Support the Socialist Equality Party in the 2004 US elections

2004 அமெரிக்கத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை
28 April 2004

Use this version to print | Send this link by email | Email the author | Font Download

ஜனாதிபதி பதவிக்கு
பில் வான் ஓகென்

துணை ஜனாதிபதி பதவிக்கு ஜிம் லோரன்ஸ்

சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 தேர்தல் அறிக்கையை கீழே வெளியிடுகின்றோம். இது முதலில் பெப்ரவரி 4, 2004 அன்று தமிழில் வெளியிடப்பட்டது. ஜோன் கெர்ரி ஜனநாயகக் கட்சியின் ஊகிக்கக் கூடிய ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை கணக்கில் கொண்டு இது மறு ஆய்வு செய்து திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியானது எமது ஆதரவாளர்களையும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களையும் 2004 தேர்தல்களில் சுதந்திரமான சோசலிச பிரச்சாரத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கின்றது. ஜோன் கெர்ரிதான் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அநேகமாக உறுதியாகிவிட்ட நிலை, நிலவும் இரு கட்சி முறை எவ்வாறு அமெரிக்காவின் பெருநிறுவன-நிதி ஆதிக்க ஒருசிலவரது ஆட்சிக்கு முற்றிலும் அடிபணிந்து நிற்கிறது என்பதை மீண்டும் விளக்கிக் காட்டியுள்ளது. பெருவணிகத்தின் அனுபவம் நிறைந்த நம்பிக்கைக்கு உகந்த பிரதிநிதியாக விளங்கும், மாசாச்சுசெட்ஸ் செனட் உறுப்பினர் தொழிலாள வர்க்கத்திற்கு எதையும் கொடுக்கக் கூடியவர் அல்ல. அவர் வாதிடும் கொள்கைகளில், ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கு, கெர்ரி மாற்று ஏதும் கொடுக்கவில்லை. இவர் அளிக்கும் "மாற்றம்" அதிகபட்சத்தில், செயல்முறை பாணியே அன்றி பொருளடக்கத்தில் இல்லை.

புதிய அமெரிக்கப் பேரரசை நிறுவுவதற்கு ஆளும் செல்வந்த தட்டினாலான உந்துதலுக்கு முதற்படியில் இருக்கும் ஈராக்கின் அனைத்து முக்கியமான பிரச்சினையிலும், முற்றுகைக்குட்பட்ட அந்த நாட்டை தொடர்ந்து ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு மக்களை இராணுவ முறையில் கடுமையாக அடக்கவேண்டும் என்பதற்குச் சிறிதும் தளர்வுறா ஆதரவைத்தான் கெர்ரி அறிவித்துள்ளார். போரை எதிர்த்த மில்லியனின் கணக்கிலான அமெரிக்கர்கள் இரு கட்சி அரசியல் முறையினால், ஆளும் செல்வந்தத் தட்டின் அரசியல், நிதி நலன்களுக்கு எந்தவித தீவிர சவாலும் விட இடமில்லாத வகையில், வாக்குரிமை பறிக்கப்பட்டவர்களாகி இருந்து வருகின்றனர்.

ஜனாதிபதி பதவிக்காக பில் வான் ஒகெனும், துணை ஜனாதிபதி பதவிக்காக ஜிம் லோரன்சும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களாக நிற்பவர்கள்தான் 2004 தேர்தலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேலைத் திட்டத்திற்கு ஒரு புரட்சிகர மாற்றை முன்வைக்கும் வேட்பாளர்கள் ஆவர். அவர்களும், தேசிய சட்ட மன்றத்திற்கு நிற்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களும் உழைக்கும் மக்களின் நலன்களை காக்கவும் போர், சமூக பிற்போக்கு, ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் ஆகியவற்றை எதிர்க்கவும் ஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் பேரில் போட்டியிடுகின்றனர்.

54 வயது நிரம்பிய பில் வான் ஒகென், உலக சோசலிச வலைத் தளத்தின் முழுநேரக் கட்டுரையாளர் ஆவார்; அமெரிக்க, சர்வதேச தொழிலாளர்கள் போராட்டத்தில் இவர் பங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. இவர் நியூ யோர்க் நகரத்தில் வசிக்கிறார். 65 வயதான ஜிம் லோரன்ஸ் ஒரு ஓய்வு பெற்ற கார் தொழிலாளி ஆவார், இவர் டேய்ரன், ஓஹியோவில் ஜெனரல் மோட்டார்ஸ் உற்பத்திக் கூடத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலைபார்த்தார். United Auto Workers Local 696 என்பதின் உறுப்பினராக இருந்து, தேசிய சட்டமன்றத்திற்கு சோசலிச வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம், அமெரிக்காவிலிருக்கும் உழைக்கும் மக்களுக்கு மட்டும் அல்லாமல், சர்வதேச அளவிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதுகாறும் இல்லாத அளவிற்கு அமெரிக்க இராணுவவாதம் வெடிப்புப் பெற்றுள்ள நிலையின் பின்னணியிலும், உலகில் மற்ற பகுதிகளில் இருக்கும் அரசாங்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில் அமெரிக்க தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் இத்தேர்தல் நடைபெறுகிறது.

ஈராக்கிய படையெடுப்பின் வெற்றி, மத்திய கிழக்கிற்கும் அமெரிக்காவுக்கும் மட்டுமின்றி உலக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனை ஆகும். வியட்நாமில் இருந்து பின்வாங்கிய பின்னர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு, ஒளிவு மறைவு இல்லாத காலனித்துவ வாதத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, ஒரு சுதந்திரமான நாட்டின் மீது, அதன் மக்களை அடிமைப்படுத்தவும் அதன் எண்ணெய் வளங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், படையெடுத்து, அதை ஆக்கிரமித்துள்ளது. இந்தக் குற்றஞ்சார்ந்த நடவடிக்கை வெறும் "புஷ்ஷின் போர் மட்டும்" அல்ல. இதற்கு மிகப் பெரிய ஒப்புதலை அமெரிக்க அரசியல் செய்தி ஊடக நிறுவனம், தாராளக் கொள்கையினர் பழமைவாதிகள் என அனைவரும் ஒரேமாதிரியாக கொடுத்துள்ளனர். உதாரணமாக, "தாராளக் கொள்கை" உடைய நியூ ஜோர்க் ரைம்ஸ் ஏப்ரல் 25ம் தேதி வெளியிட்டுள்ள தலையங்கம் சுன்னி மற்றும் ஷியா ஈராக்கியர்களின் கூட்டு எழுச்சியை அடக்க பல்லாயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்கள் அனுப்பப்படவேண்டும் என்றும், "இது பின்வாங்குவதற்கான நேரம் அல்ல; அரைகுறை நடவடிக்கைகள் எடுப்பதற்கான நேரமும் அல்ல" என்று அறிவித்துள்ளது.

ஈராக்கிற்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் தரைப்பகுதியில் அல்லது அமெரிக்க தாக்குதலை எதிர்ப்பவர்களின் அரசியல் கருத்தியலில் மட்டும் இல்லை; அவை படையெடுத்துள்ளவர் கையாளும் வழிவகையிலும் இருக்கின்றன. ஒரு தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டின் உயர்தர ஆயுதங்களை, ஒரு ஒடுக்கப்பட்ட முன்னாள் காலனித்துவ நாட்டில் எதிர்ப்பை அழிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் மீண்டும் பயன்படுத்திவருகிறது. மீண்டும் அமெரிக்க அதிகாரிகள் "கொலைக் களங்களை" ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு வரும் எந்த நகரத்திலும் அல்லது கிராமத்திலும் தோற்றுவிக்க உறுதிகொடுக்கின்றனர்; அதேவேளை "ஜனநாயகம்", "சுதந்திரம்" என்ற பெயரில் தங்களுடைய காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தி வருகின்றனர். உண்மையில் இப்போர் எந்த ஜனநாயக கருத்துக்களையும் கலந்து ஆலோசிக்காமல் பொய்களின் அடிப்படையிலும், தூண்டுதல்கள் பேரிலும் தொடக்கப்பட்டது ஆகும். அமெரிக்க மக்கள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மற்றும் குருதி சிந்தும் வன்முறையின் பெருக்கத்தை எதிர்க்க வேண்டும், இரண்டாம் உலகப் போருக்குப் பின் எவ்வாறு ஜப்பானிலும் ஜேர்மனியிலும் ஆட்சியாளர்கள் அதற்குப் பொறுப்பேற்க வைக்கப்பட்டது போல, ஈராக்கில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனத்திற்கான பொறுப்பை முழு ஆளும் வர்க்கத்தையும் ஏற்க வைக்கவேண்டும்.

அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், புஷ் நிர்வாகமானது அமெரிக்க கொள்கையின் திசைவழியில் ஒரு புதிய மற்றும் தீய திருப்பத்தைக் குறிக்கிறது என்று உணர்கின்றனர். அவரது பயங்கரவாதத்தின் மீதான போர் என்று அழைக்கப்படுவதுடன், புஷ் சர்வதேச அரசியலை அதிக அளவில் உறுதியிழக்க வைக்கும் மற்றும் உலகளாவிய முறையில் வன்முறை பேரழிவுகரமாக வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் ஒரு போக்கை தொடங்கி இருக்கிறார்.

இதை எதிர்த்துப் போராடும் வழியை தேடுபவர்கள் ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரத்தில் அதனை காணமாட்டார்கள். புஷ்ஷைப் போலவே, கெர்ரியும், ஜனநாயகக் கட்சியினரும் முற்றிலும் இராணுவவாதக் கொள்கையுடன் தங்களை பிணைத்துக் கொண்டு, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் கைப்பற்றுதல்கள் தோல்வியில் முடிவடைய விடக்கூடாது என்றும், தேவையானால் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" இன்னும் கூடுதலாக வளங்களை அர்ப்பணிப்பதாகவும் உறுதிபூண்டுள்ளனர்.

2004 தேர்தல் பிரச்சாரம் இரு தனித்தனியான தளங்களில் கட்டவிழ்கின்றது. அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டிற்குள்ளே, மிகக் கடுமையான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இலாபமுறையின் முரண்பாடுகள் எளிதில்கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த உட்பூசல்களின் கடுமை தீவிரமாகியிருக்கிறது. ஆனால் இது, சில உடன்பாடு காணப்பட்ட இலக்குகளை அடைய எந்தவழிகளில் பில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட வேண்டும் மற்றும் எந்த நபரை பயன்படுத்தப்படவேண்டும் என்பது பற்றிய செல்வந்தத் தட்டிற்குள்ளே நடக்கும் போராட்டம் ஆகும்.

புஷ்ஷைப்பற்றிய அவரது விமர்சனங்கள் என்னதான் இருப்பினும், கெர்ரியின் வேறுபாடுகள் அடிப்படையில் தந்திரோபாயம் சம்பந்தப்பட்டவை ஆகும். பொறுப்பற்ற தன்மையில் புஷ் மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் மேற்கொண்டுள்ள படையெடுப்புக்கள் வெற்றிகரமாக முடிவிற்குக் கொண்டுவரப்படவேண்டும் என்றால், சர்வதேச ஆதரவைத் திறமையுடன் திரட்டும் ஒரு புதிய நிர்வாகம் தேவை என்றும், அந்த நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு அத்தகைய போர்களுக்கு அதிகரித்த அளவில் தேவைப்படும் வாழ்க்கைத் தரச் சரிவுகள், இரத்தத் தியாகங்கள் ஆகியவை "நியாயமானவை" என்ற பிரமையை வழங்கக் கூடியதாக இருக்கவேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.

புஷ் நிர்வாகத்தின் மிக வெறுக்கத்தக்க பண்பியல்புகளுக்கு பதிலடியாக தேர்தல்களைப் பயன்படுத்தவேண்டும் என்று பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் விரும்புகின்ற நிலயில், ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரமோ ஆளும் செல்வந்தத்தட்டிற்காக முக்கிய பங்கை ஆற்ற சேவைசெய்கிறது; அதாவது "புஷ்ஷைத் தவிர வேறு எவரும்" என வேட்பாளரை தேர்வு செய்தல் சிறப்பான நிலைமைக்கான உண்மையான மாற்றம் என அர்த்தப்படுத்தும் என்ற போலித் தோற்றத்தை பரப்புவதற்கு சேவை செய்கிறது. ஆயினும், கெர்ரியின் வெற்றி, பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு ஒரு வெற்றியாகாது, மாறாக அது இருகட்சி முறைக்கும் மக்களின் அதிருப்தியை பாதுகாப்பான அரசியல் வழிவகைகளில் திசைதிருப்புவதற்கான அதன் பங்கிற்குமான வெற்றியாகத்தான் இருக்கும்.

இந்தப் பிரச்சாரத்தை தொடக்குவதில் சோசலிச சமத்துவக் கட்சியானது முற்றிலும் உண்மையான நடைமுறையைத்தான் கொண்டுள்ளது. இப்பொழுதுள்ள நிலைமையில் எமது வேட்பாளர்களுக்கு மிகக் குறைந்த வாக்குகள்தான் கிடைக்கும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் எங்களுடைய நோக்கம், அமெரிக்காவிற்குள்ளும், சர்வதேச அளவிலும் அரசியல் விவாதத்தின் தரத்தை உயர்த்துவதே ஆகும்; இறுகப்பிடித்துள்ள வலதுசாரி முதலாளித்துவ அரசியலை உடைத்து, நடைமுறையிலுள்ள அரசியல் கட்சிகள், செய்தி ஊடகங்கள் இவற்றின் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் பொய்களுக்கும் ஒரு சோசலிச மாற்றை முன்வைப்பது ஆகும். எங்கள் பிரச்சாரம் வாக்குகளைப் பற்றியது அல்ல. அது கருத்தியல்களையும், கொள்கைகளையும் பற்றியது ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்தத் தேர்தல்களை, சமூக, அரசியல் நெருக்கடி பற்றிய ஆழ்ந்த விவாதத்தை வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தும் மற்றும் அமெரிக்க சமுதாயத்தின் ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்காக ஒரு பெரும் மக்கள் இயக்கத்தை கட்டி அமைப்பதற்குத் தேவையான வேலைத்திட்ட அடித்தளங்களை அமைக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி இந்தப் பிரச்சாரத்தை வெறும் தேசிய அளவில் அல்லாது சர்வதேச அளவில் நடத்த விரும்புகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் கடைப்பிடிக்கும் கொள்கைகளினால் ஆழமாக மற்றும் அழிவுகரமாக பாதிப்பிற்குட்டுள்ள, உலகம் முழுவதும் இருக்கின்ற அடக்கப்பட்டுள்ள, பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்களின் நலன்களைப் எங்கள் பிரச்சாரம் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்காவின் உலகளாவிய தாக்கம் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களும் இத்தேர்தலில் கலந்து கொள்வது முற்றுமுழுதாக பொருத்தமானதாகும். இது இதுவரையில் சாத்தியமில்லாது இருப்பதால், சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மத்தியிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அதன் வர்க்க சகோதரர், சகோதரிகள் மத்தியிலும் ஒரு சர்வதேச ஒன்றிணைப்பிற்கான உணர்வினை அபிவிருத்தி செய்வதற்காக இத்தேர்தலை பயன்படுத்துவர்.

சர்வதேச ஐக்கியத்திற்கான இந்தப் போராட்டத்தை எமது பிரச்சாரத்தின் மிகவும் முக்கியமான பணியாக நாங்கள் கருதுகிறோம். சகலவிதமான பிற இன பழிப்புவாதத்தையும் மற்றும் மத, இன அல்லது தேசிய அடையாளத்தை அடித்தளமாக கொண்டு பிற்போக்குவாதத்திற்கு அழைப்புவிடுவதையும் எதிர்ப்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான உலகந்தழுவிய இயக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சிக்கு இன்றியமையாதது ஆகும்.

அத்தகைய மாற்றீடு தேவையென உணர்பவர்கள் அனைவருக்கும் நாங்கள் கூற விரும்புவதாவது: இன்றே சோசலிச சமத்துவ கட்சியுடன் தொடர்பு கொள்ளுங்கள், எமது வேட்பாளர்களை, உங்கள் மாநிலத்தில் வாக்குச் சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு ஏதுவாக கையெழுத்து இடுங்கள், உங்களுடைய தேசிய சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளரை நிறுத்துவதற்கு உடன்படுவதன் மூலம் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் கொள்கைகளுக்காக பாடுபடுங்கள்!

நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள்

புஷ்ஷை ஆட்சியிலிருந்து அகற்றி விடுவதன்மூலம் உழைக்கும் மக்களை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புவது ஒரு பிரமை ஆகும். இறுதிஆய்வில், புஷ் நிர்வாகம், சமூக பொருளாதார நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வைக் காணாதது ஒருபுறம் இருக்கட்டும், அறிவார்ந்த தீர்வு இல்லாத அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் நம்பிக்கை இழந்த, நோக்கு நிலை தவறிய, மூர்க்கத்தனத்தின் அரசியல் வெளிப்பாடும் ஆகும். புஷ்ஷும் அவருடைய சகாக்களும் இந்த செல்வந்தத் தட்டிற்குள்ளே உள்ள மிகத் தீய, பிற்போக்கான, ஏன் குற்றஞ்சார்ந்த சக்திகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் நவம்பர் மாதம் வெளியேற்றப்பட்டாலும், அவர்களுக்குப் பதிலாக கெர்ரியும் ஜனநாயகக் கட்சியினரும் பதவியில் இருத்தப்பட்டாலும், அது வன்முறையும், அழிவையும் கொடுக்கும் அமெரிக்க முதலாளித்துவத்தின் வளைவரை பாதையை (போக்கை) அமெரிகாவிற்குள்ளோ அல்லது சர்வதேச ரீதியிலோ கணிசமாக மாற்றப்போவதில்லை.

