ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French far-right tough defends fascist murder of Méric: “He asked for it!”

மெரிக்கின் பாசிச படுகொலையை பிரான்சின் அதி-வலது கடுமையுடன் பாதுகாக்கிறது : “அவராய் தேடிக்கொண்டார்!”

By Anthony Torres
19 September 2018

கடந்த வெள்ளியன்று, இடதுசாரி மாணவன் கிளெமொன்ட் மெரிக் (Clément Méric) கொலை தொடர்பான ஒரு 10-நாள் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றம் அவரை கொன்ற மூன்று நவ பாசிச குண்டர்களுக்கு ஒப்பீட்டளவில் சுருக்கமான சிறை தண்டனையை அளித்தது. விசாரணையின்போது, படுகொலைக்கான வெளிப்படையான அரசியல் தன்மையை அங்கீகரிக்க மறுத்த நீதிமன்றம், அங்கு எழுப்பப்பட்ட பிரதான பிரச்சினையை மறைத்தது.

10 மணிநேரத்துக்கும் குறைவான விவாதத்திற்கு பின், நீதிமன்றம் எஸ்ரெபான் மொறிய்யோவுக்கு (Esteban Morillo) 11 ஆண்டுகள் மற்றும் சாமுவேல் டுஃபூருக்கு (Samuel Dufour) 7 ஆண்டுகள் முடிவெடுத்து தீர்ப்பளித்தது. மெரிக் மீதான தாக்குதலின் வேளையில் அங்கிருந்த அலெக்ஸாண்டர் ஏய்ரோ (Alexandre Eyraud) விடுவிக்கப்பட்டார். தீர்ப்பை அறிவிக்கையில் வரக்கூடிய மோதல்களை தடுக்க நீதிமன்றத்தின் முன் முப்பது இராணுவப் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

2013 இல் பாசிச-விரோத கிளெமொண்ட் மெரிக்கை கொலைவெறியோடு தாக்கிய மூன்று நவ-நாஜிக்கள் மீதான விசாரணை சென்ற வெள்ளிக்கிழமையன்று முடிவடைவதற்கு முன்பாக, அந்த மூன்று நவ-நாஜிக்கள் செயற்பட்ட மூன்றாவது பாதை (Troisième Voie) மற்றும் தேசிய புரட்சிகர இளைஞர்கள் (Jeunesses nationalistes révolutionnaires - JNR) ஆகிய கலைக்கப்பட்டுவிட்ட நவ-நாஜிக் குழுக்களின் தலைவரான சேர்ஜ் அயூப் (Serge Ayoub) சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். போலிஸ் தகவல் ஆதாரங்களின் படி உள்நாட்டு உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டவரான சேர்ஜ் அயூப், மெரிக்கின் படுகொலைக்கு முன்னரும் பின்னரும் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இந்த மூன்று பேருடனும் தொடர்பில் இருந்துள்ளார்.

முந்தைய வாரம் ஆஜராக அழைக்கப்பட்டிருந்த சமயத்தில், அவர் ஒரு மருத்துவச் சான்றிதழை கொடுத்து வர மறுத்து விட்டார், அதேசமயத்தில் விசாரணை குறித்த ஒரு வருணனை அலைகளை கட்டவிழ்த்து விட்டார், மெரிக்கை ஒரு “வம்பிழுப்பவர்” என்று அவர் கண்டனம் செய்தார். அத்துடன் மெரிக்கின் மரணத்திற்கு அவர் அப்போது தான் மீண்டு வந்திருந்த நோயைக் காரணம் காட்டவும் அயூப் முயற்சி செய்தார்: “கொடூர இயற்கை அவர் எலும்புமச்சை புற்றுநோயால் அவதிப்படுவதை அவருக்கு நினைவூட்டியிருந்தது. 1914 இல், அகழிகளில், ஊனமுற்றவர்கள் ஏறிச் செல்வதற்கான வழிகள் எதுவும் அங்கே இருக்கவில்லை.”

ஆரம்பத்தில் போலிஸ் நீக்குபோக்காக அணுகியபோதிலும் இறுதியில் நீதிமன்றத்தின் முன்பாக அவர் ஆஜராகத் தள்ளப்பட்டபோது அயூப், மெரிக்கின் பாசிசப் படுகொலையானது போலிஸ் மற்றும் அரசு எந்திரத்திற்குள் இருந்த அதிகாரமிக்க சக்திகளுடனான நெருக்கமான தொடர்புடன் இழைக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும்விதமான, வெடிப்பான வாக்குமூலத்தை அளித்தார்.

