இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொண்டன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச.) தொழிலாளர்கள், செப்டம்பர்16அன்று ஊதிய உயர்வு உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் தீவு முழுவதும் முன்னெடுத்த தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மூன்று நாட்களுக்கு பின்னர் தொழிற்சங்கங்கள் நிறுத்திக்கொண்டன. தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக இ.போ.ச. தலைவர் கொடுத்த வாக்குறுதியை ஏற்று வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அரசாங்க ஊழியர்களுக்கு 2019 வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட 2,500 ரூபா சம்பள உயர்வு போக்குவரத்துச் சபை தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வெண்டும் என்பது வேலைநிறுத்தம் செய்l தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை ஆகும். கடந்த ஆண்டு வேலைநிறுத்தம் செய்த போது அதைக் கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதும் இதுவரை அந்த ஊதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். 2015 இல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்ட ரூ. 10,000 கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும் போது, இ.போ.ச. தொழிலாளர்களுக்கு அதில் ரூ. 6,000 மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில் சேர்க்கப்பட வேண்டிய ரூ. 2000 சேர்த்து நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கையில் அடங்கும்.

செப்டம்பர் 18 அன்று தொழிற்சங்கங்களுடனான சந்திப்புக்குப் பின்னர் “இ.போ.ச.யின் அனைத்து தொழிலாளர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதாக சபையின் தலைவர் மாரசிங்க உறுதியளித்ததாகவும், அதன்படி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்ததாகவும் இலங்கை சுதந்திர தேசிய போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் (இ.சு.தே.போ.தொ.ச.) தலைவர் சமன்குமார ஊடகங்களுக்கு அறிவித்தார.
அது ஒரு வாக்குறுதி மட்டுமே அன்றி தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வந்தது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது.18ஆம் தேதி எல்பிட்டிய டிப்போவுக்கு வந்த காலி மாவட்ட இ.போ.ச. தலைவர் ஒருவர், பேருந்துகள் ஓடுவதைத் தடுப்பது குறித்து தனக்கு புகார்கள் வந்துள்ளதாக கூறி, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் போக்குவரத்தை தடை செய்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், அனைவரும் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் தொழிலாளர்களை அச்சுறுத்தியுள்ளார். அச்சுறுத்தலால் கோபமடைந்த தொழிலாள்கள் அவரை டிப்போவில் இருந்து வெளியேற்றினர்.

வேலைநிறுத்தம் தொடர்ந்தால் திறைசேரியில் உள்ள பணத்தை இழக்க நேரிடும் என்று தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை செய்யாவிட்டால் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார். தொழிலாளர்கள் அதை ஒரே குரலில் நிராகரித்துள்ளனர்.

“நிர்வாகிகள் வேலைநிறுத்தத்தை எதிர்க்கின்றனர். பேருந்துகள் உடைந்தாலும் அவற்றை விற்றாலும் சில்லுகள் மாற்றப்பட்டாலும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. எங்களுக்கு சம்பளம் மட்டுமே உள்ளது. எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டும். தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற அழைப்பை இவ்வாறு கூறி தொழிலாளர்கள் நிராகரித்தனர். தொழிலாளர்கள் மத்தியில் இத்தகைய எதிர்ப்பு இருந்த போதிலும், வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தால் நிறுத்தப்பட்டது.

இ.சு.தே.போ.தொ.ச., இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் (இ.போ.ஊ.ச.) அனைத்து இலங்கை ஐக்கிய மோட்டார் வாகன தொழிலாளர் சங்கம் மற்றும் அனைத்து இலங்கை மோட்டார் வாகன ஊழியர் சங்கம் ஆகியவை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடந்த வேலைநிறுத்தத்தின்போது இ.போ.ச. மற்றும் அரசாங்கத்தாலும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதிய உயர்வை செலுத்தத் தவறியதற்கும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கும் எதிராக தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியும் வெறுப்பும் பெருகிவருவதன் காரணமாக, இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்புவிடுக்க தொழிற்சங்கங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டன.

