இலங்கையில் 1,500 பெருந்தோட்ட நிர்வாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கையில் 25 சதவீத அடிப்படை சம்பள உயர்வு கோரி மாஸ்கெலியா, கேகல்ல மற்றும் நமுனுகுல பெருந்தோட்டங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தோட்ட நிர்வாக தொழிலாளர்கள், நவம்பர் 26 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 1,500 அலுவலக ஊழியர்கள், கள அலுவலர்கள், தோட்ட மருந்தக ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், லொரி சாரதிகள், தொழில்நுட்ப மற்றும் சிறு தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளனர்.

அடிப்படை ஊதியத்தை 25 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில், 22 தோட்ட நிறுவனங்களுக்கும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை தோட்ட நிர்வாக ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே ஒரு கூட்டு ஒப்பந்தம் அக்டோபர் 1 அன்று கையெழுத்தானது.

ஏனைய தோட்டக் கம்பனிகள் ஒப்பந்தத்தின்படி அடிப்படை சம்பள உயர்வை வழங்கியுள்ள போதிலும், மூன்று பெருந்தோட்ட நிறுவனங்கள் அதை அடிப்படை சம்பளத்தில் சேர்க்க மறுத்து, பதிலாக சம்பள உயர்வை ஒரு கொடுப்பனவாக செலுத்தியுள்ளன. இந்த கொடுப்பனவானது அதற்கேற்ப ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் மருத்துவ நிதியை அதிகரிக்காது. நவம்பர் 26 அன்று, பெருந்தோட்ட கம்பனிகளின் எதேச்சதிகாரமான முடிவை எதிர்த்து, ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை நவம்பர் 28 வரை ஒத்திவைக்க முயன்ற போதிலும், தொழிலாளர்கள் அதை மறுத்துவிட்டனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மஸ்கெலியாவில் உள்ள பிரவுன்ஸ்விக் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300 தொழிலாளர்கள், தோட்டத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மஸ்கெலியா நகரத்திற்கு ஒரு பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். ஊர்வலம் நகரத்தை நெருக்க விடாமல் பொலிஸ் தடுக்க முயன்றபோதிலும் அது இறுதியில் தோல்வியடைந்தது.

“மூன்று தோட்ட நிறுவனங்கள் ஊதிய ஒப்பந்தத்தை மீறி நாட்டின் சட்டத்தை மீறியுள்ளன. கம்பனிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. வெற்றிக்கான போராட்டத்தை நாங்கள் தொடருவோம். திங்கள்கிழமை முதல் ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த பணியாளர்கள் கூட வேலைநிறுத்தத்தில் சேருவார்கள்” என்று இலங்கை தோட்ட நிர்வாக ஊழியர் சங்கத்தின் (இ.தோ.நி.ஊ.ச.) தலைவர் சதுர சமரசிங்க கூறினார்.

இ.தோ.நி.ஊ.ச. தலைவரின் இந்த கர்ஜனை ஒரு வாய்ச்சவடால் மட்டுமே. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (NUW), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் ஜே.வி.பி. உடன் இணைந்த தோட்டத் தொழிற்சங்கங்கள் உட்பட ஏனைய தோட்டத் தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு தொடக்கத்தில் 200,000 தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தன. இந்த தொழிற்சங்கங்கள் தனித் தனியாக பெயரிடப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்டக் கம்பனிகளினதும் முதலாளித்துவ அரசாங்கங்களினதும் கருவிகளாகவே செயல்படுகின்றன.

கோடாபய இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து பத்து நாட்களுக்குள் வெடித்துள்ள இந்த வேலைநிறுத்தம், முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் மற்றும் முதலாளிகளும் மக்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக வெடிக்கவுள்ள வர்க்கப் போராட்டங்களில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றது.

