World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Deepa Mehta speaks out against Hindu extremist campaign to stop her film

"What we face is not about religion, it's political"

தீபா மேத்தா அவரது படப்பிடிப்பை நிறுத்தக் கோரும் இந்துத்துவ தீவிரவாத பிரச்சாரத்திற்கு எதிராய் குரல் எழுப்புகின்றார்

''நாம் முகம் கொடுப்பது அரசியலுக்கே அன்றி மதத்துக்கல்ல''

By Richard Phillips
15 February 2000

இந்தியாவில் பிறந்து சர்வதேசரீதியாகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்ககுனர் தீபா மேத்தா, பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமாகச் செயல்படும் இந்துத் தீவிரவாதிகளின் மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதுடன் அவருடைய புதிய படமான ''தண்ணீர்'' (Water) படத்தை உத்திரப்பிரதேசத்ததில் தயாரிப்பதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஐனநாயக முன்னணி அரசாங்கத்தில் பாரதிய ஜனதாவே பிரதான கட்சியாகும். அதுவே உத்திரப்பிரதேசத்தில் அதிகாரத்தில் உள்ளது.

 

தயாரிக்கப்படவுள்ள படமானது இந்து மதத்திற்கும், இந்திய விதவைகளின் மகத்துவத்திற்கும் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சி அரசியல் வாதிகளும் வலதுசாரி இந்து தீவிரவாதிகளும் தலைமை தாங்கிய வர்ணாசி காடையர் கும்பல் படம் தயாரிக்கப்படவுள்ள இடத்தை தாக்கி அழித்தனர். அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாகக் கூறி படத்தயாரிப்பினை ஒரு வாரத்தில் இருதடவைகள் பாரதிய ஐனதா மாநில அரசு இடைநிறுத்தம் செய்ததைத் தொடர்ந்து மேத்தா அந்த மாநிலத்திலிருந்து வாபஸ் பெற்று, வேறு இந்திய மாநிலத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளார்.

 

மேத்தா ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதலை நிராகரித்ததோடு மத அடிப்படைவாத குண்டர்களின் தீவிரவாத பயமுறுத்தல்களின் முன் உறுதியாகவும் நின்றார். இந்தியாவை பற்றிய, மூன்றாவது தொடர்படமான ''தண்ணீர்'' 1930களில் வர்ணாசியின் விதவைகளின் படுமோசமான வாழ்நிலயை விளக்குகின்றது.

 

1996 இல் வெளிவந்த ''நெருப்பு'' (Fire) 1998 இல் வெளிவந்த ''பூமி'' (Earth) ஆகிய இருபடங்களும் இந்து வகுப்புவாதிகளுக்கும் மேத்தாவுக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்தியது. திருமணம் செய்த இரண்டு பெண்களுக்கிடையிலான தன்னினச் சேர்க்கை உறவை விளக்கும் நெருப்பு படம் வெளியிடப்பட்டபோது இந்து தீவிரவாதிகள் கலவர ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டங்களால் பம்பாயிலும் புது டில்லியிலும் பல சினிமா படமாளிகைகளை மூட நிர்ப்பந்தித்து. 1947 இல் பிரித்தானியர் இந்தியாவை துண்டாடியதை குறிக்கும் பூமி வெளியிடப்பட்டபோது அதையும் கண்டித்தது. படத்தை தடை செய்யுமாறு அரசைக் கோரினர்.

 

தண்ணீர் படத்தயாரிப்பு உத்தரப்பிரதேசத்தில் தடை செய்யப்பட்டிருந்தபோதிலும் அந்த படத்தை இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில் படமாக்குவதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அதற்கு அச்சுறுத்தல் இருக்காது எனவும் கூறினார். அவர் கடந்தவாரம் இந்தியாவில் இருந்து உலக சோசலிச வலைத் தளத்தின் (wsws) ரிச்சாட் பிலிப்புடன் பேசினார்.

 

றிச்சாட் பிலிப்ஸ்: கடந்த சில வாரங்களாக நடந்த சம்பவங்களை விளக்குமாறு கேட்பதற்கு முன் தண்ணீர் படத்தை தயாரிக்கும் உங்களது உறுதியை நாங்கள் ஆதரிக்கின்றோம். உத்தரப்பிரதேசத்தில் அதை தடை செய்ததை ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பாரிய தாக்குதலாக கருதுவதோடு படத்தயாரிப்பாளர்களும் கலைஞர்களும் முழு உழைக்கும் மக்களும் எதிர்க்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.

