தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German defence minister exploits refugee crisis to strengthen military ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி இராணுவத்தைப் பலப்படுத்த அகதிகள் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்துகின்றார்By Wolfgang Weber Use this version to print| Send feedback ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் ஜேர்மனிக்குள் மிகப்பெரியளவில் இராணுவத்தை பயன்படுத்துவதற்கான தயாரிப்புக்கு அகதிகள் நெருக்கடியை சாதகமாக பயன்படுத்துகின்றார். நாடெங்கிலும் அகதிகளுக்கு இடவசதி செய்வதில் ஆயுதப்படைகள் பங்குபற்றவிருக்கிறது. இராணுவ தங்கும்விடுதிகள் அகதிகள் முகாம்களாக சீரமைக்கப்பட்டு, படைத்துறைசாரா அதிகாரிகளிடம் வழமையாக ஒப்படைக்கப்படும் அகதிகளைப் பதிவு செய்வது போன்ற பணிகளைச் செய்ய படையினர் அழைக்கப்பட இருக்கிறார்கள். உண்மையில் எந்த உரிமைகளும் இல்லாத அகதிகள், இவ்விதத்தில், ஜேர்மன் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட உள்ளனர். ஜேர்மன் இராணுவத்தை உள்நாட்டில் பயன்படுத்துவதன் மீதான கடுமையான தடை, அத்துடன் படைத்துறைசாரா அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் இடையிலான தெளிவான பிரிவு ஆகியவை கெய்சரின் குடியரசு மற்றும் நாஜி அனுபவங்களால் 1949க்கு பின்னரிலிருந்து சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இவை இப்போது நீக்கப்பட்டு வருகின்றன. கடந்தகாலத்தில் மூன்றாம் குடியரசினால் நடத்தப்பட்டதைப் போலவே, மீண்டுமொருமுறை இராணுவம் ஜேர்மன் சமூக வாழ்வில் ஒரு பிரதான பாத்திரம் வகிக்கப்போவதை பொதுமக்கள் கண்டு பழக்கப்படவுள்ளார்கள். சமூக வாழ்வில் ஒரு முன்னணி பாத்திரம் வகிக்க இராணுவத்தை முன்னுக்குக் கொண்டு வருவது, அறிவிக்கப்பட்ட அரசாங்க கொள்கை இலக்காகும். ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் 2012 இல் இராணுவத்தை சமூகத்திற்குள் பலமாக ஈடுபடுத்துவதற்கு அழைப்புவிடுத்தார். “தளபதிகள், அதிகாரிகள், இராணுவ சிப்பாய்கள், நமது சமூகத்தின் இதயதானத்திற்கு திரும்ப வருகிறார்கள்!” என்று பார்வையாளர்களை பார்த்து அவர் பிரகடனப்படுத்தினார். அகதிகளுக்கு "உதவி" அதன் உத்தியோகபூர்வ வலைத் தளத்தின் படி, ஜேர்மன் இராணுவம் நாடெங்கிலும் 18 இராணுவ தங்கும்விடுதிகளை வழங்கி, 9,000 அகதிகளுக்கு தங்குமிடங்களை உருவாக்கியுள்ளது. 6,000 க்கும் மேற்பட்டவர்கள் இராணுவ விடுதிகளில் அல்லது இராணுவத்தால் பயன்படுத்தப்படாத கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூவாயிரம் பேர் பயிற்சி முகாம்கள் போன்ற இராணுவ பயன்பாட்டில் அல்லாத ஏனைய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கும் கூடுதலாக, இராணுவம் 1,200 க்கு அதிகமான அகதிகளுக்காக ஹம்பேர்க், ஹால்பேர்ஸ்டாட் (சாக்ஸோனி-அன்ஹால்ட்) மற்றும் டுபெர்லுக்-கிர்ஹ்ஹைம் ஆகிய இடங்களில் 140 க்கு அதிகமான கூடாரங்களை அமைத்துள்ளது. கடந்த இலையுதிர்காலத்திலிருந்து அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள பவேரியாவின் சொன்தொவனில் உள்ள ஒரு இராணுவ தங்கும்விடுதிக்கு