ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

For a boycott of the French election

பிரெஞ்சு தேர்தலைப் புறக்கணிப்போம்

By International Committee of the Fourth International
26 April 2002

இந்த அறிக்கை 2002 இல் தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன்-மரி லு பென்னுக்கும் (Jean-Marie Le Pen) பிரான்சின் அப்போதைய ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கும் (Jacques Chirac) இடையே மே 5 இல் நடந்த இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலின் போது எழுதப்பட்டதாகும். உலக சோசலிச வலைத் தளம் வலது சாரி சிராக்கிற்கு ஆதரவாக சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமை கட்சி மற்றும் ஏனையவர்கள் தொடுத்த பிரச்சாரத்தை எதிர்த்தது. அதற்கு மாறாக, உலக சோசலிச வலைத் தளம் யார் வென்றாலும் அவருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணி திரட்டுவதற்கு அத்தியாவசிய தயாரிப்பாக தேர்தல்களை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்தது.

பிரான்சின் இப்போதைய தேர்தல் நவ-பாசிசவாத தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு (Marine Le Pen) எதிராக முன்னாள் வங்கியாளரும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் பொருளாதார அமைச்சருமான இமானுவல் மாக்ரோனைக் கொண்டு வந்துள்ள நிலையில், இதனை தொடர்புபடுத்தி 2002 தேர்தல் அனுபவங்களை மீளாய்வு செய்வது முக்கியமாகும். (பார்க்கவும்: “மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணி!”)

WSWS, April 27, 2017

***                       ***                      ***

நவ பாசிச தேசிய முன்னணியின் வேட்பாளர் ஜோன் மரி லு பென்னிற்கும், பிரான்சின் வலதுசாரி ஜனாதிபதியான ஜாக் சிராக்கிற்கும் இடையே மே 5 இல் நடக்கவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலைப் புறக்கணிக்குமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பிரெஞ்சு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கின்றது.

முதலாம் கட்ட வாக்களிப்பில் ஜோன் மரி லு பென் க்கு கிடைத்த வாக்குகள் ஆழமடைந்து வரும் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் நெருக்கடியை அப்பட்டமாக வெளிக்காட்டியதுடன், இப்படியான இரண்டு வேட்பாளர்களுக்கு இடையிலான தேர்வை உருவாக்கிய அரசியல் அமைப்பு முறையானது, முற்றிலும் மதிப்பிழந்துள்ளது. தொழிலாள வர்க்கம் இந்த ஜனநாயக தன்மையற்ற வார்த்தைஜாலங்களை நிராகரிக்க வேண்டும் என்பதோடு, இந்த இரண்டு பிற்போக்குத்தனமான வேட்பாளர்களில் யார் வென்றாலும் அவருக்கு எதிராக தனது சுயாதீனமான பலத்தை அணிதிரட்ட தயாராக வேண்டும்.

மே 5 இல் இரண்டாம் கட்ட தேர்தல் புறக்கணிப்பானது, ஏன் பிரெஞ்சு தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமான மற்றும் சரியான ஒரு அரசியல் விடையிறுப்பாக இருக்கிறது? இது தேர்தல் மோசடிகளை நிராகரிப்பதுடன், பாரிய மக்கள் அதிருப்தியை நடைமுறையளவில் அரசியல் நடவடிக்கையாக மாற்றுவதற்கான ஒரு வழியாகும்.

பிரெஞ்சு வாக்காளர்களின் பரந்த பிரிவுகளின் வாக்குரிமைகள் இரண்டாம் கட்ட தேர்தலில் நடைமுறையளவில் பறிக்கப்பட்டுள்ளதை முதல் கட்ட வாக்களிப்பு தொடர்பான மீளாய்வானது தெளிவாக காட்டுகின்றது. வாக்களிக்க தகுதியுள்ள மூன்றில் ஒரு பங்கினர் தேர்தலில் கலந்து கொள்ளாததன் மூலம் சகல வேட்பாளர்கள் மீதான அவர்கள் அதிருப்தியைக் காட்டியிருந்தனர், அதேவேளையில் வாக்களித்த அண்மித்து 40 சதவீதத்தினர் தங்களை இடதுகளின் பாகமாக காட்டிய கட்சிகளுக்கு வாக்களித்தனர். இவர்களிலும் 11 சதவீதத்தினர் தம்மை புரட்சிகரமான சோசலிச கொள்கைகளுக்கு சார்பானவர்களாக காட்டிக்கொண்ட கட்சிகளுக்கு வாக்களித்தனர். ஆனால் இப்போது வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் ஒரு கால் பங்கினருக்கும் குறைவானவர்களின் ஆதரவை பெற்ற இவ்விரு தீவிர வலதுசாரி வேட்பாளர்களுக்கு இடையே ஒருவரைத் தேர்ந்தெடுக்க விடப்பட்டுள்ளனர்.