 

தீபா மேத்தா: தங்களுக்கு நன்றி. எங்களுக்கு பல படத் தயாரிப்பாளர்களிடமிருந்தும் மற்றையோரிடமிருந்தும் ஆதரவு கிடைத்து இருக்கிறது. கடந்த வார ஆதரவுக்கு மனதார மதிப்பளிக்கின்றேன். எமக்கு ஆதரவளித்து அறிவிப்புகள் செய்யப்படவுள்ளதாக நாம் அறிகின்றோம். இந்த ஆதரவுகளால் நான் பெருமிதம் அடைகின்றேன்.

 

றிச்சாட் பிலிப்ஸ்: இந்தியாவில் படமொன்றைத் தயாரிப்பதற்கான சட்டரீதியான தேவைகள் தொடர்பாக விளக்குவீர்களா?

 

தீபா மேத்தா: வெளிநாட்டு நிதி உதவியுடன் படமொன்றை தயாரிப்பதாயின் முதலாவதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சுக்கு விண்ணப்பம் செய்யவேண்டும். அத்துடன் கதையின் மூலப் பிரதியையும் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் ஆழ்ந்து அலசி ஆராய்ந்து படமாக்க முடியுமா என தீர்மானிப்பார்கள். பின் அவர்கள் தணிக்கையோடு அல்லது தணிக்கையில்லாமல் அனுமதி வழங்கலாம். இது அரசாங்கத்தின் அனுசரணையுடன், எந்த வழியிலும் இந்தியாவுக்கு குந்தகம் விளைவிக்காது என்பதை உத்தரவாதப் படுத்துவதாகும்.

 

இதன் பின் வெளிநாட்டவர்களின் வருகைக்காக உள்நாட்டு அமைச்சுக்கு "விசா" விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல்கள் அனைத்தும் கொடுத்து அனுமதி வழங்கப்பட்ட பின் அரசு ஒரு தொடர்பு அதிகாரியை நியமிக்கும். அவர் ஒரு அமைச்சு உத்தியேகஸ்தர். வழங்கப்பட்ட மூல பிரதிக்கேற்ப படமாக்கப்படுகிறதா என ஊர்ஜிதம் செய்வதே அவருடைய வேலையாகும். மோசடி ஏதும் நிகழாமல் இருப்பதை அவதானிப்பதற்காக அவரிடம் ஒரு மூலப்பிரதி இருக்கும். படம் இந்தியாவில் வெளியிடப்படும்போது தணிக்கை சபைக்கு கொடுக்கப்படும். அங்கும் தணிக்கை செய்யப்படலாம்.

 

றிச்சாட் பிலிப்ஸ்: இந்தக் கடமைகளை நிறைவுசெய்து நீங்கள் படமெடுக்க ஆரம்பிக்கும் போது இந்து மத அடிப்படைவாதிகள் அவர்களுடைய பிரச்சாரத்தினை ஆரம்பித்தனர். இதைப்பற்றி விளக்க முடியுமா?

 

தீபா மேத்தா: ஆம், தேவையான சகல சட்ட ரீதியான நடைமுறைகளையும் பூர்த்தி செய்தோம். மூலப்பிரதி எந்த விதமான தணிக்கையுமின்றி அனுமதிக்கப்பட்டது. அதன் பின்னர் நாங்கள் படமெடுப்பதற்காக வர்ணாசி சென்றோம்.

 

மாநில அரசிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியம் இல்லை. இருந்தும் நாம் அதைச் செய்யத் தீர்மானித்தோம். நாம் அங்கு படமெடுப்பதை அவர்கள் வரவேற்றார்கள். உத்தரப்பிரதேச அரசு தற்போது படமுதலீட்டை ஊக்குவிக்க முனைகிறது. உலகில் இருந்து பலர் இங்கு வர அவர்கள் விரும்புகிறார்கள். மற்றும் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் உதவுவதாகவும் கூறினார்கள்.

 

தொழில்சார் தகமையில்லாத ஆனால் உத்தரபிரதேச உல்லாசத்துறை அமைச்சரின் கையாள் போன்ற ஒருவர் வர்ணாசிக்கு வந்து படத்தில் தன்னுடைய நண்பர்களை நடிப்பதற்கு பயன்படுத்துவதாக இருந்தால் மட்டும் படத்தை எடுக்கலாம் என்றார். அதற்கு நான், ஏற்கனவே படத்துக்கான பாத்திரங்களை ஒழுங்குபடுத்திவிட்டேன் எனக் கூறினேன். அதற்கு அவர் சரி, ஆனால் அந்த நண்பரின் மனைவியை படத்தில் ஒரு தலைமைப் பாத்திரத்திற்கு பயன்படுத்துவதுடன் இந்த நண்பரை முடிந்த துணையான பாத்திரங்களில் எல்லாம் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டார்.

