ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

How to deal with America? The European dilemma

அமெரிக்காவை சமாளிப்பது எப்படி? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை

By David North
25 January 2003

ஒவ்வொரு பிரதான அரசியல் நெருக்கடியின் அபிவிருத்தியின் அடித்தளத்தில் காணப்படும் நீண்டகாலம் தெரியாது மறைக்கப்பட்ட அடிப்படை நோக்கங்களும் பிரச்சனைகளும் ஒரு புள்ளியில் மேல்மட்டத்திற்கு வரும். ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கான புஷ் நிர்வாகத்தின் முடிவினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியில் அந்தப் புள்ளியை இப்பொழுது நாம் வந்தடைந்திருக்கிறோம்.

அமெரிக்க இராணுவ படைக்கலசாலையின் உடனடி இலக்காகி இருப்பது ஈராக் ஆகும். ஈராக்கின் தலைவிதி பற்றி அதிகரித்து வரும் கசப்பான இராஜதந்திர சர்ச்சையில் முன்குறித்துக் காட்டப்பட்டுக்கொண்டிருப்பது பிரதான ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான, உள்ளார்ந்த வன்முறையான, நேரடி மற்றும் பகிரங்க மோதல் ஆகும்.

அமெரிக்க போர் இலக்குகள் பற்றிய கலந்துரையாடலின் பெரும் பகுதி, ஈராக்கின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துவதை கைப்பற்றுதற்கான புஷ் நிர்வாகத்தின் உறுதி மீது மையப்படுத்தப்பட்டிருக்கிறது. இது, நிச்சயமாக, அமெரிக்க அரசாங்கத்தின் கணிப்பீடுகளில் ஒரு பிரதான காரணியாக இருக்கின்றது. எவ்வளவுதான் முக்கியமானதாக இருப்பினும், இந்தக் குறிக்கோள் ஒரு பேராவலுடைய மற்றும் இன்னும் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகள் உலக மேலாதிக்கத்தைப் பெற விரும்புகிறது, அதன் அர்த்தம் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் நலன்களுக்காக முழு உலகையும் அரசியல் மற்றும் பொருளாதார மறு ஒழுங்கமைத்தல் செய்வது ஆகும். அதற்கு ஈராக் போன்ற பலவீனமான பின்தங்கிய வளர்ச்சி உடைய நாடுகளை மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும்மேலாக மேற்கு ஐரோப்பாவில் உள்ள சக்தி மிக்க ஏகாதிபத்திய போட்டியாளர்களையும் ஜப்பானையும் கீழ்ப்படியச் செய்தல் அதற்கு தேவைப்படுகிறது.

அமெரிக்க போர் அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், அமெரிக்காவின் போர்த் திட்டத்திற்கு ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் எதிர்ப்பினை ஏளனமாய் நிராகரித்தமை ஐரோப்பாவிற்கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் இடையிலான நீண்டகாலமாய் கொதி நிலையை அடைந்துள்ள கொண்டிருந்த மோதலுக்குள் கதவை திறந்து விட்டிருக்கிறது. போரை நோக்கிய புஷ் நிர்வாகத்தின் உந்தல் பற்றிய ஐரோப்பிய விமர்சனம் பற்றி ஒரு செய்தியாளரால் கேட்கப்பட்ட பொழுது, ரம்ஸ்பெல்ட், "ஜேர்மனியும் பிரான்சும்தான் ஐரோப்பா என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. நான் அது பழைய ஐரோப்பா என்று நினைக்கிறேன். நீங்கள் ஐரோப்பாவில் உள்ள பரந்த எண்ணிக்கையிலான ஏனைய நாடுகளைப் பார்க்க வேண்டும். இதில் அவை பிரான்சுடனும் ஜேர்மனியுடனும் நிற்கவில்லை. அவை ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் நிற்கின்றன." என்று பதிலளித்தார்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளானது, முன்னர் ஒருபோதுமில்லாதவாறு முதலாளித்துவ ஐரோப்பாவின் ஐக்கியத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் தனது நீண்டகால கூட்டாளிகளை அந்த அளவு பகிரங்கமாக தாக்கியதுமில்லாமல், மற்றும் பிரான்சுக்கும், ஜேர்மனிக்கும் நேர் எதிராக அந்தக் கண்டத்தின் மீது அதன் சொந்த சிறப்பான செல்வாக்கு மண்டலத்தை உருவாக்கும் அதன் இலக்கை அந்த அளவு ஐயத்திற்கிடமின்றி அது வெளிப்படுத்தியது.

