ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සමිති නායකයෝ තැපැල් වර්ජනය පාවා දීමට සූදානම් වෙති:
වැටුප් ඉල්ලීම් ලබා දීමට “මුදල් නැත” යන තර්කය ප්‍රතික්ෂේප කරමු!

இலங்கை தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கத் தலைவர்கள் காட்டிக் கொடுக்கத் தயாராகின்றனர்

சம்பளக் கோரிக்கையை வழங்க "பணம் இல்லை" என்ற வாதத்தை நிராகரி!

By Saman Gunadasa 
28 June 2018

இலங்கையில் 25,000க்கும் மேற்பட்ட தபால் தொழிலாளர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்தை ஜூலை 7 வரை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவருவதாக தொழிற்சங்க தலைமைத்துவம் அறிக்கை விட்டுள்ளது. கோரிக்கைகளை வழங்க அரசாங்கத்துக்கு ஒரு பெரிய தொகை செலவாகும் என்றும், அதனால் ஏனயை சேவைகளிலும் சம்பள முரண்பாடு ஏற்பட்டு, அங்கும் சம்பள உயர்வு கொடுக்க நேரும் என்றும், தபால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆராய்வதற்கென அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள குழு கூறியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அஞ்சல் தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டக்கூடியவாறும் அவர்களது வேலை நிலைமைகளை கீழிறக்கக்கூடியவாறும், தபால் நிலைய அதிபர் மற்றும் சாதாரண ஊழியர்கள் என்ற அடிப்படையில் இரண்டு தரங்களாக மட்டும் வடிவமைத்து, பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வை கட்டுப்படுத்தக் கூடிய வகையில், ஆட்களை இணைத்துக்கொள்ளும் முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே, அரசாங்கம் இவ்வாறு தர்க்கங்களை பின்னி வருகின்றது.

வாழ்க்கைச் செலவு உயரும் நிலைமையில், கடந்த 12 ஆண்டுகள் பூராவும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்பட்ட இந்த வெட்டுக்களுக்கு எதிராக தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கம், ஊதிய கோரிக்கைகளுக்கு எதிராக "நிதி இல்லை" என்ற தர்க்கத்தை தூக்கிப் பிடிப்பது, தபால் ஊழியர்களுக்கு முன் மட்டுமல்ல. மார்ச் ஏப்ரல் மாதங்களில் 44 நாட்கள் வேலை நிறுத்த போராட்டதில் ஈடுபட்ட 15,000 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் ஜூன் முற்பகுதியில் வேலைநிறுத்தம் செய்த 12,000 நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியிர்களினதும் கோரிக்கைகளுக்கு எதிராகவும் இந்த பதிலை நன்கு பயன்படுத்தியது. தொழிற்சங்கத் தலைவர்கள் போரட்டத்தை காட்டிக்கொடுப்பதற்காக அரசாங்கத்தின் இந்த வாதத்தை நன்கு பயன்படுத்தினர்.

இந்த குதர்க்கத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. தம்மால் உருவாக்கப்படும் மதிப்பு யாருக்கு போய் சேருகிறது? அந்த வளங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன? என்பதை தொழிலாளர்கள் அவதானிக்க வேண்டும்.

அரசாங்கம் நிதி இல்லை எனக் கூறும் அதேவேளை, கடந்த 2017 நிதியாண்டில் மட்டும் நாட்டின் வங்கிகள் உட்பட பெரும் வர்த்தகத்தின் நிகர இலாப அதிகரிப்பு பற்றிய பின்வரும் தரவைக் கொண்டு ஒரு அபிப்பிராயத்துக்கு வரலாம்.

வர்த்தக வங்கி: 16.5 பில்லியன் ரூபா நிகர இலாபம். இது நூற்றுக்கு 14.25 சதவீத வருடாந்த அதிகரிப்பாகும்

சம்பத் வங்கி: 12.5 பில்லியன் ரூபா நிகர இலாபம். இது நூற்றுக்கு 32.7 சதவீத வருடந்த அதிகரிப்பாகும்.

ஹட்டன் நாஷனல் வங்கி: 16.5 பில்லியன் ரூபா நிகர இலாபம். இது நூற்றுக்கு 16.4 சதவீத வருடாந்த அதிகரிப்பாகும்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்: 23 பில்லியன் ரூபா நிகர இலாபம். இது நூற்றுக்கு 28 சதவீத வருடாந்த அதிகரிப்பாகும்.

