ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Chief Minister threatens victimized Maruti Suzuki workers

இந்தியா: பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களை முதலமைச்சர் அச்சுறுத்துகிறார்

By Arun Kumar and Jai Sharma
2 March 2013

சென்ற வாரம், மாருதி சுஜூகியின் மானேசர் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் பிரதிநிதியாக ஒரு தூதுக்குழு ஹரியானா முதலமைச்சரை சந்தித்தபோது, அவர் அவர்களை அதட்டவும் மற்றும் அச்சுறுத்தவும் செய்தார்.

சந்திப்பில் கலந்து கொண்ட மாருதி சுஜூகி தொழிலாளர் தொழிற்சங்கத்தின் (MSWU) இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர், உலக சோசலிச வலைத் தளத்திடம் நீண்டகால காங்கிரஸ் கட்சி தலைவர், 2,500 க்கும் அதிகமான தொழிலாளர்களின் பணிநீக்கத்திற்கு எதிரான மற்றும் அனைத்து MSWU தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 150 தொழிலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டதற்கு எதிரான அவர்களின் போராட்டங்களை முடித்துக்கொள்ளுமாறு கோரினார் எனக்கூறினார்.

"நான்தான் ஹரியானாவின் அரசன்" என்று ஹூடா அறிவித்தார். "எனது பிராந்தியத்தில் தொந்தரவு செய்ய என்ன தைரியம் உங்களுக்கு."

கடந்த ஜூலை 18-ல் மானேசர் தொழிற்சாலையில் நிர்வாகத்தால் தூண்டி விடப்பட்ட மோதலுக்குப் பின்னர் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பட்டியலின்படி போலீஸ் 150 தொழிலாளர்களை கைது செய்தது. அது தனது பணியாளர்களில் 546 நிரந்தர மற்றும் ஏறக்குறைய 2,000 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கமும் செய்தது.

கொத்தடிமை நிலைமைகள் மற்றும் நிறுவனத்தின் கைக்கூலி தொழிற்சங்கத்திற்கு எதிராக மானேசர் தொழிலாளர்களின் பதினான்கு மாத கிளர்ச்சியை தடுக்க இந்தியாவின் மிகப் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில அரசின் உச்சகட்ட நிகழ்வாக இக்கைதுகளும் மற்றும் பணிநீக்கமும் இருக்கின்றன.

குர்கான்-மானேசர் தொழிற்துறைபகுதியில் இயங்கும் பெரிய தொழிற்சங்க கூட்டமைப்புகள் கைதுகள் மற்றும் பணி விலக்கலுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்தை உறுதியளித்தபடி சிறப்பாக நடத்த தவறிய பின்னர் மாருதி சுஜூகி தொழிலாளர்கள் விஷயத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். சமீப மாதங்களில் ஒரு தொடர்ச்சியான எதிர்ப்புகளை நடத்தியிருக்கிறார்கள்.

இதில் ஹூடாவின் சொந்த ஊரான ரோதக்கில் ஜனவரி 27-ல் நடத்தப்பட்ட ஒரு ஊர்வலமும் அடங்கும். பிப்ரவரி 5ம் தேதி, குறைந்தது 15 மாநிலங்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மாருதி சுஜூகி தொழிலாளர்கள் மீது அரசாங்கம் மற்றும் நிறுவனம் நடத்திய வேட்டையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து "அகில இந்திய எதிர்ப்பு தினத்தின்" ஒரு பகுதியாக ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொண்டார்கள்.

MSWU இடைக்கால நிர்வாக குழுவின் தூதுக்குழுவுடனான ஒரு சந்திப்பை எண்ணற்ற தடவைகள் தட்டிக் கழித்த பின்னர், அவர்களுக்கு பிப்ரவரி 23ந் தேதிக்கு ஹூடா தன்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கொடுத்தார். பணி நீக்கம் மற்றும் போலியாக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர்கள் எதிர்ப்பை தொடர்ந்தால் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஹரியானா முதலமைச்சர் மிரட்டியதாக MSWU இன் இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர் WSWS இடம் தெரிவித்தார். தொழிலாளர்கள் போராடினால், "அவர் (ஹூடா) உங்கள் அனைவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட வேண்டியிருக்கும் என்று எங்களிடம் கூறினார்."