நூறு ஆயிரக்கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்களும், இளைஞர்களும் ஜோன் மரி லு பென்னின் தேசிய முன்னணியின் புலம்பெயர்ந்தோர்களுக்கும் மற்றும் தொழிலாளர்களுக்கும் எதிரான கொள்கைகளுக்கு எதிரான தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வீதியில் இறங்கியதுடன், இந்த பிற்போக்குவாத அரசியல் இயக்கம் உருவாக்கிவிட்ட சமூக சமத்துவமின்மை மற்றும் அரசியல் ஊழல் அமைப்பிற்கு எதிராக அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்னும் பத்தாயிரக்கணக்கானவர்கள் மே தினத்தில் பாரிசில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான இந்த சர்வதேச தினமானது தேர்தலை புறக்கணிப்பதன் மூலமாக இவ்விரு பிற்போக்குத்தனமான முதலாளித்துவ வேட்பாளர்களுக்கும் எதிரான வர்க்க எதிர்ப்பை காட்டுவதற்கான ஓர் உண்மையான பிரச்சாரமாக பயன்படுத்தப்பட வேண்டும். இது வெறுமனே வாக்களிக்காமல் இருப்பது சம்பந்தமான பிரச்சனையல்ல, மாறாக குடியேற்றவாசிகளையும் மற்றும் சமுதாயத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் பலிக்கடா ஆக்க முயற்சிக்கும், பாசிச மற்றும் கோலிசவாதிகள் போன்ற கூறுபாடுகளுக்கு எதிராக ஒரு சுயாதீன சக்தியாக தொழிலாளர்கள் அணி திரள்வதன் தொடக்கமாகும்.

இரண்டாவது கட்ட வாக்களிப்பில் சிராக்கிற்கு ஆதரவாக வாக்களிக்க கோரும் சோலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, பசுமைக் கட்சி மற்றும் ஏனைய பிரெஞ்சு இடது பிரிவுகளது பிரச்சாரம், புறக்கணிப்பதற்கு மட்டுமே தகுதி உடையது. சிராக்கிற்கு வாக்குகளை வழங்குவது, லு பென்னுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதாகாது, மாறாக கருத்துக் கணிப்புகளில் நவ-பாசிசவாதிகளுக்கு முதலிடத்தில் அவர்களுக்கு வெற்றியை உருவாக்கிய அரசியல் குழப்ப நிலையை மட்டுமே அதிகரிக்கும்.

1958 இன் பின்னர் இந்த முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்காதோர் விகிதம் மிக அதிகமாக இருந்த நிலையில், இது பல தசாப்தங்களாக அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய கோலிச மற்றும் சோசலிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளிடம் இருந்தும் பரந்த பெருந்திரளான மக்கள் அன்னியப்பட்டிருப்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. ஆளும் உயரடுக்கின் இந்த கட்சிகளது கொள்கைகளில் தோற்றப்பாட்டளவில் வித்தியாசம் எதுவுமில்லை என்பதோடு, இவை மக்களின் மனநிலைக்கேற்ப விடையிறுக்கவோ அல்லது அதை அறிந்து கொள்ளவோ கூட அதிகரித்தளவில் இலாயக்கற்று உள்ளன.

வரலாற்றுரீதியில் தொழிலாள வர்க்க வாக்குகள் பெற்ற கட்சிகளிடமிருந்து ஒரு சுயாதீனமான மாற்றீடு இல்லாமல் இருந்த நிலையில், தேசிய முன்னணி ஒரு வலதுசாரி பிரச்சாரத்தை செய்யக் கூடியதாக இருந்ததுடன், ஒட்டுமொத்த அரசியல் ''ஸ்தாபகத்திற்கு'' எதிராக ''சாதாரண மனிதர்களிடம்'' கோரிக்கை விடுத்தது.

இதன் விளைவாக, லு பென் பாரம்பரியமாக அவரது பலம் வாய்ந்த பிரதேசமான பிரான்சின் தெற்கில் இருந்து மட்டுமல்லாது பாரம்பரியமாக ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் அடித்தளமாக இருந்த வடக்கு பகுதிகளில் இருந்தும் ஆதரவை பெற்றார். 1995 இல் 2.6 மில்லியனாக இருந்த பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் வெறும் 9,60,000 ஆக குறைந்து போனது.