அவரது பேச்சுநயமற்ற பாணியின் மாதிரியில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் நேட்டோவினை விரிவுபடுத்தலை —ஐரோப்பாவில் பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் செல்வாக்கை இல்லாதொழிக்கும் ஒரு வழிமுறையாக, ஐக்கிய அமெரிக்க அரசுகளால் எளிதாகக் கையாளப்படக்கூடிய, முந்தைய பலவீனமான வார்சோ ஒப்பந்த அரசுகளை உட்சேர்த்தலுடன்— முன்னிலைப்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகத்தை விட்டு வைக்கவில்லை.

ஐரோப்பாவிற்கு அமெரிக்காவின் குரோதத்தின் தொலைநோக்கான விளைபயன்களை பிரான்ஸ் உணராமல் விட்டிருக்கவில்லை, மற்றும் இதுதான் அதன் இருபொருள்பட பேசும் நிலைப்பாட்டை கைவிடுவதற்கான அதன் முடிவிற்கும் அத்தோடு ஈராக்கிற்கு எதிரான போரை மிக நேரடியாக எதிர்த்துக் கூறுதலுக்குமான காரணமாகும். பிரெஞ்சு திருப்பத்திற்கான விவரங்கள் ஈராக் மக்களின் தலைவிதி பற்றிய மனிதாபிமான அக்கறையால் உந்தப்பட்டவை அல்ல, மாறாக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்தல் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் மைய அரசியல், பொருளாதார மற்றும் புவிசார்-மூலோபாய நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்று காலதாமதமாய் அது அங்கீகரித்தல் ஆகும்.

1990கள் முழுவதும் ஐரோப்பிய ஆளும் தட்டுக்கள், சோசவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) இல்லாதுபோனதால் ஐக்கிய அமெரிக்க அரசுகளுடனான தங்களின் உறவு கணிசமாகப் பாதிக்காது என நடித்துக் கொண்டும், தங்களின் சொந்த கண்ட மற்றும் பூகோள நலன்கள் நீண்டகாலத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அந்த நலன்களுடன் ஒத்தியலக் கூடியது என்றும், அரைகுறையாய் மறுத்தல் நிலையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இந்த விருப்பங்களை கொண்ட எண்ணத்தின் நடைமுறைப்படுத்தலானது, 1945க்கும் 1991க்கும் இடையிலான ஐரோப்பாவுடனான அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய உறவு, அடிப்படை ரீதியில், குளிர் யுத்த உள்ளடக்கத்தினுள் அதன் சொந்த அடிப்படை பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களின் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்பட்டது என்ற உண்மையை அலட்சியப்படுத்தியது. ஐரோப்பாவை நோக்கிய அமெரிக்காவின் மனப்பாங்கு, (1) சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தல் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அதன் செல்வாக்கை கட்டுப்படுத்திவைத்திருத்தல் ("தாக்குக்காட்டி தடுத்து வைத்திருத்தல்") மற்றும் (2) ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அதி தீவிரமாக போர்க்குணம் வாய்ந்ததாகவும் உயர்ந்த அளவு அரசியல் மயப்படுத்தப்பட்டும் இருந்த நேரத்தில் சமூகப் புரட்சியை தடுப்பதற்கான எல்லாவற்றுக்கும் மேலான தேவையால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேற்கு ஐரோப்பாவுடனான அதன் கூட்டு மீதான அந்த காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வலியுறுத்தலானது, உண்மையில், வரலாற்று வழமை நிலையிலிருந்து ஒரு விலகிய ஒன்றாகும். அமெரிக்க முதலாளித்துத்தின் மிகவும் அடிப்படையான போக்கு, ஏறக்குறைய தாமதமாக உருவாகிய ஒரு பிரதான ஏகாதிபத்திய வல்லரசு என்பதில் வேரூன்றி இருந்தது. அது தனது உலக நிலையை ஐரோப்பாவின் செலவில் அதிகரிக்க முனைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பொழுது ஒரு பிரதான முதலாளித்துவ வல்லரசாக ஐக்கிய அமெரிக்க அரசுகள் பக்குவமடைவதற்கான முன்நிபந்தனையாக, 1820களில் மொன்ரோ தத்துவ பிரகடனத்திலிருந்து 1890களின் இறுதியில் கியூபாவிலிருந்து ஸ்பெயினை வெளியேற்றுவது வரைக்குமாக அமெரிக்காவினுள் ஐரோப்பிய செல்வாக்கை விடாப்பிடியாகக் இல்லாதொழிப்பதாக இருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் முதலாவது பாதியில், ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசுகளின் காலனித்துவ பேரரசுகளை இல்லாதொழிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்க அரசுகளானது அதன் பூகோள செல்வாக்கை விஸ்தரித்தது. இது ஜனநாயகத்தின் நலனில் செய்யப்படவில்லை, மாறாக காலனித்துவ முறையால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த உலக சந்தைகளை திறந்து விடுவதற்காகும்.

