ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Wildcat strike erupts anew at Maruti-Suzuki plant, thousands walk out in sympathy

இந்தியா: மாருதி சுசுகி ஆலையில் புதிய வேலைநிறுத்தம், ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் வெளிநடப்பு

By Kranti Kumara
11 October 2011

33 நாட்களாக நீடித்த போராட்டம் தொழிற்சங்கத்தால் திணிக்கப்பட்ட ஒரு பேரத்துடன் அக்டோபர் 1 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், ஹரியானாவின் மானேசரில் உள்ள விரிந்து பரவி நிற்கும் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) நிறுவன வளாகத்தில் அங்கிருக்கும் 3500 தொழிலாளர்கள், கடந்த வெள்ளியன்று மாலை கார் ஒன்றுசேர்ப்பு ஆலையில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடக்கியதன் மூலம், தமது 6 மாத கால போராட்டத்திற்கு மறுதுவக்கம் அளித்துள்ளனர்.

அக்டோபர் 3, திங்கள்கிழமையன்று முழு உற்பத்தியைத் தொடர்வதற்குப் பின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 1,000 பேர் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என்று தான் கொடுத்த வாக்குறுதியை ஆலை நிர்வாகம் நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து இந்த உள்ளிருப்பு/வேலைநிறுத்தம் வெடித்தது.

மானேசர் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க நடவடிக்கை மற்ற தொழிலாளர்களிடம் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்தியத் தலைநகரமான டெல்லியின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியில் பத்துக்கும் கூடுதலான வாகன உற்பத்தி தொடர்பான துறை நிறுவனங்களின் சுமார் 8,000 தொழிலாளர்கள் மானேசர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலைப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

மேம்பட்ட ஊதியத் தொகுப்பிற்காகவும் மற்றும் நிறுவனத்தின் எடுபிடித் தொழிற்சங்கத்திற்கு எதிராக சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பான மாருதி சுசுகி ஊழியர் சங்கத்திற்கு (MSEU) அங்கீகாரம் கோரியும் ஜூன் மாதம் முதலே மானேசர் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் இந்தியாவின் மிகப் பெரும் கார் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு எதிராகவும் ஹரியானாவின் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்தப் பிரச்சாரத்தில், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கத்தின் கூட்டுத் தாக்குதலுக்கு முகம் கொடுப்பதுடன் மட்டுமல்ல, பெரும் தொழிற்துறைமயப்பட்ட இந்தப் பகுதியில் மும்முரமாய் இயங்கி வரும் நடப்பு HMS, AITUC மற்றும் CITU தொழிற்சங்கக் கூட்டமைப்புகளின் மோசடிக்கும் முகம் கொடுக்கின்றனர். தொழிலாளர்களை நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு பணியச் செய்வதற்குக் கொண்டுவருவதன் மூலமும் இந்த வேலைநிறுத்தம் மற்ற ஆலைகளுக்குப் பரவுவதை எதிர்ப்பதன் மூலமும் [காணவும்: தொழிற்சங்கங்களும், ஸ்ராலினிஸ்டுகளும் நிறுவனத்தின் கோரிக்கைகளை ஏற்க மாருதி சுஷூகி இந்திய தொழிலாளர்களை நிர்பந்திக்கின்றனர்] இவை அனைத்துமே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொழிலாளர் போராட்டங்களை கழுத்தை இறுக்குகின்றன.

சமீபத்திய ஆலை உள்ளிருப்புப் போராட்டத்திற்கு மாருதி நிறுவன நிர்வாகத்தின் மற்றும் மாநில அரசாங்கத்தின் எதிர்வினை என்பது மிகவும் குரோதமானதாக இருந்திருக்கிறது. உண்மையில், தொழிலாளர்களை மாநில போலிஸ் மற்றும்/அல்லது நிறுவனம் ஏற்பாடு செய்த குண்டர்களைப் பயன்படுத்திப் பலவந்தமாக வெளியேற்றுவதற்கு நிர்வாகம் மாநில அரசாங்கத்துடன் சேர்ந்து தயாரிப்பு செய்து கொண்டிருப்பதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன.

