தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ் Syriza launches drastic attack on pensions under terms of EU bailout of Greece கிரீஸிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிபந்தனைகளின் கீழ், ஓய்வூதியங்கள் மீது சிரிசா கடுமையான தாக்குதல் தொடுக்கிறது
By Alex Lantier Use this version to print| Send feedback இன்று அதிகாலை கிரேக்க சட்டமன்ற பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றிய சிக்கன பிணையெடுப்பு நிபந்தனைகளின் கீழ், பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸால் ஜூலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட சமூக வெட்டுக்களில் முதல் சுற்றை நடைமுறைப்படுத்த வாக்களித்தனர். அந்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்காக 300 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், அவரது சிரிசா கட்சி (“தீவிர இடது கூட்டணி”) மற்றும் அதி-வலது சுதந்திர கிரேக்கர்கள் கட்சிக்கு இடையிலான கூட்டணி அரசாங்கத்தின் 154 சட்டமன்ற பிரதிநிதிகளை நம்பியிருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு பிணையெடுப்பில் முதல் பங்கான 2 பில்லியன் யூரோவைக் கிரீஸ் பெறுவதற்கு, "முன் நடவடிக்கைகள்" என்று கூறப்படுவதை மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கிரீஸைக் கோரியது. இத்தொகை கிரீஸின் மொத்த 86 பில்லியன் யூரோ இறையாண்மை கடனோடு சேரும். இந்த "முன் நடவடிக்கைகளில்", ஆழ்ந்த ஓய்வூதிய வெட்டுக்கள், விவசாயிகளுக்கான வரி உயர்வுகள், கிரேக்க பிராந்திய விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கல் மற்றும் வரி ஏமாற்றுக்களை தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளடங்குகின்றன. இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட அடிப்படை சமூக உரிமைகளைத் துடைத்தழிப்பதற்கு, சிரிசா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக வேலை செய்து வருகிறது. வேலைவாய்ப்பற்றவர்கள் அவர்களது சொந்த மருத்துவ கவனிப்புக்கு அவர்களே செலவிட வேண்டுமென செய்ததன் மூலமாக அனைவருக்குமான மருத்துவ பாதுகாப்பை நீக்குவதென 2011 இல் ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க அரசாங்கமும் ஒப்புக்கொண்டிருந்த நிலையில், ஓய்வூதிய அரசு நிதியளிக்கும் (publicly funded retirement) உரிமையை ஒழிப்பதற்கு நிகரான ஒன்றை சிரிசா இப்போது தயார் செய்து வருகிறது. முன்கூட்டிய ஓய்வூதிய பெறுவோர் மீதான தண்டனைகளை அதிகரித்திருப்பதன் மூலமாக மற்றும் மாத ஓய்வூதிய தொகையை 486 யூரோவிலிருந்து 392 யூரோவாக குறைக்கும் வகையில் புதிய ஓய்வூதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தில் மேற்கொண்டு 20 சதவீத வெட்டுக்களைத் திணித்திருப்பதன் மூலமாகவும் ஓய்வூதியங்கள் வெட்டப்படுகின்றன. இந்த வெட்டின் விளைவுகள் பேரழிவுகரமாக இருக்கும். மொத்த கிரேக்க ஓய்வூதியதாரர்களில் 45 சதவீதத்தினர் உத்தியோகபூர்வ வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர், மேலும் கிரீஸில் 