ஜனநாயகக் கட்சி ஒருவேளை வெற்றிபெற்றால், பிரச்சார நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், தேர்தல் நேர அரசியல் ஏமாற்றுத்தன கூறுகள் என்றும் பயனற்ற பேச்சுக்கள் என்றும் விரைவில் அம்பலப்படுத்தப்பட்டுவிடும். ஜனாதிபதி கெர்ரியும் அதே பெருநிறுவன நலன்களுக்குத்தான் அடிபணிந்து துணைக் கருவியாய் இருப்பார் மற்றும் உலக ஆதிக்கத்திற்கான அதே ஏகாதிபத்திய மூலோபாயத்தைத்தான் பின்பற்றுவார்.

அமெரிக்க கொள்கையில் அடிப்படையான, முன்னேற்றகரமான திருப்பம் என்பது வெறுமனே ஆட்சி புரியும் தனிநபர்களில் ஏற்படும் மாற்றம் அல்ல, மாறாக அமெரிக்க மக்கள்மீது பெருவர்த்தக நலன்கள், பெரும் அளவில் தனியார் செல்வம், இலாப அமைப்புமுறை இவை அனைத்தாலும் செய்யப்படும் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு சமூகப் புரட்சிதான் தேவையாகும்.

அத்தகைய ஒரு தீவிர மாறுதலுக்கான தேவை, அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியின் தன்மையிலும் ஆழத்திலும் இருந்து ஊற்றெடுக்கிறது; இதன் காரணங்களாவன:

1.தேசிய- அரசு முறை சிதையத் தொடங்கியுள்ளது: உலகப் பொருளாதாரம் இதுகாறும் இல்லாத அளவிற்கு ஒருங்கிணைந்தும் ஒன்றை ஒன்று சார்ந்திருத்தலும் -பூகோளமயமாக்கல் என அழைக்கப்படும் நிகழ்வுப்போக்கு- முதலாளித்துவம் அடிப்படையாகக் கொண்டிருக்கும் தேசிய-அரசு அமைப்பு முறையுடன் இயைந்து இருக்கமுடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறைவெடிப்பு, புஷ் நிர்வாகத்தின் முன்கூட்டிய போர் என்ற கொள்கை விளக்கம் மூலம் வெளிப்பட்டுள்ளது, உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசுக்கும் இடையிலான முரண்பாட்டை, ஒரு நாட்டின், அமெரிக்காவின், மேலாதிக்கத்தை ஏனைய நாடுகளின்மீது நிறுவும் முயற்சியின் மூலம் தீர்த்துவைக்கும் தணியா முயற்சியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

2. இலாபநோக்கிற்கான உந்துதலும் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை சுரண்டுதலும்: தொழிலாள வர்க்கத்தின் சமூக அந்தஸ்தில் ஏற்பட்ட உலக ரீதியான வீழ்ச்சியானது, மலிவான விலையில் மூலப்பொருட்களுக்காகவும், குறைந்த கூலிகளுக்காவும் பூகோளம் முழுதும் தேடி அலையும், நாடுகடந்த நிறுவனங்களின் தோற்றத்தோடு பிணைந்துள்ளது. தொழில் நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள், வேலைகள் மிகக்குறைந்த ஊதியங்களைக் கொண்டுள்ள மற்றும் மிகவும் ஈவிரக்கமற்ற சுரண்டுதல் மட்டங்கள் உள்ள எந்த இடங்கள் உயர்ந்த இலாப வீதத்தை சாத்தியமாக்குகிறதோ, அந்த இடங்களில் வேலை வாய்ப்புக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த கசப்பான பூகோள முதலாளித்துவ அபிவிருத்தி நிகழ்ச்சிப்போக்கின் அமெரிக்க தொழிலாளர்கள் மீதான நேரடித் தாக்கம் வேலை இழப்புக்களும் ஊதியங்களில் ஏற்பட்ட சரிவும் ஆகும்.

உற்பத்திமுறையின் அதிகரித்த அளவிலான பூகோள தன்மை, ஒரு சாத்தியமான முற்போக்கான வளர்ச்சியை உள்ளடக்கியுள்ளது. அது உலகம் முழுவதும் வறுமையை அகற்றவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மனிதனுடைய உற்பத்தி சக்திகளை அறிவார்ந்தமுறையில் விரிவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான சாத்தியத்தைத் திறந்துவிடுகிறது. ஆனால் தொழில்துறை, நிதி இவற்றின் முதலாளித்துவ தனிச்சொத்துடைமையின் கட்டமைப்பிற்குள்ளே, பூகோளமயமாக்கலானது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரானதாக ஆகிறது.

பழைய தொழிலாளர் அமைப்புக்களின் நோக்குநிலை (தகவமைவு) - தேசிய தொழிலை காத்தல் மற்றும் தேசிய தொழிலாளரின் சந்தையை காத்திடல் போன்றவை, பூகோளரீதியாக ஒருங்கிணைந்த உற்பத்தி மற்றும் இதுகாறும் இல்லாத அளவு மூலதன நகர்வு ஆகியவற்றால் கீழறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள AFL-CIO உள்பட, இந்த அதிகாரத்துவ எந்திரங்களுடைய பாத்திரமானது தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக வேலைகொடுப்போருக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுப்பதிலிருந்து, மூலதனத்தை ஈர்ப்பதற்காக வேலைகொடுப்போருக்கு சலுகை வழங்குவதற்கு தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக மாறியுள்ளது. தேசிய வேலைத் திட்டத்தின் நலன்களுடன் இரண்டற கலந்துள்ள, இந்த அமைப்புக்கள், அடிப்படையிலேயே பிற்போக்கான பங்கைத்தான் ஆற்ற முடியும்.

தங்களுடைய வேலைகள், ஊதியங்கள், வேலைநிலைமைகள் இவற்றைக் காப்பாற்றிக்கொள்ள, அமெரிக்கத் தொழிலாளர்கள், அனைத்துவிதமான பொருளாதார தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் இவற்றை நிராகரிக்கவேண்டும்; இவை அவர்களை அவர்களுடைய பெருவர்த்தக முதலாளிகளுக்கு பணிந்து நடக்கச் செய்வதோடு, மற்ற நாடுகளில் உள்ள அவர்களுடைய வர்க்க சகோதர, சகோதரிகளிடமிருந்து பிரித்தும் வைக்கிறது- மேலும் நாடுகடந்த நிறுவனங்களின் பூகோள மூலோபாயத்திற்கு எதிராக தங்களின் சொந்த பூகோள மூலோபாயத்தை வைக்க வேண்டும். தொழிலாளர்கள் தங்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதற்கான தங்களின் போராட்டங்களை சர்வதேச ரீதியாக போராடும் தொழிலாளர்களின் போராட்டத்துடன் ஒருங்கிணைக்க அவர்கள் நனவுபூர்வமாக கட்டாயம் முயற்சிக்க வேண்டும், அனைத்து நாடுகளிலும் இருக்கும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு, ஒரு பொதுவான முதாலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும்.

3. சமூக சமத்துவமற்ற நிலையின் வளர்ச்சி: உலகத்தின் 5.5 பில்லியன் மக்கட்தொகையில் பெரும்பான்மையானவர்களுடைய நலன்கள், இலாப உந்துதலுக்கு கீழ்ப்படுத்தப்பட்டுள்ளன, இந்த இலாப உந்துதல் சமூகத்தின் மிகமிகச் சிறிய அளவிலானோரின் நலன்களை பெருக்கிக் கொள்ளத்தான் பயன்டுகிறது. கடந்த இருபது ஆண்டுகளான சமூக சமத்துவமின்மையின் மிக அதிக அளவிலான அதிகரிப்பு முதலாளித்துவத்தின் விரும்பத்தகாத இயல்புகளில் ஒன்று மட்டும் அல்ல. மாறாக, அமெரிக்காவிலும் மற்றும் அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளின் அதிக பணக்காரராக இருக்கும் உயர்மட்டத்தின் 1 சதவிகிதத்தினரிடம் பாரியளவிலான அளவு செல்வக் குவிப்பு, ஒட்டுமொத்த சமூக பொருளாதார முறையையும் சிறப்பான முறையில் செயலாற்ற விடாமல் செய்வதில் ஒரு பிரதான காரணி ஆகும்.

வேலைகள், சுகாதார நலன், கல்வி, வீட்டு வசதி ஆகியவை எந்த அளவு தீவிரமான பிரச்சினைகளாக இருந்தாலும், சமூக நெருக்கடிகளை தீர்த்துவைக்க திட்டமிடப்படும் முடிவுகள் ஏற்கப்படுவதும், மறுக்கப்படுவதும், எந்த அளவிற்கு செல்வந்தர்களின் தனிச் சொத்துரிமையை அவை தாக்காமல் இருக்கும் என்ற அடிப்படையில் முடிவு எடுக்கப்படுகிறது. அனைத்து, அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவுகள் எல்லாமே, பின்வரும் சூத்திரத்தின் அடிப்படையில்தான் இருக்கும்: செல்வந்தரின் செல்வக் கொழிப்பைப் பெருக்கும் முடிவுகள் அனைத்தும் நல்லவையே. தனிப்பட்டோர் செல்வக் குவிப்பிற்கு எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ, அவை தீயவை, முடிந்தால் அவை சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்பதாகும்.

4. முதலாளித்துவத்தின் அராஜகம்: ஒரு சிக்கல் வாய்ந்த பெரும் சமூகத்தினால் தோன்றியுள்ள விரிவடைந்து வரும் சமுதாயத்தேவைகள் அனைத்தும், உற்பத்தி சக்திகளின் தனிச் சொத்துடைமை மற்றும் தடையற்ற தனியார் செல்வக் குவிப்புமுறை இவற்றின் கட்டமைப்பிற்குள், நிறைவேற்றப்பட முடியாதவை ஆகும். மனிதகுலத்தின் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்பம் இவை விஞ்ஞான ரீதியாகவும், சமுதாய நோக்கிலும் பயன்படுத்தப்படவேண்டியதற்கான தேவை -இது இல்லாததால் மனித நாகரிகம் உயிர்பிழைத்திருப்பதையே அச்சுறுத்துகின்ற நிலையில்- நனவான முறையில் இலாப நோக்கை, மனிதாபிமான, ஜனநாயகபூர்வமான மற்றும் அறிவார்ந்த சமூக திட்டமிடலுக்கு கீழ்ப்படுத்தும் வரலாற்றுப் பணியை முன்வைக்கிறது -அதாவது, முதலாளித்துவத்தை அகற்றி அதனிடத்தில் சோசலிசத்தை இடம்பெறச் செய்வதாகும்.

இந்தப் போராட்டத்தை வழிநடத்திச் சென்று, சோசலிசத்தின் அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை நிறுவக்கூடிய ஆற்றல் படைத்த சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான். இன்றைய மிகப்பெரிய மக்கட்திரள் நிறைந்த, உலகமயமாக்கப்பட்ட சமுதாயத்தில், தொழிலாள வர்க்கம் மிக அதிகமான வறுமையில் வாடும் தொழிலாளர்களையும் விட அல்லது தொழிற்சாலையில் பணி புரிபவர்கள் என்பதையும் விட பரந்த தட்டுகளை அணைத்து நிற்கிறது. வெள்ளைக் காலர் வேலைபுரிபவர்கள், கல்லூரிப்படிப்பு முடித்த தொழில் வினைஞர்கள், கலை, பண்பாட்டு புலத்தில் பணிபுரிபவர்கள், சுருக்கமாகக் கூறினால் எவரெல்லாம் ஊதியக் காசோலையை நம்பித்தான் வாழவேண்டியிருக்கின்றனரோ, அவர்கள் எல்லாரும் தொழிலாள வர்க்கத்தின் பகுதியினரே ஆவர். ஆசிய, இலத்தின் அமெரிக்க, ஆபிரிக்க கண்டங்களின் பழைய குடியேற்றங்களில், நூற்றுக் கணக்கான மில்லியன் விவசாயிகள் நகரத்திற்குள் கொண்டுவரப்பட்டு ஆலைகளிலும், மாடாய் உழைப்பதற்கு, பாரிய நாடுகடந்த நிறுவனங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு- தொழிலாள வர்க்கத்தின் அணிகளை எண்ணிக்கை ரீதியாக பரந்த அளவில் விரிவடையச்செய்திருக்கிறது மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அதன் சமூக எடையை அதிகரித்திருக்கிறது.

இந்த பில்லியன் கணக்கிலான ஊதியம் சம்பாதிப்பவர்கள், அதேபோல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் அனைவருமே, மகத்தான முறையில் தொழில்துறை மற்றும் நிதிமூலதனத்தை கட்டுப்படுத்தும் மிகச்சிறிய செல்வந்தத் தட்டின் தயவில்தான் இருக்கின்றனர். நாம் "பங்குதாரர் ஜனநாயகத்தில்" வாழ்ந்து கொண்டிருகிறோம் என்பது மோசடியான கூற்று ஆகும். முந்தைய காலகட்டத்தில், முன்னேற்றகரமான சீர்திருத்தங்கள் உத்தியோகபூர்வ அரசியலின் முறைமையான பகுதியாகக் கருதப்பட்ட பொழுது, உற்பத்தி சக்திகளை ஏகபோக உரிமைக்கு உட்படுத்திக் கொள்ளுதல் ஜனநாயக முறைக்கு விரோதமாக கருதப்பட்டதுடன், பாரிய கூட்டுநிறுவனங்களையும், சிறு எண்ணிக்கையானோர் சொத்துக்களை குவிப்பதையும் உடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இத்தகைய கொள்கைகள் அனைத்து வகைப்பட்ட அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியல்வாதிகளாலும் நீண்டகாலமாகவே கைவிடப்பட்டு விட்டன.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் கீழ், பொருளாதார வாழ்க்கையை பாரிய பரந்துபட்ட மக்களுடைய நலன்களுக்கு ஏற்ற முறையில் மறு ஒழுங்குசெய்ய வேண்டிய பொறுப்பு தொழிலாள வர்க்கத்திடம் வந்திருக்கிறது. இதற்கு முன் கட்டாயத்தேவையாக இருப்பது, நிதித்துறை, தொலைத்தொடர்புத்துறை, தகவல் தொழில் நுட்பம், மருந்துத்துறை, மின்சார, போக்குவரத்து அல்லது அமெரிக்கா அல்லது உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வைப் பாதிக்கும் பொருளாதார வாழ்வின் எந்தத் துறையாயினும் சரி, அவற்றின் மீதான பெருந்திரளான மூலதனக் குவிப்பின் மீது ஜனநாயக ரீதியான மற்றும் பொதுக் கட்டுப்பாட்டினை நிறுவுவதாகும்.

2004ம் ஆண்டின் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு புதிய பெரும் மக்கள் அரசியல் இயக்கத்தின் மூலம், பிற்போக்கான மற்றும் திவாலாகிவிட்ட பெருநிறுவன அமெரிக்க கட்சிகளுக்கு ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைக்கும் வகையில் தலையீடு செய்கிறது. இந்த இயக்கத்தின் இலக்கு, முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் மேலாதிக்கத்திற்கு கட்டாயம் முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கவேண்டும் என்பதும், ஒரு தொழிலாள வர்க்கத்தின் அரசாங்கத்தை நிறுவவேண்டும் என்பதும் ஆகும்; இத்தகைய அரசாங்கம் உழைக்கும் மக்களுடைய பொருளாதார மற்றும் சமூக நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்பதுடன், அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகள் மீதாக அவர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை பரந்த அளவில் விஸ்தரிக்கும். தொழிலாள வர்க்கத்தின் மீதான ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் செல்வாக்கை உடைக்க நாங்கள் விரும்புகிறோம். எங்களுடைய பிரச்சாரத்தின் இலக்கு, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதும் கல்வியூட்டுவதும் ஒரு வர்க்க நனவான மற்றும் அரசியல் ரீதியாய் ஒரு சுயாதீனமான சக்தியாக மாற்றுவதும் ஆகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் போரும்

2004ம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரம், அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது. வெள்ளை மாளிகையில் புஷ் நுழைந்ததிலிருந்தே அமெரிக்கா, ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும் தாக்கி ஆக்கிரமித்துள்ளது, சிரியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள்மீது வருங்காலத்தில் தாக்குதல்கள் நடத்த இலக்கு வைத்துள்ளது; இதைத்தவிர, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், கஜக்கஸ்தான், ஜோர்ஜியா, லைபீரியா, கொலம்பியா அகிய நாடுகளில் படைகளை நிறுத்திவைத்துள்ளதோடு, விமானங்களையும், மற்றைய போர்த்தளவாடங்களையும் நிறுத்திவைத்திருக்கிறது.

