தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Washington prepares for World War III வாஷிங்டன் மூன்றாம் உலக போருக்கு தயாரிப்பு செய்கிறதுPatrick
Martin Use this version to print| Send feedback அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அமைப்பு மூன்றாம் உலக போருக்கான திட்டமிட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறது. பென்டகனை பொறுத்த வரையில், சீனா மற்றும்/அல்லது ரஷ்யாவுடன் ஓர் இராணுவ மோதல் தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த நோக்கமே அதன் தந்திரோபாய மற்றும் மூலோபாய திட்டமிடலின் உந்துசக்தியாக மாறுகிறது. செவ்வாயன்று மூன்று காங்கிரஸ் விசாரணைகள் (hearings) இந்த யதார்த்தத்தை எடுத்துக்காட்டின. செனட்டின் இராணுவ விசாரணைக்குழு காலையில், இணையவழி போர்முறை குறித்த ஒரு நீண்ட விசாரணை நடத்தியது. மதியம், பிரதிநிதிகள் சபையின் ஆயுதப்படைகளின் ஒரு துணைக்குழு விமானந்தாங்கி போர்க்கப்பல்களின் அமெரிக்க படையின் தற்போதைய அளவு மற்றும் ஆயத்தப்படுத்தல் குறித்து விவாதித்தது. அதேவேளையில் அதே குழுவின் மற்றொரு துணைக்குழு அமெரிக்க அணுஆயுதங்களை நவீனமயப்படுத்துவது பற்றி விவாதித்தது. அந்த விசாரணைகளை உலக சோசலிச வலைத் தள செய்தியாளர் ஒருவரும் பார்வையிட்டார் என்ற வகையில், அவற்றைக் குறித்த ஒரு விரிவான கணக்கை WSWS எதிர்வரும் நாட்களில் வழங்கும். ஆனாலும் ஒருசில குறிப்பிட்ட ஆரம்ப விபரங்கள் இங்கே வழங்கப்படுகின்றன. அந்த விசாரணைகளில் எதுவுமே போருக்கான அமெரிக்க தயாரிப்புகளது பரந்த தாக்கங்களை குறித்தோ, அல்லது அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு மிகப்பெரிய போரானது மனிதகுல உயிர்வாழ்விற்கும் மற்றும் நமது பூமியில் உள்ள உயிர்களுக்குமே கூட என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை குறித்தோ விவாதிக்கவில்லை. அதற்கு நேர்மாறாக, அந்த விசாரணைகள் மூன்றாம் உலகப் போரை ஒரு நாளாந்த விடயமாக காட்டுவதற்கான முன்னுதாரணங்களாக இருந்தன. சீனா மற்றும்/அல்லது ரஷ்யா உடனான ஓர் அமெரிக்க போர் ஒரு நிச்சயமான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டது, அத்துடன் சாட்சியங்களின் விளக்கங்களும், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கேள்விகளும், அதுபோன்றவொரு மோதலில் அமெரிக்கா வெற்றிபெறுவதற்கான சிறந்த அணுகுமுறைகளை குறித்தே அக்கறை கொண்டிருந்தன. அந்த விசாரணைகள் நீண்டகால நிகழ்வுபோக்கின் நிரந்தர கூறுகளாக உள்ளன. சாட்சியம் அளித்தவர்கள் அவர்களது கடந்தகால எழுத்துக்கள் மற்றும் அறிக்கைகளை குறிப்பிட்டனர். செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் சாட்சியம் அளித்த ஏனையவர்களது முந்தைய விளக்கங்களைக் குறிப்பிட்டுக் காட்டினர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இணையவழி ஆயுதங்கள், விமானந்தாங்கிய போர்க்கப்பல்கள், குண்டுவீசிகள், ஏவுகணைகள் மற்றும் எஞ்சிய ஆயுதங்களின் பரந்த அணிவரிசையை பயன்படுத்தும் ஒரு நீண்டகால உலக போருக்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன. அவை