Chapter 2:The Banda School of Falsification

பண்டாவின் பொய்மைப்படுத்தும் பள்ளி

Back to screen version

சோசலிச தொழிலாளர் கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான ஜேம்ஸ். பி. கனன் (James P. Cannon) இனால் "பகிரங்க கடிதம்" வெளியிடப்பட்டமையும் 1953 நவம்பரில் அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டமையும் 1940 பதுகளில் லியொன் ட்ரொட்ஸ்கியின் மரணத்தின் பின்னரான அபிவிருத்தியினால் ஒரு மாபெரும் வரலாற்று வளர்ச்சிக் காலகட்டத்தை குறித்து நிற்கின்றன.

ஒப்புவமைகளில் என்னதான் தவிர்க்க முடியாத குறைபாடுகள் இருந்த போதிலும் ட்ரொட்ஸ்கிசத்தின் அபிவிருத்தியில் பப்லோவாதிகளுடனான பிளவு போல்ஷிவிசத்தின் வரலாறு தொடர்பாக 1903ம் ஆண்டின் பிளவு வகித்த அதே அந்தஸ்தையே வகிக்கின்றது என திட்டவட்டமாகக் குறிப்பிட முடியும். 1953ல் நான்காம் அகிலம் ஒரு உயிராபத்தான சந்தர்ப்பவாத போக்கிற்கு முகம் கொடுத்தது. அது ட்ரொட்ஸ்கிசத்தின் அத்தியாவசியமான கோட்பாட்டு, அரசியல், அமைப்பு கொள்கைகளை பிரச்சினைக்குள்ளாக்கியது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக் கொள்ளும் போக்குகளிடையே எதிர்காலத்தில் ஏற்பட இருந்த சகல பிளவுகளும், 1953ல் முதலில் போரிடப்பட்ட பிரச்சினைகளில் இருந்தே எழுந்துள்ளன.

1903இல் இரண்டாவது மாநாட்டில் ஏற்பட்ட பிளவு எப்படி போல்ஷிவிசத்தையும் மென்ஷிவிசத்தையும் பிரித்த அரசியல் பிரச்சினைகளை நிரந்தரமாகத் தீர்க்க அல்லது முழுமையாகத் தெளிவுபடுத்தத் தவறியதோ, அவ்வாறே நான்காம் அகிலத்தினுள் ஏற்பட்ட பிளவும், பல பிரச்சினைகளைத் தீர்க்காது விட்டு வைத்தது. பிளவின் ஆழமான விளைபயன்கள் அதன் பின் வந்த வருடங்களில் தொடர்ந்து வெளிவந்தன. இருந்த பொழுதும் இதன் பின்னர் ஏற்பட்ட அனைத்து அபிவிருத்திகளும் 1953இல் ஏற்பட்ட மோதுதல், வெவ்வேறு சமூக சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சமரசம் காணமுடியாத ஒன்றையொன்று எதிர்த்து நிற்கும் இரு அரசியல் போக்குகளுக்கு இடையிலேயானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. நான்காம் அகிலத்தின் பாட்டாளி வர்க்க கன்னை, அதாவது ஜேம்ஸ் பி.கனனின் தலைமையின் கீழான "மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள்", அனைத்துலகக் குழுவை அமைத்தார்கள். மைக்கல் பப்லோ மற்றும் ஏர்ணஸ்ட் மண்டல் தலைமை தாங்கிய சர்வதேச செயலாளர் குழுமம் (International Secretariat) குட்டி முதலாளித்துவ திரிபு வாதப் போக்கினை பிரதிநிதித்துவம் செய்தது.

பப்லோ முன்வைத்த நிலைப்பாடுகள் 1938 இல் நான்காம் அகிலம் அமைக்கப்பட்ட பொழுது, அது தமது அடித்தளமாகக் கொண்டிருந்த வேலைத் திட்டத்தின் அடிப்படைக் கருத்துக்களை நேரடியாகச் சவால் செய்தது. "நிஜமான பரந்த மக்களின் இயக்கத்தினுள்" நான்காம் அகிலத்தின் பகுதிகளை "ஒன்றிணைக்க", "வர்க்கத்தின் இயற்கையான இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் எந்த வடிவத்திலும் அது உருவாக்கப்பட்டு, வெளிப்படுத்தப்பட்ட பொழுதும், புரட்சிகர முன்னணியை நிஜமாக அதனுடன் முற்றாக ஒன்று படுத்தும்", அவருடைய சந்தர்ப்பவாத முன்மொழிவுகளை முன் வைத்தார். இவற்றுடன் அவர் "சம்பிரதாய ரீதியான சிந்தனையைப் புரட்சிகர நடவடிக்கைகளில் இருந்து பிரித்து வைக்கும் அனைத்து கோட்பாடு ரீதியான செயல் நெறித் தடைகளையும்" துடைத்துக் கட்ட வேண்டும் என்றார். இவை மூலம் பப்லோ தான் செய்வது பற்றி அவர் முழுமையாக நனவாக இருந்தாரோ, இல்லையோ, அவர் தொழிலாளர் இயக்கத்தினுள் ஒரு சுதந்திரமான புரட்சிகரப் போக்£க நான்காம் அகிலம் இருப்பதை அழிப்பதற்காகச் செயற்பட்டார். அவருடைய வேலைத்திட்டம், ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்தை, ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி அமைப்பு என்று வரைவிலக்கணப்படுத்தியதை நிராகரித்ததோடு மட்டுமல்லாது, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கையும் கேள்விக்குள்ளாக்கியது. அத்தோடு இந்த வேலைத்திட்டம் புரட்சிக் கட்சி பற்றிய லெனின்-ட்ரொட்ஸ்கி கோட்பாட்டையும் நிராகரித்தது. நிலவும் மற்றும் தன்னியல்பாக படி வளர்ச்சியுறும் முதலாளித்துவ நனவின் வடிவங்களுக்கு எதிரான நனவான போராட்டத்தை பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிக் கட்சியைக் கட்டி எழுப்புவதற்கான அடிப்படையாகக் கொள்ளுவதற்குப் பதிலாக பப்லோவாதம் ஓர் கொச்சையான புறநிலைவாதத்திலிருந்து ஆரம்பித்து, அது பரந்த தொழிலாள வர்க்க இயக்கத்தில் அப்போதுள்ள தலைமைகளுக்கு அடிபணிந்து, எல்லாவற்றிலும் மேலாக ஸ்ராலினிச அதிகாரத்துவங்களுக்கு சோசலிசத்தின் வெற்றியில் ஒரு தீர்க்கமான பங்கை வழங்கியது.

1949-1953ம் ஆண்டுகளுக்கு இடையில் பப்லோ பரந்த மக்களின் நிர்ப்பந்தத்தின் கீழ், சோவியத் அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் புரட்சிகரப் போராட்டங்களுக்கு தலைமை தாங்கக் கட்டாயப்படுத்தப்பட்டு, ஸ்ராலினிசத்தின் ஆதரவின் கீழ் உலகப் புரட்சியானது முழுமைபெறும் என்ற நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்தார். ஸ்ராலினிசத்தின் சார்பில் முன்வைத்த இந்தப் போலித் தலைமை கொண்டாடல்களை, பப்லோவாதம் அரைகாலனித்தவ நாடுகளிலும், மற்றும் குறைவிருத்தி நாடுகளிலும் உள்ள முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களையும் உள்ளடக்கிக் கொள்ள விஸ்தரித்தது. இந்தத் திருத்தல் வாதங்களின் சாராம்சம் என்னவென்றால், அனைத்து குட்டி முதலாளித்துவ போக்குகளில் இருந்தும் தொழிலாள வர்க்கம் நிபந்தனை எதுவுமின்றிச் சுதந்திரமாக இருக்கத் தொடுக்க வேண்டிய போராட்டத்தை நிராகரிப்பதாகும். இதிலிருந்து புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியைத் தீர்ப்பதில் நான்காம் அகிலத்தின் பங்கை நிராகரிப்பது ஊற்றெடுக்கின்றது. பப்லோவாதத்தின் புறநிலை ரீதியான தோற்றுவாய் குட்டி முதலாளித்துவப் பகுதியினருக்கு அடிபணிந்துபோனதும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஏகாதிபத்தியத்தின் பிரமாண்டமான அழுத்தத்திற்கு ஐக்கிய அமெரிக்க அரசுகளில் மிகப் பழமைவாதம் கொண்ட தொழிலாளர்கள் சரணடைந்ததும், இந்த அழுத்தம் பகுதி ரீதியாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினூடாக நான்காம் அகிலத்தின் மேல் பிரதிபலித்ததுமாகும். அதன் பின்னர் அவர்கள் சீரழிந்த பொழுதும், கனனினதும் அதேபோல பிரிட்டனில் ஜெரி ஹீலியினதும் பிரான்சில் பியர் லம்பேர்ட் (Pierre Lambert) இனதும் என்றும் நிலைத்திருக்கும் வரலாற்று மேன்மை என்னவென்றால், அவர்கள் பப்லோவாத திருத்தல்வாதத்தை எதிர்த்து ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பேணினார்கள் என்பதேயாகும். திருவாளர் பண்டாவின் கருத்திற்கு நேர்எதிராக மனிதர்கள் செய்யும் தீயவை மட்டும் அவர்களின் பின் உயிர்வாழ்வது என்பதற்கு மாறாக மனிதர்கள் செய்த நல்ல செயல்களும் அவர்களுக்கு பின் உயிர்வாழும். 1953இல் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் புறநிலை ரீதியான முக்கியத்துவம், ட்ரொட்ஸ்கிசத்தின் வளர்ச்சியில் அது ஒரு தீர்க்கமான வரலாற்று தொடர்ச்சியாக இருப்பதாகும். பண்டா குறிப்பாக இந்தத் தொடர்ச்சியை நிராகரிக்கின்றார். அவர் "அனைத்துலக குழுவானது பெருமிதப் பகட்டான பிரமை. ஒரு ஏய்ப்பு நடவடிக்கை ஒரு வெறுப்பூட்டும் சாகசம்" என்றும் பகிரங்கக் கடிதம் வெளியிட்டது கனனாலும், ஹீலியாலும் திட்டமிடப்பட்ட "ஒரு அரசியல் தகாவழி நடத்தை என்றும் அவர்கள் தமது செயற்பாட்டு அடித்தளங்களைப் பேணுவதற்காக தமது மேற்கத்தைய நாடுகள் சார்பு அதிகாரத்துவங்களுடன் உள்ளார்ந்த ரீதியில் கட்டிப் போடப் பட்டிருந்தனர்" என்றும் அவர் வலிறுத்துகின்றார்.