பிரான்சில் நவ பாசிசக் கட்சிக்கான ஆதரவு அதிகரிப்பதால் முன்வரும் அபாயத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. எவ்வாறிருப்பினும், லு பென் க்கு கிடைத்த வாக்குகளின் முக்கியத்துவத்தை மதிப்பிடுகையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ அரசியல் அமைப்புமுறை மீதும் நம்பிக்கையற்ற தன்மை உருவாகி உள்ளதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்பதை உள்ளீர்த்துக் கொள்வது முக்கியமாகிறது.

Le Monde பத்திரிகை குறிப்பிடுகையில், ''வாக்களித்தவர்களில் நாற்பது சதவீதத்தினர் அரசாங்க கட்சிகளை நிராகரித்துள்ளனர், இது 1988 மற்றும் 1995 இன் மொத்தத்தைக் காட்டிலும் இரண்டு மடங்காகும்,” என்றது. “வாக்களிக்காதோரையும் கருத்திற்கொண்டால், பதிவு செய்துள்ள ஐந்து வாக்காளர்களில் மூவர் இன்று அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்கக்கூடிய வேட்பாளர்கள் இல்லையென நிராகரித்துள்ளனர். இந்த புள்ளிவிபரங்கள் மட்டுமே கூட இடதுகளின் இயலாமை குறித்தும், அதற்கும் மேலாக அதிதீவிர வலதுசாரிகளின் வெற்றியையும், வலதுசாரியினரின் பலவீனத்தையும் அர்த்தப்படுத்துகின்றன என்பதுடன், ஒரு அடிப்படையானதும் கவலைக்குரியதுமான நிராகரிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது'' என்றது குறிப்பிட்டது.

''லு பென்னிற்கு எதிரான ஒரு சர்வஜன வாக்கெடுப்பு'' அல்லது ''ஜனநாயகத்திற்கான மக்கள் வாக்கு'' என்ற பெயரில் இந்த அரசியல் கட்சிகளும் முக்கிய பிரமுகர்களும் சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்புவிடுப்பதானது, பரந்தளவிலான பிரெஞ்சு மக்கள் நிராகரிக்கும் ஓர் அரசியல் அமைப்புமுறை மீது பரந்த நம்பிக்கையை மீண்டும் உருவாக்க முயல்வதாகும். லு பென் அவர் பங்கிற்கு, கோலிசவாதிகளுக்கும் சோசலிசவாதிகளுக்கும் இடையிலான கூட்டை வரவேற்பதன் மூலம் தனது பிற்போக்குவாத வார்த்தைஜாலங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

சிராக் தன்னை மூவர்ணக் கொடியால் சுற்றிக் கொண்டு, அவரது வெற்றி ''பிரான்சின் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கு'' அவசியமானதாக அறிவிக்கிறார். இப்படியான போலித்தனமான குறிக்கோள் ஊழலுக்கும், சுரண்டலுக்கும் பேர் போன ஒரு மனிதரின் தேர்வுடன் அடையாளம் காணப்படுவது மிகவும் பொருத்தமானது.

லு பென் உடன் விவாதிக்க இப்போதைய நடப்பு ஜனாதிபதி மறுத்துள்ளார். ''சகிப்புத்தன்மை இன்மை மற்றும் வெறுப்பை எதிர் கொண்டிருக்கையில், விவாதம் சாத்தியமற்றது'' என ஏப்ரல் 21 வாக்களிப்புக்குப் பிந்தைய அவரது முதல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார். ''கடந்த காலத்தை போலவே தேசிய முன்னணியுடன் எவ்விதமான கூட்டையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் … எதிர்காலத்திலும் அதன் தலைவருடன் எவ்விதமான ஒரு விவாதத்தையும் ஏற்க மாட்டேன்'' என்றவர் தெரிவித்தார்.

இந்த பாசாங்குத்தனத்தை அம்பலமாக்குவது லு பென்னிற்கு கடினமாக இருக்கவில்லை. நாஜிக்களின் விஷவாயு கூடங்கள் ''வரலாற்றில் ஒரு பகுதி'' என தேசிய முன்னணித் தலைவர் அவரது இழிவார்ந்த கருத்தை தெரிவித்த சிறிது காலத்தின் பின்னர், 1988 இல் சிராக் அதுபோன்றவொரு கூட்டணிக்காக வேண்டி நின்றதை லு வெளிப்படுத்தினார். இந்த உடன்பாட்டின் விளைவாக, தேசிய முன்னணித் தலைவர் அவர் ஆதரவாளர்களை இரண்டாம் கட்ட வாக்களிப்பில் கோலிச RPR இற்கு வாக்களிக்குமாறு கோரினார்.

