ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Maruti Suzuki struggle escalates as company hires more strikebreakers

இந்தியா: மாருதி சுஷூகி ஆலையில் நிறைய கருங்காலிகளை அமர்த்தி வரும் நிலையில், போராட்டம் தீவிரமடைகிறது

By Arun Kumar
17 September 2011

மானேசர்-குர்காவ் தொழில்துறை சரகத்திலுள்ள ஏனைய தொழிலாளர்களிடமிருந்தும் கணிசமான ஆதரவை வென்றிருக்கும் நிலையில், மாருதி சுஷூகி கார் உற்பத்தி நிறுவனத்தால் வேலைக்கு வரத் தடைசெய்யப்பட்ட 3,000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் நடத்தப்பட்டு வரும் எழுச்சிமிக்க போராட்டம் ஆபத்திற்குள்ளாகி உள்ளது.

பெருவர்த்தகங்களும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் மற்றும் பொலிஸூம், மாருதி சுஷூகி இந்தியா (MSI) நிறுவனத்தின் மானேசர் ஆலை தொழிலாளர்களை அடிபணிய வைக்கும் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. ஒரு சர்வாதிகார வேலையிட ஆட்சிமுறையை உட்கொண்டிருக்கும் மற்றும் சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மாருதி சுஷூகி தொழிலாளர்கள் சங்கத்தைவிட (MSEU), அந்நிறுவனத்தின் ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்தைத் தாங்கிப்பிடிக்கும் ஒரு "நன்னடத்தை உடன்படிக்கையில்" கையெழுத்திட மறுத்த தொழிலாளர்களை, ஆகஸ்ட் 29இல் இருந்து, மாருதி சுஷூகி வேலைக்கு வர தடைவிதித்தது.

அந்த தடைவிதிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டரை வாரங்களிலேயே, இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான MSI, போர்குணமிக்க தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கான அதன் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அத்தோடு அதன் "நன்னடத்தை உடன்படிக்கையில்" கையெழுத்திடாத தொழிலாளர்களுக்கு பிரதியீடாக அவர்களிடத்தில் கருங்காலிகளை நியமிக்கத் தொடங்கியது.

இருந்தபோதினும் மாருதி சுஷூகி தொழிலாளர்கள் சங்கம் (MSEU) எதனோடு இணைந்துள்ளதோ, அந்த அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) தடைசெய்யப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆதரவாக, தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்ட ஒரு விரலைக் கூட தூக்கவில்லை. அதற்குமாறாக, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க சம்மேளனமான AITUC, 'தங்களுக்குச் சார்பாக தலையீடு செய்ய வலதுசாரி மாநில அரசாங்கத்திடமும், அதன் தொழிலாளர் நலத்துறையிடமும் மன்றாடும்படி' MSI மானேசர் உற்பத்தி ஆலை தொழிலாளர்களைத் திசைதிருப்பி கொண்டிருக்கிறது.

அதே குர்காவ்-மானேசர் தொழில்துறை சரகத்தில் அமைந்துள்ள வெவ்வேறு சுஷூகி துணைநிறுவனங்களுக்குச் சொந்தமான மூன்று ஆலைகளிலிருந்து, அதாவது சுஷூகி பவர் ட்ரைன் இந்தியா லிமிடெட், சுஷூகி காஸ்டிங்கிஸ், மற்றும் சுஷூகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய ஆலைகளிலிருந்து, புதனன்று, சுமார் 7,000 தொழிலாளர்கள் MSIஇன் மானேசர் ஆலையிலுள்ள தங்களின் சக தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் சொந்த கோரிக்கைக்கு அழுத்தமளிக்கவும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

ஆனால் வெள்ளியன்று அவர்கள் நிர்வாகத்திடமிருந்து விட்டுக்கொடுப்புகளை வென்றிருப்பதாக கூறி, அந்த மூன்று ஆலைகளின் தொழிற்சங்கங்கள் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முடித்துக் கொண்டு, வேலைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தின.