அமெரிக்கப் போர் உந்துதலின் பண்பானது ஏகாதிபத்திய மற்றும் நவகாலனித்துவத்தையும் கொண்டுள்ளது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் பொறிந்த பின்னர், அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டு அதன் உலக மேலாதிக்கத்தைத் தொடர்வதற்கு செயல்திறம் மிக்க தடை எதுவும் இல்லை என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. அதனது நோக்கம், அதன் போட்டி அரசுகள் போதிய பலமடைந்து அமெரிக்காவிற்கு சவால் விடுமுன் அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள நாடுகடந்த நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதாகும். 2001, செப்டம்பர் 11, பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாதுகாப்பு பதில் நடவடிக்கை என அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பை புஷ்ஷும் அமெரிக்க செய்தி ஊடகமும் காட்டிக்கொள்ள முற்பட்டாலும், புஷ்ஷின் கீழ் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தீவிர வலதுசாரிப்பிரிவு, 1990கள் முழுவதுமே அத்தகைய கொள்கையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறிவந்துள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்கள், முன்னரே திட்டமிடப்பட்டிருந்த வென்று கைப்பற்றுதல் என்ற செயற்பட்டியலை நிறைவேற்றுவதற்கு ஒரு சாக்குப்போக்கைத்தான் கொடுத்துள்ளன.

அமெரிக்கா, ஈராக்கை வெற்றி கொண்டதின் உண்மையான நோக்கங்கள் மூன்று ஆகும்: உலகத்திலேயே இரண்டாம் மிகப்பெரிய எண்ணெய் வளங்களுக்கு வழிகளைப் பெறுதல்; மத்திய கிழக்குப் பகுதியின் நடுவில் அமெரிக்கப் படைகளை நிறுத்திவைத்தல், அதன் மூலம் வர இருக்கக்கூடிய போட்டியாளர்கள் எல்லோரையும் விட, இணையற்ற புவிசார் மூலோபாய நலன்களை பெறுதல்; உள்நாட்டில் பெருகி வரும் சமூக அதிருப்தியை, வெளிநாட்டுப் பக்கம் திசைதிருப்புதல் ஆகும்.

முதலாளித்துவ பொருளாதாரத்திற்கும் போருக்கும் ஒன்றுடன் ஒன்று பிரியமுடியாத தொடர்பு உள்ளது: பெரிய முதலாளித்துவ சக்திகள் அனைத்துமே, மிகக் கடுமையான முறையில் சந்தைகளுக்காகவும், இலாபங்களுக்காகவும், மலிவான கூலி உழைப்பிற்காகவும், மலிவான விலையில் மூலப்பொருட்களுக்காகவும், அதிகரித்த அளவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இறுதி ஆய்வுகளில், சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாக தலையீடு செய்து, ஏகாதிபத்தியம் ஒட்டுமொத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்காவிடில், பெரிய வல்லரசுகளுக்கு இடையே பூகோள மோதல் என்பது தவிர்க்க இயலாது.

"பயங்கரவாதத்திற்கு" எதிரான போராட்டம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும், தன்னுடைய குற்றஞ் சார்ந்த செயல்தன்மையை மறைக்க புஷ் நிர்வாகம் முயன்றுள்ளது. இன்றைய "பயங்கரவாதி" அல்லது "கொடுங்கோலன்" என்பது அநேகமாக நேற்றைய நண்பன்தான் என்பதை இந்த நிர்வாகம் மறைக்கப்பார்க்கிறது; இந்த வகையினத்தில், சதாம் ஹுசைன் மட்டும் அடங்கவில்லை; ஒசாமா பின் லேடன், ஸ்லொபோடன் மிலோசவிக், மானுவல் நோரிகா மற்றும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் இலக்காகக் கடந்த இருபது ஆண்டுகளாக இருப்பவர்கள் அனைவருமே இதில் அடங்குவர்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு ஒரேவழி, அது தோன்றியதற்கான காரணத்தை அழிப்பதுதான்: அமெரிக்க இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம் மத்திய கிழக்கில் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தல், மற்றும் அதையும் பார்க்க குறைந்த ஏகாதிபத்திய வல்லரசுகளால் செய்யப்படும் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதுதான். இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்துதல் உள்பட, அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் தங்களுடைய அரசியற்பாதையைத் தாங்களே தீர்மானிக்கும் முறையில் கட்டாயமாக சுதந்திரமாக விட்டுவிடுதல் ஆகியனவாகும். மத்திய கிழக்கு பூசலுக்கு இதுதான் ஜனநாயக முறையிலான அடிப்படை முன்நிபந்தனை ஆகும்; இது யூதர்கள், அராபியர்கள், குர்துகள், மற்றும் அந்தப் பிராந்தியத்தில் இருக்கும் பல மக்கள் பிரிவினர் ஒன்றாக அமைதியுடன் வாழ வழிவகை செய்யும்.

ஈராக், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா இவற்றில் அமெரிக்கா, மற்றும் பிறநாட்டுப் படைகள் உடனடியாக, எந்த நிபந்தனையும் இன்றி வெளியேறவேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தான், மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பால் சிறைபிடிக்கப்பட்டவர்கள், இப்பொழுது குவாண்டநாமோ பே, டீகோ கார்சியா உட்பட, மற்ற அமெரிக்கச் சிறைகளிலும், உலகெங்கிலும் உள்ள காவல் முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம். அமெரிக்காவும், பிரிட்டனும் போரினால் பாதிப்புக்கும் அவதிக்கும் ஆளாக்கப்பட்டுள்ள ஈராக்கிய மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டும், அதேபோல போரிலும் ஆக்கிரமிப்பிலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அமெரிக்க, பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கும் இழப்புத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

"ஈராக்கில் தோல்வி என்பது" நினைத்தும் பார்க்கப்படமுடியாதது என்று புஷ், கெர்ரி மற்றும் முழு அமெரிக்க அரசியல் நிறுவனமும் கொண்டுள்ள கூற்றுக்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஈராக்கிய மக்கள், அமெரிக்க மக்களுடைய எதிரிகள் இல்லை. உலகின் பிற பகுதியிலிருந்து படையெடுத்து வருவோரிடமிருந்து, அவர்கள் தங்கள் நாட்டையும், வீடுகளையும் காப்பாற்றிக்கொள்ள முழு உரிமை கொண்டுள்ளவர்கள் ஆவர். அவர்களுடைய தற்காப்பு, தடுப்பு நடவடிக்கைகள் "பயங்கரவாதம்" அல்ல. ஈராக்கின்மீதான படையெடுப்பானது ஒரு பாதுகாப்பற்ற நாட்டை முரட்டுத்தனமாக மற்றும் அரசியல்ரீதியாய் குற்றகரமாக கைப்பற்றலாகும். போருக்கான அரசியல் எதிர்ப்பு இந்தக் குற்றம் நிறைவேறுவதற்கான வழியில் தடைகளை ஏற்படுத்தும் மட்டத்திற்கு, அத்தகைய எதிர்ப்பு அமெரிக்க மற்றும் உலக மக்களுக்கு முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதாகும். ஈராக்கில் ஏற்படும் ஒரு அமெரிக்க "தோல்வி" அமெரிக்க ஆளும் தட்டு செல்வாக்கிழக்க சேவை செய்யும் மற்றும் அதன் இராணுவவாத வேலைத்திட்டம் மற்றும் உலக மேலாதிக்கத்துக்கான மக்களின் எதிர்ப்பை பலப்படுத்தும்.

புஷ், செனி, ரம்ஸ்பெல்ட் ஆகியோரிலிருந்து கீழ் மட்டம் வரை ஆப்கானிஸ்தான், ஈராக் இவற்றின்மீது படையெடுக்க சதிசெய்திருந்தவர்கள் போர்க்குற்றத்திற்காக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். பென்டகன் போர்எந்திரம் கலைக்கப்படவேண்டும் என்று கோருவதுடன், உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மூடப்படவேண்டும் என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவிலும் மற்ற ஏகாதிபத்திய மையங்களிலும் உள்ள அனைத்து பேரழிவு ஆயுதங்களும் அழிக்கப்படவேண்டும் என்றும் கோருகிறோம். இராணுவத் தொழிற்சாலைகளும் மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புக்களும், தொழிலாளர்களுக்கு வேலை இழப்புக்களோ அல்லது வருமான இழப்புக்களோ இல்லாது சாதாரண பயன்பாட்டுக்குரிய உற்பத்திப்பொருட்களை தயாரிக்குமாறு மாற்றப்பட வேண்டும்.

ஈராக்கில் தொடர்ந்து அதிகரித்துவரும¢ உயிர் இழப்புக்கள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினரை உலகம் முழுவதும் நிறுத்திவைப்பதால் ஏற்படும் மன உளைச்சல்கள், அமெரிக்க அரசாங்கத்தை தவிர்க்கமுடியாமல் கட்டாய இராணுவ சேவையை புதுப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடவைக்கும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி அரசியல் வாதிகளும், ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் அத்தகைய முடிவு எடுக்கப்படும் என்பதை குறிப்பாய் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். கட்டாய இராணுவசேவை மீண்டும் கொண்டுவரப்படுவதை SEP எதிர்க்கிறது. அதனுடைய ஆதரவாளர்கள் கூறுவதுபோல் அது ஒன்றும் சமமாகவோ, அல்லது ஜனநாயகரீதியாகவோ இராணுவச்சுமையை பகிர்ந்து கொள்ளும் முறை அல்ல. மாறாக, அது, பல்லாயிரக்கணக்கான தொழிலாள வர்க்க இளைஞர்களை, ஏகாதிபத்தியத்திற்கு பீரங்கித் தீனியாகப் பயன்படுத்தும், ஆளும் செல்வந்தத் தட்டின் நோக்கமே ஆகும்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் அடிப்படையில் அமையும் ஒரு சோசலிச வெளியுறவு கொள்கையை நாங்கள் முன்வைக்கிறோம். தொழிற்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளின் வளங்களும், தொழில்நுட்பமும், "மூன்றாம் உலக" மக்களை அடக்கவோ, சுரண்டவோ, அழித்துவிடவோ பயன்படுத்தப்படக்கூடாது, மாறாக எல்லா உழைக்கும் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் கௌரவமான தரத்திற்கு உயர்த்திடவும், வரலாற்றிலேயே முதன் முறையாக, உலகரீதியாக, உண்மையான சமூக சமத்துவத்தின் நிலைமைகளை ஏற்படுத்தப் பயன்படுத்தப்படவேண்டும்.

ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்

அதன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையில், புஷ் நிர்வாகம், செப்டம்பர் 11 ஐ, முன்னரே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பரந்த அளவிலான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு ஒரு சாக்காக பயன்படுத்தியுள்ளது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில், அமெரிக்க தேசபக்த சட்டம் போன்ற இருதரப்பு சார்ந்த மசோதா மூலம், அது, குற்றம் நிரூபிக்கப்படும்வரை ஒருவரை நிரபராதி எனக் கருதும் அடிப்படை அரசியலமைப்பு பாதுகாப்புக்களான, ஹாபியஸ் கார்ப்பஸ் (Habeas corpus) எனப்படும் ஆட்கொணர்வு உரிமை (ஒருவர் கைது செய்யப்பட்டுத் தகவல் தெரியாவிட்டால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அரசைக் கட்டாயப்படுத்துதல்), வழக்கறிஞரை அமர்த்திக்க கொள்ளும் உரிமை, மற்றும் விரைவான மற்றும் பகிரங்க விசாரணை ஆகியவற்றை தகர்த்துவிட்டது.

அமெரிக்காவில் ஒரு போலீஸ் அரசிற்கான உள்கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது: உள்நாட்டு பாதுகாப்புத்துறை, பென்டகனுடைய வட ஆணையகம் என்னும் துறை, அனைத்து அமெரிக்க கண்டத்தில் உள்ள இராணுவ சக்திகளையும் மையப்படுத்தி வைத்துக்கொண்டுள்ளது; குவாண்டநாமோ வளைகுடா, கியூபாவில் ஒரு கொடுஞ்சிறை முகாமையும் ஏற்படுத்தியுள்ளது. ஜோஸ் படில்லா, யாசீர் ஆம்தி ஆகியோரை கைது செய்து காவலில் வைத்திருப்பது பற்றிய சட்ட வாதங்களில், புஷ் நிர்வாகம், முழு அமெரிக்க நாடும் ஒரு போர் பகுதி போன்றது என்றும், ஜனாதிபதி ஒரு இராணுவ சர்வாதிகாரி போல் நடத்து கொள்ளுவதற்கு அதிகாரம் பெற்றவர் என்றும், எந்த அமெரிக்க குடிமகனையும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படாமல் சிறைபிடித்து வைக்கும் உரிமையைப் பெற்றவர் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளது.

இத்தகைய ஜனநாயக உரிமைகள் மீதான முன்கண்டிராத இத்தாக்குதல்கள், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் அல்லது தலைமை வழக்கறிஞர் ஜோன் ஆஷ்கிராப்ட்டின் தனிப்பட்ட ஆளுமைத்திறனுடைய முடிவு அல்ல. இது மிகப்பெரிய அளவில் கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் வளர்ந்துள்ள மாபெரும் சமூக சமத்துவமற்ற நிலையின் உபரி விளைவே ஆகும்.

மிக அதிக செல்வக் குவிப்பும், கொழிப்பும் உடைய ஒரு சிறு குழு ஆட்சிக்கும், தங்களை செலவுகளைச் சரிக்கட்டமுடியாமல் திணறும் பெரும்பாலான தொழிலாள வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் இடையில் சமுதாயமானது ஆழமாகப் பிளவுண்டு இருக்கிறது. மிகக் கடினமான முறையில் சமூக அழுத்தங்கள் இருப்பது ஜனநாயக முறையிலான ஆட்சியைப் பராமரித்தலை இயலாததாக்கிவிட்டது. இறுதிப் பகுப்பாய்வில், ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்கள் என்பது, தன்னுடைய பரந்த செல்வத்தை, பெரும்பாலான மக்களின் சமூக தேவைகளுக்கு எதிராகப் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் நிதிரீதியான செல்வந்த தட்டின் பாதுகாப்பு இயங்குமுறையை பிரதிநிதித்துவம் செய்கிறது.

சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் என்பது நீண்டகால வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளின் உச்சக் கட்டமாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர் இருந்து, ஜனநாயக உரிமைகள்மீது மறுபடியும் தாக்குதல்கள் நடத்தப்பட்ட வண்ணம் இருந்து வருகின்றன: 1950களில் மெக்கார்த்தியிசம், 1960களில் திஙிமி, சிமிகி இவற்றின் உள்நாட்டு உளவு பார்த்தல்கள், 1970களில் வாட்டர்கேட் ஊழல், 1980களில் ஈரான்-கான்ட்ரா நடவடிக்கைகள் ஆகியன. கிளிண்டன் நிர்வாகத்தின் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகம் தொலைநோக்குள்ள ஜனநாயகத்திற்கு விரோதமான பல நடவடிக்கைகளை எடுத்தது. அமெரிக்க தேசபக்த சட்டத்தின் பல கூறுபாடுகள் கிளிண்டனுடைய 1996ம் ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னரே இடம் பெற்றிருந்தன; இது கூடுதலான மரணதண்டனைகள், இரகசிய நீதிமன்றங்கள், பெருமளவு நாடுகடத்தல்கள் ஆகியவற்றிற்கு இடமளித்தது.

வாட்டர்கேட் நெருக்கடி போன்ற முந்தைய காலத்தில், அரசியலமைப்பு ஒழுங்கைக் குறைக்க முற்படும் முயற்சிகள் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்கள்ளேயே இறுதியில் முக்கியமான எதிர்ப்பைப் பெற்றிருந்தன. இந்தத் தாக்குதல்கள் கடுமையான விளைவைக் கொடுக்கக் கூடியதாக மாறி, ஆளும் செல்வந்த தட்டிற்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே உள்ள நிதிப் பிளவு பெரிதாகப் போன அளவில், இதற்கான எதிர்ப்பு அதிகமுறையில் குறையத்தொடங்கி விட்டது. கிளின்டன் நிர்வாகத்திற்குத் தொடர்ந்த போலியான விசாரணைகள் நடத்தப்பட்டு இறுதியில் பெரிய குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட்ட போது நிர்வாகம் உறுதியற்ற தன்மை அடைந்ததற்கு குறிப்பிடப்பட்ட எதிர்ப்பு இல்லாமல் போயிற்று. 2000 ஆண்டுத் தேர்தல் திருடப்பட்டது, செய்தி ஊடகத்தின் சதித் துணையுடன் நிகழ்ந்ததுடன், ஜனநாயகக் கட்சியின் நடைமுறைக்குழு நிபந்தனை இன்றிச் சரணடைந்ததும் ஆளும் செல்வந்த தட்டின் எந்தப் பிரிவிற்கும் ஜனநாயக உரிமைகளைக் காக்கவேண்டும் என்ற தீவிர ஆர்வம் இல்லை என்பதைத்தான் புலப்படுத்தியது.

