ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

තරුනයනි, ශිෂ්‍යයනි,
වර්ජනයේ යෙදී සිටින විශ්ව විද්‍යාල කම්කරුවන් සමග එක්ව ආන්ඩුවේ ප‍්‍රහාරයන්ට එරෙහිව සටන් කරමු !

இளைஞர்களே மாணவர்களே,

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக தொழிலாளர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராடுவோம்!

By the International Youth and Students for Social Equality (Sri Lanka)
12 March 2018

அரச பல்கலைக்கழகங்களில் 15,000 கல்விசாரா தொழிலாளர்கள், சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் கடந்த 28ம் திகதி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் காலைவாரி விடும் வேலைகளுக்கு மத்தியில் கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் இந்த உறுதிப்பாடான வேலைநிறுத்தத்துக்கு, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு முழு ஆதரவு கொடுக்கின்றது.

நூற்றுக்கு 20 சதவிகித ஊதிய உயர்வு, இப்பொழுது வழங்கப்படும் சலுகை அடிப்படையிலான கடனை உயர்த்துதல், மொழி திறனுக்கான கொடுப்பனவு, மருத்துவ காப்பீட்டு திட்டம், ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை இந்த வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் கோருகின்றனர்.

தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட ஏனையவர்களும் பொதுவாக எதிர்கொள்ளும் ஊதிய வீழ்ச்சி, சீரழிந்து வரும் சமூக உட்கட்டமைப்பு, இலவச கல்வி மீதான தாக்குதல்கள் மற்றும் பெருகிவரும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராகவே கல்விசாரா தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

பல்கலைக்கழகத் தொழிலாளர்களது போராட்டத்துடன் சேர்ந்து, அதை அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டமாக முன்னெடுப்பதற்கு முன்வருமாறு வேலையற்ற இளைஞர்களிடமும் கல்வி வெட்டு மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடி வரும் மாணவர்களிடமும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. வேண்டுகோள் விடுக்கின்றது.

சம்பளக் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் மின்சாரம், தபால் மற்றும் இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், நலன்புரி சேவைகள் மற்றும் மானியங்கள் வெட்டுக்களுக்கு எதிராக கிராமப்புற விவசாயிகள் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. நீண்டகால வகுப்பு பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, அரசாங்கத்தின் தாக்குதல்களைத் தோற்கடிக்கும் உறுதிப்பாட்டை 'மாணவர்கள் தொடர்ந்தும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களதும் போராட்டங்கள், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் பிரதிபலிப்பாக, அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா உட்பட நாடுகளில் உலக மட்டத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வர்க்கப் போராட்டத்தின் பாகமாகும்.

உலகில் ஏனைய நாடுகளிலும் போலவே, இலங்கையிலும், தொழிலாள ஒடுக்கப்பட்டவர்களின் மற்றும் மாணவர்களின் அவசரத் தேவைகள், நிதி மூலதனத்தின் கட்டளைகளைகளின் அடிப்படையில் அரசாங்கங்கள் அமுல்படுத்திவரும் சிக்கன நடவடிக்கைகளுடன் நேரடியாக மோதுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6 சதவீதமாக உள்ள இலங்கையின் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை, 2020 ஆம் ஆண்டில் நூற்றுக்கு 3.8 சதவீதமாக குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கட்டளை, கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளிலும் மேற்கொள்ளப்படும் பாரிய வெட்டுக்கள் ஊடாகவே அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படுகின்றது.

இந்த தாக்குதல்களுக்கு எதிராக வெடிக்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை பொலிஸ் மற்றும் இராணுவத்தைப் பயன்படுத்தி நசுக்குவது மட்டுமே அரசாங்கத்திடம் உள்ள ஒரே மாற்றீடாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரு வணிகர்களின் இலாபங்களை பெருக்கிக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கும், அதே போல், தொழிலாளர்கள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ்-இராணுவ அரச திட்டங்கள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகள் மத்தியிலும் பொது உடன்பாடு காணப்படுகின்றது.

