ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian prime minister visits Russia to consolidate relations

உறவுகளை கெட்டியாக்க இந்திய பிரதமர் ரஷ்ய பயணம்

By Deepal Jayasekera
5 January 2016

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போதுள்ள மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தம் விதமாக டிசம்பர் 23-24ம் தேதிகளில் ரஷ்யாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். "ஆசியாவை நோக்கிய முன்னிலை" என்ற சீன எதிர்ப்பிற்கு அமெரிக்காவுடன் மிகவும் இணக்கமாக இந்தியா இருக்கும் அதேசமயத்தில், புவிசார் அரசியல் அபிலாஷைகளைப் பொறுத்தவரையில் புது டெல்லி மற்றும் மாஸ்கோவிற்கு இடையேயான நீண்டகால கூட்டணியானது முக்கியத்துவம் வாய்ந்தது என மோடி அரசு இன்னமும் கருதுகிறது. மாஸ்கோ அதன் பங்கிற்கு, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா மீதான ரஷ்யாவின் நலன்களுக்கு எதிரான அமெரிக்காவின் ஆத்திரமூட்டல்களை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியா உடனான மூலோபாயக் கூட்டுக்களை மேம்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கடந்தகால ஆட்சியின்போது 2014ம் ஆண்டு தொடக்க மாதங்களில் உக்ரேன் மீதான மோதல்கள் தீவிரமடைந்த சமயத்திலும், தற்போது பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) யின் நடப்பாட்சியின் போதும் இரண்டிலும் இந்தியாவானது, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் போக்கிற்கு இணக்கமாகச் செல்ல மறுத்துவிட்டது. வாஷிங்டன் உடனான எந்தவொரு மோதலையும் தவிர்க்கும் முயற்சியில், உக்ரேனில் பிப்ரவரி 2014லிருந்து அமெரிக்க ஆதரவுடன் கூடிய பாசிசத் தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்பு இந்தியா தன்னை தூர விலக்கிவைத்துக் கொண்டது, மார்ச் 2014ல் ஒரு இணைப்பு சார்பான பொது வாக்கெடுப்பை தொடர்ந்து கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொள்ள முனைவதை எதிர்த்து அமெரிக்க ஆதரவிலான ஐ.நா. பொது சபை தீர்மானம் கண்டனம் செய்ததிலும் இந்தியா கலந்துகொள்ளவில்லை, மேலும் உக்ரேன் நெருக்கடி குறித்த எந்தவொரு தீர்வுக்கும் தேவைப்படும் அங்கீகாரத்தை பொறுத்தவரையில், "சட்டபூர்வமான" மூலோபாய நலன்களை உக்ரேன் மீது ரஷ்யா கொண்டுள்ளது என்பதையும் மீண்டும் மீண்டும் பிரகடனம் செய்துள்ளது.

மோடியின் மாஸ்கோ பயணத்தில் அவருடன் சென்ற குறிப்பிடத்தக்க அளவிலான வர்த்தக பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டி உள்ளது போன்று புது டெல்லி, மற்ற பிரிக்ஸ் நாடுகளைப் போலவே, ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது.

இந்தியாவின் அணுகுமுறை வாஷிங்டனை குழப்பமடையச் செய்துள்ளது. ஆயுத வளர்ச்சி ஒப்பந்தங்களை சலுகைகளாக வழங்கி இந்தியா உடனான நட்புறவை விடாமுயற்சியுடன் தக்கவைத்துக் கொள்ளவும், கிழக்கு ஆசியாவுடன் பொருளாதார மற்றும் மூலோபாயக் கூட்டுக்களை மேம்படுத்துவதில் உதவி செய்யவும் முனையும் அதேசமயத்தில், ரஷ்யா உடனான இந்தியாவின் நீண்டகால மூலோபாயக் கூட்டிற்கு தடைகளை ஏற்படுத்துவதும், இறுதியில் இக்கூட்டினை முறியடிப்பதும்தான் ஒபாமா நிர்வாகத்தின் உள்நோக்கம் என்பதை சமிக்ஞை செய்து காட்டியுள்ளது.

மாஸ்கோவில், வருடாந்திர இந்திய-ரஷ்ய உச்சிமாநாட்டின்போது மற்ற பிரதிநிதிகளின் வருகைக்கு முன்பு, மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடன் தங்கள் இருவருக்கிடையே மட்டுமான ஒரு கூட்டத்தினை நடத்தினார். அவர்கள் இருவரும் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினர் மேலும், இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ரஷ்யன் நிறுவனங்களையும் சந்தித்தனர்.