வார்த்தையின் முழுப் பொருளிலும், அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் உள்ளே உள்ள ஒரு குற்றஞ்சார்ந்த பிரிவானது, அதிகாரத்திற்கு வந்துள்ளது என்பதை புஷ் நிர்வாகம் பிரதிநிதித்துவம் செய்கிறது. இது ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் ஆகும்; மக்கள் பெரும்பான்மை வாக்கை இழந்தாலும்கூட, இது உச்ச நீதிமன்றத்தால் பதவியில் இருத்தப்பட்ட அரசாங்கமாகும். ஒரு அதி- வலதுசாரி செயற்பட்டியலுக்கான எல்லாவிதமான நியாயப்படுத்தலாக, செப்டம்பர் 11 பயங்கர நிகழ்ச்சிகளை பயன்படுத்திக்கொண்டு, அரசியல் ஆத்திரமூட்டல் வழிமுறைகள் மூலம் இது ஆட்சியை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் அன்று என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய தீவிர விசாரணை முயற்சியை அது தடுத்து வருகிறது; ஏன் அமெரிக்க உளவுத்துறை அமைப்புக்கள் தெரிந்திருந்த பயங்கரவாதிகளை தடையின்றிச் செயல்பட அனுமதித்தன, ஏன் அமெரிக்க இராணுவம் நான்கு விமானங்களை அடுத்தடுத்து ஒரே நேரத்தில் கடத்தப்பட்ட போது ஒன்றும் செய்யவில்லை, ஏன் புஷ் நிர்வாகமானது ஒரு தாக்குதலைப்பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கைகளை அசட்டை செய்தது போன்ற கேள்விகளுக்கான விசாரணையை தடுத்து வருகிறது.

வெள்ளை மாளிகையின் பயங்கரவாத எதிர்நடவடிக்கைகள் துறையின் முன்னாள் இயக்குனரான ரிச்சர்ட் கிளார்க் தெரிவித்துள்ளவை, "பயங்கரவாதத்தின் மீதான போரில்" புஷ் நிர்வாகத்தின் பங்கு பற்றி பெரும் சந்தேகங்களை உறுதிதான் செய்துள்ளன: அது முதலில் பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னரே எதிர்பார்த்துச் செயலாற்றக்கூடிய எந்த நடவடிக்கையையும் தடுத்துவிட்டது, பின்னர் செப்டம்பர் 11 தாக்குதல்கள், மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் அமெரிக்க இராணுவ தலையீட்டிற்கு மக்களிடம் இருந்த எதிர்ப்பைக் கடப்பதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்தப்பட்டன. FBI, CIA, குடிவரவு மற்றும் குடியுரிமைத் துறை, கூட்டாட்சி விமானத்துறை நிர்வாகம், பென்டகன், கிட்டத்தட்ட பாதுகாப்பிற்குப் பொறுப்பாக உள்ள துறைகள் அனைத்தும் செப்டம்பர் 11க்கு முன்பு மிக இயல்பற்ற முறையில் செயலற்று இருந்ததற்கு, ஒருவேளை அல்கொய்தா பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த உள்ளது, அது நடைபெறட்டும், பின்னர் ஏற்கனவே முதிர்வு நிலையில் திட்டமிடப்பட்டிருந்த இராணுவ நடவடிக்கை வேலைத்திட்டத்தை செயல்படுத்த அதை ஒரு பொருத்தமான சாக்குப்போக்காகக் கொள்ளலாம் என்ற கருத்து இருந்திருக்குமோ என்பது மிக நம்பத்தகுந்த விளக்கமாக இருக்கிறது.

தன்னுடைய அரசியல் வாழ்வின் உயிர்தப்பலை, தானே பறைசாற்றிக் கொண்ட "போர்க்கால ஜனாதிபதி" என்பதில் பணயம் வைக்கும் புஷ்ஷின் முடிவு அமெரிக்க மக்களுக்கு மிகப் பெரும் தீமையான உட்குறிப்புக்களை கொண்டிருக்கிறது. மக்களின் எத்தகைய கட்டற்ற உணர்ச்சி வெளிப்பாடு இருந்தாலும் சரி, புஷ் நிர்வாகம் சுய விருப்பத்துடன் அதிகாரத்திலிருந்து இறங்கிவிடும் என்று கருதுவதற்குக் காரணம் ஏதும் இல்லை. 2004 பிரச்சாரத்தின் போதே, புஷ்ஷின் தேர்தல் வெற்றி வாய்ப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், இந்த நிர்வாகம் ஒரு புதிய, பெரும் பேரழிவை தரக்கூடிய பயங்கரவாத தாக்குதலை அனுமதிக்கும் அல்லது அதை நடத்த மறைமுகமாக ஏற்பாடு செய்யும் உண்மையான அபாயம் இருக்கிறது. ஒருவேளை அத்தகைய தாக்குதல் ஏற்பட்டால், நவம்பர் 2 தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம், அல்லது ஒரேயடியாக இரத்துச்செய்யப்படலாம் அல்லது இராணுவச் சட்டத்தின் கண்காணிப்பில் நடைபெறலாம் என்று அமெரிக்க செய்தி ஊடகத்தில் ஏற்கனவே மறைமுகக் குறிப்புக்கள் வந்துள்ளன..

ஜனநாயக உரிமைகளும் சோசலிசத்திற்கான போராட்டமும்

ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு கடந்தகாலத்தில் மிகவும் பாடுபட்டு வென்றெடுத்த முற்போக்கான சீர்திருத்தங்களை திரும்ப சுருட்டிக் கொள்ளும், மற்றும் மிகுந்த பிற்போக்கான அரசியல் மற்றும் சமூக சக்திகளை தூண்டிவிடும் புஷ் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு எதிராக ஒரு எதிர்த்தாக்குதல் தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த காலத்தில் பாடுபட்டு பெற்ற ஜனநாயக மற்றும் சமூக வெற்றிகளை -குடியுரிமை, வாக்குரிமை, அனைவருக்கும் கல்வி, முதியோருக்கு சுகாதாரப்பாதுகாப்பு, அதேபோல, குடியுரிமைகளைக் காப்பதில் அரசியலமைப்பு உத்தரவாதம் அளிப்பதைப் பாதுகாப்பதிலும் தளரா முயற்சியை மேற்கொண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி அனைவருக்கும் சம உரிமைகள் வேண்டும் என்று கோருவதுடன், வேலை கொடுப்பது, வீட்டு வசதி, கல்வி அளிப்பது அல்லது எப்பிரிவாயினும் அவற்றில் இனம், தேசிய பின்னணி, மதம், பால் வேறுபாடு அல்லது பால் அடிப்படையில் தனிமுன்னுரிமை காட்டுதல் இவற்றை எதிர்க்கிறது. மகளிர் விரும்பும் போது எந்தத் தடையும் இல்லாமல் கருவை கலைத்துக் கொள்ளும் பெண்களின் தடையற்ற உரிமையைப் பாதுகாக்கிறது, ஓரினத் திருமண உரிமையை ஆதரிக்கிறது மற்றும் அவர்களும் மருத்துவ, சட்ட மற்றும் வேலை வாய்ப்புக்களை சராசரி தம்பதியினர் போல் பெறவேண்டும் என்றும் கருதுகிறோம். மரணதண்டனை அளிப்பதை, அரசாங்கமே ஒர் உயிரைப் பறிக்க அனுமதிக்கும் காட்டிமிராண்டித்தனமான நடவடிக்கை என்று நாங்கள் எதிர்க்கிறோம் - பெரும்பாலும் இது முற்றிலும் ஏழைகள் அல்லது இனவழிச் சிறுபான்மையினர்மீது அதிக அளவில் திணிக்கப்படுகிறது.

ஆனால் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு என்பதை, குடிமக்கள்உரிமை, அரசியலமைப்பு நெறிகள் இவற்றின் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் எதிர்மறைப் பணியோடு மட்டுமே வரம்பிற்குட்படுத்திவிடக் கூடாது. ஜனநாயக உரிமைகள் என்ற கருத்துப் படிவமே, குறுகிய கட்டமைப்பான சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நெறிமுறைப்படுத்தப்பட்ட நீதி வழங்கல் இவற்றிற்கு அப்பால் விரிவு செய்யப்பட வேண்டும். அது பரந்த மக்களைக் கொண்டுள்ள உழைக்கும் மக்களுடைய வாழ்வின் சமூக யதார்த்தங்களை கட்டாயமாக சூழ்ந்து அறிந்து நன்மையளிக்கவேண்டும்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது தனியார் செல்வக் குவிப்பை கெட்டிப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க இயலாதது ஆகும். பொருளாதார சமத்துவமின்மை, சமூக சமத்துவமின்மை ஆகியவை எங்கும் பரவிக் கலந்திருக்கும் ஒரு சமுதாயத்தில் சட்டத்தின் முன் சமமான உரிமை என்ற கருத்துரு, அடிப்படையிலேயே பாசாங்கு நிறைந்தது ஆகும். ஒரு சிறு நிதி ஆதிக்க உயர்குழு ஆட்சி மக்களுக்கு வேலை கிடைக்குமா, அதற்கு எவ்வளவு ஊதியம் கொடுக்கப்படும், வேலையின் நிபந்தனைகள் எவை என்பது போன்ற அன்றாட வாழ்வின் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தன் விருப்பப்படி தீர்க்கும் என்று இருக்கும் பொழுது, ஒவ்வொரு இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குப்போடும் உரிமை இருப்பது பொருளற்றது ஆகும்.

ஜனநாயகம் ஓர் ஆழ்ந்த சமூக உள்ளடக்கமாகப் பரிணமித்து, பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தையும், முயற்சியையும் செலவழிக்கும் வேலைதளத்தை ஜனநாயகமயப்படுத்தலுடன் தொடங்கவேண்டும். தொழிற்துறை ஜனநாயகம் என்பது தங்கள் வேலைநேர வாழ்க்கையில் உண்மையான கட்டுப்பாட்டை உழைக்கும் மக்கள் கொள்ளும்போது ஏற்படுகிறது. பணி நிலைமைகளை பாதிக்கும் முடிவுகள், பாதுகாப்பு, சம்பளங்கள், வேலைக்கு அமர்த்துவது, வேலைநேரம் ஆகியவை கட்டாயம் ஜனநாயக முறைப்படி, தொழிலாளர்களால் உறுதி செய்யப்படுதலுக்கு கீழ்ப்படுத்தப்பட வேண்டும். இது அனைத்து நிறுவனங்களின் கணக்குப் புத்தகங்களும் தொழிலாளர்களின் ஆய்வுக்கு திறக்கப்பட வேண்டும் என்பதையும், மற்றும் பெருநிறுவன தலைமை என்பது, எல்லா தொழிலாளர்களாலும் ஜனநாயக வாக்கால் ஒப்புதல் கொடுக்கப்படவேண்டும் என்பதையும் முன்நிபந்தனையாகக் கோருகிறது.

இறுதி ஆய்வுகளில், ஜனநாயகத்தின் பாதுகாப்பும் விரிவடைதலும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் அணிதிரட்டலில் தங்கியுள்ளது.

அமெரிக்க சமூகத்தின் நெருக்கடி

2004ம் ஆண்டில் அமெரிக்கா, முன் எப்பொழுதையும் விட இல்லாத அளவிற்கு, பொருளாதார வழியில் மிகக் கூர்மையாக துருவமுனைப்பட்டுள்ளது. செல்வந்தர்கள், பெரும் செல்வந்தர்களாகி விட்டனர், ஏழைகள் பரம ஏழைகளாகிவிட்டனர். இந்தப் பிளவு கூடுதலான அளவிற்கு விரிவாகிக் கொண்டுபோகின்றது என்பதுடன், ஒருகாலத்தில் தங்களை நடுத்தர வர்க்க குடும்பங்கள் என்று கருதிய பல குடும்பங்கள், இப்பொழுது பொருளாதாரப் பாதுகாப்பை இழந்து உறுதியான கீழ்நோக்கிய அழுத்தத்தை தங்களுடைய வாழ்க்கை தரங்களில் உணர்கின்றன.

உயர்மட்டத்தில் இருக்கும் 1 சதவிகிதத்தினர் அமெரிக்க சமூகத்தின் மொத்த செல்வத்தில் 40 சதவிகிதத்தை உடைமையாகக் கொண்டுள்ளனர்; இதைத்தவிர பங்குகள், பத்திரங்கள் போன்ற நிதி சொத்துக்களில் அவர்கள் 80 சதவிகிதத்திற்கும் மேலாக உடைமைகளைக் கொண்டுள்ளதோடு, அந்த பங்கு திடமாக வளர்ந்தே வருகிறது. ஒரு சதவிகிதத்தினரிலும் உயர்மட்ட பத்தில் ஒரு பங்கினர், 129,000 பணக்காரக் குடும்பங்கள், 2002ம் ஆண்டு 505 பில்லியன் டாலர்களை மொத்த வருமானமாகக் கொண்டு, சராசரியாக 4 மில்லியன் டாலர்களை ஒவ்வொரு குடும்பமும் கொண்டிருந்தது. அதேநேரத்தில் ஊதியம் பெறும் மொத்த தொழிலாளர்களில் கால்பங்கினர் ஒரு மணிக்கு 8.70 டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கின்றனர், அதாவது ஒரு முழுநேரத் தொழிலாளிக்கான அதிகாரபூர்வமான வறுமைக் கோட்டிற்கும் கீழான ஊதியத்தைத்தான் சம்பாதிக்கின்றனர்.

வேலைகள்: ஒன்பது மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேலாக அதிகாரபூர்வமாக வேலையில்லாமல் இருக்கின்றனர்; மற்றும் 5 மில்லியன் பேர் "ஊக்கமற்றவர்கள்" என்று வகைப்படுத்தப்பட்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை; மற்றும் 25 மில்லியன் மக்கள் பகுதிநேர பணியாளர்களாகக் கருதப்பட்டு பொதுவாக குறைந்த ஊதியமும், தக்க நலன்களும் இல்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். ஜனவரி 2001ல் புஷ் வெள்ளை மாளிகையில் நுழைந்ததிலிருந்து 2.5 மில்லியன் உற்பத்தித்துறை வேலைகள் (விணீஸீuயீணீநீtuக்ஷீவீஸீரீ யிஷீதீs) துடைத்து அழிக்கப்பட்டு விட்டன. புஷ்தான், பெரும் பொருளாதார மந்த நிலையின் போது ஹேர்பேர்ட் ஹூவருக்கு பின், தன்னுடைய நான்கு ஆண்டு பதவிக்காலத்தில் மிக அதிக அளவு நிகர வேலை குறைப்பைக் காணும் ஜனாதிபதியாவார்.

வாழ்க்கைத் தரங்கள்: 2002ம் ஆண்டில் சராசரி குடும்ப வருமானம் 2.2 சதவிகிதம் குறைந்தது; இதில் நடு மேற்குப் பகுதியில் (3.7 சதவிகிதம்) வீழ்ச்சி உற்பத்தித்துறையில் மிக அதிகமான வேலை இழப்புக்கள் ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்டது. உண்மை ஊதிய விகிதம் தேக்கம் அடைந்து நின்றது அல்லது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து விட்டது. இதேகாலத்தில் 1973 லிருந்து, சராசரி ஆண் தொழிலாளியின் ஊதியத்தைவிட, வீட்டு அடகு வைப்பு 70 மடங்கு அதிகரித்திருக்கிறது. அமெரிக்கத் தொழிலாளர்கள் கூடுதலான நேரம் உழைத்துத்தான் செலவை சரிக்கட்ட சம்பாதிக்கவேண்டியுள்ளது. சராசரி முழுநேரப் பணியாளரின் உழைக்கும் மணிகள் ஆண்டு ஒன்றுக்கு 1973ல் 1,720 லிருந்து 1998ல் 1898 ஆக உயர்ந்துள்ளது; இது 178 மணிநேரம் அதிகமாகும்; அதாவது ஆண்டு ஒன்றுக்கு நான்கு கூடுதலான வேலை வாரங்களை விட அதிகம் என்பதற்கு சமமாகும்.

பொருளாதாரப் பாதுகாப்பின்மை: தொழிலாள வர்க்க மற்றும் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் முக்கிய நிதிச்சுமையான நுகர்பொருள் கடன், 1946ம் ஆண்டு வருமானத்தில் 22 சதவிகிதமாக இருந்தது, இன்று வருமானத்தில் 110 சதவிகிதமாக படர்ந்து வளர்ந்து விட்டது. 1989 லிருந்து 2001 வரையிலான காலத்தில் மொத்தக் கடன் அட்டை (Credit Card) மூலமான கடன் மூன்று மடங்கு அதிகரித்து, குடும்பத்தின் சராசரி கடன் 53 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், வீட்டு செலவுக் கடன் 6.5 டிரில்லியன் டாலர்களிலிருந்து, 8.7 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்து விட்டது; இந்த உயர்வு, மத்திய தரக் குடும்பங்கள் தங்கள் வீடுகளின் மீது கூடுதலான கடன் வாங்கி, நெருக்கும் செலவினங்களை சமாளிப்பதனால் ஏற்பட்டதாகும்.