சாட்சிக் கூண்டில் நின்று, அயூப் இந்த கொலையை அரசியல்ரீதியாக பாதுகாத்துப் பேசினார். போலிசுக்கு பயந்து தப்பி ஓடுகையில் பால்கனியில் இருந்து விழுந்து இறந்து போகும் ஒரு திருடனுடன் மெரிக்கை ஒப்பிட்டு அவரின் நினைவுத்திறனை அவமதித்த பின்னர், மெரிக்கின் படுகொலை குறித்து அயூப் கூச்சலிட்டார்: “அவராய் தேடிக்கொண்டார்!”

சற்றும் நம்பத்தகாதவொரு விதத்தில், அயூப் அவரது அமைப்புகளின் நவ-பாசிச மற்றும் காலனித்துவ-ஆதரவு தன்மையை மறுக்க முயற்சித்தார். ”’சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ ஐ காலனித்துவத்துடன் தொடர்புபடுத்துவதைக் காட்டிலும் அதிகமாக ஒருவர்” பிலிப் பெத்தானின் நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் “வேலை, குடும்பம், தாய்நாடு” சுலோகத்தை -பிரதான குற்றச்சாட்டுக்குரிய எஸ்ரெபான் மொரிய்யோ இதனை தனது வலது கரத்தில் பச்சை குத்தியிருந்தார்-” பெத்தான் உடன் தொடர்புபடுத்த முடியாது”.

நாஜி சுவாஸ்திகா சின்னத்தைப் பொறுத்தவரை, அவர், நீதிமன்றம் கொலை செய்யப்பட்டவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் முன் கூறினார், “அந்த பையன்களை பொறுத்தவரை, அது ‘போடா, போய் நீயா * புடுங்கிக்க’ (‘go f*ck yourself’) என்று சொல்வதற்குரிய ஒரு வழியாகும். அதற்கு மேல் அதிக முக்கியத்துவம் அதில் எதுவும் கிடையாது.”

இந்த கொலையில் அவரது பங்கு பற்றி கூறுகையில், மூன்றாம் பாதையின் ஒரு உறுப்பினராக இருந்த முன்னாள் காதலி எஸ்ரெபான் மொறிய்யோ இடம் இருந்து தனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்ததாக அயூப் கூறினார், அந்த மொட்டைத்தலை இளைஞர்களிடம் “நடத்துங்கள், அவர்களை அப்புறப்படுத்துங்கள்” என்று ஆலோசனையளித்தார். “அதற்கு பின் அவர்கள் என்னை திரும்ப அழைத்து கொஞ்சம் தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டு விட்டதாக கூறினார்கள். நான் சொன்னேன் எல்லாம் நல்லதற்கே என்று. அவை எல்லாமே விளையாட்டுத்தனமானவை.” அன்று இரவு கிளெமொண்ட் மெரிக் இறந்து விட்டதாக தெரியவந்தபோது, அயூப் மறுபடியும் மொறிய்யோவுடன் தொலைபேசியில் பேசினார்: “அவன் உண்மையாகவே பெரிய சிக்கலில் அகப்பட்டுக் கொண்டதாக அவனிடம் சொன்னேன். அவர்களிடம் சரியாக என்ன நடந்தது சொல் என்று உண்மையை கேட்கத் தொடங்கினேன்.” “தானாய் சரணடைவதற்கு” அவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

அதன்பின் “போலிஸ் அலுவலகத்திற்கு தொலைபேசியில் அழைக்க முயற்சித்ததாக”வும் “ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக நான் பேசுகின்ற தொடர்பாளர்” உடன் பேசி, “பையன்கள்” அவர்களாகவே வந்துவிடுவார்கள், ஆனால் வழக்கறிஞரோடு தான் அவர்கள் வருவார்கள் என்று கூறியதாகவும் அயூப் ஒப்புக்கொண்டார். மெரிக்கை சாகும்படி அடித்த இளைஞர்கள், “தனியாக வந்தால் சிதைக்கப்பட்டு விடுவார்கள்” என்று அந்த போலிஸ் தொடர்பிடம் தான் கூறியதாகவும் அயூப் கூறினார்.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், போலிஸ் நிர்வாகத்தில் அல்லது இன்னும் விரிவாய் அரசு எந்திரத்தில் அயூப்பின் தொடர்புகளாக இருந்தது யார் என்று கண்டறிய நீதிபதிகளும் முயலவில்லை ஊடகங்களும் முயலவில்லை.