ஜோன் கீல்ஸ் 1 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியை விஞ்சிய இலங்கையின் முதலாவது கம்பனியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இது எதை அர்த்தப்படுத்துகிறது. நாட்டினுடைய வளங்களில் மிகப் பெரும் பகுதியை இந்த பெரும் வணிகங்களின் உரிமையாளர்கள் தங்கள் பைகளில் நிரப்பி வருகின்றனர். சற்றே வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய நிலைமைக்கும் கீழ் மட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளத்தை பேணிவருகின்ற மற்றும் தொழிலாளர்களின் வாழ்வில் எந்தவிதமான அக்கறையும் இன்றி வேலை நிலைமைகளை பராமரித்து வருகின்ற பெரும் வர்த்தகர்களால் முன்னெடுக்கப்படும் கடுமையான சுரண்டலின் விளைவே இந்த குவிப்பு ஆகும்.

பெருநிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களின் வருமான வரியாக பெறப்படுவது நூற்றுக்கு 14 முதல் 28 சதவிகிதம் வரையான சிறிய தொகையே ஆகும். இது தெற்காசியாவிலேயே கூட குறைந்தபட்ச வீதமாகும். முதலீடுகளை "தக்கவைத்து, ஊக்குவிப்பதன்" பேரில் அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருப்பது, அதிகபட்ச சுரண்டல் நிலைமைகளை தேடி உலகம் பூராவும் அலையும் நிதி மூலதனத்திற்கு வசதியளிப்பதற்கே ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கபட்ட நீண்டகால இனவாத யுத்தம் முதல் இன்று வரை, ஆயுதங்களுக்காகவும் பெரு வர்த்தகர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்கவும் வாங்கிய கடன் தொகைக்காக, அரசாங்கம் மிகப் பெரிய தவணைக் கட்டணங்களை செலுத்தி வருகிறது. மத்திய வங்கியின் கூற்றுப் படி, இந்த ஆண்டுக்கான கடன் செலுத்துகை 2.9 பில்லியன் டாலர்களாக இருக்கும் அதேவேளை, அடுத்த ஆண்டு இது 4.2 பில்லியன் டாலராக இருக்கும். வருடாந்த கடன் தவணையானது 2020ம் ஆண்டிலிருந்து 2022 வரை 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த கடனை திருப்பிச் செலுத்த சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்களை பெற்றுள்ள அரசாங்கம், அதன் உத்தரவின் பேரில் உழைக்கும் மக்கள் மீது பெரும் வரிச் சுமையை திணித்து, மானியங்களை வெட்டி, அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதையும் முன்னெடுத்து வருகின்றது.

2008ல் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார மந்தநிலையுடன், இந்த சுரண்டல்கள் உலக அளவில் பல மடங்கு அதிகரித்துள்ளன. சமீபத்திய அறிக்கையின்படி, ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் சொத்து உள்ள "மிக அதிக நிகர மதிப்பு கொண்ட நபர்கள்” 18 மில்லியன் பேர் கையில் குவிந்துள்ள நிதித் தொகை, கடந்த ஆண்டு 10.6 சதவிகிதமாக உயர்ந்து, 70 ட்ரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளன. இந்த தொகையில் 35 சதவிகிதம் இருப்பது, 35 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வலுவான நிகர மதிப்பு கொண்ட 174,000 நபர்களிடம் ஆகும். இந்த நிதியானது வங்கி மற்றும் பங்குச் சந்தை கணக்குகளாக இருப்பதுடன் பெரும் மாளிகை, தனியார் ஜெட் விமானங்கள், அதி ஆடம்பர படகுகள் ஆகியவற்றின் உயர் பாவனைக்காக பயன்படுகிறது.

உலகின் இந்த செல்வம், 817 ஆண்டுகளுக்கு பசி பஞ்சத்தை ஒழிப்பதற்கு போதுமானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான உலகின் சமத்துவமின்மை அறிக்கை, உலகின் மொத்த பணக்காரர்களில் 10 சதவீதம் பேர், உலக மொத்த வளங்களில் 70 சதவீதத்தை தம்வசம் கொண்டுள்ள அதேவேளை, உலகின் மக்கள் தொகைகையில் குறைந்த வருமானம் பெறும் பாதிப்பேர், அதாவது 3.5 பில்லியன் மக்களுக்கு கிடைப்பது இந்த வளங்களில் 2 சதவீதம் மட்டுமே ஆகும்.