உச்சிமாநாட்டில், மோடி மாஸ்கோவை புது டெல்லியின் "வலுவான மற்றும் நம்பகமான" நண்பர் என்றும் இது "எப்போதும் கடினமான காலங்களில் நம்முடன் உறுதுணையாக இருந்தே வருகிறது" என்பதையும் குறிப்பிட்டுக்காட்டினார். பனிப்போர் காலத்தில், அணிசேரா இயக்கத்தின் தலைவன் என அழைக்கப்பட்ட இந்தியா முன்னாள் சோவியத் யூனியனுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்தது. இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் "தொடர்ச்சியாக நம்பிக்கையுடன்" வளர்க்கப்பட்டு வருகின்ற "தனித்துவம் மிக்க மூலோபாய கூட்டுறவு" என குணாம்சப்படுத்தி புட்டின் தனது புகழாரத்தை சூட்டினார்.

மோடி பயணத்தின்போது, பாதுகாப்பு மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பதினாறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவற்றில், இந்தியாவில் பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் காமோவ்-226 தாக்குதல் ஹெலிகாப்டர் தயாரித்தல் குறித்த ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பெரிய மலிவு உழைப்புக் களமாக இந்தியாவை மாற்ற அவரது அரசு முயற்சிக்கும் அதேவேளையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' (Make in India) என்ற கொள்கையின்கீழ் ஒரு பெரிய பாதுகாப்பு தளத்திற்கான முதல் திட்டமாக இரண்டாவதாக குறிப்பிடப்பட்டது இருந்தது என மோடி பெருமையடித்துக் கொண்டார். இந்திய நிறுவனம் ரிலயன்ஸ் டிபெஃன்ஸ், (Reliance Defense) ரஷ்ய அரசிற்கு சொந்தமான ஆயுதத் தயாரிப்பாளர் அல்மாஸ்-ஆன்டே (Almaz-Antey) உடன் ஹெலிகாப்டர் தயாரிப்பு மற்றும் பராமரிப்பிற்கென 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

தற்போது அமெரிக்கா கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தியாவின் முதன்மை ஆயுத விநியோகஸ்தர் என்ற நிலையை மீண்டும் ரஷ்யா பெறுவதற்கான ஒரு முயற்சியாக ரஷ்யா இணை தயாரிப்பு ஆயுத பேரங்களை இந்தியாவிற்கு வழங்குகிறது. "இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்துடன் ரஷ்யா முன்னோக்கி நகர்கிறது என மற்ற அனைவரும் வாக்குறுதிகளை முன்வைக்கும்போது", ஒரு அரசு அதிகாரி ரஷ்யா ஒரு மிக நம்பகமான விற்பனையாளராக இருந்தது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

எனினும், இந்தியா அல்மாஸ்-ஆன்டேவிடமிருந்து 4.5 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் ஐந்து S-400 ரக விமானப் பாதுகாப்பு கருவிகள் வாங்கவிருந்த ஒப்பந்தமானது தோல்வியடைந்தது. இந்தியாவின் பிராந்திய போட்டியாளரான பாகிஸ்தான் மீதான இந்தியாவின் இராணுவ நலன்களை S-400 ஆனது குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தும். ரிலயன்ஸ் டிபெஃன்ஸ் வியாழக்கிழமை அளித்த ஒரு அறிக்கையில், ரஷ்ய நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தைகளில் விமானப் பாதுகாப்பு கருவிகளும் ஒரு அங்கமாக இருக்கலாம் என உணர்த்தியுள்ளது.

அமெரிக்காவுடன் இந்தியாவின் வளர்ந்துவரும் மூலோபாயக் கூட்டுக்கள் மீதான மாஸ்கோவின் கவலைகளினால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வு, இந்தியாவிற்கு உயர் தொழில்நுட்ப விமான பாதுகாப்பு கருவிகளை வழங்குவதில் தெளிவாக ஒரு பாத்திரம் வகித்துள்ளது. மாஸ்கோ மற்றும் வாஷிங்டன் இடையே அதிகரித்துவரும் பதட்டங்களில் இந்தியா குறைந்தபட்சம் நடுநிலைமையை வகிக்க வேண்டுமென ரஷ்யா விரும்புகிறது.

அதேசமயத்தில், புது டெல்லி வாஷிங்டனை நோக்கி மிகவும் சாய்ந்துவிட்ட நிலையில், ரஷ்யா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்கத் தொடங்கிவிட்டது. தற்போது தாக்கும் ஹெலிகாப்டர் வரையிலான நிலையில் இருப்பினும், எதிர்கால விற்பனை போர் ரக விமானங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நிகழ்ந்த முன்னெப்போதும் காணப்படாத உறவுகளின் இறுக்கத்தை எளிதாக வலுப்படுத்தலாம் என சீனா பரவலாக நம்புகிறது.

