இந்தியாவின் பேரிடர் முடக்கம், ஏழைகளைத் தண்டிக்கும் அதேவேளை கொரோனாவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை பலவீனப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தீடீரென மார்ச் 24 நள்ளிரவு முதல் தொடங்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட ஒழுங்கற்ற தேசியளவிலான மூன்றுவார முடக்கம் குறிப்பாக நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராம உழைப்பாளர்களுக்கு மிகப்பெரும் துன்பங்களை ஏற்படுத்தி வருவதுடன் கொடிய கொரோனாவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளைமேலும் வெளிப்படையாகவேபலவீனப்படுத்துகிறது.

கொரோனாவைரஸ் பூகோள தொற்றுநோய் இந்தியாவில் முறையான கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதாக மோடி உட்பட இந்திய அதிகாரிகள் பெருமிதப்பட்டார்கள். அவர்களின் இந்த கூற்றுக்கு, COVID-19 உறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் ஒப்பிட்டளவிலான சிறிய எண்ணிக்கையை அவர்கள் அடிப்படையாக கொண்டிருந்தார்கள். சிறிய எண்ணிக்கையிலான தொற்று வீதம் இருக்குமாயின் அதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருந்தது தான் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்ததை அவர்கள் கவலைப்படாமல் புறக்கணித்தனர்.

கடந்த செவ்வாய் கிழமை மாலை, மோடி மற்றும் அவருடைய பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) அரசாங்கம் தீடீரென சுருதியை மாற்றிக்கொண்டனர். மிகப்பெறுமதியான இரண்டு மாதங்களை வீணடித்தனர், அந்த சமயத்தில் இந்தியாவின் கொரோனாவைரஸுக்கு எதிராக நடவடிக்கைகளை வெளிநாடுகளிலிருந்து உள்ளே நுழைபவர்கள் மீது ஒட்டுமொத்தமான தடையை போடுவதில் கவனம் செலுத்தினர், அதன் பின்னர், மோடி இதுவரை கண்டிராத ஒரு முடக்கத்தை அறிவித்தார்.

புலம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்துடன்

“தொற்றுநோயின் சங்கிலியை உடைப்பதற்கு” தீவிர நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால் பலர் இறக்கக்கூடும் என்று கூறி, கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து 1.37 பில்லியன் மக்கள் அடுத்த 21 நாட்களுக்கு அவர்களுடைய வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என பிரதமர் உத்தவிட்டார். குற்றவியல் அலட்சியத்தின் ஒரு நடவடிக்கையாக அவர் அவ்வாறு செய்தார், கிராமங்கள் மற்றும் பல நகர சேரிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் எப்படி கிடைக்கும் என்பதை அவர் விளக்கவில்லை, மற்றும் அவர்கள் வேலைசெய்ய முடியவில்லையென்றால், அவற்றுக்கு அவர்கள் எப்படி பணம் செலுத்துவார்கள் என்பது ஒருபுறம்.

பெருமளவில் மக்களின் ஒழுங்கற்ற நடமாட்டங்கள் உட்பட விளைவு குழப்பமானதாக இருந்தது, எண்ணிக்கை மற்றும் புவியியல்ரீதியில், நகரத்திலிருந்து இந்திய கிராமங்களுக்கு COVID-19 பாதிப்புகள் மிக வேகமாக பரவச்செய்வதற்கு ஒரு உகந்த நிலைமையை அது திறந்துவிட்டது.

முடக்கம் முழு பலத்துடன் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மக்களுக்கு சில மணிநேர அவகாசம் மட்டுமே அரசாங்கம் வழங்கியது அதனால் மொத்தவிலைக் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு மில்லியன் கணக்கான மக்கள் விரைந்தனர்.

