ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වේගවත් කිරීමේ සැලසුම් වලට එරෙහිව ජයවර්ධනපුර රෝහලේ හෙද සේවකයන් වර්ජනයේ

இலங்கை ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வேலை துரிதப்படுத்தல் திட்டத்துக்கு எதிராக தாதிமார் வேலை நிறுத்தம்

By our reporters
10 January 2018

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சேவைக்கு வந்து போவதை பதிவு செய்வதற்காக விரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படுவதை எதிர்த்து தாதிமார் ஒரு கிழமை பூராவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 600 பேர் கொண்ட மொத்த தாதிமாரில் ஒரு சிலரைத் தவிர ஏனைய அனைவருமே வேலை நிறுத்தத்தில் பங்குபற்றியுள்ளதோடு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து திங்களன்று நடத்தப்பட்ட போராட்டத்தில் மருத்துவ உதவியாளர்கள் உட்பட கனிஷ்ட தொழிலாளர்களும் பங்குபற்றினர்.

வேலை நிறுத்தத்தின் கராணமாக ஆயிரம் பேருக்கு இடமுள்ள வைத்தியசாலையில் இப்போது தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆக குறைந்துள்ளது. வெளிநோயாளர் பிரிவிற்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து போயுள்ளது. ஆஸ்பத்திரியின் ஆணையாளர் வைத்தியர் சுசித் சேனாரத்ன, வேலை நிறுத்தத்தின் காரணமாக ஆஸ்பத்திரியின் வேலைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்களுடன் பேசிய தாதிமார், வைத்தியசாலையை நோக்கி வரவிருக்கின்ற பொது போக்குவரத்தின் பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட நேரத்திற்கு விரல் அடையாளமிடுவது கடினமான விடயம், என கூறினர்.

ஒரு தாதி கூறியதாவது: “நாம் முறைமாற்ற வழியிலேயே வேலை செய்கின்றோம். எங்களில் யாராவது கொஞ்சம் தாமதமானால், முதல் முறையில் உள்ளவர் அடுத்தவர் வரும் வரை அந்த வேலையைப் பார்ப்பார். நோயாளர்களுக்கு பிரச்சினை இல்லாதவாறு நாங்கள் ஒத்துழைப்புடன் வேலை செய்கின்றோம். இந்த பாதையில் பஸ்கள் மிகக் குறைவு. ஒன்றைத் தவறவிட்டால் அடுத்த பஸ்சுக்கு அரை மணித்தியாலம் வரை இருக்க வேண்டும். விரல் அடையாள இயந்திரம் பொருத்தப்பட்டால் பஸ்சைத் தவறவிடும் ஒருவருக்கு அரைநாள் ஊதியம் வெட்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டால், எங்களுக்கு ஒரு மணித்தியாலம் முன்னதாகவே வீட்டில் இருந்து புறப்பட நேரும். அதாவது எங்களது வாழ்க்கையில் இன்னொரு மணித்தியாலம் தொழிலால் அபகரிக்கப்படுகின்றது.”

புதிய திட்டம் தொழில் வாழ்க்கைக்கும் சம்பளத்துக்கும் பாகமான வையில் பாதிப்பை எற்படுத்தும் என அச்சம் கொண்டுள்ள, 600 மொத்த தாதி பணியாளர்களில் 150 பேருக்கு மட்டுமே உத்தியோகபூர்வ வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன, எஞ்சிய அனைவரும் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு முகங்கொடுப்பதாகவும் அவர்கள் மேலும் கூறினார்.

வேலை நிறுத்தம் தொடரும் நிலையில், தாதிமாருக்கு அவர்களது உத்தியோகபூர்வ வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தின் ஊடாக கட்டளையிட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தாதிமாருக்கு உணவு கொடுக்கும் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய அச்சுறுத்தல்களின் மத்தியிலும் தொழிலாளர்கள் பின்வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக கடன் மற்றும் பெரும் அந்நிய செலாவனி நெருக்கடியில் நசுங்கிப் போயுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி சுகாதாரம் உட்பட ஏனைய சமூக நலன்புரி துறைகளை கடுமையாக வெட்டித் தள்ளி, அந்த சேவைகளை தனியார் நிறுனவங்களாக மாற்றுவதன் மூலமே அதில் இருந்து தலை தூக்குவதற்கு முயற்சிக்கின்றது.

