இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் உரையாற்றினார்

மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களில் உறையாற்றினார். முதலாவது கூட்டம் அக்டோபர் 18 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இரண்டாவது கூட்டம் மறுநாள் காரைநகரில் ஊரி கிராமத்தின் அன்டர்சன் மண்டபத்தில் இடம்பெற்றது. இரு கூட்டங்களிலும் தொழிலாளர்கள், மீனவர்கள் இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் பங்குபற்றியிருந்தனர்.

சோ.ச.க. வேட்பாளர், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களின் நிருபர்கள் அதிகளவில் பங்குபற்றிய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்றார். இதில் தொலைக்காட்சி ஸ்தாபனங்களான சக்தி டிவி, சமூகம், கபிடல், வசந்தம், தெரன, டான், யுடிவி, ஹிரு ஆதவன், தீபம், சுவர்ணவாஹினி மற்றும் சூரியன் வானொலி, மற்றும் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட செய்தித்தாள்களானஉதயன் மற்றும் தினக்குரல் போன்றன உள்ளடங்கும்.

விஜேசிறிவர்தனவின் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு "முதலாளித்துவ கட்சிகள் பொலிஸ் அரச ஆட்சியை நிலைநாட்ட முயல்கின்றன" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைஉதயன்வெளியிட்டிருந்த அதேவேளை, தினக்குரலில்ஒரு அரைப் பக்க கட்டுரை "தமிழீழ விடுதலைப் புலிகளின் மறுமலச்சி பற்றிய வேட்பாளர்களின் பிரச்சாரம் வடக்கு மக்கள் மீது இராணுவ ஆட்சியை திணிப்பதை நோக்கமாகக் கொண்டது" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அதே செய்தித்தாள் “நான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தேர்தலில் நிற்கிறேன்” என்று தலைப்பிடப்பட்ட விஜேசிறிவர்தனவுடனான ஒரு நேர்காணலை வெளியிட்டது.

சோ.ச.க. மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண கூட்டங்களுக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தொழிலாளர்கள், பிரதான தபால் நிலையம் மற்றும் குருநகர் மற்றும் காரைநகர் குடியிருப்பாளர்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரத்தின்போது சந்தித்த கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நீண்டகால யுத்தத்தின் போது, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். யுத்தத்தின் இறுதி மாதங்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்ற கொடூரமான இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில் 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஒழுங்கமைக்கப் போராடுகிறார்கள். "ஜனநாயகம்" நிறுவப்பட்டுள்ளது” என்று கொழும்பு அரசாங்கங்களினால் பாசாங்குத்தனமாக அறிவிக்கப்படடிருந்தாலும், அந்த மாகாணம் இலட்சக்கணக்கான துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் மீதும் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். யாழ்ப்பாண நகரத்தில் வசிக்கும் பிரதீபன் கூறியதாவது: “[மைத்ரிபால] சிறிசேன ஜனாதிபதியானால், அவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு உறுதியளித்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை.” கொழும்பில் அமெரிக்க சார்பு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிசேனவிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்த 2015 ஜனாதிபதி தேர்தலையே அவர் குறிப்பிடுட்டிருந்தார்.

ஒரு போர் அகதியாக தனது வாழ்க்கையை விளக்கிய பிரதீபன் “நாங்கள் எங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வன்னிக்கு தப்பிச் சென்று பெரும் கஷ்டங்களை அனுபவித்தோம்“ என்று கூறினார்: எங்கள் வாழ்க்கையை அழித்த கொழும்பு ஆட்சியாளர்கள் அவற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை ஏற்கவில்லை. நாம் ஏன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?” பிரதீபன் தனது குடும்பத்துடன் ஒரு தற்காலிக குடிசையில் வசித்து வருகிறார்.

பொலிஸ்-இராணுவ அடக்குமுறை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார். “தங்களது கடினமான வாழ்க்கை நிலைமைகளுடன் பல இளைஞர்கள் தங்கள் அடிப்படைக் கல்வியை முடிக்க முடியாது. அவர்கள் ஒரு பிழைப்பைத் தேடிக்கொள்ள கல்வியில் இருந்து விலக வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஓய்வுபெற்ற மருத்துவரான சுவாமிநாதன், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றை நினைவுகூர்ந்ததோடு, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக லங்கா சம சமாஜா கட்சி (ல.ச.ச.க.) எவ்வாறு போராடியது என்பதை நினைவு கூர்ந்தார். அந்த நாட்களில் அவர்கள் சோசலிசத்திற்காக போராடினார்கள், ஆனால் அவர்கள் அதை கைவிட்டனர், என்றார்.

1964 இல் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இணைந்து ல.ச.ச.க. செய்த காட்டிக் கொடுப்பானது, போருக்கு வழிவகுத்த தமிழர்-விரோத வகுப்புவாதத்தை வலுப்படுத்த வழி வகுத்தது என்று பிரச்சாரகர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்கலைக்கழக மாணவரான வி. ரேணுகன் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்களிடம் பேசினார். “பாடசாலைகளிலும் பல்கலைக்கழகத்திலும் சோசலிசம் பற்றி நான் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன், அது சமத்துவத்திற்கு அழைப்பு விடுக்கிறது என அவர் கூறினார். உங்களுடன் பேசும்போது, ரஷ்ய புரட்சி மற்றும் சோசலிசம் பற்றிய அறிவியல் யோசனை எனக்கு கிடைத்தது. உலக சோசலிச வலைத் தளத்தைப் படிக்க நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். வடக்கில் பலர் மிகவும் ஏழ்மையானவர்களாக உள்ளனர்.

ஊரி கிராமத்தில் வசிக்கும் 57 வயதான சி. கோணேஸ்வரி கூறியதாவது: “தேர்தல்களில், ஒவ்வொரு அரசியல்வாதியும் ஆட்சிக்கு வருவதற்கு எங்கள் வாக்குகளைப் பெற விரும்புகிறார்கள். அவர்கள் எங்கள் வாழ்க்கையைப் பற்றி அக்கறைப்படுவதில்லை.” மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட அரசாங்கங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார். எங்கள் கிராமத்துக்கான பாதை குழிகளால் பாழடைந்துள்ளது. பேருந்துகள் பாடசாலை நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஏனைய நேரங்களில் பிரதான சாலையில் செல்ல நீங்கள் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டியிருக்கும். குடி தண்ணீர் ஒரு பெரிய பிரச்சினை. பிராந்திய உள்ளூராட்சி மன்றத்திலிருந்து ஒரு நாளைக்கு 2 லிட்டர் மட்டுமே தண்ணீர் பெற முடியும். நீங்கள் இன்னும் தண்ணீர் பெற விரும்பினால் அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும், என்று அவர் விளக்கினார்.

திருஞானசம்பந்தர்

யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சோ.ச.க. மத்திய குழு உறுப்பினர் திருஞானசம்பந்தர் தலைமை தாங்கினார். விஜேசிறிவர்தனவை அறிமுகப்படுத்திய அவர், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீழெழுச்சியை உலகம் கண்டுகொண்டிருக்கும் நிலையில், சோ.ச.க. இந்த தேர்தலில் போட்டியிடுகின்றது என விளக்கினார். "இலங்கையின் ஆளும் வர்க்கம் இத்தகைய சூழ்நிலைகளில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இனவெறியை தூண்டிவிட்டது."

தமிழ் தொழிலாளர்களை அவர்களின் சிங்கள மற்றும் முஸ்லீம் வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து பிரிப்பதால் தமிழ் தேசியவாதம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று சம்பந்தர் கூறினார். சிறுபான்மையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட அடுக்குகள், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து சமூக-பொருளாதார பிரச்சினைகளின் மூலத் தோற்றம் உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் முறிவே என்று விஜேசிறிவர்தன கூறினார். "ஏனைய அனைத்து வேட்பாளர்களும் இந்த உண்மையை மூடிமறைத்து, காலாவதியான முதலாளித்துவ அமைப்பின் வெளிப்பாடு அன்றி, இது அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட தவறான கொள்கைகளின் விளைவு என்று நிறுவ முயற்சி செய்கிறார்கள்."

எல்லாவற்றுக்கும் வாக்குறுதி கொடுக்கும் ஏனைய வேட்பாளர்களிடமிருந்து ஜனரஞ்சக அரசியல் உரைகள் வெளிப்பட்ட போதிலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் சிக்கன நடவடிக்கைகள் தொடரும் என்றும் சமூக எதிர்ப்பை அடக்குவதற்கு அவர்கள் இராணுவத்தை நம்பியிருப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார். பயங்கரவாதத்தின் புதிய அச்சுறுத்தல் பிரச்சாரமானது இராணுவ அடக்குமுறையை நியாயப்படுத்தும் முயற்சியாகும்.

