தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை People at Chunangam in northern Sri Lanka protest against pollution of water வட இலங்கையில் சுண்ணாகத்தில் நீர் மாசடைவுக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர்Subash
Somachandran Use this version to print| Send feedback யாழ்ப்பாண மாவட்டத்தில் சுண்ணாகத்தில் உள்ள மக்கள், இலங்கை அரச நிறுவனமான மின்சார சபைக்காக மின் உற்பத்தியில் ஈடுபட்ட தனியார் நிறுவனமான நோர்தேண் பவர் கம்பனியில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலத்தடி நீர் மாசடைவுக்கு தீர்வு கோரி போராடி வருகின்றனர். மாசடைந்த கிணற்று நீர், தமது ஆரோக்கியத்துக்கும் விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றஞ் சாட்டுகின்றனர்.
சுண்ணாகம், இணுவில், ஏழாலை, மல்லாகம், தெல்லிப்பளை, கட்டுவன், அளவெட்டி, இளவாலை மானிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 100000 இற்கும் அதிகமான மக்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் சுண்ணாகத்திலும் உள்ளூர் மக்களால் ஜனவரி மாதம் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. பிரதேசத்தை சேர்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளும் மாசடைவைக் கண்டனம் செய்தும், தீர்வு கோரியும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். பவுசர்களின் மூலம் தண்ணீர் விநியோகப்பதற்கு அப்பால் அரசாங்கம் எந்தவொரு தீர்வையும் காணவில்லை. அரசாங்கம் செய்த பரிசோதனை முடிவுகளும் இன்னும் வந்து சேரவில்லை. வட மாகாண கமநல சேவைகள் அமைச்சர் பி. ஐங்கரநேசன், மருதங்கேணியில் உப்பு நீரை நன்னீராக்கும் உத்தேச திட்டத்தில் இருந்து குழாய் நீர் வழங்க முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். எவ்வாறெனினும், அத்தகைய ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. தற்போது நோர்தேன் பவர் கம்பனி நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும் ஆய்வுகளின் படியும், சுமார் ஆயிரம் கிணறுகளில் தண்ணீர் மாசடைந்துள்ளது. அரசாங்கம் தற்காலிகமாக வைத்துள்ள 250 தாங்கிகள் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு போதுமானதல்ல. இந்த தாங்கிகள் நீர் குடிப்பதற்கு மட்டுமே போதுமானது. மக்கள் சமைப்பதற்கும் குளிப்பதற்கும் மற்றும் ஏனைய தேவைகளுக்கும் எண்ணெய் கலந்த கிணற்று நீரையே பயன்படுத்துகின்றனர். மருத்துவ நிபுணரும் யாழ்ப்பாண மருத்துவ சங்க தலைவருமான டாக்டர். வல்லிபுரநாதன் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக அரசாங்க மற்றும் மாகாண அமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், எரிபொருள் கழிவுகளால் மட்டுமன்றி ஈயம் மற்றும் பார உலோகப் பொருட்களாலும் தண்ணீர் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2013 மற்றும் 2014 காலத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் யாழ்ப்பாண பிராந்திய ஆய்வு கூடத்தில், சுண்ணாகம் மின்சார நிலையத்தை சூழ உள்ள கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு அறிக்கைகளை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அந்த அறிக்கைகளும், பரிசோதிக்கப்பட்ட 50 கிணறுகளில் நான்கு கிணறுகளில் ஈயத்தின் அளவு அளவுக்கதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றன. கழிவு எண்ணெயில் நச்சுத் தன்மையான சேதனப் பொருட்கள் மாத்திரமல்லாது கட்மியம், ஈயம், நிக்கல், குரோமியம் மற்றும் ஆர்சனிக் போன்ற ஆபத்தான பார உலோகங்கள் கலந்து இருப்பது ஏனைய நாடுகளில் ஏற்பட்ட இது போன்ற சம்பவங்களில் அவதானிக்கப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் சுண்ணாகம் மின்சாரசபை வளாகத்தில் இருந்தே இந்தப் பெற்றோலிய கழிவுகள் பரவி வருவதை கிணறுகளில் செறிவு அடிப்படையில் அவராலும் சக