தென் சீனக் கடலிலோ, உக்ரேன், சிரியா அல்லது வேறெங்குமோ நடக்கும் சமீபத்திய சம்பவங்களுக்கான ஒரு பிரதிபலிப்பல்ல. ஒவ்வொரு விசாரணையும் ஒப்பீட்டளவில் ஒரு சிறிய கால இடைவெளிக்குள், அதாவது தசாப்தங்கள் அல்ல சில ஆண்டுகளிலேயே, மற்றொரு வல்லரசுடன் (சிலவேளைகளில் பெயரிடாமலும், சிலவேளையில் வெளிப்படையாக சீனா அல்லது ரஷ்யா என்று பெயரிட்டும்) ஒரு மிகப்பெரிய அமெரிக்க மோதலை முன்கணித்திருந்தது. பொதுக் கருத்துக்களுக்குள் கொண்டு செல்லும் நோக்கங்களுக்காக, ஓயாது மிகைப்படுத்தப்பட்ட பயங்கரவாத அபாயம் குறைத்துக் காட்டப்பட்டது, ஓரளவிற்குக் கைவிடப்பட்டும் இருந்தது. இணையவழி போர்முறை மீதான செனட் விசாரணையின் ஒரு புள்ளியில், நியூ ஹாம்ப்ஷைர் இன் ஜனநாயக கட்சி செனட்டர் ஜேன் ஷாகீன் (Jeanne Shaheen) இன் நேரடியான கேள்விக்கு விடையிறுப்பாக, அக்குழுவின் சாட்சியங்கள் அனைவருமே அவர்களது மிகப்பெரிய கவலையே தேசிய-அரசுகள் தான், பயங்கரவாதிகள் அல்ல என்று அறிவித்தனர். அதே விசாரணையில் சாட்சியம் அளித்தவர்களில் ஒருவரான டாக்டர் பீட்டர் டபிள்யூ சிங்கர், வாஷிங்டன் சிந்தனைக் குழாமான New America இன் "மூலோபாய மற்றும் மூத்த ஆய்வாளராக" பட்டியலிடப்பட்டார். அவர் அவரது விளக்கவுரைக்கு "மூன்றாம் உலக போரின் படிப்பினைகள்" என்று தலைப்பிட்டிருந்தார். ஓர் ஊகிக்கப்பட்ட மோதல் மீது பின்வரும் விவரிப்போடு அவரது தயாரிக்கப்பட்ட அறிக்கையைத் தொடங்கினார்: “அமெரிக்கா மற்றும் சீனப் போர்க்கப்பல்கள், பீரங்கிகளில் இருந்து, கடற்படை ஏவுகணைகள் வரையில் லேசர்கள் வரையில் ஒவ்வொன்றையும் வீசி, கடலில் சண்டையிடுகின்றன. பலம்வாய்ந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் வானில் ஒன்றையொன்று குதறுகின்றன, தானியங்கி டிரோன்களை அவற்றின் விமான ஓட்டிகளாக கொண்டு பறக்கவிடுகின்றன. ஷாங்காய் மற்றும் சிலிக்கான் வலி (Silicon Valley) டிஜிட்டல் களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. பூமிக்கு வெளியே நடக்கும் விண்வெளி சண்டைகள், பூமியில் யார் வெல்வார்கள் என்று முடிவு செய்கின்றன. இத்தகைய காட்சிகள் எல்லாம் ஒரு நாவலில் நடப்பதா அல்லது நாளை மறுநாள் நிஜமான உலகில் உண்மையில் நடக்கவிருப்பதா? இதற்கு பதில் இரண்டுமே தான்.” ஒரு மிகப்பெரும் போர் ஏன் ஏற்படுகிறது அல்லது அதை வெல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதைக் குறித்து அந்த விசாரணைகளில் எதுவுமே விவாதிக்கவில்லை. அணு-ஆயுத சக்திகளுக்கு இடையிலான ஓர் உலக போரில் "வெற்றி" பெறுவதென்பது ஓர் அர்த்தமுள்ள கருத்துரு என்று ஏற்றுக்கொண்டதை யாருமே சவால் செய்யவில்லை. அமெரிக்க இராணுவம் மேலோங்கியிருக்க என்ன தொழில்நுட்பங்கள், உடைமைகள் மற்றும் மனித ஆதாரவளங்கள் அவசியப்படுகின்றன என்பதிலேயே ஒட்டுமொத்தமாக அந்த விவாதம் அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. இது ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு எந்தளவிற்கு உண்மையாக பொருந்துகிறதோ அதேயளவிற்கு அவர்களது சமதரப்பு குடியரசு