World Socialist Web Site www.wsws.org


Resolutions of the SEP (US) National Congress

On the 2012 Election and the SEP Campaign

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய காங்கிரஸ் தீர்மானங்கள்

2012 தேர்தல் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் குறித்து

Back to screen version

ஜூலை 8-12, 2012 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய காங்கிரஸில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டாவது தீர்மானம் கீழே பிரசுரிக்கப்படுகிறது.

1. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்தி சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைக்க அப்போராட்டங்களை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்து, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு போராட்ட வழிமுறையாக 2012 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களும் - ஜனாதிபதி பதவிக்கு ஜெரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கு பிலிஸ் ஷேரர் - தலையீடு செய்கின்றனர்.

2. அமெரிக்காவில் பெருமந்த நிலை காலத்திற்குப் பிந்தைய மிக மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் 2012 தேர்தல்கள் நடக்கின்றன. ஏற்கனவே நாசகரமாய் இருக்கும் வேலைவாய்ப்பு சூழல் இன்னும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. பத்து மில்லியன் கணக்கிலான மக்கள் வேலை இழந்திருக்கிறார்கள் அல்லது அவர்களது ஊதியம் வெட்டப்பட்டிருக்கிறது, அல்லது அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்றி இருக்கும் சராசரிக் கால அளவு 2008 பொறிவுக்குப் பின் உருவான மிக உயர்ந்த அளவுகளுக்கு நெருக்கமாய் இருக்கிறது. மக்களில் பாதிப் பேர் ஏழைகளாகவோ அல்லது ஏழ்மைக்கு அண்மித்திருப்பவர்களாக  வரையறுக்கப்பட்டுள்ளனர். 4 மில்லியன் மக்கள் நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்ந்து வருகின்றனர்.

3. உத்தியோகபூர்வமான இரு-கட்சித் தேர்தல் போட்டி தொழிலாள வர்க்கத்திற்கு எந்த தெரிவையும் வழங்கவில்லை, ஏனென்றால் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே இரண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களுக்கும் வரலாறு கண்டிராத பெருந்தொகையாக 3 பில்லியன் டாலர் தொகையை செலுத்திக்கொண்டிருக்கும் பெருநிறுவன மற்றும் நிதி பிரபுத்துவத்தைப் பாதுகாப்பதற்கு சம அளவில் உறுதிப்பாடு கொண்டிருக்கின்றனர். சொத்துகளை குறைந்த விலையின் சமயத்தில் வாங்கி இலாபம் வைத்து விற்பதில் விற்பன்னம் பெற்ற பெரும்மில்லியனரும் மோசமான பிற்போக்குவாதியுமான ஒருவருக்கும் (ரோம்னி) பெரும்மில்லியனரும், பதவியில் இருந்த மூன்றரை வருட காலத்தில் வங்கிகளின் ஒரு விட்டுக்கொடுக்காத பிரதிநிதியாக தன்னை நிரூபணம் செய்து கொண்டிருப்பவருமான ஒபாமாவுக்கும் இடையில் தான்விவாதம் நடைபெறுகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் நிலவுவது தந்திரோபாய வித்தியாசம் மட்டும் தான். பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் அடிப்படை நலன்கள் சம்பந்தமான அத்தனை விடயங்களிலும், இருவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

4. மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் நலன்கள் விடயத்தில் அரசியல் அமைப்பு இறுகிப் போயிருக்கும் தன்மையை அம்பலப்படுத்த ஒபாமா நிர்வாகத்தின் அனுபவம் மில்லியன்கணக்கான மக்களுக்கு உதவியிருக்கிறது. அதன் வரலாறு அமெரிக்க ஆளும் வர்க்கத்திடம் சீர்திருத்தக் கொள்கை ஏதும் கிடையாது என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது. சமூக எதிர்ப்பின் எழுச்சிக்கு ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பாக சீர்திருத்தம் கிடைக்கவில்லை, மாறாக ஒடுக்குமுறை தான் கிடைத்திருக்கிறது.