மூன்று ஆலைகளிலும் புதனன்று நடந்த வெளிநடப்புகள், நிறுவனத்தின் திட்டங்களைப் பாழாக்கியதாகவும், அதன்விளைவாக அதன் பங்குவிலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் முதலீட்டாளர்களால் உடனடியாக வியாக்யானப்படுத்தப்பட்டது. அந்த மூன்று ஆலைகளில் இரண்டு MSIஇன் மானேசர் உற்பத்தி ஆலைக்கு பாகங்களை வினியோகிக்கும் ஆலைகளாகும்.

குர்காவ்-மானேசரை மலிவுக்கூலிகளின் நவீன-தயாரிப்பு உற்பத்திக்கான ஒரு முக்கிய இடமாக மாற்றி, டெல்லியின் விளிம்புகளில் உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ள பன்னாட்டு வாகனத்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் துணைநிறுவனங்களுக்கு எதிராக எழுந்துவரும் ஒரு பரந்த போராட்டத்திற்கான முக்கியத்துவத்தை அந்த வெளிநடப்புகள் அடிக்கோடிட்டன.

ஆனால் தலைகீழாக, MSIஇன் துணைநிறுவனங்களில் போராட்டம் உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட்டமையானது, அந்நிறுவனத்தில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊக்கமளித்துள்ளது. உற்பத்தி இழப்பை ஈடுகட்டுவதற்காக சுஷூகி பவர் ட்ரைன் இந்தியா நிறுவனம் மற்றும் சுஷூகி காஸ்டிங்க்ஸ் நிறுவனம் இரண்டும் திங்களன்று அல்லாமல், ஞாயிறன்றே வேலையைத் தொடங்குமென ஏற்கனவே MSI அறிவித்துள்ளது. அவ்விரு வாகன உதிரிப்பாக உற்பத்தியாலைகளிலும் நடந்த வெளிநடப்புகளால் ஏற்பட்ட பாகங்களின் பற்றாக்குறை, அதன் மானேசர் அசெம்பிளி ஆலையின் வெள்ளிக்கிழமை உற்பத்தியின் அளவைக் குறைய செய்துவிட்டதாக அந்நிறுவனம் அறிவிக்கிறது.

மேலே குறிப்பிடப்பட்ட சுஷூகி பவர்ட்ரைன், சுஷூகி காஸ்டிங்க்ஸ், மற்றும் சுஷூகி மோட்டார்சைக்கிள் ஆலைகளிலுள்ள தொழிற்சங்கங்கள் உத்தியோகபூர்வமாக எந்த மத்திய தொழிலாளர்கள் சம்மேளனத்துடனும் இணைந்திருக்கவில்லை என்றபோதினும், அவை AITUC மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐடியு) ஆகியவற்றின் செல்வாக்கின்கீழ் இருப்பதாக அறியப்படுகின்றன. சிபிஐ-இன் இடது முன்னனி கூட்டாளியும், மற்றொரு நாடாளுமன்ற ஸ்ராலினிச கட்சியுமான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க சம்மேளனமே சிஐடியு ஆகும்.

முதலாளித்துவ கட்சிகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தை அடிபணிய வைப்பதிலும், வர்க்க போராட்டங்களை ஒடுக்குவதிலும் ஏஐடியுசி, சிஐடியு மற்றும் இடது முன்னனியின் சாதனைகளை நிறையவே இருக்கின்ற நிலையில், அவர்கள் MSI மானேசரின் துணை-நிறுவனங்களில் நடந்த வெளிநடப்புகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதில், அவை பகிரங்கமாக அழுத்தமளிக்காமல் இருந்திருந்தாலும் கூட, அதற்கு அவர்கள் ஆதரவுகாட்டி தலையீடு செய்தார்கள் என்பதை நம்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், அவர்களின் போராட்டம் ஒரு பரந்த போராட்டத்தைக் கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலோடு குர்காவ் தொழில்துறை சரகத்தில் ஏனைய தொழிலாளர்களிடமிருந்து பரந்த ஆதரவை வென்றுவந்த முக்கியமான தருணத்தில், MSI மானேசர் தொழிலாளர்கள் அவர்களின் 13 நாள் உள்ளிருப்பு போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டுமென, ஜூன் 16இல் ஏஐடியுசி தலைவர்கள் உத்தரவிட்டனர்.

