ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை, உலக சுகாதார அமைப்பின் (WHO) ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்றி குளூக் கோப்பன்ஹேகனில் ஒரு செய்தியாளர் மாநாட்டை கூட்டி, கண்டம் முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா வைரஸின் "மிக முக்கியமான" மீள் எழுச்சி குறித்து எச்சரித்தார். கடந்த வாரம், மாதங்களில் முதன்முறையாக ஐரோப்பா மொத்த வாராந்திர தொற்றுக்களில் அதிகரிப்பை கண்டுள்ளது.

"நாடுகள் புதிய நடவடிக்கைகளை ஒழுங்குசெய்வதால், மீண்டும் எழுச்சி ஏற்படும் அபாயம் குறித்து பல வாரங்களாக நான் பேசினேன்," அரசாங்கங்கள் பூட்டுதல் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருகின்றன என குளூக் கூறினார். "ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல நாடுகளில், இந்த ஆபத்து இப்போது ஒரு யதார்த்தமாகிவிட்டது — கடந்த இரண்டு வாரங்களில் 30 நாடுகளில் புதிய ஒட்டுமொத்த நிகழ்வுகளில் அதிகரித்துள்ளன." WHO இன் ஐரோப்பிய பிராந்தியத்தை உருவாக்கும் 54 நாடுகளில் இது பாதிக்கும் மேலாகும்.

“11 நாடுகளில், துரிதப்படுத்தப்பட்ட பரவல் மிகவும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது சரிசெய்யப்படாமல் இருந்தால், ஐரோப்பாவில் சுகாதார அமைப்புகளை மீண்டும் விளிம்பிற்கு தள்ளும்" என்றார். இவை பெரும்பாலும் கிழக்கு ஐரோப்பாவில் குவிந்துள்ளன: அல்பானியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், பொஸ்னியா-ஹெர்சகோவினா, கஜகஸ்தான், கொசோவோ, கிர்கிஸ்தான், மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் உக்ரேன், அத்துடன் வடக்கு ஐரோப்பாவில் சுவீடனும் ஆகும்.

உலகளவில் வைரஸ் பரவுவதற்கான வீதம் துரிதப்படுத்தப்படுட்டு வருகையில் WHO பிராந்திய இயக்குநரின் எச்சரிக்கை வருகிறது. ஞாயிற்றுக்கிழமை, 24 மணி நேரத்தில் 183,000 க்கும் அதிகமாக புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. ஐரோப்பா 2.5 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. இது, சர்வதேச மொத்தத்தில் கால் பங்கிற்கும் குறைவாகவே உள்ளது. இது தினமும் கிட்டத்தட்ட 20,000 தொற்றுக்களையும் 700 இறப்புகளையும் தொடர்ந்து தெரிவிக்கிறது.

வைரஸின் மீள் எழுச்சி என்பது அரசாங்கங்களின் மீண்டும் திறக்கும் கொள்கையால் இயக்கப்படுகிறது, இது உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் பெருநிறுவன இலாபம் ஈட்டும் நடவடிக்கைகளை முழுமையாவும் தடையின்றியும் மீண்டும் தொடங்குவதே இதன் நோக்கமாகும்.

மேற்கு ஐரோப்பாவின் நாடுகளில், கடுமையான பூட்டுதல் கொள்கைகளை நீக்கிய பின்னர், வைரஸ் பரவுவதில் இந்த நடவடிக்கைகளின் தாக்கம் முடிந்துவிட்டதற்கான பல அறிகுறிகள் உள்ளன அத்தோடு ஒரு புதிய வேகமான வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கான பல அறிகுறிகளும் உள்ளன.

வைரஸின் ஆபத்து பெருகுவதற்கான இடங்களாக ஏழை மற்றும் தொழிலாள வர்க்க பகுதிகள் உள்ளன, அங்கு ஏராளமான மக்கள் பாதுகாப்பின்றி நெருக்கமான இடங்களில் வசிக்கின்றனர் அல்லது தங்கியிருக்கின்றனர்.

பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள ஒரு வறிய சமூக சேரிவீட்டு குடியிருப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் வெடித்தபின், இத்தாலியின் தெற்கில் நாப்பிள்ஸுக்கு வடக்கே 60 கி.மீ தெற்கே உள்ள கரையோர நகரமான மொன்ட்ராகோனுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அரசாங்கம் கலகப் பிரிவு போலீசாரையும் இராணுவத் துருப்புக்களையும் நிலைநிறுத்தியது. சேரிவீடுகளில் 700 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பல்கேரியாவிலிருந்து குடியேறிய தொழிலாளர்களாவர், அவர்கள் வறுமை மட்ட ஊதியங்களுக்கு பழங்களை பிடுங்கும் வேலையை செய்கிறார்கள், இப்போது அவர்கள் வேலை செய்யவோ அல்லது எந்த வருமானத்தையும் பெறவோ முடியவில்லை. Corriere della Sera பத்திரிகை இந்த வளாகத்தை "இத்தாலியில் ஆயிரக்கணக்கான சேரிக்களில் ஒன்று" என்று விவரித்தது. தோட்டத்தில் குறைந்தது 45 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதேபோன்ற நிலைமைகள்தான் ஜேர்மனியில் உள்ள Göttingen நகரின் உயரமான கட்டிட வளாகத்திலும் உள்ளன, அங்கு கடந்த வாரம் குறைந்தது 120 தொற்றுக்கள் கண்டறியப்பட்ட பின்னர் ஜேர்மன் பொலிஸால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பல குழந்தைகளைக் கொண்ட முழு குடும்பங்களின் குடியிருப்புகள் 19 முதல் 37 சதுர மீட்டர் வரையில் உள்ளது. இந்த நிலைமைகள், தனிமைப்படுத்தலுக்கு எதிராக குடியிருப்பாளர்களின் எதிர்ப்பை தூண்டின, அவை கலகப் பிரிவு போலீஸை நிறுத்தியதன் மூலம் அவை அடக்கப்பட்டன.