5. உள்நாட்டுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், வங்கிப் பிணையெடுப்புகளை நீடித்து மற்றும் விரிவுபடுத்தி டிரில்லியன் கணக்கான டாலர்களை ஒதுக்கி தனது நிர்வாகத்தை ஆரம்பித்த ஒபாமா அதேசமயத்தில் வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கு வேலை வழங்குகின்றதான எந்த அரசாங்க வேலைத்திட்டங்களையும் நிராகரித்தார். புதிதாக வேலைக்கு எடுப்பவர்களுக்கான ஊதியங்களைப் பாதியாக்குவது மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நல உதவிகளை வெட்டுவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாகன உற்பத்தித் துறை பிணையெடுப்பு இதேபோன்ற தாக்குதல்களை பெருநிறுவனங்களும், மாநில மற்றும் உள்ளூராட்சி அரசாங்கங்களும் மேற்கொள்வதற்கான சமிக்கையை வழங்கியது. நிர்வாகத்தின் பிரதானமானசீர்திருத்த நடவடிக்கையான சுகாதாரப் பராமரிப்பு சீர்திருத்தம் என்பது உண்மையில் பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளை வெட்டுவதற்கு நடைபெற்று வருகின்ற பிரச்சாரத்தின் ஆரம்பக் காட்சியே ஆகும். ஒபாமாவின்மீட்சியின் கீழ் வருவாய் ஆதாயங்களின் 93 சதவீதமானது மேல்மட்டத்திலுள்ள ஒரு சதவீதத்தினருக்குத் தான் சென்றிருக்கிறது.

6. வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், ஒபாமா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆக்கிரமிப்புகளைத் தொடர்ந்தார்; பாகிஸ்தான், யேமன் மற்றும் பிற நாடுகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை விரிவுபடுத்தினார்; லிபியாவுக்கு எதிரான ஒரு புதிய போரைத் தொடுத்தார்; இப்போது சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான மோதல்களுக்குத் தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார். சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு அணு ஆயுத சக்திகளுடன் பகிரங்க மோதல் என்கிற பிரளய பின்விளைவுகளைக் கொண்ட ஒரு நடவடிக்கையே இந்த பொறுப்பற்ற இராணுவவாதத்திற்குப் பின்னமைந்த தர்க்கரீதியான காரணமாய் இருக்கிறது.

7. குவாண்டனமோவை இன்னும் மூடாமல் பராமரிப்பதில் தொடங்கி, சிஐஏ சித்திரவதைகளைப் பாதுகாப்பது, இராணுவத்தில் பணிபுரிந்த பிராட்லி மேனிங் போன்ற அமெரிக்க போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்களை தண்டிப்பது வரை ஒபாமா நிர்வாகமானது புஷ்ஷின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்தியிருக்கிறது. இப்போது வெள்ளை மாளிகை, உலகில் எங்குமிருக்கின்ற எவரொருவரின் மீதும், அவர் அமெரிக்க குடிமகனாகவே இருந்தாலும் கூட அவரை ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இருக்கின்ற உரிமையை உறுதிப்படுத்தியிருக்கிறது.

8. இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவில் பல தசாப்தங்களாக முதலாளித்துவ ஜனநாயகம் பெற்ற நெடிய சிதைவின் உச்சம் ஆகும்.  2000 ஆம் ஆண்டின் தேர்தல் திருட்டு ஒரு முக்கியமான திருப்புமுனையாகும், இத்தேர்தலில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஃபுளோரிடாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டு ஜோர்ஜ் W.புஷ்ஷை வெள்ளை மாளிகையில் அமர்த்தியது. அரசியல்சாசன விரோதமான இந்த கவிழ்ப்புக்கு ஜனநாயகக் கட்சி அடிபணிந்து சென்றதானது, அமெரிக்க ஆளும் உயரடுக்கின் எந்த பிரிவுக்குள்ளேயும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எந்த கணிசமான ஆதரவும் இனியும் இல்லை என்பதை விளங்கப்படுத்திக் காட்டியது. இந்த அரசியல் நகர்வுமே கூட, ’செல்வம் மற்றும் வருவாயின் பகிர்வு மிகவும் ஒருதரப்பானதாக ஏற்றத்தாழ்வு மிக்கதாக இருக்கின்ற ஒரு சமுதாயத்தில் ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பராமரிப்பதென்பது சாத்தியமற்றது என்கிற இன்னும் ஆழமானதொரு சமூக நிகழ்முறையின் வெளிப்பாடாக அமைந்தது.