பொருட்களின் விநியோகம் தடைப்படாது என்று ஆரம்பத்தில் அரசாங்கம் கூறிய போதிலும் பல நகரங்களில் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்து போய் விட்டன, அல்லது அவை விரைவாக குறைந்து போயின. பல நகரங்களிலும் பல பட்டணங்களிலும் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்த ஆன்லைன் விநியோகங்கள் செயல்படவில்லை. மாநில எல்லைகளைக் கடந்துவரும் உணவுகள் மற்றும் பிற முக்கிய பொருட்களை சுமந்துவரும் லாரிகளை காவல்துறையினர் தடுத்திருப்பதாக எண்ணற்ற செய்திகள் வந்திருக்கின்றன. வைரஸை எதிர்ப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் கூட தாங்கள் மூலப் பொருட்களை பெறுவதற்கு சிரமப்படுவதாகவும் மேலும் வேலைக்கு வருபவர்கள் தடுக்கப்படுவதாகவும் அவர்களின் சில ஊழியர்கள் கூறினார்கள்.

குறிப்பாக மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது. அவர்கள் வேலையை இழந்த நிலையில் எந்தவொரு சேமிப்பும் இல்லாமல் நிர்க்கதியில் விடப்பட்டுள்ளார்கள். அவர்களது குழந்தகைளைக் கைகளில் அரவணத்தபடி சொற்ப உடமைகளுடன் அவர்களது சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து செல்ல தொடங்கினார்கள். அவர்கள் நடக்கின்றனர், ஏனெனில் இரயில் சேவை உட்பட அனைத்து பொது போக்குவரத்துக்களையும் அரசாங்கம் இரத்து செய்துவிட்டது.

புலம்பெயர்ந்தவர்களில் பலர் மிகவும் பரிதாபகரமான சூழ்நிலையில் உள்ளனர், சிலர் ஊதியத்தை திரும்ப பெறாமல் வெளியேறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பத்திரிகை செய்திகளின்படி குறைந்தது 22 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய வீட்டுக்கு போகும் வழியிலேயை இறந்துவிட்டார்கள். சனிக்கிழமையன்று காலையில் டெல்லி ஆக்ரா நெடுஞ்சாலையில் மாரடைப்பு வந்து இறந்த 38 வயது ரன்வீர்சிங் என்பவரும் இறந்தவர்களில் அடங்குவார். அவர் மத்தியப் பிரதேசத்திலுள்ள மொரெனா மாவட்டத்தில் அவருடை கிராமத்தை நோக்கி தேசிய தலைநகரிலிருந்து ஏற்கனவே 200 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றிருக்கிறார். மற்றும் நான்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய வேலைகளை இழந்தநிலையில் வீட்டுக்கு நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள், சனிக்கிழமையன்று மும்பாய் அஹமதாபாத் நெடுஞ்சாலையிலுள்ள பரோல் கிராமத்தின் வினாரில் வேகமாக வந்த லாரி அவர்கள்மீது மோதியதில் நசுங்கி இறந்தனர் மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

அரசாங்கத்தின் செயலற்ற தன்மை மற்றும் கடுமையான அலட்சியம் குறித்து பொதுமக்களின் கோபம் அதிகரித்து வரும் நிலைமையில் உத்தரப் பிரதேசத்தின் பிஜேபி அரசாங்கமானது சனிக்கிழமையன்று மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின், எல்லைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச்செல்வதற்கு ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்வதாக அறிவித்திருக்கிறது. 100,000 க்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்தில் இடம்பிடிப்பதற்காக முயன்ற நிலையில் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டதால் மீண்டும் முன்னேற்பாடு குறித்த ஒரு மொத்த பற்றாக்குறையாக, அரசாங்கத்தின் “சமூக இடைவெளி” (“social distancing”) கொள்கை தகர்ந்து போனது.