ஏழ்மை: விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொழிலாளர் உற்பத்தித்திறன் இவற்றில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும்கூட, பட்டினி, வீடின்மை, வறுமை இவற்றை எதிர்கொள்ளும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை இரண்டாம் உலகப்போர் முடிந்ததிலிருந்து பார்க்கும்போது மற்ற எந்த காலத்தையும்விட இப்பொழுது அதிகமாக உள்ளது. வறுமையில் வாடும் மக்கள் எண்ணிக்கை 2002ல் மட்டும் 1.3 மில்லியன் அளவில் உயர்ந்து 35 மில்லியனாயிற்று. நகரங்களும், அறக்கட்டளைகளும், மிக அதிக கோரிக்கைகள் அவசர உணவு, புகலிடம் ஆகியவற்றிற்கு வருகின்றன எனத் தெரிவிக்கும்பொழுது, ஏழைகளுக்கான அரசாங்க நலத்திட்டங்கள் கடுமையான குறைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரப் பாதுகாப்பு: 43 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள், சுகாதாரக் காப்பு (பிமீணீறீtலீ மிஸீsuக்ஷீணீஸீநீமீ) இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்; பல பத்து மில்லியன் கணக்கானவர்கள் சுகாதார பாதுகாப்புச் செலவினங்கள் மிக உயர்ந்த அளவிற்குச் சென்றிருப்பதால், அதிலும் குறிப்பாக மருந்துகளுடைய விலை பெருகிவிட்ட நிலையில் அவதியுறுகிறார்கள். பெரும்பாலான தொழிலாள வர்க்கக் குடும்பங்களில் தற்காலிக பணிநிறுத்தம் என்பது வருமான இழப்பு மட்டும் இல்லாமல், சுகாதாரப் பாதுகாப்பு நிதி இழப்பையும் ஏற்படுத்துகிறது. 2002-03 காலகட்டத்தில், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கு மாநிலங்கள் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவித் தொகையை குறைத்துவிட்டன, அல்லது அது பெறுவதற்கான வாய்ப்புக்களை குறைத்து விட்டன; இது கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களை உள்ளடக்கும், பெரும்பாலனவர்கள் குழந்தைகள் என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

சுற்றுச் சூழல்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, மற்றும் உள்துறை அமைச்சகம், இதேபோன்ற நிறுவனங்கள், மாசுபடுத்தும் பெருநிறுவன ஆதரவாளர் செல்வாக்கிற்கு அடிபணிந்து நிற்கின்றன. பூகோளமே வெப்பமடைதலை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் புஷ் நிர்வாகத்தால் நிராகரிக்கப் பட்டுள்ளன; மெர்க்குரி, றிசிஙி க்கள் மற்றும் கதிரியக்க வெளிப்பாட்டு கழிவு உள்பட ஏனைய நச்சுப் பொருட்கள், மற்றும் கட்டுப்படுதலும் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால் தேசியப் பூங்காக்களும், தேசிய காடுகளும், மரம், ஆற்றல், சுரங்க நிறுவனங்களின் தடையற்ற சுரண்டுதலுக்கு ஆளாகியுள்ளன. முப்பது ஆண்டுகளில் முதல் தடவையாக அமெரிக்க, காற்று மண்டலம், நீர் மண்டலம் மற்றும் நிலத்தின் வெட்டவெளிப் பரப்புக்கள் ஆகியவை கூடுதலாக அழுக்கடைந்து, மாசுகள் நிறைந்துள்ளமை, வருங்கால சுகாதாரத்திற்கும் அமெரிக்க மக்களுடைய நலன்களுக்கும் கணக்கிடமுடியாத வகையில் இழப்பினை ஏற்படுத்தும்.

 ஓய்வு காலப் பாதுகாப்பு: முதியோரில் பத்து மில்லியன்கள் அளவிலானோர், கௌரவமான ஓய்வுக் கால உரிமைக்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர்; ஏனெனில் பெருநிறுவனங்கள், ஓய்வூதிய நிதியை கொள்ளை அடிக்கின்றன, 401 (k) கணக்குகள் மதிப்பில் தொய்ந்து விடுகின்றன; வோல் ஸ்ட்ரீட்டும், புஷ் நிர்வாகமும் சமூகப் பாதுகாப்பை தனியார் மயமாக்குதலுக்கு இலக்காக்கி வருகின்றன. மருத்துவ வசதி "சீர்திருத்த" மசோதா என தேசிய சட்டமன்றம் இயற்றி, புஷ் கடந்த ஆண்டு கையெழுத்திட்டமை முதியோரின் சுகாதார பாதுகாப்புக்களுக்கு உறுதி அளித்து வந்த திட்டங்களை அழிப்பதில் மற்றும் தனியார்மயமாக்குவதில் முதல்படியாக இருக்கிறது.

கல்வி: அமெரிக்க இளைஞரில் 30 சதவிகிதத்தினர், 2000 ஆண்டு உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் முன்னரே பள்ளியை விட்டு நீங்கி விட்டனர் என புள்ளிவிவரம் கூறுகிறது; 1996ல் இது 26 சதவிகிதமாக இருந்தது. ஆயிரக்கணக்கான பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழும் ஆபத்தில் இருக்கின்றன. "எந்தக் குழந்தையும் பின் தங்கிவிடக்கூடாது" என்ற புஷ்ஷின் வேலைத்திட்டம், தேசிய சட்டமன்றத்தில் இரு கட்சிகளாலும் ஏற்கப்பட்டு 2001ல் சட்டமானது, பொதுக் கல்விமுறையை அழிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என்பதுடன் ஆயிரக் கணக்கில் பொதுக் கல்வி நிலையங்களை மூடவும் நிர்பந்தித்து வருகின்றது. ஒரேதரத்தில் தேர்வுகள், கடுமையான கட்டுப்பாடு இவற்றைச் குழந்தைகளின் பன்முக வளர்ச்சி, குறிப்பாக அவர்களின் விமர்சன ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலுக்கு பதிலீடாகக் கொண்டு வந்துள்ளது. இந்தத் தேர்வுமுறையின் தேவைகளுக்காக பள்ளிகள் தங்களின் குறைவுறும் வளங்கள் மீது குவிமையப்படுத்தியிருக்கின்றன, சோதனைக்குட்படாத பாடங்கள் கலை, இசை போன்றவற்றை அகற்றவும், விளையாட்டுக்கள், நாடகங்கள் போன்ற படிப்புச்சாரா செலவீனங்களையும் பெரிதாக குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

கல்விக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், நிதி உதவி குறைக்கப்பட்டு விட்டதை எதிர்கொள்கையில் கல்லூரிக் கல்வி என்பது, நடுத்தர வருமான குடும்பங்களுக்கு கூட கிடைக்க இயலா நிலை அதிகரித்த அளவில் ஏற்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கு நல்லமுறையில் கல்வி கொடுத்தல் இன்றியமையாதது என்ற ஒரு சமுதாயத்தின் அடிப்படை பொறுப்பைக் கவனிக்காமல், புஷ் நிர்வாகம் பெல் நிதியுதவி (Pell Grants) மற்றும் தேவையை ஒட்டிய திட்டங்கள் இவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது. கெர்ரியும், ஜனநாயகக் கட்சியினரும் கல்லூரிக் கட்டண உதவித்தொகைகளை, இளைஞருக்கான கட்டாய தேசிய சேவை முறையுடன் பிணைத்து, இளைஞர்களை இராணுவத்தில் நுழைப்பதற்கு செயலூக்கியாகப் பயன்படுத்துகின்றனர்.

சமூக உள்கட்டமைப்பு: அமெரிக்க சாலைகள், பாலங்கள், பொதுப் போக்குவரத்து வசதிகள், குடிநீர், வடிகால் நீர் முறைகள், மற்றய சமூக உள்கட்டமைப்புக்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன; இதற்குக் காரணம் வரவு செலவுத் திட்டத்தில் அவற்றிற்கான பராமரிப்புச் செலவு குறைக்கப்பட்டு, பணக்கார உயர்சிறு தட்டினர் குறிப்பிடத்தக்க வகையில் சமூக நலன்களில் முதலீடு செய்ய மறுக்கின்றனர். மாநில அரசாங்கங்களில் இந்த நெருக்கடியின் தீவிரம் பெரிதும் ஏற்பட்டு, நடப்பு நிதி ஆண்டில் அவை கிட்டத்தட்ட 80 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையைச் சந்திக்கவேண்டியிருக்கின்றன. மாநில அரசாங்கங்கள் உதவித் தொகைக் குறைப்பை, நூலகங்களை மூடுவது, சிறைக் கைதிகளின் உணவுத் தரத்தைக் குறைப்பது போன்ற நிலைகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. வடகிழக்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் 2003 ஆகஸ்டு மின்சார இருட்டடிப்பு நிரூபித்துக் காட்டியது போல், ஒவ்வொரு காலாண்டும் இலாபத்தைப் பெருக்கிக் காட்டவேண்டும் என்ற வோல்ஸ்ட்ரீட் அழுத்தத்தால், தனியார்மயமாக்கப்பட்ட பயன்பாட்டுத் துறைகள், பராமரிப்புத் தொகைக்குத் தேவையான மூலதனத்தை குறைத்துவிடுகின்றன.

சிறைகள்: 2000ம் ஆண்டில் 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் சிறையில் இருந்தனர்; இந்த எண்ணிக்கை 1980ம் ஆண்டை விட நான்கு மடங்கு அதிகமாகும். தொழில்துறையில் முன்னேற்றமடைந்த மற்ற எந்த நாட்டையும் விட அமெரிக்கா தன் மக்கட்தொகையில் கூடுதலான விகிதத்தினரைச் சிறையில் வைத்துள்ளது; உலகில் காட்டுமிராண்டித்தனமாக பின்பற்றப்படும் மரணதண்டனை கொடுக்கும் வெகு சிலநாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். 1980ம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரை, சிறையிலிருக்கும் கறுப்பினத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கை 143,000 லிருந்து 792,000 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று கல்லூரிக்கு செல்பவர்களைவிட அதிகமான எண்ணிக்கையில் கறுப்பர்கள் சிறையில் இருக்கிறார்கள்.

இளைஞர்களுடைய நிலைமை: 16 லிருந்து 24 வயது வரை, கிட்டத்தட்ட 5.5 மில்லியன் இளைஞர்கள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வேலையும் இன்றி உள்ளனர்; இவர்கள் அடிப்டையில் அமெரிக்க சமுதாயத்தால் கைவிடப்பட்டவர்கள் ஆவர். வீட்டைவிட்டு ஓடியவர் அல்லது வீடின்றி இருப்பவர் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் இளைஞர்கள் தெருக்களில் வசிக்கின்றனர், இவர்களில் ஆண்டு ஒன்றுக்கு 5,000 பேர் தாக்குதலுக்கு ஆளாகி அல்லது வியாதியானால் அல்லது தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைகின்றனர். 1990களில் இருந்ததை விட 74 சதவிகிதம் சிறையில் கூடுதலான இளம் குற்றவாளிகள் உள்ளனர்; இளவயதினர் குற்றம் செய்வது குறைந்துள்ள போதிலும் இந்த நிலைமை உள்ளது. 4 மில்லியன் குழந்தைகள் மனநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர், பல்லாயிரக் கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசாங்கப் பாதுகாப்பில், அது ஒன்றுதான் மனநல மீட்பிற்கு உதவும் என்பதால், விடவேண்டிய நிலை உள்ளது.

புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் பொருளாதார சமத்துவமற்ற நிலையை அதிகரித்து, முக்கியமான பொதுநலப் பணிகளை பணமின்றி முடக்கிவிட்டன. 2001 வரவு செலவு திட்டத்தில் 1.35 டிரில்லியன் டாலர்கள் வரி வெட்டின் பெரும் பகுதியும், 2003 ஆண்டு இரண்டாம் சுற்று வெட்டுக்களும் மக்கட்தொகையின் உயர்மட்ட ஒரு சதவிகிதத்தினரின் நன்மைக்குச் சென்றது. இதற்கிடையில், உள்நாட்டு சமூக தேவைகளுக்கான உண்மையான கூட்டாட்சி செலவு பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன.

அமெரிக்க பெருநிறுவனங்களின் உயர்ந்த தட்டுக்கள் குற்றஞ்சார்ந்தவை, மோசடி இவற்றில் வல்லமை பெற்றுத் திகழ்பவையாக உள்ளன. நூற்றுக்கணக்கான தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) தங்களுடைய நிறுவனங்களையே கொள்ளையடித்து, தனிப்பட்ட முறையில் நூற்றுக்கணக்கான மில்லியன்கள், ஏன் சிலசமயம் பில்லியன்கள்கூட சொத்துக்குவிப்பு செய்துள்ளனர்; அதேநேரத்தில் அதன் சிறு பங்குதாரர்களும் தொழிலாளர்களும் அவற்றுடன் தொடர்புகொண்டதற்கான விலையை கொடுக்க நேர்ந்துள்ளது. குற்றஞ்சார்ந்த பெருநிறுவனங்களிலேயே, என்ரோன் நிறுவனம் மிக அதிகமாக அவப்பெயர்பெற்றது, மற்றும் புஷ் குடும்பத்திற்கு அது மிகநெருக்கமானது. அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய முறையில் பெருநிறுவனங்கள் திவாலான கணக்கில் பத்தில் ஒன்பது, புஷ் ஜனாதிபதி பதவிக்கு வந்தபின் நடைபெற்றவை ஆகும். நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் கணக்கில் நிதிகள் சூறையாடப்பட்டுள்ளன அல்லது அழிவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், விசாரணை செய்து சிறைக்கு அனுப்புவது ஒரு புறம் இருக்க, மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் உயரதிகாரிகள் கைதே செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு சம்பந்தப்பட்டுள்ளது நேர்வழியிலிருந்து விலகுதல் அல்ல, மாறாக ஒரு சமூக நோய்க்குறி ஆகும்: அமெரிக்க பெருநிறுவன செல்வந்த தட்டு குற்றமயமாதல் ஆகும். இந்த நிகழ்ச்சிப்போக்கின் புறநிலையான மூலவளம், அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால நெருக்கடியில் இருக்கிறது; இது இலாப விகிதங்கள் கடுமையாகக் குறையத் தொடங்கிய காலத்திலிருந்து, அதுவும் 1970 களில் உற்பத்தித்துறையில் அவ்வாறு ஏற்பட்டதிலிருந்து ஆரம்பமாகிறது. இதற்கு விடை காணும் வகையில் ஆளும் வர்க்கமானது, தொழிலாள வர்க்கத்தை 1980கள் முழுவதும் தாக்குதலுக்கு உட்படுத்தியதின்மூலம், வேலைகளை குறைத்தல், ஊதியங்களை குறைத்தல், தொழிற்சங்கங்களை தகர்த்தல், பெருநிறுவனங்களுக்கு வரிக்குறைப்புக்கள் அளித்தல், செல்வந்தர்களுக்கான வரிகளை குறைத்தல், பெருவர்த்தகங்கள் மீதான கட்டுப்பாடுகளை தூக்கி எறிதல் ஆகியவை மூலம் பதில் கொடுத்தது. பழைய தொழிலாளர் அமைப்புக்கள் பொறிந்த அளவில், ஆளும் செல்வந்த தட்டினர், தனியார் செல்வக் குவிப்பிற்காக தாங்கள் அனைத்து சமூக, அரசியல், ஏன் தார்மிக தடைகளிலிருந்து கூட விடுபட்டுவிட்டதாக கருத தலைப்பட்டனர். ஆயினும், இந்த நடவடிக்கைகளினாலும், உழைப்பு நிகழ்ச்சிப்போக்கிலிருந்து கறந்து எடுக்கப்படும் இலாபத்தின் வீதத்தை குறைத்து இயக்கும் இயற்பாங்குடையதான முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழே இருக்கும் முரண்பாடுகளை கடந்து வர முடியவில்லை. 1990களில், பெருநிறுவன அமெரிக்கா நேரடி மோசடி முறைகளில் ஈடுபட, மிகப் பெரிய அளவில் முயன்றது; "தவறான கணக்குகள்" எழுதி இலாபங்களை உயர்த்திக் காட்டுதல், இதையொட்டி பங்குகளின் விலையை ஏற்றுதல், தலைமை நிர்வாக அதிகாரிகளின் வருமானங்களை உயர்த்துதல் ஆகியவை செய்யப்பட்டன.

தொழிலாள வர்க்கத்தை பாதுகாக்க ஒரு சோசலிச வேலைத்திட்டம்

அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் நலன்களை கருத்தில் கொண்டு மறுஒழுங்கு செய்வதை நோக்கமாக கொண்ட ஒரு வேலைத் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கிறது. தற்போதைய முதலாளித்துவ அமைப்பில், தொழில், நிதிய அமைப்புக்களின் பரந்த இருப்புக்கள் அனைத்தும் தனிப்பட்டோரின் உடைமையாக இருக்கின்றன மற்றும் தனிப்பட்டோரால் கட்டுப்படுத்தப்படுகின்றன, இம்முறை பொருளாதாரத்தின் மீதான பொது உடைமை மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாடு இவற்றை உடைய ஒரு சோசலிச அமைப்பால் கட்டாயம் மாற்றப்படவேண்டும். இலாபத்தை உருவாக்கும் மற்றும் பரந்த தனிநபர் செல்வத் திரட்சியை அல்லாமல், மனித தேவைகளை நிறைவு செய்வதையே ஒழுங்கமைக்கும் கொள்கையாக உடைய ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்குவதைத்தான் நாம் ஆதரிக்கிறோம்.

உழைக்கும் மக்களின் பரந்த ஜனத்திரளின் நலன்களின் பேரில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைப்பதற்கான பொருளாதார அடித்தளத்தை நிறுவுவதற்கு, 10 பில்லியன் டாலர்கள் அல்லது அதற்குமேல் மதிப்பு உடைய அனைத்து வகைப்பட்ட தனியாருக்குச் சொந்தமான தொழில் மற்றும் உற்பத்தித் தொழில்துறை பெருநிறுவனங்களை, சிறு பங்குதாரர்களுக்கு முழு நஷ்ட ஈட்டுடனும் பெரிய அளவிலான பங்குதாரர்களுக்கான நஷ்டஈட்டு விதிமுறைகள் பகிரங்கமாக பேசி எடுக்கப்படும் அடிப்படையிலும், அவற்றை பொதுவில் உடைமையான நிறுவனங்களாக மாற்றுவதை நாம் ஆதரிக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து பெரிய வங்கிகள், காப்பீட்டுக் கழகங்கள் ஆகியவையும் கூட தேசியமயமாக்கப்படவேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கின்றது. மேலும், சோசலிச சமத்துவக் கட்சி இரயில் போக்குவரத்து, விமான சேவை, தொலைத் தகவல் தொடர்பு மற்றும் மின்விசை போன்ற ஆற்றல் தொழிலும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து இயற்கை வளங்களும் பொது உடைமை மற்றும் பொதுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் வாதிடுகிறது.

