மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
2008 ஆம் ஆண்டின் நிதி நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, “ஒரு நெருக்கடியையும் ஒருபோதும் வீணாக்கிப்போக அனுமதிக்க வேண்டாம்” என முன்னாள் முதலீட்டு வங்கியாளரும், சிக்காகோ மேயரும், வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியுமான Rahm Emanuel ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கூறினார். அமெரிக்காவில் வர்க்க உறவுகளை மறுசீரமைக்கவும், சமூக சேவைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஓய்வூதியங்களை குறைத்தல் மற்றும் தற்காலிக மற்றும் குறைந்த ஊதிய வேலைக்கு மாற்றுவதை இமானுவேல் மற்றும் ஒபாமா ஆகியோர் வழிநடத்தினர். இதன் விளைவாக அவர்கள் வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை ஏற்றத்தை உருவாக்கினர்.
இன்று, இந்த வார்த்தைகள் மீண்டும் ஆளும் வர்க்கத்தின் உதடுகளில் உள்ளது. மிகப்பெரிய நிதிய மற்றும் பெருநிறுவன அதிகாரத்திலுள்ளவர்கள் உலகளாவிய சுகாதார அவசரநிலையை தங்கள் செல்வத்தை விரிவுபடுத்தவும் தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை அதிகரிக்க பயன்படுத்தவும் முயல்கின்றனர்.
கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் மார்ச் நடுப்பகுதியில் பங்கு வீழ்ச்சியிலிருந்து 282பில்லியன் டாலர் செல்வத்தை அதிகரித்துள்ளனர். அமெரிக்க மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இப்போது வேலையில்லாமல் இருக்கிறார்கள், மில்லியன் கணக்கானவர்கள் அடிப்படைத் தேவைகளை இழந்து நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கையில், அதீதசெல்வந்தர்களின் செல்வங்கள் மீட்டெடுக்கப்பட்டது மட்டுமல்லாது அவை கணிசமானளவு அதிகரித்தும் வருகின்றன.
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை ஜெஃப் பெசோஸின் செல்வம் 25 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. வரலாற்றில் ஒருபோதும் எந்தவொரு தனிநபரும் இவ்வளவு விரைவாக இவ்வளவு செல்வத்தை ஈட்டவில்லை. அறிக்கை குறிப்பிட்டுள்ளபடி, “இது 2018 இல் 23.9 பில்லியன் டாலராக இருந்த ஹோண்டுராஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பெரியது.”
"தொற்றுநோயால் இலாபமடைந்தவர்கள்" என்று அழைக்கப்படும் எட்டு பில்லியனர்கள் தமது செல்வத்தை இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் 1 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளனர்: ஜெஃப் பெசோஸ் (Amazon), மெக்கென்சி பெசோஸ் (Amazon), எரிக் யுவான் (Zoom), ஸ்டீவ் பால்மர் (Microsoft), ஜான் ஆல்பர்ட் சோப்ராடோ (Silicon Valley real estate), எலோன் மஸ்க், ஜோசுவா ஹாரிஸ் (Apollo, financial asset management) மற்றும் ரோகோ காமிசோ (Mediacom, cable மற்றும் internet). ஆகியோரே இவர்களாவர்.
ஏன், உலகெங்கிலும் 200,000 பேர் இறந்துவிட்டார்கள், மேலும் மில்லியன் கணக்கான உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, அதி பணக்கார இலாபம் மிகவும் அற்புதமாக இருக்கிறதா?
முதலாவதாக, குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரால் ஒருமனதாக வடிவமைக்கப்பட்ட மற்றும் வாக்களிக்கப்பட்ட பிணையெடுப்பு பொதி பணக்கார வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கும் செல்வத்தை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் உழைக்கும் மக்களுக்கு வெறும் வேர்க்கடலையை விட்டுச்செல்கிறது.