 

அத்துடன் பட விநியேக உரிமையையும் அதிகார தோரணையில் கேட்டார். அப்போதே பிரச்சனை உச்ச நிலையை அடைந்தது. இறுதியாக நான் அவரைத் துரத்திவிட்டேன். இந்த நிகழ்வின்போது படம் தயாரிக்கும் பணி நான்கு வாரத்தை எட்டியிருந்தது.

 

நான் அவரை போகும்படி கூறி விரட்டிய இரு தினங்களுக்கு பின், நகர் எங்கும் நான் இந்து மதத்துக்கும் புராதன இந்து கலாச்சாரத்துக்கும் இந்து விதவைகளுக்கும் வர்ணாசி மக்களுக்கும் அகெளரவம் சேர்க்கும் வகையில் படம் எடுப்பதாக முணுமுணுக்கத் தொடங்கினார்கள். சில தினங்களில் இது பெரிதாக்கப்பட்டது. எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டு இயக்கப்பட்டது என்பதையிட்டு ஆச்சரியமடைந்தோம்.

 

ஆர்ப்பாட்டத்தின் பின் முதல் தடவையாக மாநில அரசு படத்தயாரிப்பு வேலைகளை இடை நிறுத்தம் செய்யத் தீர்மானித்தவுடன் எனக்கு அனுமதி வழங்கிய அமைச்சரைச் சந்திக்க புதுடில்லி வந்தேன். அவர் எனது நிலைப்பாட்டில் இருந்து அந்தப்படத்தை எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீங்கள் கட்டாயம் அந்தப்படத்தை எடுக்கவேண்டும் எனக் கூறினார். உத்திரப்பிரதேச அரசோ சட்டமும் ஒழுங்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை எனவும், படத்தை எடுக்கக்கூடாது எனவும் கூறியது. இது முற்றிலும் கேலிக்கிடமானது. முதல் நாள் அடிப்படைவாதிகள், திட்டமிட்டு எங்கள் ''செட்களை'' நாசம் செய்தனர். குலச்செல்வங்களை அழிக்கும் நடவடிக்கை இது என நாட்டையே ஆச்சரியப்படுத்தினர்.

 

இரண்டாவது தடவை வர்ணாசி மக்கள் குழப்பமடைந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாகவும் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாகவும் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து போய்விட்டதாகவும் கூறி படத்தை எடுக்க வேண்டாம் என்றது. நாங்கள் படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிதிருந்தோம் எவ்வித எதிர்ப்பையும் கேள்விப்படவில்லை. 10000 பேர் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறினர். நாங்கள் வெளியில் சென்று பார்த்தபோது 12 பேரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவருக்கு எதிராக பொலிஸ் வழக்கு இருப்பது உண்மையே. ஆனால் அவரின் தொழிலே அதுவாகும். அதை அவர் தனது வாழ்க்கை பிழைப்புக்காக செய்கிறார். மக்கள் அவருக்கு காசு கொடுத்து செய்விக்கிறார்கள். அவர் ஒரு நாள் வைத்தியசாலையில் இருந்து விட்டு மறு நாள் வீடு சென்று விடுவார்.

 

றிச்சாட் பிலிப்ஸ்: இந்தப் பிரச்சாரத்துக்கு பின்னணிச் சக்தியாக யார் உள்ளனர்? இதில் மத்திய அரசின் பங்களிப்பு யாது?

 

தீபா மேத்தா: அரசியல் பின்னணி தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பாகவும் தெளிவற்று இருக்கிறேன். ஆனால் மத்திய அரசு இதுவரையில் எனக்கு ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் நடமாடும், பேசும் தணிக்கை சபை என நான் நம்பவில்லை. இது மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையில் உள்ள ஒரு பிரச்சினையாகும். மத்திய அரசாங்கம் எடு என்று சொன்னால் மாநிலம் ஏன் அனுமதிக்கவில்லை? ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரே கட்சியைச் சேந்தவர்கள். இது தேர்தலோடு சம்பந்தப்பட்ட புறஅழுத்தங்களாக இருக்கக்கூடும். இதற்கு பின்ணணியில் மதஅடிப்படை வாதிகள் இருக்கின்றார்கள். இதில் குறிப்பாக உலக இந்து மன்றம் முன்னணி வகிக்கின்றது. இதன் தலைவர் அஷோக் சிங்க்ஹால் தனது பிணத்தின் மீதே இப் படப்படிப்பு தொடரும், போன்ற கூற்றுக்களை கூறியுள்ளார். இவ்வாறு ஒவ்வொருவரும் தம்மைத்தாம் அழிக்கும் முயற்சி ஒரு கலவரச் சூழலை ஏற்படுத்தும் எனவே படப்பிடிப்பை நிறுத்தும்படி மாநில முதல்வரால் எங்களுக்கு கூறப்பட்டது.

