ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

While US media promotes CIA chemical weapons claims to push for warHYPERLINK "http://www.wsws.org/en/articles/2017/04/12/pers-a12.html"
Deaths from US bombings triple in Syria, Iraq

அமெரிக்க ஊடகங்கள் போருக்கு அழுத்தமளிக்க சிஐஏ இன் ரசாயன ஆயுத வாதங்களை ஊக்குவிக்கின்ற நிலையில்

சிரியாவிலும் ஈராக்கிலும் அமெரிக்க குண்டுவீச்சுக்களால் உயிரிழப்புகள் மும்மடங்காகின்றன

Patrick Martin
12 April 2017

ஈராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்க விமானத் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைவதற்கு முந்தைய கடைசி முழு மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் அண்மித்து மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக பிரிட்டிஷ் கண்காணிப்பு குழு Airwars இன் ஒரு அறிக்கை கண்டறிந்துள்ளது. டிசம்பர் 2016 இல் 465 ஆக பதிவான படைத்துறைசாரா மக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை மார்ச் 2017 இல் 1,754 ஆக உயர்ந்தது, இது 277 சதவீத உயர்வாகும்.

இந்த அறிக்கை, ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்ட கடந்த வார கடற்படை ஏவுகணை தாக்குதலுக்கு சாக்குபோக்காக கூறப்படும் பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சி தான் விஷவாயு தாக்குதல்களை நடத்தியது என்ற இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதான ஊடக விஷமப் பிரச்சாரத்திற்கு இடையில் வந்திருந்தது. செய்திகளில் கூறப்பட்ட கடந்த வார சிரிய இரசாயன தாக்குதலில் உயிரிழந்தவர்களைக் காட்டிலும், அமெரிக்க குண்டுவீச்சானது குழந்தைகள் உட்பட அதிக எண்ணிக்கையிலான அப்பாவி மக்களைக் கொன்றுள்ளது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இந்த காரணத்திற்காகவே, இந்த ஆய்வு தோற்றப்பாட்டளவில் அமெரிக்க ஊடகங்களில் குறிப்பிடப்படாமலேயே கைவிடப்பட்டுள்ளன.

ஈரான்-சிரியா போர் பகுதிகளில் நடக்கும் வான்வழி தாக்குதல்களில் உயிரிழப்பவர்களை அட்டவணைப்படுத்தும் மற்றும் செய்திகளுக்கு ஆதரவான சாட்சியங்களின் பலத்தை மதிப்பீடு செய்யும் Airwars அமைப்பு, 2016 முழுவதிலும் இறந்தவர்களைக் காட்டிலும் மொத்தம் 2,826 பேர் உயிரிழப்போடு 2017 இன் முதல் மூன்று மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட செய்திகள் வந்திருப்பதை கண்டறிந்தது. இந்த அதிகரிப்பு சொல்லப்போனால் 2016 இன் இறுதியில் இருந்தே தொடங்கி இருந்தது. அப்போது ஈராக்கிய இராணுவமும் அதன் அமெரிக்க இராணுவ "ஆலோசகர்களும்" கடந்த இரண்டரை ஆண்டுகளாக சுன்னி அடிப்படைவாத குழுவான ISIS ஆக்கிரமித்திருந்த மொசூல் நகர் மீது அவர்களது படுகொலை தாக்குதலைத் தொடங்கின.

மொசூலின் கிழக்கு பகுதியில் நடந்த அமெரிக்க விமானத் தாக்குதல்களில் தொடர்ச்சியான பாரிய படுகொலை குறித்து சர்வதேச பொது மன்னிப்பு சபை விசாரணை நடத்தி உள்ளது, மொசூல் 2016 அக்டோபரில் இருந்து டிசம்பர் வரையிலான முதல் கட்ட தாக்குதலின் போது திரும்ப கைப்பற்றப்பட்ட நகரமாகும். கடந்த வாரம் வெளியான ஓர் அறிக்கை "முழு குடும்பங்களும் உள்ளே இருக்கும் போதே ஒட்டுமொத்த வீடுகளையும் அழித்த அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் வான்வழி தாக்குதல்களின் எச்சரிக்கையூட்டும் வடிவத்தை" கடந்த வாரம் கண்டறிந்தது.