அந்த தொழிலாளி மேற்கொண்டு விளக்கும்போது கூறியதாவது இடைக்கால குழுவின் பிரதிநிதி இம்ரான் கான் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்க காத்துக் கொண்டிருந்தபோது ஜனவரி 24-ல் போலீஸால் கைது செய்யப்பட்டார், அவர்கள் அவரை ஒரு வெற்று காகிதத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள், அதன்பின்னர் நிறுவன மேலாளர் ஒருவர் கொல்லப்பட்ட ஜூலை 18 அன்று நடந்த மோதலில் கலந்து கொண்டார் என குற்றம் சாட்டினார்கள். அவர் மேலும் கூறியதாவது: “இது முற்றிலும் பொய்யானது. இவர்களும் [போலீஸ்] முதலமைச்சரும் முதலாளிகளின் கையாட்களாக உள்ளார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்களில் ஒருவரான ராஜேந்தர் பதக் அவர்களை WSWS தொடர்புகொண்டபோது அவர் கூறியதாவது, "மாருதி சுஜூகி தொழிலாளர்கள் முதலமைச்சர் ஹூடாவை சந்தித்தபோது, எதற்காகவும் என்னிடம் வராதீர்கள். சட்டம் தன் கடமையைச் செய்யும்! நீங்கள் ரொம்ப அதிகமாக பேசினால் இந்த வளாகத்தை விட்டே வெளியேற முடியாது, உங்களை இங்கேயே என்னால் கைது செய்ய வைக்க முடியும்" என்று ஒரு அடியாளைப்போல் அவர் அச்சுறுத்தினார்.

பதக்கின் கூற்றின்படி, குறிப்பாக அவருடைய சொந்த ஊரான ரோதக்கில் தொழிலாளர்கள் எதிர்ப்புகளை நடத்தியதற்காக முதலமைச்சர் கோபப்பட்டார்.

தொழிலாளர் பிரச்சனைகளில் கடந்த இரண்டாண்டுகள் முழுவதும் ஹூடாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசு, மாருதி சுஜூகி நிர்வாகத்தை ஆதரித்து வந்துள்ளது. தொழிலாளர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சுயாதீனமான சங்கத்திற்கான அங்கீகாரத்தை மறுப்பதில் நிறுவனத்துடன் இதுவும் சேர்ந்து கொண்டு, நிறுவனத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துபவர்களைப் போல பலதடவை போலீஸை அணிதிரட்டியது. தொழிலாளர்களின் எந்த ஒரு உரிமையையும் இழக்கச்செய்ய நிறுவனத்தால் கூறப்பட்ட "நன்னடத்தை பத்திரத்தில்" தொழிலாளர்கள் கையெழுத்திட கூறியதுடன், தொழிலாளர்களின் எதிர்ப்பை “வெளியிலிருந்து அரசியல்ரீதியாக தூண்டிவிடப்பட்டதாக” குற்றம்சாட்டி, தொழிலாளர்களை பணிநீக்கும் நிர்வாகத்தின் போக்கை முழுமையாக ஆதரித்தது.

கடைசியாக ஆனால் முக்கியமாக ஹூடாவும் அவரது அரசாங்கமும் பெருமளவில் சிறை வைத்தல் மற்றும் கொடுமையான போலியாக ஜோடிக்கப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்களை மாருதி சுஜூகி தொழிலாளர்களின் மீது சுமத்தியது.

150இற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்னும் சிறையில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்றரை வருடத்திற்கும் அதிகமாக அதாவது கடந்த ஜூலை அல்லது ஆகஸ்டிலிருந்து சிறையில் உள்ளனர். சிறையிலிருக்கும்போது, ஜூலை 18 மோதலில் அவர்களையும் சம்பந்தப்படுத்தி வாக்குமூலங்கள் வாங்கும் நோக்கத்தோடு தொழிலாளர்கள் அவமதிக்கப்பட்டார்கள். மேலும், மின் அதிர்ச்சி, கால்களை விரித்து வைத்திருக்க வைத்தல் மற்றும் தண்ணீரில் மூழ்கச் செய்தல் உள்ளிட்ட கொடூரமான சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். உண்மையில், அவர்களில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் அன்றைய தினம் தொழிற்சாலையிலேயே இல்லை.