2009 இல் 1,350 யூரோவாக இருந்த சராசரி மாத ஓய்வூதியம் இத்தகைய வெட்டுக்களின் விளைவாக இந்தாண்டு 833 யூரோவாக சரிந்துவிட்டது. அனைத்திற்கும் மேலாக, பெரும்பாலும் ஓய்வூதியதாரர்கள் மூலமாகவே ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரேயொரு வருமானம் கிடைக்கிறது என்பதால் ஓய்வூதிய வெட்டுக்கள் என்பது மில்லியன் கணக்கான அனைத்து வயதினரின் வாழ்வையும் சீரழிக்கும். எவ்வாறிருப்பினும் இத்தகைய நடவடிக்கைகள், ஓய்வூதியங்கள் மீது இன்னும் அதிக தாக்குதல்களுக்காக அடுத்த வாரம் விவாதிக்கப்பட இருப்பதன் முன்னறிவிப்பு மட்டுமேயாகும். ஒரு அடிப்படை ஓய்வூதியம் மற்றும் ஒவ்வொருவரும் பங்களிப்புசெலுத்தும் ஓய்வூதியம் என இரண்டையும் உள்ளடக்கிய ஒரு கலப்பு முறையைக் கொண்டு தற்போதைய ஓய்வூதிய முறையை பிரதியீடு செய்ய வேண்டுமென வியாழனன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கியோர்ஜியோஸ் காட்ரௌவ்காலோஸ் இற்கு அனுப்பிய பரிந்துரைகள் குறிப்பிடுகின்றன. தற்போது மாதத்திற்கு 360 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை ஓய்வூதியம் (basic pension) என்பது செல்வவளமுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கவேண்டிய முழு அளவிலிருந்து குறைவாக இருக்கும்வகையில் தகுதியுடையவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கும். அதேவேளையில் பங்களிப்புசெலுத்தும் ஓய்வூதியத்தின் (contributory pension) அளவு ஓய்வூதியதாரர் அவர் வேலையிலிருக்கும் போது வழங்கிய ஓய்வூதிய பங்களிப்பின் அளவைப் பிரதிபலிக்கும். இந்தாண்டின் இறுதி வாக்கில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்பிப்பதற்கு சிரிசா வாக்குறுதி அளித்துள்ள இந்த ஓய்வூதிய சீர்திருத்தம், “சமூக பங்காளிகள்" விவாதிப்பதற்காக, அதாவது கிரேக்க முதலாளிமார்களின் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் விவாதிப்பதற்காக சமர்பிக்கப்பட உள்ளது. அந்த பரிந்துரையைத் தயாரித்த "மேதைகள்" என்றழைக்கப்படுவோரின் குழு, இத்தகைய மக்கள்விரோத ஓய்வூதிய வெட்டுக்கள் ஓய்வூதியதாரர்களுக்கு என்ன அர்த்தப்படுத்துகிறது என்பதை திட்டவட்டமாக குறிப்பிடவில்லை. அவர்கள் முன்மொழிந்த திட்டத்திற்கான நிதிகள் குறித்து ஒரு முழுமையான ஆய்வறிக்கையை வழங்க அவர்கள் பணிக்கப்பட்டிருந்த போதினும், வலது-சாரி தினசரி Kathimerini கடிந்துரைக்கையில், அவர்களது அறிக்கையில் "எந்த புள்ளிவிபரங்களும் இல்லை, மேலும் ஓய்வூதிய வெட்டுக்கள், புதிய வரிகள், பங்களிப்புகளைச் சீரமைத்தல் மற்றும் ஓய்வூதிய மட்டங்களுக்கான வருவாய் தகுதிவகைகள் போன்ற சிக்கலான சகல பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கமே முடிவெடுக்க விடப்பட்டுள்ளது.” அந்த நிபுணர்கள் தேவையான புள்ளிவிபரங்களைச் சேகரிக்க போதிய கால அவகாசமில்லையென தெரிவித்தனர். இந்த புள்ளியானது, அத்திட்டம் கிரேக்க மக்களின் சமூக தேவைகளைக் குறித்த ஒரு புறநிலை ஆய்வைக் கொண்டு அல்ல, மாறாக பொருளாதாரரீதியில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சிரிசாவினது