 

றிச்சாட் பிலிப்ஸ்: உலக இந்து மன்ற (VHP) தலைவர், அப்படம் இந்தியாவில் எங்கு எடுக்கப்பட்டாலும் தடுப்போம் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் மேலும் தாக்குதலை எதிர்பாக்கின்றீர்களா?

 

தீபா மேத்தா: நாங்கள் வேறு மாநிலங்களில் இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம், அங்கு மேற்கொண்டு பிரச்சினைகள் இருக்காது என நம்புகின்றோம், எப்படியாயினும் இந்தப் படத்தை தயாரிப்பதில் உறுதியாக இருக்கின்றேன்.

 

றிச்சாட் பிலிப்ஸ்: கடந்த சில வருடங்களாக மத அடிப்படைவாதிகளினால் தயாரப்பாளர்களும் கலைஞர்களும் தாக்கப்படுகின்றார்கள். இது எப்போது இருந்து ஆரம்பிக்கப்பட்டது?

 

தீபா மேத்தா: இது கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக மத அடிப்படை வாதத்துடன் எழுச்சியுற்றது. முழு விபரமும் எனக்கு தெரியாது. மூலப்பிரதியை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையில் எல்லோரும் பழகி விட்டோம். நமது விடயம் வேறு, நாம் காடையர்களின் தயாரிப்புக்கு முந்திய தணிக்கை தொடர்பான கோரிக்கைக்கே முகம் கொடுக்கின்றோம். இது சினிமா வரலாற்றில் முன்னொருபோதும் கேள்விப்படாத விடயம். இது, ஒரு எழுத்தாளன் தன்னுடைய புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்னரே அந்த புத்தகம் பற்றிய விமர்சனங்களுக்கு முகம்கொடுப்பதற்கு ஒப்பானாதாகும்.

றிச்சாட் பிலிப்ஸ்: மத அடிப்படை வாதிகள் தண்ணீர் இந்து மதத்தை தாக்குவதாக கூறுகிறார்கள், அத்தோடு நீங்கள் ஒரு படத்தயாரிப்பாளர் என்ற ரீதியில் இந்தியப் பிரச்சினைகளை பயன்படுத்தி பெருந்தொகையான பணத்தை சம்பாதிப்பதாகவும் கூறுகிறார்கள், இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

 

தீபா மேத்தா: இந்த வாதங்கள் முற்றிலும் அபத்தமானவை. அவர்கள் மூலப்பிரதியை வாசிக்காது எவ்வாறு அப்படிக் கூறமுடியும். இங்குதான் பிரச்சினையே இருக்கிறது. அவர்கள் பூமி இந்துமத எதிர்ப்பு படம் எனவும் கூறுகிறார்கள், இதுதான் விநோதமானது. பூமி பிரித்தானியர் இந்தியாவைத் துண்டாடியதன் விளைவாக உருவாக்கப்பட்ட பிரச்சினையை விளக்குகிறது. நீங்களும் அதை பார்த்திருக்கின்றீர்கள், அது எதைப் பற்றியது என்று அறிவீர்கள். நான் நிறைய பணம் சம்பாதிப்பதாக கூறுபவர்கள் எனது வங்கிக் கணக்கை பார்த்தால் தெரியும் அர்த்தம் காண்பதற்கு எதுவும் இல்லை.

 

நீங்கள் ஆடல் பாடல்களுடன் கூடிய அல்லது அனாவசியமான படங்களை எடுத்தால் நீங்கள் நல்லவர். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலையாகும். அது எவ்வளவு மோசமான பலாத்காரம் நிறைந்ததாய், வக்கிரம் மிக்கதாய் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் ஒரு சிந்தனைக்குரிய படத்தை தயாரிக்க விரும்பினால் இந்தியாவின் கலாச்சாரத்தை சீர்குலைப்பதாக நீங்கள் குற்றஞ்சாட்டப்படுவீர்கள். நான் கேட்கிறேன் ஒரு படத்தினால் அழியக் கூடியளவு பலவீனம் கொண்டதா இந்திய கலாச்சாரம்?

 

நான் எடுக்கவிருக்கும் படம் இந்தியாவின் கெளரவத்தை பாதிக்கும் என கூறுபவர்கள், எனக்கு என்ன நடந்திருக்கிறது என்பதையும் விளக்க வேண்டும்; இது இந்தியாவின் கெளரவத்தை பாதிக்காது என்றால், வேறு எது பாதிக்கும் என்பது எனக்கு தெரியாது.