2.2 டிரில்லியன் டாலர்கள் CARES சட்டம் நேரடி கொடுப்பனவுகளுக்கும் நீட்டிக்கப்பட்ட வேலையின்மைக்கும் உதவியாக 550 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்குகிறது. இதனை பெரும்பாலான மக்கள் இன்னும் பெறவுமில்லை. மீதமுள்ள 1.7 டிரில்லியனில், 500 பில்லியன் டாலர் நேரடியாக பெரிய நிறுவனங்களுக்கு பிணை எடுப்பதற்கு செல்கிறது. 377 பில்லியன் டாலர் சிறு வணிகங்களுக்குச் செல்லும் போது, பெரும்பாலானவை ஒரு சதத்தையும் பார்க்கவில்லை. ஏனெனில் வங்கிகள் 10 பில்லியன் டாலர் கட்டணத்தை தமதாக்கி கொண்டுள்ளன, மேலும் பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும் கிடைக்கக்கூடிய நிதியைப் பயன்படுத்துகின்றன.
CARES சட்டம் அதனுள் மேலதிகமாக செல்வந்த தனிநபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் 173 பில்லியன் டாலர் கூடுதல் வரிவிலக்குகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஆண்டுக்கு குறைந்தது 500,000 டாலர்கள் சம்பாதிக்கும் குடும்பங்கள், வணிக இழப்புகளிலிருந்து விலக்குகளை கணிசமாக அதிகரிப்பதன் மூலமும் பங்குச் சந்தையில் சம்பாதிக்கும் வரிவிதிப்பு பணத்திற்குப் பயன்படுத்துவதன் மூலமும் தங்கள் வரிகளைக் குறைக்க அனுமதிக்கிறது.
பெடரல் ரிசர்வ் இனால் இந்த அதிகமான டில்லியன்கள் நிதிச் சந்தைகள் மற்றும் பெருநிறுவனங்களின் பைகளுக்குள் திருப்பப்பட்டுள்ளன.
இதற்கிடையில், Pew ஆராய்ச்சி மையத்தின் ஒரு ஆய்வில், மார்ச் மாதத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலையின்மை உதவிக்கு விண்ணப்பித்திருந்தாலும், வேலையற்ற அமெரிக்கர்களில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே அந்த மாதத்தில் ஏதாவது உதவிகள் கிடைத்தன. வேலையில்லாத தொழிலாளர்கள் “அவர்கள் எவ்வாறு இந்த உதவிக்குத் தகுதிபெற முடியும், எவ்வளவு கிடைக்கும், எவ்வளவு காலம் அவற்றைச் பெறமுடியும் என்பதை நிர்வகிக்கும் வெவ்வேறு மாநில சட்டங்களின் ஒரு தொகையை எதிர்கொள்கின்றனர்” என்று அறிக்கை கூறுகிறது.
உண்மையான வேலையின்மை மக்கள் தொகையில் 20 சதவீதத்தை கடந்திருக்கிறது. 26.5 மில்லியனுக்கும் அதிகமான வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. இது நெருக்கடிக்கு முன்னர் ஏற்கனவே வேலையில்லாமல் இருந்த 7.1 மில்லியன் மக்களையும் இதில் சேர்த்துள்ளது.
தொழிலாளர்கள் இந்த சலுகைகளைப் பெறும்போது கூட, அவர்கள் இறுதியில், மாநில மற்றும் கூட்டாட்சி கடனின் இழப்பிலேயே இதை பெறுகின்றார்கள். 2008 ஆம் ஆண்டைப் போலவே, மாநிலத்திற்குப் பின் மாநிலமும், நகரத்திற்குப் பின் நகரமும் ஒரு வரவு-செலவுத் திட்ட நெருக்கடியையும் எதிர்கொண்டபோது, COVID-19 உடன் நிதி சிக்கல்கள் மேலும் எழும்போது யார் இந்த மேலதிக செலவுகளை பொறுக்கவேண்டியிருக்கும்?. 2008 நிதி நெருக்கடியின் பின்னர் டெட்ராய்ட், மிச்சிகன் மற்றும் ஸ்டாக்டன், கலிபோர்னியாவைப் போலவே, ஆளும் வர்க்கமும் கல்வி, சுத்தமான நீர் போன்ற அடிப்படை சமூக சேவைகளுக்கு “பணம் இல்லை” என்று மீண்டும் கூறுவார்கள். இதற்கிடையில், டிரில்லியன்கள் அதீத செல்வந்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
தொற்றுநோய் அதீத செல்வந்தர்களுக்கு ஒரு மேலதிக்கொடுப்பனவாக இருப்பதற்கான இரண்டாவது காரணம், இது பெருநிறுவன ஒருங்கிணைப்பு, பகுதிநேர மற்றும் தற்காலிக வேலை மற்றும் டிஜிட்டல் மற்றும் உடல் தன்னியக்கவாக்கம் ஆகியவற்றை தீவிரப்படுத்தியுள்ளது.