லு பென் உடன் விவாதத்தை தவிர்த்துக் கொள்வதற்கு சிராக்கிற்கு மேலதிக காரணங்களும் உண்டு. பிரான்சின் ஏனைய வலதுசாரிகளைப் போல், ஜூனில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை அவர் குறி வைத்துள்ளார். அவரின் முக்கிய குறிக்கோள் லு பென்னை தோற்கடிப்பதல்ல, மாறாக நாடாளுமன்ற பெரும்பான்மை பெறுவதற்காக வலதுசாரி கட்சிகளை ஒன்றிணைப்பதாகும். அதற்காக அவர், வலது, மத்திய வலதின் ஒரு கூட்டணியை உறுதிப்படுத்த ஜனாதிபதி பதவி பெரும்பான்மைக்கான கூட்டணி (UMP) என்றவொரு புதிய அரசியல் கூட்டை உருவாக்கி உள்ளார்.

சிராக்கிற்கு, லு பென் உடன் கொள்கை ரீதியான அரசியல் வித்தியாசங்கள் எதுவும் இல்லை. எதிர்காலத்தில் நவ பாசிசவாதிகளுடன் கூட்டிணைந்து இயங்குவதற்காக அவர் கதவுகளை திறந்து வைத்துள்ளார்.

முழுத் தேர்தல் அமைப்பும், பெருந்திரளான மக்களது சமூக அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு வழியெதுவும் வழங்காமல், அவர்கள் மீது ஓர் அரசியல் குரல்வளைப்பிடியாக மாறியுள்ளது. இடது கட்சிகள் என்றழைக்கப்படும் கட்சிகள் —சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி— இந்த நிலைமைக்கு பெரும் பொறுப்பாகின்றன. முதலாளித்துவ அரசாங்கத்தினதும், முதலாளித்துவ பொருளாதாரத்தினதும் திறமை வாய்ந்த நிர்வாகிகளாக தங்களை காட்டிக் கொண்டு, அவர்கள் சமூக சேவைகளின் அழிப்பு, தொழிற்துறையைத் தனியார்மயமாக்கல் மற்றும் ஜனநாக உரிமைகள் மீதான தாக்குதலை முன்னெடுக்கின்றனர்.

அவர் கட்சியின் தேர்தல் தோல்வியினை அடுத்த ஒரு சில மணித்தியாலங்களில் தனது பதவி விலகலை அறிவித்தவரும், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் தலைவருமான லியோனல் ஜோஸ்பனின் அரசியல் கபடத்தனத்தின் சீரழிந்த காட்சியானது, உத்தியோகபூர்வ ''இடதின்'' திவால்நிலைமைக்கு ஒரு உதாரணமாகும். லு பென்னிடம் ஜோஸ்பன் அடிபணிந்தமை, 1934 பெப்ரவரியில் ஒரு பாசிசவாத கலகத்திற்குப் பின்னர் இராஜினாமா செய்து, பின் 1940 மே-ஜூனில் பாசிசவாத அதிகாரத்திற்கு வழி வகுத்த பிரெஞ்சு தீவிர கொள்கை கட்சி தலைவர் Edouard Daladier இன் அரசியல் வாரிசாக அவரை ஞாபகப்படுத்துகிறது.

தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தெளிவை வழங்க தொடங்கவும், சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச கட்சிகளின் காட்டிக்கொடுப்பால் உருவான குழப்பத்தினையும் எதிர்கொள்ள இந்த தேர்தல் புறக்கணிப்பு அவசியமாகும். தேர்தல் முடிவால் ஆத்திரமடைந்துள்ள தொழிலாளர்களும், மாணவர்களும், புத்திஜீவிகளும் தனிமைப்படுத்தப்பட விடக்கூடாது, அல்லது தொழிலாள வர்க்கத்தை இன்னும் மோசமாக தாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கட்சி தெரிவு செய்வதற்கு உதவுவதற்கு விடப்படக்கூடாது. தேர்தல் புறக்கணிப்பை ஊக்குவிக்கும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைப்பது உட்பட ஒரு செயலூக்கமான கொள்கை அவசியமாகும்.

