ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Security and the Fourth International

The Smith Act trial and government infiltration of the Trotskyist movement

பாதுகாப்பும் நான்காம் அகிலமும்

ஸ்மித் சட்ட விசாரணையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளான அரசாங்கத்தின் ஊடுருவலும்

By Eric London
8 December 2016

எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, 1941 டிசம்பர் 8 அன்று, அமெரிக்க அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு ஆலோசனையளித்ததாகக் கூறி 18 ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பின்வரும் கட்டுரையானது டோனா டி.ஹவேர்டி-ஸ்டேக் (Donna T. Haverty-Stacke) அவர்களால் எழுதப்பட்ட வழக்குவிசாரணையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள்: FDR காலம் தொடங்கி பேச்சு சுதந்திரமும் அரசியல் துன்புறுத்தலும் என்ற மதிப்புமிக்க நூலில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அத்துடன், விசாரணை உரைவடிவங்களது ஆயிரக்கணக்கான பக்கங்களின் மீது உலக சோசலிச வலைத் தளம் மேற்கொண்ட சுயாதீனமான ஆய்வு, SWP இன் காப்பகத்தில் இடம்பெற்றிருக்கும் விடயங்கள், மற்றும் ஹவேர்டி-ஸ்டேக் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள முன்னர் கிடைத்திராத FBI ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்தும் இக்கட்டுரைகள் விபரங்களைக் கொண்டுள்ளன.

1941 இல், சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) 29 அங்கத்தவர்களின் மீது தேசத்துரோகம் மற்றும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதி ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி அமெரிக்க வரலாற்றின் மிக முக்கியமான அரசியல் விசாரணைகளில் ஒன்றை ரூஸ்வெல்ட் நிர்வாகம் தொடக்கியது. FBI முகவர்கள் மினெயாபோலிஸ் கட்சி அலுவலகங்களில் ஜூன் 27 அன்று சோதனை நடத்தினர், அதன்பின் சற்று காலத்தில் அரசாங்க வக்கீல்களால் ஒரு நீதிபதிகளின் அமர்வும் கூட்டப்பட்டது. அக்டோபர் 27 அன்று மத்திய அரசாங்க நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணைகள் ஒரு மாதத்திற்கும் மேலாய் நடைபெற்றன.

விசாரணையின் சமயத்தில் சோசலிச தொழிலாளர் கட்சி அரசியல்ரீதியாக நான்காம் அகிலத்துடன் இணைந்ததாக இருந்தது. ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவில் உலகப் போருக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து கொண்டிருந்த நிலையில் இக்கட்சி மட்டுமே வழக்கு விசாரணைக்கான ஒரே இலக்காக்கப்பட்டது.

பிரதிவாதிகள், கட்சியின் சோசலிசக் கோட்பாடுகளை பரந்த பார்வையாளர்களின் முன் வைப்பதற்கு இந்த வழக்கு விசாரணையை பயன்படுத்தினர். சாட்சிக்கூண்டில் நின்றபடி ஏகாதிபத்திய போருக்கான SWP இன் எதிர்ப்பை அவர்கள் பாதுகாத்ததோடு, சோசலிசப் புரட்சியை, ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக சித்தரிப்பதற்கு அரசாங்கத் தரப்பு வைத்த வாதத்தை மறுத்தனர். மத்திய அரசாசாங்க சிறைத் தண்டனைகள் தங்களின் தலைக்கு மேல் தொங்கிய நிலையிலும் அவர்கள் தீரத்துடனும் கோட்பாடான வகையிலும் நடந்து கொண்டனர். விசாரணையின் போது SWP இன் தேசியத் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் வழங்கிய உணர்வுபூர்வமான சாட்சியத்தின் உரைவடிவத்தை வழக்கு விசாரணையில் சோசலிசம் (Socialism on Trial) என்ற சிறுநூல் வடிவில் SWP 1942 இல் வெளியிட்டது.

பிரதிவாதிகளில் 18 பேர் புதிதாகக் கொண்டுவரப்பட்டிருந்த ஸ்மித் சட்டத்தை மீறிய குற்றத்தை இழைத்திருந்ததாக, டிசம்பர் 1 அன்று, ஜூரிகள் குழு கூறியது, ஆயினும் அவர்களுக்கான தண்டனை விதிப்பில் பெருந்தன்மை காட்ட அது பரிந்துரைத்தது. டிசம்பர் 8 அன்று, அதாவது பேர்ல் ஹார்பரில் ஜப்பானிய தாக்குதலுக்கு ஒருநாள் தள்ளி, விசாரணை நீதிபதி அந்த “18 பேருக்கும்” தண்டனைகளை அறிவித்தார். 12 முதல் 16 மாதங்கள் வரையானதாக இத்தண்டனை இருந்தது. 1943 நவம்பர் 22 அன்று, பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்தது. அடுத்த மாதத்தில், 18 பேரும் கூட்டரசாங்க அதிகாரிகளின் முன்னால் சரணடைந்து தங்களது தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்யத் தொடங்கினர். தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிரச்சாரமானது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் இருந்தும் மிகப் புகழ்பெற்ற புத்திஜீவிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்தும் ஆதரவை உருவாக்கிய நிலையிலும், பிரதிவாதிகளுக்கு மன்னிப்பு வழங்க ரூஸ்வெல்ட் மறுத்தார். 18 பேரில் ஆறு பேர் ஆறு மாதங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர், எஞ்சிய பன்னிரண்டு பேரும் ஒரு ஆண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர் 1945 ஜனவரி மாதத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் நடந்த இந்த முக்கியமான நிகழ்வுதான் இந்த வழக்குவிசாரணையின் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹன்டர் பல்கலைக்கழக பேராசிரியரான டோனா ஹவேர்டி-ஸ்டேக் எழுதியிருக்கும் ஒரு புதிய நூலின் கருப்பொருளாக இருக்கிறது. வழக்கு விசாரணையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள்: FDR காலம் தொடங்கி பேச்சு சுதந்திரமும் அரசியல் துன்புறுத்தலும் (Trotskyists on Trial: Free Speech and Political Persecution Since the Age of FDR) [நியூ யோர்க் பல்கலைக்கழக பிரசுரம், 2016] என்ற தலைப்பிலான இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாகும்; இதன் ஆசிரியர் இச்சாதனைக்காக பாராட்டப்பட வேண்டியவராவார். கல்வியறிஞர்கள் உதாசீனப்படுத்தியிருந்த ஒரு கருப்பொருளை ஹவேர்டி-ஸ்டேக் எடுத்தாண்டிருக்கிறார் என்பதுமட்டுமல்ல, இந்த வழக்கு மற்றும் அதன் அரசியல் மற்றும் சட்ட கிளைத் தாக்கங்கள் குறித்து முன்பு அறிந்திராத பலவிபரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்.


வழக்குவிசாரணையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள்

நீதித்துறை மற்றும் FBI கையிருப்பிலிருந்த முன்னர் ஆய்வு செய்யப்படாத அல்லது முன்னர் கிட்டியிராத ஆவணங்களின் ஒரு மிகப்பொறுமை தேவைப்படும் ஒரு திறனாய்வை ஹவேர்டி-ஸ்டேக் செய்துமுடித்திருக்கிறார். அமெரிக்காவின் அரசியல் வாழ்வில் ட்ரொட்ஸ்கிசம் வகித்த முக்கியமான பாத்திரத்தை கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாய் உதாசீனம் செய்திருந்த கல்வியறிஞர்களால் பெரும்பாலும் ஆய்வுசெய்யப்படாதவையாக இந்த விபரங்கள் இருந்து வந்திருக்கின்றன. (பிரையன் போல்மர் எழுதிய ஜேம்ஸ். பி. கனன் வாழ்க்கை சரிதமும் 1934 மினெயாபோலிஸ் பொதுவேலைநிறுத்த வரலாறு குறித்த அவரது எழுத்துக்களும் இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காகும்).

ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக FBI முகவர்களும் உளவாளிகளும் எந்த அளவிற்கு ஊடுருவியிருந்தனர் என்பது குறித்த ஏராளமான புதிய தகவல்களை திருமதி. ஹவேர்டி-ஸ்டேக் இன் புத்தகம் வழங்குவது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வாகும். 1798 இல் அந்நிய விசுவாச மற்றும் தேசத்துரோக சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில், அமைதிக் காலத்தின் முதல் தேசத்துரோக வழக்கு விசாரணைக்கு ரூஸ்வெல்ட் நிர்வாகம் தயாரிப்பு செய்த நிலையில், அதற்குள் நடைபெற்ற விவாதங்களை ஹவேர்டி-ஸ்டேக் உள்ளபடியே முன்வைக்கிறார். விசாரணையில் சம்பந்தப்பட்டிருந்த சட்டப் பிரச்சினைகள், மேல்முறையீட்டுக்கான எட்டாவது சுற்று நீதிமன்றத்தின் (Eighth Circuit Court of Appeals) முன்னாலான மேல்முறையீடு, மற்றும் அதன்பின்னர் 1940களிலும் 1950களிலும் கம்யூனிச-விரோத வழக்குவிசாரணைகள் நடைபெறுவதற்கு அடித்தளம் அமைத்துத் தருவதில் இந்த வழக்கு முன்னுதாரணமான பாத்திரத்தை ஆற்றியமை ஆகியவை குறித்து இவர் கவனம்செலுத்துகின்றார். விசாரணையின் பின்புலத்தையும் பிரதிவாதிகளின் வாழ்க்கைரீதியான வரைபடத்தையும் வழங்குவதுடன் அவர் ஆரம்பிக்கிறார்.

பிரதிவாதிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்

சோசலிச தொழிலாளர் கட்சி, அமெரிக்க இடதுகளில் ஒரு முக்கிய சக்தியாக இருந்தது. இது 1930களின் முக்கியமான வேலைநிறுத்தப் போராட்டங்களில் அது தலைமை கொடுத்ததன் விளைபயன் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் மேல், லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் கருத்தாக்கங்களுடன் அது அடையாளப்பட்டிருந்ததன் விளைபயனாகவும் இருந்தது. விளாடிமிர் லெனினுடன் சேர்ந்து 1917 அக்டோபர் புரட்சியின் தலைவராக இருந்தமை; சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச சீரழிவுக்கு சமரசமற்ற எதிரியாக இருந்தமை; அத்துடன் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவராகவும் இருந்தமையானது ட்ரொட்ஸ்கியை, அவர் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்து வந்த நிலையிலும் கூட, உலக அரசியலின் ஒரு முக்கிய நபராக்கியது. 1940 ஆகஸ்டில் படுகொலை செய்யப்பட்டதன் பின்னரும் கூட, ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகள் கொண்டிருந்த நீடித்த தாக்கமானது, ஸ்ராலினிஸ்டுகள், பாசிஸ்டுகள் மற்றும் “ஜனநாயக” ஏகாதிபத்தியவாதிகள் மத்தியில் இருந்த அவரது எதிரிகள் இடையே அச்சத்தைக் கொடுத்தது. இதில் “ஜனநாயக” ஏகாதிபத்தியவாதிகள் அணியில் முதலாவதாகவும் முதன்மையானதாகவும் இருந்தது ஜனாதிபதி பிராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட் தலைமையின் கீழான அரசாங்கமாகும்.


1941- SWP இன் பதினெட்டு உறுப்பினர்களில் பதினான்கு பேர் ஸ்மித் சட்டத்தின் கீழான குற்றமிழைத்தவர்களாக உறுதிப்படுத்தப்பட்டனர். பின்வரிசை இடமிருந்து வலமாக: Farrell Dobbs, Harry DeBoer, Edward Palmquist, Clarence Hamel, Emil Hansen, Oscar Coover, Jake Cooper; Front row, left-to-right: Max Geldman, Felix Morrow, Albert Goldman, James Cannon, Vincent Dunne, Carl Skoglund, Grace Carlson

குற்றம்சாட்டப்பட்டிருந்த பிரதிவாதிகள் 29 பேரில் இரண்டு தொகுப்பாய் இருந்தனர்: நியூயோர்க் நகரத்தில் இருக்கும் SWP இன் தேசிய தலைமையகத்தை சேர்ந்த கட்சியின் அரசியல் தலைமை; மினெசோட்டா மாநிலத்தின் மினெயாபோலிஸ் நகரத்தில் பிராந்தியத்தின் Teamster தொழிற்சங்கமான Local 544 இல் தலைமைப்பொறுப்புகளை வகித்த SWP இன் பிரதிநிதிகள்.

பிரதிவாதிகளின் முதல்வகைக் குழுவினர் SWP இல் நீண்டகாலம் தலைவர்களாய் இருந்து வந்தவர்கள்; இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்து வர்க்கப் போராட்டங்களில் புடம்போடப்பட்டிருந்த மனதிடம்கொண்ட கைதேர்ந்த புரட்சியாளர்கள்.

SWP இன் தேசியத் தலைவரும் அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிசத்தின் ஸ்தாபகருமான ஜேம்ஸ் பி.கனன் இந்தப் பிரதிவாதிகளில் முதன்மையானவராக இருந்ததாக ஹவேர்டி-ஸ்டேக் குறிப்பிடுகிறார். 1890 இல் கான்சாஸ் மாநிலத்தின் ரோசடேல் நகரத்தில் பிறந்த கனன், 1928 இல் மாஸ்கோவில் நடந்த கம்யூனிச அகிலத்தின் ஆறாவது பேரவை மாநாட்டில் பங்கேற்ற சமயத்தில் ஸ்ராலினிசக் கொள்கைகள் மீதான ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தை படித்தார். அமெரிக்காவுக்கு திரும்புகையில், ட்ரொட்ஸ்கி கூறுவதில் தனக்கிருந்த உடன்பாட்டை அவர் அறிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், இடது எதிர்ப்பாளர்கள் அணியின் அமெரிக்கப் பிரிவை ஸ்தாபகம் செய்து ட்ரொட்ஸ்கியுடன் தொடர்பை உருவாக்கினார்.


சோவியத் ஒன்றியத்தில் ஜேம்ஸ் பி.கனன் (மையத்தில்) மாக்ஸ் ஈஸ்ட்மன் (இடப்பக்கம்) மற்றும் ”பெரிய” பில் ஹேவூட் ("Big" Bill Haywood வலப்பக்கம்) ஆகியோருடன், 1922

நியூயோர்க் நகரில் 1906 ஆம் ஆண்டு பிறந்த ஃபீலிக்ஸ் மோரோ SWP அரசியல் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்ததோடு கட்சியின் பத்திரிகைகளில் எழுதிய புரட்சிகரப் பத்திரிகையாளரும் ஆவார். ஸ்பெயினில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற நூலின் ஆசிரியராக மரியாதை பெற்றிருந்தவர். வழக்கு விசாரணையின்போது அரசாங்கத் தரப்பு, கட்சியின் தத்துவார்த்த பத்திரிகையான நான்காம் அகிலத்தில் மோரோ ஆசிரியர் குழுவில் பொறுப்பு வகித்ததின் மீது அழுத்தமளித்து வாதிட்டது.

SWP இல் முன்னிலை தலைவராக இருந்த ஆல்பேர்ட் கோல்ட்மன் 1904 இல் தனது ஏழாம் வயதில் பெலோரஷ்யாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர் ஆவார். 1937 ஆம் ஆண்டில் ஸ்ராலினிச போலிவிசாரணைகள் குறித்த டுவி குழு விசாரணையில் லியோன் ட்ரொட்ஸ்கியின் வழக்கறிஞராக செயல்பட்டதில் சிறந்த வகையில் அறியப்பட்டவராக கோல்ட்மன் இருந்தார். இந்த மூன்றுபேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ரூஸ்வெல்ட் நிர்வாகம் முனைந்தது, ஏனென்றால் சட்டத்தின்படி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு சதியாக நிறுவுவதற்கு இவர்களிடையேயான அரசியல் தொடர்பை, மற்றும் கனன் மற்றும் கோல்ட்மன் விடயத்தில் தனிமனிதத் தொடர்பை, நிறுவுவது மையமானதாக இருந்தது. பிரதிவாதிகளில் குறிப்பிடத்தக்க ஒருவரது பெயர் விடுபட்டிருந்தது என்றால் அது மூன்று வருடங்கள் ட்ரொட்ஸ்கியின் செயலராக சேவை செய்திருந்த ஜோசப் ஹான்சன் பெயர்தான். அரசாங்கம் அவரை மிகவும் உகந்த பிரதிவாதியாக கருதியிருந்தால் மட்டுமே அது தர்க்கரீதியாக சரியானதாக இருந்திருக்கும். பட்டியலில் அவரது பெயர் விடுபட்ட விடயம் தொடர்பாக பின்னர் விவாதிக்கப்பட இருக்கிறது.


மெக்சிகோவில் டுவி ஆணையத்தின் ஒரு அமர்வின் போது ஆல்பேர்ட் கோல்ட்மன் ட்ரொட்ஸ்கிக்கு ஆலோசனையளிக்கிறார்

பிரதிவாதிகளின் இரண்டாவது வகையினர் மினெயாபோலிஸ் பகுதியின் SWP தலைமையை சேர்ந்தவர்களாய் இருந்தனர், இங்கு டீம்ஸ்டேர்ஸ் தொழிற்சங்கத்தை கட்சி வழிநடத்தியமையானது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் மரியாதையை பெற்றிருந்த ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை ஸ்தாபித்திருந்தது. இந்த ட்ரொட்ஸ்கிச பிரதிவாதிகளில் பலரும் இரட்டை நகரங்களது (Twin Cities) 1934 கனரக வண்டி ஓட்டுநர்கள் பொது வேலைநிறுத்தத்தை தனிப்பட்ட வகையில் வெற்றிகரமாக வழிநடத்தி மத்தியமேற்கு மாநிலங்களில் இருந்து 200,000 அங்கத்தவர்களை தொழிற்சங்கத்திற்கு கொண்டுவர போராடியிருந்தவர்கள்.

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி 1928 இல் கட்சியில் இருந்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வெளியேற்றியதன் பின்னர் மினெயாபோலிஸ் எவ்வாறு இடது எதிர்ப்பாளர்களது ஆதரவுக்கான ஒரு மையமாக ஆகியது என்பதை குறிப்பிட்டு, இந்த பகுதியில் கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை ஹவேர்டி-ஸ்டேக் விவரிக்கிறார்: “[கனன்] உடன் மினெயாபோலிஸில் இருந்த வின்சன்ட் டுனே, கார்ல் ஸ்கோக்லண்ட் மற்றும் ஆஸ்கார் கூவர் ஆகிய ஸ்மித் சட்டத்தின் கீழ் பின்னர் பிரதிவாதிகளானவர்களும் உடன்சென்றனர்.” [1]


1934 இல் Local 574 வேலைநிறுத்தத் தலைமையகத்தில் தேசியக் காவற் படையினரால் வின்சென்ட் ஆர். டுனே கைது செய்யப்பட்டார்

பொது வேலைநிறுத்தத்தை அடுத்து வந்த ஆண்டுகளில், ரூஸ்வெல்ட்டுக்கு நெருக்கமானவரும் நம்பிக்கைக்குரியவருமான டானியல் டோபின் தலைமையின் கீழ் தேசிய டீம்ஸ்டேர்ஸ் (Teamsters) தொழிற்சங்கமானது மிகவும் கொடிய கம்யூனிச-விரோத பிரச்சாரத்தைப் பிரயோகித்து Local 544 (மற்றும் அதன் முன்னோடி Local 574) இல் இருந்து ட்ரொட்ஸ்கிச தலைமையை அகற்றுவதற்கு தோல்விகண்ட முயற்சியில் இறங்கியது.

அரசாங்கத் தரப்பு விசாரணை தொடங்குவதற்கு முந்தைய வாரங்களின் போது, மினெயாபோலிஸ் டீம்ஸ்டேர்ஸ் தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடு குறித்த ஒரு புதிய அரசியல் யுத்தத்தில் Local 544 ஈடுபட்டிருந்தது. டோபினும் டீம்ஸ்டேர்ஸ் தலைமையும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை அவர்களது பொறுப்புகளில் இருந்து அகற்றுவதற்கான ஒரு புதிய முயற்சியைத் தொடக்கியபோது, -இரண்டாம் உலகப் போருக்குள் அமெரிக்கா நுழைவதை SWP எதிர்த்ததும் இதற்கான காரணங்களில் ஒன்றாய் இருந்தது- AFL ஐ கைவிட்டு CIO உடன் தமது சங்கத்திற்கு மறுசான்று பெறுவதற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பாரவண்டி ஓட்டுநர்கள் வாக்களித்தனர்.