கட்சியினருக்கும் பொருந்துகிறது. வித்தியாசம் என்னவென்றால், இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் குழு அல்லது துணைக்குழுவின் தலைவர் பதவியில் வழமைபோல் எதிரெதிர் ஆசனங்களில் அமர்ந்திருந்தனர். அவ்வாறு அமர்ந்து இருப்பதற்கான ஏற்பாடு மட்டும் இல்லையென்றால், அவர்களது கேள்விகளிலிருந்தும் மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களிலிருந்தும் அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கே வழியில்லாமல் போயிருக்கும். அதனதன் அரசியல் கண்ணோட்டங்களோடு அரசியலில் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் அவ்விரு கட்சிகளும் ஆழமாக பிளவுபட்டிருப்பதாக வாஷிங்டனைக் குறித்த ஊடகங்களின் சித்தரிப்புக்கு முரண்பட்ட விதத்தில், அங்கே இந்த மிக அடிப்படையான பிரச்சினைகள் மீது, ஒரு புதிய ஏகாதிபத்திய உலக போருக்கு தயாரிப்பு செய்வதில் இரண்டு கட்சிகளுமே உடன்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பான பெருவணிகங்களது இந்த அரசியல் பிரதிநிதிகளின் ஒருமித்த கருத்தொற்றுமை, எவ்விதத்திலும், இந்த போர் உந்துதல் பாதையில் அங்கே முட்டுக்கட்டைகள் இல்லை என்பதை எடுத்துக்காட்டவில்லை. ஒவ்வொரு விசாரணையும், வெவ்வேறு வழிகளில், அமெரிக்க ஏகாதிபத்தியம் முகங்கொடுத்துள்ள ஆழமான நெருக்கடியுடன் இறுக்கமாக பிணைந்திருந்தது. இந்த நெருக்கடி இரண்டு பிரதான கூறுபாடுகளைக் கொண்டுள்ளது: அமெரிக்காவின் பிரதான போட்டியாளர்களோடு ஒப்பிடுகையில் அதன் வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதார சக்தி, அடுத்து தொழிலாள வர்க்கத்தின் மற்றும் குறிப்பாக இளைஞர்களின் ஆழ்ந்த அன்னியப்படலுடன் சேர்ந்த, அமெரிக்க சமூகத்தின் உள்முரண்பாடுகள். விமானந்தாங்கி போர்கப்பல்கள் மீதான பிரதிநிதிகள் சபை துணைக்குழுவில், அவைத்தலைவர் குறிப்பிடுகையில், சாட்சியம் அளித்தவர்களில் ஒருவரான ஓர் உயர்மட்ட கடற்படை அட்மிரல் "உலகிலுள்ள 15-விமானந்தாங்கி போர்க்கப்பலில், 11-விமானந்தாங்கி போர்க்கப்பல் கடற்படையைக்" கொண்டிருப்பது பற்றிய கவலையை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், அங்கே நிறைய சவால்களை வாஷிங்டன் முகங்கொடுத்துள்ளது, உண்மையில் தற்போதைய அளவை விட இரண்டு மடங்காக 21 விமானந்தாங்கி போர்க்கப்பல்களின் ஒரு கடற்படை அவசியப்படுகிறது, அது அமெரிக்காவை விட நிறைய ஆதாரவளங்களைக் கொண்ட ஒரு நாட்டையே கூட திவாலாக்கிவிடும் என்றார். இணையவழி பாதுகாப்பு மீதான செனட் விசாரணை, அமெரிக்க இராணுவவாதத்தின் உள்-சவால்களை சுருக்கமாக அலசியது. முதலில் சாட்சியம் அளித்தவரான, தேசிய பாதுகாப்பு முகமையின் முன்னாள் இயக்குனரும் மற்றும் பென்டகனின் இணையவழி கட்டளையகத்தின் முன்னாள் தலைவருமான ஓய்வூபெற்ற தளபதி கீத் அலெக்சாண்டர், NSA ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டன் மற்றும் இராணுவ சிப்பாய் செல்சியா மேனிங்கால் கசியவிடப்பட்ட இரகசியங்களின் விளைவுகளைக் குறித்து புலம்பினார். அமெரிக்க இராணுவம் முகங்கொடுக்கும் மிக ஆழ்ந்த அச்சுறுத்தல்களில் ஒன்று “உள்ளிருந்து தாக்குபவர்களாவர்" என்றவர் அறிவித்தார். மேற்கு