மொசூலில் உள்ள அக்குழுவின் மூத்த விசாரணையாளர் Donatella Rovera கூறுகையில், “அத்தாக்குதலை வழிநடத்திய கூட்டணி படைகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தை வெளிப்படையாக மீறி, அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்பதையே அதிகளவிலான உயிரிழப்புகளின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுகின்றன,” என்றார். வீட்டில் மக்கள் நிரம்பி இருக்கிறார்கள் என்று அறிந்தும் அவற்றை இலக்கில் வைத்த குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த அப்பாவி மக்களைத் தப்பியோடுமாறு கூறுவதற்கு பதிலாக ஈராக்கிய அதிகாரிகள் அவர்கள் வீடுகளில் அங்கேயே தங்கியிருக்குமாறு கூறுவதை குறிப்பாக அவர் மேற்கோளிட்டார்.

மேற்கு மொசூலில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது, அங்கே அமெரிக்க-ஈராக்கிய தாக்குதலின் இரண்டாம் கட்டம் இந்தாண்டு தொடக்கத்தில் தொடங்கியது. இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட பண்டைய மையப்பகுதியை உள்ளடக்கிய இது, மிகவும் மக்கள் நிரம்பிய பகுதியாகும், அங்கே அடுக்கு வீடுகளின் மாடியில் துப்பாக்கியேந்தி நிற்பவர்களை அழிக்க வழமையாக விமானத் தாக்குதல்களுக்கு உத்தரவிடப்படுகிறது, இந்த நிகழ்முறையில் பெரும்பாலும் வீடுகளுக்குள் வசிப்பவர்களும் கொல்லப்படுகிறார்கள். அதுபோன்ற மார்ச் 17 அமெரிக்க தாக்குதல் ஒன்று ஏறத்தாழ 300 பேரைக் கொன்றது.

ஒரு சிரிய விமானத்தளம் மீது அமெரிக்க ஏவுகணை தாக்குதல்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிடுவதற்கு சாக்குபோக்காக இருந்ததும், பரந்தளவில் பிரச்சாரம் செய்யப்பட்டதுமான கான் ஷேக்கௌன் நகரம் மீதான சிரிய இரசாயன ஆயுத தாக்குதல்  என்று குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட, மார்ச் 17 இல் அமெரிக்க குண்டுகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகம். மார்ச் மாதம் அமெரிக்க குண்டுவீச்சில் உயிரிழந்த மொத்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 20 மடங்காகும்.

ஆனால் அமெரிக்க ஊடகங்களில் இந்த அமெரிக்க குண்டுவீச்சு அட்டூழியங்களைக் குறித்து ஏறத்தாழ எதுவுமே குறிப்பிடப்படவில்லை. சிரியாவிற்கு எதிராக ட்ரம்ப் உத்தரவிட்ட டோமாஹாக் போர்கப்பல் ஏவுகணை வீச்சுக்கு அரசியல் மூடிமறைப்பை வழங்கிய இடைவிடாத பிரச்சார வீச்சுடன் நிச்சயமாக எதையும் ஒப்பிட முடியாது.

சார்ல்ஸ் சூமார் முதல் நான்சி பிலொசி, எலிசபெத் வாரென் வரையில், அமெரிக்க "முப்படைகளின் தலைமை தளபதியாக" ட்ரம்பின் முதல் மிகப்பெரும் நடவடிக்கையை பாராட்ட முண்டியடித்து சென்ற ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளில் எவருமே, மொசூலில் அப்பாவி மக்கள் தொடர்ந்து கொல்லப்படுவதற்கு எந்த ஆட்சேபணைகளையும் தெரிவிக்கவில்லை.