மேலும் அவர் கனன் மற்றும் ஹீலியின் வங்குரோத்து நிலையெனக் கருதப்பட்டது, நான்காம் அகிலம் பிறவியோடு கூடிய முறையில் புரட்சிகரத் தலைமையைக் கொடுக்க இயலாத இயக்கமாக அடிப்படையில் நோய்வாய் பட்டமைக்கான நிரூபணமாகும் என கூறுகின்றார். மார்க்சிசத்தின் தொடர்ச்சியைப் பிரதிநிதித்துவம் செய்வதிலிருந்து எவ்வளவோ தொலைவில் "1951ம் ஆண்டளவில் நான்காம் அகிலமானது முற்று முழுதாக ஆற்றல் கெடுக்கப்பட்டு இருந்தது." அது "பெயரளவில் அனைத்துலகமாகவும் ஒரு வரலாற்று விபத்தாகவும் சந்தர்ப்பவாதமும் அரசியல் இரட்டைப் பேச்சும் புரையோடிப் போயுள்ள கோட்பாடற்ற கூட்டின் உற்பத்தியைத் தவிர வேறொன்றும் அல்ல," (பண்டாவின் வலியுறுத்தல்) இந்த மிகைப்படுத்தலின் நோக்கம் என்னவென்றால் 1953ம் ஆண்டின் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைத் துடைத்துக் கட்டவும் மற்றும் அவரது விட்டோடலை நியாயப் படுத்தவுமேயாகும். பப்லோவாதத்தின் முறைக்கும் மற்றும் அதன் நிலை நோக்கிற்கும், தான் சரணாகதி அடைந்ததை மூடிமறைப்பதற்காக, அதை எதிர்த்துப் போராடியவர்களுக்கு எதிராகத் தனது வசைமாரி போர்க் கருவிக் கூடத்திலிருந்து பண்டா எல்லா வினையடை மொழிகளையும் பெயரடை மொழிகளையும் வரவழைத்துள்ளார்.

நான்காம் அகிலத்தின் வரலாற்றை மோசமாகத் திருத்தம் செய்ததற்கும் 1985ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் பண்டா ஈடுபட்டிருந்த நடவடிக்கைகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீடித்த பணியில் இல்லா விடுப்பில் இருந்த வண்ணம், அவர் அங்கு இலங்கை சமசமாஜக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். 1953 இல் இலங்கை சமசமாஜக் கட்சி, பப்லோவின் அரசியல் முடிவுகளுடன் தான் வேறுபடுவதாகக் கூறிக் கொண்டு, பகிரங்கக் கடிதம் வெளியிட்டதை எதிர்த்ததோடு அனைத்துலக் குழு அமைத்ததையும் எதிர்த்தது. சம்பவங்கள் அதன் பின் எடுத்துக்காட்டியதுபோல, நான்காம் அகிலத்தினுள் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமானது, 1964ம் ஆண்டில் கூட்டரசாங்கம் ஒன்றினுள் நுழைவதில் முடிந்த, இலங்கை சமசமாஜக் கட்சி ஸ்ராலினிசத்திற்கும் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் நெகிழ்ந்து அடிபணிவதற்கு எதிராகச் சென்றது. இலங்கை சமசமாஜக் கட்சியின் காலடிகளைப் பின்தொடர்ந்து அதன் சந்தர்ப்பவாதத்தைக் காலங்கடந்து பாதுகாப்பதற்கான முயற்சியில், அனைத்துலக் குழுவை அமைத்தவர்களை தூற்றுவதோடு அவர்கள் மேல் பண்டா சேற்றை வாரி வீசுகிறார். நான்காம் அகிலத்தை அபகீர்த்தி அடையச் செய்யவும், நான்காம் அகிலத்தைக் கலைத்ததற்கு பப்லோவாதத்தைக் குறைகூற முடியாது என்று நிருப்பிப்தற்காகவும் அவர் எதையும் செய்யத் தயங்கார். பண்டா 1953ம் ஆண்டு காலப்பகுதியில் கலைப்பதற்கு நான்காம் அகிலத்தினுள் எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று வலியுறுத்துவதோடு, அனைத்துலகக்குழு ஆரம்பிப்பதற்கு முன்னரேயே நான்காம் அகிலத்தின் அரசியல் பொறிவு ஏற்பட்டு விட்டது என்கிறார்.

அவரது "27காரணங்கள்" "எதைக் கூறினாலும் ஏற்கப்படும்" என்ற மனப்பான்மையின் தன்மையில் இருந்து வரக் கூடிய கவனயீனமான விவாத முறையைக் கொண்டுள்ளது. "ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்ததும் மற்றும் யுத்தமும் முடிவுறாத பிரச்சனைகளைத் தீர்த்து, நான்காம் அகிலத்தின் வளர்ச்சியை முடுக்கி விடுவதற்குப் பதிலாக, உண்மையில் அதன் எதிர் விளைவைத்தான் உண்டுபண்ணின" என்ற நம்பவே முடியாத கூற்றைக் கூறுகிறார். இதன் மூலம் அவர் ட்ரொட்ஸ்கியின் படுகொலை ஒரு சாதகமான விளைபயனை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று மறைமுகமாக கூற முயற்சிக்கின்றார். ஆனால் பண்டாவின் வாதங்களின் அடிப்படை உந்துதலான, அதாவது ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை அமைப்பதன் மூலம் அவர் மிகவும் அழிவுகரமான பெரும் தவறை செய்ததோடு, தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு ஒரு அரசியல் அநியாயத்தை உருவாக்கி விட்டுள்ளார் என்பதுடன் இக்கருத்து முழுமையாக ஒத்துப் போகாது இருந்திருந்தால், இதை ஒருவர் அச்சுப் பிழை என்று தட்டிக் கழித்து விடலாம். நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் பற்றிய பண்டாவின் "மறுபரிசீலனை", அதன் தலைவர்களை நெறிப்படுத்தப்பட்ட ரீதியில் நிந்தித்தலாக மாறியுள்ளது. இத்தலைவர்களை அவர், "உலகக் கட்சி" என்று பகட்டாக பவனி வரும் "குட்டி முதலாளித்துவ மேம்போக்காளர்கள்", கோமாளிகள் மற்றும் பிரமையாளர்கள், தன்னைத் தானே என்றென்றும் பேணிக் கொள்ளும் தன்னலக் குழுவான "ஒட்டுண்ணிகள்", "சீர்திருத்தவாத மோசடிக்காரர்கள்" மட்டுமல்லாது, அவர்களை அவர் "ஜேசுநாதர் சங்க சமய பரப்பு ஊழியர்கள்" என்றும் கூட வர்ணித்துள்ளார். பண்டாவின், நான்காம் அகிலத்தைப் பற்றி வெறுத்தொதுக்குக்கின்ற கருத்து விரித்துரையின், பிரதான பேய் ஹீலி அல்ல ஆனால் ஜேம்ஸ் பி.கனன் ஆகும். அவரது மன்னிக்க முடியாத குற்றங்கள், அவர் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் பிறந்தது ஒரு புறம் இருக்க அவற்றை விவரமாகக் கூறமுடியாதளவு அவை மிஞ்சியுள்ளன. பண்டாவின் குற்றப் பத்திரம் கனன் மேல் சுமத்தும் குற்றங்கள் :

1. "1934-35 இல் நோர்மன் தோமஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் சோசலிசக் கட்சியுடனு அருவருப்பூட்டும் முறையில் ஒத்துப் போதல்."