ஊதியக் கோரிக்கைகளை வழங்குவதாக தலைவர் கொடுத்த "எழுத்துமூல" வாக்குறுதியை ஏற்றுக்கொண்டே கடந்த செப்டம்பரில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டன. செப்டம்பர் 5 அன்று இ.போ.ச. தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இ.போ.ச. அதிகாரிகளின் "ஒருதலைப்பட்ச" வாக்குறுதி மீறல் குறித்து கவலை தெரிவித்த தொழிற்சங்கத் தலைவர்கள், அதனால் ஊழியர்கள் "கடுமையாக சிரமத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கு அநியாயம் செய்யப்பட்டுள்ளதாகவும்" வலியுறுத்தினர். இது இ.போ.ச. ஊழியர்கறள் மத்தியில் தங்களால் கட்டுப்படுத்த முடியாதளவு அமைதியின்மை அதிகரித்து வருவது குறித்து அரசாங்கத்திற்கு விடுக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்ந்த அனைத்து இலங்கை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (அ.இ.போ.தொ.ச.), ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) சார்பு தேசிய ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை பொது சேவை சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் கருங்காலி வேலை செய்தன.

இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும், இ.போ.ச. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவதைத் தடுக்க தொழிலாளர் மத்தியில் பிரிவுகளை ஏற்படுத்த செயல்படுகின்றன.

தீவு முழுவதும் வேலைநிறுத்தத்தில் 80 டிப்போக்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொழிற்சங்கத்தின் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், பல நூறு வேலைநிறுத்தக்காரர்கள் திங்களன்று கொழும்பில் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அவர்களின் போராட்டம் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பணி நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்களிடையே வளர்ந்து வரும் பரவலான போராட்டங்களின் ஒரு பகுதியாகும். ஏனைய தொழிலாள பகுதியினரும் போராட்டத்துக்கு வரக்கூடும் என்பதையிட்டு பீதியடைந்த தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நிறுத்த விரைந்தன.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பொது நிர்வாக அதிகாரிகள், மகாவேலி ஆணைய அதிகாரிகள், ரயில்வே பொறியாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகள் ஏற்கனவே போராட்டத்தில் சேர்ந்துள்ளதோடு 200,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலை ஆசிரியர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இ.போ.ச. தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல்கள், சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.

தொழிலாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் கடினமான சமூக மற்றும் வேலை நிலைமைகளைப் பற்றி உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுக்கு விளக்கினர்.

சாரதி காமினி வசந்தவின் சேவை 20 ஆண்டு காலமாகும்: “எங்களுக்கு ஓய்வூதியம் இல்லை. கடந்த ஆண்டு வேலைநிறுத்தத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட அதிகரிப்பு கிடைக்கவில்லை. எனக்கு ரூ. 2,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டது. எனது மொத்த சம்பளம் 35,000 ரூபா. மூன்று பிள்ளைகள் பாடசாலை செல்கிறார்கள். 5,000 முதல் 6,000 வரை கடைக்குச் செலவு போகின்றது. நான் மாபலகம கொழும்பு பேருந்தில் வேலை செய்கிறேன். இதற்கு ஒவ்வொரு மாதமும் அபராதத்துக்கு நிறைய செலவாகும். கடந்த 14 நாட்களில் எனக்கு ரூ. 5,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகளுக்கு காலணிகள் வாங்க ஒதுக்கி வைத்த பணத்தில் அபராதம் கட்டினேன்,” என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் போதுமானளவு தூங்குவது இல்லை. இரவு தங்குவது மாபலகமவில். பஸ்ஸில்தான் தூங்க வேண்டும். அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றே கழிப்பறையை பயன்படுத்துகின்றேன். குளிக்க வாய்ப்பில்லை. இளைமைக் கால வாழ்க்கையே தொழிலில் கரைந்து போய்விட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

பொறியியல் பிரிவின் டி.எம். சுரங்க, “எனக்கு சம்பள உயர்வுக்கு முன்பு கிடைத்த அடிப்படை சம்பளம் ரூ. 14,500. மொத்த சம்பளம் 35,000 ரூபாய். ஆனால் ஊதிய உயர்வுக்குப் பிறகு, ஊதிய வெட்டே நடந்தது. இப்போது எனது மொத்த சம்பளம் 32,000 ரூபா. வங்கிக் கடன் வாங்க எங்களில் ஒருவரின் கையொப்பத்தை ஏற்கவில்லை. இரண்டு அரச ஊழியர்களை வரச் சொல்கிறார்கள். நாங்கள் மிகக் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள். கடந்த ஆண்டு வேலைநிறுத்தம் செய்ய நான் தொழிற்சங்கங்களுடன் போராட வேண்டியிருந்தது. ஆனால் அது பயனுள்ளதாக இருக்கவிலை,” என்று கூறினார்.