பொதுவான சாதகமான பொருளாதார நிலைமைகள் மற்றும் அதன் சொந்த பெரும் செல்வம் சாத்தியமாகும் மட்டத்திற்கு, ஐக்கிய அமெரிக்க அரசுகளானது அதன் சூறையாடும் ஏகாதிபத்திய பசிவேட்கையை பிறர் நலனுக்கு உதவும் இரக்கமனப்பன்மையை முன்காட்டுவதுடன் முகமூடி இட்டு மறைத்துக் கொண்டது. ஆனால் அதன் "நான்கு சுதந்திரத்தின்" பாதுகாவலர் மற்றும் "ஜனநாயகத்தின் ஆயுதம்" ஆக, அதன் மனிதாபிமான காட்டிக் கொள்ளல் இருப்பினும், ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஒரு கணமும் அதன் சொந்த சுய நலனை மறப்பதில்லை.

1940-41-ல் பிரிட்டனில் நாஜி ஜேர்மனியின் குண்டு வீச்சுக்களின் உச்சக்கட்டத்தின் பொழுது அமெரிக்க நிதி மற்றும் இராணுவ உதவிக்கான முன்நிபந்தனையாக, ரூஸ்வெல்ட்டால் சேர்ச்சிலுக்கு வைக்கப்பட்ட எலும்பை முறிக்கும் விதிகளை விட அமெரிக்க இராஜதந்திர மனிதநேயத்தின் ஈவிரக்கமற்ற அம்சத்தை வேறொன்றும் சிறப்பாய் விளக்கமுடியாது. ஆம். ரூஸ்வெல்ட் "பிரிட்டனை" பாதுகாக்க உடன்பட்டார், ஆனால் அது கணிசமாய் செலவு பிடித்தது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் பிரிட்டனின் பிரச்சனையை முடிக்கின்றநேரத்தில், கர்ச்சிக்கும் பழைய ஏகாதிபத்திய சிங்கம் அமெரிக்காவின் செல்லப் பூனைக்குட்டியாக மாறி இருந்தது —இந்த உருமாற்றம் பிரிட்டனின் தற்போதைய பிரதமரில் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நெருக்கடியின் சூழல் ஐரோப்பாவின் பழைய ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் அதன் கூட்டைச் செழிப்புறச் செய்வதற்கு ஐக்கிய அமெரிக்க அரசுகளை நிர்ப்பந்தித்தது மற்றும் அதன் சொந்த ஆக்கிரமிப்பு போக்குகளை ஓரளவுக்கு தடுப்பு நிலையில் வைத்திருந்தது. மேலும், அது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளை மட்டுப்படுத்துதற்கு ஆதரவாக உலகப் பொருளாதாரத்தை விஸ்தரிக்கவும் பொதுவில் மீட்டமைக்கவும் ஆகும். ஆனால், ஐரோப்பிய அக்கறைகளைப் பொருட்படுத்தாமல், அமெரிக்க நலன்களின் ஒருதலைப்பட்சமான வலியுறுத்தலை நோக்கிய போக்கானது, பன்முகத்தன்மையின் (multilateralism) மேற்பூச்சின் கீழே தொடர்ந்து செயலூக்கத்துடன் உள்ளது. உண்மையில், உலகப் பொருளாதார நிலைமைகளின் சீரழிவு பொதுவில் மறைந்திருக்கும் மோதலை திறந்துவிடுவதைக் கொண்டுவரும் பாதிப்பைக் கொண்டிருந்தன.