நாசகரமான நிகழ்ச்சிநிரலைக் கொண்டு கட்டளையிடப்படுகிறது என்பதையே அடிக்கோடிடுகிறது. எவ்வாறிருந்த போதினும், புள்ளிவிபரங்கள் இல்லாததற்கு இடையிலும், இத்தகைய பரிந்துரைகள் தெளிவாக பொது ஓய்வூதியங்களை அழிப்பதற்கான அரசியல் அடித்தள வேலையை அமைக்க நோக்கம் கொண்டுள்ளது. தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுக்கும் அடிப்படை ஓய்வூதிய முறையைக் கொண்டு, அதில் வசதியான மற்றும் செல்வவளமான வரிசெலுத்துவோரது ஓய்வூதியங்களிலிருந்து ஒரு சிறிய விகிதத்தைப் வழங்க செய்வதன் மூலமாக, உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் அடிப்படை ஓய்வூதியங்களுக்கான உதவியை இல்லாதழிக்கும்வகையில், அவற்றை ஒட்டுமொத்தமாக இல்லாதுசெய்வதற்கான ஒரு நீண்டகால உந்துதலுக்கு களம் அமைக்கிறது. கிரேக்க நாடாளுமன்றத்தில் "முன் நடவடிக்கைகள்" மீதான விவாதம் ஓர் எரிச்சலூட்டும் கேலிக்கூத்தாகும், இதில் ஒவ்வொரு பிரதான கட்சியும் ஆழ்ந்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளை ஆதரித்த முன்வரலாறைக் கொண்டுள்ளன. சிப்ராஸ் நாடாளுமன்றத்தின் முன்தோன்றி, வலதுசாரி எதிர்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து வந்த தந்திரோபாய விமர்சனங்களிலிருந்து அவரது நிகழ்ச்சிநிரலைப் பாதுகாப்பதற்காக உரையாற்றினார். “அங்கே எந்த புதிய நடவடிக்கைகளும் இல்லை, ஆகஸ்டில் நாம் உடன்படிக்கைக்கு வாக்களித்த போது நம் அனைவருக்கும் தெரிந்திருந்த அதே கடுமையான நடவடிக்கைகள் தான் உள்ளன,” என்றார். “இன்று நீங்கள் துல்லியமாக என்ன பாசாங்குத்தனம் செய்கிறீர்? அந்த புரிந்துணர்வுக்கு எதிராகவா? ஐந்தாண்டுகளாக நீங்கள் பேரம்பேசாமல் கடன் வழங்குனர்கள் உங்களுக்கு என்னவெல்லாம் கூறினார்களோ அதையெல்லாம் செய்ய உடன்பட்டிருந்தீர்கள்,” என்றார். சிப்ராஸின் வலதுசாரி விமர்சனங்களின் பாசாங்குத்தனம், சிப்ராஸினதும் சிரிசாவினதும் பாசாங்குதனங்களையெல்லாம் சிறியதாக்கி விடுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய சிக்கன புரிந்துணர்வை முடிவுக்குக் கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தான் அவர்கள் ஜனவரியில் தேர்தலை வென்றனர், பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டத்தின் மீது ஒரு வெகுஜன வாக்கெடுப்பை ஏற்பாடு செய்தனர், அதில் 61 சதவீதம் "வேண்டாமெனும்" வாக்குகள் வந்தது. ஆனால் அதன் செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க அடித்தளத்தின் நலன்களுக்கு உகந்த வகையில், சிரிசா இப்போது தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உடனான கிரீஸின் உறவுகளையும் மற்றும் கிரேக்க வங்கிகளையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட இந்த வங்கி பிணையளிப்புகளையும் மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் திணிக்க முயன்று வருகிறது. நாடாளுமன்றத்தில் இருந்த ஒரு பெண்மணி சிப்ராஸை நோக்கி, “கிரேக்க மக்கள் வேண்டாமென வாக்களித்தார்" என்று கூச்சலிட்டதுடன், “நீங்கள் ஜனநாயகத்தைத் தரங்குறைத்துவிட்டீர்" என்று