சான்றிதழை திருப்பியளிக்கும் முயற்சிகளில் மினெயாபோலிஸ் பிரதிவாதிகள் முக்கியமான பாத்திரங்களை ஆற்றினர். வின்சன்ட் டுனே அவர்களில் ஒருவராய் இருந்தார்; அவருடன் அவரது சகோதரர்கள் மைல்ஸ் மற்றும் கிராண்ட் ஆகியோரும் பிரதிவாதிக் கூண்டில் நின்றனர். இவர்கள் மூவரும் ஸ்கோகிளண்ட் உடன் சேர்ந்து பொதுவேலைநிறுத்தத்திற்குத் தலைமை கொடுத்திருந்தனர். அரசாங்க விசாரணையின் தீவிர அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கிராண்ட் அக்டோபர் 4 அன்று தற்கொலை செய்துகொண்டார்.

பொது வேலைநிறுத்தத்தின் போது செயலூக்கத்துடன் இயங்கிய ஒரு கனரக வண்டி ஓட்டுநரான ஹாரி டிபோயர் போலிசால் சுடப்பட்டிருந்தார். மினெயாபோலிஸ் SWP இன் ஒரு முக்கியமான உறுப்பினரான இவர் பல வருடங்களுக்குப் பின்னர் ட்ரொட்ஸ்கியை மெக்சிகோ வந்து பார்த்தார்.

கிராஸ் கார்ல்சன் சமூக சேவை ஊழியராக இருந்தவரும் மினெஸோட்டா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் ஆவார்; 1940 இல் போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க செனட்டுக்கு கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு 8,500க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மினெயாபோலிஸை சேர்ந்த ஜாக் கூப்பர் 1940 இல் நான்கு மாத காலத்திற்கு கோயகோனில் ட்ரொட்ஸ்கியின் காவலராக சேவை செய்திருந்தார்.

முன்னாளில் நிலக்கரி சுரங்க தொழிலாளியாக இருந்த ஃபாரெல் டோப்ஸ், மிட்வெஸ்ட் பகுதியில் நூறாயிரக்கணக்கான கனரக வண்டி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தங்களுக்கு ஒழுங்கமைப்பு செய்ததன் பின்னர் 1939 இல் SWP இன் தேசியத் தொழிலாளர் செயலராக நியமிக்கப்பட்டார். மினெயாபோலிஸை அடிப்படையாகக் கொண்ட பிரதிவாதிகளில் இறுதியில் குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டவர்களில் மாக்ஸ் கெல்ட்மேன், கிளாரென்ஸ் ஹேமெல், எமில் ஹான்சன், கார்லோஸ் ஹட்சன், கார்ல் குஹேன், எட்வார்ட் பாம்குவிஸ்ட் மற்றும் ஆஸ்கார் ஷோன்ஃபெல்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.


பிரதிவாதி ஹரோல்ட் டிபோயர் (இடது), மற்றும் உளவாளியாக மாறிய SWP இன் முன்னாள் உறுப்பினர் ஜேம்ஸ் பார்ட்லெட் (வலது), மெக்ஸிகோவில் ட்ரொட்ஸ்கியுடன்

குற்றப்பத்திரிகை பட்டியல் வெளியிடப்பட்டதன் பின்னர், 1941 ஜூலை மாதத்தில் கட்சியின் நான்காம் அகிலம் இதழின் ஆசிரியர் குழு இவ்வாறு எழுதியது: “ஆம், இந்த துன்புறுத்தல்களும் வழக்கு விசாரணைகளும் கெஸ்ட்டபோ-FBI ஆல் இந்த சமயத்தில் இந்த இடத்தில் குறிப்பாய்-தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக தூண்டப்பட்டிருப்பதில் ஒரு ஆழமான தர்க்கம் அடங்கியிருக்கிறது.”


ஸ்மித் சட்ட விசாரணையை அமெரிக்க ”கெஸ்ட்டபோ” என SWP நிராகரித்தது

பிரதிவாதிகளில் பலரும் மெக்சிகோவில் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியுடன் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பு குறித்த ஆதாரத்தை அரசாங்கத் தரப்பு சமர்ப்பித்தபோது, இந்த தர்க்கம் தான் விசாரணையில் பங்காற்றிக் கொண்டிருந்தது. கூப்பர், டிபோயர், வின்சன்ட் டுனே, கனன் மற்றும் டோப்ஸ் ஆகியோரது மெக்சிகோ பயணங்கள் அரசாங்க-எதிர்ப்பு சதிக்கான ஆதாரமாகக் காட்டப்பட்டது, விசாரணைக்கு முந்தைய ஆண்டுகளில் கோல்ட்மன் ட்ரொட்ஸ்கியுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவும் அவ்வாறே காட்டப்பட்டது. சோசலிசப் புரட்சிக்கான SWP இன் தயாரிப்புகளாக கூறப்பட்டதற்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் ஒரு சதித் தொடர்பு இருந்தது என நிரூபிப்பதன் மீது ஒரு கண் வைத்துத்தான் அரசாங்கம் “குறிப்பாய்-தேர்ந்தெடுக்கப்பட்ட” ஒவ்வொரு பிரதிவாதியையும் தேர்ந்தெடுத்திருந்தது.

ஸ்மித் சட்டம்

பிரதிவாதிகள் மீது இரண்டு குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 29 பிரதிவாதிகளுக்கும் எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் முதலாவது என்னவென்றால், உள்நாட்டுப் போரின் சகாப்தத்தில் அடிமைகளை கொண்டிருந்தவர்களது கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக எழுதப்பட்ட ஒரு சட்டமான அமெரிக்கச் சட்டம் 18 பிரிவு 6 ஐ மீறிய வகையில், “அமெரிக்க அரசாங்கத்தை வன்முறையால் அழிப்பதற்காக … ஜூலை 18,1938 மற்றும் அதற்கு முன்பிருந்து குற்றப்பத்திரிகை தேதி [ஜூன் 23,1941] வரையிலும் சட்டவிரோதமாக சதிசெய்தமை”.[3]

குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தவர்கள் “வெளிநாட்டு விசுவாச பதிவுச் சட்டத்தை –நாடாளுமன்றத்தில் இம்மசோதாவைக் கொண்டு வந்த ஹோவார்ட் ஸ்மித்தின் (வேர்ஜினியா மாநிலத்தைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர்) பெயரில் ஸ்மித் சட்டம் என்றும் அறியப்படுவது- மீறிய வகையில் இராணுவப் படைகளில் கீழ்ப்படிய மறுப்பதை உள்நோக்கத்துடன் ஆலோசனையளித்து அவ்வாறான பிரசுரங்களையும் விநியோகித்தனர்” என்பதும் “அமெரிக்க அரசாங்கத்தை பலவந்தமாகவும் வன்முறையின் மூலமாகவும் தூக்கியெறியவும் அழிக்கவுமான கடமையை, அவசியத்தை, விருப்பத்தை மற்றும் உரிமையை ஆலோசனையளிப்பதையும், அதில் உடந்தையாக இருப்பதையும், அறிவுறுத்துவதையும், பாடம் நடத்துவதையும் அவர்கள் தெரிந்தும் வேண்டுமேன்றேயும் மேற்கொண்டனர்”என்பது இரண்டாவது குற்றச்சாட்டு. [4]


ஹோவார்ட் W. ஸ்மித், வேர்ஜினியா மாநில ஜனநாயகக் கட்சி உறுப்பினர்

முதலாம் உலக போரைத் தொடர்ந்த “சிவப்பு திகில்” (“Red Scare”) சகாப்தத்தின் குற்றவியல் சிண்டிகேட் சட்டங்கள் தொடங்கி, 1938 ஆம் ஆண்டில் டெக்சாஸ் மாநிலத்தின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரான மார்ட்டின் டைஸ் ஆல் உருவாக்கப்பட்ட அமெரிக்கர் அல்லாதவர்களின் நடவடிக்கைகளை புலனாய்வு செய்யும் அவைக் குழு வரையிலும் ஸ்மித் சட்டத்திற்கு கம்யூனிச-விரோத முன்னோடிகளாக இருந்தவை குறித்தும் ஹவேர்டி-ஸ்டேக் விரிவாக விவரிக்கிறார்.

அமெரிக்க அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆலோசனையளிப்பது, எழுதுவது அல்லது ஒழுங்கமைப்பது ஒரு குற்றம் என்று ஸ்மித் சட்டத்தின் குற்றவியல் தேசத்துரோகப் பிரிவுகள் கூறுகின்றன, இதற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படலாம். புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான இதன் பிரிவுகள் 5 மில்லியன் புலம்பெயர்ந்த மக்களும் உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கோரியதோடு, அதன்பின் விரைவில் இவர்களில் 900,000 பேர் “எதிரி விசுவாசம்” கொண்டவர்களாய் அடையாளமிடப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கோ மற்றும்/அல்லது உடனடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கோ தகுதியுடையவர்களாக்கப்பட்டார்கள். சோசலிஸ்டுகளையும் கம்யூனிஸ்டுகளையும் குறிவைக்க பயன்படுத்தப்பட்ட இதே சட்டம்தான் போரின் சமயத்தில் மேற்கு கரைப் பகுதியில் 120,000 ஜப்பானிய அமெரிக்கர்களை தடுத்து வைப்பதற்கும் கூட பயன்படுத்தப்பட்டது. ரூஸ்வெல்ட்டை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலராக சித்தரிப்பதற்கு நடந்த முயற்சிகளுக்கு நேரெதிரான வகையில், அவர் ஒடுக்குமுறையான போலிஸ் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் அதிமையத்தில் இருந்தார்.

தனக்கான அரசியல் வழிகாட்டல்களை மாஸ்கோவில் இருந்தும் சோவியத்தின் இரகசிய போலிசான GPUவிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியானது ஸ்மித் சட்டத்தின் கீழ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வழக்குவிசாரணைக்கு ஆளாக்கப்படுவதை முழுமனதுடன் ஆதரித்தது (அதைப் போலவே பின்னர் ஜப்பானிய-அமெரிக்கர்கள் தடுத்து வைக்கப்படுவதையும் அது ஆதரித்தது). பிரதிவாதிகள் “நாஜிக்கள் பெற்றதை விட அதிகமாய் தொழிலாளர்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு நண்பர்களிடம் இருந்து ஆதரவை பெறவில்லை” [5] என்பதான முகாந்திரத்தில் “பாசிச ஐந்தாம் படை” மீது வழக்குத் தொடுக்கப்படுவதை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான மில்டன் ஹோவார்ட் ஆதரித்தார். அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் விடயத்தில் 1936-39 பெரும் பயங்கரம் சமயத்தில் மாஸ்கோவினால் அமைக்கப்பட்ட முன்னுதாரணத்தை ரூஸ்வெல்ட் நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என்று மினெயாபோலிஸில் பேசிய ஸ்ராலினிச நிர்வாகி ரோபர்ட் மைனர் தெரிவித்தார்.[6]

ஸ்மித் சட்டம் நிறைவேற்றப்பட்டமையானது, அமெரிக்காவில் இயங்கும் சோசலிசக் குழுக்களை இலக்காகக் கொண்டு அரசின் கண்காணிப்பு அதிகாரங்கள் ஒரேயடியாக மிகப்பெருமளவில் விரிவாக்கம் செய்யப்படுவதைக் குறித்தது. 1939 இல் “இப்போது வெளிநாட்டு விசுவாச பதிவு மசோதா என்று அறியப்படுகின்ற H.R. 5138 ஐ அவை செனட்டுக்கு அனுப்புவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக, ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ‘உள்நாட்டு புலனாய்வு விசாரணைகள் அனைத்தையும் [வேவு, எதிர்வேவு மற்றும் இரகசிய சதி) FBI, இராணுவ உளவு பிரிவு மற்றும் கடற்படை உளவு அலுவலகம் ஆகியவற்றின் கீழ் அமர்த்தி, இவற்றின் மத்தியமான ஒருங்கிணைப்பு முகமையாக FBI செயல்படுவதற்கான’ உத்தரவை பிறப்பித்திருந்தார்” [7] என்பதை ஹவேர்டி-ஸ்டேக் சுட்டிக் காட்டுகிறார்.

1936 காலத்திலேயே FBI இயக்குநரான ஜே.எட்கர் ஹூவர் ரூஸ்வெல்ட்டுக்கு ட்ரொட்ஸ்கிச தலைமை உள்ளிட்ட “உள்நாட்டு சதிவேலைகள்” குறித்த அறிக்கைகளை அனுப்பிக் கொண்டிருந்தார். தனது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கோரி ஹூவர் ஜனாதிபதியை தொடர்ந்தும் நெருக்கினார், அதன்பின் 1940 ஜூன் 29 அன்று மசோதாவை சட்டமாக்க ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டார். இந்த மசோதா சட்டமாவதற்கு முன்பே, SWPக்குள் FBI இன் ஊடுருவல் ஏற்கனவே தொடங்கி விட்டிருந்தது என்று ஹவேர்டி-ஸ்டேக் எழுதுகிறார்: “1939 இன் பின்பகுதிக்குள்ளாகவே, மினெயாபோலிஸில் இருந்த டீம்ஸ்டேர்ஸ் லோக்கல் 544 மற்றும் நியூ யோர்க்கை தலைமையிடமாகக் கொண்ட சோசலிச தொழிலாளர் கட்சி இரண்டுமே இம்முகமையின் புலனாய்வு இலக்குகளாகிவிட்டிருந்தன.” [9]

வழக்குத் தொடுக்கும் முடிவு

அமெரிக்கா போரில் நுழைவதற்கு செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்த நிலையில், போர் முனைப்புக்குத் தேவையான வர்க்க ஒழுங்கு வகையைத் திணிக்கும் சவாலுக்கு ரூஸ்வெல்ட் முகம்கொடுத்தார். முந்திய 22 மாதங்களாய், ஸ்ராலினிச அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (CPUSA) 1939 ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கைக்கு ஏற்ப ஐரோப்பாவில் போரில் அமெரிக்கா பங்கேற்பதை எதிர்த்தது. ஆனால் 1941 ஜூன் 22 அன்று சோவியத் ஒன்றியத்தில் ஜேர்மனி நுழைந்ததை அடுத்து CPUSA, எதிர்ப்பிலிருந்து மாறி போரில் அமெரிக்க தலையீட்டிற்கு ஆதரவாய் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் போர் முனைப்புக்கு முழு ஆதரவை வழங்கியது. ஸ்ராலினிஸ்டுகள் உடனடியாக தங்களது அமைப்பை தொழிலாள வர்க்கத்தை கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையாக மாற்றி தேசிய அளவில் “வேலைநிறுத்தம் கிடையாது” கொள்கையை திணித்தனர்.

சோவியத் ஒன்றியத்திற்குள் ஜேர்மனி நுழைந்த அடுத்தநாளில் 1941 ஜூன் 23 அன்று ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது வழக்குதொடுக்க ரூஸ்வெல்ட் நிர்வாகம் முடிவுசெய்தது. CPUSA தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு ஒரு போர்-ஆதரவு கட்சியாக மாறிவிட்டிருந்த நிலையில், SWP தான் அமெரிக்காவில் மிக முக்கியமான சோசலிச போர்-எதிர்ப்புக் கட்சியாக ஆகிவிட்டிருந்தது. ஏகாதிபத்திய போருக்கு இந்த இயக்கத்திடம் இருந்து வந்த கோட்பாடுரீதியான எதிர்ப்பு அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தில் உள்ள போர்-எதிர்ப்பு மனோநிலைக்கு ஒரு ஈர்ப்புமுனையாக அதனை ஆக்கிவிடக் கூடும் என்ற கவலை ரூஸ்வெல்ட் நிர்வாகத்துக்கு ஏற்பட்டது.

வழக்குத் தொடுக்கும் முடிவையடுத்து, நீதித்துறை மற்றும் FBI இன் உயர் மட்டங்களில் பல மாத கால தீவிர விவாதம் நடந்தது. அரசாங்கம் முகம்கொடுத்த சர்ச்சைக்குரிய சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகளை ஹவேர்டி-ஸ்டேக் ஆய்வுசெய்கிறார்.

FBI இயக்குநர் ஜே.எட்கர் ஹூவர்

ஹூவர் இந்த வழக்குத் தொடுப்பை ஆரம்பகட்டத்தில் இருந்து ஆதரித்தவராக இருந்தார். ஆனால் நீதித்துறையையும் ரூஸ்வெல்ட்டையும் கூட பொறுத்தவரை இந்த வழக்குத்தொடுப்பு வரிசையான பல அபாயங்கள் சூழ்ந்ததாக இருந்தது. இந்த வழக்குத் தொடுப்பு பரந்த எதிர்ப்பை உருவாக்கி, SWP க்கு புத்துயிரூட்டி ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் தாராளவாத அடித்தளத்தை அந்நியப்படுத்தி விடக்கூடும் என்று நீதித்துறை வழக்கறிஞர் பிரான்சிஸ் பிடில் போன்ற முன்னணி நிர்வாக அதிகாரிகள் கவலை கொண்டிருந்தனர்.

