World Socialist Web Site www.wsws.org


Twenty years since the death of Keerthi Balasuriya

கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்
By David North
18 December 2007

Back to screen version

பகுதி 1 | பகுதி 2
 

இது இரு பாகங்கள் கொண்ட கட்டுரையின் முதலாம் பாகமாகும். இரண்டாம் பாகம் டிசம்பர் 19 புதன் கிழமை வெளியிடப்படும்.

கீர்த்தி பாலசூரியவின் எதிர்பாராத மற்றும் ஆகவும் உரிய காலத்திற்கு முற்பட்ட மரணத்தின் 20வது ஆண்டு நிறைவை இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மிக ஆழ்ந்த மதிப்புடனும் மற்றும் அவரது இழப்பினால் நீடிக்கும் கவலையுடனும் நினைவு கூர்கின்றது. மறைந்து பல ஆண்டுகள் கடந்தும் கூட, தோழர் கீர்த்தியை தெரிந்த மற்றும் அவருடன் இணைந்து வேலை செய்த அனைவருக்கும் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் கீர்த்தியை இழந்த உணர்வு ஆழ்மனதில் எஞ்சியிருக்கும்.

1987 டிசம்பர் 18ம் திகதி காலை, இலங்கை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி கீர்த்தியை மரணம் தழுவிக்கொண்டது. அப்போது அவர் ஐரோப்பாவில் அனைத்துலகக் குழுவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு நாடு திரும்பி ஒரு மாதம் கூட கடந்திருக்கவில்லை. கீர்த்திக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்ட போது அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட 1985-86 பிளவின் அரசியல் படிப்பினைகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை அவரது மேசையில் இருந்து எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு அப்போது 39 வயது மட்டுமே. தோழர் கீர்த்தி உயிருடன் இருந்திருந்தால் இப்போது அவர் தனது 60வது பிறந்த நாளை எதிர்பார்த்திருந்திருப்பார்.

அனைவரையும் பொறுத்தளவில் நாம் கீர்த்தியின் அகால மரணத்தில் அவரை இழந்திருந்தாலும், அவர் கணிசமான மற்றும் நீடித்திருக்கும் அரசியல் வேலையின் மரபுரிமையை விட்டுச் சென்றுள்ளார். அது உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் இன்றியமையாத ஒரு அத்திவாரத்தை நிறுவியுள்ளது.

கடந்த இரு தசாப்தங்களதும் மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் எப்படியிருப்பினும், கீர்த்தி இறுகப் பற்றி போராடிக்கொண்டிருந்த விவகாரங்களும் பிரச்சினைகளும் எதுவிதக் குறைவின்றி தொடர்ந்தும் நீடித்திருப்பதோடு அவை கீர்த்தியின் மறைவின் போது இருந்ததை விட இன்று மிகப் பொருத்தமாக உள்ளன.

இந்தியா, சிலோன் (1972 வரை இலங்கையின் பெயராக இருந்தது) ஆகிய இரு நாடுகளும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் துணைக்கண்டத்தின் தேசிய முதலாளித்துவத்திற்கும் இடையில் நடந்த இழிந்த கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில் அரச சுதந்திரத்தை முயன்று பெற்று சற்றே ஓராண்டு கழிந்திருந்த 1948 நவம்பர் 4ம் திகதி கீர்த்தி பிறந்தார். பல்வேறு வழிகளிலும், ஒரு பக்கம் இந்திய மற்றும் இலங்கை தேசிய முதலாளித்துவத்திற்கும் மறுபக்கம் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள், அடுத்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கட்டவிழ்ந்த அரசியல் துன்பங்கள் அனைத்துக்கும் களம் அமைத்தது.

இத்தகைய முடிவுகள், இந்திய மற்றும் இலங்கை தேசிய முதலாளித்துவவாதிகள் உண்மையான சுதந்திரத்தை விரும்பியதை விட அவர்கள் சமூக புரட்சியையிட்டு பீதிகொண்டிருந்தார்கள் என்பதை அம்பலப்படுத்தியது. காந்தியும் நேருவும் இந்தியா மத ரீதியில் பிரிக்கப்படுவதை ஏற்றுக்கொண்டமை, மில்லியன் கணக்கான உயிர்களை விலையாகக் கொடுத்த வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை காட்டிக்கொடுத்த செயலாகும். இது துணைக்கண்டத்தை மீண்டும் மீண்டும் நிகழும் யுத்தத்திற்குள் தள்ளியதோடு பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தின் பிடியை பலப்படுத்தியது. இலங்கையில், தேசிய முதலாளித்துவத்தால் வடிவமைக்கப்பட்ட "சுதந்திரம்" தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடுகளை நிலைநாட்டியதோடு எதிர்கால உள்நாட்டு யுத்தத்திற்கான விதைகளையும் தூவியது.

அனைத்துலகவாத சோசலிச வேலைத்திட்டமொன்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு மார்க்சிஸ கட்சியின் தலைமையில், தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை வெல்வதன் ஊடாக மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, ஜனநாயகப் போராட்டத்தின் வரலாற்று ரீதியில் முற்போக்கான பணிகள் நிறைவேற்றப்பட முடியும் என வலியுறுத்தும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மையக் கருத்தையே தேசிய முதலாளித்துவத்தால் சுதந்திரப் போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டமை மெய்ப்பித்துள்ளது.

உண்மையில், இந்திய மற்றும் இலங்கை முதலாளித்துவத்திடம் அரச அதிகாரம் உத்தியோகபூர்வமாக கைமாற்றப்பட்ட பின்னர், சுதந்திரம் அடையப்பட்ட நிபந்தனைகளை கண்டனம் செய்த, இலங்கை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலைவர்கள் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படைகளை நாடினர். ஆயினும், அடுத்து வந்த தசாப்தங்கள் பூராவும், ட்ரொட்ஸ்கிசக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி வலதுசாரிகள் பக்கம் நெறிபிறழ்ந்து போனது.

இந்த முன்னெடுப்புகள், பாராளுமன்ற வெற்றிகளை பின்பற்றும் சகல சந்தர்ப்பவாத அடிபணிவுகளையும் ஊக்குவித்த தேசிய சூழ்நிலையின் அழுத்தத்திற்கு பிரதிபலிப்பாக அபிவிருத்தி கண்ட அதே சமயம், நான்காம் அகிலத்தினுள் பொதுவில் வளர்ச்சிகண்ட சீர்திருத்தவாத போக்கு லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவிற்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது. மைக்கல் பப்லோ, ஏர்னஸ்ட் மன்டேல் ஆகியோரின் தலைமையில் இத்தகைய சக்திகள் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டதோடு சமசமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாத தகவமைவையும் கூட ஊக்குவித்தன.

இந்த நீண்ட அரசியல் சீரழிவு 1964ல் அதன் உச்ச கட்டத்தை அடைந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் பெருந்தொகையானவர்களின் ஆதரவை இன்னமும் பெற்றிருந்த சமசமாஜக் கட்சி, நெருக்கடியில் மூழ்கிப் போயிருந்த பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்துகொள்ள உடன்பட்டது. இது இலங்கையினதும் மற்றும் அனைத்துலகக் குழுவினதும் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. நான்காம் அகிலத்தைப் பொறுத்தவரையில், முதலாளித்துவத்துடன் ஒரு பிற்போக்கு அரசியல் கூட்டுக்குள் லங்கா சமசமாஜக் கட்சி நுழைந்தமை, பப்லோவின் சீர்திருத்தவாதத்தின் எதிர்ப் புரட்சிகர பண்பை அம்பலப்படுத்தியது. இலங்கையின் நிலையை எடுத்துக்கொண்டால், இந்தக் கூட்டணியின் ஸ்தாபிதமானது 20 ஆண்டுகளுக்குள் உள்நாட்டு யுத்தம் வெடிப்பதற்கு மாற்றமின்றி வழிவகுத்த நடவடிக்கைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தது.

கீர்த்தி பாலசூரியவின் கல்வி நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அனுபவங்களின் அரசியல் படிப்பினைகளை கிரகித்துக்கொள்வதையே குறியாகக் கொண்டிருந்தன. இந்த முன்னெடுப்புகளில் அனைத்துலகக் குழு மையப் பாத்திரத்தை வகித்தது. 1953ல் நான்காம் அகிலத்தினுள் தலைநீட்டிய பப்லோ மற்றும் மண்டேலுக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்ட அனைத்துலகக் குழு, இலங்கையின் அபிவிருத்திகளை அவதானித்ததுடன் சமசமாஜக கட்சி மேலும் மேலும் சந்தர்ப்பவாதத்திற்குள் நுழைவது தொடர்பாகவும் கவனம் செலுத்தியது.

சமசமாஜக் கட்சி கூட்டரசாங்கத்திற்குள் நுழைந்ததன் பின்னர், பிரித்தானியாவில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகள் ஜெரி ஹீலியின் தலைமைத்துவத்தின் கீழ் லங்கா சமசமாஜக் கட்சிக்கு எதிராக முன்னெடுத்த அரசியல் தாக்குதல், இலங்கையில் ட்ரொட்ஸ்கிச மாணவ இளைஞர்களின் சிறந்த பகுதியினர் மத்தியில் பிரதிபலிப்பை பெற்றுக்கொண்டது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்த அரசியல் தெளிவுபடுத்தும் வேலை, 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிக்க வழிவகுத்தது. கீர்த்தி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

பெரும் அரசியல் பரீட்சையை எதிர்கொள்ள புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கும் (பு.க.க.) தோழர் கீர்த்திக்கும் வெகுகாலம் செல்லவில்லை. சமசமாஜக் கட்சி இழைத்த துரோகம், தொழிலாளர் வர்க்க இயக்கத்தை பலவீனப்படுத்தியதோடு தொழிலாளர்களிடம் இருந்து விவசாயிகளை பிளவுபடுத்த உதவியது. அத்துடன் அது பெரும் அரசியல் குழப்பத்தை தோற்றுவித்ததோடு விவசாயிகள் மற்றும் மாணவ இளைஞர்களின் கணிசமான பகுதியினர் மத்தியில் மாவோவாத செல்வாக்கு வளர்ச்சிகாண சாத்தியமான சூழ்நிலையையும் உருவாக்கி விட்டது. இது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஸ்தாபிக்கப்படுவதற்கும் அதன் வளர்ச்சிக்கும் வழி வகுத்தது.

இந்த அமைப்பு, ஒரு மூர்க்கமான ஏகாதிபத்திய விரோத போராளிக்குணத் தோற்றத்தை தீட்டியது. ஜே.வி.பி. யின் புரட்சிகர வாய்வீச்சுக்களுக்குள் மறைந்துகொண்டுள்ள, அடிப்படையில் குட்டி முதலாளித்துவ பிற்போக்கு அரசியல் முன்நோக்கை வெளியில் கொண்டுவரவும் அதை அம்பலப்படுத்தவும் அரசியல் துணிவு, மார்க்சிஸ நுண்ணறிவு ஆகிய இரண்டும் தேவைப்பட்டது.

1970ல், ஜே.வி.பி. யின் அரசியலும் வர்க்க சுபாவமும் என்ற கட்டுரையை கீர்த்தி எழுதினார். ஜே.வி.பி. யின் குட்டி முதலாளித்துவ மற்றும் மார்க்சிஸ விரோத பண்பை இந்தக் கட்டுரை தெளிவாக ஸ்தாபித்தது. அதன் தலைவரான விஜேவீர, ஜே.வி.பி. ஆட்சிக்கு வரும்போது கீர்த்தியை தூக்கிலிடுவதாக அச்சுறுத்தினார்.

ஆனால் 1971ல், கூட்டரசாங்கம் ஜே.வி.பி. க்கும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் இருந்த அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக கொடூரமான அடக்குமுறையை முன்னெடுத்தது. ஜே.வி.பி. உடனான சமரசம் காணமுடியாத வேறுபாடுகள் இருந்த போதிலும், பு.க.க. அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியலின் அடிப்படைப் பண்பை ஜே.வி.பி. யும் கூட ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டது. விஜேவீர சிறையில் இருந்து விடுதலையான பின்னர், கட்சி முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு தனது பாராட்டைத் தெரிவிக்கும் முகமாக தனிப்பட்ட முறையில் பு.க.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார். (இது 1980களின் கடைப்பகுதியில் பு.க.க. உறுப்பினர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வதில் இருந்து ஜே.வி.பி. யை தடுக்கவில்லை.)

வங்காள விடுதலை இயக்கத்துக்கு ஆதரவளிக்கும் உத்தேசத்துடன், கிழக்குப் பாகிஸ்தானுக்கு துருப்புக்களை அனுப்ப இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த முடிவுக்கு ஆதரவாக பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசக் கட்சியான சோசலிச தொழிலாளர் கழகம் எடுத்த நிலைப்பாடு தொடர்பான கீர்த்தியின் விமர்சனம், அவரின் அரசியல் உறுதிப்பாட்டையும் சிறப்பியல்புகளின் பலத்தையும் மேலும் கணிசமானளவு வெளிப்படுத்தியது. சோசலிசத் தொழிலாளர் கழகத்தின் (தொழிலாளர் புரட்சிக் கட்சியின் முன்னோடி) மைக்கல் பண்டாவால் எழுதப்பட்டு 1971 டிசம்பர் 6ம் திகதி பிரசுரிக்கப்பட்ட அறிக்கை, "பங்களாதேசுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்க இந்திய முதலாளித்துவ அரசாங்கம் எடுத்த முடிவை நாம் விமர்சனத்துடன் ஆதரிக்கின்றோம்," எனப் பிரகடனம் செய்தது.

பு.க.க. எடுத்த நிலைப்பாடு, சோசலிசத் தொழிலாளர் கழகம் எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிர்மாறானதாக இருந்தது. 1971 டிசம்பர் 8ம் திகதி பு.க.க. பிரசுரித்த அறிக்கை பிரகடனப்படுத்தியதாவது: "பாட்டாளிகளின் புரட்சிகர நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ட்ரொட்ஸ்கிச இயக்கம், இத்தகைய இயக்கங்கள், போராட்டங்கள் மற்றும் முரண்பாடுகள் சம்பந்தமாக சோசலிசத்திற்கான பாட்டாளிவர்க்க போராட்ட நோக்குநிலையில் இருந்து அதன் நிலைப்பாட்டை வறையறுக்கின்றது. பாட்டாளிகளின் பணி, முதலாளித்துவத்தின் ஏதாவதொரு யுத்தம் செய்யும் பிரிவினருக்கு ஆதரவளிப்பது அல்ல, மாறாக, சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை அமைக்கும் முன்நோக்குடன் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக வர்க்க எதிரியின் முகாமில் உள்ள ஒவ்வொரு முரண்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்வதாகும். சோசலிசக் குடியரசு ஒன்றியங்களை அமைப்பதன் மூலம் மட்டுமே துணைக்கண்டத்தில் உள்ள மில்லியன் கணக்கான உழைப்பாளிகளின் சமூக மற்றும் தேசிய அபிலாஷைகளை திருப்திபடுத்த முடியும்."

இன்று உள்ள வேகமான தொலைத்தொடர்பு சேவைகள் அன்று இல்லாத நிலையில், சோசலிச தொழிலாளர் கழகம் அதன் சொந்த அறிக்கையை வெளியிடும் போது அதன் நிலைப்பாடு பற்றி பு.க.க. அறிந்திருக்கவில்லை. சோசலிச தொழிலாளர் கழக அறிக்கை கொழும்புக்கு கிடைத்த போது, பு.க.க. அதன் சொந்த நிலைப்பாட்டை பகிரங்கமாக விநியோகிப்பதை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என பு.க.க. க்கு அறிவுரை செய்தார். அவர் அவ்வாறு செய்ததற்குக் காரணம், நா.அ.அ.கு. செயலாளர் கிளிஃப் ஸ்லோட்டருக்கு அவர் எழுதியிருந்தது போல், "எல்லாவற்றையும் விட அனைத்துலகக் குழுவுக்குள் இருக்கவேண்டிய தெளிவு மிக முக்கியமானதாகும்," மற்றும் "அனைத்துலகைக் குழுவைக் கட்டியெழுப்பப் போராடாமல் தேசிய பகுதியைக் கட்டியெழுப்புவது எங்களுக்கு சாத்தியமாகாது." எவ்வாறெனினும், சோசலிச தொழிலாளர் கழகத்துடன் பு.க.க. உடன்பாடு காணாததை விளக்குகையில், ஸ்லோட்டருக்கு 1971 டிசம்பர் 16ம் திகதி எழுதிய கடிதத்தில் கீர்த்தி வார்த்தைகளை அளக்கவில்லை.

"இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தை எதிர்க்காமல் வங்காள மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும் சோசலிச அடித்தளத்தில் இந்தியாவை சுயாதீனமாக ஐக்கியப்படுத்துவதும் சாத்தியமற்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்குள் இருந்து யுத்தத்தை எதிர்க்காமல், ஐக்கியப்படுத்தப்பட்ட சோசலிச இந்தியாவைப் பற்றி பேசுவது முற்றிலும் கேலிக்கூத்தாகும். ஐக்கிய சோசலிச இந்தியாவில் மட்டுமே இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பல தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை காக்க முடியும்."

1972 ஜனவரி 11ம் திகதி, கீர்த்தி லண்டனுக்கு இன்னுமொரு கடிதத்தை அனுப்பிவைத்தார். இம்முறை இந்திரா காந்தியின் தலையீட்டுக்கு மைக் பண்டா வழங்கிய உற்சாகமான ஆதரவுக்கு பதிலாக அது இருந்தது. முன்னர் பப்லோவாதிகளுக்கு எதிராக நா.அ.அ.கு. பாதுகாத்துவந்த ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளில் இருந்து பண்டாவின் நிலைப்பாடு பின்வாங்கியிருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

"பங்களாதேஷ் சம்பந்தமான அனைத்துலகக் குழுவின் போலி அரசியல் நிலைப்பாட்டின் தர்க்கம், காலனித்துவ நாடுகளில் உள்ள வெகுஜனங்களின் போராட்டம் தொடர்பான மார்க்சிஸ இயக்கத்தின் கடந்த கால அனுபவங்கள் அனைத்தையும் கைவிட வழிவகுக்கும் மற்றும் வழிவகுத்துள்ளது. 1961-63 காலகட்டத்தில் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் சோசலிச தொழிலாளர் கழகத் தலைமைத்துவத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நன்மைகளையும் மீளாய்வு செய்யும் திசையை நோக்கியே இத்தகைய முயற்சிகள் நகர்கின்றன என்பது இப்போது தெளிவு. நீங்கள் டிசம்பர் 27ம் திகதி அனுப்பி வைத்த கடிதம், மார்க்சிஸத்தில் இருந்து முழுமையாக வேறுபட்ட ஒரு அரசியல் நிலைப்பாட்டை பாதுகாக்கும் முயற்சியைத் தவிர வேறு ஒன்றும் அல்ல. அதைப் பாதுகாப்பதன் பேரில் நீங்கள் மார்க்சிஸத்தை திரிபுபடுத்தி, நீங்களே குழப்பத்துக்குள் மூழ்கிப்போவதோடு உங்களது அரசியல் வங்குரோத்தையும் அம்பலப்படுத்திக் கொண்டுள்ளீர்கள்."

சோசலிச தொழிலாளர் கழகம் அனைத்துலகக் குழுவுக்குள் கீர்த்தியின் கடிதத்தை விநியோகிக்கவில்லை. நா.அ.அ.கு. வின் வேலைகள் தொடர்பாக ஒரு சுயாதீனமான மற்றும் விமர்சன ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும் இயலுமை பு.க.க. க்கு உண்டு என்பதை புரிந்துகொண்ட சோசலிச தொழிலாளர் கழகம், இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் தோழர் கீர்த்தியையும் தனிமைப்படுத்தத் தயாராகியது.

சோசலிச தொழிலாளர் கழகம் வலதுபக்கம் நெறிபிறழ்ந்த அளவுக்கு, பு.க.க. வை தனிமைப்படுத்தும் கேடுகெட்டதும் மூர்க்கமானதுமான முயற்சிகள் வளர்ச்சி கண்டன. 1985ல் பிரித்தானிய அமைப்புக்குள்ளும் மற்றும் அனைத்துலகக் குழுவினுள்ளும் அரசியல் நெருக்கடி வெடித்த பின்னரே, இந்த பெறுமதியான கடிதங்களுக்கு அனைத்துலக இயக்கத்தினுள் வாசகர்களை வெற்றிகொள்வது சாத்தியமாகியது.

தொடரும்...