சிராக்கிற்கு வாக்களிப்பது தான் தேசிய முன்னணியை தோற்கடிப்பதற்கான ஒரேயொரு வழி எனக் கூறுபவர்கள், அவர்களின் சொந்த இயலாமையையும் அவநம்பிக்கைவாதத்தையுமே உறுதிப்படுத்துகின்றனர். இப்படியான ஒரு மனிதரை ஜனநாயகத்தின் வெற்றியாளனாக காட்டும் ஒரு அரசியல் ஸ்தாபகம் அதன் சொந்த இயலாமையையே காட்டுகின்றது.

நாடாளுமன்றத்தில் ஒரு வலதுசாரி பெரும்பான்மையுடன் சிராக்கின் ஒரு ஜனாதிபதி பதவிக் காலம் என்பது, தெளிவாக, பிரெஞ்சு முதலாளித்துவத்தின் மிகவும் செல்வாக்கான பிரிவுகள் விரும்பும் ஒரு விளைவாகும். இப்படியான ஒரு அரசாங்கம் தேசிய முன்னணி முன்னெடுக்கும் அரசியல் திட்டநிரலின் பெரும்பகுதியை முன்னெடுக்கின்றன, தேசிய முன்னணியின் புலம்பெயர்வு-விரோத, சட்டம் ஒழுங்கு தேர்தல் பிரச்சார கோஷங்களையே பெருமளவில் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தில் கோலிசவாதிகள் எதிரொலிக்கின்றனர்.

வாக்காளர்களில் ஒரு முக்கிய பிரிவாக, சுமார் 11 சதவீதத்தினர், தங்களைத்தாங்களே ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று அழைக்கும் மற்றும் ஒரு புரட்சிகர கொள்கையை முன்னெடுப்பதாக கூறிக் கொள்ளும் அமைப்புகளுக்கு வாக்களித்துள்ளனர். இந்த கட்சிகளும் மற்றும் அவற்றின் வேட்பாளர்களும் —லூத் ஊவ்றியேர் அமைப்பின் Arlette Laguiller, புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) இன் ஒலிவியே பெசன்ஸெநோ, Parti des Travailleurs இன் Daniel Gluckstein போன்றோர்— இந்த கோரிக்கையை ஏற்று இப்போது தேர்தல் புறக்கணிப்புக்காக செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டியது அவர்களின் பொறுப்பாகும்.

ஆனால், Laguiller இன் முதல் விடையிறுப்பே முற்றிலும் எதிர்மறையாக உள்ளது. அப்பெண்மணி அவரது சமீபத்திய அறிக்கையில், அவர் ''இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தலில் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை'' என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், சிராக்கிற்கு வாக்களிக்ககோரும் கூட்டணியில் அவர் இணைய மறுத்துள்ள அதேவேளையில், தொழிளார்களை லு பென்னிற்கு வாக்களிக்க கோரப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது வலதுசாரிக்கு எதிராக போராடும் ஒரு கொள்கையல்ல, இதுவொரு தட்டிக்கழிப்பாகும். இது தொழிலாளர்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை கூறாது அவர்களைக் குழப்புகிறது. Laguiller இன் வார்த்தையானது, வாக்களிப்பது தொடர்பாக அவரவரே தீர்மானிக்குமாறு ஒவ்வொருவரையும் விட்டுள்ளதுடன், மறைமுகமாக சிராக்கிற்கு வாக்களிக்க தூண்டுகின்றது.

தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் மற்றும் உண்மையிலேயே ஒரு சுயாதீனமான, பாரிய பெருந்திரளான சோசலிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்ப பங்களிப்பு செய்யக்கூடிய போராட்டத்திற்கு ஒரு புதிய பாதையைத் திறந்து விடவும், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட புறக்கணிப்பு வடிவத்தில், ஒரு செயலூக்கத்துடனான கொள்கை அவசியமாகும்.

பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் பிரெஞ்சு தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு பாதையைக் காண முடியாது. சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளால் முன்வைக்கப்படும் மாற்றீடான, சமூக நல வசதிகளற்ற அதிகாரத்துவ சமூகநல அரசானது எவ்வகையிலும் ஒரு மாற்றீடல்ல.

இடதுசாரிகள் என்றழைக்கப்படும் நிறைய பிரிவுகள் எதிரொலிக்கின்றதும், லு பென் ஊக்குவிப்பதுமான தேசியவாதம், வெளிநாட்டவர் விரோத மனோபாவம், தேசிய பாதுகாப்புவாதம் போன்றவற்றிற்கு எதிராக, தொழிலாள வர்க்கம் வாழ்க்கை தரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கு அதன் சொந்த சர்வதேச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் ஒரே ஐரோப்பிய சந்தைக்கு எதிராக, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுக்கான போராட்டமே தொழிலாளர்களுக்கான மாற்றீடாகும்.