இந்த வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் மறுஒழுங்கு செய்யப்பட்டால், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாபெரும் வளங்களை கிடைக்கக் கூடியதாகச் செய்யும்.

பொதுப்பணித் திட்டம் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டு, இப்பொழுது வேலையில் இல்லாதவர்கள், வேலை செய்யக் கூடியவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வகை செய்யுமாறு நாங்கள் கோருகிறோம். பணவீக்கக் குறியீட்டுடன் இணைக்கப்பட்டு, கூட்டாட்சியின் உத்தரவாதம் ஒவ்வொரு ஆண்டும் இருக்கக்கூடிய வகையில் நிதியம் அமைத்து, மில்லியன் கணக்கான உழைக்கும் அமெரிக்கர்களின் வருமானத்தை உயர்த்தும் அவசரத் தேவையை வலியுறுத்துகிறோம். வேலைகளைத் தோற்றுவிக்கவும், தொழிலாளர்கள் அரசியல், பண்பாட்டு வாழ்வியற் கூறுபாடுகளில் பங்கு பெறவும், வேலைப்பளு வாரத்தில் 30 - 40 மணி நேரமாகக் குறைக்கப்படவேண்டும். முழுநேரத் தொழிலாளர்களுக்கு ஆண்டு விடுமுறை குறைந்தது 5 வாரங்களாவது இருக்கவேண்டும்.

இலவச, உயர்தர பொதுக் கல்வி மற்றும் அனைவருக்கும் இவவச உயர் கல்வி கிடைப்பதற்கான வழிவகைக்காக பெரும் அளவில் முதலீடு செய்யப்பட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்; அனைவருக்கும், விரிவான மருத்துவ பராமரிப்பு, அரசு-மானிய உதவியுடன் கூடிய, வசதியான மற்றும் அனைவராலும் இயலக்கூடிய வீடுகளை கட்டல்; தொழிற்சங்கத்தில் சேரவும் தொழிற்சங்கங்களை ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தவும் ஒரு உத்தரவாதமுள்ள உரிமை, தொழிற்சங்கங்களை உடைக்கும் தந்திரோபாயங்களை மற்றும் சம்பள வெட்டை சட்டவிரோதம் என அறிவித்தல்; குடியுரிமை உட்பட, சட்டபூர்வமாயினும் சரி அல்லது "சட்ட விரோதமாக" ஆயினும் சரி, குடியேறியுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு ஜனநாயக உரிமைகள் வழங்குதல்; அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கௌரவமான ஒரு வருமானத்தை தரும் ஓய்வூதிய பாதுகாப்பு; சிறிய, நடுத்தர வியாபாரங்களுக்கு அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்காக நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

சமூக சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் ஸ்தூலமான நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இங்கே விவரிக்கப்பட்ட சமூக உரிமைகள் அடையப்பட முடியும். வரிவிதிப்புக் கொள்கையில் இப்பொழுதுள்ள நிலை தலைகீழாக மாற்றி அமைக்கப்படவேண்டும்: அதாவது பொதுமக்களை கொள்ளையடித்து மில்லியனர்களையும் பெருவர்த்தகத்தையும் மேலும் செல்வ குவிப்பிற்கு வழி செய்யும் சாதனமாக இருப்பதிலிருந்து, வரிவிதிப்பில் வரும் செல்வத்தை தீவிரமுன்னேற்றமானமுறையில் மறுவிநியோகம் செய்வதற்கான சாதனமாக அது ஆக வேண்டும். ரோனால்ட் றேகன், மூத்த ஜோர்ஜ் புஷ், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஆகிய ஜனாதிபதிகள் செல்வந்தர்களுக்கு வரிவிலக்கு கொடுத்தமை யாவும் நீக்கப்படவேண்டும்; செல்வத்தின் மீதான நேரடிவரிகளான எஸ்டேட் வரிகள் போன்றவை மீண்டும் கொண்டுவரப்படல் வேண்டும், பெருநிறுவனங்கள் மிகச் சிறு அளவே இலாபத்தில் வரி செலுத்த அனுமதிக்கும் வகையில் கணக்குமுறையிலான தகிடுதத்தங்கள் மற்றும் சட்டத்திலுள்ள ஓட்டைகள் போன்றவை அகற்றப்படவேண்டும். பரந்த பெரும்பான்மையான மக்களுக்கு வரிச்சுமை குறைக்கப்பட்டு, அதிக வருமானம், செல்வக் குவிப்பு இருப்பவர்மீது கூடுதலான வரி விதிக்கப்பட வேண்டும்.

1990 களில் நடைபெற்ற ஊகவாணிப நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்கள், சிறு பங்குதாரர்கள் நஷ்டமுற பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளால் பெருநிறுவன வளங்கள் குற்றஞ்சார்ந்த முறையில் அபகரிக்கப்பட்டமை பற்றி விசாரணை நடத்தப்படவேண்டும். திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டு சமூக நலப்பணிகளுக்காகவும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்படவேண்டும்.

சொத்து உரிமைகள் சமூக உரிமைகளுக்கு கீழ்ப்படுத்தப்படவேண்டும். இதன் பொருள் எல்லாவற்றையும் தேசியமயமாக்க வேண்டும் என்பதோ, ஏற்கனவே பகாசுரக் கம்பனிகள் மற்றும் வங்கிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய அல்லது நடுத்தர வணிகங்கள் அகற்றப்படவேண்டும் என்பதோ அல்ல. திட்டமிட்டு பொருளாதாரம் செயல்படுத்தப்பட்டால், அவை நியாயமான ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் வழங்கும் வரையில், அத்தகைய வணிகங்களுக்கு தேவையான கடன் வசதிகளையும், மிக உறுதியான சந்தை நிலைமைகளையும் தயாராய் கிடைக்கச்செய்யும்.

சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களுக்கு முழு அளவில் கலை, பண்பாடு பற்றியவற்றை முழுமையாய் கிடைக்கச்செய்யும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. தன்னுடைய புதிய கருத்துக்களினாலும், வலுவான ஜனநாயக மற்றும் மானுடம் சார்ந்த வகைகளினால், அனைவரையும் ஈர்க்கும் தன்மையை அமெரிக்க பண்பாடு பெற்றிருந்தது, ஒருசமயம் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இருந்தது. ஏனைய துறைகளைப்போலவே, பண்பாட்டை இலாபநோக்கிற்கு கீழ்ப்படியச் செய்தமை மிகப்பெரிய சீரழிவிற்குத்தான் வழிவகுத்துள்ளது.

கலைகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகைகளை நிறுத்தியதாலும், கலைப்படைப்புக்களில் வலதுசாரிக் கருத்துக்களின் தாக்குதலினாலும் பரந்துபட்ட பண்பாடு பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. அருங்காட்சியகங்கள், இசைக் குழுக்கள், நாடகங்கள், பொதுத் தொலைக் காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றிற்கு அரசாங்க மானியங்கள் உள்ளீடாக அகற்றப்பட்டுள்ளன. கலை மற்றும் இசைக் கல்வி பெரும்பாலான பொதுப் பள்ளிகளிலிருந்து கடுமையாய் குறைக்கப்பட்டுள்ளன அல்லது ஒரேயடியாய் அகற்றப்பட்டு விட்டன. நூலக நேரங்களும் சேவைகளும் குறைக்கப்பட்டு விட்டன. இத்தகைய கூலிப்படை ரீதியான மற்றும் கலை கலாச்சாரங்களை வெறுக்கும் மற்றும் அவற்றைப் புரியா (பிலிஸ்டைன்) அணுகுமுறையால் அறிவார்ந்த மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த சமூக அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை நிர்ணயிப்பது கடினமாகும். ஆயினும், இராணுவவாதத்தை, மிருகத்தனத்தை புகழ்தல் மற்றும் தற்பெருமை பாராட்டுதல் இவற்றிற்கும் முந்தைய தலைமுறைகளின் கலைத்துவ மற்றும் பண்பாட்டு மரபியத்திற்கு குரோதம் காட்டுதலுக்கும் சர்ச்சைக்கில்லாத தொடர்பு உண்டு.

மக்கட்தொகையின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இசை, நடனம், நாடகம் மற்றும் கலை முதலியவை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திற்கோ கிடைக்கச்செய்வதை உறுதிப்படுத்துவதற்கு கலைகளின் வளர்ச்சிக்கும், புதிய பள்ளிகள் தோற்றுவிக்கவும், கல்வி மையங்களுக்கும் ஏராளமாக பணம் அளிக்கவேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. கலைகளுக்காக உதவித்தொகை, மானியத்தொகை வழங்குதல் பறிய முடிவு அரசியல்வாதிகளிடம் விடப்படாமல், கலைஞர்கள், இசைஞர்கள் மற்றும் பண்பாட்டுத்துறை தொழிலாளர்கள் கொண்ட குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

பண்பாட்டு உரிமையுடன், செய்தி ஊடகத்தின் சுதந்திரமும், அரசியல் கருத்து வெளியீட்டு சுதந்திரமும் பெரும் மதிப்புக்குறைவிற்கு ஆளாகி இருக்கின்றன. பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் செய்தி ஊடகம், அரசாங்கத்திற்கும், பெருவர்த்தகத்திற்கும் ஒரு பிரச்சார சேவையாக மிக வருந்தத்தக்க பங்கை ஆற்றியுள்ளன. ஒலிபரப்பு வலைப்பின்னல்கள் மற்றும் பெரிய செய்தித்தாள்கள் ஆகியவை கையளவே ஆன பெருநிறுவனங்களினால் அதிகரித்த அளவில் ஏகபோகத்திற்கு ஆளாகி, முன்பு அரசாங்க நடவடிக்கைகளையும் பெருவர்த்தக செல்வந்தத் தட்டின் செயல்களையும் விமர்சித்து வெளியிட்ட, பெருமையுடன் சமூகத்தில் "நான்காம் பிரிவு" என்று கூறிக்கொண்ட பெயரை வெகு காலத்திற்கு முன்னரே சரணாகதி அடையச் செய்து விட்டன. நன்கு அறிதல் பெற்ற மக்கள்தான், ஜனநாயக ஆட்சியின் அடிப்படைக் கூறு என்ற கூற்றில் உண்மை உள்ளது. ஆனால் செய்தி ஊடக நிறுவனங்களின் நலமிலாப் போக்கினால் வழங்கப்படும் கடைந்தெடுத்த பொய்களும் திட்டமிட்ட தவறான செய்திகளும், ஜனநாயக உரிமைகளையே தகர்ப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.

"சுதந்திரமான செய்தி ஊடகம்" என்ற பெயரை, பெருஞ்செல்வத்தைக் கொண்டு செய்தித் தாள்களையும், காற்று அலைகளையும் சொந்தமாக்கும் மற்றும் கட்டுப்படுத்தும், மக்கள் எதைக் காணவேண்டும் என தீர்மானம் செய்வதையும், பொதுமக்கள் மனத்தை பிற்போக்கான மற்றும் மேம்பாடற்ற தப்பெண்ணங்களால் மாசுபடுத்தும் தீங்குசெய்பவர்களின் திறமையுடன் சமப்படுத்துவதை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கின்றது. செய்தி ஊடக ஏகபோகங்களை உடைத்து அவற்றை எதிர் கருத்துக்களின் கண்ணோட்டத்திற்கு உத்தரவாதம் தரும் ஜனநாயக ரீதியாய் அணுகக்கூடியதாய், பொதுமக்களின் உடைமையாயும் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழும் வைக்கப்பட வேண்டும்.

செய்தி ஊடகம் ஜனநாயகம் ஆக்கப்படுவது, அமெரிக்க அரசியல் முறையே பரந்த முறையில் மாற்றி அமைக்கப்படுவதுடன் கட்டாயம் இணைக்கப்படவேண்டும், தேர்வுக் குழு (Electoral College) என்னும் காலப் பயன்பாடு கடந்துவிட்ட நிறுவன அமைப்புக்கள் அகற்றப்பட்டு, அனைத்துக் குடிமக்களும் வாக்குரிமையை பயன்படுத்துவதில் உள்ள ஏராளமான தடைகள் அகற்றப்பட்டு, ஜனநாயக, குடியரசுக் கட்சிகளை எதிர்க்க விரும்பும் மூன்றாம் கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிடுவதில் இருக்கும் பல தடைகளும் அகற்றப்படவேண்டும். இந்தத் தடைகள், கிட்டத்தட்ட 300 மில்லியன் மக்கட்தொகையினர் உள்ள நாட்டில் பரந்த வேறுபாடுகளை எடுத்துக் கொண்டால், அதிகரித்த அளவில் இழிவிற்காளாகியுள்ள, அறிவுக்கு ஒவ்வா, குறுகிய தன்மை உள்ள இருகட்சி முறையை அரசாங்கமே ஆதரிப்பதற்கு சமமாக இருக்கிறது; SEP அனைத்துக் கட்சிகளும் வாக்குகளில் முக்கிய பங்கு பெறும் விகிதாசார தேர்தல் முறைக்கு வாதிடுகிறது; அதையொட்டி அனைத்துக் கட்சிகளும் சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவம் பெறும்.

பூமியின் வரம்பிற்குட்பட்ட வளங்களை அறிவுபூர்வமாய் அபிவிருத்தி செய்வதற்கு ஒரு சோசலிச பொருளாதார வேலைத்திட்டம் மட்டுமே உறுதி வழங்க முடியும். அனைத்து மனித செயற்பாடுகளையும் இலாபம் மற்றும் தனிச் சொத்துக் குவிப்புக்கான உந்துதலுக்கு கீழ்ப்படிய செய்வதினால் சுற்றுப்புறச்சூழல் பேரழிவினை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. மக்கள் சமூகத்தின் அதிகரித்த அளவிலான சிக்கலான தேவைகளினால் முன்வைக்கப்படும் இந்த அல்லது அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இலாப அமைப்பு முறையின் இயலாமையானது மனிதகுலம் தப்பித்து உயிர்வாழ்வதற்கே ஓர் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சோசலிசப் பொருளாதார திட்டமிடுதல், பூமியின் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதில் உண்மையான பூகோள ஒத்துழைப்பிற்கான நிலைமைகளை உருவாக்கும்.

நாம் இங்கே விவாதித்த சமூக உரிமைகள் எதுவுமே, அவற்றை பெறப் போராடும் உழைக்கும் மக்களின் மிகப்பரந்த, சக்திவாய்ந்த இயக்கம் தோன்றாமல் அடையப் பெறமுடியாதவை ஆகும். அத்தகைய இயக்கம் ஒன்றை அடிமட்டத்திலிருந்து அமைப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சியானது, தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தேர்ச்சி பெற்ற சொந்த வேலையில் இருப்போர் இவர்களையெல்லாம் முன்வருமாறும் சிறந்த உலகத்தை அமைப்பதற்கான போராட்டத்தில் இணையுமாறும் அழைப்பு விடுத்து, 2004 தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள விருப்பம் கொண்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியிலிருந்து முறித்துக்கொள்ள

அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின், மைய வரலாற்றுப் பிரச்சினை, முதலாளித்துவ வர்க்க கட்சிகளிலிருந்து முறித்துக் கொண்டு, அதன் சொந்த பரந்த அளவிலான சுயாதீனமான கட்சியை நிறுவுவதற்கு இயலாமையாக இருந்து வருகிறது. நடைமுறையில் இருக்கும் இரு கட்சி முறையானது, விருப்பத்தேர்வு என்ற பெயரில் பிரமையைத்தான் கொடுக்கிறது. தங்களுக்குள் என்ன கருத்துவேறுபாடு இருந்த போதிலும் கூட, ஜனநாயகக் கட்சியினர், மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே அமெரிக்க முதலாளித்துவத்தின் சமூக கட்டமைப்பை: வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் தனியார் செல்வத்தாலும் இலாபத்திற்கான உற்பத்தியாலும் மேலாதிக்கம் செய்யப்படலை ஏற்பதோடு அதைப் பாதுகாக்கின்றனர்.