ஆராய்ச்சியாளர்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாக அவர் உலக சோசலிச வலைத் தள நிருபர்களிடம் கூறினார். ஈயம் மாசுபடுத்தலானது குருதிச் சோகை, சிறுநீரக நோய் மற்றும் நரம்புப் பாதிப்புடன் சிறுவர்களை விரைவில் பாதிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள கிணறுகள் உடனடியாக அடையாளங் காணப்படுவதோடு பெற்றோலியக் கழிவுகள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து விரைவில் அகற்றப்பட வேண்டும். தனது சொந்த பிரச்சினையில் இருந்து தப்புவதற்கு முயற்சிக்காமல் சமூக அக்கறையுடன் கழிவுகள் புதைக்கப்பட்ட இடத்தை நிறுவனம் அடையாளங் காட்டினால், நச்சுக் கழிவுகளை அகற்றுவதோடு நிபுணர்களின் உதவியோடு விரைவாக தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்,” என அவர் கூறினார். தனது கடிதத்தில், ஈயம் கலந்த கிணறுகளுக்கு சீல்வைத்தல், போதுமானளவு தண்ணீர் விநியோகம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிகட்டிகள் பயன்படுத்துதல், விஞ்ஞானபூர்வமான விளக்கம் அளித்து துண்டுப் பிரசுரம் விநியோகித்தல் உட்பட ஆறு அவசர நடவடிக்கைகளை வைத்தியர் பிரேரித்துள்ளார். நீர் வழங்கல் சபையால் வழங்கப்படும் நீரிலும் எண்ணெய் கலந்திருப்பது பற்றிய குற்றச்சாட்டையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். “மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து கிணறுகளும் பரிசோதிக்கப்பட்டு ஈயம் மற்றும் ஏனைய பார உலோகங்கள் உள்ளதா என்ற ஆதாரங்களைப் பெற வேண்டும்”, என அவர் அறிவித்தார். இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அல்லது மத்திய அரசாங்க அமைச்சர்கள், டாக்டர் வல்லிபுரநாதனின் கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை. உலக சோசலிச வலைத் தளத்துடன் ஞாயிற்றுக் கிழமை பேசிய வல்லிபுரநாதன், “யாழப்பாண மருத்துவர்கள் சங்கமும் சுகாதாரத் திணைக்களமும் சேர்ந்து, தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன், கோப்பாய் முதல் தெல்லிப்பளை வரை உள்ள 25 கிணறுகளில் உள்ள நீரை பரிசோதித்ததாக தெரிவித்தார். ஆய்வின்படி அந்த தண்ணீரில் எண்ணெய் மற்றும் கிரீஸ் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை நிர்வாகம் வல்லிபுரநாதனையும் அவரது குழுவினரையும் பிரச்சினையைப் பற்றி கலந்துரையாட மார்ச் 13 சந்திப்பதாக வாக்குறுதியளித்திருந்த போதிலும், பின்னர் அதை அலட்சியம் செய்துவிட்டது. வட மாகாண கமநல சேவைகள் அமைச்சர் ஐங்கரநேசன், சில கிணறுகளே மாசடைந்துள்ளதாகவும் “சிலர் அதை மிகப்படுத்துவதாகவும்” தெரிவித்துள்ளார். அவரது கருத்து மக்களின் தலைவிதியை முற்றிலும் அலட்சியம் செய்வதாகும்.
அறிக்கைகளின் படி, சுமார் 400,000 லீட்டர் கழிவு எண்ணெய் நோர்தன் பவர் கம்பனியினால் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் அரசுடமையான இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வளாகத்திலேயே இயங்குகின்றது. சண்டே டைம்ஸ் பத்திரிகையுடன் பேசிய சுண்ணாகம் உள்ளூராட்சி மன்ற அபிவிருத்தி அலுவலர் ஆர். ரமேஸ்குமார், கழிவு எண்ணெயை சேகரிக்க 60 அடி ஆழம் கொண்ட மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டிருந்ததை தான் கண்டதாக கூறினார். ஆனால் விசாரணையின் போது, அந்தக் கிணறுகள் எவ்வளவோ காலத்துக்கு முன்னர் மூடப்பட்டுவிட்டதாக தனக்கு அறிவிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். தனியார் நிறுவனத்தின் செயற்பாடு பற்றிய கேள்வி எழுப்பப்படுவதால் மின்சார சபை இந்தப் பிரச்சினையை அலட்சியம் செய்துள்ளது. நோர்தேன் பவர் நிறுவனத்துக்கு முன்னதாக 2009 வரை அக்ரிகோ கம்பனி இங்கு மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. நோர்தன் பவர் பல ஆண்டுகளாக இயங்கி வந்த போதிலும், 2013ம் ஆண்டே அது சுற்றுச் சூழல் அதிகார சபையின் ஒப்புதலுடன் இலங்கை முதலீட்டுச் சபை ஊடாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை பெற்றுள்ளது. எவ்வாறெனினும், இந்த அதிகாரிகள் பிரச்சினையை முழுமையாக அலட்சியம் செய்துள்ளமை வெளிப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு மக்கள் நீண்ட காலமாகவே, தண்ணீர் பற்றாக்குறையையும் மாசடைதல் பிரச்சினையையும் எதிர்கொண்டு வந்துள்ளனர். ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் இதைத் தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை. ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனமானது யாழ்ப்பாண நகர கிணற்றுத் தண்ணீரில் கழிவு நீர் கலந்துள்ளதால் குடிப்பதற்கு உகந்தது அல்ல என 1990ம் ஆண்டே கண்டறிந்திருந்தது. குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகளால் மாசடைந்துள்ளதாகவும் நைத்ரேட் மற்றும் கல்சியமும் அதிகம் அடங்கியுள்ளதாகவும் அது கண்டறிந்தது. யாழ்ப்பாணத்தின் இன்னொரு பாகமான தென்மாராட்சி கிராமங்களில உள்ள தண்ணீர் மஞ்சள் நிறமாக உள்ளது. போர் காரணமாக குளங்கள் அணைகள் சிதைக்கப்பட்டதாலும் பராமரிக்கப்படாமையாலும் யாழ்ப்பாணத்தை அண்டிய தீவுகளில் உள்ள நீரும் உப்பு நீரால் மாசடைந்துள்ளது. இந்த தீவுகளில் வாழும் அநேகமானவர்கள் வறிய விவசாயிகளும் மீனவர்களுமாவர். பல தசாப்தகால எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத போரைத் தொடர்வதில் மட்டுமே அக்கறை காட்டிவந்தன. புலிகள் 2009ல் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. இப்போது வட மாகாண சபையை ஆட்சி செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது குழுக்களை நியமிப்பது, நிலத்தில் ஊடுருவும் ராடார் இயந்திரத்திற்கு நிதி ஒதுக்குதல் மற்றும் ஏனைய தொழில்நுட்ப உபகரணங்களை வாங்க நிதி திரட்டுதல் போன்ற மக்களின் சீற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே பிரேரித்து வருகின்றது. எமது நிருபர்களுடன் பேசிய முன்னாள் மின்சார சபை ஊழியர் ஒருவர், தான் சேவையில் இருக்கும் போது, கழவு நீர் அகற்றப்பட்ட இடத்தை பார்த்துள்ளதாக கூறினார். அது சுமார் 5 அடி ஆழம் கொண்ட குளம் போன்றது என்றார். ஓய்வுபெற்ற ரயில் ஊழியர் கந்தசாமி, சுண்ணாகம் தண்ணீர் நெருக்கடி தோன்றியதை அடுத்து, “அதிகாரிகள் எங்களிடம் வந்து பேசுகின்றனர், நடைமுறையில் எதுவும் இடம்பெறவில்லை. தண்ணீரின் ருசியும் மணமும் மாறியுள்ளது. நாம் வழமையான கிணற்றைப் பயன்படுத்தியதால் மாற்றத்தை அவதானிக்கவில்லை. மக்கள் சிறுநீரக நோய், சரும எரிச்சல் மற்றும் ஏனைய வியாதிகளை அனுபவிப்பது இதன் காரணமாக இருக்கக் கூடும்,” என்று அவர் கூறினார். இந்த விடயங்கள் வெளியில் கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் கோருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தொழிற்துறையால் நீர் மாசடைதல் ஒரு தனியான பிரச்சினை அல்ல. 2013ல் கொழும்பு புறநகர் பகுதியான வெலிவேரியவில் நடந்த ஆர்ப்பாட்டத்தை நசுக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அணிதிரட்டிய இராணுவம் மூன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றது. அவர்கள் ஹேலிஸ் குழுமத்துக்கு சொந்தமான வெனிக்ரோஸ் ரப்பர் கையுறை உற்பத்தி நிலையத்தால் நீர் மாசுபடுத்தப்பட்டதை எதிர்த்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கம் மக்களை அன்றி கம்பனியையே பாதுகாத்தது. பின்னர் எதிர்ப்பு தொடர்ந்த நிலையில், வெலிவேரிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் புதிய இடத்தில் உள்ள மக்களையும் அலட்சியம் செய்து, அருகில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்துக்கு இந்த உற்பத்தி நிலையம் இடம் மாற்றப்பட்டது. நிறுவனங்கள் தமது இலாப நலன்களில் மட்டுமே அக்கறை காட்டுவதோடு அரசாங்கம் அவற்றைப் பாதுகாக்கின்றது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி சிறிசேனவின் இப்போதைய அரசாங்கமும் வட மாகாண சபையும் இதில் வேறுபட்டவை அல்ல |
|
|