ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The political role of the Bernie Sanders campaign

பேர்னி சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் அரசியல் பாத்திரம்

Joseph Kishore
11 February 2016

ஜனநாயகக் கட்சியின் நியூ ஹாம்ப்ஷைர் முதன்மை வேட்பாளராக பேர்னி சாண்டர்ஸின் செவ்வாய்கிழமை பிரமாண்ட வெற்றி, ஹிலாரி கிளிண்டனின் பிரச்சாரத்தின் நெருக்கடியை தீவிரப்படுத்தி உள்ளதுடன், ஒட்டுமொத்தமாக சாண்டர்ஸை ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக முன்னுக்கு கொண்டு வரும் சாத்தியக்கூறை அதிகரித்துள்ளது.

செவ்வாய்கிழமை வாக்கெடுப்பின் விபரங்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குறைந்த வருவாய் வாக்காளர்களிடையே, சாண்டர்ஸ் பிரச்சாரத்திற்கு பரந்த ஆதரவு இருப்பதற்குக் கூடுதல் சான்றை வழங்குகின்றன. வாக்கெடுப்புகளுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, 30 வயதிற்குக் குறைந்த வாக்காளர்களிடையே 83 சதவீத ஆதரவை சாண்டர்ஸ் பெற்றுள்ளார். அவர்களில் 67 சதவீதத்தினர் எந்த கல்லூரி பட்டமும் பெறாதவர்கள் மற்றும் ஆண்டுக்கு 30,000 டாலர்களுக்கு கீழ் வருவாய் ஈட்டும் வாக்காளர்களிடையே 72 சதவீத அளவில் ஆதரவைப் பெற்றுள்ளார். வருவாய் சமத்துவமின்மையே தேர்தலில் மிக முக்கிய பிரச்சினை என்றும், இது சாண்டர்ஸிற்கு 71 சதவீத அளவுக்கு ஆதரவைப் பெற்று தருகிறது என்றும் வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்தனர். 65 க்கு அதிக வயதுடைய வாக்காளர்கள் (54 சதவீதம்) மற்றும் 200,000 டாலர்களுக்கு அதிகமாக வருவாய் ஈட்டும் வாக்காளர்கள் (53 சதவீதம்) கிளிண்டனுக்கு ஆதரவளித்த ஒரே சமூக பிரிவாக இருந்தது.

இன்னுமொரு புள்ளிவிபரமும் சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் இன்றியமையா அரசியல் பாத்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறது: ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளர் போட்டியில் வாக்களித்தவர்களில் நாற்பது சதவீதத்தினர் தங்களைத்தாங்களே "சுயாதீனமானவர்கள்/தங்களை யாரென அறிவிக்காதவர்கள்" (அதாவது ஒரு ஜனநாயகக் கட்சியாளராக பதிவு செய்து கொள்ளாதவர்) என்று அடையாளம் காட்டிக் கொண்டவர்கள், இவர்கள் 72 சதவீத அளவுக்கு சாண்டர்ஸை ஆதரித்திருந்தனர். வாக்காளர்களை திரும்பவும் ஜனநாயகக் கட்சியின் பிடியில் கொண்டு வருவதே அவரது "அரசியல் புரட்சியின்" பிரதான நோக்கம் என்பதை அந்த வெர்மாண்ட் செனட்டர் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சாண்டார்ஸிற்கு அதிகரித்துவரும் ஆதரவு, அமெரிக்காவில் நிலவும் ஆழ்ந்த பதட்டங்களின் ஓர் ஆரம்ப அரசியல் பிரதிபலிப்பாகும். இது பல தசாப்தங்களாக செயற்கையாக ஒடுக்கப்பட்டிருந்தது, அதேவேளையில் 1930 களின் பெருமந்தநிலைமைக்குப் பின்னர் பார்த்திராத மட்டங்களுக்கு சமூக சமத்துவமின்மை அதிகரித்தது.

குறிப்பாக 2008 நிதியியல் பொறிவுக்குப் பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் வர்க்க உறவுகளைச் ஒரு மறுசீரமைப்பில் ஈடுபட்டது, இதில் ட்ரில்லியன் கணக்கான தொகை வங்கிகளுக்குள் பாய்ச்சப்பட்ட அதேவேளையில் மக்களின் பரந்த பெரும்பான்மையினரோ கூலிகளில் சரிவு, மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள், பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் அதிகரித்த கடன்சுமை ஆகியவற்றை முகங்கொடுத்தனர். இளைஞர்கள், அதிக வித்தியாசத்தில் சாண்டர்ஸை ஆதரிக்கும் இவர்கள், பொருளாதார நெருக்கடி, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தவிர வேறெதுவும் அறியாதவர்கள். பதினெட்டு வயது நிரம்பிய புதிய வாக்காளர் ஒருவர், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடங்கப்பட்ட போது நான்கு வயதில் இருந்திருப்பார், உலகளாவிய நிதியியல் நெருக்கடி தொடங்கிய போது அவர் 11 வயதினராக இருந்திருப்பார்.

