World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The tragedy of Mediterranean migrants and the crimes of imperialism

மத்திய தரைக்கடல் புலம்பெயர்வோரின் துயரமும், ஏகாதிபத்திய குற்றங்களும்

Julie Hyland
May 14th, 2015

Back to screen version

இந்த உரையானது, மே 3 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி சர்வதேச மே தினக் கூட்டத்தில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசிய செயலாளர் ஜூலி ஹைலன்ட் வழங்கிய பேச்சின் உரைவடிவமாகும்.

மத்தியதரைக் கடலில் 800க்கும் அதிகமான புலம்பெயர் மக்கள் மூழ்கி உயிரிழந்த பயங்கரத்தை உலகம் அறிந்து இரண்டு வாரங்கள் தான் ஆகின்றன.

அப்படகு மூழ்கிய போது, லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்குள் செல்லும் அவர்களது முயற்சியில், ஒரு மீன்பிடி படகில் நெருக்கி அமர வைக்கப்பட்டிருந்தனர். அச்சம்பவத்தில் 28 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, நூற்றுக்கணக்கானோர் படகின் பொருட்கள் சேமித்து வைக்கும் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களது நுரையீரல்கள் நீரில் நிரம்பும் அந்த பயங்கரத்தை ஒருவரால் கற்பனை செய்யக்கூட தொடங்க முடியாது.

ஆனால் பெயர் தெரியாத மற்றும் முகந்தெரியாத பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்வோர்களில் இவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையே ஆகும். சுற்றுலா கையேடுகளில் தனக்கென இடம்பிடித்துள்ள இந்த மத்தியதரைக் கடல், அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கல்லறையாக மாறிவிட்டது. 2000 இல் இருந்து இத்தகைய பயண முயற்சியில் சுமார் 27,000 பேர் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரகரமான விதியைச் சந்திக்கும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,700க்கும் அதிகமாகும்.

இந்த துயர சம்பவம் குறித்த செய்தி பரந்த மக்களால் மனக்குமுறலுடனும் அனுதாபத்துடனும் எதிர்கொள்ளப்பட்டது. அவர்களது மரணங்களை விபத்தாக கருதுவதிற்கில்லை என்பதை பலரும் உணர்ந்திருந்தனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் குற்றகரமான போர் கொள்கைகளுக்கு பலியாகியிருக்கும் மில்லியன் கணக்கான மக்களில், இவர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. அக்கொள்கைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பாரிய மக்களைப் புலம்பெயருமாறு செய்து விட்டிருக்கின்றன.

பயணித்தவர்களில் பெரும்பான்மையினர் சிரியாவிலிருந்து வந்தவர்கள், ஆனால் லிபியா தான் முக்கிய இடைத்தரிப்பு மையமாக உள்ளது. இந்த நாடுகளில் போலி-இடதுகள் ஆதரவளித்த மனிதாபிமானத் தலையீடுகள் என்றழைக்கப்பட்டதன் யதார்த்தம் இதுதான்.

மத்தியதரைக் கடலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை ஓர் ஊக்குவிக்கும் காரணியாகி விடுவதாகவும், இடையில் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் கூட தாங்கள் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் ஆபத்தான பயணம் மேற்கொள்ள அது மக்களை ஊக்கப்படுத்துவதாகவும் கூறி, அதை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த ஆண்டு கைவிட முடிவெடுத்தது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால் மனிதாபிமானத் தலையீடுகள் என்ற கூற்றுகளெல்லாம் இன்னும் ஏமாற்றுத்தனமாக உள்ளன.

ஆகவே அவர்கள் மூழ்கட்டும் விட்டுவிடுவோம் என்பதே ஐரோப்பிய கோட்டையின் தாரக மந்திரமாகி விட்டது.

இந்த கொடூரமான குடியேற்ற கொள்கையானது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தையும் இளைஞர்களையும் நோக்கிய ஆளும் உயரடுக்கின் விரோதத்தின் இன்னொரு பக்கமாகும். போர், வறுமை மற்றும் ஒடுக்குமுறைக்குத் தப்பியோடும் மக்களை நோக்கி வெளிப்படுத்தப்படும் இந்த வக்கிர மனப்பான்மை, முடிவில்லாத சிக்கன நடவடிக்கைக்கு ஆட்படுத்தப்படுகின்ற கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நோக்கிய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மனோபாவத்தையே பிரதிபலிக்கிறது.

ஐரோப்பிய நிலைமை மேலும் மேலும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி காலத்தை ஒத்திருக்கிறது. 1940 இல் எழுதப்பட்ட ஏகாதிபத்தியப் போர் குறித்த நான்காம் அகிலத்தினது அறிக்கை பின்வருமாறு விளக்கியது: ”வீழ்ச்சியடைந்துவரும் முதலாளித்துவ உலகம் நெரிசல் மிகுந்ததாகி விடுகிறது. அமெரிக்கா போன்ற உலக சக்திக்கு ஒரு நூறு அகதிகளை அதன் நாட்டினுள் கூடுதலாக அனுமதிக்கும் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாகி விடுகிறது.”