மாருதி நிர்வாகம் ஊடகங்களுக்கு விநியோகித்திருக்கும் ஒரு அறிக்கையில், ”தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத மேலாளர்களையும், மேற்பார்வையாளர்களையும் மற்றும் சக தொழிலாளர்களையும் அடித்து உதைத்தது உட்பட்ட வன்முறை நடவடிக்கைகளில்” ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

உண்மை என்னவென்றால் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் தான் மிரட்டல் வேலைகளை வழக்கமாய்க் கொண்டுள்ளது. உச்ச கட்டச் சுரண்டலுக்கு ஆளாகும் “தற்காலிக”த் தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கு இது அமர்த்தும் தொழிலாளி நியமன ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர் எதிர்ப்புகளை அடக்குவதற்கு குண்டர் வன்முறையைப் பயன்படுத்திய நெடிய வரலாறு இதற்கு உண்டு.

நிறுவனம் ஞாயிறன்று வெளியிட்ட அதன் சொந்த அறிக்கையின் படியே, “மானேசர் ஆலை வளாகங்களின் வேலைநிறுத்தம் மற்றும் வன்முறையுடன் தொடர்புடைய 10 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், மற்றும் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றும் 10 பயிற்சி ஊழியர்களின் பயிற்சிக் காலம் முறிக்கப்பட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான ஷிவ் சரண் லால் சர்மா, தனது பங்காக, அக்டோபர் 1 ஒப்பந்தத்தை மீறி விட்டதாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கண்டனம் செய்துள்ளார். “பிரச்சினை ஓயக் காரணமாக இருந்த மாருதி சுசுகி நிர்வாகத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து தொழிலாளர்கள் விலகிச் செல்வதாக” சர்மா ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் மானேசர் ஆலைத் தொழிலாளர்கள் முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கியதில் இருந்து, காங்கிரஸ் கட்சியின் ஹரியானா அரசாங்கம் நடுநிலை வகிப்பதாக நாடகம் கூட ஆடவில்லை, பதிலாக மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் ஆலை நிர்வாகத்திற்கும் ஒரு கட்டணச் சேவை முகவரைப் போல நடந்து கொண்டது. மாருதி சுசுகி ஊழியர் சங்கத்தை தொழிலாளர்களின் பிரதிநிதிச் சங்கமாக அங்கீகரிக்க அரசாங்கத்தின் தொழிலாளர் அமைச்சரகம் மறுத்து விட்டது. ஆகஸ்டு 29 அன்று மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மானேசர் ஆலையில் தனது சொந்த கதவடைப்பைத் திணித்தபோது தொழிலாளர்களை பலவந்தமாக வெளியேற்ற அது பல நூற்றுக்கணக்கில் போலிசாரைத் திரட்டியது. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் ஒரு “நன்னடத்தைப் பத்திரத்தில்” கையெழுத்திட வேண்டும் என்ற நிர்வாகத்தின் கோரிக்கையை தொழிலாளர் அமைச்சர் சர்மா தொடர்ந்து மறுஒலிபரப்பு செய்தார்.

மானேசர் மாருதி சுசுகி பாகங்கள் ஒன்றுசேர்ப்பு ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிலாளர்கள் சுமார் 8,000 பேரும் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

இதனால் பாதிப்புற்ற ஆலைகளில் மூன்று மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜப்பான் தாய் நிறுவனமான சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானவை. மானேசர் ஒன்றுசேர்ப்பு ஆலைக்கு டீசல் என்ஜின்களையும் மற்றும் டிரான்ஸ்மிஷன்களையும் அளிக்கும் சுசுகி பவர்டிரெயின் இந்தியா லிமிடெட் (SPIL), சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா லிமிடெட், மற்றும் சுசுகி கேஸ்டிங்க்ஸ் லிமிடெட் ஆகியவையே அந்த நிறுவனங்கள். இவை அனைத்துமே மானேசர் ஆலையின் அக்கம்பக்கத்தில் அமைந்துள்ளவை ஆகும்.