உலக சோசலிச வலைத்தளத்தைத் தவிர வேறு எந்த ஊடகமும் வேலை நிறுத்தத்தைப் பற்றி எழுத வரவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். வேலை நிறுத்தத்தை செய்தியாக்க வேண்டாம் என்று தங்கள் தலைமையகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்ளூர் நிருபர்கள் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். வேலைநிறுத்தம் மற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் பரவாமல் தடுப்பதற்கு, இது நிச்சயமாக தோட்ட நிறுவனங்களுக்கும் முதலாளித்துவ ஊடகங்களுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள ஒரு ஒப்பந்தமாகும். தாம் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார பிரச்சினைகள் காரணமாக, இந்தளவு தோட்ட நிர்வாகத் தொழிலாளர்கள் தாமாகவே முன்வந்து இத்தகைய போராட்டத்தில் இணைந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்று அவர்கள் கூறினர்.

பிரவுன்ஸ்விக் தோட்ட ஊழியர் ஒருவர் கூறியதாவது. “ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி சம்பளம் கொடுக்காமல் விடுவது நியாயமற்றது. இது ஒரு கொடுப்பனவாக சம்பளத்தில் சேர்க்கப்படும் போது அது ஈ.பி.எஃப். அல்லது ஈ.டி.எஃப். போன்ற எந்த நிதியுடனும் இணைக்கப்படாது. தோட்டத் துறையில் உள்ள அதாவது வருமானப் பகிர்வு முறை அமல்படுத்தப்பட்டுள்ள தோட்டங்களில் உள்ளவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். முன்பு நான் கவரவில தோட்டத்தில் வேலை செய்தேன். வருமானப் பகிர்வு முறையை அமல்படுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்களால் நான் இந்த தோட்டத்திற்கு வேலைக்கு வந்தேன். தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தோட்ட நிர்வாக ஊழியர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும். தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் மட்டுமே இது போன்ற ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைக்க முடியும் என நீங்கள் கூறும் திட்டத்துடன் நான் உடன்படுகிறேன்.”

தொழிலாளர்கள் மீது தேயிலைத் தொழிற்துறையின் நெருக்கடியை திணித்து, இலாபத்தை சுரண்டுவதற்கான வழிமுறையாக வருமானப் பகிர்வு முறையை தாமதமின்றி அமுல்படுத்த வேண்டும் என்று பெருந்தோட்டக் கம்பனிகளும் பெருந்தோட்ட தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் பலமுறை வலியுறுத்தியுள்ளன.

"தொழிலாளர்களுக்கு அதிக ஊதியத்தை சம்பாதிக்க உதவும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதை விட, தோட்டத் தொழிலில் கூலிக்கு நிர்வாகத்தை நம்பி இருக்கும் ஒரு காலாவதியான முறையைத் தொடர முடியாது. தனியார் வருமானத்தை பெருக்கும் சாத்தியமில்லாத பற்றாகுறையான உற்பத்தி திறன்கொண்ட, முகாமைத்துவத்தில் தங்கியிருக்கின்ற, உரிமைகளோடு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள மற்றும் நலன்புரி சேவை நோக்கம் கொண்ட, பெருந்தோட்ட இயக்க மாதிரியை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் நாள் சம்பள முறை உடனடியாக மாற்றப்பட வேண்டும்,” பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஹேலிஸ் பெருந்தோட்டங்களின் நிர்வாக இயக்குனரான ரொஷான் இராஜதுரை டிசம்பர் 1 அன்று சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள் இந்த திட்டங்களை தொழிலாளர்கள் மீது திணிக்க தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன. தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக கட்டியெழுப்பப்படும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்கள் மூலம் நிர்வாக ஊழியர்களையும் பிற தோட்டத் தொழிலாளர்களையும் ஒரு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு அணிதிரட்டுவதன் மூலம், மற்றும் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறையை ஒழிப்பதற்கான போராட்டத்தை நடத்துவதன் மூலமும் மட்டுமே தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வெல்ல முடியும்.

Loading