மேலும், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களின் உச்சியில் அமர்ந்துகொண்டிருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்கள், இந்த தாக்குதல்களின் தோற்றுவாய் முதலாளித்துவ அமைப்பு முறையே என்பதை வேண்டுமென்றே மூடி மறைக்கின்றன. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கைகளை வெல்ல முடியும் என்ற மாயையை பரப்புகின்ற இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளும், எதிர்ப்பு அரசியலுக்குள் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை சிறைவைத்து, அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை தடுக்கின்றன.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தில் போலவே, கல்வி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திலும் இது மிகவும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

கல்விசாரா ஊழியர்கள் இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 2016 ஜூன் மாதம் வேலைநிறுத்தத்தில் இணைந்த போதிலும், அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி வேலைநிறுத்தத்தை கைவிட்டது. அரசாங்கம், அது கொடுத்த வாக்குறுதிகளை மீறியதோடு மட்டுமல்லாமல் எண்ணெய், மின்சாரம், துறைமுகங்கள் ஆகியவற்றில் தொழிலாளரக்ளின் வேலைநிறுத்தங்களில் செய்தது போன்று, வேலைநிறுத்தங்களை சட்ட விரோதமானதாக அறிவித்து, தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலுக்கும் அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இங்கு ஆளும் வர்க்கத்தால் தூண்டிவிடப்பட்டு முன்னணிக்கு கொண்டுவரப்பட்ட இனவாத ஆத்திரமூட்டல்களைப் பற்றிக்கொண்டு அரசாங்கம் பிரகடனம் செய்துள்ள அவசரகால நிலையை, கல்விசாரா தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த சூழ்நிலையில், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியின் தலைவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு அதிகாரிகளின் பிடிவாதத்தால் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுவதில்லை என்று உறுப்பினர்களுக்கு கூறுகின்றனர்.

இந்த தொழிற்சங்கத் தலைவர்களைப் போலவே, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) மற்றும் அதற்கு அரசியல் தலைமை வழங்கும் போலி-இடது அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.), கல்வி தனியார்மயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுவது சம்பந்தமாக, ஏதாவது ஒரு அமைச்சரை நோக்கி விரலை நீட்டுகின்றன.

தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்களின் இந்த மாயைகளுக்கு மாறாக, முன்பு காட்டப்பட்டுள்ளது போல், அரசாங்கத்தின் இந்த சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது சம்பந்தமாக, சர்வதேச மூலதனத்தின் ஒரு வடிவமான சர்வதேச நாணய நிதியமே உறுதிப்பாட்டுடன் உள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு, “செலவைக் குறை” என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையாக உள்ளது.

ஊதிய உயர்வு கோரி போராடும் தொழிலாளர்களுக்கும் கல்வி வெட்டுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கும், கோரிக்கைகளை இட்டு நிரப்ப நிதி இல்லை என்றே அரசாங்கம் கூறுகிறது.

பொருளாதாரக் கொள்கைகளை நிர்ணயிப்பது, பெருநிறுவன உரிமையாளர்களின் நிதிய உயரடுக்கின் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளான முதலாளித்துவ கட்சிகளின் நலன்களா? அல்லது சமுதாயத்தின் அனைத்து சொத்துகளின் உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாள வர்க்கமா? என்ற கேள்வி பொதுமக்களுக்கு நேரடியாகவே முன்வைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் பின்வருமாறு பரிந்துரைக்கிறோம்: சொத்துக்களின் உண்மையான உற்பத்தியாளராக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களின் அடிப்படையிலேயே பொருளாதார கொள்கைகளை நிர்ணயிக்கப்பட வேண்டும். இதை செய்வதற்கு, முதலாளிகளின் கையில் இருக்கும் உற்பத்தி சாதனங்கள், அதாவது பெருந்தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகளையும் தொழிலாள வர்க்க கட்டுப்பாட்டின்கீழ் மக்கள்மயப்படுத்தப்பட்டு, உற்பத்திக்கான அடிப்படை இலாபத்திற்காக அன்றி, மனித தேவைக்கானதாக மாற்றப்பட வேண்டும். இது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டமாகும்.

