ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජවිපෙ රෝහින්ග්යා සරනාගතයින් ගැන කිඹුල් කඳුලු හෙලයි

ஜே.வி.பி. ரொஹிங்யா அகதிகள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கின்றது

By D.A. Anjana
30 October 2017

பௌத்த பிக்குகளின் தலைமையிலான சிங்கள ராவய என்ற பெயரிலான சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்பினால் இயக்கப்பட்ட குண்டர் கும்பல் ஒன்று, கல்கிசை மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த ரொஹிங்யா அகதிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டனம் செய்து, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) அரசியல் குழு கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஊடக அறிக்கையானது எந்த வகையிலும் அகதிகளின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக விடுக்கப்பட்டது அல்ல.

பாசிச கும்பலின் தாக்குதலுக்கு உள்ளான இந்த அகதிகள் குழு, காங்கேசன்துறைக்கு அருகில், இலங்கையின் கடற் பிராந்தியத்தில் வைத்து, ஏப்பில் 30 அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த குழுவினராகும். மியன்மார் ஆன்சான் சுகி ஆட்சியின் கீழ் இராணுவத்தால் அந்த மக்கள் குழுவினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரமான படுகொலையில் இருந்து உயிர் தப்புவதற்காக வள்ளங்களில் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குண்டர் தாக்குதலுக்கு உள்ளான அகதிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவினாலேயே கல்கிசை மாடிவீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அது, அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் வரை அவர்களது “பாதுகாப்புக்காகவே” ஆகும். சிறு பிள்ளைகள் 16 பேர் மற்றும் 7 பெண்கள் உட்பட 30 அகதிகள் அங்கிருந்தனர். பொலிசார், குண்டர்களுக்கு தாக்குதலை முன்னெடுக்க அனுமதித்து பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர். தாக்குதலுக்கு பின்னர், இந்த அகதிகள் குழுவினர் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூசா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

தாக்குதல்காரர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்காமல், ஒரு வாரம் காலங்கடத்திய அரசாங்கம், அந்த இழிந்த நடவடிக்கையைப் பற்றி, நாட்டுக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எதிர்ப்பு வளர்ச்சியடைந்த நிலைமையின் கீழ், இரு பௌத்த பிக்குகள், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் ஒரு பெண்ணுமாக எட்டுப்பேரை பொலிசார் கைது செய்தனர். அகதிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமைக்காக பொலிஸ் அதிகாரி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட, சிங்கள ராவய அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரத்ன பிக்கு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏனைய பிக்குவின் கையில் இருந்த, அரம்பேபொல ரத்னசார மற்றும் தென்னகோன் முதியான்சேலாகே என்றழைக்கப்படும் தர்மசிரி தென்னகோன் என்ற பெயர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரு தேசிய அடையாள அட்டைகள் இருந்தன என்றும், அவரின் பௌத்த விகாரையை பரிசோதிக்கும் போது, கட்டைக் கால்சட்டை, ரீ சேட் மற்றும் தொப்பியும் கிடைத்ததாக பொலிஸ் ஊடகங்களுக்கு அறிவித்தது. அவை, இந்த கும்பல் பல்வேறு வேடங்களில் ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வருவதற்கான அடையாளங்களாகும்.

ஜே.வி.பி. அறிக்கையில், “ரொஹிங்யா அகதிகள் இலங்கைக்கு வந்த முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. 2008ம் ஆண்டில் இருந்து இடை இடையே மிகச் சிறிய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளதோடு ஐ.நா. அகதிகள் ஆணைக்குழுவினால் பின்னர் அவர்கள் வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இப்போது வந்துள்ள சிறிய குழுவினரும் தற்காலிகமாகவே இலங்கையில் இருந்தனர். அப்படியிருந்தும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த அகதிகளை பயமுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது எந்த தர்மத்திற்கும், எந்தவொரு மத சிந்தனைக்கும் நியாயப்படுத்த முடியாத இழிந்த செயற்பாடாகும்,” இந்த தாக்குதல் காரணமாக “இலங்கையும் அதன் மக்களும் மத ஸ்தாபனங்களுமே அபகீர்த்திக்கு உள்ளாகின்றன,” என கூறப்படுகின்றது.

ரொஹிங்யா குழுவினர் இலங்கையில் இருப்பது தற்காலிகமாகவே, அதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது நியாயமற்றது என்ற இந்த கருத்து, முற்றிலும் கபடத்தனமானதாகும். புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கு தாம் விரும்பிய எந்தவொரு நாட்டிலும் வாழ்வதற்கு சுதந்திரம் மற்றும் உரிமையும் உள்ளது என்பதே தொழிலாள வர்க்கத்தினரின் நிலைப்பாடாகும். முதலாளித்துவ அமைப்பு முறையின் பாதுகாப்புக்காக பேணிவரும் தேசிய அரச எல்லைகளை ஏற்றுக்கொள்ளும் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த தாக்குதலை கண்டனம் செய்யவில்லை. ஜே.வி.பி. போலவே நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும், அகதிகள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழேயே தாக்கப்பட்டுள்ளனர், என கூறியுள்ளார். இலங்கை அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கவில்லை என துறைமுக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கள் அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக கூறப்பட்டவை ஆகும். கடும் தேசியவாதிகள் என்ற வகையில், ஜே.வி.பி.க்கு உள்ள பிரச்சினை, “நாடு, மக்கள் மற்றும் மத ஸ்தாபனங்கள் அபகீர்த்திக்கு உள்ளாகுவதே” ஆகும். பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது.