சத்யம் ஆட்டோ காம்பனண்ட்ஸ் லிமிடெட் (வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம்), எண்ட்யூரன்ஸ் ஆட்டோ லிமிடெட், HI-LEX இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களிலும் தொழிலாளர்கள் வேலைப் புறக்கணிப்பு செய்தனர். சில ஊடகச் செய்திகளின் படி, மற்ற பிற 6 ஆலைகளையும் சேர்த்து மொத்தமாய் 12 ஆலைகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

ஞாயிறன்று காலை கூர்கானில் உள்ள சுசுகி மோட்டார் சைக்கிள் ஆலைக்கு தொழிலாளர்களை அளிக்கும் ஒரு தனியார் தொழிலாளி ஒப்பந்ததாரர் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்களை வேலைக்குத் திரும்பச் சொல்லி அச்சுறுத்தும் முயற்சியாக அவர் இந்தச் செயலைச் செய்திருந்தார். அவர் நிர்வாகத்தின் கட்டளையின் பேரில் தான் அப்படி நடந்து கொண்டாரா என்பது தெரியவில்லை என்றாலும், அத்தகையதொரு சாத்தியத்தையும் அகற்றி விட முடியாது. போலிசார் அந்த ஒப்பந்ததாரரைக் கைது செய்துள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

தொழிலாளர்கள் விலைபேசப்பட்ட அக்டோபர் 1 ஒப்பந்தமானது ஹரியானா தொழிலாளர் துறை அதிகாரிகளின் முன்னிலையில் மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாகத்திற்கும் நிறுவத்தின் எடுபிடித் தொழிற்சங்கமான மாருதி உத்யோக் காம்கர் யூனியன் (MUKU) சங்கத்திற்கும் இடையில் கையெழுத்தாகி இருந்தது.

ஸ்ராலினிச சிஐடியூ (இந்திய தொழிற்சங்க மையம்) மற்றும் ஏஐடியுசி (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) ஆகியவை கூர்கான் தொழிற்துறைப் பகுதியில் பல தொழிற்சாலைகளின் சங்கங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றன (மானேசர் மாருதி தொழிற்சாலைத் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் இவர்களிடமும் ஆதரவு வேண்டினர்). இவையும் தொழிலாளர்களை ஒரு முட்டுச் சந்திற்கு இட்டுச் செல்வதில் உடந்தையாக இருக்கின்றன. HMS-ஒழுங்கமைத்த சரணாகதிக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டக் கூட வேண்டாம், அதன் ஏற்பாட்டில் நடந்த ஒப்பந்தத்தின் மீதான விமர்சனம் எதனையும் கூட இவை வைக்கவில்லை.

நிறுவனம் கதவடைப்பை அகற்ற வேண்டுமென்றால், அதற்கான ஒரு நிபந்தனையாக, நிறுவனம் தயாரித்த “நன்னடத்தை பத்திர”த்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், ஆலையின் கூட்டுவழக்குத் தீர்ப்பாயத்தின் மூலம் விசாரிக்கப்படக் காத்திருக்கும் 44 தொழிலாளர்களின் பணியிடைநீக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தொழிலாளர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டனர். அந்த 44 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைக்கு “சட்டபூர்வ” அங்கீகாரம் அளிப்பதான வெளிப்படையான நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தான் இந்த விசாரணை முறையே. வருங்காலத்தில் வேலையிடத் தொழிலாளர் நடவடிக்கை எதிலும் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரையும் நிறுவனம் மொத்தமாய் வெளியேற்றுவதற்கு வகைசெய்யக் கூடிய ஒரு பொறிமுறையான இந்த “நன்னடத்தைப் பத்திர”த்திற்கான தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து நிறுவனம் ஆகஸ்டு 29 முதல் 33 நாட்களுக்கு தொழிலாளர்களை வேலை செய்ய விடாமல் கதவடைப்பு செய்தது.