முக்கியமாக, வெள்ளியன்று, MSI உடன் இணைந்த மூன்று ஆலைகளில் “அங்கீகாரம்-பெறாத" ஆலை தொழிற்சங்கங்கள் வெளிநடப்புகளை முடிவுக்குக் கொண்டு வந்து கொண்டிருந்த நிலையில், வேலைக்கு வர தடுக்கப்பட்ட MSI தொழிலாளர்களை மேலும் தனிமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பேரணியை ஏஐடியுசி தள்ளிப்போட்டது.

MSI மானேசர் தொழிலாளர்கள் வலதுசாரி அரசாங்கத்திற்கும், தொழிலாளர்நலத்துறைக்கும் முறையீடுகள் செய்வதில் அவர்களின் சக்தியை ஒருமுனைப்படுத்த வேண்டுமென ஸ்ராலினிஸ்டுகள் வலியுறுத்துவதானது, “சிறந்த தொழிலாளர் உறவுகளைத்" தக்கவைப்பதில் அவர்களும் கூட்டாளிகளே என்ற அடிப்படையில் நிர்வாகத்திடமிருந்தும், அரசிடமிருந்தும் மரியாதையை வென்றெடுக்கும் ஏஐடியுசி-இன் முயற்சிகளை பிரச்சினைக்குள்ளாக்காமல் இருக்க, தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்த போராட்டத்தை ஒடுக்குவதே அவர்களின் முக்கிய கவலையாக உள்ளது என்பதையே அடிக்கோடிடுகிறது.

மாருதி சுஷூகியின் தொழிலாளர் விரோத நடவடிக்கையின் ஒவ்வொரு படியையும் அம்மாநில காங்கிரஸ் அரசாங்கம் முழுவதுமாக ஆதரித்துள்ளது. தொழிலாளர் நலத்துறையோ MSEUக்கு மதிப்பளிக்க மறுத்துவிட்டது. நிர்வாகம் தொழிலாளர்கள்மீது அதன் தடைஅறிவிப்பை அறிவித்த சூழலில், கடந்த ஜூனில் நடத்த முற்றுகை போன்று தொழிலாளர்களின் எவ்வித முயற்சியும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதத்தில், ஆலையைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க அரசாங்கம் நூற்றுக்கணக்கான பொலிஸை அங்கே குவித்திருந்தது. நிறுவனத்தின் இழிவார்ந்த மற்றும் ஒடுக்குமுறை பத்திரத்தில் கையெழுத்திடுமாறு காங்கிரஸ் தலைவர்கள் தொழிலாளர்களிடம் தெரிவித்ததோடு, தொழிலாளர்கள் அதை சமர்பிக்கவில்லையானால் அந்நிறுவனம் மாநிலத்திலிருந்து வெளியேறக்கூடுமென்ற நிறுவனத்தின் அச்சுறுத்தலையே அவர்களும் எதிரொலித்தனர்.

“இதுபோன்ற தொழிலாளர் அமைதியின்மை தொடர்ந்தால், அம்மாநிலத்தின் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவரும் ஜப்பானிய நிறுவனம் [சுஷூகி] வேறு மாநிலத்திற்கு இடம் பெயரக்கூடும், அது மாநிலத்திற்கு பெரிய இழப்பாகும் என்பதை தொழிலாளர்கள் உணரவில்லை. ஆகவே, அவர்கள் திரும்பிவந்து, ஆலையில் வேலைகளைத் தொடங்க வேண்டும்,” என்று ஹரியானா தொழிலாளர்நல மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி சிவ் சரண் லால் சர்மா தெரிவித்தார்.