நியூ யோர்க் டைம்ஸ்க்காக சாய்வு நாற்காலியில் அமர்ந்துள்ள போர்-பண்டிதர்களின் மூவரணியான நிக்கோலஸ் கிறிஸ்டோஃப், ரோஜர் கொஹென் மற்றும் தோமஸ் ஃபிரெட்மன் போலவே, “மனித உரிமைகள்" ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்கும் ஊடங்களில் எதுவுமே கூட, மொசூலில் ஓடும் இரத்த ஆற்றை கண்டித்தோ அல்லது அமெரிக்க இராணுவ படைகளால் நடத்தப்பட்ட வேறெந்த பாரிய படுகொலைகளைக் கண்டித்தோ பெரும்பாலும் கட்டுரை பகுதிகளில் ஒரு துளி இடமும் செலவிடவில்லை. அவர்களின் ஒரே அக்கறை எல்லாம், சிஐஏ மற்றும் பென்டகன் இலக்கில் வைக்கும் அரசாங்கங்கள் மற்றும் சக்திகளை பூதாகரமாக காட்டி, அவ்விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய தலையீட்டை அவர்களது உயர்தர நடுத்தர வர்க்க ஆதரவாளர்களுக்கு விற்பனை செய்வதாக உள்ளது.

சிரியா கான் ஷேக்கௌன் (Khan Sheikhoun) இல் விஷவாயு தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவத்தில் ஊடக பிரச்சாரங்களுக்கு இருக்கும் ஒரு மிகப்பெரும் தடை என்னவென்றால், அத்தாக்குதலின் நிலைப்பாட்டிலிருந்து வரும் குற்றச்சாட்டுக்களின் முற்றுமுழுதான சாத்தியமற்ற தன்மையாகும். ஒரு ஈவிரக்கமற்ற ஆட்சிக்கு தலைமை தாங்கும் அசாத், அவரது சொந்த மக்களுக்கு எதிரான பல குற்றங்களுக்கு பொறுப்பானவர் தான். ஆனால் சிரியாவின் பிரதான நகரங்கள் அனைத்தின் மீதும் அவரின் படைகள் மீண்டும் கட்டுப்பாட்டை எடுத்துள்ள நிலைமைகளின் கீழும் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளே இந்த உள்நாட்டு போரில் அனேகமாக அசாத் தப்பிப்பிழைத்து விடக்கூடும் என்பதையும், சிரியாவில் அமெரிக்காவின் இலக்கு ISIS ஐ அழிப்பது தானே தவிர, சிரிய தலைவரை தூக்கியெறிவதல்ல என்பதை ஒப்புக் கொண்டுள்ள நிலைமையில், அசாத் அதுபோன்றவொரு தாக்குதலில் ஈடுபட அங்கே சாதாரணமாக எந்த காரணமும் இல்லை.

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கைக்கான உள்நோக்கத்தைத் தீர்மானப்பது ஒன்றும் சிரமமில்லை. அது ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்க நிலைப்பாட்டை பேணுவதற்காக அமெரிக்க ஏகாதிபத்திய உந்துதலின் ஒரு பிரிக்கவியலாத பாகமாக உள்ளது, இந்த முயற்சியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது உயிரிழந்துள்ளனர் மற்றும் ஈராக், சிரியா, யேமன், லிபியா, சோமாலியா மற்றும் ஏனைய நாடுகளும் இரத்தக்களரியான குழப்பங்களுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.