அமெரிக்கா போரில் நுழையுமானால், “தேசியப் பாதுகாப்பு ஒப்பந்த வேலைகள் நடைபெறக்கூடிய சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருட்களின் போக்குவரத்துக்கு இடையூறினை” சோசலிச தொழிலாளர் கட்சி உருவாக்கக்கூடும் என்று கூறி 1941 ஜூனில் ரூஸ்வெல்ட்டுக்கு அழுத்தமளிக்க ஹூவர் முயன்றார்.[10] அதே மாதத்தில், அமெரிக்க வழக்குதொடுனர்களான விக்டர் ஆண்டர்சன் மற்றும் வெண்டெல் பேர்ஜ் வழக்குத் தொடுப்புக்கு தங்கள் ஆதரவை சுட்டிக்காட்டினர். [11] ஜூன் 12 அன்று, டீம்ஸ்டேர்ஸ் தலைவரான டோபின் வழக்குத்தொடுப்பை கோரி ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு தந்தி அனுப்பினார். ஹவேர்டி-ஸ்டேக் எழுதுகிறார்: “மத்திய மாநிலங்களில் ஓட்டுநர்களை ஒழுங்கமைப்பதில் வெற்றி கண்டிருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தேசிய வர்த்தக போக்குவரத்து வலைப்பின்னல்களைக் குலைக்க முடியக் கூடிய ஒரு நிலையில் உள்ளனர், போர் நெருக்கடியை அவர்கள் அனுகூலமாக்கிக் கொண்டு விட்டால், அவர்கள் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஒரு சோசலிச அரசை அமைக்கக் கூடும் என்று டோபின் வாதிட்டார்.” [12]

டோபினின் ஜூன் 12 தந்தியின் ஒரு விளைவாகவே, SWP மீது வழக்குத் தொடுக்க ரூஸ்வெல்ட் முடிவெடுத்தார் என்று விசாரணையின் சமயத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் SWP கூறியது. ஆனால் அது பகுதியாக மட்டுமே உண்மையாகும். ஹவேர்டி-ஸ்டேக் விளக்குகிறார்: “இந்தத் தந்தியின் காரணத்தால், SWP மற்றும் Local 544 இன் 29 அங்கத்தவர்கள் கைது செய்யப்பட இட்டுச் சென்ற சங்கிலித் தொடர் நிகழ்வுகளை இயக்கி விட்டதாக டோபின் குற்றம்சாட்டப்பட்டு வந்திருக்கிறார். கைதுகளின் சமயத்திலும் விசாரணையின் சமயத்திலும், ரூஸ்வெல்ட்டிடம் இருந்து அரசியல் சாதகமான தன்மையை டோபின் எதிர்பார்த்தார் என்றும் முதலாவது ஸ்மித் சட்ட வழக்கு விசாரணையை தொடக்கி தொழிற்சங்கத்தின் உள்முக சண்டைக்குள் ஜனாதிபதி தலையீடு செய்வதற்கு அழைத்தார் என்றும் பிரதிவாதிகளது தரப்பு வாதிட்டது. இந்த “அரசியல் கடன்பட்டநிலை” வாதம் இந்த வழக்கு குறித்து இருக்கக்கூடிய வரம்புபட்ட எழுத்துக்களில் பல்வேறு மட்டங்களில் உயிர்பிழைத்திருப்பதுடன் SWPக்குள்ளாக வழக்குத் தொடுப்பு குறித்த பிரபல நினைவாகவும் இருக்கிறது. ஆயினும், 1940 வரை பின்செல்லக் கூடிய FBI இன் சுயாதீன விசாரணையை அடிப்படையாகக் கொண்டு 1941 ஏப்ரல் வாக்கிலேயே நீதித்துறை இத்தகையதொரு வழக்குத்தொடுப்பை தீவிரமாக பரிசீலித்து வந்தது.[13] (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது)

இறுதியில், பிரான்சிஸ் பிடில் தான் “பெரும்பாலும் FBIயிடம் இருந்து அவருக்குக் கிடைத்திருந்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்தார்” என்கிறார் ஹவேர்டி-ஸ்டேக்.[14]

அரசாங்கத் தரப்புக்கு வழக்கில் லியோன் ட்ரொட்ஸ்கியின் மையத்தன்மை

அரசாங்கத் தரப்பை பொறுத்தவரை இந்த வழக்கின் சித்தாந்தமானது SWP இன் பிரதிவாதிகளுக்கும் லியோன் ட்ரொட்ஸ்கிக்கும் இடையிலான தொடர்பை நிறுவுவதையே மையமாகக் கொண்டிருந்தது; ஹவேர்டி-ஸ்டேக் தனது புத்தகத்தில் இந்தப் பிரச்சினை குறித்து கவனம் குவிக்கவில்லை என்றபோதிலும், விசாரணைப் பதிவேடுகளை கொண்டு WSWS நடத்திய புலனாய்வானது இதைத் தெளிவாக்கியது. இதுதான் முழு வழக்கும் தீர்க்கப்படுவதற்கான முக்கிய விடயமாக இருந்தது. அந்த சித்தாந்தப்படி, ட்ரொட்ஸ்கிதான் மினெயாபோலிஸிலும் மற்றும் நாடெங்கிலும் SWP இன் நடவடிக்கைகளது வடிவமைப்பு நிபுணர், வழிநடத்துநர் மற்றும் இயக்குநர். இந்த அரசாங்கத் தரப்பின் சித்தாந்தப்படி, ட்ரொட்ஸ்கி எந்த அளவுக்கு வழக்கின் மையமாக இருந்தார் என்பதை எது எடுத்துக்காட்டுகின்றது என்றால், ஆகஸ்டுக்கு முன்பாகவே அவர் கொல்லப்பட்டு விட்டிருந்தார் என்பதே உண்மையாக இருக்க, பெரும் நீதிபதிகள் குழுவின் கட்டத்தில் அவரும் சக-சதியாளராக பட்டியலிடப்பட்டிருந்தமையே.

நீதித்துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு, இரு முனைகளிலும் “குற்றமில்லை” என்று தீர்ப்பு வந்தால் அது நிர்வாகத்துக்கு எத்தனை தீவிர சங்கடத்தைக் கொண்டுவரும் என்பது தெரிந்திருந்ததால் குற்றம் நிச்சயமாக உறுதிசெய்யப்படும் நோக்கத்துடன் ஒரு மூலோபாயத்தை அவர்கள் வடிவமைத்தனர். லியோன் ட்ரொட்ஸ்கிக்கும் SWP பிரதிவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை சுற்றியே வழக்கு குறித்த அவர்களது கருத்தாக்கம் சுழன்றது.


தி மிலிடண்ட்: இப்போது FBI இன் ஆதாரம் இதுதான்

பிரதிவாதிகள் ட்ரொட்ஸ்கியை சந்தித்ததற்கு அல்லது தொடர்பு கொண்டதற்கு அல்லது மெக்சிகோவுக்கு பயணம் செய்ததற்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்பதை அரசாங்கத் தரப்பு தேடியது. SWPக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் சிறிதளவு தொடர்பு இருப்பதாய் தெரிந்த அரசல் புரசலான ஆதாரங்களையும் கூட தமது கருத்தாக்கத்திற்கு வலுக்கூட்டுவதற்காய் சமர்ப்பித்தனர்.

அரசாங்கத் தரப்பின் தொடக்க வாதத்தில், அமெரிக்க அரசாங்க வழக்கறிஞர்கள் என்ன கூறினர் என்றால், SWP:

…லியோன் ட்ரொட்ஸ்கி என்ற 1940 ஆகஸ்டில் உயிரிழந்த ஒரு மனிதரின் கருவியாக செயல்பட்டது; இம்மனிதர் நாடுகடத்தப்பட்டு மெக்சிகோ குடியரசில் வாழ்ந்து வந்தார் என்று நம்புகிறேன்; இந்தக் கட்சி ட்ரொட்ஸ்கி கட்சியாக, அல்லது, இப்பூமியில், குறிப்பாக இந்த வழக்கை பொறுத்தவரை அமெரிக்காவில் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பாக லியோன் ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகளையும் திட்டங்களையும் மற்றும் கண்ணோட்டங்களையும் நிகழ்த்திக்காட்டுவதற்கு அர்ப்பணித்துக்கொண்டிருந்த கட்சியாக இருந்தது; இந்தக் கட்சியின் வேலைத்திட்டம் அல்லது இந்தக் கட்சியில் அடிப்படையாக இருந்த சிந்தனைகள், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சமகாலத்தவரான சோவியத் ஒன்றியத்தின் முதல் நிர்வாகத் தலைவரான வி.ஐ.லெனின் ஆகியோரது கண்ணோட்டங்களை பிரதிநிதித்துவம் செய்தன; ஒரு தொழிலாளர்’ அரசை ஸ்தாபிப்பதன் மூலமாக எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டுவிட முடியும் என்பதுதான் அவர்களது தத்துவமாக இருந்தது… அத்துடன் பிரதிவாதிகள், அல்லது அவர்களில் பெரும்பான்மையினர், இங்கே விசாரணையில் இருக்கும் அத்தனை பிரதிவாதிகளும் அறிய, அவ்வப்போது லியோன் ட்ரொட்ஸ்கியிடம் இருந்து அறிவுரை, வழிகாட்டல் மற்றும் திசைவழி பெறுகின்ற நோக்கத்துடன் மெக்சிகோ சென்று லியோன் ட்ரொட்ஸ்கியை பார்த்துவந்தனர்; அங்கு அவர்கள் லியோன் ட்ரொட்ஸ்கியின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக மெய்க்காவலர்களாக சேவைசெய்தது மட்டுமல்லாது, மெக்சிகோ நாட்டில் மெக்சிகோ நகரின் புறநகர்ப்பகுதியில் இருந்தபோது லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்படும் வரையில் அவருக்கும் அவரது நடவடிக்கைகளுக்கும் தங்களால் இயன்ற பங்களிப்பையும் வழங்கினர்; லியோன் ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகள்தான் சோசலிச தொழிலாளர் கட்சியின் சிந்தனைகளாகவும் இருந்தது; அத்துடன் இந்த வழக்கின் ஆதாரம் காட்டுவதைப்போல விசாரணையில் இருக்கும் அத்தனை பிரதிவாதிகளது திட்டவட்டமான மற்றும் செயலூக்கமிக்க சிந்தனைகளாகவும் இருந்தது.[15]

கோயகான் சென்று ஒரேமுறை ட்ரொட்ஸ்கியை பார்த்து வந்திருந்தால் கூட அது அரசாங்கத் தரப்பால் சதிக்கான ஆதாரமாக பகட்டாக காண்பிக்கப்பட்டது. அரசாங்கத்தின் அதிகாரத் துணிச்சலான வாதங்களை கண்டபின் SWP வழக்கறிஞரும் பிரதிவாதியுமான ஆல்பேர்ட் கோல்ட்மன் மெக்சிகோவுக்கு SWP சென்று வந்ததன் மீதே அரசாங்கத் தரப்பு ஆதாரங்கள் மிதமிஞ்சி சார்ந்திருந்ததன் மீது சட்டரீதியான ஆட்சேபங்களை எழுப்பினார். ட்ரொட்ஸ்கியை பார்ப்பதே ஒரு சதி நடவடிக்கைதான் என்பது போல் அரசாங்கம் காட்டுகிறது என்றார் கோல்ட்மன். அமெரிக்க அரசாங்க வழக்கறிஞரான ஸ்வையின்ஹவுட் பின்வருமாறு பதிலளித்தார்:

சதி தொடர்பான சட்டத்தைப் பொறுத்தவரை, இந்த வழக்கறிஞருக்கு தெரியும், சதியானது சட்டவிரோதச் செயலை செய்வதன் மூலமாக மட்டுமல்ல, உதாரணமாக, சட்டபூர்வமான செயல்களை என்றாலும் சட்டவிரோதமான நோக்கத்திற்காக செய்வதன் மூலமும் நிகழ்த்தப்படுகிறது. இவர்கள் ட்ரொட்ஸ்கியை தங்கள் தலைவராக ஏற்றிருந்தார்கள் என்பதை இங்கேயான சாட்சியம் ஏற்கனவே காட்டியிருக்கிறது, மீண்டும் அது காட்டப்படும். பிரதிவாதிகள் ட்ரொட்ஸ்கியுடன் தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த தொடர்பைக் காட்டுவது ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது, அதன் மூலமாய் அந்த தொடர்பின் தன்மையைக் காட்டப்பட முடியும்.[16]

குறிப்பாக, SWP இன் பாட்டாளி வர்க்க இராணுவக் கொள்கை மற்றும் தொழிற்சங்க பாதுகாப்புக் காவற்படை ஆகிய இரண்டு “சதி” கொள்கைகளை ட்ரொட்ஸ்கி திட்டம்தீட்டித் தந்திருந்ததாக அரசாங்கத் தரப்பு காட்டுவதற்கு முனைந்தது.

பாட்டாளி வர்க்க இராணுவக் கொள்கையானது ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்டு தனிப்பட்ட சந்திப்புகள் மூலமாகவும் 1940 ஆகஸ்டில் அவர் கொல்லப்படுவதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற விரிவான தகவல்தொடர்பின் மூலமாகவும் SWP தலைமைக்கு கூறப்பட்டிருந்தது. [17] தொழிற்சங்க பாதுகாப்பு காவற்படைக்கான யோசனையானது மினெயாபோலிஸில் தோன்றிவிட்டிருந்த பாசிச இராணுவ துணைப்படை அமைப்புகளிடம் இருந்து தொழிலாளர்களும் சோசலிஸ்டுகளும் தாக்கப்படாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் ட்ரொட்ஸ்கியால் முன்னெடுக்கப்பட்டது.

(1) இத்தகைய வேலைத்திட்டங்கள் இருந்தன மற்றும் அவை மினெயாபோலிஸ் நகரில் SWP ஆல் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன, (2) இவை ட்ரொட்ஸ்கியின் மூளையில் உதித்தவையாக இருந்தன, மற்றும் (3) ட்ரொட்ஸ்கியின் ஆலோசனைகள் பிரதிவாதிகள் பலருடனான அவரது தனிப்பட்ட தகவல்தொடர்பின் மூலமாக SWPக்கு கொண்டுசெல்லப்பட்டன என்று காட்டுவதை சார்ந்தே அரசாங்கத் தரப்பின் வழக்கு குறித்த சித்தாந்தம் இருந்தது. ஒவ்வொரு தொடர்பையும் நிரூபணம் செய்வதற்காக பல மாத கால புலனாய்வு விசாரணையின் மூலம் திரட்டப்பட்டிருந்த ஆதாரங்களைக் கொண்டு அமெரிக்க வழக்கறிஞர்கள் ஐந்து வாரங்கள் செலவிட்டனர்.

முன்னறிந்திராத மட்டத்திற்கு SWPக்குள்ளான அரசாங்க ஊடுருவல்

1940 இன் இறுதிக்காலத்தில், SWP இன் நடவடிக்கைகள் குறித்த விரிவான விபரங்கள் FBIக்கு கிடைத்து விட்டிருந்ததுடன் கட்சியின் நியூ யோர்க் தலைமையகத்தில் இருந்த உயர்-நிலை உளவு சொல்பவர்களின் அணுகலையும் பெற்று விட்டிருந்தது என்பதை ஹவேர்டி-ஸ்டேக் இன் புத்தகம் வெளிக்கொண்டு வருகிறது.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் மீதான கண்காணிப்பு 1930களின் மத்தியில் தொடங்கி விட்டிருந்தது, அச்சமயத்தில் கட்சியின் குறிப்பிட்ட தலைவர்களை FBI கண்காணிப்பின் கீழ் வைக்கத் தொடங்கியது. ஹவேர்டி-ஸ்டேக் குறிப்பிடுகிறார்: “SDU [சிறப்புப் பாதுகாப்பு அலகுகள்] இன் பரிந்துரைகள் மற்றும் FBI இன் விசாரணைக் கைது பட்டியல் இரண்டின் இலக்குகளாகவும் தாங்கள் ஆகியிருப்பதை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கண்டனர். ‘18’ பேரில் சிலர் அவர்கள் மீதான அரசாங்க வழக்குத் தொடுப்புக்கு முன்னதாகவே ஹூவரால் மிக அபாயகரமான குழுவாக –‘A1’- என ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.” [18]

1939 இன் பின்பகுதிக்குள்ளாக எல்லாம், FBI மினெயாபோலிஸ் மற்றும் நியூயோர்க்கில் இருந்த SWP ஐ ஏற்கனவே இலக்கு வைத்து விட்டிருந்தது என்பதை ஹவேர்டி-ஸ்டேக் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கடுத்த ஆண்டில் கூட ஊடுருவல் ஓரளவுக்கு ஆரம்பவடிவத்திலானதாகத் தான் இருந்தது. 1940 ஏப்ரலில், சிகாகோவின் நிகழ்ச்சி மையம் ஒன்றின் பராமரிப்பாளருக்கு FBI பணம் கொடுத்து அம்மண்டபத்தில் SWP காங்கிரசுக்கு செல்லவிருக்கும் பிரதிநிதிகள் தொடர்பாக குப்பைகளில் இருந்து ஏதேனும் விபரங்கள் கிடைக்கிறதா என்று தேடச் செய்தது.

இந்த காலகட்டத்தில், அரசாங்க ஊடுருவலில் இரண்டு அடிப்படையான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன என்று ஹவேர்டி-ஸ்டேக் விளக்குகிறார். முதலாவதாய், Local 544 இல் கம்யூனிச-விரோதத்தின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கிச தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சிறுபான்மை கன்னையிடம் இருந்து உளவு சொல்பவர்கள் அதற்குக் கிடைத்திருந்தனர். விசாரணையில் அரசாங்கத்தின் நட்சத்திர சாட்சியமாக இருந்த ஜேம்ஸ் பார்ட்லெட் இந்த பிற்போக்கான பிரிவினரையே பிரதிநிதித்துவம் செய்தார். இரண்டாவதாய், அரசாங்கம் SWPக்குள்ளாக உளவாளிகளை கையகப்படுத்திக்கொள்வதை தனது ஊடுருவல் வேலைத்திட்டத்திற்கான அடிப்படையாக அமைத்துக் கொண்டது.

SWP இன் தலைமைக்குள்ளாக முகவர்களை எடுப்பதற்கு FBI முனைந்தது என்று ஹவேர்டி-ஸ்டேக் கூறுகிறார். வழக்கைத் தொடுக்கும் முடிவை ரூஸ்வெல்ட் நிர்வாகம் எடுப்பதற்கு முந்தைய மாதங்களில் SWP தலைவர்களை தொடர்புகொள்ளவும் அவர்களை தங்களின் பக்கம் எடுப்பதற்கும் அவர்கள் முனைந்தனர்.

FBI க்கு உளவாளியாக செயல்பட்ட ஹென்றி ஹாரிஸ் கூறியதன்படி, FBI முகவரான பெரான் 1941 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் SWP பிரதிவாதி கார்ல் ஸ்கோக்லண்டுக்கு ஒரு சலுகையை தெரிவிக்கும்படி கூறினார். [19] ஸ்வீடனில் பிறந்த சோசலிஸ்டான ஸ்கோக்லண்ட் அமெரிக்காவில் முறையான குடியேற்ற ஆவணங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார். ஸ்கோக்லண்ட் தகவல்களை தங்களுக்கு அளிப்பாரானால் பிரதிபலனாக அவருக்குத் தண்டனையின்றி பார்த்துக் கொள்வதும் அவரது குடியேற்றப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வளிப்பதுமே FBI வழங்கிய அந்த சலுகையாகும். ஸ்கோக்லண்ட் இந்த சலுகையை மறுத்து விட்டார். முக்கியமானவர்களை துப்புக் கொடுப்பவர்களாக அரசாங்கத் தரப்புக்கு உதவுபவர்களாக மாற்ற ”தண்டனைவிலக்கு” என்ற ஊக்கவிடயத்தை அளித்தமை FBI இன் ஊடுருவலில் ஒரு மையமான அம்சமாய் இருந்தது. [20]

1940 வசந்த காலத்தில் FBI ஒரு புதிய முக்கியமான தகவல் மூலத்தைப் பெற்றிருந்ததாக FBI இன் முகவரான ரோய் நூனன் தனது சாட்சியத்தில் கூறியிருந்தார். நூனன் முன்னணி புலன்விசாரணையாளரின் பாத்திரத்தை ஏற்றிருந்தவராவார்; மினசோட்டாவில் SWPக்கு எதிரான சாட்சியம் திரட்டும் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பணி அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

அமெரிக்க அட்டர்னி ஹென்றி ஆல்பர்ட் ஸ்வையின்ஹவுட் மற்றும் SWP இன் அட்டர்னி ஆல்பர்ட் கோல்ட்மன் இருவரும் முகவர் நூனனிடம் குறுக்குவிசாரணை செய்தனர். 1941க்குள்ளாக FBI, “சோசலிச தொழிலாளர் கட்சி குறித்த முந்தைய ஆண்டுகளது பல விசாரணைகளை தனது கோப்புகளில் கொண்டிருந்தது” என்று நூனன் அப்போது குறிப்பிட்டிருந்தார். [21]

FBI எப்போது SWP பிரதிவாதிகள் மீதான தனது விசாரணையை ஆரம்பித்தது என்று ஸ்வையின்ஹவுட் வினவியபோது நூனன் இவ்வாறு பதிலளித்தார்: “கடந்த ஆண்டுகளில் அவர்களில் பலரது கோப்புகள் எங்களிடம் இருந்தன, ஆனால் 1940 இன் பிற்பகுதியில், குறிப்பாக இரண்டு அல்லது மூன்று பேர் குறித்தவை.” [22] (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது)

குறுக்குவிசாரணையின் போது, கோல்ட்மன் மற்றும் நூனன் இடையிலான உரையாடல் இவ்வாறு இருந்தது:

கோல்ட்மன்: நீங்கள் அறிந்தவரை, அதற்கு எவ்வளவு முன்பாக புலனாய்வு தொடங்கியிருந்தது?

நூனன்: பிப்ரவரி மற்றும் மார்ச்சில் [1941] புலனாய்வு நடத்தப்பட்டது எனக்குத் தெரியும், ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே பிரதிவாதிகள் சிலரைக் குறித்த விபரங்கள் எங்களிடம் இருந்ததையும் நான் அறிவேன்.

கோல்ட்மன்: எவ்வளவு காலம் முன்பாக?

நூனன்: 1940 நவம்பரில் எல்லாம் அது எங்களிடம் இருந்தது எனக்குத் தெரியும். [23]

நூனன் கூறும் 1940 நவம்பர் “1940 இலையுதிர் காலம் வரை பின்செல்லக் கூடிய FBI இன் சுயாதீனமான விசாரணையின் அடிப்படையில்” [24] வழக்குத்தொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்ற ஹவேர்டி-ஸ்டேக் இன் கூற்றுடன் பொருந்திச் செல்கிறது.