அது தொடர்ந்து குறிப்பிட்டது, வீழ்ச்சியிலிருக்கும் முதலாளித்துவம் யூத மக்களை அதன் ஒவ்வொரு துவாரங்களிலிருந்தும் வெளியே கசக்கி தள்ள முனைந்து கொண்டிருந்தது.” ”இரண்டு பில்லியன் உலக மக்கள்தொகையில் பதினேழு மில்லியன் பேருக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவான பேருக்கு, இந்த பூமியில் இடம் காண இயலவில்லை! பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளுக்கும், மனிதனுக்காக பூமியையும் வானத்தையும் கூட வென்று விட்டிருக்கக் கூடிய தொழில்நுட்ப அற்புதங்களுக்கும் இடையே, முதலாளித்துவ வர்க்கம் நமது கிரகத்தை ஓர் துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக மாற்றி விட்டிருக்கிறது.”

இன்று செவ்வாய் கிரகத்தில் ஆய்வு திட்டங்கள் நடக்கின்ற காலத்தில், இணைய உலகின் இந்த காலத்தில், விசைப்பலகையின் ஒரேயொரு விசைத் தட்டலில் உலகின் எவ்விடத்திற்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பரிமாறப்படுகின்ற ஒரு காலத்தில், முதலாளித்துவமானது அது உருவாக்கியிருக்கும் சமூக கொடூரத்திற்கு பலியாகிறவர்களை மீண்டும் அதன் துவாரங்களிலிருந்து வெளியே கசக்கித் தள்ள முனைந்து வருகிறது.

அதேநேரத்தில் அவர்களது அந்த அவலநிலையை ஆளும் உயரடுக்கு அதன் இலாபவேட்டையை முன்னெடுப்பதற்கு சாக்குபோக்காக பயன்படுத்துகிறது. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அதன் முன்னாள் காலனிகள் மீது அதன் கட்டுப்பாட்டை மீண்டும் வலுப்படுத்த முனைகின்ற வேளையில், போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகள் உட்பட ஒரு பாரிய பொலிஸ்/இராணுவ நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகிறது.

ஒவ்வொரு இடத்திலும் இந்த முனைப்பானது, இழிவார்ந்த இனவாதம் மற்றும் தேசியவாதம் கொண்டு சட்டபூர்வமாக்கப்படுகிறது. நாஜிக்களின் யூத-விரோத மற்றும் இனவாத கேலிச்சித்திரங்களை பரப்புவதிலும், யூதர்களை ஒழிக்கப்பட வேண்டியவர்களாகக் கூறி சரீரரீதியாக அழிக்க வலியுறுத்துவதிலும் Der Stürmer பிரச்சார பத்திரிகை ஆற்றிய பாத்திரத்தை நூரெம்பேர்க் விசாரணைகள் வெளிச்சம்போட்டுக் காட்டின.

இன்று சார்லி ஹெப்டோவின் இஸ்லாமிய-விரோத ஆத்திரமூட்டல்கள், ”கருத்து சுதந்திரம் என்பதாக பாதுகாக்கப்படுகிறது, அதேவேளையில் ரூபர்ட் முர்டோக்கின் சன் செய்தித்தாள் கட்டுரையாளர் கேட்டி ஹோப்கின்ஸ் மத்தியதரைக் கடல் புலம்பெயர்வோரை கலாச்சாரமற்ற மனிதர்களின் கொள்ளைநோய் என்றும், ”கரப்பான்பூச்சிகள் என்றும் வர்ணித்து, துப்பாக்கியேந்திய கப்பல்கள் கொண்டு அவர்களை அவர்களது கரைகளுக்கே திருப்பி விரட்டியடிக்க வேண்டுமென கோருகிறார்.

ஆளும் உயரடுக்கினர் சமூக நெருக்கடியின் உண்மையான மூலகாரணத்தை மறைத்து, புதிய ஆக்கிரமிப்பு போர்களுக்கு நியாயம் கற்பிக்க முனைகிற வேளையில், தீவிர வலதுசாரிகளின் மொழியே மீண்டும் உத்தியோகப்பூர்வ பிரச்சாரமாகியுள்ளது.

இவ்விடயத்தில், பிரான்சின் தேசிய முன்னணி (National Front), ஜேர்மனியின் பெஹிடா (Pegida) மற்றும் ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி ஆகியவற்றுக்கு பாரிய ஊடக விளம்பரம் கொடுக்கப்படுவதுடன், அவற்றுக்கு மரியாதை அங்கியும் போர்த்தப்படுகிறது.