ஊடகங்களின் தலைப்புகள் நாடுமுழுவதும் சமூக பேரழிவின் அறிகுறி தாண்டவமாடுவது பற்றி குறிப்பட்டுள்ளன. “Covid-19 அடைப்பினால், டெல்லியின் பல ஏழைகள் மற்றும் வீடற்றவர்கள் பட்டினிக்கு தள்ளப்படுகிறார்கள்” (The Print, மார்ச் 27); “சீனா அல்ல, இத்தாலி அல்ல: இந்தியாவின் கொரோனா வைரஸ் முடக்கம் உலகில் கடுமையானதாக இருக்கிறது - பிரிவினைக்குப் (1947) பின்னர் கால்நடையாக மிகபெரும் மக்களின் இடப்பெயர்வு” (Scroll.In, மார்ச் 29); “மும்பாய் காவலர்கள் 2 கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் லாரிகளை திறந்தார்கள் அதற்குள் 300 புலம்பெயர்ந்தவர்கள் காணப்பட்டார்கள்.” (NDTV, மார்ச் 26); “வைரஸ்க்கு முன்னர் பசி எங்களைக் கொல்லும்”; “முடக்கத்தின் போது புலம்பெயர்ந்தவர்கள் அணிவகுத்துச் சென்றனர்” (The Wire, மார்ச் 27).

இந்தப் பேரழிவு மிகவும் கசப்பானது, ஏனெனில் இந்த ஒழுங்கற்ற, மோசமான விவேகமற்ற முடக்குதல் வைரஸ் பரவுதற்கு உதவுகிறது, ஏனெனில் இந்தியாவின் பாழடைந்த மற்றும் முற்றிலுமில்லாத சுகாதார உள்கட்டமைப்பு, மிக மோசமான வறுமை மற்றும் அதிக மக்கள் அடர்த்தி ஆகியவற்றினால் மில்லியன் கணக்கில் பேரழிவான உயிர் இழப்பு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

மோடி முடக்கத்திற்கு உத்தரவிட்டு இரண்டு நாட்கள் கழித்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.8 சதவீதத்துக்கு இணையாக, ஒரு 1.7 லட்சம் கோடி ரூபாய்கள் (US $22.5 billion) நிவாரண நடவடிக்கைகளுக்கான தொகுப்பினை அறிவித்துள்ளார். தனிநபர் அடிப்படையில் இது ஒரு நபருக்கு சுமார் $16 (ரூபா 1,200) அமெரிக்க டாலராகும்.

ஆனால் இந்த அற்ப தொகை கூட பெருமளவில் உண்மையென்று நம்பவைக்கும் முயற்சி தான். மார்ச் 27 அன்று NDTV கருத்து கட்டுரையின் பகுதியில் CLSA ஆராய்ச்சி நிறுவனத்தின் பகுப்பாய்வை மேற்கோள்காட்டி மத்திய அரசின் பணம் சுமார் 400-500 பில்லியன் ரூபாய்கள் மட்டுமே புதிய பணமாக (மொத்த தொகுப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக) வழங்குகிறது என்பதைக் காட்டுகிறது. “மீதி மாநில அரசாங்கங்களிலிருந்து அல்லது ஏற்கனவே இருக்கும் உரிமைகளை மறுசீராய்வு செய்வதனூடக வரும்”

இதற்கிடையில் அரசாங்கத்தின் வற்புறுத்தலின் பேரில், இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனத்தின் செல்வத்தை உயர்த்த ஊகுவிப்பதற்கு நாட்டின் நிதிச் சந்தைகளுக்கு 3.7 ட்ரில்லியன் ரூபாய்களை ($49.4 பில்லியன் அமெரிக்க டாலர்) உட்செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