வழக்கு பத்திரம் - முகவரான ரோய் ரி. நூனனின் வாக்குமூலம் பக்கம் 371


வழக்கு பத்திரம் - முகவரான ரோய் ரி. நூனனின் வாக்குமூலம் பக்கம் 372

1940 நவம்பரில் பிரதிவாதிகள் குறித்த கூடுதல் விரிவான தகவல்கள் FBI க்கு கிட்டிய பின்னர், அது தனது ஊடுருவல் வலைப்பின்னல் பரந்த அளவில் விரிவாக்கம் செய்யப்படுவதை மேற்பார்வை செய்ய முடிந்தது. “இந்த ஆண்டின் [1941] பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாக” நூனன் விசாரணையின் போது சாட்சியமளித்தார்.

1940 நவம்பர் முதல் 1941 மத்தி வரையிலும் FBI இன் ஊடுருவல் வலைப்பின்னல் பண்புரீதியான ஒரு வளர்ச்சி கண்டிருந்ததை சமீபத்தில் இரகசியம் நீக்கப்பட்ட FBI தகவல் பரிவர்த்தனைகள் காட்டுகின்றன. இரகசியமான உளவாளிகளிடம் இருந்து கிட்டிய தகவல்களை மேற்கோளிட்டு ஒமாஹா, கான்சாஸ் சிட்டி, செயிண்ட் லூயிஸ், மினெயாபோலிஸ், சியாட்டில், லாஸ் ஏஞ்சல்ஸ், மிசிசிபி, நியூயோர்க், நியூ ஜெர்சி மற்றும் பிறவெங்கிலும் இருந்த முகவர்கள் அளித்த டசன் கணக்கான அறிக்கைகளும் FBI கோப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. 1941 ஆம் ஆண்டில் இருந்தான FBI கோப்புகளில் கிளைக் கூட்டங்களின் உரைப்பதிவுகள் மற்றும் கட்சி ஊடகங்களது முழு சந்தாதாரர்கள் பட்டியல்கள் ஆகியவையும் இருக்கின்றன. தேசிய உரை சுற்றுப்பயணங்களது முழு கால அட்டவணைகளும் அவை பொதுவில் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே FBIயிடம் இருந்தன; அத்துடன் அரசியல் கமிட்டி கூட்டங்களின் நிகழ்வுப்பதிவுகளும் அதனிடம் இருந்தன. கட்டுப்பாட்டு ஆணையம் உள்ளிட எந்த தேசியக் குழுவில் சேவை செய்வதற்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதற்குத் தெரிந்திருந்தது. நான்காம் அகிலத்தின் வெளிநாட்டு இணைவுகள் குறித்த கணிசமான விபரங்களையும் FBI பெற முடிந்திருந்தது என்பது நியூயோர்க் தலைமையகத்தில் அதன் ஊடுருவல் உயர்ந்த மட்டத்தில் இருந்தது என்பதை சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது.

ஹவேர்டி-ஸ்டேக் எழுதுகிறார்: “1941 வசந்த காலத்திற்குள்ளாக, இவ்வாறு விசாரணையானது மினெயாபோலிஸ் டீம்ஸ்டேர்ஸை கடந்து விரிந்து நியூ யோர்க்கில் தேசிய SWP தலைவர்கள் மீதான புலனாய்வு விசாரணைகளுடன் ஒன்றுகலந்தது.” அச்சமயத்திற்குள்ளாக, கட்சியின் இரண்டு செயலூக்கமான கிளைகளும் [மினெயாபோலிஸ் மற்றும் நியூயோர்க்] FBI ஆல் உளவாளிகள் தக்க இடங்களில் அமர்த்தப்பட்டு பாரிய கண்காணிப்புக்குள் தொடர்ந்தும் இருந்தன”.[26] (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது) “குறிப்பாக நியூ யோர்க்கில் இருந்த SWP இன் தேசிய தலைமையகத்தை FBI மிக நெருக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தது” என்கிறார் ஹவேர்டி-ஸ்டேக். [27]

விசாரணையில் ஹூவரின் முன்னுரிமை: SWP உளவாளிகளது வலைப்பின்னல் அம்பலமாகி விடாமல் தடுப்பது

ஒரு உளவாளிக்கு ஹூவர் எதிர்பார்த்த தகுதிகள் என்னவாக இருந்தன என்பதன் மீதும் ஹவேர்டி-ஸ்டேக் ஆல் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் உள்முக ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஹூவர், நீதித்துறையின் முன்னணி வழக்கறிஞரான பிரான்சிஸ் பிடில் மற்றும் அமெரிக்க வழக்கறிஞர்கள் ஸ்வையின்ஹவுட் மற்றும் பேர்ஜ் ஆகியோருக்கு இடையில் 1941 ஜூன் மாதத்தில் நடந்த ஒரு உரையாடலை ஹவேர்டி-ஸ்டேக் சுட்டிக்காட்டுகிறார். இந்த விவாதத்தின் பாதையில், வழக்குவிசாரணைக்கான தயாரிப்பில் ஆதாரங்களை திரட்டுவதற்கு நியூ யோர்க்கில் இருக்கும் SWP தலைமையகத்தில் FBI தனது சொந்த முகவர்களையே அமர்த்தலாமே என்று நீதித்துறை வழக்கறிஞர்கள் ஆலோசனையளிக்கின்றனர்.

ஸ்வையின்ஹவுட் தான் இந்த செயல்திட்டத்தை ஹூவருக்கு முதலாவதாய் ஆலோசனையளிக்கிறார். ஸ்வையின்ஹவுட்டை வழிமொழியும் பேர்ஜ் 1941 ஜூன் மாதத்தின் மத்தியில் ஹூவருக்கு எழுதுகிறார்: “விசாரணையின் கோணத்தில், நீங்கள் என்னுடன் தொலைபேசியில் விவாதித்த வழியில்தான் பெறமுடியும் என்ற வகையான தகவல்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், அத்தகைய ஒரு விசாரணைக்கு உத்தரவிட உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது”; அரசாங்கத்தின் முகவர்கள் “வெறுமனே ஆதாரங்களைத் திரட்டும் நோக்கத்திற்காக சட்டவிரோதச் செயல்களை செய்யத் தூண்டாதவரையிலும் அது சிக்கவைப்பாக ஆகாது” என்பதில் நிர்வாகத்தின் வழக்கறிஞர்கள் உடன்படுவதை அவர் குறிப்பிட்டிருந்தார். [28]

ஹூவர் அளித்த பதில், SWP இல் ஊடுருவும் அவரது மூலோபாயத்தை எடுத்துக்காட்டுகின்றது. அவரது கவலைகள் இருமடங்கானதாக இருந்தன.

நீதித்துறை வழக்கறிஞர்களுக்கு பதிலளிக்கையில், விசாரணைக்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கத்திற்காக SWP தலைமையகத்தில் அமர்த்தப்படும் FBI இன் முகவர்கள் “பின்னர் ஒரு சாட்சியாக பயன்படுத்தப்பட்டு திறந்த நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க கோரப்படுவார்களேயானால்… அது இலாகாவுக்கு தர்மசங்கடத்திற்கான முக்கிய சாத்தியத்தை முன்நிறுத்தக்கூடும்” என்ற அச்சத்தை அவர் முதலில் வெளியிட்டார். [29]

தனது பதில் கடிதத்தின் ஒரு கூடுதல் பகுதியில் (இப்பகுதியை ஹவேர்டி-ஸ்டேக் குறிப்பு கூறவில்லை), நீதித் துறையின் ஆலோசனை ஆபத்தானது மட்டுமல்ல, தகவல் திரட்டும் கோணத்தில் பலனளிக்கக் கூடியதும் அல்ல என்று ஹூவர் விளக்குகிறார்.

ஹூவர் எழுதினார்: “இத்தகையதான ஒரு ஏற்பாட்டின் மூலம் உடனடியான வருங்காலத்தில் முக்கியமான ஆதாரங்களைப் பெறும் சாத்தியங்கள் மிகவும் சந்தேகத்திற்குரியதாகும், ஏனென்றால் கட்சியின் ஒரு புதிய உறுப்பினர் இரகசியமான தகவல்களைப் பெற வேண்டுமென்றால் அவர் அதற்கு தன்னை ஸ்தாபித்து கட்சித் தலைவர்களிடம் தமது நம்பகத் தன்மை குறித்து திருப்தி ஏற்படுத்தியிருக்க வேண்டும்”, இதற்கு “கணிசமான கால அவகாசம் பிடிக்கும், அநேகமாக மாதக்கணக்கில்.” [30]

இந்த மேற்கோள்களில் இருந்து கீழ்க்காணும் முடிவுக்கு வர இயலும்: ஹூவரைப் பொறுத்தவரை, ஒரு மதிப்புமிக்க உளவாளியாக எவர் இருப்பாரென்றால் (அ) விசாரணையில் சாட்சியமளிப்பதன் மூலம் பகிரங்கப்படுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படக் கூடியவராக இருக்க வேண்டும், (ஆ) அவர் ஏற்கனவே SWP இன் உயர்ந்த நிலைகளில் செயல்படுபவராக SWP இன் தலைமையின் நம்பிக்கையை பெற்றவராய் இருத்தல் வேண்டும்; அத்துடன் (இ) ஒரு வெளிப்புற முகவர் கட்சித் தலைமையுடன் நெருக்கம் பாவிக்க முனைவதில் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் காலதாமதங்கள் இல்லாமல் FBIக்கு உடனடியாக தகவல்களை கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.

இந்த விவாதம் 1941 ஜுன் மத்தியில் நடந்தது. அதற்கு எட்டு மாதங்கள் முன்பாக, ஹூவர் நியூ யோர்க் நகரில் FBI இன் தலைமை முகவரான B.E. ஸக்கெட் இற்கும் மெக்சிகோ நகரில் ட்ரொட்ஸ்கியின் செயலராக பணியாற்றிய SWP இன் ஒரு முக்கிய தலைவரான ஜோசப் ஹான்சனுக்கும் இடையிலான விவாதங்களை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட தொடங்கியிருந்தார்.

ஹான்சன் ஹூவரின் தகுதிவகைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடியவராக இருந்தார். அவர் கட்சித் தலைமையின் நம்பிக்கையை ஏற்கனவே வென்றெடுத்து விட்டிருந்தார் என்பதோடு எந்த காலதாமதத்திற்கு தேவை இல்லாமலும் அம்பலப்படும் அபாயம் மிகமிகக் குறைந்த அளவில் கொண்டும் FBIக்கு உடனடியாக ”முக்கியமான ஆதாரங்களை” வழங்கக் கூடிய ஒரு இடத்தில் இருந்தார். அடுத்துவந்த மாதங்களில் விசாரணை ஆரம்பித்தபோது, SWP பிரதிவாதிகளின் பட்டியலில் இருந்து ஹான்சனின் பெயர் அநேகமாக விளக்கம் கொடுக்கமுடியாதவாறு விடுபட்டிருந்தது.

ஸ்மித் சட்ட விசாரணையில் ஜோசப் ஹான்சன் ஏன் ஒரு பிரதிவாதியாக இல்லை?

பேராசிரியர் டோனா ஹாவர்டி-ஸ்டேக் வழக்குவிசாரணையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்ற சமீபத்தில் வெளியான தனது நூலில், 1941 ஸ்மித் சட்ட வழக்குவிசாரணையில் சோசலிச தொழிலாளர் கட்சியின் 29 அங்கத்தவர்கள் மீது வழக்கு நடத்துவதற்கு FBI எவ்வாறு தயாரிப்பு செய்தது என்பதை ஆராய்வதற்கு வழக்கு ஆவணங்களையும் அத்துடன் மிகச் சமீபத்தில் கிடைத்த FBI பதிவேடுகளையும் புலனாய்வு செய்கிறார்.

ஹாவர்டி-ஸ்டேக் வழங்கியிருக்கும் விடயங்கள் சோசலிச இயக்க வரலாற்றின் இந்த முக்கியமான காலகட்டம் குறித்த ஒரு கூடுதல் தெளிவான விவரணத்தை வழங்குகின்றன. 1940 செப்டம்பர் தொடங்கி வெளியுறவுத் துறையும் FBIயும் SWP இன் ஒரு முன்னணிப் பிரமுகரான ஜோசப் ஹான்சன் உடன் சந்திப்புகளை நடத்தின என்பதை வெளிக்கொணர்ந்த 1975 இல் “பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம்” புலனாய்வு விசாரணையின் பகுதியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வெளிக்கொண்டுவரப்பட்ட ஆவணங்களுக்கு இது பிரம்மாண்டமான வலுவை வழங்குகிறது. ஹாவர்டி-ஸ்டேக் வெளியிட்டிருக்கும் புதிய விடயங்களின் உள்ளடக்கத்தில், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: ஹான்சனின் பெயர் ஸ்மித் சட்ட விசாரணையின் பிரதிவாதிகள் பட்டியலில் ஏன் இல்லை?

அமெரிக்க அரசாங்கத்துடன் ஜோசப் ஹான்சனின் இரகசிய சந்திப்புகள்

ஆரம்ப பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் புலனாய்வில் வெளியான ஆவணங்கள் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அமெரிக்க அரசாங்கத்துடன் ஜோசப் ஹான்சன் தகவல்தொடர்பை ஸ்தாபித்திருந்ததை காட்டுகின்றன. 1975 மற்றும் 1978 க்கு இடையில், விசாரணையானது பின்வரும் கேள்வியை எழுப்பியது: அரசாங்கத்தை தொடர்புகொள்வதில் ஹான்சனுக்கு என்ன ஆர்வம் இருந்திருக்க வேண்டும், அவர் அதை ஏன் SWP தலைமைக்கு தகவல் தெரிவிக்காமலேயும் செய்தார்? ஹான்சன் FBI ஐ ”ஒரேஒருமுறை” மட்டுமேதான் சந்தித்ததாக தனது ஹீலியின் பெரும் பொய் என்ற நூலில் கூறினார். [31] அது உண்மையில்லை என்பது நிரூபணமானது.


1977 ஆகஸ்டு 5, புல்லட்டின் பத்திரிகையில் வெளிவந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை

மெக்சிகோவின் கோயகோனில் ட்ரொட்ஸ்கியின் அந்தரங்க காரியதரிசியாக ஹான்சன் மூன்று ஆண்டுகள் கழித்திருந்தார். ட்ரொட்ஸ்கியின் வளாகத்தில் வசித்த விரல்விட்டு எண்ணக்கூடிய அமெரிக்கர்களில், ஹான்சன் தான் மிகவும் அரசியல் சம்பந்தப்பட்டவராகவும் அமெரிக்காவில் SWP இன் தலைமையுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவராகவும் இருந்தார். 1940 ஆகஸ்டு 21 அன்று ட்ரொட்ஸ்கி மரணமடைந்ததற்கு பத்து நாட்களுக்குப் பின்னர், அமெரிக்க அரசாங்கத்துடன் ஒரு இரகசிய உறவை தொடக்கும் நம்பிக்கையுடன் மெக்சிகோ நகரில் இருந்த அமெரிக்க தூதரகத்தை ஹான்சன் தொடர்பு கொண்டார்.

ஹான்சனின் சந்திப்புகள் அமெரிக்க அரசாங்கத்தின் உயர்நிலை அதிகாரிகளால் கவனமாகப் பின்தொடரப்பட்டு வந்தன. ஜோர்ஜ் பி. ஷா, ரோபர்ட் மெக் கிரிகோர் மற்றும் பி.இ.சாக்கெட் போன்றவர்களிடம் இந்த புலன்விசாரணையை வழிநடத்தும் மற்றும் பின்தொடரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. வெளியுறவுத் துறையின் உயர்நிலை தூதரக அதிகாரியான ஷா அதற்கு முன், ஹோண்டுராஸின் Tegucigalpa, மெக்சிகோவின் Luis Potosi, மற்றும் மெக்சிகோவின் Ciudad Juarez ஆகிய இடங்களில் அமைந்திருந்த அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றியிருந்தார் என்பதோடு பின்னாளில் நிகராகுவா, எல் சால்வடோர் மற்றும் பராகுவே ஆகிய நாடுகளுக்கான தூதராகவும் பணியாற்றச் சென்றார். [32] மெக்கிரிகோர் மெக்சிகோவில் அமெரிக்க தூதரகத்தின் செயலராக பணியாற்றியவர், சாக்கெட் FBI இன் நியூ யோர்க் கிளைக்கு பொறுப்பான சிறப்பு முகவராவார். ஹான்சன் முதன்முதலில் தொடர்பு கொண்ட சில வாரங்களுக்குள், ஜே. எட்கர் ஹூவர் ஹான்சனுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்புகளை தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்ய ஆரம்பித்திருந்தார்.

ஹான்சனுடனான விடயத்தை பின்தொடர்ந்து வந்த மற்ற அதிகாரிகளில் வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ரேமண்ட் E. மர்பி மற்றும் FBI இன் எச்.எச்.கிளெக் ஆகியோரும் அடங்குவர். மர்பி விரிந்த தொடர்புகளுடைய வெளியுறவுத்துறை அதிகாரியாவார், இவர்தான் பின்னாளில் உளவாளியாக சந்தேகிக்கப்பட்ட ஜே. அல்கெர் ஹிஸ்ஸின் வழக்குவிசாரணையை நடத்தியவராவார். மர்பிதான் நாடாளுமன்றவாதியான அவையின் அமெரிக்கர்கள் அல்லாத நடவடிக்கைகள் குழு (House Un-American Activities Committee) ரிச்சார்ட் எம்.நிக்சனுக்கு விட்டேகர் சாம்பர்ஸ் குறித்த தகவலை முதன்முதலில் அளித்த வெளியுறவுத் துறை அதிகாரியாவார். [33] கிளெக் ஒரு அனுபவம் வாய்ந்த FBI முகவராவார், பின்னாளில் FBI இன் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். [34] அரசாங்க அதிகாரிகள் இந்த விவகாரத்தை பெரும் நாசூக்காகவும் ஆர்வத்துடனும் கையாண்டனர்.


ஜோசப் ஹான்சன் ட்ரொட்ஸ்கியின் மரணச்சடங்கின்போது, மெக்சிக்கோ, ஆகஸ்ட், 1940

அமெரிக்க தூதரக அதிகாரி ஜோர்ஜ் பி.ஷா வெளியுறவுத்துறைக்கு 1940, செப்டம்பர் 1 அன்று அனுப்பிய ஒரு கடிதத்தில், “இந்த அலுவலகத்தின் தூதர் [ரோபர்ட் ஜி.] மெக்கிரிகோருக்கும் மறைந்த திரு. லியோன் ட்ரொட்ஸ்கிக்கு செயலராக இருந்த திரு. ஜோசப் ஹான்சனுக்கும் இடையில் 1940, ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்ற ஒரு உரையாடல் குறித்த குறிப்பு”ம் இடம்பெற்றிருக்கிறது.

அந்தக் குறிப்பு கூறுகிறது: “மறைந்த திரு. ட்ரொட்ஸ்கியின் செயலரான திரு. ஜோசப் ஹான்சன் திரு. ட்ரொட்ஸ்கியின் படுகொலையுடன் தொடர்புடைய விடயங்களைக் குறித்து விவாதிப்பதற்காக சனிக்கிழமையன்று காலை வந்தார்.”[36]

இந்த முதல் சந்திப்பின் போது, படுகொலை தொடர்பான விபரங்களை ஹான்சன் அரசாங்கத்திடம் கொடுத்தார். 1938 இல் மூன்று மாதங்களுக்கு ஸ்ராலினின் இரகசிய போலிசான GPU இன் முகவர்களுடன் தான் சந்தித்து வந்திருந்ததாக ஹான்சன் அமெரிக்க அரசாங்கத்திற்கு தகவல் கூறியிருந்தார். “GPU இன் முகவர் தன்னை அணுகி நான்காம் அகிலத்தில் இருந்து விலகி மூன்றாம் அகிலத்தில் இணைவதற்கு கேட்டார்” என்று ஹான்சன் கூறியதாக ஆகஸ்டு 31 சந்திப்பு குறித்த மெக்கிரிகோரின் அறிக்கை குறிப்பிடுகிறது. GPU ஐ கையாளும் “ஜோன்” என்பவருடன் ஹான்சன் மூன்று மாதங்கள் சந்தித்து வந்திருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. [37] ஹான்சனின் இந்த திகைக்க வைக்கும் ஒப்புதல் இந்த சந்திப்புகளுக்கு கவனத்தை மேலும் அதிகப்படுத்தியது.