இந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தலைமை வகிக்கும் திறனுள்ள சமூக வர்க்கமாக வரலாற்றுரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதும் உண்மையான உற்பத்தியாளரான தொழிலாள வர்க்கமே ஆகும். இதன் காரணமாக, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில் அணிதிரட்டப்பட வேண்டும்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் முன்னிலை சோசலிசக் கட்சியும், அத்தகைய ஒரு வேலைதிட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றன. "மாணவர் போராட்டத்தை” தூக்கிப் பிடிக்கும் இந்த அமைப்புக்கள், தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் மாணவர்களை ஒழுங்கமைப்பதற்கு எதிராக, மாணவர்களின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தைக் கொண்டுவரும் பிற்போக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் முன்னிலை சோசலிசக் கட்சியும், தொழிலாளர்களின் போராட்டங்கள் சம்பந்தமாக கடும் அலட்சியப் போக்கை காட்டுகின்றன. மார்ச் 5 அன்று ஜயவர்தனபுர, பல்கலைக்கழகத்தில் நடந்த கல்விசாரா ஊழியர்களின் கூட்டத்தில் உரையாற்றிய அந்த பல்கலைக்கழகத்தின் பெரும் மாணவர் அமைப்பின் தலைவர், "ஒரு மரணச் சடங்கில் கலந்து கொள்ள இருப்பதால்" அத்றகு மறுநாள் இடம்பெறவிருந்த கல்விசாரா ஊழியர்களின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மாணவர்கள் “சிலரையாவது” அனுப்பி வைப்பதாக கூறினார். பெரும் மாணவர் அமைப்பானது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையிலானதாகும்.

“சிலரை” அனுப்பிவைக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக, கல்விசாரா ஊழியர்களின் போராட்டதைச் சூழ, தமது சகல மாணவர்களை கூடுமானவரை அணிதிரட்டுவதற்கு மாணவர்களே முன்நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய முன்நடவடிக்கை, மாணவர்களை தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திருப்பி விடுவதற்கான முதல் படியாக இருக்கும்.

இத்தகைய ஒரு திருப்பம், மகிந்த இராஜபக்ஷவின் கூட்டு எதிர்க் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. போன்ற முதலாளித்துவ அமைப்புகள் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (USP) போன்ற போலி இடது கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கருங்காலி தொழிற்சங்க தலைவர்களை சேர்த்துக்கொண்டு, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியாலும் கட்டியெழுப்பப்பட்ட “சைட்டம்-எதிர்ப்பு மாணவர்-மக்கள் முன்னணி” போன்ற முதலாளித்துவ கூட்டணிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை நோக்கி மாணவர்கள் மேற்கொள்ளும் ஒரு முதல் அடியெடுப்பாக இருக்கும்.

முதலாளித்துவ அமைப்பில் மேலும் சீர்திருத்தங்களை பிரேரிக்கும் தொழிற்சங்கங்களின் மற்றும் மாணவர் சங்கங்கள், முதலாளித்துவத்தின் முன்கண்டிராத நெருக்கடியின் மத்தியில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முதலாளித்துவ அரசாங்கங்களதும் முதலாளித்துவ எஜமானர்களதும் நேரடி பிரதிநிதிகளாக ஆகியுள்ளனர்.

இதற்கு நேர் மாறாக, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டத்தை சூழ, மாணவர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட போராடுகின்ற சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ), சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) உடன் சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட கிராமப்புற ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை அணிதிரட்டி, முதலாளித்துவ வர்க்க ஆட்சியைத் தூக்கி வீசி, சர்வதேச சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துகின்ற, தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

மாணவர்கள் மேல் குறிப்பிடப்பட்ட அமைப்புக்கள் மற்றும் அவற்றின் முதலாளித்துவ அரசியலில் இருந்து முற்றிலும் பிரிந்து விலகி, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. கிளைகளை கட்டயெழுப்ப முன்வர வேண்டும்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் 'போராட்டத்தை முன்னோக்கி நடத்துவதற்காக, தொழிலாளர்களின் மற்றும் மாணவர்களின் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறும் அதற்காக பல்கலைக்கழகங்களிலும் வேலைத் தளங்களிலும் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதோடு எம்முடன் தொடர்புகொள்ளுமாறும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.