ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

70 years since the Hitler-Stalin Pact

ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தின் 70 ஆண்டுகளுக்கு பின்னர்

Alex Lantier
24 August 2009

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 23 1939 அன்று நாஜி வெளியுறவு மந்திரி Joachim von Ribbentrop உம் ஸ்ராலினின் தலைமை எடுபிடியும் சோவியத் வெளியுறவு மந்திரியுமான Vyacheslav Molotov வும் மாஸ்கோவில் சந்தித்து, ஹிட்லருடைய ஜேர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே அவசரசமாக பேச்சுவார்த்தை செய்து முடிக்கப்பட்டிருந்த, ஒன்றை ஒன்று தாக்குவதில்லை என்ற உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

இந்த உடன்பாட்டின் விளைவு நாஜிக்களுக்கு மிகச் சாதகமான நிலையில் ஜேர்மனி ஐரோப்பாவில் போரைத் தொடுப்பதற்கு வழிவகுத்தது. ரிப்பன்ட்ரோப் மாஸ்கோவிற்கு பயணித்தபோதே, நாஜி ஆட்சியானது இரு முன்னணிகளை -சோவியத் ஒன்றியம் மற்றும் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்- எதிர்நோக்க வேண்டிய தேவையில்லாமல் போலந்தின் மீது தாக்க அனுமதிக்கும் வகையில், சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாட்டை உறுதி செய்வதற்கு பெரும் ஆர்வத்தைக் காட்டியது. இந்த ஆக்கிரமிப்பு செய்யா உறுதிமொழியை தவிர, உடன்பாட்டின் பொருளுரையில், நாஜி ஜேர்மனிக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே போலந்து, பால்டிக் நாடுகள் ஆகியவை பிரிக்கப்படுதல் பற்றிய இரகசிய பிரிவுகள் இருந்தன. ஜேர்மனி மேற்கு போலந்து, லித்துவேனியாவை பெறவிருந்தது, அதேவேளை சோவியத் ஒன்றியம் கிழக்கு போலந்து, லாட்வியா மற்றும் எஸ்தோனியா ஆகிவற்றை கைவசப்படுத்த இருந்தது.

செப்டம்பர் 3, 1939 ல் முறையான போர் அறிவிப்பை தொடர்ந்து, நாஜிக்கள் போலந்து மீது செப்டம்பர் 1 அன்று படையெடுத்தனர். இது ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தை குறித்தது--இப்போர் இறுதியில் 50 மில்லியனில் இருந்து 70 மில்லியன் உயிர்களை காவுகொள்ள இருந்தது. சோவியத் படைகள் செப்டம்பர் 17, 1939 ல் கிழக்கு போலந்தில் நுழைந்தன.

சோவியத் ஒன்றியம் காட்டிய நடுநிலைமையானது, போலந்து படைகளை விரைவாகத் தோற்கடித்தபின், நாஜிக்களை 1940ம் ஆண்டு மேற்கு ஐரோப்பாவிற்கு எதிராகக் குவிப்புக் காட்ட அனுமதித்தது. ஸ்ராலினுடைய இசைவுடன், ஹிட்லர் டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பிரான்சை வெற்றி கொண்டார். ஜூன் 1941ல் தவிர்க்க முடியாமல் சோவியத் மீது நாஜி படையெடுப்பு தொடங்கியவுடன், சோவியத் ஒன்றியம் ஐரோப்பிய கண்டத்தில் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. நாஜி படையெடுப்பு உடனடியாய் நிகழக்கூடியதாய் இருக்கும் என்ற பெரும் சான்றுகளை புறக்கணித்த ஸ்ராலின், உடன்பாட்டின் விதிகளை அப்படியே கடைப்பிடித்தார். ஜூன் 22, 1941 காலை நாஜிக்கள் படையெடுப்பை தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாகக்கூட கிரெம்ளின் முக்கிய மூலோபாய மூலப்பொருட்களை நாஜி ஜேர்மனிக்கு அனுப்பி வைத்திருந்தது.