ஹரியானா காங்கிரஸ் அரசாங்கம், தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தவும், தொழிலாளர்களின் கூலிகள், பணிநிலைகளை மேம்படுத்த மற்றும் அவர்களின் வேலைகளை காப்பாற்றிக் கொள்ள நடத்தும் தொழிலாளர் போராட்டங்களை ஈவிரக்கமற்ற முறையில் அடக்குவார்கள் என்பதை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் காண்பிக்கவும் மானேசர் மாருதி சுஜூகி ஒருங்கிணைப்பு தொழிற்சாலை தொழிலாளர்களை ஒரு உதாரணமாக்க முடிவு செய்துள்ளது.

ஹூடா ஆத்திரமடைவது எடுத்துக்காட்டுவதுபோல், மாருதி சுஜூகி தொழிலாளர்களின் எதிர்ப்பு இந்திய வாகனத் தயாரிப்பு தொழிலின் மையமாக விளங்கும் மானேசர்-குர்கான் தொழிற்பேட்டையில் வர்க்க போராட்டத்தின் ஒரு எழுச்சியை தூண்டி விடக்கூடும் என்பதால் அரசாங்கம் மிகவும் அமைதியிழந்து இருப்பதைக் குறிக்கிறது. ஸ்ராலினிச கட்சிகளுடன் இணைந்த ஏஐடியுசி மற்றும் சிஐடியு உள்ளிட்ட பெரிய தொழிலாளர் சங்க கூட்டமைப்புகளின் எதிர்ப்புகள் இருந்த போதிலும் போராடிக்கொண்டிருக்கும் மானேசர் ஒருங்கிணைப்பு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக 2011இல் தொழிலாளர்கள் அனுதாப போராட்டங்களை நடத்தினார்கள்.

பதவியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி அரசாங்கம் உள்ளிட்ட அடுத்தடுத்து வந்த மத்திய அரசாங்கங்களின் ஆசிர்வாதத்துடன் இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களை போலவே, மானேசர்-குர்கான் வாகனத் தயாரிப்பு தொழிற்பேட்டையில் வேலை செய்யும் தொழிலாளர்களும் குறைந்த கூலி, அடிமை உழைப்பு நிலைமை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறை ஆகியவற்றுக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

மாருதி சுஜூகி தொழிலாளர்கள் ஹூடாவுடனான சந்திப்பில் பெற்ற அனுபவம், இன்னுமொரு முறை, அதாவது இரட்டை ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவற்றின் சங்க கூட்டாளிகள் மாருதி சுஜூகி தொழிலாளர்கள் மீது எதிர்ப்பு மூலோபாயத்தின் பயனற்ற தன்மையை திணிக்க முயல்வதை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது. பெருவணிகம் மற்றும் அரசியல் நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர்களின் வர்க்க பலத்தை அணித்திரட்ட முழுமையாக எதிர்த்ததோடு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய மற்றும் ஹரியானா அரசாங்கங்களிடம், மாநில தொழிலாளர் துறை மற்றும் நீதிமன்றம் போன்றவைகளிடம் முறையிட மாருதி சுஜூகி தொழிலாளர்களை ஸ்ராலினிஸ்ட்டுக்கள் வற்புறுத்தினார்கள்.

மாருதி சுஜூகி மற்றும் அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்க்கவும், குறைந்த கூலி, அடிமைக்கூலி நிலைமைகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்க எதிர்தாக்குதலை வளர்ப்பதற்கான போராட்டத்துடன், பாதிக்கப்பட்ட வாகன தொழிலாளர்களின் எதிர்ப்பை நனவுபூர்வமாக இணைத்து மாருதி சுஜூகி தொழிலாளர்கள் இந்தியா மற்றும் சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும். இந்தப் போராட்டம் அவசியமான முறையில் ஒரு அரசியல் போராட்டம், ஏனென்றால் அரசாங்கம், மாநில அமைப்புகள் மற்றும் ஸ்ராலினிசவாதிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் அடிமைக்கூலி நிலையை நடைமுறைப்படுத்துபவர்களாகவே சேவை செய்கிறார்கள். ஒரு சோசலிச திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கம் ஒன்றை நிர்மாணிப்பதின் மூலமாகவே முதலாளித்துவ நெருக்கடி தொழிலாளர்களின் இழப்பில் அல்லாமல் பெரு வணிக இழப்பிலேயே தீர்க்கப்பட முடியும்.

The author also recommends:

Defend auto workers victimised by Maruti Suzuki and Indian authorities

[6 December 2012]