கடினமான சமூக மற்றும் சட்ட தடைகள் இருந்தபோதிலும், உழைக்கும் மக்கள் வாக்குப் போடும் உரிமையை பெற்று அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும், அவர்களை பொறுத்த வரையில் எந்த மாற்றத்திற்கும் அவர்கள் வாக்குப் போட இயலாது; அரசாங்கத்தின் கொள்கைகள்மீது சக்திமிக்க வகையில் செல்வாக்கு செலுத்த முடியாது. அவையனைத்தும், பொருளாதார செல்வந்த தட்டின் உள்ளேயுள்ள போட்டிப் பிரிவுகளின் (கன்னைகளின்) போட்டியிடும் நலன்களால் முற்றிலும் தீர்மானிக்கப்படும். தொழிலாள வர்க்கம் நடைமுறையில், அரசியல் ரீதியாய் வாக்குரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் முந்தைய பரந்த சமூக இயக்கங்களின் பிரதான பலவீனம் - 1890 களின் மக்கள் எழுச்சி, முதல் உலகப் போருக்கு முன் IWW உடைய போர்க்குணமிக்க தொழிற்சங்க போராட்டங்கள், 1930களின் மகத்தான தொழிலாளர் எழுச்சி, 1960களின் மக்கள் உரிமை மற்றும் போர் எதிர்ப்பு இயக்கங்கள் இவை அனைத்துமே, ஜனநாயகக் கட்சியின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பதில் வெற்றியடையவில்லை. இதன் விளைவாக தொழிலாள வர்க்கம், ஏதாவதொரு சமூக கெடுதலின் தீவிரத்தை குறைப்பதற்கான போராட்டத்துடன் மட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. பெருநிறுவன அமைப்புக்களுக்கு எதிராக, மக்களின் தேவைகளுக்கு சேவை செய்வதற்கு அமெரிக்க சமூகத்தை முறையாக மறு ஒழுங்கு செய்தலை அரசியல் செயல்பட்டியலில் அதனால் வைக்க முடியவில்லை.

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் போன்ற ஜனநாயகக் கட்சியின் தொலைநோக்கு உடைய தலைவர்கள், இலாப அமைப்பை ஒட்டுமொத்தமாக காப்பாற்றும் பொருட்டு முதலாளித்துவத்தின் மிகத் தீமையான கூறுபாடுகளை தணிக்க முயற்சி செய்தனர். அவருடைய புதிய பொருளாதார செயற்பாட்டுக் கொள்கைகள், அவற்றை ஒட்டி 1960 களில் லிண்டன் ஜோன்சன் இன் கீழ் இயற்றப்பட்ட சமூக நடவடிக்கைகள், ஜனநாயகக் கட்சியை, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியுடன் அமெரிக்க முதலாளித்துவத்திற்கான எந்தவித நேரடி சவாலையும் தடுப்பதற்கு வகை செய்தது.

ஆயினும், கடந்த 30 ஆண்டுகளில், அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோள பொருளாதார நிலையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது, பெரு வர்த்தக கட்சிகள் இரண்டையும் தீவிரமாக வலது புறம் நோக்கி இடம்பெயர்தலை உருவாக்கியுள்ளது. குடியரசுக் கட்சியினர் வெளிப்படையாக சமூக பிற்போக்கு கொள்கைகளின் ஒரு செயற்பட்டியலை தழுவி, கடந்த காலத்தில் கொடுக்கப்பட்டுள்ள சமூக சீர்திருத்தங்கள் அனைத்தும் அழிக்கப்படவேண்டும் என்று கூறுகின்றனர். ஜனநாயகக் கட்சியினரோ தாராண்மை சமூக சீர்திருத்தத்தின் எந்த விதமான கொள்கைகளையும் கைவிட்டுவிட்டு, வார்த்தைகளில் இல்லாவிட்டாலும் செயலில், குடியரசுக் கட்சியினரின் வர்க்க மற்றும் போர்க் கொள்கைகளுக்கு ஏற்ப தங்களையே மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதோடுகூட, பெருகிய முறையில் நிதியின் பங்கு, செல்வந்தர், பெருநிறுவன நலன்கள் ஏராளமாக பிரச்சார நிதிக்குக் கொடுக்கும் பணங்களும் அதிகரித்து, அதிகாரபூர்வமான பதவியில் இருப்பவர்களுக்கு முறையாக இலஞ்சம் கொடுப்பதுபோன்ற நிலைதான் இருக்கிறது. 2000 தேர்தல்களின்போது 3 பில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை செலவழிக்கப்பட்டது, இந்த ஆண்டு அதையும் விடக் கூடுதலான பணம் செலவழிக்கப்படும், அதேநேரத்தில் வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்வதில் சதவிகிதம் குறைந்து, உழைக்கும் மக்கள் இரு கட்சிகளையுமே பெருஞ் செல்வந்தரின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகத்தான் கருதுகின்றனர்.

1960களின் கடைசியில் முக்கியமான சமூக சீர்திருத்தங்கள் சட்டப்படி அமுல்படுத்தப்பட்டதை அடுத்து, அமெரிக்காவில் ஒரு தலைமுறை முழுவதும் முதிர்ந்த மனநிலைக்கு வந்துள்ளனர். முதலாளித்துவ அமைப்பால் சமூக துன்பங்களை அகற்றமுடியும் என்றதன் அடிப்படையில் ஜோன்சன் "வறுமையின் மீதான போர்" என்ற கருத்தை பிரகடனப்படுத்தி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அமெரிக்க முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவு செல்வம் கொழித்து நிற்பதுடன், கூடுதலான மக்கள் 1965ல் இருந்ததை விடவும் அதிகமாக வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

கிளின்டன் நிர்வாகத்தின் நிலைச்சான்று, ஜனநாயகக் கட்சியின் "தாராண்மைவாத" திவாலை விளக்கிக் காட்டுகின்றது. இன்றைய புஷ் நிர்வாகத்தின் பல பிற்போக்கான கொள்கைகளுக்கான அடிப்படையை கிளின்டன் அமைத்துக் கொடுத்தார்: உறுதிகூறப்பட்டிருந்த சுகாதார பராமரிப்பு சீர்திருத்தத்தை கைவிட்டமை, சமூக நலன்களுக்கான அமைப்பை அறவே அகற்றியமை, ஜனநாயக உரிமைகளை தாக்கியமை, சோமாலியா, ஹைத்தி, பொஸ்னியா, கோசோவோ, சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகியவற்றில் இராணுவ குறுக்கீடுகளை செய்தது மற்றும் தாக்கியமை ஆகியனவாகும். பில் மற்றும் ஹில்லேரி கிளின்டன் இருவருமே, ஈராக்கின் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிக்கும் புஷ்ஷின் முடிவை ஆதரித்துள்ளதோடு, இருவருமே அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா படைகளை திரும்பப் பெறுவதை எதிர்க்கின்றனர்.

குடியரசுக் கட்சியின் வலது சாரியினரால் அமெரிக்க அரசாங்கம் கட்டுப்படுத்தப்படுவதற்கு ஜனநாயகக் கட்சியினர் கதவைத் திறந்து விட்டதுடன், மிக வலதுசாரி அரசியல் செயல்பாட்டுக்காரர்கள், நீதிபதிகள், தனித்த வழக்குரைஞர் கென்னத் ஸ்டார் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட பதவி நீக்க விசாரணை சதித்திட்டத்துக்கு எதிராக அக்கறை கொண்ட போராட்டம் எதையும் நடத்த மறுத்தது. இந்த உறுதிகுலைக்கும் பிரச்சாரத்தைத் தொடர்ந்து, 2000ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை குடியரசுக் கட்சியினர், உச்ச நீதிமன்றத்தின் தலையீடு மூலம் கடத்தி, தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதியை ஆட்சியில் இருத்தியமைக்கு, ஜனநாயகக் கட்சியினர் சரணாகதி அடைந்தனர்.

உத்தியோகபூர்வ அமெரிக்க அரசியலின் வலதுசாரி வரைபாதையில் ஒரு மேலதிக கட்டத்தை, 2004ம் ஆண்டு பிரச்சாரம் குறிக்கிறது. குடியரசுக் கட்சியில் அமெரிக்க பெருநிறுவன செல்வந்த தட்டின் தடையற்ற மற்றும் கொள்ளைப் போக்குடைய பிரிவுகளின் தூய வெளிப்பாட்டை ஒருவர் காண்பார். தங்களுக்கு பொது மக்களிடையே அடிப்படை ஆதரவை திரட்டுவதற்காக, நடுத்தர வர்க்கத்தின் மிகப் பின்தங்கிய மற்றும் பிற்போக்கு சக்திகளான கிறிஸ்தவ வலதுசாரி, இன வெறியாளர், ஒட்டுமொத்த பாசிஸ்ட்டுகள் ஆகியோரை அணிதிரட்ட அவர்கள் விரும்புகின்றனர். இந்த சக்திகளின் பொது இலக்கு, பெருநிறுவனம் இலாபம் சம்பாதிப்பதன் மீதான மற்றும் உழைக்கும் மக்களை சுரண்டுவதன் மீதான அனைத்துவகை தடைகளையும் அகற்றுவது என்பதேயாகும். தொழிற்சங்கங்கள் இன்னும் மிச்சம்மீதம் ஏதாவது சலுகைகளை பிரதிநிதித்துவம் செய்யும் அளவிற்கு, சுற்றுச்சூழல், சுகாதார, பாதுகாப்பு விதிமுறைகள்; வர்த்தக வருமானம், வாரிசு முறையில் வந்த சொத்துக்கள், இவற்றின் மீது வரிவிதித்தல்; அதிக வருமானத்திற்கு முன்னேற்றகரமான அதிக வரி; எட்டு-மணி நேர வேலை; சிறுவர்களை வேலையில் வைக்க கட்டுப்பாடுகள் இதுபோன்றவற்றை துடைத்துக்கட்ட இலக்கு வைக்கப்பட ஏற்ற நிலைமைகளை உருவாக்குகின்றன.

ஜனநாயகக் கட்சியானது அதன் வேட்பாளர்கள், மக்கள் நலனுக்காக வாதிடுபவர்கள் என பலநேரம் பறைசாற்றிக் கொள்ளும் தன்மை இருந்தபோதிலும்கூட, அக்கட்சியானது, அமெரிக்க முதலாளித்துவத்தின் இரண்டு முக்கிய அரசியல் ஸ்தாபனங்களில் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அது நிதி ஆதிக்க ஒருசிலவர் ஆட்சியின் நலன்களுக்கு சேவை செய்கின்றது; அது சூழ்நிலைகள் கட்டாயப்படுத்தினால், வெள்ளைமாளிகையில் ஜோர்ஜ் புஷ்ஷிற்குப் பதிலாக இருத்த, தன்னுடைய நலன்களுக்கு உதவும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தீவிர ஆர்வம் காட்டுகிறது. ஈராக் போரினாலும், உள்நாட்டில் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மோசமாகி வருவதாலும் புஷ் நிர்வாகம் பெருகிவரும் கஷ்டங்களை எதிர்கொள்ளுகிறது என்பது தெளிவானவுடனேயே, ஆளும் செல்வந்த தட்டு, போரெதிர்ப்பு உணர்வுடன் அடையாளப்படுத்திக் கொள்வதில் நெருங்கிய தொடர்புடையவராகக் கருதப்பட்ட, ஜனநாயகக் கட்சியின் ஆரம்ப தேர்தல்களில் முன்னணியில் இருந்த ஹோவர்ட் டீனை விரைவில் அகற்றி, கெர்ரியை துணிவுமிக்க வேட்பாளராக வைத்தது.

ஜனநாயகக் கட்சி பெரு வணிகத்தின் ஒரு கருவி என்ற மறுக்கமுடியாத வரலாற்று வாதத்தை, இந்த மாற்றம் எவ்வளவு விரைவில் கொண்டுவரப்பட்டது என்பது விளக்கிக்காட்டுகிறது. இக்கட்சி உழைக்கும் மக்களால் தனது கருவியாக "எடுத்துக்கொள்ளப்பட" அல்லது மாற்றப்பட முடியாது. முழுத் தேர்தல் முறையும் பெரும் பணம் மற்றும் செய்தி ஊடகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுத்தான் இருக்கிறது. வேட்பாளர்கள் தங்களின் பயிற்சிகளினூடாக செலுத்தப்பட்டு உரிய வடிவம் கொடுக்கப்படுகிறார்கள். இறுதிப்பகுப்பாய்வில், ஜனாதிபதித் தேர்வு, மக்களின் ஜனநாயக விருப்பத்தைக் காட்டிலும், ஆளும் செல்வந்தத்தட்டிற்குள்ளேயான ஒருமித்த கருத்தையே பிரதிபலிக்கிறது.

ஆரம்ப கட்டத் தேர்தலின்போது ஜனநாயகக் கட்சி தலைமையிடத்திற்குள்ளே பூசல்கள் இருந்தபோதிலும், அவை எவ்வளவுதான் கடுமையாக இருந்தபோதிலும், அவை அடிப்படையில் தந்திரோபாயங்கள் பற்றியதாகும். ஒரு சமூக எதிர்ப்பு எழுச்சியை முன்னரே தனதாக்கிக் கொள்ள, மற்றும் உயிர்ப்பூக்கத்தை அழிக்க, அது முடியாவிட்டால் அதன் தீவிரத்தைக் குறைத்து, முதலாளித்துவ அமைப்பு ஒட்டுமொத்தத்தையும் அச்சுறுத்தாத வேறு வழிகளில் அதைத் திசைதிருப்புவதில் எவ்வளவு சிறப்பாக ஜனநாயகக் கட்சி தன் நிலையை எடுக்க முடியும் என்பதுதான் அது. போட்டியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், டீன், கெர்ரியின் பின் அணிதிரண்டு, தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் போரெதிர்ப்பு மூன்றாம் கட்சி பிரச்சாரத்திற்கு ஆதரவான எந்தவிதமான முயற்சியையும் கண்டனம் செய்தபொழுது, இதன் தெளிவான விளக்கிக்காட்டல் வந்தது.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம்

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக SEP போராடி வருகிறது. இது இருகட்சி முறையிலிருந்து நெறியாக முறித்துக் கொள்ளுவது என்பது மட்டுமின்றி, அனைத்து "தீவிர" மற்றும் அரைகுறை மக்கள் விருப்பு அரசியலின் அனைத்து வடிவங்களையும் நிராகரிப்பது ஆகும். ஏனெனில் இறுதிப் பகுப்பாய்வில், இவை அனைத்தும் முதலாளித்துவ அரசியல் ஒட்டுமொத்தத்திற்குமான இடதுபுற தூண்களே ஆகும். இந்தப் போக்குகளில் சில ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே வெளிப்படையாகவே இயங்குகின்றன (டெனிஸ் குஷினிக், அல் ஷார்ப்டன் போன்றவர்களுடைய பிரச்சாரங்கள்); ஏனையோர் பசுமைக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கின்றனர் அல்லது ரால்ப் நாடெருடைய வேட்புமனுக்கு ஆதரவு கொடுக்கின்றனர். ஆனால் அவை அனைத்துமே இலாபமுறைக்கு எதிரான உழைக்கும் மக்களால் நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையும் திசைவிலகச்செய்து தடம்புரள வைத்துவிடும் முன்னோக்குகளுக்கு வக்காலத்து வாங்குகின்றன.

Kucinich தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மற்றும் அமெரிக்க வணிகத்தின் மிகப் பிற்போக்கான, போட்டியற்ற பிரிவுகளின் பொருளாதார தேசியவாதத்தை அரவணைக்கிறார். ஜனநாயகக் கட்சி இடது புறம் தள்ளப்பட முடியும் அல்லது ஒரு முற்போக்கான அரசியல், சமூக சீர்திருத்தத்தின் கருவியாக மாற்றப்படமுடியும் என்ற போலித் தோற்றத்தை நாடெர் வளர்க்கிறார். தன்னுடைய பிரச்சாரத்தை வெளிப்படையாக கெர்ரியின் பிரச்சாரத்தின் இணைப்பு என்று காட்டிக்கொண்டு, புஷ் நிர்வாகத்திற்கு எதிராக "இருமுனை" போராட்டம் இருக்க வேண்டுமென வாதிட்டு, அதன்மூலம் இருகட்சிமுறையில் இருந்து உண்மையான சுதந்திரம் வேண்டும் என்ற கருத்தைக் கைவிடுகின்றார்.

ஷார்ப்டனுடைய வேட்புத்தன்மையோ இன அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளது, உழைக்கும் மக்களுடைய நலன்களுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பரந்த சர்வதேச இயக்கத்தை கட்டுவதற்கான இன்றியமையா தேவைக்கும் இது அடிப்படையில் விரோதப் போக்கு உடையது ஆகும். கறுப்பர்களிடையேயோ, இலட்டினோக்கள் இடையேயோ அல்லது மற்ற இனப்பிரிவினரிடையேயோ, ஒரு குறுகிய, சலுகைமிக்க சமூகத்தட்டினரின் நலன்களை, ஒரே சீராய் அவ்வாறு இனக்கூறுபாடுகளை அரசியலில் பிரதிபலிப்பதாகக் கூறும் அனைவரும் முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்புக்குள்ளே அதிகாரங்கள், அவற்றை ஒட்டிய சிறப்பு நிலைகள் இவற்றைத்தான் தேடுபவர்கள் ஆவார்கள்.