அதன்பின் பல நாட்கள் கழித்து, செப்டம்பர் 4 அன்று, ஹான்சன் மீண்டும் அமெரிக்க தூதரகத்திற்கு திரும்பி அரசாங்கத்திடம் ஒரு “உரையாடல் குறிப்பை” வழங்கினார். ஜோர்ஜ் பி.ஷா அமெரிக்க வெளியுறவுச் செயலருக்கு அனுப்பிய ஒரு இரண்டாவது அறிக்கை “மிகவும் இரகசியமானது” என்று குறிப்பிட்டு செப்டம்பர் 4 தேதியிடப்பட்டு இருந்தது. அது கூறுகிறது: “மறைந்த திரு. ட்ரொட்ஸ்கியின் செயலரான திரு. ஜோசப் ஹான்சன் இந்த அலுவலகத்தில் 1940, செப்டம்பர் 4 அன்று ஒப்படைத்திருந்த ஒரு உரையாடல் குறிப்பின் நகலை இதனுடன் இணைப்பதில்… பெருமையடைகிறேன்.” [38]

ட்ரொட்ஸ்கி மீதான ஆகஸ்டு 20 ம் தேதி தாக்குதலுக்குப் பின்னாலிருந்த விபரங்களை “திரு. ஹான்சன் எனது ஊழியர்களில் ஒருவருக்குத் தெரிவித்தார்” என்று செப்டம்பர் 4 அறிக்கை குறிப்பிடுகிறது. “[ட்ரொட்ஸ்கியின் வெளியீடாகாத எழுத்துக்களின்] ஒரு நகலை தூதரக தலைவரிடம் [Consulate General] வழங்குவதில் மகிழ்ச்சி கொள்வதாக” ஹான்சன் கூறியதாக அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பு குறிப்பிடுகிறது.

செப்டம்பர் 14 அன்று, தூதரக அதிகாரியான மெக்கிரிகோர் இன்னுமொரு “மிகவும் இரகசியமான” கடிதத்தை வெளியுறவுத்துறைக்கு அனுப்பினார், அதில் அமெரிக்க அரசாங்கத்திடம் இரகசியமான தகவல்களை அளிப்பதற்காக அன்று ஹான்சன் மீண்டும் தூதரகத்திற்கு வந்திருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது: “மறைந்த திரு. லியோன் ட்ரொட்ஸ்கியின் செயலரான திரு. ஜோசப் ஹான்சன் இன்று காலை வந்திருந்தார், ஒரு குறிப்பைக் காண்பித்தார், அதன் நகல் இணைக்கப்பட்டுள்ளது.” [40] கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினராய் இருந்து பின்னர் 1940களின் பிற்பகுதியிலும் 1950களின் தொடக்கத்திலும் கம்யூனிச-விரோத சூழ்ச்சி வேட்டையில் அமெரிக்க அரசாங்கத்திற்கு உதவியவரான விட்டேகர் சாம்பர்ஸிடம் இருந்து SWP பெற்றிருந்த "W-குறிப்பு” என்ற GPU முகவர்களின் ஒரு பட்டியல் அதில் இருந்தது.

பின்னாளில் ஸ்மித் சட்ட விசாரணையில் ஒரு பிரதிவாதியாக ஆகவிருந்த ஆல்பர்ட் கோல்ட்மன் குறித்த விபரங்களையும் ஹான்சன் அரசாங்கத்திடம் வழங்கியிருந்ததாகவும் செப்டம்பர் 14 அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கை குறிப்பிடுகிறது: “மறைந்த லியோன் ட்ரொட்ஸ்கியின் வழக்கறிஞரான ஆல்பர்ட் கோல்ட்மன் நேற்று ஜாக்சனை [”ஜாக்சன்” என்பது ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்த ரமோன் மெர்க்கடரின் புனைப்பெயர்”] விசாரித்தார் என்று ஹான்சன் கூறினார். ஜாக்சன் அவரிடம் 1940 ஜூன் 13 அன்று இரயில்வே எக்ஸ்பிரஸ் மூலமாக நியூ யோர்க்கில் இருக்கும் சுங்கவரி அலுவலகத்திற்கு தனது சொந்தப் பேரில் ஒரு சூட்கேஸை அனுப்பியிருந்ததாக தெரிவித்தார்...” [41]

”மறைந்த திரு. ட்ரொட்ஸ்கியின் செயலரான திரு.ஜோசப் ஹான்சன் நேற்று இந்த அலுவலகத்திற்கு வந்திருந்தார்...” என்று அமெரிக்காவுக்கு தகவலளிக்கும் இன்னுமொரு கடிதம் மெக்சிகோவின் அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து வெளியுறவுத்துறைக்கு 1940 செப்டம்பர் 25 அன்று அனுப்பப்பட்டிருந்தது. கோயகானில் ட்ரொட்ஸ்கியின் வீட்டிற்குள் உள்புகும் முயற்சியில் மெர்க்கடர் தனது காதலில் வீழ்த்தியிருந்த ஒரு இளம் SWP அங்கத்தவரான சில்வியா அகெலோஃப் உள்ளிட ரமோன் மெர்கேடர் உடன் தொடர்புடைய மனிதர்களை “விசாரித்து” பெற்ற விபரங்களை ஹான்சன் அப்போது வழங்கியிருந்தார். [42]


தண்டனைவிலக்கு” நிபந்தனையில் “இரகசிய தகவல்களை” கொடுப்பதற்குரிய ”ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கு ஜோசப் ஹான்சன் விரும்புகிறார்” என்பதை தெரிவித்து வெளியுறவுத் துறையின் உயர் அதிகாரியான ரேமண்ட் ஆர்.மர்பிக்கு செப்டம்பர் 25, 1940 இல் அனுப்பப்பட்டிருந்த ஒரு கடிதம்.

ஜோர்ஜ் பி. ஷா அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரேமண்ட் இ.மர்பிக்கு செப்டம்பர் 25 தேதியிட்டு அனுப்பியிருந்த இன்னொரு கடிதத்தில் பின்வரும் பத்திகள் இடம்பெற்றுள்ளன: “மறைந்த திரு. ட்ரொட்ஸ்கியின் செயலரான திரு. ஜோசப் ஹான்சன் உங்களுக்கும் உங்கள் மூலமாக நியூ யோர்க் நகரில் இருந்து இந்த அலுவலகத்திற்கும் அவர் தகவல் அளிப்பதற்கு இயலுகின்ற வகையிலான நம்பகமான வழிமுறையை உருவாக்குவதற்காக உங்களுடன் பரிச்சயம் கொள்ள விரும்புவதன் பொருட்டு உங்களுக்கு மீண்டும் ஒரு தனிப்பட்ட கடிதத்தை எழுதுவதில் நான் இறங்கியிருக்கிறேன்.”[43]

“இந்த துறைக்கு உபயோகமாக இருக்கக் கூடிய சில விபரங்கள் அவருக்குக் கிடைப்பது சாத்தியம் என்று” ஹான்சன் நம்புகிறார், “…இந்தக் காரணத்தால் நியூயோர்க்கில் இரகசிய தகவல்களை சொல்வதற்குரிய உங்களது நம்பிக்கைக்குரிய ஒருவருடன் தொடர்பிலிருக்க அவர் விரும்புகிறார்” என்றும் ஜோர்ஜ் பி. ஷா மேலும் குறிப்பிடுகிறார்.[44]

”தண்டனைவிலக்கு”க்கு பிரதிபலனாய் “இரகசிய தகவல்கள்” வழங்குவதான ஹான்சனின் வேண்டுகோளை வெளிப்படுத்தும் ஷாவின் கடிதத்திற்கு பதிலிறுப்பாக ரேமண்ட் இ.மர்பி செப்டம்பர் 28 அன்று FBI இன் ஜே.பி.லிட்டிலை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அதே தேதியிட்ட அதன் தொடர்ச்சியான ஒரு கடிதத்தில் மர்பி அவரது FBI தொடர்புக்கு எழுதினார்: “ஏதேனும் விபரம் தெரியவரும் பட்சத்தில் அதனைத் தெரியப்படுத்துவதற்கு வசதியாக ஒருவரின் பெயரைக் கூறவேண்டும் என்றும் ஹான்சன் விரும்புகிறார் என்பதாகப் புரிகிறது. ஆகவே, இன்னும் பத்து நாட்களில் அவர் நியூ யோர்க்கில் இருக்கும் சமயத்தில் அவரை நேரில் கண்டு பேசுவதற்கு உங்கள் நியூ யோர்க் அலுவலகம் ஒரு முகவரை அனுப்புமாயின் அது சிறப்பானதாய் இருக்கும்.”[45]

செப்டம்பர் 28 அன்று, வெளியுறவுத்துறையின் ரேமண்ட் மர்பி, அமெரிக்க தூதரகத்தின் ஜோர்ஜ் பி. ஷாவுக்கு “என்னை தொடர்பு கொள்வதற்கும் என் மூலமாக உங்கள் அலுவகத்திற்கு தொடர்பு கொள்வதற்கும் வழிவகை உருவாக்குவதற்கான திரு. ஜோசப் ஹான்சனின் விருப்பம்….” தொடர்பாக கடிதம் அனுப்பினார். “திரு. சாக்கெட், அறை எண். 607, அமெரிக்க கோர்ட் ஹவுஸ், ஃபோலே ஸ்கொயர், நியூ யோர்க் நகரம் அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அலுவலகத்தை தொடர்பு அலுவகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் திரு. ஹான்சனிடம் தெரிவித்து விடலாம் என்பதே எனது ஆலோசனை. FBI இன் வாஷிங்டன் அலுவகத்தின் மூலமாக நியூ யோர்க் மாவட்ட அலுவல்களுக்குரிய பொறுப்பைக் கொண்டிருக்கும் முகவரான திரு.சாக்கெட், அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கி வழக்கு விசாரணை குறித்து துப்புதுலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வழிகள் பயன்படுத்தப்படுவதை துறை பெரிதும் விரும்புகிறது, ஏனென்றால் கறாராய் பார்த்தோமென்றால், இத்தகைய தன்மையிலான ஒரு வழக்கிற்கு அவசியமான விரிவான புலனாய்வு விசாரணைக்கென அதனிடம் சொந்தமான வழிவகை ஏதும் இருக்கவில்லை.... திரு.ஹான்சன் கிளம்பி விட்டார் என்ற தகவல் FBIயிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, அது நிச்சயமாக அவரை நியூ யோர்க்கில் தொடர்பு கொள்ளும்.” [46]

செப்டம்பர் 30 அன்று, ஜோர்ஜ் பி. ஷா ஹான்சனுக்கு, “அமெரிக்காவுக்குக் கிளம்பும் முன்னதாக இங்கே [மெக்சிகோ நகர்] நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கான பதில்” எழுதினார். பி.இ.சாக்கெட் தான் அவரது “இடைத்தரகராக” இருக்கப்போகிறார் என்று ஷா ஹான்சனுக்கு தெரிவித்தார். கைப்பட எழுதியிருந்த ஒரு குறிப்பில் மெக்கிரிகோர் கூறியிருந்தார்: “அன்புள்ள ஜோ: தயவுசெய்து இதைப் பெற்றுக் கொண்டமைக்கும் பெற்றுக் கொண்ட நிலைக்கும் ஒப்புதல்குறிப்பை அனுப்பவும்”; “ஜோ”வுக்கென அனுப்பப்பட்டிருந்த கடிதத்தை SWP அங்கத்தவரோ அல்லது வேறெவருமோ திறந்து விட்டிருக்கவில்லை என்தை உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு இக்குறிப்பு சேர்க்கப்பட்டிருந்தது. [47]


FBI இயக்குநரான ஜே.எட்கர் ஹூவர்

ஹான்சன் “தண்டனைவிலக்கு” நிபந்தனையின் பேரில் “தகவல்களை அளிப்பதற்கு” முனைகிறார் என்ற செய்தியானது, ஹான்சனுடனான அரசாங்கத்தின் சந்திப்புகளையும் ஒரு உளவாளியாக அவரது அந்தஸ்தையும் மேற்பார்வை செய்வதில் தனிப்பட்ட முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தவரான ஜே.எட்கர் ஹூவருக்கு விரைவிலேயே சென்று சேர்ந்தது.

1940 அக்டோபர் 1 அன்று பி.இ.சாக்கெட்டுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், ஜே.எட்கர் ஹூவர், “மறைந்த திரு. லியோன் ட்ரொட்ஸ்கியின் செயலரான ஜோசப் ஹான்சன் விரைவில் மெக்சிகோ நகரில் இருந்து நியூ யோர்க் நகரத்திற்குக் கிளம்பி வர இருக்கிறார், அங்கு அவர் ட்ரொட்ஸ்கியின் படுகொலை குறித்த சற்று சுயேச்சையான புலனாய்வை நடத்த நோக்கம் கொண்டிருக்கிறார். அச்சமயத்தில் தனக்கு கிடைக்கத்தக்க விபரங்கள் எதனையும் அளிப்பதற்கு யாரை அவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து வெளியுறவுத்துறையிடம் அவர் ஆலோசனை கோரியுள்ளார்.”[48]

தண்டனைவிலக்கு நிபந்தனையின் பேரில் தகவல்களை அளிப்பதற்கு ஹான்சன் முன்வந்ததை ஏற்றுக்கொள்வதற்கு ஹூவர் FBIக்கு உத்தரவிட்டார். “நியூ யோர்க் அலுவலகத்திற்கு ஹான்சன் வருகை தருவாராயின், அவரை தந்திரமாகக் கையாண்டு அவர் வழங்கக் கூடிய அத்தனை தகவல்களையும் அத்துடன் இந்த விசாரணையில் அவர் அளிக்கக் கூடிய அத்தனை உதவிகளையும் நாம் பெற்றாக வேண்டும். துறை மேற்கொண்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து அவருக்கு எந்த விபரங்களும் வழங்கப்படக் கூடாது.”[49]


FBI உடன் இரகசிய தொடர்பை ஏற்பாடு செய்து தந்தமைக்காக மெக்சிகோ நகரின் அமெரிக்கத் தூதரக அதிகாரியான ஜோர்ஜ் பி. ஷாவுக்கு ஜோசப் ஹான்சன் “மரியாதையுடன்” நன்றி தெரிவித்து கடிதம் எழுதுகிறார். 1940 அக்டோபர் 23 தேதியிட்ட கடிதம்.

அக்டோபர் 23 அன்று ஜோர்ஜ் பி.ஷாவுக்கு ஹான்சன் பதில் எழுதினார். “திரு.சாக்கெட் தொடர்பான உங்கள் கடிதத்தை நல்ல முறையில் பெற்றுக் கொண்டேன், அவரை விரைவில் சென்று சந்திக்கிறேன்” என்று ஷாவின் செப்டம்பர் 30 கடிதத்திற்கு ஹான்சன் பதில் எழுதியிருந்தார். [50] SWP இன் எந்த உறுப்பினரும் அந்த கடிதத்தை இடைமறித்திருக்கவில்லை என்பதை ஹான்சன் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஹான்சனின் தொடர்புகள் குறித்த SWP தலைமையின் வாக்குமூலம்

SWP தலைமையின் முதுகுக்கு பின்னால்தான் ஹான்சன் அமெரிக்க அரசாங்கத்துடனான தனது சந்திப்புகளை நடத்தினார். அரசாங்கத்துடன் ஹான்சன் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்தது தங்களுக்கு எவ்விதத்திலும் தெரியாது என SWP இன் முன்னணித் தலைவர்கள் பலரும் மறுத்தனர் என்பதோடு ட்ரொட்ஸ்கியின் மரணத்திற்குப் பின்னர், FBI ஐ அணுகுவதைக் குறித்து தலைமை பரிசீலிக்கவே இல்லை என்பதையும் வலியுறுத்தினர்.


ஃபாரெல் டோப்ஸ், ஜேம்ஸ் பி . கனன், ஃபீலிக்ஸ் மோரோ

1977 ஜூன் 2 அன்று, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான, வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலரான டேவிட் நோர்த், 1940 இல் SWP இன் அரசியல் குழுவில் சேவை செய்தவரும் ஸ்மித் சட்ட வழக்குவிசாரணையில் ஒரு பிரதிவாதியாக இருந்தவருமான பீலிக்ஸ் மோரோவை நேர்காணல் செய்தார்.

கே: அந்த சமயத்தில் இந்த படுகொலை குறித்து அது எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்வதற்கு சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி என்ன நடவக்கைகள் எடுத்தது என்பதை உங்களால் மீண்டும் நினைவுகூர இயலுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து அதற்கு ஏதேனும் உதவி கிடைத்ததா என்பது குறித்து.

மோரோ: இல்லை

கே: எதுவுமேயில்லை?

மோரோ: இல்லை.

கே: சரி, இந்தப் படுகொலையை தொடர்பான FBI இன் அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

மோரோ: அவர்கள் எந்த வகையிலும் இதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

கே: சரி, நீங்கள் அறிந்த வரை, FBI இன் உதவியை பெறமுயலும் எந்தக் கொள்கையாவது SWPக்கு இருந்ததா?

மோரோ: அதற்கு எவ்வித காரணமும் இருக்கவில்லை. அது கிட்டத்தட்ட நன்கு புலப்பட்ட விடயமாக இருந்தது. ஜாக்சன் தான் அதனைச் செய்து முடித்திருந்தார். ஜாக்சன் ஒரு GPU முகவர் என்பதை நிரூபிப்பது தான் ஒரே பிரச்சினையாக இருந்தது.

கே: அப்படியா. அப்படியானால் நீங்களறிந்தவரை FBI உடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு அந்த சமயத்தில் SWP எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை?

மோரோ: இல்லை, இல்லை.

கே: எந்த முயற்சியுமே இல்லையா?

மோரோ: நிச்சயமாகத் தெரியும், இல்லை.

கே: அத்தனை உறுதியாக உங்களுக்குத் தெரியுமா?

மோரோ: தெரியும்.

கே: உங்களிடம் ஒன்று கேட்கிறேன். ட்ரொட்ஸ்கியின் மரணத்தை விசாரணை செய்வதற்கு கட்சியில் கிட்டத்தட்ட பொறுப்பு என்ற வகையில் யார் இருந்தார்கள்? கோல்ட்மன் இந்தப் படுகொலை குறித்து ஒரு புத்தகம் எழுதினார் என்பதை நான் அறிவேன்.

மோரோ: அதில் எல்லோருமே ஈடுபட்டிருந்தார்கள் - அதாவது ஒட்டுமொத்த அரசியல் குழுவும்.

கே: அப்படியா. ஜோசப் ஹான்சன் இருந்தாரா?

மோரோ: அவர் மெக்சிகோவில் இருந்தார்.

கே: அவர் 1940 செப்டம்பரின் பின்பகுதியில் திரும்பிவிட்ட பின்னர்?

மோரோ: அவர் அரசியல் குழுவின் ஒரு உறுப்பினராக இல்லை.

கே: ஆகையால் அவருக்கு சிறப்பான பொறுப்பு ஏதும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்கிறீர்களா?

மோரோ: இல்லை

கே: சாக்கெட் என்ற பெயர் உங்களுக்கு ஏதேனும் நினைவுக்குக் கொண்டுவருகிறதா?

மோரோ: இல்லை.

கே: அந்தப் பெயர் உங்களுக்கு எதனையும் நினைவுபடுத்தவில்லை?

மோரோ: இல்லை

கே: அரசியல் ரீதியாக பார்த்தோமென்றால், அந்தக் காலகட்டத்தில், நினைவுகூர்ந்தோமென்றால், SWP மற்றும் தொழிலாளர் இயக்கத்திற்கு எதிராக FBI நடத்திய ஒடுக்குமுறை என்பது ஓரளவுக்கு தீவிரமான பிரச்சினையாக இருந்தது. போருக்கு முந்தைய சமயத்தில்.