வீட்டிலேயே எழுதி தயாரிக்கப்பட்ட ஒரு மேல்சட்டையை எடுத்துக்காட்டி ஆட்டினார். ஐரோப்பிய ஒன்றியத்திடம் அது ஒப்புக்கொண்டுள்ள பிரதான புதிய சமூக வெட்டுக்களில் முதலாவதை நடைமுறைக்குக் கொண்டு வர சிரிசா நகர்கின்ற வேளையில், பெருந்திரளான தொழிலாளர்கள் சிரிசாவினது மற்றும் சர்வதேச அளவிலான "தீவிர இடது" கட்சிகளிலிருந்து அதை உற்சாகப்படுத்திய தலைவர்களது அரசியல் துரோகத்துடன் நேருக்கு நேர் கொண்டு வரப்படுகின்றனர். “போராட்ட குணம்" அல்லது "முதலாளித்துவ-எதிர்ப்பு" என்பதாக காட்டிக்கொள்ளும் இத்தகைய சக்திகள், நீண்டகாலமாகவே ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத்திட்டத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்கம் ஒழுங்கமைக்கும் வேலைநிறுத்தங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றன, அதேவேளையில் அவை ஐரோப்பிய ஒன்றியம், கிரேக்க அரசு மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளிலிருந்து என்ன பெற முடியுமோ அத்தகைய கோரிக்கைகளுக்கு தொழிலாளர்களை அடிபணிய வலியுறுத்தி வந்துள்ளன. இப்போதோ, சிரிசா உட்பட இத்தகைய சகல கட்சிகளும் மற்றும் அமைப்புகளும் தொழிலாள வர்க்கத்தின் மீது வரலாற்றுரீதியிலான தாக்குதல்களைத் திணிக்கவே நோக்கம் கொண்டிருந்தன என்பது முன்பினும் கூடுதலாக தெளிவாகி உள்ளது. அவர்களது கொள்கைகளுக்குத் தொழிலாள வர்க்கத்தின் ஒழுங்கமைந்த எதிர்ப்பு இல்லை என்பதைப் பயன்படுத்தி கொண்டு, அவர்கள் சிக்கனத்திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டமைப்புக்குப் பொருத்தமான ஒன்றுடன் மட்டுப்படுத்தினர்; அதாவது அவர்கள் முற்றிலுமாக அத்தகைய போராட்டங்களின் குரல்வளையை நெரித்துவிட்டனர். இத்தகைய கொள்கைகளின் அடியிலுள்ள வர்க்க நிகழ்ச்சிநிரலானது, சிப்ராஸ் சமீபத்தில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்து அவரது வணிக-சார்பு நிகழ்ச்சிநிரலை வெளிப்படையாக அறிவித்த போது வெளிப்பட்டது. நியூ யோர்க்கில் Clinton Global அமர்வில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனால், சிரிசா அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்களின் பணம் கிரீஸில் பாதுகாப்பாக உள்ளதா என கேட்கப்பட்டபோது, அவர் இவ்வாறு விடையிறுத்தார்: “வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்கிறோம், நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வர ஒரு தெளிவான அதிகாரத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்தை அவர்கள் காண்பார்கள்… ஒருசில ஆண்டுகளில், கிரீஸ் அன்னிய முதலீட்டிற்கான ஒரு பிரதான இடமாக இருக்கும், இதுவே என் கருத்து, இதுவே என் விருப்பம்,” என்றார். அவரது ஓய்வூதிய கொள்கைகள் காட்டுவதைப் போல, சிப்ராஸ் கிரேக்க தொழிலாளர்களை மலிவு உழைப்பு தொழிலாளர்களாக வழங்குவதன் மூலமாக, அவர்களது சகல சமூக உரிமைகளையும் பறித்து, தசாப்த தசாப்தங்களாக மேற்கு ஐரோப்பா கண்டிராத சுரண்டும் நிலைமைகளுக்குக் கொண்டு வருவதன் மூலமாக முதலீட்டை ஈர்க்க நோக்கம் கொண்டுள்ளார். |
|
|