2. "கிரிமினல் காட்டிக் கொடுப்பு"--உண்மையில், மாபெரும் முறையில் ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்தல். 1941ம் ஆண்டு மினியாப் போலிஸ் ஆட்சி எதிர்ப்புக் குற்ற விசாரணையின் பொழுது, "புரட்சிகரத் தோற்கடிப்புவாதத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் வெட்கமற்ற முறையில் கைவிடப்பட்டன".

3. "அரசியல் கோழைத்தனமும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தொழிலாளவர்க்கத்தின் பின் தங்கிய பகுதிகளுக்கு சரணடைதல்".

4. "ட்ரொட்ஸ்கிசத்தை ஒரு மூடவழிபாட்டுக் கோட்பாடாக உருமாற்றல்".

5. "தேசியவாதப் பாதுகாப்பு நிலைநோக்கை புரட்சிகரப் பதங்கள் போன்றவற்றால் மூடிமறைத்தல்".

6. "அமெரிக்க விதிவிலக்கு வாதத்தை" தெய்வீகமயமாக்கல்.

7. "ஐக்கிய அமெரிக்க அரசுகளில் இடதுசாரி ஜனநாயகக் கட்சியினருக்கு நெகிழ்ந்து போய் றோசன்பேர்க் (Rosenberg) தூக்கிடல்களில் வெட்கக் கேடான முறையில் முழுதும் மர்மமான மௌனத்தைச் சாதித்தல்".

8. "அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுவது சம்பந்தமாக திகைப்பூட்டும் முறையில் உதாசீனம் செய்தல்".

9. "கம்யூனிட்ஸ் கட்சியை தொழிலாளவர்க்கத்தின் உத்தியோகபூர்வமான பகுதியாக ஒருபொழுதும் கருதாதிருந்தமை".

10. "கொரிய யுத்தம் சம்பந்தமாக அமைதிவாத - ஒழுக்கவாத மனப்புண்படல்".

11. பப்லோ வடிவில் வேண்டுமென்றே ஒரு ஃபிராங்கென்ஸ்டீன் கோர உருவத்தை உருவாக்கல்.

12. "பாசிசத்தை பற்றி அற்ப அளவு அறிந்ததோடு அதிலும் பார்க்கக் குறைவாக ஐக்கிய அமெரிக்க அரசுகளின் வர்க்க உறவுகளைப் பற்றி அறிந்திருத்தல்".

நாம் பின்னர் நிரூபிக்க இருப்பது போல, சோசலிசத் தொழிலாளர் கட்சியின் மேலும் கனனால் தொடுக்கப்படும் தாக்குதல்கள், குறிப்பாக 1953 இல் பப்லோவாதத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட போராட்டத்தை அபகீர்த்தியடையச் செய்வதாகும். கனனுக்கு எதிரான அவரது தூற்றுதல், அடிப்படையில் அமெரிக்க பப்லோவாதிகளின் சேறடிப்புகளை, எல்லா திருத்தல் வாதிகளிலும் மிகவும் வலதுசாரியானவர்கள் தொடுத்த சேறடிப்புகளை மீண்டும் உச்சரிப்பதாகும். பண்டாவின் படி கனன் மட்டும் தனிமையில் உள்ள பிசாசல்ல. முழு நான்காம் அகிலமும், "ட்ரொட்ஸ்கியின் இயங்கியல் ஆற்றலும் தூரப்பார்வையும் அற்றதாக" இருந்தது என்றும், "சம்பவங்கள் முடிந்த பின்னரும் கூட அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்றதாக இருந்ததென்றும்," அது எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொள்வதை தவிர்த்தது" என்றும் அவர் நமக்கு கூறுகின்றார். அது "புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை முன்வைக்கும் போராட்டத்தில் சிறிய அல்லது எந்த ஒரு பங்கையும் வகிக்கவில்லை." இரண்டாம் உலகயுத்தத்தின் இறுதியில், அதனது "சுலபமாக பாதிப்படையக்கூடிய கருத்துக்கள் பொருத்தமற்ற நிலையை அடைந்தது". அது "முதலாளித்துவ ஜனநாயகத்துடன் வெட்கக் கேடான முறையில் அண்டிப் பிழைப்பு நடத்திய" குற்றத்தின் விளைவாகும். அது "மண்டேலின் சியோனிசம் சார்பான நாட்டத்திற்கு" சிரம் தாழ்த்தியதும், அது வலதுசாரிப் பகுதியான மொரோ-கோல்ட்மன் (Morrow-Goldman) போக்கிற்கு எதிரான உட்கட்சிப் போராட்டத்திற்குமான ஒரு பொய்யான வாதம் மட்டுமல்லாது, "வசதியாக அமைந்த திசை திருப்பலும், கேவலமான செய்முறைவாதத்திற்குள் ஆழ்ந்து போவதைத் தடுக்க எதையும் செய்ய முடியாமையுமாகும்."

நான்காம் அகிலத்தின் வரலாறு சம்பந்தமாக பண்டாவின் அணுகுமுறையில் ஒரு சிறு விஷயம் நினைவில் இருக்காது போய் விட்டது: அதாவது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும் மற்றும் தற்போதுள்ள சமூக உறவுகளுக்கும் இடையிலான மோதுதலில் வர்க்கப் போராட்டமும் அதன் ஜடரீதியான அத்திவாரங்களும் (Material foundations) நினைவில் நிற்காது போய் விட்டன. நான்காம் அகிலத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சியானது கெட்டவர்களுக்கும் மற்றும் பொதுவாக மந்தபுத்தி உள்ளவர்களுக்கும் இடையிலான கீழ்த்தரமான மோதுதல்கள் மட்டத்திற்குக் குறைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தும் பண்டா அரங்கிற்கு வருவதற்கு முன்பே நடந்துள்ளன. இவர்களுடைய நடவடிக்கைகளை அவர்களது தனிப்பட்ட மற்றும் ஒரு நியதியாக அவர்களது சுயநலன்களுக்கான நோக்கங்களில் இருந்து விளக்க வேண்டியுள்ளது.

ட்ரொட்ஸ்கியினுடைய விபரிக்கமுடியாத அற்புதமான "மேதாவித்தனத்தைத்" தம்மை விட வேறு எவரையும் பிரதிநிதித்துவம் செய்யாத ஒரு சில தனிநபர்களின் பெரும் ஆசைகளைத் தவிர நான்காம் அகிலம் இருப்பதற்கு முற்று முழுதாக எந்த ஒரு காரணமும் இல்லை. பண்டாவின் படி அதன் வரலாறு ஒரு "வருத்தப்படக்கூடிய மற்றும் கழிவிரக்கம் கொள்ளக் கூடிய கதையாகும்." இது "அதிகாரத்துவ சேறடிப்பில், அரசியல் சொற் புரட்டலில் மற்றும் மிகவும் கீழ்த்தரமான ஒழுக்கக் கேட்டின் உச்சத்தை அடைந்தது". மொஸ்கோ பொய்ப்புனைவு வழக்குகளின் நாட்களில் ஸ்ராலினின் விஷின்ஸ்கி, அவரது இறுதித் தொகுப்புரைகளை வழங்கி, முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரணத்தண்டனைகளுக்கு அழைப்பு விடுத்த ("விசர் பிடித்த நாய்களைச் சுட்டுத்தள்ளு") நாட்களின் பின், இன்றுவரை ட்ரொட்ஸ்கிச இயக்கம் இப்படியான பதங்களில் வர்ணிக்கப்படவில்லை.