கொழும்பு தலைமை அலுவலகத்தில் இருந்து பாதி சம்பளம் 15,000 ரூபா மட்டுமே கிடைக்கிறது என்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர். “மீதத்தை பிராந்திய டிப்போக்களே சேகரிக்க வேண்டும். சேர்க்கப்படாவிட்டால், முழு சம்பளமும் கிடைக்காது. மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. பஸ் ஓடும் நேரத்திற்கு மட்டுமே மேலதிக நேர ஊதியம் கிடைக்கும். அடுத்த ஓட்டம் வரும் வரை காத்திருப்பதற்கு மேலதிக கொடுப்பனவு இல்லை. விசேட சேவைகளுக்காக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளது.

“நிரந்தர நியமனம் வழங்கப்படாத சுமார் 300 தொழிலாளர்கள் உள்ளனர். “எங்களுக்கு ஓய்வு இல்லை. பொருத்தமான ஓய்வு அறை இல்லை. சரியான நேரத்தில் உணவை உண்ண முடியாது. சில நேரங்களில் நான் இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வருவேன். அதனால்தான் எங்களுக்கு போதுமான ஊதியங்களும் நல்ல வசதிகளும் தேவை,” என அவர்கள் கூறினர்.

“ஓய்வு, தூக்கம் மற்றும் பராமரிப்பு இல்லாததால் விபத்துக்கள் பொதுவானவை. விபத்து நடந்தால் நிர்வாகத்தில் இருந்து யாரும் பொலிசுக்கு அல்லது நீதிமன்றங்களுக்கு வருவதில்லை. நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். வடக்கில் உள்ள டிப்போக்களில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் பயணத்துக்கு ஏற்றவை அல்ல.

"எங்கள் மொழி உரிமைகள் மீறப்பட்டுள்ளன. மொழிக்கு சம உரிமை கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நமக்கு கிடைக்கும் அனைத்து கடிதங்களும் சிங்கள மொழியிலேயே கிடைக்கின்றன. அதனால் நாம் எப்போதும் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம்,” என ஒரு தொழிலாளி கூறினார்.

“நான் ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை செய்கிறேன். இங்கே நிறைய பேர் நிரந்தரமாக்கப்படாமல் உள்ளனர். தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தக்கூடாது. நிரந்தர ஊழியர்களின் கோரிக்கைகள் கிடைத்தாலும், எங்கள் வேலைகள் நிரந்தரமாக்கப்படும் வரை போராட்டம் தொடர வேண்டும்,” என்று ஒரு ஒப்பந்த தொழிலாளி கூறினார்.

“பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கொழும்பிலேயே செயற்படுகின்றன. எங்கள் பிரச்சினைகள் முன்வைக்கப்படுவதில்லை. தேர்தலின் போது எங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்று தொழிற்சங்கங்கள் கருதுகின்றன. அது நடக்கும் என்று நான் நம்பவில்லை.

"எழுக தமிழ்" ஆர்ப்பாட்டம் நடந்த நாளில் நாங்கள் வேலைநிறுத்தம் தொடங்கினோம் அதனால் சிலர் அதற்காக வேலையை நிறுத்திவிட்டதாக நினைத்தார்கள். அது பிழை. நாங்கள் எழுக தமிழ் பிரச்சாரத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் அதை அரசியல் லாபத்திற்காக செய்கிறார்கள். எங்கள் கோரிக்கைகளுக்காக நாங்கள் போராடுகிறோம்.

"நடவடிக்கைக் குழுக்கள் குறித்த உங்கள் பரிந்துரை நல்லது. உங்கள் துண்டுப் பிரசுரத்தை நாங்கள் படித்தோம். நீங்கள் அடிக்கடி இங்கு வந்தால் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடலாம். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பிரிக்கின்றன. அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர்களின் நலன்களுக்காக ஒன்றுபட வேண்டும்.”

Loading