ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

අරගලය තම අතට ගැනීම සඳහා ස්වාධීන කම්කරු ක්‍රියාකාරී කමිටු ගොඩ නගනු!
විශ්ව විද්‍යාල අනධ්‍යන කම්කරුවන් සඳහා ඉදිරි මාවත

போராட்டத்தை தம்கையில் எடுத்துக்கொள்வதற்காக சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஒரு முன்னோக்கிய பாதை

By the Socialist Equality Party (Sri Lanka)
10 March 2018

இலங்கையில் அரச பல்கலைக்கழகங்களில், கல்விசாரா தொழிலாளர்களால் பெப்ரவரி 28 அன்று ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தம், பத்தாவது நாளைக் கடந்து முன்னோக்கி செல்கின்றது. வேலைநிறுத்தம் செய்யும் 15,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோரும் சம்பள உயர்வு உட்பட எந்த கோரிக்கைகளையும் கொடுக்க முடியாது என மீண்டும் மீண்டும் கூறும் அரசாங்கம், வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்துகிறது.

கல்விசாரா தொழிலாளர்கள் போராடும் பிச்சினைகள் எல்லா இடங்களுக்கும் பொதுவானதாகும். அதாவது சம்பள வீழ்ச்சி, சீரழிந்து வரும் சமூக உடகட்டமைப்பு வசதிகள், இலவச கல்வி மீதான தாக்குதல் மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவை ஆகும். ஆகையால் முழு தொழிலாள வர்க்கமும், இதை தங்கள் சொந்த போராட்டங்களில் ஒன்றாக கருதி கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாக்கவும் அதற்கு ஆதரவளிக்கவும் முன்வர வேண்டும்.

இந்த உறுதியான போராட்டம், தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் ஊக்குவிக்கும் என எண்ணும் அரசாங்கம், இனவாத வன்முறைகளைப் பயன்படுத்தி அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து, அதன் அச்சுறுத்தலை யதார்த்தமாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதற்கேற்ப, வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி, எந்த நேரத்திலும் அதை நிறுத்திவிடுவதற்கு காரணத்தை தேடிக்கொண்டிருக்கின்றது.

இந்த பின்னணியில், பல்கலைக்கழக தொழிலாளர்களின் போராட்டம் ஒரு திருப்புமுனைக்கு வந்துள்ளது.

தமது கோரிக்கைகளை இட்டு நிரப்பாமால் இருக்க அரசாங்கம் முன்வைக்கின்ற நிலைப்பாடு சம்பந்தமாக தொழிற்சங்கத் தலைமைத்துவத்தின் பின்வாங்கும் பிரதிபலிப்புக்கு எதிராக உறுப்பினர்கள் மத்தியில் நிலவும் கடும் எதிர்ப்பின் அழுத்தத்தின் கீழேயே கூட்டுக் கமிட்டி இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

இந்த கோரிக்கைகளுக்காகவே 2016 ஜூலையில் கல்விசாரா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கூட்டுக் கமிட்டி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரிக்கைகளை இட்டு நிரப்புவதாக எழுத்துபூர்வ உறுதிமொழியைக் கொடுத்துள்ளதாக கூறியே, 12 நாட்களுக்குப் பின்னர் வேலை நிறுத்தத்தை நிறுத்திக்கொண்டது. ஆயினும், விரைவில் அது போலியான வாக்குறுதி என்பது அம்பலத்துக்கு வந்திருந்தாலும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடக்கும் வரை, எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்யாத கூட்டுக் கமிட்டி, உறுப்பினர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பை திசை திருப்பி விடுவதற்காகவே கடைசியாக 2018 ஜனவரி 25 மற்றும் பெப்ரவரி 6-7ம் திகதிகளில் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.

பெப்ரவரி 28 வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு சற்ற முன்னதாக, புதிய உயர் கல்வி அமைச்சர் கபீர் ஹாஷிம், தமது பதவியைப் பொறுப்பேற்கும் முன்னரே கல்விசாரா தொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதாக சாதகமான பதில் அளித்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர். எனினும், புதிய அமைச்சர் வேலையை ஆரம்பித்து சில நாட்களின் பின்னர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, 2015 மற்றும் 2016ல்  முறையே வழங்கிய நூற்றுக்கு 20 சதவீதம் மற்றும் நூற்றுக்கு 15 சதவீத சம்பள உயர்வுக்கு மேலாக வேறு எந்தவொரு சம்பள உயர்வும் கொடுக்க முடியாது என நிதி அமைச்சு அறிவித்துள்ளதாக கூட்டுக் கமிட்டிக்கு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் புதிய அமைச்சர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்க அதிகாரத்துவம் இப்போது கூறுகிறது. கல்விசாரா ஊழியர்களால், மார்ச் 6 அன்று, ஆணைக்குழுவுக்கு முன்னால் நடத்திய மறியல் போராட்டத்தின் முடிவில் அங்கு உரையாற்றிய கூட்டுக் கமிட்டியின் தலைவர் தம்மிக்க பிரியந்த கூறியதாவது: "பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே கோரிக்கைகளைப் பெறுவதற்கு முக்கிய தடையாக உள்ளது. தெளிவாக கூறுவதெனில், அதன் தலைவர் மற்றும் துணை தலைவருமாவர். கௌரவ கபீர் ஹாசிம் அமைச்சர், எங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தெளிவாக ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின் படி, இந்த கோரிக்கைகளை வழங்க வேண்டும் என கூறியிருந்தாலும், துணை தலைவர் அவரை குழப்பிவிட்டுள்ளார்."