அயூப் யாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார், யாருடன் உண்மையில் பேசினார், போலிஸ் அலுவலகத்தில் இருந்து என்னவிதமான பாதுகாப்பை அவர் கோரினார் என்பதெல்லாம் இன்னும் தெளிவாகவில்லை. விசாரணையானது கொலையால் எழுப்பப்பட்ட அடிப்படையான அரசியல் கேள்விகளை, தீர்ப்பதெல்லாம் இருக்கட்டும், கேட்டிருக்கவும் கூட இல்லை என்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  கொலை நடந்த தினத்தன்று நடந்தவற்றை தெளிவற்றதாக்கவும், மெரிக்கின் கொலையில் பல அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் கொண்டிருக்கக் கூடிய அரசியல் -மற்றும் சாத்தியரீதியாய் குற்றவியல்தனமான- பொறுப்பை மூடிமறைக்கவுமாய் நோக்கம் கொண்ட ஒரு நீதித்துறை நடவடிக்கையாகவே இது இருக்கிறது.

ஆர்ப்பாட்டங்களின் வேளையில், அயூப்பும் அவரது பாசிச அமைப்பும் பாரிஸ் போலிஸ் நிர்வாகத்திற்காக ஏற்கின்ற பாத்திரம் உண்மையில் என்ன என்ற மேலதிக கேள்வியையும் அயூப்பின் சாட்சியம் எழுப்புகிறது.

இது, விசாரணையின் ஆரம்பத்தில் WSWS எழுப்பிய புள்ளிகளை சரியென நிரூபிக்கிறது. அரசும் ஊடகங்களும் மெரிக்கை கொலைசெய்வதர்களுக்கும் விரிந்த அளவில் பிரெஞ்சு நவ-பாசிச சூழலுக்கும் அரசியல் மறைப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. காணொளியாகப் பதிவான ஒரு படுகொலை நிகழ்ந்ததற்கும் விசாரணையின் ஆரம்பத்திற்கும் இடையில் மிக அசாதாரணமாய் நீண்ட, ஐந்து ஆண்டுகள் தாமதம் என்பது, அரசியல்ரீதியான புரிதல்களின் ஊடாகவே விளக்கப்பட முடியும். சோசலிஸ்ட் கட்சி (PS) தேசிய முன்னணியை (FN) ”பயங்கரம் குறைந்ததாக்க” -குறிப்பாக ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் பேசுவதற்கு லு பென்னை அழைத்ததன் மூலமாக- முயற்சி செய்த சமயத்தில் நிகழ்ந்த இந்த கொலையில், மரின் லு பென்னின் தேசிய முன்னணிக்கும் பிரான்சின் உள்நாட்டு உளவுமுகமைக்கும் நெருக்கமான அதி-வலது குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

அயூப்பின் நடவடிக்கைகளது வரலாறும் போலிசுடன் அவருக்கு இருக்கும் நெருங்கிய தொடர்புகளும், 2015 இல் திணிக்கப்பட்டு முதலில் ஹாலண்டினாலும் பின்னர் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனாலும் மேற்பார்வை செய்யப்பட்ட PS கொண்டுவந்த அவசரகால நிலை சட்டத்தால் ஊக்குவிக்கப்பட்ட அரசியல்சக்திகள், பிரெஞ்சு வரலாற்றின் இருண்ட காலங்களை நினைவுக்குக் கொண்டுவருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

அயூப் 1980களில் “தி கிளான்” (le Klan) என்று அழைக்கப்பட்ட மொட்டைத்தலை (skinhead) குழுவில் மிக செயலூக்கத்துடன் இயங்கியவராவார், எதிரிகளைத் தாக்க பேஸ்பால் மட்டைகளை பயன்படுத்துவதை வழக்கமாய் கொண்டிருந்ததால் ”மட்டைத்தோல்” (Batskin) என்று இவரை அழைப்பார்கள். நீதிபதியின் பிள்ளையான இவர், 1987 இல் JNR ஐ ஸ்தாபித்ததோடு பாரிஸ்-VI பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடங்கினார்.

1990களில் அவரது அரசியல் செயல்பாடுகள் குறைந்திருந்தது, போதைமருந்து கடத்தலுக்காக ஒன்பது மாதங்கள் சிறையில் கழித்தார் (பைக் ஓட்டிகள் விழா ஒன்றின் போது methamphetamines போதைப்பொருள் வைத்திருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்), எல் சல்வடோர், லித்துவேனியா மற்றும் ரஷ்யாவிலும் இவர் வேலை செய்திருந்ததாக கூறப்படுகிறது. JNR இன் இளம் உறுப்பினர்கள் அல்லது அனுதாபிகளைக் கொண்டு செய்யப்பட்ட இன்னும் பல கொலை வழக்குகளிலும் அவரது பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஆயினும் ஒருபோதும் அயூப்பின் குற்றம் உறுதி செய்யப்பட்டதில்லை.

