ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Economic nationalism, war and the fight for international socialism

பொருளாதார தேசியவாதம், போர் மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம்

By Nick Beams
15 March 2016

ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளின் கீழ், ஒவ்வொரு நாடாக அரசியல் வாழ்வில் பொருளாதார தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டு முன்பினும் அதிக முக்கிய பாத்திரம் ஏற்று வருவதால், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கு மற்றும் நிலைநோக்கு மீது அடிப்படை கேள்விகள் எழுந்துள்ளன.

பிரிட்டன் வெளியேறுவது மீதான பிரச்சாரத்தில்—ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருப்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் வெகுஜன வாக்கெடுப்பு ஜூன் 23 இல் நடக்க உள்ள நிலையில்— "வெளியேறலாம்" மற்றும் "இருக்கலாம்" என்று பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளைப் பிரதிபலிக்கும் இரண்டு தரப்புமே, பிரிட்டனுக்கு எது "சிறந்தது" என்ற அர்த்தத்தில் அவர்களது வாதங்களை பரப்பி வருகின்றன. அமெரிக்காவில், முன்னணி குடியரசு கட்சி போட்டியாளர் டோனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் சுய-பாணியிலான "சோசலிசவாதி" சாண்டர்ஸ் இருவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களும் ஒரு பொருளாதார தேசியவாத நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் அழைப்புவிடுகின்றன.

தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் வேலைகள் மலிவு உழைப்பு பகுதிகளுக்கு நாடுகடந்து வெளியே அனுப்பப்படும் நிலையில், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் அழிக்கப்படுவதன் மீது தொழிலாளர்களின் நியாயமான கோபம் மற்றும் விரோதத்தை பற்றிக்கொள்ள முயலும் வகையில், ட்ரம்ப் "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக ஆக்க" வாக்குறுதி அளிக்கிறார் மற்றும் "நியாயமற்ற" வணிக உடன்படிக்கைகளை குற்றஞ்சாட்டுகிறார், அதேவேளையில் சாண்டர்ஸ் சீனா மற்றும் மெக்சிகோ உடனான வர்த்தக உடன்படிக்கைகளுக்கு எதிராக அவை "அமெரிக்க வேலைகளைத் திருடி வருவதாக" சாடுகிறார்.

அவர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், இந்த இரண்டு தரப்புமே ஒரு பொதுவான களத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. அவர்கள் "வேலைகள் ஏற்றுமதி" குறித்த பிரச்சினையை அதன் அடித்தளமான முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் இலாபகர உந்துதலில் இருந்து அகற்றிவிட முயல்கின்றனர்.

அவர்கள் அமெரிக்க தொழிலாளர்களுக்காக பேசவில்லை, மாறாக பிரதான பன்னாட்டு பெருநிறுவனங்களால் தாங்கள் ஆதாயம் இழந்திருப்பதாக உணரும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளது நலன்களை வெளிப்படுத்துகின்றனர் மற்றும் அவர்களது போட்டியாளர்களை விட சற்றும் ஈவிரக்கமின்றி தொழிலாள வர்க்கத்தை சுரண்ட நோக்கம் கொண்டுள்ளனர்.

பல்வேறு "சுதந்திர வர்த்தக" உடன்படிக்கை என்றழைக்கப்படுபவை பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொண்டவை அல்ல, மாறாக பகாசுர பெருநிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்தை விலையாக கொடுத்து அதிகபட்ச இலாபத்தைப் பெறுவதற்கான அவற்றின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அவற்றின் ஆதாயத்திற்காக வடிவமைக்கப்பட்டவை அவை என்பதில் அங்கே கேள்விக்கு இடமில்லை.