ஜே.வி.பி. இப்படியும் குறிப்பிடுகின்றது: “இதில் இன்னொரு பக்கமும் உள்ளது. இத்தகை நடவடிக்கைகளின் போது, அவற்றை தடுத்து நிறுத்த வேண்டிய அரசாங்க அதிகாரிகளது செயற்பாடும் மிகவும் சோம்பேறித்தனமானதாகவும் பொறுப்பற்றதாகவும் உள்ளது. அதிகாரிகள் இது பற்றிய உண்மைகளை முன்கூட்டியே மக்களுக்கு தெரிவிக்காததாலேயே, சிறிய குழுவினருக்கு, ரொஹிங்யா அகதிகள் பற்றிய பல்வேறு பொய் செய்திகளை நாட்டுக்குள் பரப்பிவிடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.”

சுருங்கக்கூறின், அரசாங்கமும் அதிகாரிகளும் அகதிகள் தற்காலிகமாகவே இலங்கையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை முன்கூட்டிய அறிவித்திருந்தால், இந்த சிங்கள ராவய என்ற சுட்டித்தனம் பண்ணும் பிள்ளைகளால் இத்தகைய தாக்குதல் நடந்திருக்காது. இந்தக் கருத்து, அரசாங்கத்துக்கும் “அதிகாரிகளுக்கும்” மற்றும் குண்டர் கும்பலுக்கும் வெள்ளைப் பூசுவதாகும். அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாததாலும், அவர்களை எதிர்ப்பதாலுமே, அரசாங்கமும் அதிகாரிகளும் அவ்வாறு செயற்பட்டுள்ளனர். ஜே.வி.பி.யின் நிலைப்பாடும் அதுவே.

ஜே.வி.பி. அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் இந்த தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருப்பது தற்செயலானது அல்ல. தாம் தங்கியிருக்கின்ற சிங்கள-பௌத்த அடித்தளத்துடன் அவர்களுக்கு உள்ள ஒட்டுறவின் காரணமாகவே அவர்கள் அப்பெயர்களை குறிப்பிடவில்லை.

உலகம் பூராவும் போலவே, “இலங்கையிலும் இப்போது சில காலமாக பல்வேறு விதமான இனவாத மற்றும் மத அடிப்படைவாத கும்பல்களின் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இனவாத மோதல்கள் காரணமாக இலங்கைக்கு கடந்த காலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டதோடு முப்பது ஆண்டுகால இனவாத போரையும் எதிர்கொள்ள நேர்ந்தது. அதன் சில பிரதிகூலமான விளைவுகளை இன்னமும் எமது நாடு எதிர்கொண்டுள்ளது” என ஜே.வி.பி. அறிக்கை உபதேசிக்கின்றது. இந்த நிலைமையின் கீழ், “இலங்கையில் மிகவும் சிறிய குழு இனவாத மற்றும் மத அடிப்படைவாதிகளாக நடந்துகொள்வது கவலைக்குரியது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. அரசியல் குழு, ஆன்மீகவாதிகள் போல் இங்கு குறிப்பிட்டிருப்பது, இலங்கை ஆட்சியாளர்கள் முன்னெடுத்த முப்பது ஆண்டுகால போரின் பிரச்சாரகர்களாக தாம் செயற்பட்டதை மூடி மறைத்துக்கொண்டே ஆகும். “நாட்டை பிளவுபடுத்துவதை” எதிர்த்தல் மற்றும் விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தோற்கடித்தல் என்ற சாக்குப் போக்கில், ஜே.வி.பி. சிங்கள ஆளும் வர்க்கத்தின் தமிழர்-விரோத சிங்கள இனவாத தாக்குதல்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒத்துழைப்பு கொடுத்து வந்தது. இராணுவத்துக்காக பதுங்கு குழிகளை வெட்டுவதற்கு தமது உறுப்பினர்களை ஈடுபடுத்துவது உட்பட, தமிழ் மக்களுக்கு எதிராக கொழும்பு அரசாங்கங்களின் உயர்மட்டத்தினரின் அனுமதியுடன் பாதுகாப்பு படையினர் இழைத்த மிலேச்சத்தனமான போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் அமைப்பாகும்.

அகதிகள் சம்பந்தமாக எடுத்துக்கொள்ளும் போது ஒரு நச்சுத்தனமான சரித்திரமே ஜே.வி.பி.க்கு உள்ளது. 2009 யுத்தத்தின் முடிவில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலான, சிறைக் கூடம் போன்ற தடுப்பு முகாம்களில் அடைத்து வைப்பதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவத் தலைவர்களுடன் செயற்பட்டது. இதை “தேசிய பாதுகாப்புக்கு” அத்தியாவசியமான நடவடிக்கை என்று கூறிக்கொண்டே ஜே.வி.பி. அதற்கு ஆதரவளித்தது.

இனவாத யுத்தத்துக்கு ஒத்துழைப்புக் கொடுத்தும் ஒரு முதலாளித்துவ ஆட்சியை அடுத்து இன்னொரு முதலாளித்துவ ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக சேவையாற்றியதாலும், அதிருப்திக்கு உள்ளாகி தனது சமூக அடித்தளம் சரிந்த போன நிலைமையின் கீழ், இப்போது ஜனநாயக மற்றும் மனித நேய முகமூடியைப் போட்டுக்கொண்டு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை குறிப்பாக முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக ஜே.வி.பி. பயனற்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஏனைய இனத்தவர்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக எந்தவொரு அக்கறையும் அதற்கு கிடையாது. இது ரொஹிங்யா அகதிகள் சம்பந்தமான ஜே.வி.பி.யின் கபடத்தனமான அறிக்கை இதை மீண்டும் வெளிப்படுத்தியது.