பண்டா தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சம்பவத்திலிருந்து மற்றொரு சம்பவத்திற்கு தாவுகின்றார். வேறுபட்ட சம்பவங்களுக்கு இடையில் அவர் தன் மனம் போன போக்கில் கட்டும் இடைமருவுகள் தர்க்க ரீதியான உள் உறவுகள் எதுவும் இல்லாது உள்ளன. இவரின் முறையின் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் "வங்குரேத்தை" மட்டுமல்லாது, தொழிலாள வர்க்க இயக்கத்தின் முழு வளர்ச்சியையும் மற்றும் பொதுவாக மனித இனத்தின் வரலாற்றையும் விளக்கிக் காட்ட ஒருவரால் முடியாது. அது மட்டுமல்லாது பண்டா பழைய கொச்சையான சடவாதத்தின் வரலாற்று அகநிலைவாதத்திற்கு நம்மை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார். இதை நீண்ட காலத்திற்கு முன்னரே ஏங்கல்ஸ் ஆராய்ந்துள்ளார்.

வரலாறு பற்றிய வரலாற்று அகநிலைவாதத்திற்கு அப்படி ஒன்று இருக்கும் அளவிற்கு நடைமுறைவாதம்தான் முக்கியமானது. அது இயக்கத்தின் உள்நோக்கத்தை வைத்தே எல்லாவற்றையும் மதிப்பீடு செய்கின்றது. அது மனிதர்களை அவர்களது வரலாற்று செயற்பாடுகளில் அதியுயர்வானவர்களாகவும், இழிவானவர்களாகவும் பிரிக்கின்றது. அதன்படி அது ஒரு விதியை உருவாக்கி அதியுயர்வானோர் ஏமாற்றப்படகூடியவர்களாகவும், இழிவானோர் வெற்றியீட்டுகின்றார்கள் என கூறுகின்றது. எனவே பழைய பொருள்முதல்வாதம் வரலாற்றைப் படிப்பதன் மூலம் எதையும் அடையமுடியாது என கூறுகின்றது. இந்த பொருள்முதல்வாதம் முறையே இந்த உள்நோக்கங்களின் பின்னால் எந்த இயக்கு சக்திகள் நிற்கின்றன. என்ன வரலாற்றுக் காரணிகள் இவற்றை செய்பவர்களின் மூளைகளுள் இருந்து இந்த உள் நோக்கங்கள் செயல்களாக உருமாற்றம் செய்ய காரணமாகின்றன? என்ற கேள்விகளை ஒரு பொழுதும் தன்னைக் கேட்கவில்லை என்று ஏங்கல்ஸ் விளக்குகின்றார்.

அனைத்து அரசியல் கட்சிகளினதும் முறையே அவற்றின் வேலைத் திட்டங்களினதும் அத்திவாரம் வர்க்கப் போராட்டமாகும். நிச்சயமாக, வரலாற்று ரீதியாக கட்டியெழுப்பப்பட்ட, உற்பத்தி உறவுகளுடன் சம்பந்தப்பட்ட, ஒன்றோடு ஒன்று முரண்பட்ட வெவ்வேறு சமூகத் தட்டுக்களின் சமரசம் காணமுடியாத ஜட நலன்கள், இந்த வர்க்கப்போராட்டத்தின் மூலம், ஒன்றோடொன்று போரிடுகின்றன. வெவ்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த கட்சிகளுக்கு வழிவகுக்கும் மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளை புறக்கணிப்பது, அல்லது தொழிலாளர் வர்க்க இயக்கத்தினுள்ளான பல்வேறு போக்குகளைக் கொண்ட தலைமைகளாக "தம்மையே உருவாக்கிக் கொள்ளும் கும்பல்", இல்லாவிடில் "உலகக் கட்சியாக" காட்டிக்கொள்ளும் மந்தபுத்தியாளர்களாக வெளிக்காட்டிக் கொள்வது, முதலாளித்துவ பொலிசின் மட்டத்துக்கு தரம் குறைப்பதாகும்.

பண்டா, சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று ரீதியான வளர்ச்சிக்கும் நான்காம் அகிலத்தினுள் உள்ள அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டங்களில் ஏற்படும் அவசியமான பிரதிபலிப்புகளின் வடிவங்களுக்கும் இடையிலான உறவுகளை நிலைநாட்ட முயற்சிக்கக் கூட ஆற்றலற்றவர் ஆவார். இதற்குப் பதிலாக அவர் தமது தத்துவார்த்த ரீதியில் வங்குரோத்து அகநிலைவாத முறையிலிருந்து ஆரம்பித்து நான்காம் அகிலத்தின் வேலையைப் பற்றிய அவரது அறிக்கை மனக்காழ்ப்பு ரீதியான உருத்திரிப்புகள், அப்பட்டமான புனைவுகள் மற்றும் சிடுமூஞ்சித்தனமான அரை உண்மைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. 1940 மற்றும் 1953ம் ஆண்டுகளுக்கு இடையில் நான்காம் அகிலத்தின் வரலாறு பற்றி அவர் செய்த ஒவ்வொரு மீளாய்வுகள் அனைத்தையும், உண்மையான சம்பவங்கள் மீதான நம்ப முடியாதளவிற்கு அக்கறையின்மையை அவர் அம்பலப்படுத்துகின்றார்.

பண்டாவின் பத்திரத்திலுள்ள பொய்கள் மற்றும் உள் முரண்பாடுகள் என்பன ஒரு முழுமையாக்கம் கொண்ட வரலாற்று முன்னோக்கு ஒன்று இல்லாமையை எடுத்துக் காட்டுகின்றது. இது அவர் வரலாறு தொடர்பான பொருள்முதல்வாத எண்ணக்கருவை கைவிட்டதன் விளைபயனாகும். பண்டா மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பற்றி மதிப்பீடு செய்கையில், ஒரு பகுத்தறிவு வாதியின் அகநிலைவாத அளவுகோலைப் பயன்படுத்துகின்றார். நான்காம் அகிலத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்திருந்த வரலாற்று இன்றியமையாமை சௌகரியமாக மறக்கப்பட்டுள்ளது அல்லது வெளிப்படையாகவே மறுக்கப்பட்டுள்ளது: இரண்டாம் அகிலமும் மூன்றாம் அகிலமும் தொழிலாளர் இயக்கத்தினுள் ஏகாதிபத்தியத்தின் முகவர் (Agencies of Imperialism) அமைப்புகளாக உருமாறியதும் மற்றும் பின் தங்கிய நாடுகளின் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயகப் புரட்சியின் பணிகளை முடிவுக்கு எடுத்துச் சென்று சமுதாயத்தின் சோசலிச மறுகட்டமைப்பை ஆரம்பித்து வைக்க அதற்கு உள்ளார்ந்த ரீதியாக இயலாது இருந்தமை. ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் பல்வேறு தவறுதல்கள் மற்றும் தோல்விகள் சம்பந்தமாக தயவுதாட்சணிய மற்று விமர்சிக்கும் பண்டா, லட்சக்கணக்கானேரின் மரணத்தில் முடிந்த சமூக ஜனநாயகத்தினதும், ஸ்ராலினிசத்தினதும் பிரமாண்டமான காட்டிக்கொடுப்புகள் சம்பந்தமாக எல்லா ஓடுகாலிகளையும் போல மௌனமாக அவற்றைக் கடந்து செல்லுகின்றார்.

நான்காம் அகிலமானது அதன் நீண்டவரலாற்றில் முக்கியமாக ட்ரொட்ஸ்கியின் படுகொலையின் பின்னர் தவறுகள் செய்துள்ளது. அரசியல் குழப்பகால பகுதிகளைக் கடந்து வளர்ந்துள்ளது. மற்றும் தகுதியற்ற தலைவர்களுடன் போராடி தன்னை நிலைநிறுத்த முயன்றுள்ளது என்பது மறுக்கமுடியாது. முதலாளித்துவ சுரண்டலில் இருந்து மனிதனை விடுதலை செய்யும் வரை உண்மையை அடைய இராஜ பாதை எதுவும் கிடையாது. குறிப்பிட்ட சில நேரங்களில் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவின் நிலைமைகளில் இருந்து வெளிப்பட்ட சிக்கலான மற்றும் தனிப்புதுமையுடைய சமூக இயல் நிகழ்வுகள் (Social Phenomena) பற்றி தவறான அல்லது முழுமையற்ற மதிப்பீடுகளைச் செய்திருக்கலாம். எதைச் செய்தாலும் அது அக்கறை கொண்டு ஈடுபட்டிருந்த பிரச்சினைகள், ஸ்ராலினிசக் கட்சிக்குள் என்னவென்றாலும் எழவே முடியாததாகும். ஸ்ராலினிஸ்டுகள், டிட்டோவை ஒரு பாசிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் யூகோஸ்லாவியாவின் வர்க்கத் தன்மையைப் பற்றி புரிந்துகொள்ள கடும் முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