இந்தியாவில் குறைந்தபட்சம் இன்னும் ஆறு அணு மின் நிலையங்களை ரஷ்யா கட்டுவதற்கான ஒப்பந்தமும் ஏனைய ஒப்பந்தங்களில் அடங்கியுள்ளது. அடுத்த ஒரு தசாப்தம் முழுவதிலும் இந்தியாவிற்கு வருடத்திற்கு 10 மில்லியன் டன் எண்ணெய் வழங்க ரஷ்ய அரசிற்கு சொந்தமான ரோஸ்நெஃப்ட் எண்ணெய் நிறுவனம் ஒத்துக் கொண்டுள்ளது. ஆய்வு பயணம் மற்றும் ஹைட்ரோகார்பன் உற்பத்திக்கான ஒத்துழைப்பினை வளர்ப்பதன் ஒரு அங்கமாக சைபீரியாவிலுள்ள ரோஸ்நெஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வான்கர் எண்ணெய் வயல்களில் இந்தியா தனது பங்குகளை அதிகரிக்கும்.

இந்தியாவில் உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளி துறைகள் உட்பட பல துறைகளில் முதலீடு செய்ய ரஷ்ய தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புட்டின் உடனான கூட்டு செய்தியாளர் கூட்டத்தின்போது, "இந்தியாவின் பொருளாதார மாற்றத்தில் முக்கிய பங்குதாரராக ரஷ்யாவை நான் பார்க்கிறேன்" என மோடி அறிவித்தார். மோடி மற்றும் புட்டின் உரையாற்றிய இந்திய-ரஷ்ய முதன்மை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் ரஷ்ய நிறுவனங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டபோதிலும், மோடியுடன் 19 இந்திய முதன்மை நிர்வாக அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மேற்கிலிருந்து தடைகளை எதிர்கொள்வதுடன், இந்தியாவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வளர்க்க ரஷ்யா மிகவும் முனைப்பாக உள்ளது. இருதரப்பு வர்த்தகம் தற்போதுள்ள 10 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2025ம் ஆண்டு வாக்கில் 30 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உடனான ரஷ்யாவின் உறவுகளை பலவீனப்படுத்த வாஷிங்டன் முனைந்து கொண்டிருக்கிறது என்பதை நன்கறிந்த நிலையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நிரந்தர இடம் பெற்று ஒரு உலக சக்தியாக மாற விரும்பும் புது டெல்லியின் இலட்சியத்திற்கு "வலுவான ஆதரவு" அளிப்பதன் மூலம் மோடியை ஈர்க்க புட்டின் முயன்றார். இந்தியா ஒரு "தகுதியுடைய மற்றும் வலிமையான வேட்பாளர்" ஆக இருந்தது என்றும், அதனால் உயர்மட்ட ஐ.நா. பொது அமைப்பில் "சுயாதீன மற்றும் பொறுப்பான அணுகுமுறை" யையும் கொண்டுவர இயலும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும், "சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஒரேமாதிரியான அணுகுமுறைகளை ரஷ்யா மற்றும் இந்தியா உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக உள்ளது. சிரியாவிலுள்ள மோதல்களுக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பது மற்றும் ஆப்கானிஸ்தானில் தேசிய சமரசத்தில் முன்னேற்றம் காண்பது போன்றவற்றிற்காக நமது நாடுகள் இருக்கின்றன. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையின்கீழ் இயங்கக்கூடிய ஒரு பரந்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்கவுள்ள உலக சமுதாயத்தின் நலன்களில்தான் இது உள்ளது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்" என புட்டின் வலியுறுத்தினார்.

சிரியாவில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமியவாத அரசை (ISIS) எதிர்த்து போராடுவது என்ற போர்வையின்கீழ் அவர்களது இராணுவ தலையீடுகளை தீவிரப்படுத்துவது ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அகற்றுவதையே நோக்கமாக கொண்டது. எதிரணி போராளிகளை எதிர்த்து தாக்குதல்கள் நடத்துவது உட்பட அசாத்துக்கு இராணுவ உதவிகளை ரஷ்யா அளித்துவருகிறது, எதிர்கட்சி குழுக்களுடன், அசாத் ஆட்சியின் பிரிவுகளும் சேர்ந்து ஒரு "அரசியல் தீர்வை" பரிந்துரைப்பதன் மூலம் தனது நலன்களை பலப்படுத்திக் கொள்ள முயன்றுவருகிறது.

இப்பிரச்சினையில் ரஷ்யாவிற்கு ஆதரவாக தனது விருப்பமுள்ளதை இந்தியா சமிக்ஞை செய்து காட்டியுள்ளது. மோடியின் பயணத்தின்போது, "அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் மற்றும் சிரிய-உள்நாட்டு பேச்சுவார்த்தையின் மூலம்" சிரிய பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் ஒரே விதமான பகிர்வினை கொண்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்தார். ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, சிரியாவில் ரஷ்ய இராணுவ தலையீடு, அதுவும் அசாத் ஆட்சியின் இசைவுடன்தான் அதன் படைகள் செயல்படுகின்றன, அதற்கு இந்தியாவும் ஆதரவளிக்கிறது என்று கூறினார், இது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பற்றிய விமர்சனத்தை அர்த்தப்படுத்துகிறது.