பாதுகாப்புத்துறை மந்திரி வொன் டெர் லெயன் விஜயம் செய்து பார்த்த பின்னர், ஜேர்மன் இராணுவத்தின் இந்த பயன்படுத்தலை நியாயப்படுத்தினார். “எங்களால் முடிந்த எல்லா வழிவகைகளையும் கொண்டு நாங்கள் அகதிகளுக்கு உதவி வருகிறோம்,” என்றார். இது, ஆப்கானிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள் மீதான போரின் காரணமாக மதிப்பிழந்துள்ள துருப்புகளைப் பற்றிய கருத்துருவிற்கு மறுவாழ்வளிப்பதற்கும் மற்றும் வெளிநாடுகளில் எதிர்கால இராணுவ தலையீட்டுக்கு தயாரிப்பு செய்வதற்கும் ஒரு வெளிப்படையான முயற்சியாகும். பால்கன் அரசுகள், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்காவில் அவர்கள் நடத்திய இராணுவ தலையீடுகளோடு சேர்ந்து, ஜேர்மன் அரசாங்கமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் உருவாக்கிய கோரமான நிலைமைகள் தான், யதார்த்தத்தில், ஐரோப்பாவிற்கு வெள்ளமென அகதிகள் வருவதைத் தூண்டிவிட்டது. டுபெர்லுக்-கிர்ஹ்ஹைம் இல் முகாம்கள் அமைத்த சிப்பாய்களைக் குறித்த ஜேர்மன் இராணுவ பிரச்சார காணொளி ஒன்றில், சிறப்பு துணை தரைப்படை 164 இன் உயரதிகாரி பியோர்ன் பன்சர் அந்த உள்ளடக்கத்தை அப்பட்டமாக குறிப்பிட்டார்: “இங்கே இருக்கும் சிப்பாய்களுக்கு, அதுவும் அவர்களில் பெரும்பான்மையினர் நடவடிக்கைகளில் மூத்த அனுபவசாலிகள் என்பதால், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எங்கே தலையீடு செய்தார்களோ அந்நாடுகளின் நிலைமைகளைக் குறித்தும் அவர்களுக்கு மிகவும் தெளிவாக தெரியும்…" என்றார். இராணுவத்தை உள்நாட்டிற்குள் பயன்படுத்துவதன் மீதிருக்கும் தடை, நீண்டகாலமாகவே தாக்குதலின் கீழ் இருந்து வருகிறது. அது 1968 இல் அவசரகால அதிகாரங்களை ஏற்றுக் கொண்டதிலிருந்து தொடங்கி, மிக சமீபத்தில் ஜேர்மன் அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்குப் பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய ஆயத்தப்படுத்தலுடன் ஜேர்மன் இராணுவம் ஒருபடி மேலே சென்றுள்ளது. இராணுவத்தை உள்நாட்டில் பயன்படுத்துவதற்கு, இதுவரையில், இடம் மற்றும் காலஅளவு என இரண்டு விதத்திலும் எப்போதும் கடுமையான கட்டுப்பாடு இருந்தது மற்றும் 2002 இல் எல்ப ஆற்றின் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்களுக்கு அல்லது கைலிகன்டாம் ஜி8 உச்சி மாநாட்டின் போது "பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவதற்கு" அவசியப்படுகிறது என இவற்றைக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டது. இப்போதைய சூழ்நிலையில் அங்கே மிக வெளிப்படையாகவே "பாதுகாப்பு" அல்லது "இயற்கை பேரிடர்" போன்ற எந்த காரணத்திற்கும் இடமில்லை என்பதால், ஜேர்மன் அடிப்படை சட்டத்தையே சீர்திருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உயர்மட்ட அரசியல்வாதிகள் மேலெழுப்புகிறார்கள். “இராணுவத்தை மிகவும் பலவந்தமாக உள்நாட்டில் பயன்படுத்தலாமா என்பதைக் குறித்து ஜேர்மனியில் நமக்கொரு புதிய விவாதம் அவசியப்படுகிறது,” இதை ஜூலை இறுதியில் சாக்ஸோனி-அன்ஹால்டுக்கான உள்துறை மந்திரி கொல்கர் ஸ்ரால்கினைக்ட் (கிறிஸ்துவ ஜனநாயவாதிகள்) தெரிவித்தார். அடிப்படை