சாண்டர்ஸிற்கு ஆதரவு அதிகரிப்பதானது இத்தகைய புறநிலைமைகளுக்கு ஒரு தாமதமான எதிர்விளைவாகும். பல தசாப்தங்களாக சோசலிச கருத்துக்கள் ஒடுக்கப்பட்டிருந்த ஒரு நாட்டில், மில்லியன் கணக்கான மக்கள் இன்றியமையாதரீதியில் முதலாளித்துவ-விரோத கண்ணோட்டங்கள் அது தெளிவின்றி வரையறுக்கப்பட்டிருந்தாலும், அதை நோக்கி திரும்புகிறார்கள். முதல் பெண் ஜனாதிபதி ஆவதற்கான கிளிண்டனின் வாய்ப்பு குறித்து தம்பட்டம் அடித்தும் கூட (சாண்டர்ஸின் ஆதரவாளர்கள் ஆண்-பெண் பாகுபாடு பார்ப்பவர்கள் என்ற வாதங்களுக்கு இடையிலும்) அவரால் பெண் வாக்காளர்களின் வாக்குகளைப் பெற முடியவில்லை என்பது எடுத்துக்காட்டுவதைப் போல, இனம், பாலினம், ஆண்-பெண் பாகுபாடு என்ற அடித்தளத்திலான அடையாள அரசியல்—உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்குகளின் ஆரவாரமும் மிகக் குறைந்த பரந்தளவிலான தாக்கத்தையே கொண்டுள்ளது.

ஆனால், சாண்டர்ஸிற்கான ஆதரவு ஆழ்ந்த சமூக கோபத்தின் ஓர் வெளிப்பாடு என்று கூறுவதற்கும், சாண்டர்ஸ் பிரச்சாரமே இந்த கோபத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. சாண்டர்ஸ் தொழிலாள வர்க்கத்திற்காக பேசவில்லை, மாறாக சமூக எதிர்ப்பின் வளர்ச்சியை அச்சத்துடன் பார்க்கும் மற்றும் அதை தணிக்க ஏதேனும் வழியைக் காணத் துடிக்கும் ஆளும் வர்க்கம் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு பிரிவுக்காக பேசுகிறார். ஆளும் வர்க்கம் அதன் பொருளாதார மற்றும் அரசியல் சக்திக்குச் சவால் விடுக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் உருவெடுத்துவிடக்கூடிய மிகப்பெரிய அபாயத்தை காண்கிறது. அதுபோன்றவொரு அபிவிருத்தியை தடுக்க மக்களின் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் பின்னால் திருப்பிவிடுவது தான் சாண்டர்ஸின் வேலை.

சாண்டர்ஸ் அவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் முழுமையாக நனவுபூர்வமாக இல்லையென்ற பிரமையின் கீழ் இருக்கும் எவரொருவரும், அவரது செவ்வாய்கிழமை இரவு வெற்றி உரையை வாசிக்க வேண்டும். முதன்மை வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்திருந்ததை பாராட்டி, சாண்டர்ஸ் அறிவிக்கையில், “நாடெங்கிலும் இது தான் நடக்கும். வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தால் ஜனநாயகக் கட்சியினரும் மற்றும் முற்போக்குவாதிகளும் ஜெயிப்பார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது,” என்றார். “நாம் ஒரு சில மாதங்களில் ஒருங்கிணைந்து" யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவருக்குப் பின்னால் "இக்கட்சியை ஐக்கியப்படுத்த வேண்டும் என்பது நமது எதிராளிகளுக்கு மட்டுமல்ல, மாறாக என்னை ஆதரிப்பவர்களுக்கும், நினைவுபடுத்துவது" அவசியமாகும் என்பதை சேர்த்துக் கொண்டார். (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