ஒப்பந்தத்தின் மிக முக்கியமான கூறுபாடு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கருத்தை பற்றி கிரெம்ளின் கொண்டிருந்த முழு இகழ்வுணர்வும் பொருட்படுத்தாத்தன்மையும் ஆகும். பேச்சுவார்த்தைகளின்போது ஸ்ராலின் ஹிட்லருக்கு நீண்ட ஆயுள் கூறி மது அருந்தும்போது கூறியது: "ஜேர்மனிய மக்கள் தங்கள் Führer (தலைவர்) ஐ எவ்வளவு நேசிக்கின்றனர் என எனக்குத் தெரியும்". கிரெம்ளின் காட்டிய வழியின்படி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பிற்போக்கை உருவப்படுத்திய பாசிச ஆட்சிமீது உத்தியோகபூர்வ நடுநிலையைக் காட்டின.

நாஜி மற்றும் சோவியத் படைகள் இரண்டுமே ஆக்கிரமித்த பகுதிகளில் பெரும் குற்றங்களை இழைத்தன. நாஜி படைகள் Operation Tannenberbg ஐ தொடக்கி, போலந்தில் அறிவார்ந்தவர்கள், பண்பாளர்கள், அரசியல் வாழ்வில் இருந்த பல்லாயிரக்கணக்கானவர்களை சிறைபிடித்து தூக்கிலிட்டனர். மார்ச் 1940ல் சோவியத் படைகள் கட்யுன் காடுகளில் போலந்து அதிகாரிகளை படுகொலை செய்ய ஏற்பாடு செய்தன.

ஹிட்லரே வியக்கும் வகையில், உடன்பாடு பற்றிய பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது, நாஜிக்கள் ஜனவரி 1933ல் பதவிக்கு வந்தபின் கொடுஞ்சிறை முகாமில் அடைக்கப்பட்டு வாடிவந்த ஜேர்மனிய கம்யூனிஸ்ட் தலைவர் ஏர்னஸ்ட் தால்மன்னை விடுவிக்குமாறு ஸ்ராலின் கோரவில்லை. பின்னர், மூன்றாம் ரைக் சரிவதற்கு சற்று முன் நாஜிக்கள் தால்மன்னை படுகொலை செய்தனர்.

ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கை மேம்போக்காக காணும்போது, ஜேர்மனி, சோவியத் ஒன்றியம் இரு நாடுகளும் கொண்டிருந்த வெளியுறவுக் கொள்கைகளில் அதிர்ச்சி தரும் வகையில் முற்றிலும் மாற்றத்தைக் கொடுத்தது ஆகும். நாஜி ஆட்சி, தன்னை சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிச அச்சுறுத்தலை எதிர்க்கும் கோட்டை என்று காட்டிக் கொண்டிருந்தது. தன்னுடைய பங்கிற்கு ஸ்ராலினிச ஆட்சி, நாஜி ஏகாதிபத்தியத்தின் சமரசத்திற்கு இடமில்லாத விரோதி என்றுகூறிக் கொண்டிருந்தது. இதனால் இந்த உடன்பாடு பிரிட்டனிலும், பிரான்ஸிலும் நம்பமுடியாத தன்மை, அதிர்ச்சி ஆகியவற்றை எதிர்கொண்டது. ஆனால் உடன்பாடு பற்றிய அவர்கள் கண்டனத்தில் பாசாங்குத்தனம்தான் அதிகம் இருந்தது; ஏனெனில் இரு ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் சோவியத் ஒன்றியத்தின் இழப்பில் ஹிட்லருடன் உடன்பாடு காண விரும்பியிருந்தன.

ஆகஸ்ட் 1939 வரை பிரெஞ்சு, பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகள் மேற்கிற்கு எதிராக ஹிட்லர் இராணுவத்தை (Wehrmacht) கட்டவிழ்த்து விடமாட்டார், மாறாக சோவியத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடுவார் என நம்பியிருந்ததன. இதுதான் 1938ம் ஆண்டு மூனிச் ஒப்பந்தத்திற்கு அடிப்படை ஆகும்: ஒரு பயனற்ற நாஜி உறுதிமொழி, பிரிட்டிஷ் பிரதமர் நெவில் சேம்பர்லின் "நம்முடைய காலத்தின் சமாதனம்" என்று கூறியிருந்ததற்கு பதிலாக, பிரிட்டனும் பிரான்ஸும் செக்கோஸ்லாவியாவை நாஜிக்கள் துண்டாட ஒப்புக் கொண்டிருந்தன.

சோவியத் கொள்கையில் திடீர் திருப்பம் பற்றி ஒரு பார்வையாளருக்குத்தான் வியப்பு ஏற்படவில்லை: அரசியல்ரீதியாக நாடுகடத்தப்பட்டவராக மெக்சிகோவில் அப்பொழுது வசித்துவந்த, நான்காம் அகிலத்தின் தலைவரான லியோன் ட்ரொட்ஸ்கிதான் அவர்.

அவருடைய இயல்பான தொலைநோக்கில், தனது கொள்கையால் கடுமையான உள்நாட்டு நெருக்கடிகளையும் ஐரோப்பாவில் தொடர்ச்சியான விரோத ஆட்சிகளையும் எதிர்கொண்டிருந்த ஸ்ராலின் போர் ஆபத்தை ஒதுக்குவதற்கு ஹிட்லருடன் உடன்பாட்டைக் காணக்கூடும் என்று கணித்திருந்தார். ஜூன் 1939ல் ட்ரொட்ஸ்கி எழுதினார்: "இந்த ஆண்டு கட்சி காங்கிரசில் ஸ்ராலின் முதல்முறை வெளிப்படையாக முதலாளித்துவ நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார முறையில் மிகவும் பின்தங்கியுள்ளதாக அறிவித்தார். வெளியுறவுக் கொள்கையில் பின்னடைவுகளை விளக்குவதற்காக மட்டும் இந்த ஒப்புதலை அவர் கொடுக்கவில்லை. சமாதானத்திற்கு ஸ்ராலின் கடுமையான விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தார். அவர் போரை "வெறுத்தார்" என்பதற்காக இல்லாமல், அதன் விளைவுகள் பற்றிப் பெரிதும் அஞ்சியதால் இந்த நிலைப்பாடு இருந்தது.

"இந்த நிலைப்பாட்டில் இருந்து கிரெம்ளினுக்கான இரு மாற்றீடுகளின் ஒப்புமை நலன்களை மதிப்பிடுவது ஒன்றும் கடினமல்ல: ஜேர்மனியுடன் உடன்பாடா அல்லது "ஜனநாயக நாடுகளுடன்" கூட்டா என்பதே அது. ஹிட்லருடன் நட்பு என்பது மேற்குப் புறத்தில் போர் ஆபத்தை உடனடியாக தவிர்க்கும் என்ற பொருளை கொண்டிருந்தது, அதன் மூலம் தூரக்கிழக்கு பகுதியில் போர் ஆபத்தைப் பெரிதும் குறைத்தலாக இருந்தது. ஜனநாயக நாடுகளுடன் கூட்டு என்பது போர் ஏற்பட்டால் உதவி கிடைக்கும் வாய்ப்பு என்பது மட்டும்தான். ஆனால் போரைத் தவிர வேறு வழி இல்லை என்றால், நட்புகளை பெறுவது தனிமையாக இருப்பதை விட நல்லது. ஆனால் ஸ்ராலினுடைய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைப் பணி போர் ஏற்பட்டால் மிகச் சாதகமான நிலைமைகளை கொள்ளுவதே ஒழிய, போரைத் தவிர்ப்பது என்று இல்லை. இதுதான் ஸ்ராலின், மோலோடோவ், வோரோஷிலோவ் ஆகியோர் "சோவியத் ஒன்றியத்திற்கு நட்புகள் தேவையில்லை" என்று அடிக்கடி வெளியிட்ட அறிக்கைகளின் மறை பொருள். ("The Riddle of the USSR," The Writings of Leon Trotsky, 1938-1939 (New York: Pathfinder Press, 2002) p. 403-404).

கிரெம்ளினுடைய வெளியுறவுக் கொள்கை பற்றிய தன்னுடைய தீர்ப்புரையை கடந்த தசாப்தத்தில் சோவியத் அதிகாரத்துவம் தொடர்ந்திருந்த எதிர்ப்புரட்சி கொள்கைகளைப் பற்றிய ஒரு பரந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கி கொண்டிருந்தார்.

1933ல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தபின் ஒரு சோவியத்-ஜேர்மனிய போர் பற்றிய அச்சங்கள் பெருகியவுடன், கிரெம்ளின் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பாசிசத்திற்கு எதிராக முதலாளித்துவ மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளுடன் உடன்பாடுகளைக் காண முற்பட்டது. இந்த உறவுகளின் அடிப்படை ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆதரவை நாடுவதற்காக முதலாளித்துவ ஆட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை அரசியலளவில் கீழ்ப்படுத்துவதாகும். இடதுசாரி மற்றும் புரட்சிகர இயக்கங்களை அரசியல் ரீதியாகவும் சரீரதியாகவும் நசுக்குவதின் மூலம் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆதரவை ஸ்ராலின் நாட முற்பட்டார். இதையொட்டி விளைந்த "மக்கள் முன்னணி" கூட்டுக்களை ட்ரொட்ஸ்கி நேர்த்தியாக, "முதலாளித்துவ தாராளவாதம் மற்றும் GPU விற்கு இடையேயான (கிரெம்ளினின் இரகசிய போலீஸ்) உடன்பாடு" என்று விவரித்தார்.

பிரான்சில் 1936 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களாலும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியாலும் (PCF) காட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது. PCF தலைவரான Maurice Thorez, சோசலிஸ்ட் கட்சி மற்றும் முதலாளித்துவ Radical Party இரண்டையும் கொண்டிருந்த மக்கள் முன்னணி கூட்டணி அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, "எப்பொழுது வேலைநிறுத்தத்தை முடிக்க வேண்டும் என்று ஒருவர் அறிந்திருக்க வேண்டும்" என்று நன்கு அறிந்த வகையில் அறிவித்தார். 1938ல் மக்கள் முன்னணி அரசாங்கம் கவிழ்ந்து, Daladier உடைய பழமைவாத அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டுவந்தது.

ஸ்பெயினில் மக்கள் முன்னணி மூலோபாயம் ஸ்பானிய பாட்டாளி வர்க்கத்தை ஸ்பெயினின் புரட்சிக் காலத்திலும், 1936-1939 ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போதும் பாசிச ஆட்சிக் கவிழப்பு தலைவர், தளபதி பிரான்ஸிஸ்கோ பிராங்கோவிற்கு எதிராக முதலாளித்துவ வர்க்கத்துடன் பிணைத்தது. ஆயுதமேந்திய தொழிலாளர்களின் அமைப்புக்கள் ஆயுதங்கள் முதலாளித்துவ Manuel Azana அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிரெம்ளின் வலியுறுத்தியது; அவரிடம் போர் முயற்சியின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டையும் விட்டுவிட வேண்டும் என்றும் கூறியது.

ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சுட்டிக் காட்டியுள்ளதுபோல், அஜானாவின் அரசாங்கம் பிராங்கோவை விட ஸ்பெயினின் புரட்சியைக் கண்டு பெரிதும் அஞ்சியது. பிராங்கோவின் விவசாய படைகள்மீது வெற்றிகொள்ள நிலத்தை தேசியமயமாக்கும் அழைப்பிற்கு அது விடாப்பிடியாக விரோதப் போக்கை காட்டியது. பிரான்ஸும் பிரிட்டனும், பெயரளவிற்கு சோவியத் நட்பு நாடுகளாயினும், ஸ்பெயின் குடியரசிற்கு உதவ தடையை விதித்தின; இதற்கு காரணம் புரட்சி ஸ்பெயினுக்கும் அப்பால் செல்லக்கூடும் என்ற பயம்தான். இதன் இறுதி விளைவு ஸ்பெயினின் பாசிஸ்ட்டுக்கள் வெற்றி பெற்றதுதான்.