ஆனால் அத்தகைய உடன்படிக்கைகள் மற்றும் அவற்றின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை பொறுத்த வரையில், பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் மேலாதிக்க பிரிவுகள் அவற்றை சாதகமாக நோக்குகையில், தொழிலாளர்கள் அவற்றை எதிர்க்க ஒரு தேசியவாத எதிர்ப்பை காட்டவேண்டும் என்பதில் இருந்து எழுவதில்லை. நன்கு ஆராய்ந்து தெளிவு செய்யப்பட்ட மற்றும் விஞ்ஞானப்பூர்வ பகுப்பாய்வின் அடித்தளத்தில் தொழிலாளர்கள் அவர்களது சொந்த சுயாதீனமான முன்னோக்கை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அத்தகைய ஒரு பகுப்பாய்வு, பொருளாதார தேசியவாத பிரச்சாரம் எங்கே இட்டுச் செல்கிறது? தனித்தனியான தேசிய பொருளாதாரங்களுக்குத் திரும்புவதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை முன்னிறுத்துவதன் மூலமாக தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் சித்திரவதையான மற்றும் இரத்தந்தோய்ந்த வரலாறு இதற்கான பதிலை வழங்குகிறது.

 

பொருளாதார தேசியவாதத்தில் தஞ்சமடைதல் என்பது 2008 நிதியியல் நெருக்கடியால் சமிக்ஞை காட்டப்பட்ட பூகோளமயப்பட்ட முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் உடைவிலிருந்து எழுகின்றது. முதலாம் உலக போர் வெடிப்புடன் தொடங்கி பெருமந்தநிலைக்கு இட்டுச் சென்ற முதலாளித்துவ அமைப்புமுறையின் கடந்த முறை மிகப்பெரும் உடைவு, அது எங்கே நகரும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. 1930 களின் போது ஒவ்வொரு நாடும் சுங்கத்துறைகளையும் மற்றும் வரிக்கட்டணத் தடைகளை எழுப்பியதன் மூலமாக உலக சந்தை பொறிவிலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முயன்றதால் அப்போது ஏற்பட்ட பொருளாதார தேசியவாதத்தின் வளர்ச்சி, ஒரு பேரழிவை உண்டாக்கியது.

அமெரிக்காவில் ஜூன் 1930 இல் மற்றும் 1932 இன் இறுதியில் பாதுகாப்புவாத ஸ்மூத்-ஹாவ்லெ சட்டம் (Smoot-Hawley law) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, உலக வர்த்தகம் ஏறத்தாழ அரைவாசியில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு வரை சுருங்கி, ஒட்டுமொத்த பொருளாதாரங்களின் அபிவிருத்திக்கு அல்ல, சிதைவுக்கு இட்டுச் சென்றதாக மதிப்பிடப்படுகிறது. இரண்டாம் உலக போர் மற்றும் பழையபடிக்குக் காட்டுமிராண்டித்தனத்திற்குள் திரும்பியதே அதன் தவிர்க்கவியலாத விளைவாகும்.

பொருளாதார தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான தர்க்கம் மிகத் தெளிவாக ஜேர்மனியின் விடயத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அடோல்ஃப் ஹிட்லர் ஒரு பொருளாதார வல்லாட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்தார். ஆனால் இக்கொள்கை ஜேர்மன் தேசிய-அரசு முரண்பாடுகளுக்கு எதிராக திரும்பியதும், மிகக் குறுகிய காலத்தில் ஒரு பொருளாதார நெருக்கடி அபிவிருத்தியாக தொடங்கியது. ஆகவே மேற்கொண்டு தேசிய பொருளாதார அபிவிருத்திக்குப் பிராந்திய விரிவாக்கம்—உயிர்பிழைப்பிற்கான இடம்—அவசியப்பட்டதால், 1936 இல் இருந்து ஹிட்லர் ஆட்சியின் ஒட்டுமொத்த பொருளாதார கொள்கையும் இராணுவ ஆக்கிரமிப்பின் மீது அடித்தளமிட்டது, இந்த வேலைத்திட்டம் தான் நேரடியாக இரண்டாம் உலக போர் மற்றும் அதன் சகல கொடூர விளைவுகளுக்கும் இட்டுச் சென்றது.