“மாற்றத்திற்கான வேட்பாளராக" கருதப்பட்ட ஒபாமாவின் கீழ் ஜனநாயக கட்சியின் நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளத்தால் அதை பலப்படுத்த, புதியவர்களை "அரசியல் நிகழ்ச்சிப்போக்கினுள் கொண்டு வர" சாண்டர்ஸ் முயன்று வருகிறார். பிரான்ங்ளின் டி. ரூஸ்வெல்ட் முதல்முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை விட இரண்டாவது முறை வெகு குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தேர்ந்தெடுக்கப்பட்டதுபோல் அதற்கு பின்னர் 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா அவ்வாறான முதல் ஜனாதிபதியாக உள்ளார். அப்போது வாக்குப்பதிவு எண்ணிக்கை கூர்மையாக வீழ்ச்சி அடைந்ததைக் குறித்து உலக சோசலிச வலைத் தளம் அப்போதே குறிப்பிடுகையில், இது “பிரமைகளிலிருந்து விடுபட்ட மற்றும் ஒட்டுமொத்தமாக இரு-கட்சி அரசியல் ஆட்சிமுறையிலிருந்து அதிகரித்தளவில் தனிமைப்பட்ட வாக்காளர்களின்" ஒரு வெளிபாடாகும் என்று எழுதியது.

அவரது நிஜமான வேலைத்திட்டத்தின் வரையறைகளில், மிகவும் முக்கிய விடயமாக இருப்பது 15 டாலர் குறைந்தபட்ச கூலி மற்றும் அரசு கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி ஆகியவற்றிற்கான சாண்டர்ஸின் வாக்குறுதிகள் அல்ல. இவை பெருநிறுவன இலாபங்களை குறைக்கும் என்பதால் இவற்றை ஜனாதிபதி சாண்டர்ஸ் உடனடியாக கைவிட்டுவிடலாம். ஆனால் ஏகாதிபத்திய போருக்கான அவரது ஆதரவு தான் முக்கிய விடயமாகும். பிரச்சாரம் முழுவதிலும், சாண்டர்ஸ் வெளியுறவு கொள்கை குறித்து மிகக் குறைவாகவே பேசியுள்ளார், ஆனால் அவர் என்ன கூறியிருக்கிறாரோ அது, அவர் ஆளும் வர்க்கத்திற்கும் இராணுவத்திற்கு எந்த அபாயத்தையும் முன்னிறுத்தவில்லை என்பதை உத்தரவாதம் அளிப்பதை நோக்கி உள்ளது.

சாண்டர்ஸின் செவ்வாய்கிழமை இரவு உரையில், அவர், 2003 இல் ஈராக் போருக்கு எதிராக அவர் வாக்களித்ததைக் குறிப்பிட்டபோது அனேகமாக பார்வையாளர்களிடையே இருந்து பலத்த கரவொலி எழுந்தது. ஆனால் இதை தொடர்ந்து உடனடியாக "நாம் ISIS ஐ அழிக்க வேண்டும், அழிப்போம்" என்ற சூளுரையும் வந்தது. அதாவது ஈராக் மற்றும் சிரியாவில் போரை மேற்கொண்டு நடத்துவதாகும்.

ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கையை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்தும் வகையில் கூறப்படுகின்ற இந்த கருத்துகள், அனைத்திற்கும் மேலாக சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சியை நீக்குவதை நோக்கமாக கொண்டு, அங்கே போரை பெரியளவில் தீவிரப்படுத்துவதற்குத் தயாரிப்பு செய்கிறது. சிரியா மோதலானது, கிழக்கு ஐரோப்பாவின் பரந்த இராணுவமயப்படுத்தலுடன் சேர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளது இடைவிடாத அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி உள்ள அணுஆயுதமேந்திய ரஷ்யாவுடன் போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது.

சாண்டர்ஸ் இதில் எதையுமே எதிர்க்கவில்லை. அவர் ஆளும் வர்க்கத்தால் அழைக்கப்பட்டால், அவர் அவரது "முற்போக்கான" நன்மதிப்புகளை போருக்கு ஆதரவை முட்டுக்கொடுக்கவே பயன்படுத்துவார். இன்று "பேர்னை (பேர்னி சாண்டர்ஸ்) உணர்பவர்கள்" நாளை குண்டுவீச்சுக்களை அனுபவிப்பார்கள். சாண்டர்ஸ் அவரது சமூக சீர்திருத்தம் மீதான வெற்று வாக்குறுதிகளை முறிக்க, போருக்கான நிதித் தேவைகளை சுட்டிக்காட்டுவதைக் கொண்டு நியாயப்படுத்தக்கூடும்.