டிட்டோயிசம் என்ற பிரச்சினை கையாளப்பட்ட முறையின் இந்த "வேறுபாடு" வெறுமனே அறிவாற்றல் பற்றிய ஒன்றல்ல. ட்ரொட்ஸ்கிசத்துக்கும் ஸ்ராலினிசத்துக்கும் இடையில் உள்ள சமரசப்படுத்த முடியாத முரண்பாட்டின் அத்திவாரத்தில் இருந்து இது எழுகின்றது. பட்டாளி வர்க்கத்தைப் புரட்சிகர வர்க்கமாகக் கொண்டு அதன் வரலாற்று நலன்களைப் பிரதி நிதித்துவம் செய்யும் இயக்கம், 1917 அக்டோபரின் படிப்பினைகளை நனவாகத் தனது அடிப்படையாகக் கொண்ட இயக்கம், மார்க்சிசத்தின் வரலாற்று வளர்ச்சியை தனது பண்புருவமாக கொண்ட இயக்கம், ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்துவ முகவர்களைத் தவிடுபொடியாக்கும் பணியைத் தனது பணியாக ஏற்படுத்திக் கொண்ட இயக்கம், உலக சோசலிசப் புரட்சியைத் தனது வேலைத் திட்டமாகக் கொண்ட இயக்கம் வேறெந்த இயக்கமும் இல்லை. இது தான் நமக்கு பிரச்சினையின் மையமாகும்.

நாம், கனனுக்கும் சோசலிச தொழிலாளர் கழகத்துக்கும் பண்டா தொடுக்கும் குற்றச்சாட்டை நெறிமுறையாக மீளாய்வு செய்வோம். அனைத்துலகக் குழு அமைக்கப்படுவதற்கு முன்னரான காலப்பகுதியில் நான்காம் அகிலத்தின் வரலாற்றுக்கு அவர் தொடுத்த தாக்குதல்களின் மையமாகவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்துள்ளன. இதற்கு நீளமான மேற்கோள்கள் தேவைப்படுகின்றன, ஆயினும் பண்டா வரலாற்று மூல ஆதாரங்களை எப்படி அவர் நாணயமற்ற முறையிலும் தகுதியில்லாத வகையிலும் கையாளுகின்றார் என்பதை எடுத்துக்காட்ட இவை இன்றியமையாதவையாகும். இந்த அம்பலப்படுத்தல் ஒரு புரட்சிகர கடமையாகும். ஏனென்றால் கனன் ஒருதடவை கூறியது போல, "கட்சியின் வரலாற்றை பொய்மைப் படுத்துவது இளம் கட்சி உறுப்பினர்கள் நீர் அருந்த இருக்கும் கிணற்றில் நஞ்சை கலப்பது என்று பொருளாகும்."

பண்டா தனது 27 காரணங்களை வடிவமைத்த பொழுது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பழைய எதிரிகள் அத்தனை பேரையும் தொடர்ச்சியாகத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்தார் என்பதை நமது ஆய்வு எடுத்துக் காட்டும். பண்டாவின் மூளை பழைய திருத்தல் வாதிகளின் குப்பைகளை எல்லாம் திரட்டி மறுசுழற்சிக்கு விடும் குப்பைத் தொட்டியைப் போன்றது. அவர் கிளிப்பிள்ளையைப் போல் பல வருடங்களுக்கு முன் ஏன் பல சதாப்தங்களுக்கு முன்னேர சுமத்தப்பட்டு பொய்யானவை என்று எடுத்துக் காட்டப்பட்ட குற்றங்களை மீண்டும் கூறுகிறார். அவர், ட்ரொட்ஸ்கிக்கும் கனனுக்கும் எதிராக ஒஃலர் (Oehler) மற்றும் அதி தீவிர இடதுசாரிகளின் பக்கம் சாருகின்றார். அவர் சட்மன் (Shachtman), மொரோ (Morrow) எல்லாவற்றிலும் மேலாக பப்லோவாதி பேர்ட் கொக்கிரான் (Bert Cochran) ஆகியோர் கக்கிய சேறடிப்புகளை உண்மையானவை என ஏற்கின்றார். பண்டாவினுடைய தாக்குதலின் பெரும்பகுதி அதன் உள்ளார்வத்தை "கட்சி நெருக்கடியின் வேர்கள்" என அழைக்கப்பட்ட பப்லோவின் அமெரிக்க ஆதரவர்களால் 1953இல் எழுதப்பட்ட அவர்களின் பிரதான பத்திரத்தில் இருந்து பெறுகின்றது. இருந்த பொழுதும் சோசலிசத் தொழிலாளர் கட்சி நிறுவப்படுவதற்கு முன் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் இருந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை பண்டா திரிக்க எடுக்கும் முயற்சியைப் பற்றி முதலில் பார்ப்போம்.

கனன், 1934-35ல் நோர்மன் தோமசிற்கு (Norman Thomas) வெறுப்பூட்டும் முறையில் சரணாகதியடைந்தார். என்று பண்டா குற்றம் சுமத்துகின்றார். அமெரிக்க ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாற்றில் உள்ள இந்த சுவையற்ற சம்பவத்தைப் பற்றி மேலும் எதையும் கூறவில்லை. இந்தவிஷயம் சம்பந்தமாக அவர் சுருக்கமாக கூறியிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதொன்றாகும், ஏனெனில் பண்டாவிற்கு தான் எதைப்பற்றி பேசுகின்றோம் என்பது புரியவில்லை. அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சோசலிசக் கட்சியினுள் சென்றதைப் பற்றி குறிப்பிடுகின்றார் என்று நாம் சந்தேகிக்கின்றோம் என்று கூறுகின்றோம். ஏனெனில், பண்டா தனது திகதிகளை பிழையாகக் கொண்டுள்ளார். 1934-35இல் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பிரசித்திபெற்ற மிதவாதியான வணக்கத்திற்குரிய ஏ.ஜே. முஸ்ட் (A.J.Muste) இன் தலைமையிலான அமெரிக்க தொழிலாளர் கட்சியுடன் கூட்டிணைவைச் செய்தார்கள். ஐக்கிய அமெரிக்க அரசுகளில் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது இந்தக் கூட்டினைவின் விளைபயனாகும். இது ஒரு உண்மையான ட்ரொட்ஸ்கிசக் கட்சியின் வளர்ச்சியில் முக்கியமான ஒருபடி முன்னேற்றமாகும்.

தொழிலாள வர்க்கம் தீவிரம் அடைவதையும், 1934ம் ஆண்டு மினியாபொலிஸ் (Minneapolis) பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து பெற்ற தமது சொந்த செல்வாக்கையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி, இந்தக் கூட்டிணை, ட்ரொட்ஸ்கிஸ்டுகளை போர்க் குணமிக்க தொழிலாளர்களின் மற்றும் தீவிரவாதிகளின் முக்கிய பகுதியினர் மத்தியில் அவர்களது அரசியல் அடித்தளத்தை விரிவடையச் செய்ய முடிந்தது. இந்த முன்முயற்சிக்கு ட்ரொட்ஸ்கியின் முழு ஆதரவும் கிடைத்தது.

1936 இல் சோசலிசக் கட்சியினுள் நுழைவது ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு கொளுந்து விட்டு எரியும் பிரச்சினையாக இருந்தது. "இந்த வெறுப்பூட்டும் ஒத்துப் போதலின்" உண்மையான மூலகர்த்தா ஜேம்ஸ் பி. கனன் அல்ல ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கியாகும். மீண்டும் அகிலம் பொறிந்ததன் பின்னரும் பாசிசம் ஜேர்மனியில் வெற்றியீட்டியதன் பின்னரும் 1934ம் ஆண்டுக்கு முன்னதாகவே பல சமூக ஜனநாயகக் கட்சியினுள் குறிப்பாக பிரான்சில் இடதுசாரி அரசியல் போக்குகளின் வளர்ச்சியை ட்ரொட்ஸ்கி கண்டார். "பிரெஞ்சுத் திருப்பம்" -அரசியல் ஆர்வத்தில் சூடுபிடித்தலைப் பயன்படுத்தவும் அதன்மேல் தமது செல்வாக்கைக் கொண்டுவரவும் தந்திரோபாய ரீதியில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எஸ். எஃப். ஐ. ஓ வினுள் (SFIO, சோசலிசக் கட்சியின் தொழிற் சங்க மையம்) நுழைவை மேற்கொண்டனர். இதை ட்ரொட்ஸ்கிதான் முன்வைத்தார். இது சிறியகுழுக்களில் பிரச்சாரவாத வாழ்க்கையை நடத்தி வந்து அதற்கு முழுமையாக பழக்கப்பட்டு வளர்ந்திருந்த குழுநிலைவாதிகள் மத்தியிலிருந்து மூர்க்கமான எதிர்ப்பைப் பெற்றது.