மோரோ: ஆமாம்.

கே: 1940 இல், ஆகஸ்டு காலகட்டத்தில், ஒடுக்குமுறை ஏற்கனவே தொடங்கி, மினெயாபோலிஸை நோக்கி கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது எனலாமா?

மோரோ: அப்படிக் கூற முடியும்.

கே: குறிப்பாக எந்த வகையில்?

மோரோ: என்னால் துல்லியமாக விபரங்களை நினைவு கூர முடியவில்லை, ஆனால் உங்களுக்குத் தெரியும்...

கே: விடயம் சூடாக இருந்தது?

மோரோ: ஆம் சூடாக இருந்து கொண்டிருந்தது.

கே: 1941 தொடக்கத்திற்குள்ளாக, அது மிகவும் தீவிரமாகியிருக்கலாம்?

மோரோ: ஆமாம்.

கே: அந்த நோக்கில் இருந்து பார்த்தால், தொழிலாளர்’அரசைப் பாதுகாப்பது குறித்த ட்ரொட்ஸ்கியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினை நோக்கிய அவரது மனப்போக்கு ஆகியவற்றைக் கொண்டு பார்த்தால், FBI மீது நம்பிக்கை வைக்கும் ஒரு மனோபாவத்தை கட்சி, அந்த சமயத்தில் SWP இன் தலைமை, அரசியல் குழு எவ்வாறு பார்த்திருக்கும்...

மோரோ: FBI மீதான நம்பிக்கையெல்லாம் இருக்கவில்லை.

கே: அப்படியா.

மோரோ: அப்படியான ஏதும் அங்கே கிடையாது.

கே: அரசியல்ரீதியாக பார்த்தோமென்றால், அப்படியான ஒன்று அசாதாரணமானதாகவே இருந்திருக்கும்....

மோரோ: நிச்சயமாய்!

கே: யாரேனும் அதற்கு ஆலோசனை அளித்திருப்பார்களேயானால்...

மோரோ: ஆம்.

கே: ஏன் இதைக் கேட்கிறேனென்றால், இந்தக் கேள்வி ஆவணங்களில் வெளிவந்திருக்கிறது, ஆனால் உங்களைப் பொறுத்தவரை அது முற்றிலும் ஒரு செய்தியாகவே இருக்கும்.

மோரோ: மிகச் சரி.

கே: அப்படியா, அதற்கு எந்த அங்கீகரிப்பும் ஒருபோதும் இருந்திருக்கவில்லை என்று நிச்சயமாகச் சொல்கிறீர்கள்.

மோரோ: எதுவுமில்லை. [51]

மோரோ கூறியவை கெல்ஃபாண்ட் வழக்கின் போது SWP இன் அரசியல் குழு உறுப்பினர்களான ஃபாரெல் டோப்ஸ் மற்றும் மோரிஸ் லூயிட், மற்றும் மோரோவும் அளித்திருந்த சாட்சியங்களுடன் ஒத்துப் போகின்றன. [52] SWP இன் முன்னணி நிர்வாகிகளான இவர்கள் ஒவ்வொருவருமே FBI உடனான ஹான்சனின் இரகசிய சந்திப்புகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றே சாட்சியமளித்தனர்.

1982 ஏப்ரல் 11 அன்று, கெல்ஃபாண்ட் வழக்கறிஞரான ஜோன் பேர்ட்டன், டோப்ஸிடம் குறுக்குவிசாரணை செய்தார்:

பேர்ட்டன்: திரு.ஹான்சன் 1940 இல் நியூயோர்க் நகரத்தில் FBI உடன் நேருக்கு நேர் சந்தித்து பேசியிருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

டோப்ஸ்: எனக்குத் தெரியாது...

கேள்வி: FBI உடனான திரு.ஹான்சனின் சந்திப்புகள் குறித்து எப்போதாவது அவரிடம் பேசியிருக்கிறீர்களா?

பதில்: அதைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது என்று கூறி விட்டேனே. [53]

கனன், மோரோ, டோப்ஸ் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டிருந்த சமயத்தில் மொரிஸ் லூவிட் தான் SWPக்கு தலைமையில் இருந்தார். 1982 ஏப்ரல் 13 அன்று அவரளித்த சாட்சியத்திலும் இதேபோன்றதொரு சாட்சியத்தையே அளித்தார்.

பேர்ட்டன்: ட்ரொட்ஸ்கியின் படுகொலையை அடுத்து நியூயோர்க் நகரில் FBI ஐ ஹான்சன் சந்தித்தாரா இல்லையா என்பது குறித்து அந்த சமயத்தில் உங்களுக்கு தெரிந்திருந்ததா?

லூவிட்: ஹீலியவாதிகளின் அறிக்கைகளில் இருந்தும், ஆவணங்களில் இருந்தும் தான் எனக்குத் தெரிய வந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை.

கே: அந்த சமயத்தில் அந்த குற்றச்சாட்டு ஒரு பொய் என நீங்கள் கருதினீர்களா?

ப: பொய் அல்ல, ஆனால் - ஜோ ஏதேனும் செய்திருந்தார் என்றால் அதை கட்சித் தலைவர்களுக்கு தெரிந்தும் அவர்களின் வழிகாட்டலின் கீழும் தான் செய்திருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவர் அந்த வகையான மனிதர்.[54]

ஹான்சன் FBI உடனான தனது சந்திப்புகள் குறித்து SWP தலைமைக்கு தெரிவிக்கவில்லை. FBI இன் சிறப்பு முகவரான எம்.ஆர்.கிரிபின் டிசம்பர் 9, 1940 அன்று வழங்கிய ஒரு அறிக்கை SWP தலைமையகத்திற்கு முகவரின் விஜயத்தை விவரிக்கிறது:

“இதை எழுதுபவர் ட்ரொட்ஸ்கி விவகாரம் குறித்து ஜேம்ஸ் பி. கனன் மற்றும் ஜோசப் ஹான்சன் ஆகியோரை நேர்காணல் செய்தபோது, அவர்களிடம் இது குறித்து வழங்குவதற்கு எந்த தகவல்களும் இல்லை என்று அறிவுறுத்தப்பட்டார். அவர்கள் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு மிகவும் தயக்கம் காட்டியதோடு செய்தியளிக்கும் முகவர் அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் மிகச் சுருக்கமான பதிலையே அளித்தனர்.”

அரசாங்க அதிகாரிகளிடம் தனியாகப் பேசுகையில் ஹான்சன் எந்த “தயக்கமும்” இல்லாதிருந்தார் என அமெரிக்க அரசாங்கத்தின் உள்முக அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. ஜேம்ஸ் பி. கனன் முன்னிலையில் FBI ஆல் எதிர்கொள்ளப்பட்டபோது மட்டும்தான் ஹான்சன் அமைதியாக இருக்க நேரிட்டது.

அமெரிக்க அரசாங்கத்துடனான ஹான்சனின் சந்திப்புகளது காலமுக்கியத்துவம்

SWPக்குள்ளான FBI இன் ஊடுருவலானது 1940 இலையுதிர் காலத்தில், அதாவது FBI உடன் ஹான்சன் தொடர்பை ஸ்தாபித்த அந்த நேரத்தில்தான், ஒரு அடிப்படையான மாற்றத்திற்குள் சென்றது என்பதற்கான ஆதாரத்தை, வழக்குவிசாரணையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்ற நூலில் டோனா ஹாவர்டி-ஸ்டேக் எடுத்துவைக்கிறார். வழக்குவிசாரணையில் FBI இன் முகவரான ராய் டி.நூனன் அளித்த சாட்சியத்தில் 1940 இன் பிற்பகுதியில்” முக்கியமான SWP தலைவர்கள் மீதான குறிப்பான கோப்புகளை FBI அபிவிருத்தி செய்ததாகக் கூறியிருந்தார்.[55] (அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது).

குறுக்குவிசாரணையின் போது, SWP இன் வழக்கறிஞரான கோல்ட்மனுக்கும் நூனனுக்கும் இடையில் நடந்த உரையாடல் பின்வருமாறு:

கோல்ட்மன்: நீங்களறிந்த வரையில் அதற்கு எவ்வளவு காலம் முன்பாக விசாரணை தொடங்கியிருந்தது?

நூனன்: [1941] பிப்ரவரி மற்றும் மார்ச்சில் விசாரணை நடைபெற்று வந்தது எனக்குத் தெரியும், சில பிரதிவாதிகள் குறித்து அதற்கு முன்பிருந்தேயான விபரங்கள் எங்களிடம் இருந்தன.

கோல்ட்மன்: அதற்கு எவ்வளவு காலம் முன்பாக?

நூனன்: 1940 நவம்பரில் அது எங்களிடம் இருந்தது என்பது எனக்குத் தெரியும். [56]

1940 நவம்பர் காலம் “1940 இலையுதிர் காலத்திலேயே FBI இன் சுயாதீனமான விசாரணையை அடிப்படையாகக் கொண்டு” வழக்குத் தொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்ற ஹாவர்டி-ஸ்டேக் இன் கண்டறிவுடன் பொருந்திச் செல்கிறது. [57]

1941 வசந்த காலத்தில் ஊடுருவல் தீவிரப்பட்டிருந்தது, அச்சமயத்தில் SWP இன் நியூ யோர்க் தலைமையகம் “தக்கஇடத்தில் அமர்த்தப்பட்டிருந்த உளவாளிகள்” கொண்டதாக இருந்தது. [58] ”குறிப்பாக நியூ யோர்க்கில் உள்ள SWP இன் தேசியத் தலைமையகத்தை FBI உற்றுக் கண்காணித்தது.” என ஹாவர்டி-ஸ்டேக் இன் அறிக்கை குறிப்பிடுகின்றது.[59]

அவரது நியூ யோர்க் அலுவலகத்திற்கு “விரைவில் [FBI Agent B.E. Sackett ஐ] சென்று பார்க்கவிருக்கிறேன்” என்று ஹான்சன் 1940 அக்டோபர் 23 அன்று ஜோர்ஜ் பி.ஷாவுக்கு எழுதினார். முன்னதாய் “தண்டனைவிலக்கு” என்ற நிபந்தனையுடன் “தகவல்களை அளிக்கும்” நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கு சந்திப்புக்கு ஹான்சன் கோரிக்கை வைத்திருந்தார்.

ஹான்சன் “1940 இலையுதிர்காலத்தில்” நியூ யோர்க் நகரத்திற்குத் திரும்பினார், முகவர் நூனன் ஊடுருவல் ஒரு உயர்ந்த மட்டத்தை எட்டிய காலமாக “1940 நவம்பர்” மீது அழுத்தமளித்து கூறுகிறார். இத்தகைய கால ஒற்றுமையானது அமெரிக்காவிற்கு ஹான்சன் திரும்பியமைக்கும் அவர் அக்டோபர் 23 அன்று சாக்கெட்டை விரைவில், அதாவது 1940 அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் ஆரம்பத்தில், சென்று பார்க்கவிருப்பதாக வாக்குறுதி அளித்தமைக்கும் இடையில் மிகவும் பொருத்தமாக இருக்கின்றது.

ஹான்சனுக்கும் FBIக்கும் இடையிலான தகவல்பரிவர்த்தனைகளின் பொதுப் பதிவு 1940 அக்டோபர் 23 குறிப்புக்கு பின் நின்று விடுகிறது. ஹான்சன் நியூ யோர்க் திரும்பியதன் பின்னர், அந்த உறவு மேலும் அதிகமான நெருக்கத்திற்குள் சென்று, இன்னும் கடுமையான இரகசியகாப்பு விதிகளுக்குள் சென்று விட்டதால், அந்த தகவல்பரிவர்த்தனைகள் பொதுப் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு விட்டிருக்கின்றன என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

தண்டனைவிலக்களிக்குமாறு” ஜோசப் ஹான்சனின் வேண்டுகோள்

ஹாவர்டி-ஸ்டேக்கின் நூல், ஹான்சன் எதிர்பார்த்த உடன்பாட்டில் இடம்பெற்றிருந்த ஒரு விநோதமான மொழியிலான ஒரு உள்ளடக்கத்தை வழங்குகிறது; ஹான்சன் அரசாங்கத்துடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான பிரதிபலனாக “தண்டனைவிலக்கை” எதிர்பார்த்தார். பிளாக்’ சட்ட அகராதியின் படி, “தண்டனைவிலக்கு” (impunity) என்பதன் பொருள்: “தண்டனையில் இருந்து விலக்கு; ஒருவரின் நடவடிக்கையால் விளையக் கூடிய பாதிப்பான விளைவுகளில் இருந்தான விலக்கு. Cf. Immunity.” [60] தனிப்பட்ட சட்டப் பாதுகாப்புக்கான ஹான்சனின் வேண்டுகோள் முழுக்க ஒரு தனிநபர் தன்மையைக் கொண்டிருந்தது. SWP இன் ஒப்புதலுடன் அவர் FBI ஐ தொடர்பு கொண்டிருந்திருப்பாராயின் அத்தகைய ஒரு வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்க மாட்டார்.

அரசாங்கத்திடம் இருந்து தண்டனைவிலக்கினை ஹான்சன் எதிர்பார்த்தற்கு இரண்டு காரணங்கள் இருக்கக் கூடும்.

முதலாவது ஜோர்ஜ் மிங்க் காணாமல் போனது தொடர்பானது. 1940 இன் ஆரம்ப பகுதியில் காணாமல் போய், கொலையுண்டிருக்கக் கூடும் என்று அனுமானிக்கப்பட்ட ஒரு ஸ்ராலினிச முகவரான மிங்க் காணாமல் போனது தொடர்பாக ஹான்சனிடம் விசாரிக்கப்பட வேண்டியிருந்தது என்று ஜே.எட்கர் ஹூவர் குறிப்பாக தெரிவித்திருந்தார். GPU உடன் இருந்த தொடர்புகளை ஹான்சனே ஒப்புக்கொண்டிருந்திருந்தார் என்பதால் மிங்க் காணாமல் போனதில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்று நம்புவதற்கு FBIக்கு காரணம் இருந்தது.

1940 அக்டோபர் 1 அன்று பி.இ. சாக்கெட்டுக்கு ஜே. எட்கர் ஹூவர் அனுப்பிய கடிதத்தில், GPU உடன் ஹான்சனுக்கு இருந்த தொடர்புகள் பற்றிய பின்புலத் தகவல்களையும் அத்துடன் மிங்க் காணாமல் போனது தொடர்பாக அவருக்குத் தெரிந்திருப்பதற்கான சாத்தியத்தையும் தனது முகவருக்குத் தெரிவித்திருந்தார்.

ஹூவர் பின்வருமாறு எழுதினார்: ”ஹான்சனும் அவரது கூட்டாளிகளும் ஆறு மாதத்திற்கு முன்பாக ஜோர்ஜ் மிங்கை இல்லாது செய்து விட்டார்கள், 1940 மே மாதத்தில் ட்ரொட்ஸ்கி மீதான முதல் தாக்குதலுக்கு கொஞ்சம் முன்பாக மிங்கை கைகால்களைக் கட்டி மெக்சிகோ நகரில் இருந்து சுமார் 30 மைல்கள் தொலைவில் ஒரு பள்ளத்திற்குள் அவரைத் தூக்கிவீசி விட்டார்கள் என்றவிதமாய் வெளியுறவுத் துறையில் இருந்து மேலதிகமாய் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது… அவரை தந்திரமாகக் கையாண்டு இந்த விசாரணையில் அவரால் வழங்கக்கூடிய அத்தனை விபரங்களையும் மற்றும் அவரது உதவியையும் பெற்றாக வேண்டும். ஆயினும், துறை விசாரணையின் முன்னேற்றம் குறித்து அவருக்கு எந்த தகவலும் அளிக்கப்பட்டு விடக்கூடாது. ஆயினும், ஜோர்ஜ் மிங்க் செய்தி தொடர்பான உண்மையைக் கண்டறிவதற்கான அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.” [61]

மிங்க் நன்கறிந்த ஒரு GPU முகவர் மற்றும் ஒரு அமெரிக்கக் குடிமகன் என்பதால் FBI அவர் தொடர்பாக ஆர்வம் காட்டியது. முன்னர் பிலடெல்பியா நகரில் ஒரு வாடகைக்கார் ஓட்டுநராக இருந்த மிங்க், மாஸ்கோவுக்கு போவதும் வருவதுமாய் இருந்ததோடு ஐரோப்பா முழுமையாக சுற்றினார், அப்போது ஒரு ஸ்ராலினிச உளவாளியாக 1935 இல் டென்மார்க்கில் அவர் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலைக்கு பின்னர், மிங்க் ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின் சமயத்தில் அங்கு GPUவுக்காக வேலைசெய்தார். GPUவுக்காக பார்சிலோனாவில் அராஜகவாத பேராசிரியர் கமிலோ பேர்னெரியை மிங்க் கொலைசெய்ததாக அராஜகவாதியான கார்லோ ட்ரெஸ்கா குற்றம்சாட்டினார். [62] அவர் காணாமல் போனதும் எங்கிருக்கிறார் என்ற விபரமும் FBIக்கு உயர் முக்கியத்துவம் உள்ளதாய் இருந்தது.

மிங்க்கின் மரணத்திற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் காரணமாயிருப்பார்கள் என்று ஹூவர் கருதியதற்கான எந்தவொரு அடையாளமும் இருக்கவில்லை. “ஹான்சன் மற்றும் அவரது கூட்டாளிகள்” என்று ஹூவர் கூறியமையானது மிங்கைக் கொலைசெய்ததாக ஹூவர் சந்தேகப்பட்ட GPUவுக்கான ஒரு குறிப்பாகும். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எதிரிகளை படுகொலை செய்வதில்லை என்பதை ஒரு அரசியல் கோட்பாடாகக் கொண்டிருந்ததால் அவர்கள் அதற்குக் காரணமாக இருந்திருக்க முடியாது. மேலும், ஒரு கைதேர்ந்த GPU கொலைகாரரை படுகொலை செய்யும் அளவுக்கு அவர்களிடம் மனித ஆற்றலோ அல்லது செய்திறனோ இருந்திருக்கவில்லை. 1940 மே மாதத்தில் ஸ்ராலினிச படுகொலை அணி கோயகானில் இருந்த ட்ரொட்ஸ்கியின் இல்லத்தில் பாதுகாப்பு வளையத்தை உடைக்க முடிந்தமையும் திருப்பிச் சுடுவதற்கு பாதுகாவலர்கள் தவறியிருந்தமையும் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்புக் காவலர்களின் அனுபவமற்ற தன்மையை சுட்டிக்காட்டக் கூடியவையாக இருக்கின்றன.

ஹான்சன் தண்டனைவிலக்கு கோரியதற்கான இரண்டாவது காரணம் அரசாங்கம் SWP மீது வழக்குத் தொடுக்கின்ற சாத்தியம் இருந்ததில் இருந்து எழுந்திருந்தது. ஹான்சன் அரசாங்கத்துடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சாக்காக ட்ரொட்ஸ்கியின் படுகொலையை பயன்படுத்திக் கொண்டார். இந்த சமயத்தில், SWP ஐ கண்காணிப்பதில் ஏற்கனவே FBI செயலூக்கத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது என்பதோடு வழக்குத் தொடுக்கும் சாத்தியத்தையும் பரிசீலித்துக் கொண்டிருந்தது. ஹான்சன் தனது கடந்த கால நடவடிக்கைகளோ அல்லது அரசாங்கத்துக்கு வழங்குகின்ற தகவல்களோ தன்மீதான குற்றப்பத்திரிகை வாசிப்புக்கு அல்லது வழக்குத் தொடுப்புக்கான முகாந்திரங்களாக பயன்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதை உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு சட்டபூர்வ “தண்டனைவிலக்கு”க்கு கோரிக்கை வைத்திருக்கக் கூடும். வழக்கு விசாரணையின் போது ஒரு பிரதிவாதியாக அல்லது ஒரு சாட்சியாகவும் கூட அவர் தோற்றமளிக்கவில்லை என்ற உண்மையானது, உண்மையில், அவர் வேண்டுகோள் வைத்த தண்டனைவிலக்கை அவர் பெற்று விட்டிருந்தார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

ஸ்மித் சட்ட விசாரணையில் ஜோசப் ஹான்சன் பெயர் இல்லாதிருந்தது

சோசலிச தொழிலாளர் கட்சியின் 20 அங்கத்தவர்கள் மீதான வழக்குவிசாரணையின் போது, வழக்கு குறித்த அரசாங்கத் தரப்பின் சித்தாந்தமானது தலைமை சதியாளராக லியோன் ட்ரொட்ஸ்கிக்கும் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சிக்கும் இடையிலான ஒரு தொடர்பைக் காட்டுவதையே அடிப்படையாக கொண்டிருந்தது. நாடுகடத்தப்பட்டு மெக்சிகோ நகரில் வாழ்ந்து கொண்டிருந்த ட்ரொட்ஸ்கிக்கும் சோசலிச தொழிலாளர் கட்சிக்கும் இடையில் இருந்த ஒவ்வொரு தொடர்பையும் விரிவாகக் காட்டுவது இதற்கு அவசியமாக இருந்தது.