இந்த வெர்மாண்ட் செனட்டரின் அரசியல் பிணைப்பு ஓர் இரண்டாதர பிரச்சினை அல்ல. பல காலங்களுக்கு முன்னரே —ஜனநாயகக் கட்சிக்குள் இருந்து அல்லது பெயரளவிற்கு அதற்கு வெளியிலிருந்து செயல்பட்ட—அரசியல் பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு கடமையைத் தான் இவர் செய்து வருகிறார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (ஜனநாயக கட்சியின் “வெகுஜன” வேட்பாளராக) வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரெயன், 1920 களில் (விவசாயிகள்-தொழிலாளர் கட்சிக்காக, இக்கட்சி பின்னர் ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரிவாக மாறியது) ரோபர்ட் லா ஃப்லொலெட் மற்றும் 1948 இல் பிரான்ங்ளின் டி. ரூஸ்வெல்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஹென்றி வால்லஸ் (ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்பட்ட முற்போக்கு கட்சிக்காக) என இவர்களது ஜனாதிபதி பிரச்சாரங்களும் இதில் உள்ளடங்கும். ஜனநாயகக் கட்சிக்குள் ஜெஸ்சி ஜாக்சன் மற்றும் டென்னிஸ் குசினிச், அத்துடன் வெளியிலிருந்து ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தமளிப்பதை நோக்கி திருப்பிவிடப்பட்ட பல்வேறு பசுமைக் கட்சி பிரச்சாரங்களும் மிக நவீனகால எடுத்துக்காட்டுக்களில் உள்ளடங்கும்.

சாண்டர்ஸ் அவரது பிரச்சார உரைகளில் வலியுறுத்துவதைப் போல, ஒரு "புரட்சியை" உருவாக்குவது அவரது நோக்கமல்ல, மாறாக அதை தடுப்பதே அவரது நோக்கமாகும். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் துரிதமாக மற்றும் ஆணவத்துடன் அவரது வாக்குறுதிகள் அனைத்தையும் கைத்துறப்பார். அவரது நடவடிக்கைகள் (ஜனவரி 2015 இல் சிக்கனத் திட்டத்தை எதிர்க்கும் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்போது வங்கிகளின் கட்டளைகளுக்கு இணங்க முன்பினும் அதிக மூர்க்கமான சிக்கனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்ற) கிரீஸில் சிரிசாவினது நடவடிக்கைகளை ஒத்திருக்கும் மற்றும் (கடந்த ஆண்டு “இடது” தொழிற் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நாட்டைச் சிரியாவிற்கு எதிரான போருக்குள் எடுத்துச் செல்லும் பழமைவாத அரசாங்கத்தின் முடிவுக்கு வசதி செய்து கொடுப்பதில் இன்றியமையா பாத்திரம் வகித்த) இங்கிலாந்தில் ஜெர்மி கோர்பினது நடவடிக்கைகளை ஒத்திருக்கும்.

சாண்டர்ஸை, அழுத்தத்தின் கீழ், இடதிற்கு நகர்த்தலாம் என்று வாதிடும் அமைப்புகள், தாமே தங்களைத்தாங்களே முதலாளித்துவ அரசுக்குள் ஒருங்கிணைத்துக் கொள்வதற்கான மற்றொரு இயங்குமுறையாக அவரது பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, வலதிற்கு நகர்ந்து வருகின்றன.

கடந்த ஆண்டின் ஒப்பந்த காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக வாகனத்துறை தொழிலாளர்களின் போர்குணம் நிறைந்த எதிர்ப்பில் தொடங்கி, டெட்ரோய்டில் ஆசியர்கள் மற்றும் மாணவர்களின் மருத்துவ விடுப்பு எடுக்கும் போராட்டம் வரையில் மற்றும் மிச்சிகன் ப்ளின்டில் ஈயம் கலந்த நச்சு தண்ணீர் குறித்த பாரிய கோபம் வரையில், அமெரிக்காவில் வர்க்க பதட்டங்கள் மேற்புறத்தில் வெடிக்க தொடங்கியுள்ளன என்பதற்கு, அங்கே நிறைய அறிகுறிகள் உள்ளன. வெளிநாடுகளில் போரை விரிவாக்க ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிகள், அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் நிலவும் ஆழ்ந்த போர் எதிர்ப்பு உணர்வுகளுடன் மோதலுக்கு வந்துள்ளது.

ஆனால் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு முன்னோக்கிய அரசியல் பாதையானது, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தின் மூலமாக மட்டுமே ஒழுங்கமைக்க முடியும். இதற்கு, சாண்டர்ஸையும் மற்றும் "மக்களுடன் நெருக்கமாக இருக்கின்றோம்" என்ற பெயரில் அவரை அனுசரித்து அவரது பாத்திரத்தை மூடிமறைக்கும் அனைவரையும் சமரசமின்றி அம்பலப்படுத்துவது அவசியமாகும்.