புளூம்பேர்க் பின்வருமாறு எழுதுகின்றது: "பெருவணிகத்திற்கு இந்த தொற்றுநோய்களில் அனைத்து நன்மைகளும் உள்ளன." பெரும்பாலான சிறு வணிகங்கள் நெருக்கடியில் இருக்கும்போது, CARES சட்டத்தில் படி கோட்பாட்டளவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறிய நிதியங்கள் பெரிய நிறுவனங்களால் பறிக்கப்பட்டன. அமசன் போன்ற பல பெரிய நிறுவனங்கள் ஒரு பெரிய பணியமர்த்தலை மேற்கொண்டு வருகின்றன. Walmart மே மாதத்திற்குள் 150,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது; Amazon 100,000, மற்றும் Dollar Store 25,000 அமர்த்த உள்ளன.
பெரிய நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மூலதனத்தை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், இணைய அடிப்படையிலான வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளதால், நெருக்கடியிலிருந்து அவை தங்கள் சந்தையில் இன்னும் அதிக ஆதிக்கத்துடன் வெளியே வரும். எண்ணெய் மற்றும் எரிவாயு துறை போன்ற கடும் பாதிப்புக்குள்ளான தொழில்களில், Chevron மற்றும் ExxonMobil போன்ற மாபெரும் நிறுவனங்கள் இந்த நெருக்கடியை தங்கள் சிறிய போட்டியாளர்களை வாங்குவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றன.
பைனான்சியல் டைம்ஸ் இதேபோல் "கோவிட் -19 தன்னியக்கமாக்கும் automation பயத்தையும் அதிகரிக்கும்" என்று எழுதுகிறது. முதலாளித்துவம் தன்னியக்கமாக்கத்தை நோக்கிய இயல்பான போக்கைக் கொண்டுள்ளது. இது நீண்ட காலமாக பொருளாதார நெருக்கடிகளையும் வேலையின்மையையும் வளர்க்கிறது. தன்னியக்க காசாளர்கள், கார்கள், பொருட்களை நகர்த்தும் ரோபோக்கள் மற்றும் தானியங்கி பொருத்துமேடைகள் தொழிலாளர்களை இடம்பெயர்த்துவிடுவதால், COVID-19 "தொழில்நுட்பத்தினால் தொழிலாளர்களை மாற்றும் எழுச்சியை" தூண்டும் என்று ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் மூத்த நபரான மார்க் மூரோ கூறுகிறார். மீண்டும், மிகப்பெரிய நிறுவனங்கள் மேலே எழும், ஏனெனில் அவற்றால் தான் இந்த தன்னியக்க மாற்றத்தை செய்யக்கூடியவை.
முதலாளித்துவத்தின் அடிப்படைப் செல்பாதையான அதிகரிக்கும் தன்னயக்கமாக்கல், தற்காலிக மற்றும் பகுதிநேர வேலை, பெருநிறுவன ஒருங்கிணைப்பு, எப்போதும் அதிகரித்து வரும் சமத்துவமின்மை மற்றும் நிதிக் குமிழ்கள் போன்றவை தீவிரமடையும். இதன் விளைவாக, ஒரு சிலரின் கைகளில் இன்னும் கூடுதலான அதிர்ச்சியூட்டுமளவிற்கு செல்வம் குவியும்.
COVID-19 நெருக்கடிக்கு சோசலிச பதில் இந்த பெரும் செல்வத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை கோருகிறது. நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய நிறுவனங்களை தொழிலாள வர்க்கத்தை கசக்கிப் பிழிய அதாவது மரணத்திற்கு உட்படுத்த முற்படும் ஒரு சில பில்லியனர்களின் தனியார் இலாபத்திற்காக இயக்க முடியாது. அவை தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.