ட்ரொட்ஸ்கி கூறினார்: "சமீபத்திய ஆண்டுகளில் ஸ்ராலினின் சர்வதேச கொள்கையின் அடிப்படை தன்மை இதுதான்: எண்ணெய், மாங்கனீஸ் இன்னும் மற்ற பொருட்களின் மீது வணிகம் செய்வது போல் அவர் தொழிலாளர் வர்க்க இயக்கத்திலும் வணிகம் செய்கிறார். இந்த அறிக்கையில் சிறிதும் மிகையில்லை. பல நாடுகளில் இருக்கும் காமின்டேர்ன் பிரிவுகளையும், ஒடுக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் விடுதலைப் போராட்டங்களையும் ஏகாதிபத்திய சக்திகளுடன் அவர் நடத்தும் பேரங்களில் சிறிய சில்லறை மாற்றங்களாகப் பார்க்கிறார்." ("What lies behind Stalin's bid for agreement with Hitler?", ibid. p. 235)

சோவியத் ஒன்றியத்திற்குள்ளேயே, ஸ்ராலின் புதிதாக வந்துள்ள ஏகாதிபத்திய நட்புகளுடன் நல்லுறவு கொண்டு அரசியல் அதிருப்தியை திசை திருப்ப அவருடைய ஆட்சிக்கு எதிரான மார்க்சிச எதிர்ப்பை அழிக்க முனைந்தார். மாஸ்கோ விசாரணைகளிலும் அதைத் தொடர்ந்த 1936-38 மாபெரும் களையெடுப்புக்களிலும் ஸ்ராலின் பழைய போல்ஷிவிக் தொண்டர்களையும் சோசலிச அறிவுஜீவிகளின் பெரும் பகுதியினரையும் போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு உட்படுத்தி படுகொலை செய்தார். இதில் மார்ஷல் மிகைல் துகாஷேவ்ஸ்கி, தளபதி அயோனா யாகிர் போன்றோர் உள்பட சோவியத் அதிகாரிகள் பிரிவில் நான்கில் மூன்று பகுதியினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்-- இது செஞ்சேனேயின் போர்த் தயாரிப்புநிலைக்கு பேரழிவு விளைவுகளைக் கொடுத்தது.

ட்ரொட்ஸ்கி எழுதினார்: "கடந்த மூன்று ஆண்டுகளாக ஸ்ராலின் லெனின் தோழர்களை ஹிட்லரின் முகவர்கள் என்று கூறியுள்ளார். உயர் படைத்தலைவர்களின் மலர் போன்றவர்களை அவர் அழித்துக் கொன்றார். கிட்டத்தட்ட 30,000 அதிகாரிகளை கொன்றார், பதவியை விட்டு நீக்கினார் அல்லது நாடு கடத்தினார்-- அனைத்தும் ஹிட்லர் அல்லது அவருடைய கூட்டாளிகளின் முகவர்கள் என்ற குற்றத்தைச் சாட்டி அவ்வாறு செய்தார். கட்சியை சிதறடித்து, இராணுவத்தை திறனற்றதாக செய்தபின், இப்பொழுது ஸ்ராலின் ஹிட்லரின் முக்கிய முகவர் என்ற பாத்திரத்திற்கு வேட்பாளராக காட்டிக் கொள்கிறார். ("Stalin's Capitulation," ibid. p. 254)

இந்த வரிசையான காட்டிக்கொடுப்புக்களின் இறுதியில் வந்த ஹிட்லர்-ஸ்ராலின் உடன்படிக்கையானது, தன்னுடைய கொள்கைகளே பெரிதும் பொறுப்புடையதாக இருந்த ஒரு போரைத் தவிர்ப்பதற்கான இறுதியான, வெற்றிபெறாத ஸ்ராலினினின் முயற்சி ஆகும். இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஜேர்மனி சோவியத் ஒன்றியத்தின்மீது படையெடுத்த போது, சோவியத் ஒன்றியம் முற்றிலும் தயாரிப்பற்ற நிலையில் இருந்தது. கிட்டத்தட்ட 30 மில்லியன் சோவியத் வீரர்களும் குடிமக்களும் பாசிசத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தில் உயிரிழந்தனர்.

ஆனால், இறுதியில் சோவியத் மக்களின் வியக்கத்தக்க தியாயகங்கள் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதின் மூலம் காட்டிக் கொடுக்கப்பட்டது--அதுதான் ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் இறுதி விளைவு ஆகும்.

மேலதிக வாசிப்புகளுக்கு:

ஹிட்லரின் மூன்றாம் குடியரசு தோல்விக்குப் பிந்தைய எழுபது ஆண்டுகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): ஸ்ராலின்மற்றும் முதலாளித்துவ மீட்சியின் பாதுகாவலன்