லக்ஷ்மன் கிரியல்ல இந்த அமைச்சர் பதவியை வகித்தபோது, ​​கிரியல்லவின் பிடிவாதத்தின் காரணமாக கோரிக்கைகளை கொடுக்கவில்லை என்று கூட்டுக் கமிட்டி தெரிவித்தது.

வேலை நிறுத்தம் செய்யும் கல்விசாரா ஊழியர்கள், கோரிக்கைகள் இட்டுநிரப்பப்படாமைக்கு காரணம் அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளின் பிடிவாதத்தின் காரணமாக அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் உறுப்பினர்களை திசை திருப்பி விடுவதற்காக பின்னப்படும் பொய்யாகும். இதற்கு மாறாக, சர்வதேச நாணய நிதியம் கடுமையாக எதிர்ப்பதாலேயே இந்த கோரிக்கைகள் கிடைக்கவில்லை.

மிகப்பெரிய பொருளாதார கொந்தளிப்பில் சிக்கியுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு, சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள உத்தரவின் படி, 2020க்குள் அரச வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதம் வரை குறைக்க வேண்டும். 2017 கடைப் பகுதியில் இந்த பற்றாக்குறை 5.6 வீதமாக இருந்தது. இலக்கை அடைய சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நடவடிக்கைகளில், கல்வி, சுகாதாரம் உட்பட பொது சேவைகளை கடுமையாக வெட்டுவது, மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல் ஆகும்.

மற்றொரு முக்கியமான அம்சம், கல்விசார தொழிலாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், வீழ்ச்சியடைந்து வரும் உலக முதலாளித்துவ முறையின் வரலாற்று இயலாமையின் விளைவே ஆகும். இந்தத் தாக்குதல்கள் இலங்கைக்கு மட்டுமானது அல்ல, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலிருந்து குறைந்த வளர்ச்சியுற்ற நாடுகள் வரை, உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பொதுவான நிலைமை ஆகும்.

தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான முதலாளித்துவத்தின் தாக்குதல்கள் சர்வதேச அளவிலானதாக உள்ள அதேவேளை, இந்த தாக்குதல்களுக்கு எதிராக, பாரியளவிலான தொழிலாள வர்க்க போராட்டங்களும் சர்வதேச அளவில் வெடிக்கின்றன. அமெரிக்காவில் மேற்கு வேர்ஜீனியாவில் ஆசிரியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தம், ஜேர்மனியில் வாகன தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் மற்றும் பிரான்சில் விமான சேவைத் தொழிலாளர்களின் போராட்டம் போலவே இலங்கையில் கல்விசாரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும், தொழிலாள வர்க்கத்தின் புதிய சர்வதேச தீவிரமயமாதலின் வெளிப்பாடு ஆகும்.

முதலாளித்துவ அமைப்புமுறை எதிர்கொண்டுள்ள முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியின் விளைவாக, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் நடைமுறைப்படுத்தப்படும் கொடூரமான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளுடன், தொழிலாளர்களின் போராட்டங்கள் வெளிப்படையாக மோதிக் கொள்கின்றன. முதலாளித்துவ அரசாங்கங்களுக்குப் போலவே ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமின்றி இந்த போராட்டங்கள் முன்நகர முடியாது என்பதே இதன் அர்த்தமாகும்.

இலங்கையில் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டு கமிட்டி உட்பட, உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்கள், அத்தகைய அரசியல் போராட்டத்திற்கு முழு எதிரிகளாகும். ஏனென்றால், அவை தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் அல்ல. இவை கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுகளின் கருவிகள் ஆகும். அவை, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதில் இருந்து தொழிலாள வர்க்கத்தை தடுப்பதற்காகவே தொழிலாள வர்க்கத்தின் உச்சியில் அமைர்ந்துகொண்டுள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டமும், மேல் குறிப்பிடப்பட்ட அரசியல் பிரச்சினைகளை முன்வைப்பதால், தொழிற்சங்கங்கள் எப்பொழுதும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் வெடிப்பதைத் தடுக்கவே முற்படுகின்றன. அமெரிக்க தொழிற்சங்க சட்டத்தரணி ஒருவர், கடந்த மாதம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தில், தொழிற்சங்கங்களின் இத்தகைய பிற்போக்கு பாத்திரம் மனதில் பதியும் விதத்தில் சூத்திரப்படுத்தப்பட்டது: “தொழிற்சங்க பாதுகாப்பு என்பது, வேலைநிறுத்தங்கள் இல்லாத சமரசமாகும்,”  என்றார்.