சட்டங்களிலுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் இக்காலத்திற்கு இனியும் பொருந்தாது என்றார். “அடிப்படை சட்டத்தைச் சீர்திருத்த பரிசீலிப்பது" அவசியமாகுமென்று படைதளவாடங்கள்துறையின் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரால்கினைக்ட் வலியுறுத்தினார். உத்தியோக பொறுப்புகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தல் உள்நாட்டு அகதிகளுக்காக பயன்படுத்துவது என்பதை விட, ஒருவேளை இன்னும் மேலதிகமாக பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பொறுப்புகளை ஜேர்மன் இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதாக கூட இருக்கலாம். இல்லையென்றால் இத்தகைய பொறுப்புகளை மத்திய மற்றும் மாநில மட்டத்திலான அதிகாரிகளே செய்தாக வேண்டும். இவ்விதத்தில் படைதுறைசாரா அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பு பரிசோதித்துப் பார்க்கப்படுகிறது. இதற்கு இராணுவ உள்கட்டமைப்பை விரிவாக்குவதும், அத்துடன் அரசின் ஒவ்வொரு மட்டத்திலும் இராணுவத்தை நெருக்கமாக ஒருங்கிணைப்பதும் அவசியம் என்பதால், இவை 2010 இல் தொடங்கிய ஜேர்மன் இராணுவ சீர்திருத்தத்தின் இரண்டாவது முக்கிய கொள்கை திட்டமான வெளிநாடுகளில் இராணுவ தலையீடு செய்வதும் உள்ளது. சமிக்ஞைப் பிரிவின் (signals division) சிப்பாய்கள் இதற்காக ஐரோப்பிய ஒன்றிய இராணுவ நடவடிக்கை கட்டளையகமான, ஜேர்மன் கடற்படையையும் உள்ளடக்கிய, "மத்திய தரைக் கடலில் ஐரோப்பிய ஒன்றிய கடற்படையின்" (EUNAVFORMED) கீழ் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கே அவர்களுக்கு மத்திய தரைக்கடலில் இருந்து மீட்கப்பட்ட அகதிகளின் விரிவான விபரங்களை சேகரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. அகதிகள் வந்த வழி, அவர்களின் நாடு, தொழில், உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியவை அதில் சேகரிக்கப்படும். இவ்விதத்தில் வெளிநாட்டு உளவுத்துறை சேவையின் (BND) ஒரு "இராணுவ சமிக்ஞை பிரிவால்" இராணுவத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சேகரிக்கப்பட்ட தகவல்கள் லிபியா, துனிசியா மற்றும் மொரோக்கோ போன்ற வட ஆபிரிக்க நாடுகளில் இராணுவ தலையீடுகளுக்கு தயாரிப்பு செய்ய உதவும், அவை அகதிகள் வரும் பாதை, படகுகள் மற்றும் ஆட்கடத்துபவர்களைத் தடுப்பதற்காக என்ற போலிக்காரணத்தின் கீழ் நடத்தப்படலாம். அதேபோல அதை ஜேர்மனியில் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை செயலாக்குகையில் அகதிகளுக்கே எதிராகவும் கூட பயன்படுத்த முடியும். இந்த வேலைக்கு புலம்பெயர்வு மற்றும் அகதிகளின் மத்திய அலுவலக (BAMF) அதிகாரிகளே பொறுப்பானவர்கள் என்றாலும், இது இப்போது "நிர்வாக பொறுப்புகளில் உதவுவதில் தொடர்புடைய" படையினரால் செய்யப்படுகிறது. உத்தியோகபூர்வ ஜேர்மன் இராணுவ வலைத் தளமே குறிப்பிடுவதைப்போல, மே மாதத்திற்குப் பின்னரில் இருந்து 150 வரையிலான படையினர் "தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை செயலாக்குவதில்" BAMF க்கு உதவியுள்ளனர். இது மேற்கொண்டும் விரிவாக்கப்பட உள்ளது. வியாழனன்று உள்துறை மந்திரி தோமஸ் டி