய உணவைப் பெற முடியாமல் இருந்ததாக தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் நிரந்தர கடன்சுமையின் ஒரு எதிர்காலத்தை முகங்கொடுக்கின்றனர். முதியவர்கள் அவர்களது மருத்துவ பரமாரிப்பு சுமையைத் தாங்க முடியவில்லையென தெரிவிக்கின்றனர். உற்பத்தித்துறை தொழிலாளர்களோ இப்போது வறுமை மட்டத்திற்குரிய கூலிகளைப் பெற்று வருகின்றனர். அரசு பள்ளிக்கூடங்கள் கலைக்கப்பட்டு வருகின்றன, அதற்கு ஆசிரியர்களும் பலியாகி வருகிறார்கள்.

இவை அனைத்துமே பணமில்லை என்று கூறப்படுவதன் அடிப்படையில் நடக்கின்றன. இன்னொரு புள்ளிவிபரமும் எடுத்துக்காட்டப்பட வேண்டியதாகும்: ஒரேயொரு F35 தாக்குதல் விமானத்தின் விலை கேட்பாணையின்படி சுமார் 200 மில்லியன் டாலராகும். இது டெட்ரோய்ட் குடிநீர் மற்றும் கழிவுநீர் பராமரிப்பு துறையின் பற்றாக்குறையை விட சுமார் பத்து மடங்காகும். இந்த பற்றாக்குறை, பத்து ஆயிரக் கணக்கான மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை வெட்டுவதற்காக நியாயப்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகப் பதட்டங்களை நெறிப்படுத்தவும், வர்க்க மோதல்களைக் கட்டுப்படுத்தவும் ஆளும் வர்க்கம் முன்னர் எந்த இயங்குமுறைகளைப் பயன்படுத்தியதோ, அவை இப்போது தோல்வி அடைந்துவிட்டன. தொழிற்சங்கங்கள் முற்றிலுமாக ஊழல்பீடித்து, பெருநிறுவன-சார்பு அமைப்புகளாகிவிட்டன. அவை யாரை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறுகின்றனவோ அந்த தொழிலாளர்களாலேயே பரந்தளவில் வெறுக்கப்படுகின்றன. அடையாள அரசியலுடன் கைகோர்த்துள்ள, மற்றும்  ஒபாமாவை "மாற்றத்தைக் கொண்டுவரும் வேட்பாளர்" என்று புகழ்ந்த, மத்தியதர வர்க்க "இடது" மற்றும் தாராளவாத அமைப்புகளும் அதிகரித்தளவில் மதிப்பிழந்து போயுள்ளன.

ஒன்றரை ஆண்டில் 2016 தேர்தல்கள் வரவிருக்கின்றன. ஒவ்வொரு பிரதான பெரு வணிக கட்சி வேட்பாளர்களின் செலவுகளுக்காக ஒரு பில்லியன் டாலரை விட அதிகமான செலவுகளுடன், அந்த ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசடியானதாக இருக்கும்.

இது, மக்களின் வேட்பாளராக தன்னைத்தானே காட்டிக்கொள்ள முனைந்துள்ள, வோல் ஸ்ட்ரீட் ஆதரவிலான ஒரு வலதுசாரி, இராணுவவாத ஹிலாரி கிளிண்டனின் பொருத்தமற்ற காட்சிப்படுத்தலிலேயே விளங்குகிறது. ஒரு நீண்டகால ஜனநாயகக் கட்சி ஒத்துழைப்பாளரும், பணத்தால் வாங்கக்கூடிய மிகச் சிறந்த "சோசலிஸ்ட்" என்றழைக்கப்பட்டவருமான பேர்னி சாண்டர்ஸ் வேட்பாளராக நிறுத்தப்படுவதைக் குறித்த மோசடி அறிவிப்பு மிக சமீபத்தில் நமக்கு அளிக்கப்பட்டது.

ஆளும் வர்க்கம் அதன் அரசியல் அமைப்புமுறையின் ஓர் ஆழ்ந்த நெருக்கடியை முகங்கொடுக்கிறது. இரண்டு முன்னணி முதலாளித்துவ கட்சிகளுமே இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடன் கூட்டு வைத்திருக்கின்றன. அவை பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டின் ஒரு சிறிய அடுக்கினது நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

மக்கள்தொகையில் மேல்மட்டத்தில் உள்ள ஐந்து அல்லது பத்து சதவீதத்தினரின் சுற்றுவட்டத்திற்கு அப்பால், அரசு ஒரு கோபமான, அதிருப்தி கொண்ட மற்றும் அதிகரித்தளவில் விரோதமான தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்கிறது. இது ஆழ்ந்த புரட்சிகர தாக்கங்களைக் கொண்டதாகும்.

அமெரிக்காவில், உண்மையில் உலகெங்கிலுமே, வர்க்க போராட்டம் வெடிக்குமா என்பதல்ல, மாறாக அது எந்த வடிவமெடுக்கும் என்பது தான் கேள்வியாக உள்ளது. அனைத்துமே, ஒரு புரட்சிகர அரசியல் வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஆயுதபாணியாக்கப்படுவதைச் சார்ந்துள்ளது.