வேர்ஜினியாவின் ஜனநாயக கட்சி செனட்டர் ஜோ மான்சின், ஸ்னோடனைக் குறிப்பிட்டு அவரிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பினார், “அவரை நாம் தேச துரோகியாக கையாளலாமா?” அலெக்சாண்டர் விடையிறுத்தார், “அவரை ஒரு தேச துரோகியாக தான் கையாள வேண்டும், அவ்விதமாகவே அவருக்குத் தண்டனை வழங்க வேண்டும்.” அந்த வெளிப்படையான ஒப்புதலால், மான்சின் மனம் மகிழ்ந்து தலையசைத்தார். சாட்சியம் அளித்தவர்களும் செனட்டர்களும் "உள்ளிருக்கும் எதிரியை" அடையாளப்படுத்த ஸ்னோவ்டன் மற்றும் மேனிங்கின் பெயர்களைப் பயன்படுத்துவதற்குத் தேர்ந்தெடுத்த போதினும், அவர்கள் இரகசியங்களை வெளியீடும் ஒருசில தனிநபர்களை விட, ஒரு பரந்த போருக்கான உள்நாட்டு எதிர்ப்பு குறித்து தெளிவாக நனவுபூர்வமாக இருந்தார்கள். இது வெறுமனே, ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, லிபியா, சிரியா, யேமன் மற்றும் வட ஆபிரிக்கா எங்கிலும் 14 ஆண்டுகளின் இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு உழைக்கும் மக்களிடையே ஆழமாக வேரோடியிருக்கும் நிராகரிப்பு அது எவ்வளவுதான முக்கியமானதாக இருந்தாலும் சாதாரணமாக அதை வெளிப்படுத்தும் விடயமில்லை. அமெரிக்காவிற்கும் சீனா அல்லது ரஷ்யா போன்ற பிரதான சக்திகளுக்கும் இடையிலான ஒரு போர், முழு அளவிலான அணுஆயுத மோதல் தீவிரமடைவதைத் தடுத்துவிடலாம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, அது அமெரிக்க சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் மனிதவளம் ஆகிய இரண்டு ஆதாரவளங்களையும் பிரமாண்டமாக ஒன்றுதிரட்டுவதுடன் சம்பந்தப்பட்டிருக்கும். அது அமெரிக்க மக்களின் வாழ்க்கைத் தரங்கள் இன்னும் அதிகளவில் படுமோசமாக குறைக்கப்படும் என்பதை அர்த்தப்படுத்துவதுடன், பிரதானமாக தொழிலாள வர்க்கத்தின் பிள்ளைகள் மீது தவிர்க்கவியலாமல் விழும் மிகப்பெரும் இரத்தந்தோய்ந்த இழப்புகளும் அதனுடன் சேரும். வியட்நாம் போருக்குப் பின்னர், அமெரிக்க இராணுவம், கட்டாய இராணுவச்சேவையின்றி, ஒட்டுமொத்தமாக-தன்னார்வ படையாக (all-volunteer force) செயல்பட்டுள்ளது. கட்டாய இராணுவச்சேவையானது 1960களில் மற்றும் 1970களின் தொடக்கத்தில் பரந்த எதிர்ப்பு மற்றும் நேரடி எதிர்ப்பைத் தூண்டியிருந்தது. சீனா மற்றும் ரஷ்யா உடன் அணுஆயுதமற்ற ஒரு போர் என்பதே கூட கட்டாய இராணுவச்சேவையை மீள்நடைமுறைப்படுத்துவதையும் மற்றும் போரில் மனித இழப்புகளை அமெரிக்காவின் ஒவ்வொரு வீட்டுக் குடும்பங்களுக்குள் கொண்டு வருவதையும் அர்த்தப்படுத்தும். அத்தகைய நிலைமைகளின் கீழ், பொலிஸ் அதிகாரங்கள் எந்தளவிற்கு பலமானதாக இருக்கும் என்பதோ, போர்-எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிரான ஒடுக்குமுறை முறைமைகள் எந்தளவிற்கு எடுக்கப்படும் என்பதோ விடயமல்ல, அமெரிக்க சமூகத்தின் ஸ்திரப்பாடு சோதனைக்குட்படுத்தப்படும். அமெரிக்க ஆளும் உயரடுக்கு அதன் அரசியல் விளைவுகளைக் குறித்து ஆழ்ந்து கவலை கொண்டுள்ளது. மேலும் அது அவ்வாறு கவலை கொள்ளவும்வேண்டும். கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்: |
|
|