“அயூப் எப்போதும் கொலைகாரரின் தொலைபேசி அழைப்பில் இருக்கும் மனிதன், ஆயினும் எப்போதும் குற்றமற்றவராக வெளியில் வந்துவிடுகிறார்” என்று மெரிக்கின் ஒரு நண்பர் விசாரணையின் போது கூறினார்.

2010 அக்டோபரில், “தொழிற்சங்க சுற்றுவட்டத்துக்குள் நுழைகின்ற” நோக்கத்துடன் “ஒரு ஐக்கியவாத முன்னணிப்படைக்கான மூன்றாவது பாதை” (Troisième Voie, pour une avant-garde solidariste) ஐ அயூப் ஸ்தாபித்தார். JNRக்கும் மீண்டும் செயல்வடிவம் கொடுத்தார். 1960கள் மற்றும் 1970களில் போலவே ஆளும் வர்க்கமானது, நவ-பாசிச காட்சிச்சூழலுக்குள்ளாக, இடது-சாரி இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், தேவைப்பட்டால் அவர்களைக் கொல்வதற்கும் குண்டர்களது ஒரு அடுக்கை தயாரிப்பு செய்துகொண்டிருந்தது.

மெரிக்கின் படுகொலைக்குப் பின்னர், JNR மற்றும் மூன்றாவது பாதையை கலைப்பதற்கான கோரிக்கைகளுக்கு முகம்கொடுத்த நிலையில், அவர் இரண்டு குழுக்களையும் கலைத்து விட்டார்.

ஆயினும் பிரான்சில் உத்தியோகபூர்வ அரசியல் காலநிலை ஒரு கொலையை விசாரணை செய்வதற்கு சாதகமாய் இல்லை, ஏனென்றால் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் அதி வலதை நோக்கிய ஒரு பரந்த நகர்வுக்கு தயரிப்பு செய்து கொண்டிருக்கிறது. மெரிக்கை தாக்கிய நவ-நாஜிக்கள் விடுதலை செய்யப்பட்டனர், இரண்டு வருடங்களுக்குப் பின்னர், பிரான்ஸ் ஒரு அவசரகால நிலைக்குள் நுழைந்திருந்தது.

ஜனநாயக உரிமைகளை இரத்து செய்து போலிசுக்கு முழு அதிகாரங்களை வழங்கியதன் மூலமும், மரின் லு பென்னை ஹாலண்டுடன் பேசுவதற்கு எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்ததன் மூலமும், யூதப்படுகொலை காலத்தில் பயன்படுத்தப்பட்ட குடியுரிமை பறிப்பு தண்டனையை பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் பொறிப்பதற்கு முயன்றதன் மூலமும், PSம் ஹாலண்டும் அதிவலதுகளுக்கு ஒரு சமிக்கை அனுப்பிக் கொண்டிருந்தனர். அதிவலது நிலைப்பாடுகள் முறையானவை மற்றும் அவசியமானவை என்று ஆளும் வர்க்கம் இப்போது கருதுகின்றது.

2016 இல் தொழிலாளர் சட்டத்துக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை கொடூரமாக ஒடுக்கியதன் மூலமாக, PS தொழிலாளர் சட்டம் மற்றும் அது தொடர்பான மக்ரோனின் உத்தரவாணைகள் ஆகியவற்றைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் மீது முன்கண்டிராத சமுகத் தாக்குதல்களை நடத்துவதற்கான மேடை அமைக்கப்பட்டது. வேலைநிறுத்த இயக்கத்தை கழுத்து நெரிக்க தொழிற்சங்கங்களுக்கு அழுத்தம்கொடுப்பதற்காக சமூக ஆர்ப்பாட்டங்களை தடை செய்வதற்கும் கூட PS அரசாங்கம் மிரட்டியது. இப்போது, ஐரோப்பாவெங்கிலும் மேலாதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்ற இராணுவவாதம் மற்றும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை பிரான்சில் திணிப்பதற்கான போலி-சட்டபூர்வ அடித்தளமாக தொழிலாளர் சட்டம் சேவைசெய்து கொண்டிருக்கிறது.

சாட்சிக்கூண்டில் நின்றபடி அயூப் கூறிய வசனங்கள் பிரான்சிலும் அதைத் தாண்டியும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். அரசுக்கு நவ-நாஜிக் குழுக்களுடன் உறவுகள் ஆழமடைந்து செல்வது, வர்க்க உறவிலான ஒரு அடிப்படையான மாற்றத்தின் பகுதியாகும், ஆளும் வர்க்கத்தின் முன்னெப்போதினும் பரந்த பிரிவுகள் கிளெமொண்ட் மெரிக் போன்ற தமது அரசியலுக்கான எதிரிகளுக்கு கொலைபாதகப் படையை ஒரு முறையான பதிலிறுப்பாகக் கருதுகின்றன.