மஸியர் (CDU) அறிவிக்கையில், “தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை வேகமாக செயலாக்க" இராணுவ அங்கத்தவர்கள் உட்பட மரபுசாரா வழிவகைகளை பயன்படுத்தி, அவர் BAMF க்கு குறுகிய கால தேவைக்காக 700 தொழிலாளர்களை நியமிக்க விரும்புவதாக அறிவித்தார். படைத்துறைசாரா துறைகள் மற்றும் இராணுவத்தின் கூட்டுஒத்துழைப்பு படைத்துறைசாரா துறைகள் மற்றும் இராணுவ கட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பு சமீபத்திய ஆண்டுகளில் கணிசமானளவிற்கு அதிகரித்துள்ளது. “புதிய நிலைநோக்கு: ஜேர்மன் இராணுவத்தின் படைத்துறைசாரா துறைகள்-இராணுவ கூட்டுஒத்துழைப்பு" என்று தலைப்பிட்ட 2013 இன் ஒரு ஜேர்மன் இராணுவ சிற்றறிக்கை, “உள்நாட்டு பாதுகாப்பு" மற்றும் "பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பு" என்ற போர்வையில் உள்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய "பரந்தளவிலான அதிகார பொறுப்புகளுக்கான" தயாரிப்புகளுக்கு சில கருத்துக்களை வழங்குகிறது. அந்த சிற்றறிக்கை 2006 இல் ஒரு "பிராந்திய வலையமைப்பு" உருவாக்கப்பட்டதற்குப் பிந்தைய, இத்தகைய கட்டமைப்புகளின் அளவை தெளிவுபடுத்துகிறது. “பொண் நகரிலுள்ள உள்ள ஆயுத படை கட்டளையகத்தின்" கீழ், “15 மாநில தளபதிகள் ஒவ்வொரு மாநில அரசாங்கங்களில் இயங்குவதுடன் “பேர்லின் பிராந்திய பொறுப்புகள்" துறைக்குள், ஒவ்வொன்றிலும் 10 இல் இருந்து 12 பதவிகளுடன் 31 மாவட்ட தளபதிகளும் 404 உள்ளாட்சி தளபதிகளும் செயல்படுகிறார்கள். இந்த இடங்கள், மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, இராணுவரீதியல் அனுபவமுள்ள மற்றும் அரசியல்ரீதியில் "முற்றிலும் நம்பகமான" சிப்பாய்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்விதத்தில், இந்த "உள்நாட்டு பாதுகாப்பிற்காக", 3,000 க்கு அதிகமான சிறப்பு அதிகாரிகள் உட்பட காத்திருப்போர் பட்டியலிலுள்ள 4,000 க்கும் அதிகமானவர்களும் இதில் உள்ளடங்குவர். இவை ஒரு போலி ஜனநாயக மறைப்புகூட இல்லாமல் பொதுமக்களிடமிருந்து மூடி மறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்த மாவட்டத்திற்குள் வாழ்ந்த, அதற்குள்ளேயே சேவையாற்றி, “அவர்களது சமூகத்திற்குள் வேரூன்ற" வேண்டும். அந்த இராணுவ சிற்றறிக்கையின்படி, “படைத்துறைசாரா பேரிடர் பாதுகாப்பு/நெருக்கடி மற்றும் நிர்வாக அலுவலகங்களுக்கு, ஜேர்மன் இராணுவ ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகள் மற்றும் வரம்புகளைக் குறித்து அறிவுறுத்துவதும்" “நடவடிக்கையின் தற்போதைய நிலைமை மற்றும் அத்துடன் எதிர்கால திட்டங்கள் குறித்த கூட்டங்களில் பங்குபற்றுவதும்,” மற்றும் "படைத்துறைசாரா அதிகாரிகளிடமிருந்து இராணுவத்திடம் உதவிக்காக வரும் கோரிக்கைகளை ஏற்பதும், ஒத்துழைப்பதும், அத்துடன் அவற்றை உரிய மாநில தளபதிகளுக்கு அனுப்பி வைப்பதும்" அவர்களது பொறுப்புகளில் உள்ளடங்கும். இந்த வலையமைப்பில் ஒருங்கிணைந்துள்ள ஆயுதப்படைகள், படைத்துறைசாரா அதிகாரிகளுக்கு "அறிவுரை" வழங்குவதற்கும் மற்றும் "ஒத்துழைப்பு" வழங்குவதற்கும் மட்டுமல்ல, மாறாக அவர்களது சொந்த ஆயத்தப்படுத்தல்களையும் ஒழுங்கமைப்பார்கள். “பேர்லினிலுள்ள