விசாரணையின் போது அரசாங்கத் தரப்பு பல நாட்களுக்கு பிரதிவாதிகளுக்கும் கோயகோனில் இருந்த ட்ரொட்ஸ்கிக்கும் இடையிலான தொடர்பை காட்டுவதற்கே முயற்சி செய்துகொண்டிருந்தது. மெக்சிகோ நகரில் இருந்த ட்ரொட்ஸ்கிக்கும் SWP இன் பிரதிவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்க நூற்றுக்கணக்கான சாட்சிகள் மற்றும் எண்ணற்ற இரகசிய முகவர்களிடம் பல மாதங்கள் விசாரித்து சேகரித்திருந்த ஆதாரங்களின் முழு வலுவையும் அவர்கள் முன்வைத்தனர். ட்ரொட்ஸ்கியின் வேலைத்திட்டத்திற்கு SWP வழங்கிய அரசியல் ஆதரவைக் காட்டுகின்ற நூற்றுக்கணக்கான ஆவணப்பக்கங்களை தாண்டி, ஆதாரங்களில் பின்வருபவை இடம்பெற்றிருந்தன:

வழக்குதொடனரின் விடயத்தில் ஒரு வெளிப்படையான ஆதாரத்தின் மூலக்கல்லாக ஒரு பெயர் வெளிப்பட்டது. அது ஜோசப் ஹான்சன் உடையதாகும். ஹான்சன் ட்ரொட்ஸ்கியின் கோயகோன் வளாகத்தில் ட்ரொட்ஸ்கியுடன் வசித்து வந்ததுடன், 1937 இலிருந்து ட்ரொட்ஸ்கி 1940 ஆகஸ்டு 20 அன்று ஒரு ஸ்ராலினிச முகவரால் படுகொலை செய்யப்படும் வரையில் அவரது அரசியல் செயலராகச் செயல்பட்டார். ட்ரொட்ஸ்கியுடன் அன்றாட அரசியல் விவாதங்களில் பங்கெடுத்திருந்தவரான அவர்தான் SWPக்கும் கோயகானுக்கும் இடையிலான தகவல்தொடர்பை மேற்பார்வை செய்வதற்கான தலைமைப் பொறுப்பாளராய் இருந்தார். இந்த காலகட்டத்தில் SWPக்கு ட்ரொட்ஸ்கி அனுப்பியிருந்த தகவல் பரிவர்த்தனைகள் பலவும் பாதுகாப்பு நோக்கங்களுக்காய் ”ஜே.ஹான்சன்” என்றே கையெழுத்திடப்பட்டன.

அரசாங்கத் தரப்பு எதனை சட்டரீதியாக நிரூபிக்க முனைந்து கொண்டிருந்ததோ, SWPக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையிலான தொடர்பு என்ற அதன் உருவடிவமாகத் திகழ்ந்தவர் ஹான்சன். 1939-40 இல் பேர்ன்ஹாம்-சாச்ட்மேன் கன்னையுடனான பிளவு, இரண்டாம் உலகப் போரில் கட்டாய இராணுவச் சேர்க்கை தொடர்பான கட்சியின் கொள்கை அபிவிருத்தி, மற்றும் தொழிற்சங்க பாதுகாவல் படைகளை உருவாக்குவதற்கான கொள்கை அபிவிருத்தி ஆகியவை தொடர்பாக SWP இன் தலைமைக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் நடந்த விவாதங்களை மிக நெருக்கமாய் அறிந்தவர். இந்தப் பிரச்சினைகள் ஒவ்வொன்றுமே, அதிலும் குறிப்பாக அந்த கடைசி இரண்டு பிரச்சினைகள், SWPம் ட்ரொட்ஸ்கியும் அமெரிக்க அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கான ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு அரசாங்கத் தரப்பால் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டவையாக இருந்தன.

ஹான்சன், ட்ரொட்ஸ்கியின் செயலராக இருந்தவர் என்பதும் ஹான்சனின் பெயர் வழக்கு விசாரணையின் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது என்பதும் அமெரிக்க அரசாங்கத்தின் வழக்கறிஞர்களுக்கு நன்கு தெரியும். அரசாங்கத் தரப்பில் இருந்து பார்த்தால், ஹான்சன் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு கோரப்படவில்லை என்ற உண்மையே கூட விளக்கமற்றதாக இருக்கிறது.

FBI ஐ ஹான்சன் சென்று பார்த்து வந்திருந்தது SWP இன் தலைமைக்கு தெரிந்திருக்குமானால், SWP இன் பிரதிவாதிகளது வழக்கறிஞர்கள் இந்த முக்கியமான உண்மையை வழக்கு விசாரணையின்போது பெருமளவில் பயன்படுத்தியிருப்பார்கள்.

முதலாவதாய், ரூஸ்வெல்ட் நிர்வாகம், அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காக சதி செய்ததாய் இப்போது வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் ஒரு குழுவுடன் முன்னதாக அது இரகசிய சந்திப்புகளை நடத்தியிருந்தது என்பது தெரிய வருமானால் அது அதற்கு பெரும் அரசியல் சங்கடமாக இருந்திருக்கும்.

இரண்டாவதாக, வழக்குவிசாரணைக்கு முன்பாகவே SWP இன் தலைமைக்குள்ளாக FBI ஊடுருவல் நடத்தியிருந்தது என்ற உண்மையானது இந்த வழக்கு விசாரணையின் ஜனநாயக-விரோத, ஜோடிப்புத் தன்மைக்கான ஆதாரமாக விளங்கியிருக்கும். SWP இன் உண்மையான திட்டங்களுக்கும் அரசாங்க முகவர்கள் மற்றும் FBI அதிகாரிகள் அளித்த யோசனைகளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டறிவதை இந்த இரகசிய சந்திப்புகள் சாத்தியமற்றதாக்கியிருந்தன என்ற காரணத்தைக் கூறி இந்த வழக்குவிசாரணையே சட்ட அடிப்படையற்றது என தள்ளுபடி செய்யக் கோரி பிரதிவாதிகளின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருக்க முடியும். ஒட்டுமொத்த விசாரணையையுமே சட்டமுறைமையற்றதாக்கும் வகையில், SWP ஐ சதிக் கோரிக்கைகளை முன்னெடுக்கும் பொறிக்குள் சிக்கவைக்க FBI முனைந்திருந்தது என்பதற்கான ஆதாரமாக ஹான்சனது சந்திப்புகளை பயன்படுத்தியிருக்க முடியும்.

மூன்றாவதாக, அரசாங்க சாட்சிகளை அழைத்து, அவர்களை சட்டப் பிரமாணத்தின் கீழ், கட்சிக்குள்ளாக ஏதேனும் முகவர்கள் அல்லது உளவாளிகள் ஊடுருவியிருக்கிறார்களா என்று கேட்பதன் மூலம் FBI இன் ஊடுருவல் வலைப்பின்னலை அம்பலப்படுத்துவதற்கு இந்த சந்திப்புகளை SWP பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும். இந்த விசாரணையை அரசின் கண்காணிப்பு எந்திரத்தின் மீதான ஒரு அம்பலப்படுத்தலாக SWP மாற்றியிருக்க முடியும். தொழிலாளர் இயக்கத்தில் அரசாங்கத்தின் ஊடுருவல் என்ற பிரச்சினை 1930களின் பிற்பகுதியிலும் மற்றும் 1940களின் தொடக்கத்திலும் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. கல்வி மற்றும் உழைப்பு தொடர்பான செனட் குழுவின், குடிமை சுதந்திரங்கள் தொடர்பான உபகுழுவின் முன்பான ஆயிரக்கணக்கான சாட்சியப் பக்கங்களை இந்தக் கேள்வி ஆக்கிரமித்திருந்தது. விஸ்கான்சின் செனட்டரான ரோபர்ட் லாஃபோலெட் இந்த உபகுழுவிற்கு தலைவராய் இருந்தார்.[63]

ஒரு சதிகாரர் என்பதற்கான அரசுத் தரப்பின் வரையறை

தனது வாதத்தின் போது, அமெரிக்க அரசுவழக்கறிஞரான ஆண்டர்சன், “ஜேம்ஸ் பி.கனன், ஃபீலிக்ஸ் மோரோ, ஜோ ஹான்சன் –லியோன் ட்ரொட்ஸ்கியின் செயலர்- மற்றும் மற்றவர்களுடன்… நான்காம் அகிலம் [இதழ்] ஆசிரியர் குழுவில் ஒரு உறுப்பினராய் இருந்தார்” என்ற வகையில் பிரதிவாதி கோல்ட்மன் குற்றம் புரிந்திருந்ததாக திட்டவட்டம் செய்தார். [64]

“லியோன் ட்ரொட்ஸ்கியின் செயலர்” ஹான்சன் உடன் ஒரு ஆசிரியர் குழுவில் பணியாற்றியதற்காக அரசாங்கத்திற்கு எதிரான சதிக் குற்றச்சாட்டில் கோல்ட்மன் பங்குபெற்றிருந்ததாக அரசு தரப்பு வாதிட்டதைக் கொண்டு பார்த்தால், அப்படியானால் சதிகாரர் என்பதற்கான அரசு தரப்பின் வரையறைக்கு ஹான்சன் பொருந்தியிருந்தார் என்பதுதான் சட்டபூர்வமாக பின்தொடர்ந்து வருகிறது. இதுதவிர, ஹான்சன் எழுதிய “வோல் ஸ்ட்ரீட்டின் போர், நம்முடையது அல்ல” என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையை ஆதாரமாக அரசு தரப்பு சேர்த்திருந்தது.[65] வேறு வார்த்தைகளில் சொன்னால், ஹான்சனின் எழுத்துக்கள் அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கான குற்றவியல் சதியை முன்னெடுத்ததாய் அரசாங்க தரப்பு கருதியது. இதற்கும் மேலே என்னவென்றால், ஹான்சன் கட்சி ஊடகங்களில் “ஜோசப் ஹான்சன்” என்றே வரிசைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதே உண்மையாக இருக்க, அரசுத் தரப்பு ஹான்சனை, பரிச்சயமான “ஜோ” என்ற பெயரில் குறிப்பிட்டது.

குற்றவியல் சட்டத்தின்படி, ஒரு சதியில் ஈடுபடுபவர்கள் அந்த சதியை முன்னெடுப்பதில் மற்ற சதிகாரர்களது அத்தனை நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர்களாவார்கள், ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. வழக்கு விசாரணையின் போது அரசுத்தரப்பு தனது வாதத்தில் குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, ஒரு சதிகாரர் “அந்த சதிக் குழுவில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு சில திட்டவட்டமான மற்றும் திறம்பட்ட நடவடிக்கைகளை” எடுத்திருந்தால் மட்டுமே குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியும். [66]

அமெரிக்க குற்றவியல் சட்டத்தில் இத்தகையதொரு “திட்டவட்டமான நடவடிக்கை”யின் மிகப் பொதுவான வடிவமாய் இருப்பது என்னவென்றால் சதியின் மற்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்களைக் கொடுப்பது.

போருக்குப் பிந்தைய காலத்தில் SWPக்குள்ளாக FBI இன் ஊடுருவல்

SWP இன் முக்கிய தலைமை சிறையில் இருந்தபோதும் கூட, கட்சி இன்னும் ஒரு முக்கியமான புரட்சிகரமான சக்தியாக இருந்தது என்ற கவலை FBIக்கு தொடர்ந்தும் இருந்து வந்தது. 1941 வழக்குத் தொடுப்புத் தயாரிப்புடன் தொடங்கிய ஊடுருவலானது மிகப்பெரும் அளவில் விரிவுபடுத்தப்பட்டது. 1940 வசந்த காலத்தில், SWP மற்றும் நான்காம் அகிலத்திற்குள் நடப்பவை குறித்த ஒரு தெளிவான பார்வையை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடிய வகையில் உளவாளிகளின் ஒரு வலைப்பின்னலுக்கு FBI அடித்தளம் அமைக்கத் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், SWP இன்னமும் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாகவே தொடர்ந்தும் இருந்தது என்று ஹூவர் நம்பினார். 1943 மே மாதத்தில் துணை அட்டர்னி ஜெனரல் வேண்ட்ரல் பேர்ஜுக்கு அவர் அனுப்பிய ஒரு கடிதத்தில் அவரது பதட்டம் எடுத்துக்காட்டப்படுவதாக உள்ளது, மிஷன் டூ மாஸ்கோ (Mission to Moscow) என்ற ஸ்ராலினிச-ஆதரவு பிரச்சாரப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக SWP முற்றுகையிட்டு போராடியதை அதில் அவர் குறிப்பிடுகிறார்.

”நியூ யோர்க் நகரம், டைம்ஸ் சதுக்கம், ஹாலிவுட் தியேட்டரில் ’மிஷன் டூ மாஸ்கோ’ படம் தொடக்கவேளையில் இந்த அமைப்பின் [SWP] அங்கத்தவர்கள் மறியலில் ஈடுபட்டதாக 1943, ஏப்ரல் 30 அன்று மாலையில் தகவல் கிடைக்கப் பெற்றிருக்கிறது” என்று அந்தக் குறிப்பு கூறுகிறது.

SWP இன் சுலோகங்களது துல்லியமான வார்த்தைகளைக் குறிப்பிடும் ஹூவர் மறியல் போராட்டத்தின் போது விநியோகிக்கப்பட்ட ஒரு துண்டறிக்கையை மேற்கோள் காட்டுகிறார். “சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியச் செயலரான ஜேம்ஸ் பி. கனன், மற்றும் கட்சியின் சுமார் இருபது பிற அங்கத்தவர்கள் அந்த மறியல் போராட்டத்தின் போது அங்கே இருந்தனர், ஆயினும் பங்குபெறவில்லை. மேலே குறிப்பிட்ட துண்டறிக்கைகளில் பலவும் இராணுவப் படைகளது அங்கத்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.”


1943 மே மாதம், எட்கார் ஹூவரால் உதவி அரசு வழக்குத்தொடுனரான வென்டல் பேர்க விற்கு எழுதப்பட்டது

1945 இல், SWP குறித்து இனி எந்த புலன்விசாரணைகளும் நடத்தப்படக்கூடாது என்ற நீதித்துறையின் ஒரு உத்தரவை ஹூவர் மதித்து நடக்கவில்லை. ”1940 நவம்பர்” இல் இருந்து 1941 வசந்த காலம் வரையிலும் ஈட்டப்பட்ட ஆதாரவளங்கள் FBI இன் நீண்ட-கால மதிப்புவாய்ந்த சொத்துகளாய் தொடர்ந்தும் இருந்து வந்ததாகவே தெரிகிறது. தனது மதிப்புவாய்ந்த சொத்துகள் வழக்குவிசாரணையில் அம்பலப்படுவதில் இருந்து ஹூவர் வெற்றிகரமாக தடுத்துக் காத்து விட்டிருந்தார்.


1948 SWP தேசிய காங்கிரஸ் தொடர்பான FBI தகவல் வழங்குபவரின் உள்ளக அறிக்கை

1945 ஜூலையில், FBI "வன்மத்துடன் SWP ஐ துரத்தியது” என்று ஹாவர்டி-ஸ்டேக் விளக்குகிறார். “தக்க இடங்களில் நெருக்கமாக அமர்த்தப்பட்டிருந்த உளவாளிகளுடன் சேர்ந்து வேலை செய்த நாடெங்கிலும் நிறுத்தப்பட்டிருந்த முகவர்களிடம் இருந்து கட்சி குறித்து தகவல்களை [ஹூவர்] தொடர்ந்தும் சேகரித்துக் கொண்டிருந்தார்”. [67] 1940களின் பிற்பகுதியில் ஹூவர், “முகவர்களது அறிக்கைகளில் கண்டவாறாக - இவற்றை அவர் நீதித்துறைக்கும் தொடர்ச்சியாக அனுப்பி வந்திருந்தார் - சாத்தியமான அபாயங்கள் மற்றும் கட்சி மற்றும் கனன் மற்றும் கார்ல்சன் போன்ற தனிப்பட்ட உறுப்பினர்களது குற்ற நடவடிக்கைகளாக சொல்லப்படுபவை ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டி அட்டர்னி ஜெனரலுக்கு குறிப்புகள் எழுதுவதை சீராக” செய்து வந்தார்.[68]

SWP இன் தலைமைக்குள்ளாக “தக்க இடத்தில் அமர்த்தப்பட்டிருந்த உளவாளிகள்” தொடர்ந்தும் தங்களது பொறுப்புகளில் இருந்தனர் என்பதோடு வழக்குவிசாரணையில் சாட்சியமளிக்கச் செய்வதன் மூலம் அவர்கள் அம்பலமாக்கப்படவில்லை.


நான்காம் அகிலத்தின் சர்வதேச பிரிவுகள் தொடர்பான தகவலாளியின் அறிக்கையின் பிரதி

SWP இன் நியூ யோர்க் நகரத் தலைமையகத்திலும் மற்றும் பிறவெங்கிலும் இருந்த உளவாளிகளுக்கு தலைமையகம் மற்றும் கிளைத் தலைமைகள் மூலமாக வந்த அத்தனை தகவல்தொடர்புகளுக்கும் அணுகல் இருந்ததாகவே தெரிகிறது. FBI அறிக்கைகளில் ஒவ்வொரு முக்கிய கட்சிப் பேரவை மற்றும் மாநாடுகள் குறித்தும் அத்துடன் தனித்தனி தோழர்களால் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும் விரிவான விவரிப்புகள் இடம்பெற்றுள்ளன. கிழக்கத்திய தொகுப்பு நாடுகளிலும் இராணுவ சர்வாதிகாரங்களால் நடத்தப்பட்ட நாடுகளிலும் உள்ளிட சர்வதேச அளவில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் செய்த வேலைகளது ஒரு நீண்ட பட்டியலை உளவாளிகள் அரசாங்கத்திற்கு வழங்கினர்.[69]


ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சர்வதேச நடவடிக்கை தொடர்பான மேலதிக அறிக்கை

1946-48 காலத்தில் அமெரிக்காவில் இருந்த SWP கிளைகளில் இருந்து முகவர்கள் தொகுத்தளித்த அறிக்கைகள் சில சமயங்களில் 60 முதல் 80 பக்கங்கள் வரையும் கூட நீண்டதாய் இருந்தது. தனித்தனியான கட்சி அங்கத்தவர்கள், அவர்களது வீட்டு முகவரிகள், அவர்களது குழந்தைகளின் வயதுவிபரங்கள், அவர்களது வேலையிடங்கள், அவர்கள் பிறந்த இடம், அவர்களது குடியுரிமை அந்தஸ்து மற்றும் தனிப்பட்ட உறவுகள் மற்றும் பாலியல் தொடர்புகள் குறித்த விபரங்கள் ஆகியவை குறித்த விரிவான மற்றும் பல பத்தி விபர அறிக்கைகளும் இதில் அடங்கும்.