இத்தகைய அமைப்புகள் மூலம் ஏதாவதொரு ஆர்ப்பாட்டம் அல்லது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படுமெனில், தொழிலாளர்களின் போர்க்குணத்தை கரைத்துவிட்டு, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் அபிவிருத்தி அடைவதை தடுப்பதே அதன் நோக்கம் ஆகும்.

"தொழிலாளர் போராட்டங்கள் அரசியல் அல்ல, அதனால் அந்த போராட்டங்களுக்கு அரசியலைக் கொண்டுவர வேண்டாம்" என, தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்களும் இந்த பங்கின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். "அரசியல் வேண்டாம்" என்ற பெயரில் அவை முதலாளித்துவ அரசியலை ஊக்குவிக்கின்றன.

கடந்த சில தசாப்தங்களில் இந்த பாத்திரத்தின் ஊடாக தொழிற்சங்கங்களால் வர்க்கப் போராட்டம் செயற்கையாக அடிபணிய வைக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்குவதுடன் சேர்ந்து, தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையாகவும் நேரடியாகவும் வெளித்தோன்றியுள்ளன.

மேற்கு வேர்ஜீனியாவில் 30,000க்கும் அதிகமான ஆசிரியர்கள், தங்கள் தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக, ஒன்பது நாட்களாக முன்னெடுத்த உறுதிப்பாடான போராட்டத்திலும், இலங்கையில் கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தில் பங்குபற்றாமல் இருப்பதற்காக, பல்கலைக்கழக தொழில்நுட்ப அதிகாரிகள் சங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிக்கொண்ட அந்த சங்கத்தின் மொரட்டுவ பல்கலைக்கழக கிளையின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதிலும், தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து போராட்டத்தை தம் கையில் எடுத்துக்கொள்வதற்கு தொழிலாளர்கள் எடுக்கும் முயற்சியின் ஆரம்ப அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான எம். தேஹின் வசந்த என்பவராலேயே மொரட்டுவ பல்கலைக்கழக கிளையில் பிரேரணை முன்வைக்கப்பட்டு இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி சம்பந்தமாக எந்தவொரு நம்பிக்கையும் வைக்க வேண்டாம் என்றும், போராட்டத்தை தம் கைகளில் எடுத்துக்கொள்வதற்காக தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் பிரிந்து, தொழிலாளர்களின் வாக்குகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜனநாயகபூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் முடிவுகள் மற்றும் தீர்மானங்களுக்கு வரும் கட்டடத்தில் சுயாதீன நடவடிக்கை குழுக்களை ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் கட்டியெழுப்புமாறு கல்விசாரா ஊழியர்களிடம் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது.

இந்த நடவடிக்கைக் குழுக்கள் மூலம், தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்குமாறு முழு தொழிலாள வர்க்கத்திற்கும் அழைப்பு விடுக்க முடியும். அதே போல், ஏனைய வேலைத் தளங்களுக்கும் தமது குழு பிரதிநிதிகளை அனுப்பி, ஏனைய தொழிலாளர்களையும் போராட்டத்தில் சேருமாறு ஊக்குவிக்க முடியும்.

நடவடிக்கைக் குழுக்கள் எந்த வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது மிகவும் அடிப்படையானதாகும். கல்விசாரா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்க பணம் இல்லை என அரசாங்கம் மீண்டும் மீண்டும் விடுக்கும் அறிக்கையை ஆராய்ந்து பார்ப்பதன் மூலமும் இந்த வேலைத்திட்டத்துக்கு நுழைவு வழியை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அரசாங்கத்தின் அறிக்கையால் நேரடியாக எழுப்பப்படும் பிரச்சினை எதுவெனில், சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் யாருடைய நலன்களின் அடிப்படையில் திட்டமிடப்படுகின்றன என்பதாகும். கூட்டுத்தாபன உரிமையாளர்களின், நிதிய உயரடுக்கின் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் அவசியங்களின் அடிப்படையிலா? இல்லையெனில் எல்லா இடங்களிலும் சுரண்டலுக்கு உள்ளாகும், சமூகத்தின் அனைத்து சொத்துக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் தேவைகளின் அடிப்படையிலா?

நிச்சயமாக சமுதாயத்தின் அனைத்து சொத்துக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் தேவைக்காகவே, சமூக-பொருளாதார கொள்கைகளைத் தீர்மானிக்க வேண்டும். இதை நிறைவேற்ற வேண்டுமெனில், பிமாண்டமான பெருந்தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் மக்கள்மயப்படுத்தி, இலாபத்துக்கான தயாரிப்பிற்கு மாறாக, சமூக தேவைகளை இட்டு நிருப்புவதற்கான உற்பத்தியை உறுதிசெய்கின்ற சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள், இன்றியமையாதவாறு இந்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வாழ்வதற்கு ஏற்ற ஊதியத்துடனான வேலை, சிறந்த ஆரோக்கியம், முறையான கல்வி மற்றும் பாதுகாப்பான ஓய்வுக் காலத்தையும் ஸ்தாபிக்கின்ற கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய திட்ட வரம்பை இந்த நடவடிக்கை குழுக்கள் மூலம் உருவாகிக்கொள்ள முடியும்.

கல்விசாரா தொழிலாளர்கள் போலவே ஏனைய தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதன் மூலமே இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.