9. ஒபாமாவின் தேர்வு சமூக சீர்திருத்தவாதத்தின் ஒரு மறுமலர்ச்சியை காட்டவில்லை, மாறாக உழைக்கும் மக்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகளின் மீதான பெருநிறுவனத் தொடர்தாக்குதலில் ஒரு புதிய கட்டத்தையே காட்டுகின்றது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் மதிப்பீட்டை கடந்த மூன்றரை கால ஆண்டுகள் உறுதி செய்திருக்கின்றன. முதல் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியின் தேர்வு ஒருஉருமாற்ற நிகழ்வு என்றும், இதன் அர்த்தம்கடந்த மூன்று பத்தாண்டுகளாக அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் வலது-சாரி நிகழ்ச்சிநிரல் உடனான ஒரு முறிவு என்பதாகும் என்றும் பிரகடனம் செய்த சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) போன்ற அமைப்புகளின் கூற்றுகளை நாம் நிராகரித்தோம்.

10. அமெரிக்க அரசியலில், நடுத்தர வர்க்கத்தின் சலுகை படைத்த அடுக்குகளின் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தாராளவாத பிரிவுகள் ஆகியவற்றின் ஒரு வலைப்பின்னல் ஒரு மிக முக்கியமான பாத்திரமொன்றை வகித்து வருகிறது. ஜனநாயகக் கட்சிக்கு விளம்பரம் செய்வதற்கும் அமெரிக்க சமூகத்திற்குள் பொங்கியெழும் தீவிரமான சமூகப் பதட்டங்கள் ஒரு சுயாதீனமான அரசியல் வெளிப்பாட்டைக் காண்பதில் இருந்து தடுப்பதற்கும் இவை இயங்குகின்றன. இதே அரசியல் சக்திகள் பராக் ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்கும் ஆட்சியவை மற்றும் செனட்டுக்கு மீண்டும் ஜனநாயகக் கட்சியினரை தேர்வு செய்வதற்கும் பின்னால் மீண்டுமொரு முறை அணிவகுக்கின்றன. ஒபாமாவின் இந்த போலி இடது ஊக்குவிப்பாளர்கள் என்னதான் மென்மையான கபடவேடமான விமர்சனங்கள் செய்தாலும், அவர்கள் ஜனநாயகக் கட்சியின் வலது-சாரி நிகழ்ச்சிநிரலையும் தாண்டி அக்கட்சியை ஆதரிக்கவில்லை, மாறாக வலது-சாரி நிகழ்ச்சி நிரலின் காரணத்தால் தான் ஆதரிக்கின்றனர். தொழிலாள வர்க்கத்திற்கு முழுக்க முழுக்க குரோதம் படைத்த சலுகைபடைத்த உயர் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறு அடுக்கின் சார்பாக அவர்கள் பேசுகின்றனர்.

11. நவம்பர் 6 தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ அல்லது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒருவரோ தான் வெல்ல முடியும் என்பதால், உழைக்கும் மக்கள் அதில்குறைந்த தீமையாய் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்பதான வாதத்தை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது. அமெரிக்காவில் பெரு வணிகங்களின் அரசியல் மேலாதிக்கத்திற்கான கடைசி வரிசைப் பாதுகாப்பாக இந்த வாதம் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய் இருந்து வந்திருக்கிறது. இரு-கட்சி அரசியல் ஏகபோகம் என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது, அது துடைத்தெறியப்பட வேண்டும்.

12. சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டம் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கான ஒரே முன்னோக்கிய பாதையை வழங்குகிறது. அடிப்படை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்கான உழைக்கும் மக்களின் போராட்டத்தை புரட்சிகர சோசலிசத்தின் வேலைத்திட்டத்துடன் இணைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. சமூகத்தின் ஆதாரவளங்களின் மீது பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கு கொண்டிருக்கின்ற மரணப்பிடி தான் சமூக முன்னேற்றத்திற்கான பிரதான தடைக்கல்லாக இருக்கிறது. அரசியல் அதிகாரத்தைக் கையிலெடுப்பது, செல்வத்தை தீவிரமான மறுவிநியோகத்துக்கு உட்படுத்துவது, உண்மையான சமூக சமத்துவத்தினை ஸ்தாபிப்பது, அத்துடன் தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூகத் தேவைகளுக்காய் சேவை செய்கின்ற வகையில் பொருளாதார வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மறுஒழுங்கமைவு செய்வது ஆகியவற்றுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுகின்ற வழியிலில்லாமல் வேறு எவ்வகையிலும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட முடியாது என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

13. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் சர்வதேசியவாதக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாகும். ஒரு உலகளாவிய பொருளாதாரத்தில், தொழிலாளர்களைச் சுரண்டிக் கொண்டும் அவர்களை நிறம், இனம், மதம் மற்றும் தேசியத்தின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராய் இன்னொருவரை நிறுத்துவதற்கு முனைந்து கொண்டுமிருக்கும் ஒரு பெருநிறுவன ஆளும் உயரடுக்கிற்கு ஒவ்வொரு நாட்டிலும் முகம் கொடுத்து வருகின்ற நிலையில், தொழிலாள வர்க்கமானது பரந்த சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படையில் மட்டுமே தனது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அமெரிக்கத் தொழிலாளர்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பகுதியே, அவர்கள் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையிலேயே தமது போராட்டங்களை நடத்தியாக வேண்டும். ஆளும் வர்க்கம் உலகின் மிகச் சக்திவாய்ந்த இராணுவ எந்திரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் நிலை இருக்க, உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தில் இருக்கும் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு, அமெரிக்க இராணுவவாதத்திற்கும் ஒப்பீட்டு இணைகளற்ற அதன் உலகளாவிய வலிந்த மோதல் வரலாற்றிற்கும் எதிராக தமது வர்க்க வலிமையை அணிதிரட்டுகின்ற பொறுப்பு இருக்கிறது.

14. ஜெரி வைட்டும் பிலிஸ் ஷ்ரேரரும் அநேக மாநிலங்களில் வாக்கு அட்டையில் பெயர்களை எழுத கோரும் (Write-in) வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள். அமெரிக்க தேர்தல் அமைப்புமுறை என்பது பெயரளவில் தான் ஜனநாயகவயமானது. யதார்த்தத்தில், இரண்டு பெரிய பெருவணிகக் கட்சிகளும் மொத்த தேர்தல் நிகழ்முறையின் மீதும் ஒரு கழுத்துப் பிடியைச் செலுத்துகின்றன. பல மாநிலங்களிலும் ஒரு வேட்பாளரின் பெயர் வாக்குச் சீட்டில் இடம்பெற வேண்டுமாயின் அதற்கு பல பத்து ஆயிரங்களிலான கையெழுத்துகளை வாக்குப்பெட்டி அணுகல் சட்டங்கள் கோருகின்றன. மாற்றுக் கருத்துகளின் மீதான எந்த விவாதத்தையும் திட்டமிட்டுத் தடுப்பதற்கு பெருநிறுவன ஊடகங்கள் வேலைசெய்கின்றன. அத்துடன் இந்த ஒட்டுமொத்த நிகழ்முறையிலும் கற்பனைக்கெட்டாத பணக் குவியல் ஆதிக்கம் செலுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சி நடப்பு தேர்தல் முறையின் ஊழலடைந்த மற்றும் ஜனநாயக-விரோதத் தன்மையை கண்டிப்பதோடு அதனை அம்பலப்படுத்துவதற்கும் முனைகிறது. ஆயினும் சற்று ஒடுக்குமுறை குறைந்த அவசியப்பாடுகளைக் கொண்ட தேர்ந்தெடுத்த மாநிலங்களின் வாக்குச் சீட்டில் இடம்பெறுவதற்கு கட்சி முனையும். அது சாத்தியமில்லாத இடங்களில், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்திற்கு வர்க்க-நனவுடன் ஆதரவை அறிவிக்கும் ஒரு செயலாக எங்களது வேட்பாளர்களின் பெயர்களை எழுதி வாக்களிப்பதற்கு நாடு முழுவதிலுமான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

15. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டது முதலான இந்த பல மாத காலத்தில் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வலுவான வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்தியமேற்கு, வடகிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு, அத்துடன் கனடாவிலும் முக்கியமான தேர்தல் கூட்டங்கள் நடத்தப் பெற்றுள்ளன. கூப்பர் டயர் மற்றும் கட்டர்பில்லரில் கதவடைப்புகளுக்கு எதிராகவும், கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற சமூக வேலைத்திட்டங்களிலான வெட்டுகளுக்கு எதிராகவும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையே ஜெரி வைட்டும் பிலிஸ் ஷ்ரேரரும் பிரச்சாரம் செய்திருக்கின்றனர்.

16. எல்லா இடங்களிலுமே சோசலிசத்திலான ஒரு ஆர்வமும் பெருவணிகக் கட்சிகளுக்கு ஒரு அரசியல் மாற்றுக்கான பலமான விருப்பமும் இருக்கின்றது. பொருளாதார நெருக்கடி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் நனவின் மீது ஒரு ஆழமான தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ அமைப்புமுறையிலான அனைத்து நம்பிக்கையையும் இழந்து கொண்டிருக்கிறது. நெருக்கடியின் புறநிலையான அபிவிருத்தியும் தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களும் உலக முதலாளித்துவத்தின் இருதயமான அமெரிக்காவில் ஒரு பரந்துபட்ட புரட்சிகர இயக்கத்தின் எழுச்சிக்கான அடிப்படையை உருவாக்குகின்றன.

17. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் எடுத்துக் காட்டியிருப்பதைப் போல, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும் அரசியல் தலைமையினதும் மற்றும் கட்சியின் தலையீட்டினதும் தீர்மானகரமான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அடிப்படையான தத்துவார்த்த, வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். சோசலிசம் என்றால் என்ன? சோவியத் ஒன்றியம் என்னவாக இருந்தது? ஆளும் உயரடுக்கில் இருந்து சுயாதீனப்பட்ட ஒரு அரசியல் இயக்கத்தை தொழிலாள வர்க்கம் எவ்வாறு கட்டியெழுப்புவது? இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் படிப்பினைகளின் மீதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நெடிய போராட்டத்தின் (இது லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை மற்றும் படைப்புகளில் உருவடிவம் பெற்றது) மீதும் நிச்சயமாக ஆர்வம் பெருகியிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது இந்த மகத்தான வரலாற்றுப் பிரச்சினைகளில் தொழிலாள வர்க்கத்திற்குத் தெளிவு ஏற்படுத்தவும் மற்றும் முதலாளித்துவ மற்றும் ஸ்ராலினிச பொய்மைப்படுத்துபவர்களின் முயற்சிகளை எதிர்க்கவுமான போராட்டத்துடன் அவசியத்துடன் இணைக்கப்பட்டதாய் இருக்கிறது.

18. தேர்தல் பிரச்சாரத்தில் எஞ்சியிருக்கும் நான்கு மாதங்களில், சோசலிச சமத்துவக் கட்சி தனது வேலைத் திட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளுக்குக் கொண்டு செல்வதற்காய் போராட வேண்டும். தேர்தல் பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவதற்கான முக்கிய புள்ளியாக இருக்கும். தேர்தலுக்கான விடயங்களை சாத்தியமான அளவுக்கு பரவலாய் விநியோகம் செய்வது, சோ...வின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்கு ஒரு மக்கள் திரட்டை வென்றெடுப்பதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துவது, அத்துடன் நாடு முழுவதிலும் ஆதரவாளர்களின் கூட்டங்களை நடத்துவது என்பதே இதன் பொருளாகும். 2012 தேர்தலின் சமயத்திலும் அதற்குப் பின்னரும் நிச்சயமாக அபிவிருத்தியுற இருக்கின்ற போராட்டங்களுக்கு இந்தப் பிரச்சாரமானது கட்சி மற்றும் தொழிலாள வர்க்கம் இரண்டையுமே தயாரிப்பு செய்யும்.