வேலைநிறுத்தம் செய்துவரும் மானேசர் தொழிலாளர்கள் இப்போது, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் மறுபணியமர்த்தப்பட வேண்டும் என்கிற தங்கள் கோரிக்கையுடன் விசாரணைக்குக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட 44 தொழிலாளர்களும் முழுமையாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் சிக்கியுள்ள மானேசர் தொழிற்சாலை மற்றும் சுசுகி மோட்டார்சைக்கிள் தொழிற்சாலை இரண்டிலுமே உற்பத்தி முழுமையாக நின்று போயிருக்கிறது. அருகிலிருக்கும் கூர்கான் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் பாகங்கள் ஒன்றுசேர்ப்புத் தொழிற்சாலையில், டீசல் என்ஜின்கள் மற்றும் பவர்டிரெயின்களின் பற்றாக்குறையின் காரணத்தால், நாளாந்திர கார் உற்பத்தி 1,000 எண்ணிக்கை குறைந்து 1,800 கார்களாகச் சரிவு கண்டுள்ளது.

கடந்த ஆறு மாத காலத் தொழிலாளர் பிரச்சினையின் காரணத்தால் உருவாகியிருக்கும் உற்பத்தி இழப்பால் இந்த கார் உற்பத்தி நிறுவனத்திற்கு சுமார் 250 மில்லியன் டாலர் இழப்பு தோன்றியிருப்பதாக பெருநிறுவன வர்த்தக வெளியீடுகள் மதிப்பிட்டுள்ளன. ஜூன் மாதத்தில் நடந்த 13 நாள் வேலைநிறுத்தம் மட்டும் 90 மில்லியன் டாலர் இழப்பை உருவாக்கியுள்ளது.

மானேசர் தொழிற்சாலைகளில் திரும்பத் திரும்ப எழும் தொழிலாளர் எதிர்ப்புகளும் நிர்வாகம் மற்றும் மாநில அரசாங்கத்தின் எதிர்வினையும் தெளிவுற விளங்கப்படுத்துவது தொழிலாள வர்க்கத்துக்கும் நாடுகடந்த நிறுவனங்களுக்கும் இடையில் நிலவும் சமரசப்படுத்த முடியாத மோதலையே. மாருதி நிறுவனத் தொழிலாளர்களை இன்று போராட்டத்தில் தள்ளிக் கொண்டிருக்கும் மிருகத்தனமான வேலை நிலைமைகள் ஒட்டுமொத்தமாக இந்திய தொழிலாள வர்க்கம் முகம் கொடுத்து வரும் நிலைமைகளின் ஒரு சிறு துளியே.

கடந்த பத்தாண்டு காலத்தில் இந்தியத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக நடத்திய அடுத்தடுத்த போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்களும் ஸ்ராலினிச மற்றும் பிற தேசியவாத தொழிற்சங்க எந்திரங்களின் தொடர்ந்த துரோகத்தின் காரணமாக ஒரு முட்டுச் சந்திற்கே இட்டுச் செல்லப்பட்டு வந்திருக்கின்றன.