பண்பாட்டுத் தேசியவாதம், பெண்ணிலைவாதம் உட்பட அடையாளங்காட்டும் அரசியலின் பல்வேறு வகைகளையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது; இவை அனைத்தின் அடிப்படைப் பாத்திரமும் முதலாளித்துவ சமுதாயத்தில் உள்ள மிக அடிப்படையான பிரிவை, அதாவது சமூக வர்க்கங்களுக்கு இடையிலான பிளவை மறைப்பதாகத்தான் இருக்கின்றன. அனைத்து உழைக்கும் மக்களும் ஒற்றுமையுடனும், ஒருங்கிணைந்தும் செயலாற்றவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அந்தப் பின்னணியில், வெள்ளை மற்றும் சிறுபான்மை தொழிலாளர்களை அல்லது மாணவர்களை, வேலைக்கோ அல்லது கல்லூரியில் நுழைவதற்கோ ஆன பிரிவினைப்படுத்தும் போராட்டத்தில் ஒருவருக்கு ஒருவரை எதிராக நிறுத்தும், உடன்பாட்டு நடவடிக்கை கொள்கைகளை நாம் எதிர்க்கிறோம். அத்தகைய வேலைத்திட்டங்கள் ஒரு சிறப்புச் சலுகைமிக்க சிறுபிரிவிற்குத்தான் நன்மை அளிக்குமே ஒழிய, பரந்த சிறுபான்மையினருக்கு நலன்களை அளிக்காது. மிகப் பெரிய அளவிலான சமுதாய முதலீட்டைக் கொண்டு நல்ல ஊதியமுள்ள வேலைகள், தரமான ரk-12 மற்றும் கல்லூரிப் படிப்பு, இயலக்கூடிய வீட்டு வசதி, மற்ற சமுதாயத் தேவைகள் இவற்றை அளிக்கக் கூடிய கட்டமைப்புக்குள்ளே, முழுமையான மற்றும் உண்மையான சமத்துவ வாய்ப்புக்களைத்தான் நாம் வலியுறுத்துகிறோம். உழைக்கும் மக்களின் அனைத்துப் பகுதியினரின் போராட்டத்தின் ஒற்றுமையின் அடிப்படையில், அத்தகைய கொள்கை மட்டுமே, மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்கள் இனம் மற்றும் பால் அடிப்படையில் பகிர்ந்து கொடுக்கப்படும் என்ற முறையில் இல்லாமல், அனைத்து மக்களும் பொருளாதாரப் பாதுகாப்பை முழுமையாக அடையக்கூடிய, தங்கள் திறனை முழுமையாக அடையக்கூடிய ஒரு சமுதாயத்திற்கான நிலைமைகளை உருவாக்க முடியும்.

ஒரு மூன்றாவது முதலாளித்துவக் கட்சியின் உருவாக்கத்திற்கு ஆதரவாக, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் சோசலிச இயக்கம் வளர்ச்சி பெறுவதற்கு எதிராக பசுமைக் கட்சியினர், ஒரு பிற்போக்கான அரசியல் பாத்திரத்தை ஆற்றுகின்றனர். ஜேர்மனியில் பசுமைக் கட்சியின் வரலாறு காண்பித்துள்ளதுபோல், முதலாளித்துவ அரசியலில் ஒருமுறை தங்களின் செல்வாக்கை சாதிக்கத் தொடங்கியதும் அவர்கள் விரைவாகவே தங்களின் ஆரம்ப கால தீவிரத்தை கைவிட்டுவிடுவர். ஜேர்மனிய பசுமைக் கட்சியினரில் முன்பு சமாதானவாதிகளாக இருந்தவர்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முதன்முதலாக ஜேர்மன் படையினர் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட வழி வகுத்துள்ளனர். பசுமைக் கட்சி வேட்பாளரான பீட்டர் காமெஜொ, கலிஃபோர்னியாவில் வலதுசாரியினர் ஆர்வத்துடன் கொண்டுவந்த கவர்னரை திருப்பியழைத்தல் தேர்தலில் மறைமுகமாக ஜனநாயகக் கட்சியின் முக்கிய வேட்பாளரான குருஸ் பஸ்டமன்டேக்கு ஆதரவு வாக்கைத் தர முன்வந்தார்.

2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், இடது பற்றிப் பேசும் இந்த அரசியல் வாதிகள், பெரு வர்த்தக கட்சி இரண்டிலிருந்தும் சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டுவது பற்றிய முக்கிய பிரச்சினையை மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்க விரும்புவார்கள். இவர்கள் புஷ்ஷிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பை, கெர்ரி மற்றும் ஜனநாயகக் கட்சியின் பின்னே ஆதரவாக திசைதிருப்பிவிடுவர். இவர்கள் அனைவருமே, ஏதோ புஷ் ஒருவர்தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆயுதம் போலவும், ஆளும் தட்டின் மற்ற பல கருவிகளில் அவரும் ஒருவர் என்பதைக் காட்டிலும், "புஷ்ஷைத் தவிர எவரும் சரி" என்ற நிலைக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

இத்தகைய "அதைவிடக் குறைந்த கெடுதல்" என்ற வகையிலான அரசியல் அனைத்தும் உண்மையில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு முட்டுச் சந்தாகும். ஏகாதிபத்திய போருக்கும் சமூக பிற்போக்கிற்கும் எதிரான போராட்டத்தில் குறுக்கு வழி ஏதும் கிடையாது. ஒரு சுயாதீனமான, வெகுஜன சோசலிசக் கட்சியை அமைத்திடல் இப்பொழுது இன்றியமையாததாகும். இந்த போராட்டத்திற்கான ஒரு கட்டமைப்பை வழங்கவும் ஒருமுகப்படுத்தவும் சோசலிச சமத்துவக் கட்சி 2004ம் ஆண்டு தேர்தலில் பங்கு கொள்ளுகிறது.

சோசலிசமும் அமெரிக்க தொழிலாள வர்க்கமும்

சோசலிச சமத்துவக் கட்சி சர்வதேச சோசலிச இயக்கத்தின் மாபெரும் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும். சமத்துவம், மனித ஒற்றுமை, கூட்டுறவு, இல்லாமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து மனிதகுலத்தை சடரீதியாகவும் ஆன்மரீதியாகவும் விடுவித்தல் இவற்றிற்காக சோசலிசம் பாடுபடுகிறது. சோசலிசத்தின் முதல் பணி, வறுமையை அகற்றுவது ஆகும்; மனிதனுடைய உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றத்தை கணக்கில் கொண்டால், இந்த இலக்கு முற்றிலும் அடையக்கூடியதே ஆகும். மனித சமுதாயத்தின் பரந்த மக்களுடைய வாழ்க்கை தரங்களை உயர்த்தி, முழுமையான சமத்துவத்திற்கான நிலைமைகளை தோற்றுவிக்கவும் சோசலிசம் பாடுபடுகிறது.

ஆனால் மனிதன் ரொட்டியால் (பாண்) மட்டுமே வாழவில்லை; உடனடியான சடத்தேவைகள் மிக முக்கியமானவையாக இருந்தபோதிலும், அவற்றைப் பூர்த்தி செய்வதோடு சோசலிசத்தின் முன்னோக்கு நின்று விடவில்லை. அந்த சாதனையானது, பண்பாடு, விஞ்ஞானம் மற்றும் தனிப்பட்ட ஆண்கள், பெண்களின் அறிவார்ந்த மற்றும் ஒழுக்கநெறி மேன்மை மாபெரும் அளவில் பூத்துக் குலுங்குவதற்கான அடித்தளங்களை அமைக்கும். உற்பத்தி சக்திகளின் சமூக உடைமை, சர்வதேச திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு உள்ள உலகில், மக்களுடைய திறமைகள், ஆர்வங்கள் மற்றும் இயல்திறன்களின் சாத்தியமான முழுவளர்ச்சியையும் சோசலிசம் எதிர்பார்க்கிறது, மற்றும் மக்கள் பங்கேற்பு, ஜனநாயக ரீதியான கட்டுப்பாடு இவற்றின் பரந்த அளவிலான விஸ்தரிப்பு பொருளாதார பாதுகாப்பின்மையின் அரைபடும் செயலிழந்த நிலையிலிருந்தும் நாயை-நாய் அடித்துத் தின்னும் போட்டியின் மனிதநேயமற்ற பாதிப்பிலிருந்தும் மனிதனை மீண்டுவரக் கூடியவனாக ஆக்கும்.

கார்ல் மார்க்ஸ் வருகையுடன், சோசலிசம் ஓர் விஞ்ஞானமானது. 1917 அக்டோபர் புரட்சியோடு அது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து முதலாவது தொழிலாளர் அரசை -சோவியத் ஒன்றியத்தை- ஸ்தாபித்ததன் மூலம் ஒரு பரந்த மக்கள் இயக்கத்தின் வேலைத் திட்டமானது.

சமூக சமத்துவத்திற்கான, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சர்வதேச போராட்டத்தின் பகுதியாக ரஷ்ய புரட்சி விளங்கியது. அமெரிக்க தொழிலாளர்களின் ஒவ்வொரு முக்கியமான முன்னேற்றமும், நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேர வேலையிலிருந்து, குழந்தை உழைப்புச் சட்டங்கள், அனைவருக்கும் பொதுவான பொதுக்கல்வி, மிகப்பெரிய அளவில் தொழில் துறையில் சங்கங்கள் நிறுவப்படல், தெற்கே ஜிம் க்ரோவின் (Jim Crow) பிரிவினை கருத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது வரையில், அனைத்தும் சோசலிச எண்ணம் கொண்ட போராளிகளால் தலைமை தாங்கப்பட்டதாகும்.

பல மகத்தான உயர்சிந்தனைகள் போலவே, சோசலிசமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, காட்டிக் கொடுக்கவும் பட்டது. சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்ராலின் கீழ் எழுந்த ஓர் அதிகாரத்துவத்தால் அது காட்டிக் கொடுக்கப்பட்டது. ஸ்ராலினிசம், ரஷ்ய புரட்சியின் சர்வதேசிய மரபுரிமையின் மற்றும் அனைவருக்கும் சம உரிமைக்கு போராடுவதன் தொடர்ச்சியாக இருக்கவில்லை. அது "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" எனும் தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், புரட்சிக்கு எதிரான பழமைவாத, அதிகாரத்துவ பிற்போக்காக இருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகத்தை நசுக்கியது, சர்வாதிகார ஆட்சியை திணித்தது, உண்மையான மார்க்சிஸ்டுகளை கொன்றழித்தது மற்றும் உலகெங்கிலும் படர்ந்திருந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை நிலைகுலையச் செய்தது - இவை எல்லாவற்றையும் "சோசலிசம்" எனும் பெயரில் செய்தது. ரஷ்ய புரட்சியும் சோசலிசமும் ஸ்ராலினிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது, கிரெம்ளின் அதிகாரத்துவம் சர்வதேச ஏகாதிபத்தியத்துடன் நேரடியாக ஒத்துழைத்து சோவியத் ஒன்றியத்தை உடைத்ததிலும், 1990 களின் ஆரம்பத்தில் முதலாளித்துவத்தை மீட்டதிலும் உச்சக் கட்டத்தை அடைந்தது.

அமெரிக்காவில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்குள்ளேயே வளர்ச்சி கண்ட அதிகாரத்துவத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது. அதிகாரத்துவம், முதலாளித்துவ அமைப்பை பாதுகாத்ததோடு, பிரதானமாக ஜனநாயகக் கட்சியுடனான அதன் கூட்டின் மூலமாக, அமெரிக்க பெரு வர்த்தகத்திற்கு தொழிலாளர்களை அரசியல் ரீதியாய் அடிபணியச் செய்தது. AFL-CIO -ன் காட்டிக்கொடுப்பு, தொழிற்சங்கங்கள் தங்களை பெருநிறுவன நிர்வாக மேலாண்மையுடன் அடையளப்படுத்திக்கொள்வதற்கு இட்டுச்சென்றது, மற்றும் தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை அடக்கும் கருவிகளாக அவர்கள் மாற்றம்பெற வழிவகுத்தது.

எங்கள் இயக்கம் இந்த அதிகாரத்துவத்திற்கான எதிர்ப்பில், சோசலிசத்திற்காகப் போராடிய, சிறந்த மிகவும் துணிவுள்ள மற்றும் தொலைநோக்கு கொண்ட தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளின் மரபுரிமை செல்வத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த மரபின் மிகப்பெரிய பண்புருவாக விளங்கியவர், ரஷ்ய புரட்சியின் தலைவராக விளங்கியவரும், ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியவரும் 1938ல் நான்காம் அகிலத்தை - சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நிறுவியதன் மூலம் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்பிற்கு அடிப்படையை அமைத்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கியாவார்.

சோசலிசத்திற்காக அமெரிக்கா மாபெரும் போராளிகளையும் தோற்றுவித்துள்ளது; இந்த ஆடவரும் பெண்டிரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் போராடி, தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் ஆவர். அவர்களுள் Big Bill Haywood, Eugene Debs, James Cannon போன்ற பெரும் தலைவர்களும் அடங்குவர். அமெரிக்க தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் பாதுகாப்பதற்கு இன்று போராட்டத்தை ஒழுங்கமைக்கும் பொருட்டு, இந்த அரிய, அவர்கள் விட்டுச் சென்ற சோசலிச மரபியத்தை தமதாக்கிக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க ஐக்கிய அரசுகளில் இருப்பது போல் வேறு எந்த ஒரு நாட்டிலும் ஆளும்வர்க்கமானது சோசலிசத்திற்கு எதிராக கடுமையான, இடைவிடாத பிரச்சாரத்தை செய்வதில்லை. பிறப்பிலிருந்தே, ஒவ்வொரு அமெரிக்கரும் கடுமையான சோசலிச எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு ஆட்படவேண்டிய நிலை இருக்கின்றது. தொழிலாளர்கள், நிலைமை ஏன் இவ்வாறு இருக்கிறது என்று தங்களைத்தாங்களே கேட்க வேண்டும். எதற்காக அவர்கள் அச்சப்படவேண்டும்? எல்லா தொழில்துறை நாடுகளைக் காட்டிலும், அமெரிக்காவில்தான் சமூகத் தேவைகளுக்கு எதிராக இலாபமும், தனியார் சொத்துக் குவிப்பும் உயர்த்துவது மிகவும் வலியதாக்கப்படுகிறது, இங்குதான் மூலதனம், உழைப்பின்மீது மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் தன் ஆட்சியை செலுத்துவதோடு, செல்வக் குவிப்பின் ஒருங்குகுவித்தலானது மிகவும் அப்பட்டமான முறையிலும் மிகவும் கீழ்த்தரமான முறையிலும் நடைபோடுகிறது என்ற வெறும் நிகழ்வுப்பொருத்தத்தினாலா?

சமூகத்தின் நலன்கள், தனிப்பட்டோரின் செல்வக் குவிப்பைவிட அதிக முன்னுரிமை பெறவேண்டும் என்ற உள்ளுணர்வு உடையவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, 2004ம் ஆண்டு தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு தரவேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து, 2004ம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுங்கள்

எங்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் அதேபோல் அரசியல் ஆய்விற்காக உலக சோசலிச வலைத் தளத்தை ஆவலுடன் பார்வையிடும் அனைவரையும் அத்தோடு பெரு வர்த்தக கட்சிகளுக்கு ஒரு சோசலிச மாற்றீடு வேண்டுமென கருதுபவர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 தேர்தல் பிரச்சாரத்தில் செயலூக்கத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம். இதன் அர்த்தம் ஆரம்பக் கட்டத்தில், எமது வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் இடம்பெறச்செய்யும் முயற்சியில் இணைய வேண்டும் என்பதாகும்.

இந்தச் செயலே ஒரு தீவிரமான அறைகூவல் ஆகும்; இதுவே ஜனநாயக உரிமையைக் காப்பாற்ற, விரிவுபடுத்த ஒரு பெரிய போராட்டமாகும். அமெரிக்காவை போல், வேறு எந்த முதலாளித்துவம் முன்னேற்றம் அடைந்துள்ள நாட்டிலும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க கட்சி, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகிய தேர்தலில் நிற்கும் உரிமையைப் பெறுவதில் அந்த அளவு கஷ்டங்களைக் காண்பதில்லை.

பில் வான் ஓகென் மற்றும் ஜிம் லோரன்சை அனைத்து, 50 மாநிலங்களிலும், வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு 750,000 பதிவு பெற்ற வாக்காளர்களிடம் கையெழுத்து பெறுவது தேவையாகும் (150,000 கையெழுத்துக்கள் கலிபோர்னியாவில் மட்டும்), அதேபோல பல பல்லாயிரக்கணக்கான டாலர்கள் பதிவுக் கட்டணத்திற்கும், சட்டச் செலவுகளுக்கும் எடுத்துவைக்கவேண்டும். இதைத்தவிர, அமெரிக்க செனட் மன்றத்திற்கும், தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கும் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவது அடுத்த பெரிய பணியாகும்.

பரந்த அளவில் தொழிலாளர்களை, சிறப்பு பயிற்சிபெற்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், இளைஞர்கள் இவர்களை திரட்டும், மற்றும் தேர்தலுக்குப் பின்னும் தொடர்ந்த பணிகளில் ஈடுபட்டு, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிச கட்சியை கட்டி எழுப்புவதற்கான அஸ்திவாரத்தை அமைக்கும், அடிமட்டத்தில் அரசியல் இயக்கத்தை வளர்த்து எடுப்பதன் மூலம் மட்டுமே அது அடையப்பட முடியும்.

நாங்கள் இந்த சவாலை, எங்கள் ஆதரவாளர்கள் முன் வைக்கின்றோம்: சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் எங்களுடன் இணையுங்கள், அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவை வென்றெடுங்கள், எத்தனை மாநிலங்களில் முடியுமோ அத்தனை மாநிலங்களிலும் அவர்களை வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்யுங்கள். அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். நீங்களே சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில் தேசிய சட்ட மன்றத்தில் உறுப்பினராக போட்டியிட முடிவு எடுங்கள். சோசலிச சமத்துவக் கட்சியை, உழைக்கும் மக்களின் ஒரு புதிய அரசியல் கட்சியாகக் கட்டி எழுப்ப உதவுங்கள்.


Copyright 2004
World Socialist Web Site
All rights reserved