இத்தகைய அமைப்புகள் மக்கள் ஆதரவு பெற்றுள்ளதாக கூறிக் கொள்ள முடிகிறதென்றால், அதற்கு ஒரே காரணம் பழைய மற்றும் மதிப்பிழந்த தொழிலாளர் அமைப்புகளாக அழைக்கப்படுபவைகளின் காட்டிக்கொடுப்புகளையும் மற்றும் தற்போதுள்ள ஒழுங்குமுறைக்கு அவற்றின் ஆதரவையும் அவற்றால் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதால் தான்.

வலதுகளுக்கு மறுவாழ்வளிப்பதில் முக்கிய பாத்திரம் வகிப்பது, சமூக ஜனநாயகமாகும்.

சோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரான்சுவா ஹோலாண்ட் தேசிய முன்னணி தலைவரான மரின் லு பென்னை எலிசே அரண்மனைக்கு அழைக்கிறார். ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சிக்மார் காப்ரியேல், “வலதுசாரியாக இருப்பது அல்லது ஒரு ஜேர்மன் தேசியவாதியாக இருப்பது ஒரு ஜனநாயக உரிமை என்று பிரகடனம் செய்கிறார். பிரிட்டனில், புலம்பெயர்வோர் தொடர்பான மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதில் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியுடன் தொழிற்கட்சி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

தொழிற்சங்கங்களை பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தியை ஸ்தம்பிக்க செய்வதற்கும், அதனை தேசியவாத நிலைப்பாட்டில் பிளவுபடுத்தி வைப்பதற்கும் வேலை செய்கின்றன. அவை வெளித்தோற்றத்திற்கு எதிர்ப்பு காட்டுகின்ற இடங்களிலும், பிரிட்டிஷ், ஜேர்மன், பிரெஞ்சு அல்லது அமெரிக்க வேலைகளைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைளானது, ஊதியங்கள் மற்றும் வேலையிட நிலைமைகளில் மேலதிக வெட்டுகளுடன் பிணைக்கப்பட்டு, பாதாளத்தை நோக்கிய ஒரு முடிவற்ற பாய்ச்சலுக்கு வழிவகுக்கிறது.

உலகம் மீண்டும் ஒரு துர்நாற்றமெடுக்கும் சிறைச்சாலையாக ஆகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தச் சூழ்நிலை குறித்த எமது மதிப்பீட்டிற்கும், அவர்களது சொந்த பிற்போக்குத்தன அரசியலுக்கு நியாயம் கற்பிக்கும் நோக்கம் கொண்ட போலி-இடதுகளது நோக்குநிலையற்ற கருதுக்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

கிரேக்கத்தில், அதற்கு சொல்லப்படுவதைப் போல அது செய்யாவிடில் பாசிஸ்டுகள் அதிகாரத்தைக் கையிலெடுத்து விடுவார்கள் என்ற அடித்தளத்தில் சிரிசா, அது திணிக்கும் சிக்கன நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது! அனைத்திற்கு இடையிலும், கோல்டன் டோனுக்கு ஒப்பான வெளிநாட்டவர் விரோதம் கொண்ட வலதுசாரி சுதந்திர கிரேக்கர் கட்சியுடன் அது கூட்டணி வைத்துள்ளது.

இப்போதும் போலி-இடதுகள், “சிரிசாவை முன்மாதிரியாக முன்னெடுப்பதற்குரிய பாதையாக போற்றுகின்றன. ஐரோப்பாவெங்கிலும் தேசியவாத மற்றும் அதிவலது அமைப்புகளுடனான அவர்களது கூட்டணிகளை மற்றும் முன்மொழியப்பட்ட கூட்டணிகளை அவர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கின்ற நிலையில், “இடது மற்றும் வலதுக்கு இடையில் பாரம்பரியமாக இருந்து வந்த பிளவு என்பதில் இப்போது எந்த அர்த்தமும் இல்லை என்று அவர்கள் பிரகடனம் செய்கின்றனர்.

வலதுக்கும் இடதுக்கும் இடையிலான வித்தியாசங்கள் போலி-இடதுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமற்று போயிருக்கலாம். ஆனால் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை அவை மாபெரும் முக்கியத்துவம் கொண்டவையாகும். ஏனென்றால், ரோஸா லுக்செம்பேர்க்கின் வார்த்தைகளில் கூறுவதானால், “அவர்களின் [தொழிலாள வர்க்கத்தின்] தோல் தான் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.”

தேசியவாத மற்றும் பாசிச பிற்போக்குத்தனத்தின் அதிகரிப்பு என்பது முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறையின் நெருக்கடிக்கான முதலாளித்துவ வர்க்கத்தின் விடையிறுப்பாகும். ஒரு சோசலிச உலகத்துக்கான போராட்டத்தில் உழைக்கும் மக்களை சர்வதேசரீதியாக ஐக்கியப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட, அதன் சொந்த பதிலிறுப்பை தொழிலாள வர்க்கம் தயார் செய்தாக வேண்டும்.