ஜேர்மன் இராணுவத்திற்கான பிராந்திய நடவடிக்கைகளின் கட்டளையகம்" “புதிய பிராந்திய வலையமைப்பின் மத்திய மையமாக" உள்ளது. அது "உள்நாட்டில் இராணுவ ஆயத்தப்படுதலின் தந்திரோபாய ஒருங்கிணைப்பிற்கும் பொறுப்பாகிறது.” “படைத்துறைசாரா துறைகளிடமிருந்து உதவி கோரிவரும் கோரிக்கைகளின் அடிப்படையில், பிராந்திய கட்டளை மையத்தால் (KdoTerrAufgBw) சேவை பிரிவுகள் மற்றும் துருப்புகளுக்கு எச்சரிக்கை அளித்து, ஒத்துழைப்பிற்காக ஜேர்மன் இராணுவத்தின் உரிய பிரத்யேக படையை ஒன்றிணைத்துக் கொண்டு வர முடியும்,” என்று அந்த சிற்றறிக்கை குறிப்பிடுகிறது. கையாளப்பட வேண்டிய “அச்சுறுத்தல்" வகைகளை தற்போது ஹங்கேரியில் காணலாம், அங்கே கரைபுரண்டு வரும் அகதிகளைப் புதிதாக கட்டமைக்கப்பட்ட எல்லை முள்வேலிக்குப் பின்னால் தடுத்து நிறுத்த இராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 2,100 பேர் கொண்ட ஆறு "எல்லையோர வேட்டை" (border hunter) பிரிவுகள் செப்டம்பர் வாக்கில் பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும். மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்கனவே என்ன விவாதிக்கப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுவதைப் போல, அங்கே "அகதிகளைக் கையாள்கையில் சுடுவதற்கு உத்தரவு இருக்காது" என்று அதற்கு பொறுப்பான பிராந்திய பொலிஸ் கமாண்டர் தெரிவித்தார். தொகுத்து கூறுவதாயின், “படைத்துறைசார துறைகள் மற்றும் இராணுவ கூட்டுஒத்துழைப்பு" என்பது ஜேர்மன் இராணுவவாதத்தின் நவீன வடிவம் என்பதற்கு அப்பால் ஒன்றுமில்லை, இராணுவ வரலாற்றாளர் வொல்வ்ராம் வெற்ற எழுதுகையில், “அரசு, பொருளாதார, சித்தாந்த மற்றும் சமூக துறைகளை ஒருங்கிணைக்கும் அமைப்பொன்று, இராணுவ நலன்களின் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது,” என்றார். ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கார்ல் லீப்னெக்ட், புரட்சியாளரும் மற்றும் சளைக்காத போர் எதிர்ப்பாளருமான இவர், அதேபோன்றவொரு நிகழ்முறையை "நமது ஒட்டுமொத்த பொது வாழ்வை மற்றும் தனிநபர் வாழ்வை இராணுவவாத உத்வேகத்தின் கீழ் அடிபணிய வைக்கும் அமைப்புமுறையென்று" கண்டித்தார். (“இராணுவவாதமும் இராணுவவாத-எதிர்ப்பும்,” 1907) அதேநேரத்தில், கெய்சரின் கீழ், அந்த அமைப்புமுறை முதல் உலகப் போர் தொடங்குவதற்கு பாதை அமைத்து, அதற்கு உதவியது. வைய்மார் குடியரசின் தொடக்க ஆண்டுகளில், அது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை ஒடுக்க ஜேர்மனிக்கு உதவியது, அத்தகைய போராட்டங்கள் தான் கெய்சரை ஆட்சியிலிருந்து தூக்கியெறிந்து முதலாம் உலக போரை முடிவுக்குக் கொண்டு வந்தன. அதற்குப் பின்னர், அந்த அமைப்புமுறை பாசிச நாஜி சர்வாதிகாரம் நிறுவப்படுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. “அகதிகளுக்கு உதவ" ஜேர்மன் இராணுவத்தை பயன்படுத்துவதென்பது "இப்போதைக்கு" மனிதாபிமான வார்த்தைகளில் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கும் அபாயங்கள் அதேமாதிரியானவையே. அவை, குறிப்பாக ஜேர்மனியில், உழைக்கும் மக்களால் மிக தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். |
|
|