இவ்வாறு சிறுபான்மையினர் கையில் செல்வம் குவிகின்ற அதேவேளை, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படும் வறுமை உலகம் முழுவதும் வியாபித்து வருவதால், அது இலங்கையிலும் அவ்வாறே நிலவுகிறது. கடந்த ஆண்டு, இலங்கை கொள்கை கற்கை நிறுவனம் வழங்கிய அறிக்கையின் படி, இலங்கையில் 1.9 டாலர் அதாவது 300 ரூபாவை விட குறைந்த தினசரி வருமானம் பெறுவோர், மக்கள் தொகையில் 6.7 சதவீதம் பேர், அதாவது கிட்டத்தட்ட 2.2 மில்லியன் பேர் உள்ளனர். ஜனத்தொகையில் 2 டாலருக்கும் குறைவான வருமானம் பெறுவோர் சராசரியாக 9.9 சதவிகிதம் பேர் உள்ளனர்.

ஆள் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் துறையின் படி, 2016ல் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் உயர் வருமானம் பெறும் 20 சதவீதத்தினர் நாட்டின் மொத்த ஆண்டு வருமானத்தில் 51.8 சதவீதத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீதும் வரியை அதிகரித்து, சர்வதேச நாணய நிதிய கட்டளை படி, வரவு-செலவுப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகக் குறைப்பதை நடைமுறைப்படுத்துகிறது. வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டைப் பரிசீலித்தால், கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கு நிதி ஒதுக்கிய பின்னர், மிகப்பெரிய தொகை பாதுகாப்புப் படை மற்றும் பொலிசுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை வாழவைப்பதற்கு சம்பளம் மற்றும் மானியத் தொகைகளை அதிகரிக்காமல், அவர்களை அடக்கி ஒடுக்கப் பயன்படும் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கருவியை ஊக்குவிக்கவே பெருந்தொகை நிதி செலவிடப்படுகிறது.

2018 வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து 290 பில்லியன் ரூபாய்கள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டன. இதை உலக அளவில் ஒப்பிட்டால் மிகவும் அதிகமானது. 2017 உலகளாவிய இராணுவ செலவு 1.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படும் அதேவேளை, இதில் நூற்றுக்கு 13 வீத்தத்தைக் கொண்டு உலகில் வறுமை மற்றும் பட்டினியை தீர்க்க முடியும், நூற்றுக்கு 4 வீதத்தைக் கொண்டு உலக மக்கள் தொகைக்கு உணவு பாதுகாப்பு வழங்க முடியும், 5 சதவீதத்தில் சுகாதார தேவைகளை இட்டு நிரப்ப, 12 சதவீதத்தில் உலகில் அனைவருக்கும் கல்வி வசதி செய்யவும், 3 சதவீதத்தை தூய நீர் மற்றும் ஆரோக்கியத்துக்காகப் பயன்படுத்த முடியும்.

இந்த பெரிய சமூக செல்வமானது தொழிலாளர்களின் ஏழைகளின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு, உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமை மற்றும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையை, சோசலிச பொருளாதார அமைப்பு முறையால் மாற்றீடு செய்ய வேண்டும். பெரிய வணிகங்கள், வங்கிகள், பெருந்தோட்டங்கள் உட்பட பிரதான உற்பத்தி சாதனங்களை தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இலாபத்துக்காக அன்றி, பொதுமக்களின் தேவைகளுக்காக இந்த உற்பத்தி சாதனங்களை மறு ஒழுங்கமைக்கும் தொழிலாளர்-விவசாயிகள் அராசங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்.

முதலாளித்துவத்தின் கருவிகளாக மாறிப் போயுள்ள தபால் தொழிற்சங்கங்கள் உட்பட சகல தொழிற்சங்கங்களும் இந்த திட்டத்தை அடியோடு எதிர்க்கின்றன. கடந்த 12 ஆண்டுகளாக அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்கள் மற்றும் வணிகமயாமாக்கும் திட்டங்களை தொழிலாளர்களுக்கு மூடிமறைக்க அரசாங்கங்கள் கூறும் பொய் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர் போராட்டங்களை காட்டிக்கொடுத்து, அரசாங்கம் அதன் தாக்குதல்களை விரிவாக்கும் நிலைமையை உருவாக்க செயற்டுகின்ற இந்த சங்கங்கள், இப்போது தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப அரசாங்கத்தின் சார்பில் வேலையில் இறங்கியுள்ளன.

முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலர்களான தொழிற்சங்கங்களின் பிடியை உடைத்து, தபால் தொழிலாளர்கள் தமது சொந்த நடவடிக்கை குழுக்களை அமைத்து, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் ஏனைய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் ஏனைய போராளிகளின் ஒத்துழப்பை அணிதிரட்டி, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராட்டத்துக்கு முன் வருமாறு அழைக்கிறோம்.