பிரெஞ்சுத் திருப்பத்தினை மிகவும் மனக்கசப்புடன் எதிர்த்தவர்களில் ஹூகோ ஓஃலெர் (Hugo Oehler) அமெரிக்க கம்யூனிஸ்ட் கழகத்தினுள் (மஸ்டியிஸ்டுகளுடன் (Musteites) கூட்டுச் சேர்வதற்கு முன்னர் சர்வதேச இடது எதிர்ப்பின் அமெரிக்கப் பகுதி அப்படித்தான் அழைக்கப்பட்டு வந்தது) உள்ள குழுநிலைவாத அரசியல் போக்கின் தலைவரில் ஒருவராவார். பிரெஞ்சு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வெளிப்படையாக வெற்றி பெற்றிருந்த பொழுதும் இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த கட்சியினுள் அவர்கள் நுழைந்தது, மார்க்சிசத்தை அனுமதிக்க முடியாத முறையில் காட்டிக் கொடுத்ததைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்று ட்ரொட்ஸ்கி தொடுத்த போராட்டம் நான்காம் அகிலத்தை தத்துவார்த்த ரீதியில் தயாரிப்பதில் பிரமாண்டமான அளவு முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாயமாகும். ஓஃலெரைப் (ளிமீலீறீமீக்ஷீ) பற்றி வர்ணிக்கும் பொழுது ட்ரொட்ஸ்கி கூறுகின்றார்:

"ஒவ்வொரு குழுநிலைவாதியும் தனக்கென்று ஒரு தொழிலாளர் இயக்கம் வேண்டும் என விரும்புகின்றார். மந்திரச் சூத்திரங்களை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வதன் மூலம் ஒரு முழு வர்க்கத்தையும் தன்னைச் சூழ அணிதிரள தன்னால் நிர்ப்பந்திக்க முடியும் என்று எண்ணுகிறார். ஆனால் அவர் பாட்டாளி வர்க்கத்தை மயக்குவதற்குப் பதிலாக, அவர் எப்பொழுதும் தனது குட்டி உட்குழுவை மனம் சோர்வடையச் செய்து கலைப்பதில்தான் போய் முடிக்கின்றார்....

வழமையான வட்டங்களினுள் இயக்க வாழ்க்கை தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் வரை அப்படியான ஒரு மனிதர் சாந்தமானவராகவும், நேசமானவராகவும் இருப்பார். ஆனால் சம்பவங்கள் ஒரு அடிப்படையான மாற்றத்தை கொண்டு வந்தால் அவ்வளவுதான் கேடுசூழ்ந்து கொள்ளும்! குழுநிலைவாதி தன்னைச் சூழ்ந்துள்ள உலகைத் தொடர்ந்து அடையாளம் காணமுடியாதவராகின்றார். அனைத்து நிலவும் நிலைமைகளும் அவருக்கு எதிராக அணிதிரண்டு நிற்கின்றன. நிகழ்வுகள் அவரை ஏளனம் செய்வதால், அவர் அவற்றிற்கு எதிராகப் புறமுதுகைக் காட்டுகின்றார். வதந்திகள், ஐயுறவாதங்கள் மற்றும் பகற் கனவுகளை கொண்டு தன்னை அமைதிப்படுத்திக் கொள்ளுகின்றார். இப்படி அவர் சேறடிப்புகளின் ஊற்றுக் காலாகுகின்றார். அவரின் இயற்கையான தன்மை ஒரு சேறடிப்புவாதியாக இல்லாதிருந்தபொழுதும் அவர் நேர்மையற்றவர் அல்ல. அவர் வெறுமனே நிலவும் நிலைமையுடன் சமரசம் காணமுடியாத மோதுதலில் உள்ளார்."

ஐக்கிய அமெரிக்க அரசுகளில் "பிரெஞ்சுத் திருப்பத்தைச்" செயற்படுத்தல் ஓரளவு பிந்தியும், நிச்சயமாக வேறுபட்ட சூழலிலும் தான் வந்தது. இரண்டாம் அகிலத்தின் ஐரோப்பிய பகுதிகளைப் போல் அல்லாது நோர்மன் தோமசின் கட்சி அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு பரந்துபட்ட அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லை. இருந்தபொழுதும் ஐக்கிய அமெரிக்க அரசுகளில் உள்ள தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் அபிவிருத்தியின் சிறப்பியல்புகள் தந்திரரோபாய ரீதியாக சோ£லிசக் கட்சி பக்கம் நிலைநோக்கம் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை பயனற்றதாக்கவில்லை. 1935ம் ஆண்டின் பிற்பகுதியில் சோசலிசத் தொழிலாளர் கட்சியினுள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டு வலதுசாரிக் கன்னை பிரிந்து சென்றமை, திடீரென பிரமாண்டமான சாத்தியக் கூறுகளை ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்குத் திறந்து விட்டது.

தமக்கு சாதகமாக இப்பிளவை ஸ்ராலினிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று கவலை கொண்ட ட்ரொட்ஸ்கி, எவ்வளவு விரைவாக சோசலிசக் கட்சிக்குள் நுழைவு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாகச் செய்யும்படி கனனுக்கும், சட்மனுக்கும் கட்டளையிட்டார். தனது அக்கறையை கோடிட்டுக் காட்ட, தனது கட்டளைகளைத் தந்தி மூலம் அனுப்பினார். அன்றைய 1936 ஜனவரி 24ம் தேதி ஐக்கிய அமெரிக்க அரசுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பிரதான தலைவர்களான கனனுக்கும், சட்மனுக்கும் ஒரு கடிதம் மூலம் தனது கட்டளைகளை விரிவாக விளக்கினார்.

"ஒரு மத்தியவாதக் கட்சியினுள் ஒரு பரீட்சிக்கப்பட்ட மற்றும் ஸ்திரமான இயக்கம் ஒன்று நுழைவை மேற்கொள்ளுமாயின், அது ஒரு சரியான அல்லது பிழையான தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம். அதாவது அது பெரும் பெறுபேறுகளைத் கொண்டுவர முடியும் அல்லது அது எதையும் கொண்டு வராமலும் போகமுடியும் அப்படி இருந்த பொழுதும், பிந்தியது இப்போதைய நிலைமைகளினுள் சாத்தியமற்றது. ஆனால் இது ஒரு சரணடைவு அல்ல. சோசலிசக் கட்சியினுள் ஏற்பட்ட பிளவு, அதனுடைய வளர்ச்சியின் போக்குகளின் புறநிலை ரீதியான அறிகுறி என்ற முறையில் மிகப்பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. உங்களுடன் நானும், மத்தியவாதத் தலைமைக்குத் தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு நேரம் எதுவும் கொடுக்கக்கூடாது என்பது பற்றி உடன்பாட்டில் உள்ளேன், இதன் பொருள் விரைவாகச் செயற்பட வேண்டும் என்பதாகும்".

1936 பெப்ரவரி 6ம் திகதி ட்ரொட்ஸ்கி மீண்டும் எழுதினார்.

சோசலிசக் கட்சியினுள் ஏற்படும் அபிவிருத்திகளைப் பற்றி நமக்கென்ன அக்கறை, என்று கூறமுடியும். நாம் நமது சொந்த வழியிற் செல்வோம். ஆனால் திட்டவட்டமாக இதுதான் ஓஃகிலறைட்சுகளின் (Oehlerites) பாதை. அது வெறுமையில் இருந்து வெறுமைக்கு எடுத்துச் செல்லும். ஆனால் சோசலிசக் கட்சியினுள் உள்ள நிலைமை, கணிசமான அளவு புறக்கணித்து விட முடியாத சந்தர்ப்பங்களை முன் வைத்துள்ளது என்ற கருத்தை நாம் கொண்டுள்ளோம். நாம் காலம் தவறாது துணிவான திருப்பத்தைச் செய்ய வேண்டும், நேரம் இழக்காது கட்சியினுள் நுழைய வேண்டும். நம்மை ஒரு உட்கட்சிக் குழுவாக அமைத்துக் கொள்ள வேண்டும், ஸ்ராலினிஸ்டுகளின் அழிவுகரமான வேலைகளைத் தடுக்கவேண்டும், நாம் இவ்வாறான ஒரு முக்கிய அடியை முன்னெடுத்து வைக்க வேண்டும்".

ஸ்ராலினிஸ்ட்டுகளால் ஏற்படக் கூடிய அபாயத்தை வலியுறுத்தி ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்:

"அமெரிக்க சூழ்நிலையில் சோசலிச மற்றும் கம்யூனிசக் கட்சிகள் தங்குதடையற்று தம்முள் மீண்டும் நல்லிணக்க நிலையை ஏற்படுத்திக் கொண்டால், நமக்கு ஒரு முழுக் காலப்பகுதிக்கு ஒரு மிகப் பெரும்தடை ஏற்படுவதை எடுத்துக் காட்டும். இதைப் பார்க்க மறுப்பது உண்மையில் குருட்டுத்தனமாகும். அடுத்த மாதங்களில் ஒரு வேளை அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவில் ஏற்படும் அரசியல் தீவிரத்தினால், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள், அதுவும் குறிப்பாக அவர்கள் கட்டுக் கோப்பாக ஒன்றியிருக்கும் ஆற்றல் கொண்ட ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பார்களாயின் பிரதானமாக அவர்கள் நன்மை அடைவார்கள். இப்படியான ஓர் நிலைமையில் தொழிலாளர் கட்சி, நழுவவிட்ட சந்தர்ப்பங்களைப் பற்றிய உட்கட்சிச் சண்டை சச்சரவுகளின் அனைத்து விளைபயன்களுடன், முழுமையான ஒரு வெறும் பிரச்சாரவாத இயக்கமாக ஒரு ஓரத்தில் தொடரும். ஒரு விரைவான நுழைவு, ஸ்ராலினிஸ்டுகளால் சோசலிச இடதுசாரிப் பகுதியை மனம் சோர்வடையச் செய்யப்படுவதைத் தடுத்து, திருத்த முடியாத மத்தியவாதத் தலைவர்களை அம்பலப்படுத்தி, தொழிலாளர் முன்னணியின் தெளிவுபடுத்தலுக்கு ஊக்கம் அளித்து, அதன் மூலம் சரி நுட்பமாக, எதிர்காலத்திற்கான நமது நிலைகளைப் பலப்படுத்தும்.

பண்டா, நோர்மன் தோமசுகளுடனான வெறுப்பூட்டும் ஒத்துப் போதலைத் "தூற்ற விரும்பினால், இவர் குறைந்த பட்சம், அவரது தாக்குதலின் உண்மையான இலக்கை லியோன் ட்ரொட்ஸ்கியை பெயர் குறிப்பிட வேண்டும். பிரெஞ்சுத் திருப்பம் சம்பந்தமான அனைத்து விவாதங்களும் ட்ரொட்ஸ்கி இயங்கியல் முறைமையின் மேல் கொண்டிருந்த ஆட்சியையும், திடீர் திருப்பங்கள் ஆற்ற அவரிடம் இருந்த திறமையையும் வெளிப்படுத்தின. இந்தத் தந்திரோபாய முன் முயற்சிகளுக்கு இரண்டாம் அகிலத்தின் வரலாற்றுக் குற்றங்களுக்கு உறுதியான முறையில் சான்றாதாரங்கள் காட்டி தொடுக்கப்படும் மலட்டு எதிர்ப்பு, தொழிலாள வர்க்கத்தின் பழைய கட்சிகளின் முரண்பாடுகளை ஸ்தூலமாக ஆராய்வதை தட்டிக் கழிக்கின்றது. பிரெஞ்சுத் திருப்பத்துடன் சம்பந்தப்பட்ட அபாயங்களைப்பற்றி ட்ரொட்ஸ்கி கருத்திற் கொள்ளாமல் இல்லை. நுழைவுவாதம் மிகவும் சாதகமான நிலைமைகளினுள்ளும் எப்பொழுதும் இரு பக்கமும் கூர் உள்ள வாள் போன்றது. நுழைவு தந்திரோபாயத்தை செயற்படுத்துவதற்கான முன்நிபந்தனை, எப்பொழுதும் ட்ரொட்ஸ்கிச காரியாளர்களின் அரசியல் உறுதியும் ஒரு எதிர்ப்பான சூழ்நிலையினுள் பணியாற்றும் பொழுது உக்கிரமாக்கப்பட்ட வர்க்க அழுத்தங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலும் வேண்டும்.

அமெரிக்க ட்ரொட்ஸ்கிஸ்டுகள் சோசலிசக் கட்சியினுள் பணியாற்றிய ஆண்டில் மத்தியவாதச் சூழலுக்கு நெகிழ்ந்து செல்வதற்கான அறிகுறி தடயங்களை மிகவும் கவனமாகத் தேடி கண்டுபிடித்து அவற்றைத் தனது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். கனன் தனது அமெரிக்க ட்ரொட்ஸ்கிசத்தின் வரலாறு என்ற நூலில் இதனை ஒப்புக் கொள்கிறார்:

"சோசலிசக் கட்சியினுடைய மத்தியவாதக் கட்சி அலுவலர்கள் அமைப்பிற்கு தக்கபடி எமது இயக்கத்தின் தலைவர்கள் ஒரு சிறிதளவு அதிகமாகத் தம்மை மாற்றி அமைத்துக் கொண்டார்கள் என்பது பற்றி எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஒரு குறிப்பிட்ட அளவு சம்பிரதாயத்திற்குத் தக்கபடி மாற்றியமைத்து கொள்ளல் இயக்கத்தினுள் சாதாரணமாகச் செயற்பட வேண்டிய சாத்தியத்திற்கு முழுமையாக இன்றியமையாததுதான். ஆனால் இந்த நிலைமைக்குத் தக்கபடி மாற்றியமைத்துக் கொள்ளல் சிலரைப் பொறுத்தளவில் அளவுக்கு மிஞ்சி அதிகமாகச் சென்றது. இது பிரமைகளுக்கு இட்டுச் சென்றதோடு, எமது இயக்கத்தின் உறுப்பினர் சிலரைப் பொறுத்தவரை அரசியல் போக்கில் திசை திருப்பங்களை வளர்த்தது".

இதைப் போன்ற ஒளிவு மறைவற்ற சுயவிமர்சனங்கள், ஒருபோதும் ஹீலியாலோ அல்லது பண்டாவினாலோ செய்யப்படவில்லை. இது புதிய அனுபவத்தின் பொழுது ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தவறுகள் செய்தார்கள் என்பதை நேர்மையாக ஒத்துக் கொள்ளல் ஆகும். கனன் அவருக்கு நன்மதிப்புத் தரும் வகையில் ஒரு பொழுதும் தான் தவறு செய்யமாட்டார் என்றதில்லை. எப்படி பார்த்தாலும் இப்பிரச்சனை சம்பந்தமாக அவரின் திசை திருப்பங்கள் சட்மன் மற்றும் பேர்ண்ஹாம் ஆகியோரிலும் பார்க்க மிகச் சிறியனவையாக இருந்தன. சட்மனும், பேர்ண்ஹாமும் சோசலிசக் கட்சியின் நியூயோர்க் கிளையினை தமது சொந்த வீடு மாதிரி ஆக்கிக்கொண்டார்கள். அந்த வருடத்தின் பெரும் பகுதியை கலிபோனியாவில் செலவிட்ட கனன் விமர்சிக்கப்பட வேண்டுமாயின், அவர் அவரது தொழிற் சங்க நடவடிக்கைகளில் அளவுக்கு மிஞ்சி ஆழ்ந்து போனதற்காகவே செய்யப்பட வேண்டும். ஆனால் அது அரசியல் சாயம் பூசுதலாகும். உண்மையான தொழிலாளர் தலைவர்" (ட்ரொட்ஸ்கி அவரை அப்படி வர்ணித்தபடி) என்றதன் காரணமாக அவர் அந்த அரசியல் போக்கிலிருந்து மீட்டுக்கொண்டமையே விஷேடமான தன்மையாகும்.

ஐக்கிய அமெரிக்க அரசுகளில் "பிரெஞ்சுத் திருப்பத்தைச்" செயற்படுத்தியது பெரும் அரசியல் வெற்றியைக் கொடுத்தது. இது நேரடியாக சோசலிசத் தொழிலாளர் கட்சி (Socialist Workers Party) உண்டாக்குவதற்கு இட்டுச் சென்றது. சோசலிசக் கட்சியினுள் (ஷிஷீநீவீணீறீவீst றிணீக்ஷீtஹ்) உள்ள வலதுசாரி மத்தியவாதிகள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு எதிராகத் தமது தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டபொழுது, கனன் வெற்றிகரமாக எதிர்த்தாக்குதலை இயக்க ரீதியாக அணிதிரட்டி ட்ரொட்ஸ்கியின் வழிகாட்டலின் கீழ் தேவைப்பட்ட பிளவிற்கு நனவுடன் தயாரித்தார். பிளவு வந்த நேரத்தில், சோசலிசக் கட்சி இளைஞர்களில் மிகப்பெரும் பெரும்பான்மையினரையும் தொழிற் சங்கங்களினுள் முக்கிய சக்திகளையும் தம் பக்கம் வென்றிருந்தனர். இது 1937 டிசம்பர் மாதத்தின் கடைசி நாட்களிலும் 1938ம் ஆண்டின் புதுவருட நாட்களிலும் சிக்காக்கோவில் சோசலிச தொழிலாளர் கட்சியின் ஆரம்ப மாநாட்டை அமைக்க சாத்தியமாக்கியது.