சுகாதார சேவையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாக ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்க காலத்தில் 1983ல் அரை அரசாங்க நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜயவர்தனபுர வைத்தியசாலையில், அங்கு வேலை செய்யும் தாதிமாரின் வேலையை துரிதப்படுத்தும் புதிய சுற்று திட்டங்களின் பாகமாகவே விரல் அடையாள இயந்திரம் ஸ்தாபிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் 15 ஆண்டுகளாக வேலை செய்யும் தினூஷா வெல்லால என்ற தாதி, உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறிய கருத்துக்கள் அதை நிரூபிக்கின்றன. “நான் 15 வருடங்கள் இந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்றேன். இந்த காலம் பூராவும் இந்த ஆஸ்பத்திரிக்கு போதுமான தாதிமார் இணைத்துக்கொள்ளப்படவில்லை. அதனால் இப்போதைக்கு சேவையில் ஈடுபடும் தாதிமாருக்கு மேலதிக வேலைகளில் ஈடுபட நேர்ந்துள்ளது.” தமக்கு கிடைக்கும் சுமார் 45,000 மொத்த சம்பளம் எந்தவகையிலும் வாழப் போதுமானதல்ல என அவள் கூறினாள்.

தாதி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வருதற்கான உடனடி காரணம் விரல் அடையாள இயந்திரம் பொருத்துவதாக இருந்தாலும், முதலாளித்துவ அரசாங்கத்தின் சிக்கன திட்டங்களின் காரணமாகவே வேலை நிறுத்தம் வெடித்தது. பல ஆண்டுகளாக அவர்களது வாழ்க்கை நிலைமைகள் சீரழிக்கப்பட்டதற்கு எதிராக அவர்கள் மத்தியில் அதிருப்தி வளர்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் போலவே உலகம் பூராவும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுகளால், பல தசாப்தங்கள் பூராவும் செயற்கையாக தணித்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களின் அதிருப்தி மற்றும் போராளிக் குணம், இப்போது புதிய உந்துதலுடன் உலகம் பூராவும் வெடித்து வருகின்றது. கடந்த பல ஆண்டுகள் பூராவும் இலங்கையில் வெடித்த வர்க்கப் போராட்ட அலை, அதன் ஒரு வெளிப்பாடாகும். பெற்றோலியம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள், அரசாங்கத்தின் கடும் ஒடுக்குமுறையை மீறி அந்தப் போராட்டங்களில் பல நாட்கள் உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டனர். அந்தப் போராட்டங்களின் தலைமைத்துவத்தில் உட்கார்ந்திருக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம், அரசாங்கத்துடன் சமரசத்திற்கே சென்றுள்ளன.

தொழிலாளர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினை முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியில் இருந்தே தோன்றுகின்றது என்ற புரிந்துணர்வுக்கு வருவதை தடுக்கும் அவர்கள், தொழிலாளர்களின் போராட்டங்களை முதலாளித்துவ முறைமையை தூக்கி வீசும் நோக்கத்தில் இருந்து திசை திருப்பி விடுவதற்காக அணிதிரண்டுள்ளனர்.

ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியின் வேலை நிறுத்தத்துக்கு தலைமைத்துவம் கொடுக்கும் அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதிமார் சங்கமும் இந்த பாத்திரத்தையே இட்டு நிரப்புகின்றன. அரச சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் ஜயவர்தனபுர ஆஸ்பத்திரி பிரிவின் தலைவர் சமீர ரொட்றிகோ, வைத்தியசாலை ஆணையாளரின் “எதேச்சதிகாரமான செயற்பாடே” வேலை நிறுத்தத்துக்கான பிரதான காரணமாக காட்டுகின்றார். அவர்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கை, அந்த ஆணையாளரை அகற்ற வேண்டும் என்பதாகும். சர்வதேச நிதி மூலதனத்தின் ஒழுங்கின்படி அமைந்துள்ள அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையிலேயே ஆணையாளர் செயற்படுகின்றார் என்பதை மூடி மறைக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவம், அதன் மூலம் அரசாங்கத்துக்கும் ஒட்டு மொத்த முதலாளித்துவ முறைமைக்கும் எதிரான அரசியல் போராட்டத்தை நோக்கி தொழிலாளர்கள் திரும்புவதை தடுக்கின்றது.