தொழிலாள வர்க்கம் அதன் நிலைப்பாட்டை தீர்மானிப்பதில், மனிதயினத்தின் வரலாற்று அபிவிருத்தியில் முதலாளித்துவம் வகித்த பாத்திரத்தைக் குறித்த ஒரு பரந்த புரிதலின் அடித்தளத்தில் தன்னைத்தானே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 

மார்க்ஸ் மற்றும் அவரைத் தொடர்ந்து ட்ரொட்ஸ்கியும் தொடர்ந்து வலியுறுத்தியதைப் போல, மனிதயினத்தின் வளர்ச்சியானது தொழிலாளர்களது சமூக உற்பத்தித்திறன் அபிவிருத்தியின் அடித்தளத்தில் அமைந்ததாகும், அதுவே சகல சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் அடித்தளமாகும். நிலப்பிரபுத்துவ பிரத்தியேகவாதத்தின் (particularism) முரண்பாடுகளைக் கலைந்து, முதலாளித்துவம், தேசிய-அரசுகளை ஸ்தாபித்து, உற்பத்தி சக்திகளின் அபிவிருத்திக்கு ஒரு பலமான உந்துசக்தியை வழங்கி, நவீன நாகரீகத்திற்கு அடித்தளத்தை அமைத்தது.

ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோ, தேசிய அரசு எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுவிடவில்லை. கடந்த 175 ஆண்டுகளில் அது சர்வதேச வர்த்தக விரிவாக்கம், உலகின் ஒவ்வொரு மூலையிலும் முதலீட்டின் விரிவாக்கம், அத்துடன் சேர்ந்து கடந்த மூன்று தசாப்தங்களில் சர்வதேச உழைப்பு பிரிவினது அபிவிருத்தியின் அடித்தளத்தில் அமைந்த பூகோளமயப்பட்ட உற்பத்தியின் அபிவிருத்தி என இவற்றின் மூலமாக அதிகரித்தளவில் ஒரு உலகளாவிய குணாம்சத்தை ஏற்றுள்ளது.

பொருளாதார வாழ்வின் பூகோளமயமாக்கமே கூட ஒரு மிகப் பிரமாண்டமான முற்போக்கான அபிவிருத்தியாகும். அது தொழிலாளர்களது சமூக உற்பத்தித்திறனை அதிகரித்து, அதன் மூலமாக சமூகத்தின் அபிவிருத்திக்கு ஜடரீதியிலான அடித்தளங்களை அமைத்துள்ளது, இதை ஒரு சில தனிசலுகைக் கொண்டவர்களுக்காக அல்லாமல், வரலாற்றில் முதல்முறையாக, ஒட்டுமொத்த உலக மக்களுக்கான பொருளாதார மற்றும் கலாச்சார நலன்களைப் பூர்த்தி செய்ய முடியும், முன்னெடுக்க முடியும்.

ஆனால் இந்த மிகப் பிரமாண்டமான சாத்தியத்திறனை முதலாளித்துவ இலாபகர மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் மூச்சுமுட்டும் கட்டமைப்பிற்குள் கைவரப்பெற முடியாது. அதற்கு மாறாக இத்தகைய முரண்பாடுகள் தவிர்க்கவியலாமல் மற்றும் இடைவிடாமல் யுத்தத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ச்சியடைவதற்கு இட்டுச் செல்கிறது.

ஆகவே வலதிலிருந்து அல்லது "இடதிலிருந்து" முன்மொழியப்படும் பொருளாதார தேசியவாதத்தின் ஆதரவாளர்கள் கூறுவதைப் போல, உற்பத்தி சக்திகளைத் திரும்பவும் பிற்போக்குத்தனமான தேசிய-அரசு அமைப்புமுறையின் காலங்கடந்த கட்டமைப்பிற்குள் கொண்டு செல்வதல்ல, மாறாக உற்பத்தி சக்திகளைக் கட்டுப்படுத்தும் பிற்போக்குத்தனமான சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை இல்லாதொழிப்பதன் மூலமாக அதை சுதந்திரம் அடையச் செய்வதே மிக முக்கிய வரலாற்று கடமையாகும்.

 

இது ஏதோ கற்பனாவாத கருத்துரு அல்ல. அதைக் கைவரப்பெறுவதற்கான ஜடரீதியிலான அடித்தளம் இதே பூகோளமயப்பட்ட உற்பத்தியால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அது ஓர் அளப்பரிய சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை உருவாக்கி உள்ளது. இது முதலாளித்துவ உற்பத்தி நிகழ்வுபோக்கால் அது புறநிலைரீதியில் ஐக்கியப்பட்டுள்ளது. அதன் வாழ்க்கை நிலைமையின் காரணமாக ஒவ்வொரு நாட்டிலும் இலாபகர அமைப்புமுறையின் சூறையாடல்களை எதிர்க்க முன்தள்ளப்பட்டுள்ளது.