இந்த அற்பமான நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் காரணமாக “யாரும் பசியோடு இருக்கமாட்டார்கள்” என சீதாராமன் கூறியுள்ளார். இது சமீபத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமான 5 வயது சிறுவர்கள் சத்து குறைபாடுள்ளவர்களாக இருக்கிறார்கள் என அரசாங்கம் ஒப்புக்கொண்ட இந்த நாட்டில் இவ்வாறு கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவாக 800 மில்லியன் மக்கள் 5 கிலோ அரசி அல்லது கோதுமையை இலவசமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு பெற்றுக் கொள்வார்கள் என பிஜேபி நிதி அமைச்சர் கூறியுள்ளார். “அவர்கள் ஏற்கனவே பெற்ற 5 கிலோவுக்கு மேல் அல்லது அதற்கும்மேல்” அதைப்போல “ஒரு கிலோ விருப்பமான பருப்புகள்” “ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் தானியங்கள் மற்றும் பருப்புகளை இரண்டு தவணயாக பொது விநியோக அமைப்பிடமிருந்து (PDS) பெறமுடியும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆனால் சீதாராமனின் அறிக்கை, இந்த அற்ப உதவி கூட உண்மையில் 800 மில்லியன் ஏழைகளில் பெரும்பாலானவர்களை போய்ச் சேருமா என்பது குறித்து ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை எழுப்பியிருக்கிறது. அறிக்கைகளின்படி இதுவரை 230 மில்லியன் ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரேசன் அட்டைகள் அவர்களின் குடும்பங்கள் இருக்கும் இடத்தில் இணைப்பிலுள்ளதால் பொது விநியோக அமைப்புமூலம் (PDS) பெறமுடியாமல் இருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் “நிவாரண தொகுப்பின்” ஒரு பகுதியாக, ஏப்ரல் முதல் வாரத்தில் ஏற்கனவே இருக்கும் பிரதமர் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் “நேரடி பணப் பரிமாற்றம்” வழியாக நூற்றுக்கணக்கான மில்லியன் கிராம விவசாயிகளுக்கு உடனடியாக 2,000 ரூபாய் ($26.65) வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். உண்மையில், இது 2019 தேர்தலுக்கு சற்று முன்னர் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தின் முதல் தவணையென்று பல வர்ணனையாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். கிராம விவசாயிகளின் மீது மோடி அரசாங்கத்தின் இழிவான அணுகுமுறையை அடிக்கோடிட்டுக் காட்டுவது போன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (MGNREG) திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் தினக் கூலியில் மிக அற்பமாக ஒரு 20 ரூபாய் அதிகரிப்பும் இந்த தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்தின் ஒரு உறுப்பினருக்கும் 100 நாட்கள் குறைந்தபட்ச ஊதிய வேலைகளை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

அரசாங்கம் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் ஐந்து மில்லியன் ரூபாய்கள் ($66,796) மருத்துவ காப்பீடு வழங்கும் என சீதாராமன் மேலும் கூறியிருக்கிறார். இது COVID-19 க்கு எதிராக போராடும் முன்னணியில் இருக்கும் சுகாதார பணியாளர்களுக்காக அடிப்படை பாதுகாப்பு உடைகளை வழங்குவதற்கான மோடி அரசாங்கத்தின் குற்றவியல் தோல்வியை மூடிமறைப்பதற்கு மற்றும் பணத்தின்மூலம் “ஈடுசெய்யும்” முயற்சியாக இருக்கிறது. கொரொனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதற்கான நிலையில் குறைந்தது 38 மில்லியன் முகக்கவசம் மற்றும் 6.2 மில்லியன் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் [personal protective equipment (PPE)] இந்தியாவுக்கு தேவையாக இருக்கிறது என்று இன்வெஸ்ட் இந்தியா முகமையின் மார்ச் 27 தேதியிட்ட ஒரு நான்கு பக்க உள் ஆவணம் குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தியில் வெளியிட்டிருக்கிறது. இருந்தபோதிலும், கேட்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து முககவசங்களின் அளவு வெறும் 9.1 மில்லியன் மட்டுமே இருந்தது. அதே நேரத்தில் உடல் பாதுகாப்புக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE) எண்ணிக்கையில் 800,000 குறைவானதாக இருந்தது.

பயமுறுத்தும் வகையில், நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெறும் ஏழு மாநிலங்களுக்கான தேவைகள் தொடர்பாக இன்வெஸ்ட் இந்தியா எடுத்துரைத்திருந்தது. “அதாவது அதன் அர்த்தம் ஒட்டு மொத்தமாக இதைப்போன்ற உபகரணங்கள் மேலும் மிக அதிக அளவில் தேவைப்படும்.”

ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவில் COVID-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்திருக்கிறது மேலும் இறந்தவர்கள் 27 ஆக அதிகரித்துள்ளது.

Loading