எங்கள் கட்சி மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் உண்மையைச் சொல்கிறது. போர், சிக்கனம் மற்றும் சர்வாதிகாரம் மற்றும் பாசிச அச்சுறுத்தல் போன்ற இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாரிய ஆபத்துக்களுக்கு முதலாளித்துவத்தின் கட்டமைப்பினுள் மற்றும் அதன் காலாவதியான தேசிய-அரசு அமைப்பிற்குள் தீர்வு இல்லை.

சோ.ச.க. வேட்பாளர் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் வர்க்கப் பங்கை விளக்கினார். பிரிவினைவாத புலிகள் மற்றும் பிற கட்சிகள் அரசியல் ரீதியாக திவாலானவை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராட அவை இலாயக்கற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு நிர்வாகத்தை உருவாக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஏனைய பிரதான சக்திகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்

"2015 ஆம் ஆண்டில் அவர்கள் கொழும்பில் அமெரிக்காவால் ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்சி மாற்றத்தை ஆதரித்தனர். அதன் புவிசார் அரசியல் நலன்களுக்கான ஆதரவை அறிவித்தனர். "சாதாரண மக்கள் மத்தியில் அவர்களது உரிமைகளை நசுக்கியதன் காரணமாக முற்றிலும் மதிப்பிழந்து போன தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும், கொழும்பில் உள்ள தங்கள் சகாக்களைப் போலவே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் ஒற்றுமை குறித்து அச்சம் கொண்டுள்ளன.

அவர் மேலும் கூறியதாவது: “இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் எங்களது நோக்கம், சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கில் போர், சிக்கனம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமிருந்தும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒழுங்கமைப்பதாகும். இந்த அடிப்படையில் தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசிற்காக நாங்கள் போராடுகிறோம்.

யாழ்ப்பாண நகரத்திற்கு மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவான காரை நகரில் உள்ள ஊரியில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

மருதபுரம், வேரப்பிட்டி, தோப்புகாடு, நீலங்காடு மற்றும் ஊரி ஆகிய கிராமங்கள் உள்ள கரைநகர் தீவில் சுமார் 5,000 குடும்பங்கள் வாழ்கின்றன. போரின் விளைவாக இன்னும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலான மக்கள் ஏழைகள், அவர்கள் மீன்பிடித்தல் அல்லது விவசாயம் மூலம் தங்கள் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். பெரும்பாலான வீடுகள் வேயப்பட்ட குடிசைகளாக இருக்கின்றன.

தண்ணீர் பற்றாக்குறை முழு யாழ்ப்பாண தீபகற்பத்தையும் பாதிக்கிறது. கூட்டத்தில் பங்கேற்றவர் இந்த பிரச்சினையையும் வேலையின்மையையும் பற்றி பேசினர். அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை சந்தித்ததாகவும், அதன் பின்னர் சமூக நிலைமைகள் மேலும் மோசமடைந்துவிட்டதாகவும் சோசலிச வேட்பாளரிடம் கூறினார்.

இந்த பிரச்சினைகளைத் தீர்க்கத் தேவையான சோசலிச வேலைத்திட்டத்தை விளக்கிய விஜேசிறிவர்தன கூறியதாவது: “தொழிலாளர்கள் வங்கிகள், தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டை தங்கள் கைகளில் எடுத்து, மனிதகுலத்தின் தேவைகளைத் தீர்க்க அவை பொதுமக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், குழாய் நீர் போன்ற பொது வசதிகளை உருவாக்குவதற்கும் சமூக தேவைகளை பூர்த்தி செய்யவும் திரட்டப்பட்ட ஏராளமான செல்வங்கள் பெரிய அளவிலான திட்டங்களை அமுல்படுத்த பயன்படுத்தப்படும்.

."வாரத்திற்கு வேலை நேரத்தை 30 மணி நேரமாகக் குறைப்பது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் சுய வளர்ச்சிக்கு தேவையான நேரத்தை உருவாக்கும். நிலமற்ற விவசாயிகள் மத்தியில் நிலம் மறுபகிர்வு செய்யப்படும். ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தால் மட்டுமே கடன் சேவையை நிராகரித்து சோசலிச கொள்கைகளை செயல்படுத்த முடியும். சோசலிசத்திற்கான இந்த போராட்டத்தில் ஜனநாயக உரிமைகளை வெல்ல முடியும்,” என்று அவர் முடித்தார்.

Loading