இந்த தீவிரமடைந்து வரும் இரத்த ஆறு, ஒபாமா நிர்வாக கொள்கைகளின் ஒரு தொடர்ச்சியையும் மற்றும் அதன் மிக மோசமான அம்சங்களின் தீவிரப்பாட்டையும் என இரண்டையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. வெளியுறவு விவகாரங்களுக்கான குழுவின் மிகாஹ் ஜென்கொ நடத்திய ஒரு கணக்கீட்டின்படி, ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்ததில் இருந்து டிரோன் ஏவுகணை தாக்குதல்களின் கால அளவு, சராசரியாக 5.4 நாட்களுக்கு ஒரு தாக்குதல் என்பதிலிருந்து 1.8 நாட்களுக்கு ஒன்றாக, மும்மடங்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்க குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கான விதிமுறைகளை வரையறுக்கும் செயல்பாடுகளுக்கான விதிமுறைகள் (rules of engagement) யேமன் மற்றும் சோமாலியாவில் கணிசமானளவிற்கு இலகுவாக்கப்பட்டுள்ளன, இவ்விரண்டு விடயங்களிலுமே ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாக நடவடிக்கைகளால் செய்யப்பட்டன. யேமனில் குறைந்தபட்சம் 30 இல் ஒரு பாரிய படுகொலை, இந்த ஆட்சிமாற்றத்தை அடுத்து உடனடியாக நடந்ததாகும், மேலும் ஒபாமாவின் கீழ் பென்டகனால் தொடங்கப்பட்டு, ட்ரம்பின் கீழ் உறுதிப்பட்டு, நூற்றுக் கணக்கான அமெரிக்க சிறப்பு படை நடவடிக்கையாளர் இப்போது சோமாலியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மிகப் பெரியளவிலான அமெரிக்க படைகளைப் பொறுத்த வரையில், ட்ரம்ப் நிர்வாகம் அச்செயல்பாடுகளுக்கான விதிமுறைகளை தளர்த்தும் அல்லது ஒட்டுமொத்தமாக அவற்றை அழிக்கும் கண்ணோட்டத்தில் அவற்றை மீளாய்வு செய்யும் இறுதி கட்டங்களில் உள்ளது. ஏற்கனவே, வான்வழித் தாக்குதல்களுக்கு தலைமையங்கள் உத்தரவிடுவதில்லை கள அதிகாரிகளே உத்திரவிடும் வகையில் முடிவெடுக்கும் நிகழ்முறையில் கட்டளை பிறப்பிப்பதற்கான பதவியிடங்கள் கீழ்நோக்கி குறைக்கப்பட்டுள்ளன. கடந்த பல மாதங்களாக அதிகரித்து வரும் உயிரிழப்பு எண்ணிக்கை, “கட்டுப்பாடுகளை தளர்த்தும்" ட்ரம்பின் கட்டளையை பென்டகன் நிறைவேற்றுகையில் இன்னும் மேற்கொண்டு விண்ணைத் தொடும்.

மொசூலில் மார்ச் 17 பாரிய படுகொலைகள் மற்றும் அமெரிக்க குண்டுவீச்சால் ஏற்பட்ட பல ஏனைய பேரழிவுகளைக் குறித்து பென்டகன் இந்த வாரம் உத்தியோகபூர்வ விசாரணை ஒன்றை தொடங்கியது. இந்த சம்பவங்கள் "குறைந்தபட்சம் இப்பிராந்தியத்திலும் மற்றும் உலகெங்கிலும் நமது பிம்பம் மீது ஒரு எதிர்மறை தாக்கத்தைக்" கொண்டிருப்பதை பென்டகன் செய்தி தொடர்பாளர் கேர்னல் ஜோசப் ஸ்க்ரொக்கா ஒப்புக் கொண்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க ஏகாதிபத்திய குற்றங்களை அம்பலப்படுத்துபவர்கள், பயங்கரவாதிகள் செய்யும் அதே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்!

சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு மற்றும் Airwars இன் அறிக்கைகள், மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முழுமையான குற்றகர குணாம்சத்தை அடிக்கோடிட்டு காட்டுகின்றன. அவை அசாத்-விரோத மற்றும் ரஷ்ய-விரோத விஷம பிரச்சாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் ஏகாதிபத்தியத்தின் பிரசாரகர்களாக அம்பலப்படுத்துகிறது.