இதற்கு ஒரு நனவுபூர்வமான சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் தலையீடு இல்லாமல் உலக தொழிலாள வர்க்கத்தால் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்ட முடியாது என்பதைப் போலவே, அமெரிக்க தொழிலாள வர்க்கமும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஒரு பொதுவான போராட்டத்தின் மூலமாக அல்லாமல், அது எதிர்கொள்கின்ற மிகப்பெரிய மற்றும் சிறப்பார்ந்த பணிகளைத் தீர்க்க முடியாது.

இத்தகைய உலகளாவிய இயக்கமானது, முதலாளித்துவ வர்க்கத்தின் தீராத பேராசை மற்றும் திருட்டுத்தனத்திற்காக, அதன் இலாபகர மற்றும் அதிகார முனைவிற்காக, மனிதயினத்தின் பிரமாண்ட உற்பத்தி ஆற்றலை அடிபணிய செய்யும் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையை, சூறையாடல் மற்றும் சுரண்டலின் அடிப்படையில் அமைந்த, ஒரு நாட்டை மற்றொரு நாட்டிற்கு எதிராக பிளவுபடுத்துகின்ற இந்த அமைப்புமுறையைத் தூக்கியெறிவதை அதன் நனவுபூர்வ இலட்சியமாக கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்க உள்நாட்டு போரின் தொடக்கத்தில், அந்தவொரு புரட்சிகர காலக்கட்டத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் காங்கிரஸிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டதைப் போல, இந்த தருணத்தில் சிரமங்கள் மலைபோல் குவிந்துள்ளன, இந்த தருணத்துடன் சேர்ந்து நாமும் எழ வேண்டும், என்றார். 1862 இல் இருந்த பணிகளை விட இப்போதிருக்கும் பணிகள் வித்தியாசமானவை தான் என்றாலும், அமெரிக்காவில் அடிமைத்தனத்தை இறுதியாக முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்க லிங்கன் விடுத்த அழைப்பு, நமது பணிக்கும் பொருந்துகிறது, அதாவது, முதலாளித்துவத்தை அகற்றி மனிதயின அபிவிருத்தியின் ஒரு புதிய சகாப்தத்திற்கு பாதையைத் திறந்துவிட சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆற்ற வேண்டிய பணிக்கும் அது பொருந்துகிறது.

இந்த கூட்டமே அத்தகைய பணிகளுக்கான ஒரு சக்திவாய்ந்த அடித்தளத்தை வழங்குகிறது. இணையத்தில் பதிவான கருத்துக்களை வாசிக்கையில், அவை அளப்பரியளவில் ஊக்குவிக்கின்றன. கனடா, பெரு, துருக்கி, அமெரிக்கா எங்கிலும், ஆஸ்திரேலியா, அபு தாபி, ஜேர்மனி, ஸ்காட்லாந்து, இந்தியா, பங்களதேஷ், பிரான்ஸ், ரோமானியா, தென் ஆபிரிக்கா, பிரிட்டன், சீனா, கானா மற்றும் எண்ணற்ற ஏனைய நாடுகளிலிருந்து நாம் பங்களிப்பாளர்களையும், கருத்துக்களையும் பெற்றுள்ளோம்.

ஏகாதிபத்தியம், பொருளாதார வளர்ச்சியில் ஒரு முற்போக்கான போக்கிற்குஅதாவது தேசம் மற்றம் அரசின் கட்டுக்களிலிருந்து விடுவித்து, ஓர் உலகளாவிய அளவில் மனிதகுல பொருளாதாரத்தைக் கட்டமைப்பதற்குபிரமாண்டமான வெளிப்பாட்டை வழங்குகிறது" என்று ட்ரொட்ஸ்கி "யுத்தமும் அகிலமும்" படைப்பில் எழுதினார்.

ஒரு மிக முக்கியமான அர்த்தத்தில், இந்த கூட்டமுமே கூட அத்தகைய போக்கின் முற்போக்கான வெளிப்பாடாக உள்ளது. இது புரட்சிகர சோசலிச சர்வதேசவாதம் என்ற ஒரு பொதுவான அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட ஒரேயொரு உலகளாவிய இயக்கமாகும்.

தோழர் டேவிட் நோர்த் குறிப்பிட்டதைப் போல, இந்த கூட்டத்தில் பங்கெடுத்துவரும் நாம் அனைவரும் தட்டிக்கழிக்க முடியாத பொறுப்புணர்வை" கொண்டுள்ளோம். இன்று இங்கே இணையத்தில் ஒன்றுகூடியுள்ள நாம் அனைவரும் ஒரு சர்வதேச இயக்கத்தின் மையமாக, மில்லியன் கணக்கான மக்களை வழிநடத்த கூடிய மற்றும், வழிநடத்தும் ஒரு தலைமையை உருவாக்குவோம். நாம் எதிர்கொள்ளும் சூழ்நிலையால் சுமத்தப்பட்ட ஈர்ப்பாற்றலுடன், நாம் இந்த பொறுப்பை நமது தோள்களில் சுமக்க வேண்டும்.

ஆகவே சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முறையிட்டு இக்கூட்டத்தை நான் நிறைவு செய்கிறேன்! உங்கள் பள்ளிக்கூடத்தில் அல்லது கல்லூரியில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பை (IYSSE) ஏற்படுத்துங்கள். உங்கள் தொழிற்சாலை அல்லது வேலையிடத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு பிரிவை கட்டமையுங்கள். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தை படித்து, சோசலிச புரட்சிக்கான உலக கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக இதில் இணைய முடிவெடுங்கள்!