முதலீட்டு இழப்பு குறித்து இதேபோன்ற கவலைகளை கூறி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை குர்காவ் கூட்டமைப்பின் தலைவர் P.K. ஜெயின் கூறுகையில், “தொழிலாளர் அமைதியின்மையை" முடிவுக்குக் கொண்டு வருவதில் அரசு இன்னும் ஆக்கபூர்வமான பாத்திரத்தை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினார். நிறுவனம் வேலைக்கு அனுமதிக்க தடைவிதித்தது மற்றும் அதன் தொழிலாளர்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமையை மறுத்தது ஆகியவையே பிரச்சினைக்குக் காரணமென்பதைக் குறிப்பிட ஜெயின் மறந்துவிடுகிறார்.

அரசு, பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களின் ஆதரவிருக்கும் நம்பிக்கையில், MSI மிக மோசமாக பின்வருமாறு அறிவித்தது: “நடத்தைமீறலுக்காக, நாசவேலைகளில் ஈடுபட்டமைக்காக மற்றும் வேண்டுமென்றே வாகனங்களின் தரத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தியமைக்காக நிரந்தரமாக நீக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக வேலையிலிருந்து அனுப்பப்பட்ட தொழிலாளர்களை (அதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட போர்குணமிக்க தொழிலாளர்கள் அடங்குவர்) மீண்டும் சேர்த்துக்கொள்ள முடியாது.”

சாமானிய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியையும், கோபத்தையும் அதிகமாக தூண்டியுள்ள ஏஐடியுசி செயல்பாடுகள், முன்னிருக்கும் பாதையை விவாதிக்க ஒரு பாரிய கூட்டத்தைக் கூட்டுவதற்கான முறையீடுகளுக்கு இட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிலாளர்களின் கோபத்தைத் தணிக்கும் ஒரு முயற்சியில், ஏஐடியுசி தலைவரும் நாடாளுமன்ற சிபிஐ உறுப்பினருமான குருதாஸ் குப்தா, செவ்வாயன்று குர்காவிற்குச் சென்ற போது ஒரு வாய்சவுடால் உரையை அளித்தார். “நாங்கள் சிறைக்குப் போய், பொலிஸிடம் அடிவாங்கினாலும் வாங்குவோமேயொழிய, தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான எங்களின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்,” என்றார்.

மாநில அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத அடக்குமுறை நிலைப்பாட்டிற்கு விடையிறுப்பை விவாதிக்க செப்டம்பர் 22 வியாழனன்று தொழிற்சங்கங்களின் கூட்டத்திற்கு தாஸ்குப்தா அழைப்புவிடுத்துள்ளார். இவ்விதத்தில் எவ்வித நடவடிக்கையும் தொடங்காமலிருக்கு ஏறத்தாழ இன்னுமொரு முழு வாரத்தைத் தள்ளிப் போட்டுள்ளார். அனைத்திற்கும் மேலாக, MSI தொழிலாளர்களின் எதிர்ப்பானது பரந்த தொழிலாளர் வர்க்க எழுச்சியாக பொங்கி எழுந்துவிடுவதற்கேற்ற எவ்வித முயற்சியையும் முடக்கும் நோக்கத்தோடு, ஏஐடியுசி ஒரு மேற்படி போராட்ட பிரச்சாரத்தை முன்மொழியும் என்று ஏற்கனவே தாஸ்குப்தா தெளிவுபடுத்தி இருந்தார். “எவ்வாறு தொடர்வதென்பதை கூட்டத்திற்குப் பின்னர் நாங்கள் முடிவெடுப்போம். தேவையானால், உங்களுக்கு ஆதரவாக நானும் இங்கே இருப்பேன்; நாம் கூட்டாக தொழிலாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்,” என்று தாஸ்குப்தா தெரிவித்தார்.