 

றிச்சாட் பிலிப்ஸ்: இந்த படம் இவ்வாறான பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் என நீங்கள் கற்பனை செய்ததுண்டா?

 

தீபா மேத்தா: ஒரு துளிகூட இல்லை. நாங்கள் எல்லாவற்றையும் சட்டத்தின்படி செய்தோம். மூலப்பிரதி சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்டது. நான் எல்லாவற்றையும் மிக அமைதியாகச் செய்தேன். நான் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட நடாத்த விரும்பவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் எடுத்து முடிக்க விரும்பினேன். படம் தயாரிக்கப்பட முன்பு எந்த ஒரு இயக்குனரும் அது சம்பந்தமாக இவ்வாறான விளம்பரத்தை விரும்பமாட்டார்கள். மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இதைச் செய்ய வேண்டாம் என நடிகர்கள் மற்றும் குழுவினர் மேல் எல்லா வகையிலும் அழுத்தங்களை கொடுத்தார்கள். முதலில் எம்மை படத்தை எடுக்க அனுமதியுங்கள். பின்னர் நல்லதா கெட்டதா என தீர்மானியுங்கள் என நான் தொடர்ந்து கூறி வந்தேன்.

 

றிச்சாட் பிலிப்ஸ்: தற்போது படத்திற்கான நிகழ்ச்சி நிரல் என்ன? நீங்கள் இடத்தை தெரிவு செய்து விட்டீர்களா?

 

தீபா மேத்தா: (படப்பிடிப்புக்கு) வருகை தந்தவர்கள் தற்போது இல்லை. ஆனால் நாங்கள் வேறு ஒரு இடத்தை தெரிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். சாத்தியமானவுடன் படத்தை எடுப்போம். நாங்கள் மீண்டும் இணைந்து ஆரம்பிப்பதற்கு மாதங்கள் செல்லலாம். அதிஷ்டவசமாக எனது தயாரிப்பாளர் உண்மையிலேயே என்னுடன் பக்கபலமாக இருக்கிறார். திகைப்படைந்த இந்த நாட்களில் எனக்கு ஆதரவாக இருந்தார். முழு அனுபவங்களும் பயங்கரமாக இருந்த போதிலும் இந்தப் படத்தை நான் தயாரிக்காது விட்டால் குறை கூறப்படுவேன். நான் இது தொடர்பாக மிகவும் உறுதியாக இருக்கின்றேன்.

 

ரிச்சாட் பிலிப்ஸ்: இறுதியாக, இந்த சம்பவங்கள் இந்திய படத்தயாரிப்பாளர்கள் முகம் கொடுக்கும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதை அறிவிக்கின்றன என நீங்கள் கருதுகின்றீர்கள்?

 

தீபா மேத்தா: நீதிவிசாரணையின் போது என்ன நடந்தது என்பது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் கோட்பாட்டு விளக்கம் இருக்கிறது. நீங்கள் வரலாற்று நூல்களில் அதை வாசிக்கலாம். கடந்த வாரங்களில் நாம் செய்தவைகள், அந்த அனுபவங்களூடாக வாழ்வதைப்போலவே இருந்தது.

இதன் அரசியல் அர்த்தம் என்ன? அது நாசிசத்தைப் போன்று மிகவும் பயங்கரமானது. ஜனநாயக உரிமைகள் தொடர்பாக நிறைய கேள்விகளை எழுப்புகிறது.

 

திரைப்படங்களின் தாக்கத்தினை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்; உண்மையில் திரைப்படம் ஒரு மிகசக்தி மிக்க சாதனம் என்பதாலேயே இதை நான் காண்பிப்பதை நிறுத்துவதற்கு இப்படியான எல்லா சக்கதிகளையும் அணிதிரட்டுகிறார்கள்.

 

நான் இந்து மதத்தை தாக்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். அது அபத்தமானது. நானும் ஒரு இந்து. நான் அறிந்த இந்து மதம் எந்தச் சந்தர்ப்பத்திலும் சகிப்புத்தன்மையையே வலியுறுத்துகின்றது. கடந்தவாரம் எனது படத்தை தடைசெய்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கும் நான் அறிந்த இந்து மதத்திற்கும் இடையில் பாரிய முரண்பாடு இருக்கின்றது. நிச்சயமாக நாங்கள் முகம் கொடுப்பது அரசியலுக்கே அன்றி மதத்துக்கல்ல.



 


வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.

Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved