இந்திய தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் இரண்டு நாள் "பொது வேலைநிறுத்தம்" செய்யவுள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா முழுவதும் அடுத்த செவ்வாயும் புதனும் (ஜனவரி 8, 9) அன்று நடக்கவிருக்கும் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், இந்து ஆதிக்க பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) தலைமையிலான அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு "சீர்திருத்தங்களுக்கு" எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் மேலும் குறைந்த பட்ச கூலியில் உயர்வு மற்றும் புதிய வேலைகளுக்கான திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி தலைமையில், நான்கு அரை ஆண்டுகால பா.ஜ.க அரசாங்கம் வகுப்புவாத எதிர் வினையை ஊக்குவித்து, இந்தியாவின் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இராணுவ-மூலோபாய கூட்டினை விஸ்தரித்து, மேலும் இந்தியாவை உலக முதலாளித்துவத்துக்கு மலிவு கூலியின் புகலிடமாக மாற்றுவதற்கான ஆளும் வர்க்கத்தின் உந்துதலை தீவிரப்படுத்தியது. அது இவற்றை உள்ளடக்கியது: தொழிலாளர்களை மேலும் நாள் கூலிகளாக்கும் முயற்சிகளை ஊக்குவித்தல், வேலை மற்றும் சுற்று சூழல் தரத்தை மேலும் கீழே தள்ளல், அரசாங்கத்துக்கு- சொந்தமான உள்கட்டமைப்பு மற்றும் இதர பொது துறை பிரிவுகள் மற்றும் வணிகங்களை தனியாருக்கு துரிதமாக விற்றுத்தள்ளல், தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த பட்ச சலுகைகளான வருங்கால வைப்பு நிதிகளுக்கு வெட்டு, மேலும் அரசாங்கத்தின் நிதி நெருக்கடியை உழைக்கும் மக்களின் மீது சுமையாய் திணித்து, மிகவும்-குறைவான வரி விகிதத்தை பெரும் வணிகம் மற்றும் செல்வந்தர்களுக்கு கொடுக்க செய்ய மிருகத்தனமான சமூக செலவீன வெட்டுகள் மற்றும் வரி மாற்றங்கள்.

பரந்த மற்றும் வேறுபட்ட தட்டுகளை சேர்ந்த தொழிலாள வர்க்கம் இந்த ஜனவரி 8-9 போராட்ட வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள், அவர்கள் முறையே மீனவர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், மேலும் சில நகரங்கள் மற்றும் ஊர்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பீடி தொழிலாளர்கள் ஆவார்.

ஆனால், எவ்வாறாயினும், அடுத்தவாரம் "பொது வேலைநிறுத்தத்தில்" கலந்து கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அபிலாஷைகள் மற்றும் நலன்களுக்கும் இதற்கு அழைப்பு விடுத்திருக்கும் மற்றும் ஆதரவு கொடுக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சிடுமூஞ்சித்தனம் மற்றும் எதிர்புரட்சிகர அரசியல் இலட்சியங்களுக்கும் அடிப்படையான முரண்பாடு உள்ளது. அவைகள் இந்த இந்த வினையை ஆற்றுவது, இந்திய முதலாளித்துவம் மற்றும் வெறுக்கப்படும் பா.ஜ.க. அரசாங்கத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க அணித்திரட்டலுக்காக அல்ல மாறாக அதனை அடக்குவதற்காகத்தான்.

வேலைநிறுத்திற்கான இந்த அழைப்பு, இந்தியாவின் மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பால் "தேசிய தொழிலாளர்கள் கூட்டத்தில்" கடந்த செப்டம்பரில் பா.ஜ.க வின் பாரதீய தொழிலாளர்கள் சங்கம் (BMS) மட்டும் விலகி நிற்க, விடுக்கப்பட்டது. அன்று இது பல தனிநபர் சங்கங்களாலும் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலைநிறுத்த எதிர்ப்பு போராட்டத்தின் அடித்தளமான அரசியல் முன்னோக்கு மற்றும் இந்திய முதலாளித்துவம், "மக்கள்-சார்பு கொள்கைகளை" முன்னெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுவது பிரதான ஸ்ராலினிச கட்சிகளான CPM மற்றும் பழைய சிறிய CPI மற்றும் அதன் தொழிற்சங்க பங்காளிகளான CITU மற்றும் AITUC ஆகும்.

ஸ்ராலினிசவாதிகள் பல தசாப்தங்களாக, இந்திய அரசியல் நிறுவனத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக பங்காற்றியுள்ளனர். அவர்கள், 1991ல் தொடங்கி 2008 வரையிலான பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி (இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சி) தலைமையில் உள்ள தொடர் அரசாங்கங்களுக்கு முட்டு கொடுத்தனர்- அது புதிய பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்தியது மேலும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவை பின்பற்றியது. ஸ்ராலினிசவாதிகள், அவர்கள் ஆண்ட மாநிலங்களான, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் திரிபுராவில் அவர்களே "முதலீட்டாளர்-சார்பு" கொள்கை என்று விவரித்ததை நிறைவேற்றிய அதேவேளை சோசலிசத்தை நிராகரித்தனர், நெடுங்கால CPM முதல்வர் ஜோதி பாசுவின் வார்த்தைகளில் சொல்வதானால், "தொலைதூர கனவு" என்று புறந்தள்ளினர்.

ஸ்ராலினிசவாதிகளை பொறுத்தவரையில், அடுத்த வார போராட்டம் என்பது தொழிலாளர் வர்க்க மற்றும் கிராமப்புற ஏழைகள் இடையே வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பினை மட்டுப்படுத்தி அதனை முதலாளித்துவத்தின் பகுதிகளுக்கு பின்னால் செல்லும்படி தள்ளி ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தை ஏப்ரல்-மே தேர்தலுக்கு பின் ஆட்சியில் அமரவைக்க செய்யப்படும் ஒரு அரசியல் சித்துவேலையாகும்.

அவர்கள் கடந்த மூன்ற தசாப்தங்களாக செய்தது போல், ஸ்ராலினிசவாதிகள், பா.ஜ.க மற்றும் வலதுசாரி இந்து கூட்டாளிகளின் குற்றங்களை சுட்டிக்காட்டுவது என்பது இந்திய முதலாளித்துவத்தின் மீது குற்றம் சுமத்துவதற்காகவோ, ஆளும் வர்க்கம் பிற்போக்கை வாரியானைப்பது பற்றி மேலும் இந்திய ஜனநாயகத்தின் நச்சுத்தன்மையை பற்றி தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கை செய்வதற்காகவோ அல்ல; ஆனால் மாறாக தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் மற்றும் அதன் கும்பலான வலதுசாரி பிராந்திய மற்றும் சாதிவாத கட்சிகளுக்கு கீழ்ப்படிய செய்வதை நியாயப்படுத்தவாகும்.

CPM, CITU, மற்றும் CPM தலைமையில் உள்ள இடது முன்னணியிலுள்ள சிறிய கட்சிகளும் அதன் தொழிற்சங்க பங்காளிகளும், இந்த "பொது வேலைநிறுத்தம்" பற்றி விளம்பரப்படுத்துகையில், இது பா.ஜ.க வை எதிர்வரும் தேர்தலில் தோற்கடிக்க கட்டப்படும் "பரந்த ஒற்றுமை"யாக பார்க்கின்றனர்.

ஸ்ராலினிசவாதிகள் அடுத்தவார வேலைநிறுத்தத்தை, பா.ஜ.க. வை தேர்தலில் தோற்கடிப்பதை உறுதி செய்து “ஒரு மாற்று அரசாங்கத்தை”, கொண்டுவருவதற்கான அவர்களது பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக பார்க்கின்றனர் என்பது டிசம்பர் 30 அன்று அவர்களின் CPM ஆங்கில வாரப் பத்திரிகையான மக்கள் ஜனநாயகத்தில் (People's democracy) தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. "2019: பெரும்போர் முன்னே" என்ற தலைப்பில் வந்த கட்டுரை நடந்து முடிந்த மாநில தேர்தலில் (இராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கர்) பா.ஜ.க, காங்கிரஸிடம் தோல்வியுற்றது குறித்து பறைசாற்றி, மேலும் கூறியது, CPM அரசியல் ரீதியாக விவசாயிகளுக்கு போராட்ட காலத்தில் கொடுத்த தலைமையே "பா..ஜ.க. வுக்கு எதிராக ஒரு பரந்த அதிருப்தியை திருப்பியுள்ளது." அது, அடுத்த வார வேலை நிறுத்தமும் இதே பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று மேலும் கூறுகிறது. "புத்தாண்டுக்குள் நுழைகையில், பா.ஜ.க. மற்றும் மோடி அரசாங்கத்தை தோற்கடிக்க ஒரு பலமான ஒற்றுமையை கட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் செலுத்த வேண்டும். மத்திய தொழிற்சங்கங்களால் ஜனவரி 8-9, 2019 அன்று அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் இந்த திசையில் முக்கிய படியாகும்." என்று மக்கள் ஜனநாயகம் கூறுகிறது.

வேலை நிறுத்தம், பெரு வணிக காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான INTUC மற்றும் தொ.மு.சவின் (வலது சாரி பிராந்திய கட்சியான DMK இன் தொழிற்சங்கம்) நெருக்கமான ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. DMK முன்னதாக பா.ஜ.க. வின் அரசாங்கத்தில் பங்குபெற்றுள்ளது. ஆனால் இன்று அது காங்கிரஸ் கட்சியின் முக்கிய மற்றும் நெருங்கிய கூட்டாளி.

ஸ்ராலினிசவாதிகள் தங்களின் களங்கப்பட்ட "இடது" சான்றுகளுக்கு மெருகூட்டவே, அடுத்த வார வேலைநிறுத்த போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றனர். அவர்களின் வலதுசாரி கொள்கைகளின் காரணமாக, CPM மற்றும் CPI இன் வாக்காளர் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் தேக்கம் அடைந்துள்ளது. 2009 வாக்கில் நாடாளுமன்றத்தில், மூன்றாவது பெரிய சக்தியாக இருந்த இடது முன்னணி இப்போது வெறும் 12 இடங்களையே வைத்துள்ளது. சமூக எதிர்ப்பினை சமரசப்படுத்தி திசை திருப்புவதன் மூலம் தாங்கள் ஒரு பயனுள்ள பங்கு வகிக்க முடியும் என்பதை முதலாளித்துவத்துக்கு காட்டுவதன் மூலம் ஸ்ராலினிசவாதிகள் அரசியல் அமைப்பில் தங்கள் அரசியல் செல்வாக்கினை மீண்டும் பெற முடியும் என்று நம்புகின்றனர்.

உலகம் முழுவதும் இருப்பதை போல, சமீபகாலம், தமிழ்நாட்டில் வாகனத் தொழிலாளர்கள், டெல்லி மற்றும் ஹரியானாவில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் உட்பட தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியை குறிப்பதாயுள்ளது. அங்கே விவசாய நெருக்கடிக்கு எதிராகவும் சுற்று சூழல் பேரழிவுக்கு எதிராகவும், பரந்த போராட்ட அலைகள் எழுந்துள்ளன. மே இல், பொலிஸ் மிருகத்தனமாக தூத்துகுடியிலுள்ள ஸ்டெர்லிட் தாமிர அலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நசுக்கி, கொடூரமாக 13 போராட்டக்காரர்களை சுட்டுக்கொன்றனர்.

இந்த போராட்டங்களுக்கு எரியூட்டியது வெறும் பா.ஜ.க. அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு மட்டும் அல்ல மாறாக சுதந்திரத்துக்கு பின் இந்திய முதலாளித்துவத்தால் கடைப்பிடிக்கப்பட்ட அரசு தலைமையிலான முதலாளித்துவ வளர்ச்சித் திட்டம் முற்றிலும் திவாலானதை அடுத்து அது மூன்று தசாப்தங்களாக மேற்கொண்ட தங்கு தடையற்ற "திறந்த சந்தை" கொள்கையினால் ஏற்படுத்தப்பட்ட சமூக பேரழிவும் தான்.

இந்தியாவின் பில்லியனர்கள் (பெரும் கோடீஸ்வரர்கள்) எண்ணிக்கை 90களின் மத்தியில் 2 இலிருந்து சுமார் 130 ஆக இன்று உயர்ந்து, உலகில் நான்காம் இடத்தை பிடித்துள்ள அதே வேளையில், இந்தியாவில் உள்ள 1.3 பில்லியன் மக்களில் 70 சதவிகிதத்தினர், நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டிற்காக பிரச்சாரம் செய்கையில், இந்தியாவில் கூலி சீனாவை விட கால்வாசிக்கும் குறைவாக உள்ளது என்று மோடி பெருமை கொள்கிறார். சமீபத்திய கருத்து கணிப்பின் படி, இந்தியாவில் 46 மில்லியன் குழந்தைகள், சரியான சத்தில்லாத உணவினை உண்பதால் வளர்ச்சி குறைவாக உள்ளனர் மேலும் 25 மில்லியன் "வீணடிக்கப்பட்டது". இந்திய முதலாளித்துவத்தின் வல்லரசு அபிலாஷையை நிறைவேற்ற இந்தியா உலகிலேயே நான்காவது பெரிய இராணுவ வரவு-செலவு திட்டக் கணக்கை கொண்டுள்ள அதேவேளையில் முறையே GDP யில் வெறும் 1.15 சதவிகிதம் சுகாதாரத்துக்கும், 2.7 சதவிகிதம் கல்விக்கும் செலவிடுகின்றது.

இந்த சமூகப் பேரழிவுகளை ஏற்படுத்திய கொள்கைகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சி மிக முக்கிய பங்கு வகித்தது என்பது குறித்து சொல்ல வேண்டியதில்லை, அது, ஸ்ராலினிசவாதிகள் மற்றும் அதன் சொந்த INTUC உள்பட முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் அரசியல் பிடியில் நடக்கும் எந்த ஒரு எதிர்ப்பு வேலைநிறுத்த போராட்டமும் ஆபத்தற்றது என்பதை அறிந்து வைத்திருக்கின்றது.

INTUC தலைவர் பற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான G. சஞ்சீவ ரெட்டி, கூறுவதன் படி, காங்கிரஸ் கட்சி தலைமையின் அரச வாரிசான ராகுல் காந்தி; "இந்த வேலைநிறுத்தத்திற்கு தன் மனமார்ந்த ஆதரவை நல்கியுள்ளார்." INTUC மற்றும் அதன் தலைமையான காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ராலினிசவாதிகள் கொடுக்கும் அரசியல் முகமூடியை வெட்கமில்லாமல் பயன்படுத்திக்கொண்டு ரெட்டி வாக்கு கேட்க முற்படுகிறார்: "நாங்கள் தொழிலாளர்களிடம் அவர்களது பிரச்சனையை தீர்க்கும் முற்போக்கு அரசாங்கத்தை மத்தியில் அமர வைக்குமாறு கேட்கிறோம்."

அடுத்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும், அதற்கு ஏற்பாடு செய்யும் இயக்கங்களுக்கும் இடையில் இணக்கம் காணமுடியாத வர்க்க இடைவெளி இருக்கிறது, இது மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான போலி வழக்கு தொடர்பாக முழுமையாக மௌனம் சாதிக்கும் அதேசமயம் மீண்டும் அரசாங்கம் மற்றும் முத்தரப்பு (சங்கம்-அரசு-பெறுவணிகம்) இந்திய தொழிலாளர் மாநாட்டுடன் (ILC) "பேச்சு வார்த்தையை" புதுப்பிக்க வேண்டும் என்று பலமாக வற்புறுத்துவதில் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்த வேலை நிறுத்த கோரிக்கைகளில் அல்லது பிரச்சாரத்தில், 13 மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டம் இடம் பெறவில்லை. ஆனாலும் இந்த தொழிலாளர்கள், ஒப்பந்த வேலை மற்றும் கடுமையான வேலை நிலைமைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கு தலைமை வகித்ததால், பொய் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.

அதே வேளையில், INTUC இற்கு அதன் இடத்தை அனைத்து பெருநிறுவன கூறுகளில் திரும்ப தருமாறும் மற்றும் 2015 இற்கு பின்னர் முதல் தடவையாக ILC ஐ பா.ஜ.க. அரசாங்கம் கூட்ட வேண்டுமென்றும் கூச்சல் போடுவதில் தலைமை வகிக்கும் ஸ்ராலினிச CITU மற்றும் AITUC உடனுள்ள இந்த சங்கங்கள் அடமாக உள்ளனர்.

Loading