சிஐடியூ மற்றும் ஏஐடியுசி இணைப்பு கொண்டுள்ள இரு பெரும் ஸ்ராலினிசக் கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இரண்டுமே, உலக மூலதனத்துக்கான மலிவு-உழைப்புப் புகலிடமாக இந்தியாவை மாற்றும் இந்திய முதலாளித்துவத்தின் திட்டத்துக்கு ஆதரவு நல்கியும் அமல்படுத்தியும் வந்துள்ளன. நவதாராளவாத “சீர்திருத்தங்களுக்கு” உறுதிபூண்டிருக்கும் மத்திய அரசாங்கங்களுக்கு அவை தொடர்ந்து முட்டுக் கொடுத்து வந்திருக்கின்றன. தற்போதைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு 2004 முதல் 2008 வரையான காலத்தில் ஆதரவளித்ததும் இதில் அடங்கும். இடது முன்னணி ஆட்சியதிகாரத்தில் இருந்து வந்த மாநிலங்களிலும் அது பகிரங்கமாக “முதலீட்டாளர் ஆதரவு”க் கொள்கைகளைக் கடைப்பிடித்தது.

உலகளாவிய முதலாளித்துவ உழைப்புப் பிரிவினையுடன் இந்தியப் பொருளாதாரம் இன்னும் இறுக்கமாகப் பிணைந்திருப்பது, இந்தியத் தொழிலாளர்களின் போராட்டத்தை, சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கும் உலக மூலதனத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு உலகளாவிய மோதலில் ஒரு முக்கிய பாகமாக ஆக்கியிருக்கிறது.

அக்டோபர் 1 விலைபோன ஒப்பந்தத்திற்கு எதிராகக் கிளர்வதிலும், மானேசர் மாருதி தொழிற்சாலையில் நடக்கும் மோதலில் மற்ற தொழிலாளர்களுக்கும் பெரும் சம்பந்தம் இருக்கிறது என்பதை அத்தொழிலாளர்கள் உணர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதிலும் மானேசர் தொழிலாளர்கள் ஒரு முக்கியமான முன்நோக்கிய அடியை எடுத்து வைத்துள்ளனர். ஆனாலும் தங்களது நடவடிக்கைகளில் உட்பொதிந்து இருக்கும் அம்சத்தை வெளிப்படையானதாக அவர்கள் ஆக்க வேண்டும். கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியிலும் மற்றும் இந்தியாவெங்கிலும் மலிவு ஊதிய, கொத்தடிமை நிலை வேலை நிலைமைகளுக்கும் வேலைப் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கும் எதிராக தொழிலாளர்கள் நடத்தும் ஒரு பரந்த தொழிலக மற்றும் அரசியல் தாக்குதலின் ஈட்டிமுனையாக தங்களது போராட்டத்தை ஆக்குவதன் மூலமும், இந்தப் போராட்டத்தை ஸ்ராலினிஸ்டுகள் உட்பட்ட முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் கட்சிகளுக்கு எதிராக சுயாதீனமான வகையில் ஒழுங்கமைப்பு செய்வதன் மூலமும் இதனை அவர்கள் செய்ய முடியும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்துக்கு எதிரான நடப்புப் போராட்டம், ஹரியானா மாநில அரசாங்கத்திலும் மற்றும் இந்திய அரசாங்கத்திலும் உள்ள பெருநிறுவனங்களின் அரசியல் முகவர்களுக்கு எதிரான ஒரு அரசியல் மற்றும் சர்வதேசப் போராட்டம் ஆகும். அத்தகையதொரு போராட்டத்தை முன்நிறுத்துவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக சமரசமின்றி வாதாடுகிற, அவர்களின் போராட்டங்களை உலகெங்கிலும் இதே வகையிலான மிருகத்தனமான சுரண்டல் நிலைமைகளை எதிர்கொள்ளும் பலசமயங்களில் இதே உலகளாவிய பெருநிறுவனங்களால் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஒன்றுபடுத்துகின்ற ஒரு புரட்சிகரக் கட்சியை அபிவிருத்தி செய்வது அவசியமாக உள்ளது.

இந்த பகுப்பாய்வுடன் உடன்படும் இந்தியத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்பு கொண்டு இந்தியத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய பரந்த-மக்களுக்கான சோசலிசக் கட்சியை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவை, கட்டியெழுப்புவதற்கு உதவ வேண்டும்.