எடுத்துக்காட்டாக, அமெரிக்க டாலர் ஆகஸ்ட் 1971ல், நிதிச்சந்தைகளில் தாக்குதலுக்காளாகிய பொழுது, ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சன், கால் நூற்றாண்டு காலமாக சர்வதேச முதலாளித்துவ நிதி அமைப்பு முறைக்கு அடித்தளமாக இருந்த, டாலர்-தங்க மாற்று அமைப்பு முறையை, ஐரோப்பிய தலைவர்களுடன் முன்கூட்டியே ஆலோசிப்பது பற்றிக் கவலைப்படாமல் ஒழித்துக் கட்டினார். உலகப் பொருளாதாரம் பற்றி சில சுவாரசியமான விஷயங்களை நிக்சன் வைத்திருக்கின்றார், அதனை அவர்கள் கண்விழித்துக் காத்திருந்து அமெரிக்கத் தொலைக் காட்சியில் அவரது பேச்சைக் கவனிக்குமாறும் மட்டுமே அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் ஜேர்மனியர் அமெரிக்க நடவடிக்கைகளை ஆப்சேபிக்க மாட்டார்களா என்று கேட்ட பொழுது, அமெரிக்க கருவூல செயலாளர் ஜோன் கொன்னோலி (John Connolly) அவரது சொந்த தனித்துவமான பாணியில் “அவர்களை அலட்சியப்படுத்து” (“F—k them”) என்று பதிலளித்தார்.

சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, போருக்குப் பிந்தைய ராஜீய உறவுகள் அடித்தளமாக கொண்டிருந்த சர்வதேச கட்டமைப்பை அடிப்படையில் மாற்றியிருக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசுகளைப் பொறுத்தவரை சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு வரிசையாக மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை முன்னிறுத்துதற்கான எவ்விதத் தேவையும் இனிமேலும் இல்லை. மேலும், சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமை உருவாக்கிய அதிகார வெற்றிடத்தை ஐக்கிய அமெரிக்க அரசுகள் தனது சொந்த வசதிவாய்ப்புக்காக சுரண்டிக் கொள்ள உறுதியாக இருந்தது.

அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையின் தற்போதைய கட்டுப்பாடற்ற மூர்க்கத்தனத்திற்கான மிக முக்கியமான காரணம், அமெரிக்கப் பொருளாதாரத்தின் நீண்ட காலமான மற்றும் அதிகரித்துவரும் சீரழிவாகும். இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது, அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைமையில் உள்ள வீழ்ச்சியின் நீண்டகால விளைபயன்களையும் சர்வதேச போட்டியாளர்களால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலையும் எதிர்க்கும் ஒரு வழிமுறையாக ஆளும் செல்வந்தத்தட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியால் பார்க்கப்படுகிறது.

தீர்க்கதரிசனமாய் தோன்றும் வார்த்தைகளில், இருபதாம் நூற்றாண்டின் மார்க்சிசவாதிகளில் மிகவும் உயர்ந்தவரான லியோன் ட்ரொட்ஸ்கி, 1928ல் பின்வரும் எச்சரிக்கையை விடுத்தார்:

"நெருக்கடியான காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் மேலாதிக்க நோக்கம், செழுமையான கால கட்டத்தில் உள்ளதை விட இன்னும் முழுமையாய், இன்னும் வெளிப்படையாய் மற்றும் இன்னும் ஈவிரக்கமற்றதாய் செயல்படும். ஐக்கிய அமெரிக்க அரசுகளானது, ஐரோப்பாவை பலி கொடுத்தாவது அதன் கஷ்டங்களையும் சீரழிவையும் வெற்றிகொள்ளவும் மற்றும் அவற்றிலிருந்து தன்னை விடுவிக்கவும் முயலும், இது ஆசியாவில், கனடாவில், தென் அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் அல்லது ஐரோப்பாவிலேயே நிகழ்வதாயினும் சரி அல்லது இது அமைதியாகவோ அல்லது போரின் மூலமாகவோ நிகழ்வதாயினும் சரி அதைப் பொருட்படுத்தாமல், முயலும்."

புஷ் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பின் அடியொற்றி நடப்பதற்கு ஐரோப்பிய மறுப்பின் விளைபயன்களை அப்பட்டமாக எடுத்தெடுத்து வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். வியாழன் அன்று நியூ யோர்க் டைம்ஸ் இதழிடம் ஒரு அதிகாரி கூறியவாறு, "யதார்த்தத்தை அவர்களுக்கு வலியுறுத்தவதுதான் எமது நோக்கம், பின்னர் அது பற்றி நாம் என்ன செய்யவேண்டும் என கலந்துரையாட செல்வோம்."

இந்த யதார்த்தம் என்பதுதான் என்ன? போருக்குப் பின்னர், ஈராக்கின் எண்ணெய் தொழிற்துறையை துண்டாடலில் பங்கு பெறுவதிலிருந்து பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் கம்பெனிகள் விலக்கப்படும் என்று புஷ் நிர்வாகமானது இந்த அளவு நுட்பமாகச் சுட்டிக்காட்டி இருக்கவில்லை. இன்னும் கூட ஆபத்தான வகையில், ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர், மேற்கு ஐரோப்பாவிற்கு முக்கிய எண்ணெய் வழங்குநராக இருக்கும் ஈரான் மீது அழுத்தத்தை திணிக்கும் என்ற ஆலோசனைகளும் அங்கு இருந்து வருகின்றன.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் நிலைப்பாட்டிலிருந்து, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் நடத்தையானது அப்பட்டமாய் விளைவைப்பற்றிக் கவலைப்படாதது ஆகும் என்பதுடன், உலக முதலாளித்துவத்தின் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் சட்டரீதியான மற்றும் ஸ்தாபன ரீதியான முழுகட்டமைப்பின் எச்சசொச்சங்கள் என்னென்ன இருக்கின்றதோ அத்தனையையும் முற்றிலுமாக உடைவுக்குக் கொண்டு வரும் ஆபத்தை எழுப்புகின்றது. மேற்கு ஐரோப்பியர்களை பொறுத்தவரை ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஆணைகளுக்கு ஒப்புக்கொடுப்பது என்பது, பழமைவாத பிரெஞ்சு நாளிதழான லு பிகாரோ  வின் வார்த்தைகளில் "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சிப்பகுதியினுள்" அமெரிக்காவின் கீழ்நிலைக்கு தள்ளப்படுவதை ஏற்றுக் கொள்வதாக அர்த்தப்படுத்தும். ஆனால் பகிரங்கமாக எதிர்ப்பது ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் உள்ளார்ந்த ரீதியாக அழிவுகரமான இராணுவ மோதலின் ஆபத்து நேர்வை எழுப்பும். எந்த மாற்றீடாயினும், அல்லது இரண்டுக்கும் இடையிலான ஏதோ நடுப்பாதை ஆயினும் அது ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியிலான உறவுகளை ஆழமாக சீர்குலைத்துவிடும். மேலும், அமெரிக்காவிற்கும் "பழைய" ஐரோப்பாவிற்கும் இடையிலான மோதலின் சமூக விளைபயன்கள் உள்நாட்டு வர்க்கப் பதட்டங்களை தவிர்க்க முடியாத வகையில் உக்கிரப்படுத்தும்.

மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் முரண்கொள்ளும் தர்மசங்கட நிலை இதுதான்.

See Also :

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும் [PDF]