இந்தக் காலகட்டம் முழுமையிலும், FBI இன் முகவர்கள் முக்கிய அங்கத்தவர்களின் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கைகளை தயார்செய்தனர். கனன், வின்சென்ட் டுனே, கிரேஸ் கார்ல்சன் மற்றும் ஃபரெல் டொப்ஸ் ஆகியோரைக் குறித்து விரிவான அறிக்கைகள் இருந்தன, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட நெருக்கமான கண்காணிப்புக்கு ஆளானவர்களில் இவர்கள் சிலரேயாவர்.


சிக்காகோ கிளையின் தனித்தனி SWP அங்கத்தவர்கள் தொடர்பான FBI இன் அறிக்கை

SWPக்குள்ளான தனது ஊடுருவலை FBI எந்த மட்டத்திற்கு தீவிரப்படுத்த முடிந்திருந்தது என்பது 1948 ஜூன் 12 அன்று ஜே.எட்கர் ஹூவர் அட்டர்னி ஜெனரலுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஹூவர் எழுதுகிறார்: “இன்றைய நிலையில் சோசலிச தொழிலாளர் கட்சி குறித்த ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது, இந்த தேசிய மாநாட்டிலான தகவல்சேகரிப்பு விரும்பத்தக்கதாக நம்பப்படுகிறது. ஆகவே 1948 ஜூலை 1 முதல் 5 வரை நியூ யோர்க் நகரின் இர்விங் பிளாஸா ஹோட்டலில் நடைபெறவிருக்கும் சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய மாநாட்டில் எங்களது கண்காணிப்பு வேலை தொடர்பாக நவீன தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது.” [70]


1948 யூன் 12 ஜே. எட்கார் ஹூவரால் 1948 SWP தேசிய காங்கிரஸை உளவு பார்க்குமாறு கேட்டு எழுதப்பட்டது

FBI இன் போருக்குப் பிந்தைய ஊடுருவல் அமைப்பு பின்வருமாறு இருந்தது: உயர்மட்ட தகவல்கள் குறைந்தபட்சம் 20 “இரகசிய உளவாளிகள்” மூலம் வந்து கொண்டிருந்தது, இவர்கள் FBI அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையிலான தகவல்தொடர்பை சீராகப் பராமரித்து வந்தனர். இந்த உளவாளிகள் அரசியல் கூட்டங்கள், கருத்துவேறுபாடுகள் மற்றும் சர்வதேச அளவில் இயக்கத்தின் நிலை ஆகியவை குறித்த தகவல்களை வழங்கியதாக FBI ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. "T1" முதல் “T4" வரை, மற்றும் "T14" "T19" "ND452" ஆகிய குறியீட்டுப் பெயர்களைக் கொண்ட குறிப்பிட்ட முகவர்களிடம் அத்தனை கிளைகளின் தலைமைகளையும் குறித்த நெருக்கமான தகவல்கள் இருந்தன, அவர்கள் SWP இன் தலைமையில் முக்கியமான பொறுப்புகளை வகித்திருந்தனர் என்பது தெளிவு.


மிகவும் நம்பிக்கைக்குரிய தகவலாளியான T14 யிடம் இருந்து SWP இன் அரசியல் குழு கூட்டங்கள் குறித்து உறுதிப்படுத்தப்படாத அறிக்கை

அரசாங்கம் மேலதிக வழக்குத்தொடுப்புக்கு முடிவுசெய்யும் பட்சத்தில் “சாட்சியமளிக்க வருகின்ற நிலையில் இல்லாதவர்கள்” என்று FBI குறிப்பிடும் அளவுக்கு இந்த முகவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மிகுந்த மதிப்புபெற்றவர்களாக இருந்தனர். அரசியல் குழு கூட்டங்கள் குறித்தும் கட்சி பேரவைமாநாடுகள் குறித்துமான முழு அறிக்கைகள் பல்வேறு இரகசிய உளவு மூலங்கள் மூலமாக FBI க்குக் கிடைத்திருந்தது என்ற உண்மையானது தலைமையின் மிக உயர்ந்த மட்டங்கள் அரசின் முகவர்களால் ஊடுருவப்பட்டிருந்தன என்பதைக் காட்டுவதாக இருக்கிறது.

இந்த இரகசிய உளவாளிகளுக்கு ஒரு அடுக்கின் கீழே கீழ் மட்ட ஆதாரங்கள் மற்றும் SWP இன் உள்ளூர் கிளைகளில் உறுப்பினர்களாக இருந்தபடி உள்ளூர் கட்சி நடவடிக்கைகள், அரசியல் கருத்துபேதங்கள், மற்றும் தனிப்பட்ட அங்கத்தவர்களது வாழ்க்கைகள் குறித்து தங்களை இயக்குபவர்களுக்கு தகவலளித்து வந்த முகவர்களின் வலைப்பின்னல் இருந்தது. கட்சிக்கு பிரசன்னம் இருந்த அத்தனை பகுதிகளிலும் தக்க இடத்தில் தனது முகவர்களை FBI அமர்த்தி விட்டிருந்தது.


தனித்தனி அங்கத்தவர்கள் பற்றி குறிப்பிட்டு SWP கிளை தொடர்பான FBI இன் அறிக்கை

1938-41 காலத்தின் SWPக்குள்ளான ஊடுருவல்தான் பல தசாப்தகால ஊடுருவல் திட்டத்திற்கு அடித்தளம் அமைத்துத் தந்திருந்ததாக ஹாவர்டி-ஸ்டேக் குறிப்பிடுகிறார். “1948 முழுமைக்கும் அதனை தாண்டியும்” கண்காணிப்புக்கான ஹூவரின் வேண்டுகோள்களுக்கு நீதித்துறையின் ஒப்புதல் கிட்டியது. மேலும், “பனிப் போர் சூடாக ஆக, SWP மீதான ஹூவரின் உளவுபார்த்தல் கூடுதல் தீவிரத்தைப் பெற்றது. 1950களின் தொடக்கத்தில் இரண்டாவது சிவப்பு திகில் (Second Red Scare) காலத்தின் முத்திரை அம்சங்களாக ஆகியிருந்த கம்யூனிச-விரோத மனோநிலை மற்றும் அத்தகைய மனோநிலைக்கு வசதியாக உருவாக்கப்பட்ட புதிய பொறிமுறைகள் ஆகியவற்றின் வளர்ச்சியுடன் சேர்ந்து கட்சி மீதான புலனாய்வும் விரிவடைந்தது.[71]

1961 இல் SWPக்கு எதிராக FBI COINTELPRO {எதிர்உளவு வேலைத்திட்டம் என்ற அரசியல் அமைப்புகளுக்கு எதிரான இரகசிய செயல்திட்டம்} நடவடிக்கைகளை தொடுத்தது தொடர்பாக 1973 இல் சோசலிச தொழிலாளர் கட்சி தொடுத்த வழக்கை ஹாவர்டி-ஸ்டேக் குறிப்பிடுகிறார். 1961 க்கும் 1976க்கும் இடையிலான காலத்தில் SWPக்கு எதிராக 1,300 முகவர்களை பயன்படுத்தியிருந்த FBI, SWP இன் 20,000 ஆவணங்களை திருடியிருந்தது, 200க்கும் அதிகமான சட்டவிரோத அலுவலகஉடைப்புக்களை நடத்தியிருந்தது என்பதை அவர் குறிப்பிடுகிறார். 1986 இல், FBI "SWP மற்றும் அதன் உறுப்பினர்களின் அரசியல்சட்ட உரிமைகளை மீறிய குற்றத்தை புரிந்திருந்தது” என்று தீர்ப்பளித்த ஒரு கூட்டரசாங்க நீதிபதி 264,000 டாலர்கள் அபராதத்தையும் SWP க்கு அளிக்கத் தீர்ப்பளித்தார். [72] ”FBI இன் கோப்புகளுக்கு அணுகல் இருந்த நிலையில், SWP இன் நடவடிக்கைகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் குறித்த இத்துறையின் விசாரணையானது, 1940 இல் தொடங்கி விட்டிருந்தது என்ற SWP இன் வாதத்தை [மாவட்ட நீதிமன்ற நீதிபதி தோமஸ் கிரீஸா] உறுதிப்படுத்தினார்” என்று ஹாவர்டி-ஸ்டேக் எழுதுகிறார். [73]

SWP தொடரப்பட்ட வழக்கு இழுத்துக் கொண்டு சென்ற நிலையிலும் கூட, கட்சி, அதன் சொந்த உறுப்பினர்களில் ஒருவரான அலன் கெல்ஃபாண்டை, 1940 இல் ஹான்சனுக்கும் FBIக்கும் இடையில் நடைபெற்ற தகவல்பரிவர்த்தனைகள் குறித்து SWPயிடம் அவர் விளக்கம் கேட்ட காரணத்திற்காக, கட்சியில் இருந்து வெளியேற்றியது. SWP கெல்ஃபாண்டை கண்டனம் செய்தது; பாதுகாப்பு மற்றும் நான்காம் அகில விசாரணையை ஒரு “பெரும் பொய்” என்று அழைத்தது, அத்துடன் சோவியத் இரகசிய போலிஸான GPUவின் நன்கறிந்த முகவர்களை SWPக்குள்ளான ஊடுருவலில் ஸ்ராலினிஸ்டுகளின் பாத்திரம் குறித்து சாட்சியமளிக்க விடாமல் பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்து வேலைசெய்தது. ஹான்சனும் கூட கெல்ஃபாண்ட் வழக்கு தொடங்கும் முன்பாக இறந்து போனார்.

ஜோசப் ஹான்சன் ஒரு அரசாங்க உளவாளியின் பாத்திரத்தை ஆற்றியதை காட்டக்கூடிய ஏராளமான சூழ்நிலை ஆதாரங்களும் நேரடி ஆதாரங்களும் இருக்கின்றன. கெல்ஃபாண்ட் வழக்கின்போது கெல்ஃபாண்டின் வழக்கறிஞர் ஹான்சனுக்கு எதிரான ஆதாரம் குறித்து பின்வரும் விவரிப்பை அளித்தார்:

மத்திய அரசாங்கத்தின் முகவர்களால் SWP ஊடுருவப்பட்டதற்கும் குற்றம்சாட்டுபவர் வெளியேற்றப்பட்டதற்கும் இடையிலான தொடர்பு தடுக்கவியலாமல் இட்டுச் செல்லக் கூடிய சூழ்நிலையின் ஆதாரத்தின் ஒரு சிக்கலான வலையின் மீதே நிரூபணம் தங்கியிருக்கிறது. இந்த வழக்கின் உண்மைகள் மாபெரும் வரலாற்று நிகழ்வுகளில் பொதிந்தவையாகும். அவற்றின் விரிந்து செல்லும் சுற்றுவட்டமானது கடந்த காலத்திற்குள் நீண்டு சென்று, அதிகமான எண்ணிக்கையிலான தனிமனிதர்களை தனது எல்லைக்குள் கொண்டுவருகிறது, ட்ரொட்ஸ்கியும் மற்றும் அவரது வீரதீரமான நாடுகடந்த வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இதில் அடங்குவர். உண்மைக்கான சற்று கூடுதல் நேரடியான மற்றும் கடினம் குறைந்த பாதை இருந்திருக்குமாயின், குற்றம்சாட்டுபவர் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டிருப்பார். எப்படியிருந்தபோதிலும், உண்மைக்கு மேல் உண்மையாய் சேரும்போது, அந்த ஒவ்வொரு உண்மையும் மற்றவற்றுடன் அது கொண்டிருக்கும் முறையான தொடர்புடன் பொருத்திப் பார்க்கப்படும்போது, சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமையில் ஏதோவொன்று மிக மிகக் தவறாக இருக்கிறது என்ற முடிவு தவிர்க்கமுடியாததாக ஆகி விடுகிறது.

ஹான்சன், FBI உடன் இரகசிய உறவை தொடங்கியதை நிரூபிக்கும் ஆவணப் பதிவுகள் இருக்கின்ற அதேநேரத்தில், இந்த உறவு முடிந்ததை காட்டுகின்றவாறான எந்த ஆவணங்களும் இன்னும் வெளிவந்திருக்கவில்லை.

இந்த ஆதாரத்தில் எதுவுமே ஹான்சனை பாதுகாத்துப் பேசுபவர்களால் பதிலளிக்கப்பட்டிருக்கவில்லை.


 

**********                 **********

Notes:

[1] Haverty-Stacke, Donna T. Trotskyists on Trial: Free Speech and Political Persecution since the Age of FDR. (New York, New York: New York UP, 2016), Print. p. 77. FDR. (New York, New York: New York UP, 2016), Print. p. 11.

[2] The Editors, ed. “The FBI-Gestapo Attack on the Socialist Workers Party,” Fourth International 2.6 (1941): 163-66. Marxists.org.

[3] Haverty-Stacke at 77.

[4] Ibid.

[5] Id. at 79.

[6] Id. at 108.

[7] Id. at 34. (Citing “Confidential Memo for the Secretary of State, the Secretary of the Treasury, the Secretary of War, the Attorney General, the Postmaster General, the Secretary of the Navy and the Secretary of Commerce from President Roosevelt, June 26, 1939, OF 10b, box10, FDRPL”).

[8] Id. at 41.

[9] Id. at 30.

[10] Id. at 62.

[11] Id. at 61.

[12] Id. at 60.

[13] Id. at 61.

[14] Id. at 73.

[15] Prosecution’s Opening Statement, US v. Dunne et al., 26-27.

[16] Testimony of James Bartlett, US v. Dunne et al., 130.

[17] For a detailed explanation of the character of the proletarian military policy, see The Heritage We Defend, Ch. 6: “Trotsky’s Proletarian Military Policy,” accessible here. Also available at Mehring Books.

[18] Haverty-Stacke at 153. (Citing J. Edgar Hoover to Special Agent in Charge, New York, June 16, 1942, re. Farrell Dobbs, Internal Security, in Farrell Dobbs’s FBI file 100-21226, FOIA, in the author’s possession; Joseph Prendergast, Acting Chief SDU, to Wendell Berge, January 31, 1942, and Wendell Berge to J. Edgar Hoover, April 25, 1942 in Farrell Dobbs’s FBI file 146-7-1355, FOIA, in the author’s possession; Chief of SDU to J. Edgar Hoover, February 26, 1942, in Dunne’s FBI file 100-18341, and Edward Palmquist’s Custodial Detention Card, in Palmquist’s FBI file 146-7-1213; J. Edgar Hoover to Chief of SDU, March 31, 1941, in Dunne’s FBI file 100-18341).

[19] Testimony of Henry Harris, US v. Dunne et al., 507.

[20] Id. at 78.

[21] Cross Examination of Agent Roy T. Noonan, US v. Dunne et al., 371.

[22] Id. at 372.

[23] Id. at 371.

[24] Haverty-Stacke at 61.

[25] Id. at 371-372.

[26] Haverty-Stacke at 155.

[27] Id. at 154. (Citing FBI report 100-413, NYC 10/20/42 and 12/3/42, f. 7, box 108, SWP 146-1-10).

[28] Id. at 63. (Citing J. Edgar Hoover to Matthew McGuire, June 25, 1941, f. 2, box 108, SWP 146-1-10; Wendell Burge to Henry Schweinhaut, June 25, 1941, f. 2, box 108, SWP 146-1-10; J. Edgar Hoover to Matthew McGuire, June 25, 1941, f. 2, box 108, SWP 146-1-10).

[29] Ibid.

[30] J. Edgar Hoover to Matthew McGuire, June 25, 1941, f. 2, box 108, SWP 146-1-10.

[31] Hansen, Joseph, Healy’s Big Lie: The Slander Campaign Against Joseph Hansen, George Novack, and the Fourth International: Statements and Articles, (New York: National Education Dept., Socialist Workers Party, 1976), Print, p. 14.

[32] Political Graveyard Entry for George Price Shaw, accessible at http://politicalgraveyard.com/bio/shaw.html; US State Department History Office of the Historian Entry for George Price Shaw, accessible at https://history.state.gov/departmenthistory/people/shaw-george-price?

[33] Morgan, Ted. A Covert Life: Jay Lovestone: Communist, Anti-Communist, and Spymaster, (New York, New York: Random House, 1999), Print, p. 149.

[34] Historical G-Men: “1930s FBI Biographies and More.” Entry for H. H. Clegg, accessible at http://historicalgmen.squarespace.com/agents-of-the-HYPERLINK "http://historicalgmen.squarespace.com/agents-of-the-30s-biographie/"30HYPERLINK "http://historicalgmen.squarespace.com/agents-of-the-30s-biographie/"s-biographie/.

[35] Letter from George P. Shaw to US Secretary of State Enclosing Memorandum of Conversation Between Robert G. McGregor and Hansen, September 1, 1940. (Cited in The Gelfand Case: A Legal History of the Exposure of U.S. Government Agents in the Leadership of the Socialist Workers Party. Vol. 1. Detroit, MI: Labor Publications, 1985. Print, p. 7).

[36] Id. (The Gelfand Case at 8).

[37] Ibid.

[38] Letter from George P. Shaw to US Secretary of State Enclosing Memorandum for File of Robert G. McGregor, September 4, 1940 (The Gelfand Case at 10).

[39] Ibid.

[40] Memorandum of Robert G. McGregor of Conversation with Joseph Hansen, September 14, 1940 (The Gelfand Case at 13).

[41] Id. (The Gelfand Case at 14).

[42] Letter from George P. Shaw to US Secretary of State, September 25, 1940 (The Gelfand Case at 19).

[43] Letter from George P. Shaw to Raymond Murphy, US State Department, September 25, 1940 (The Gelfand Case at 21).

[44] Ibid.

[45] Letter from Raymond E. Murphy to Mr. J.B. Little, Federal Bureau of Investigation, September 28, 1940 (The Gelfand Case at 23).

[46] Letter from Raymond E. Murphy to George P. Shaw, September 28, 1940 (The Gelfand Case at 24-25).

[47] Letter from George P. Shaw to Joseph Hansen, September 30, 1940 (The Gelfand Case at 26).

[48] Letter from J. Edgar Hoover to B.E. Sackett, Special Agent in Charge, October 1, 1949 (The Gelfand Case at 29).

[49] Id. (The Gelfand Case at 29-30).

[50] Letter from Joseph Hansen to George P. Shaw, October 23, 1949 (The Gelfan d Case at 31).

[51] Interview by David North of Felix Morrow, June 2, 1977.

[52] The Gelfand case was a civil lawsuit brought by Alan Gelfand, a member of the SWP who was expelled for raising questions about Hansen’s communications with the FBI and GPU. Gelfand sued alleging that the US government was violating his First Amendment rights by using its agents in the SWP to expel him from a political organization.

[53] Deposition of Farrell Dobbs, Gelfand v. Smith et al., 178, 182.

[54] Deposition of Morris Lewit, Gelfand v. Smith et al., 144.

[55] Cross Examination of Agent Roy T. Noonan, US v. Dunne et al., 372.

[56] Cross Examination of Agent Roy T. Noonan, US v. Dunne et al., 371-372.

[57] Haverty-Stacke at 61.

[58] Id. at 155.

[59] Id. at 154.

[60] Black’s Law Dictionary (9th ed.) at 826.

[61] Letter from J. Edgar Hoover to B.E. Sackett, Special Agent in Charge, October 1, 1940 (The Gelfand Case at 29-30).

[62] Dewar, Hugo. “Chapter 7: The Lady Vanishes.” Assassins at Large, Being a Fully Documented and Hitherto Unpublished Account of the Executions Outside Russia Ordered by the GPU, (Boston: Beacon, 1952), Print.

[63] For further details, see The Labor Spy Racket, by Leo Huberman, U.S. Congress Senate Committee on Education and Labor, Modern Age Books, NY, NY, 1937.

[64] Closing argument of US Attorney Anderson, US v. Dunne et al., 2492.

[65] Testimony of James Bartlett, US v. Dunne et al., 228.

[66] Closing Argument of US Attorney Anderson, US v. Dunne et al., 2457.

[67] Haverty-Stacke at 204.

[68] Ibid.

[69] See Boxes 109 and 110, SWP 146-1-10, including, for example, FBI Report 100-4013, New York.

[70] June 12, 1948 Memorandum For the Attorney General, RE: Socialist Workers Party—Internal Security—SWP, Box 110 SWP 146-1-10.

[71] Haverty-Stacke at 204.

[72] Id. at 220.

[73] Ibid.