சோசலிசக் கட்சியினுள் ஆற்றிய வேலை, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு மிகவும் பிரமாண்டமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்க அரசுகளினுள் "பிரெஞ்சுத் திருப்பத்தைச்" செயற்படுத்தியதும், மொஸ்கோ விசாரணைகளும் ஒரேநேரத்தில் நிகழ்ந்தன. கனன் தனது வரலாற்றில் நினைவுகூர்ந்தது போல:

"அந்தத் தீர்க்கமான தருணத்தில், வரலாற்று ரீதியாக நாம் சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்க வேண்டியிருந்தது. அப்படி நாம் இருப்பதன் மூலம் தாராண்மை வாதிகள், அறிவு ஜீவிகள், அரை மிதவாத அரசியல் ரீதியான மக்கள் போன்ற பகுதியினரை நாம் நெருக்கமாக அணுக வாய்ப்புக் கிடைத்தது. ட்ரொட்ஸ்கி பாதுகாப்புக் குழுவின் மாபெரும் பணிக்கு இவர்கள் எல்லோரும் தேவைப்பட்டனர். 1936ம் ஆண்டு கோடையில் ஸ்ராலினின் முழுமையான அவமதிப்பு அடையாமலிருப்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக அந்த விசாரணைகளை அதே சிறப்பாக வேறெந்த ஒரு காலத்திலும் ஏற்பாடு செய்திருக்க முடியும் என்று நான் கருதவில்லை. நாம் அப்பொழுது சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் மிகச்சிறந்த சாதகமான நிலமையில் இருந்தோம். மற்றும் நாம் அரைமதிப்புடைய கட்சி என்ற பாதுகாப்பினால் குறிப்பிட்ட அளவு சூழப்பட்டிருந்தோம். எனவே நாம் ஸ்ராலினிஸ்டுகள் திட்டம் இட்டதுபோல ஒரு சிறிய ட்ரொட்ஸ்கிசக் குழு என்று தனிமைப்படுத்தப்பட்டு, கும்பலாகச் சூழ்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட முடியவில்லை. நாம் விசாரணைகளை அம்பலப்படுத்தி, ட்ரொட்ஸ்கியைப் பாதுகாக்கப் பயங்கரமான பிரச்சார இயக்கத்தை தொடுத்தோம். ஆரம்பத்தில் இருந்தே ஸ்ராலினிஸ்டுகள், அவர்களுக்கு இருந்த பிரமாண்டமான அமைப்பு பத்திரிகை, கால்வருடி இயக்கங்கள், மற்றும் பண வளங்கள் எல்லாம் இருந்த பொழுதும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். நியூயோக்கில் உள்ள நமது தோழர்கள், நாட்டின் எல்லாப் பகுதியிலும் உள்ள தோழர்களின் உதவியுடன், ஜோன் டுவே (John Dewey) யைத் தலைவராகவும் மொஸ்கோ விசாரணையைப் பற்றி விவரம் ஆராயப்பட்ட ஒப்புறுதி மற்றும் ஆதரவை அளித்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு வகையான தொழிலைக் கொண்டவர்களின் பட்டியலையும் அணிதிரட்ட முன்முயற்சி எடுக்க முடிந்தது.

இந்த விசாரணையில் இறுதியில் நீங்கள் அறிந்ததுபோல, 1937இன் வசந்த காலத்தில் மெக்சிக்கோ நகரில் நடத்தப்பட்டது. வழக்கு கசடற சலித்துப் பிரித்தெடுக்கப்பட்டது. இதிலிருந்து மகத்தான இரு நூல்கள் வந்தன. இந்த இரு நூல்களும், லியோன் ட்ரொட்ஸ்கியின் வழக்கு, இரண்டாவது, குற்றம் அற்றவர் (நிரபராதி) என்ற ஆணைக்குழுவின் அறிக்கை. மொஸ்கோ விசாரணைகளை அம்பலப்படுத்தியதும் அதை அபகீர்த்தி அடையச் செய்ததும் ஒரு மிகப் பெரும் சாதனையாகும். இது 1936 இல் சோசலிசக் கட்சியில் சேர நாம் எடுத்த அரசியல் நடவடிக்கையினால் ஏற்பட்டது என்று ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

மொஸ்கோ விசாரணைகளுக்கு பின்னால் என்ற சட்மனுடைய கூரறிவு மிக்க நூலுடன், மொஸ்கோ விசாரணைகளுக்கு எதிரான போராட்டத்துடன் மேலும் நுழைவு செயற்படுத்தப்பட்ட காலப் பகுதி, ஸ்பானிய புரட்சியைக் காட்டிக் கொடுத்ததற்கு எதிராக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஆற்றிய தலையீட்டைப் பலப்படுத்தியது. பீலிக்ஸ் மொரோவின் (Felix Morrow) மார்க்சிச புலமைவாய்ந்த ஸ்பெயினின் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற நூல், சோசலிசக் கட்சியினுள் அரசியல் தெளிவுபடுத்தலுக்காக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தொடுத்த போராட்டத்தின் மற்றொரு சாதனையாகும். "பிரெஞ்சுத் திருப்பத்தைப்" பற்றி ஒரு கவனமுள்ள மற்றும் விமர்சன ரீதியான ஆய்வொன்றை அளித்த இந்தத் தந்திரோபாயத்தை ஏறக்குறைய மூன்று வருடங்களாக பல்வேறு நாடுகளில் செயற்படுத்தியதை கூர்ந்தாராய்வதற்குப் பதிலாக, பண்டா- நோர்மன் தோமசுக்கு அருவருப்பூட்டும் முறையில் இணங்கிப் போதல் என்ற அடையாளத்துண்டுக் குறிப்பை இந்த முழு அனுபவத்தின் மேலும் திணிக்கின்றார்.

"பிரெஞ்சுத் திருப்பம்" தொடர்பாக ஒரு கவனமான, விமர்சனத்திற்கான ஆய்வினைச் செய்வதை விட்டுவிட்டு பண்டா தனது இவ்வளகால அனுபவத்தின் பின்னரும் "நோர்மன் தோமசுடனான வெறுப்பூட்டும் கூட்டு" என கூறியுள்ளார். இது பண்டாவின் நான்காம் அகிலத்தின் வரலாறு தொடர்பான மேலெழுந்தவாரியான அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்றது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சிக்கலான வளர்ச்சியை மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக பண்டாவின் குறுகிய சிந்தனையானது மிகவும் எளிமையானதும், இழிவானதுமான காரணங்களிலேயே கவனம் செலுத்தியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அதாவது நல்லதோ, கெட்டதோ, சரியோ, பிழையோ, வெற்றியோ, தோல்வியோ என்பதிலேயே தங்கியிருந்தது. ஆனால் புரட்சிகர நடைமுறையானது இப்படியான மேலெழுந்தவாரியான வரைமுறைகளுக்கு அடிபணிவதோ அல்லது இடமளிப்பதோ அல்ல. வர்க்கப் போராட்டமானது முரண்பாடுகளும், முரண்பாடுகளினுள் உள்ள உண்மைகளும் நிறைந்த ஒரு பகுதியாகும். இதனை யார் கிரகித்துக்கொள்ள விரும்புகின்றார்களோ அவர்கள் இயங்கியலின் படி சிந்திக்கவேண்டும். அதாவது சகல போக்குகளையும் கிரகித்துக் கொள்வதுடன் மனித இயங்கியலிலும் விளைவுளை ஒன்றுக்கொன்று மாறான வரையறுப்புக்களின் கூட்டு என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். இதனால்தான் மார்க்சிஸ்ட்டுக்கள் சுயமான நம்பிக்கை தொடர்பாக பாரிய மதிப்பு கொண்டுள்ளதுடன், பண்டாவுக்கும் ஒரு பழமொழியை கூறவிரும்புகின்றேன்: "அழுது புலம்பாமல், சிரிக்காமல் விளங்கிக்கொள்ள முயலவேண்டும்"

 
Copyright 1998-2003
World Socialist Web Site
All rights reserved