 

தேசிய-அரசு அமைப்புமுறையின் சுவர்கள் மற்றும் தடைகளை உடைத்து, இலாபகர அமைப்புமுறையைக் கவிழ்த்து, ஒரு திட்டமிட்ட மற்றும் நனவுபூர்வமாக ஒழுங்கு செய்யப்பட்ட மற்றும் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தைக் கொண்டு, உலகளாவிய உற்பத்தி சக்திகளின் ஒருமித்த அபிவிருத்தியின் அடித்தளத்தில், ஒரு புதிய மற்றும் உயர்ந்த சமூக-பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்திப்பதற்காக அரசியல் அதிகாரத்தை அதன் கரங்களில் பெறுவதே அதன் கடமையாகும்.

அத்தகைய ஒரு முன்னோக்கை முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களும் மற்றும் ஐயுறவாதிகளும் பரிகாசம் செய்வார்கள் மற்றும் அது மனிதயின இயல்பு என்றழைக்கப்படுவதை மீறுவதாக அறிவிப்பார்கள். மனிதயின இயல்பின் மிக உயர்ந்த வெளிப்பாடு சந்தை மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறை என்றவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் அது மனிதயினத்திற்கு ஒரு முழு களங்கமாகும்.

ஆனால் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வடிவில் முதலாளித்துவம் அதற்கு புதைக்குழி வெட்டிவோரை அதுவே உருவாக்கி உள்ளதைப் போலவே, ஒரு திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்திற்கான ஜடரீதியிலான அடித்தளங்களையும் அது உருவாக்கி வைத்துள்ளது. இன்று உலகில், நிமிடத்திற்கு நிமிடம் அல்லது நொடிக்கு-நொடி தனது உலகளாவிய செயல்பாடுகளைக் குறித்து திட்டமிடாத ஒரேயொரு பன்னாட்டு பெருநிறுவனமோ அல்லது சர்வதேச நிதியியல் அமைப்போ இருக்காது. இலாபத்திற்கான அதன் உந்துதலில், முதலாளித்துவ அமைப்புமுறை உலகெங்கிலும் விரிந்துள்ள ஒரு பரந்த தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறையை நிறுவி உள்ளது.

இந்த சிக்கலான மற்றும் உலகளவில் ஒன்றோடொன்று பிணைந்த உற்பத்தி முறையில், அதனுடன் தொடர்புபட்ட தகவல் மற்றும் ஏனைய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன, இதை செய்வது இவற்றின் பலன்களை இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரும் செல்வந்தர்கள் அல்ல, மாறாக உற்பத்தி துறையில் இருக்கும் தொழிலாளர்கள் முதல் தொழில்நுட்பங்களை வரையறை செய்வதற்காக அதை வடிவமைத்து பராமரித்து வருபவர்கள் வரையில் பில்லியன் கணக்கான இந்த உழைக்கும் மக்களின் ஒருங்கிணைந்த ஸ்தூலமான மற்றும் புத்திஜீவிய உழைப்பாகும்.

இந்த மிக பிரமாண்டமான உற்பத்தி சக்தி உருவாக்கி உள்ள சர்வதேச தொழிலாள வர்க்கம், இப்போது அதை கட்டுப்பாட்டில் எடுத்து, ஒட்டுமொத்த சமூகத்தின் அபிவிருத்திக்காக அதை பயன்படுத்த வேண்டும்.

இந்த உலகில் ட்ரம்ப் மற்றும் சாண்டர்ஸ் முன்னெடுக்கும் பொருளாதார தேசியவாத முன்னோக்கு, மனிதயினத்தை ஒரு புதிய இருண்ட காலத்திற்குள் பின்னோக்கி இழுக்கும் ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

சர்வதேச சோசலிச முன்னோக்கு, மனிதயின முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாகும். ஆனால் அதற்காக நனவுபூர்வமாக போராடினால் மட்டுமே அதைக் கைவரப்பெற முடியும், அதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் இணைந்து அதை கட்டமைக்க முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.