ஜேர்மனியின் அடிப்படை வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் இந்த வாரம் 2.88 ஆக உயர்ந்தது, மேற்கு மாநிலமான ரோர்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள மிகப்பெரிய இறைச்சி கூடமான Tönnies ல் பெரியளவிலான தொற்று கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அடிப்படை வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் வெஸ்ட்பாலியாவில் அதிவேகமாக பரவுகிறது என்பதைக் குறிக்கிறது. ஏழு நாள் சராசரி மறுமதிப்பீடு, இது மிகவும் நிலையாக, 1.55 ல் இருந்து 2.03 ஆக அதிகரித்ததை கண்டறிந்துள்ளது.

Tönnies இறைச்சி தொழிற்சாலை சோதனையில் குறைந்தது 1,558 தொழிலாளர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர், இது மொத்த தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானது மற்றும் வெட்டுத் துறையில் மூன்றில் இரண்டு பங்காகும். ஊழியர்கள் நிறுவனம் வழங்கிய நெருக்கடியான தங்குமிடங்களில் வாழ்கின்றனர்.

போர்ச்சுகலில், தலைநகர் லிஸ்பனில் உள்ள 24 மாவட்டங்களில் பத்தொன்பது வியாழக்கிழமை குறைந்தது ஜூலை 14 வரை பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை, சுகாதார அமைச்சகம் 311 புதிய தொற்றுக்களை உறுதிப்படுத்தியுள்ளது, அவற்றில் 80 சதவீதம் லிஸ்பனில் உள்ளன.

பிரான்சில், 13 இல் ஏழு பிராந்தியங்களில் அதிகரித்து வருகிறது, அதாவது வைரஸ் பரவுவதற்கான வீதம் துரிதப்படுத்துகிறது. Normandie, Auvergne-Rhônes-Alpes மற்றும் Occitanie, ஆகிய மூன்று பிராந்தியங்களில், சராசரி வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் அதிகமாக உள்ளது. பாரிஸை உள்ளடக்கிய Île-de-France பிராந்தியத்தில், இது 0.94 ஆகும். ஜூன் 6 முதல் 12 வரையிலான காலப்பகுதியில் தேசிய சராசரி 0.93 ஆக இருந்தது, இது ஜூன் தொடக்கத்தில் 0.88 ஆக இருந்தது.

பிரேசில் எல்லையில் உள்ள ஒரு பிரதேசமான பிரெஞ்சு கயானாவில், நிலைமை மிகவும் அப்பட்டமாக உள்ளது. மக்கள்தொகையில் 100,000 உறுப்பினர்களுக்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 308 ஆக வெடித்தது, இது ஒரு வாரத்திற்கு முன்பு 88 ஆக இருந்தது.

புதன்கிழமை, மக்ரோன் அரசாங்கம் மே 11 மறுவரையறைக்குப் பின்னர், முதலாளிகளின் செயல்பாடுகளில் மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக அறிவித்தது. தொழிலாளர் மந்திரி Muriel Pénicaud முதலாளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார், இது சக ஊழியர்களிடையே சமூக இடைவெளி தூரத்தை உறுதி செய்வதற்காக இப்போது ஒரு ஊழியருக்கு நான்கு சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கிடைக்கும்.

இந்த நான்கு சதுர மீட்டர் தேவை "வழிகாட்டி" மூலம் மாற்றப்படுகிறது, இதனால் ஊழியர்களுக்கு இடையே ஒரு மீட்டர் பிரிப்பு மட்டுமே இருக்கும். இது கட்டுப்படுத்தக்கூடியது அல்ல, பயனற்றது. ஒரு மீட்டர் தூரத்தை பராமரிக்க முடியாவிட்டால், ஊழியர்கள் முகமூடி அணிய வேண்டும் என்று புதிய பரிந்துரைகள் கூறுகின்றன. இல்லையெனில், அவர்கள் அதை அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பிரான்சில் 29,700 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே வைரஸால் இறந்துள்ளனர்.

பிரிட்டனில், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்கள் வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள், பிரதமர் பொறிஸ் ஜோன்சன் செவ்வாயன்று மீதமுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் முடிவை அறிவித்தார். பிரான்ஸைப் போலவே, சமூக இடைவெளி தூரத் தேவைகளும் இதேபோல் ஒரு மீட்டர் பிரிப்பின் அர்த்தமற்ற “ஆலோசனை” ஆல் மாற்றப்பட்டுள்ளன.

ஐரோப்பிய அரசாங்கங்களின் முழுமையாக மீண்டும் திறப்பதற்கான கொள்கையும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி" என்ற கொலைகார போலி விஞ்ஞான "தத்துவத்தை" உறுதிப்படுத்தாது செயல்படுத்துவதாகும். பெருவணிகம் மற்றும் நிதி உயரடுக்கு இலாபத்தை ஈட்டுவதில் எந்தவிதமான தடைகளும் இருக்கக்கூடாது என்பதற்காக, வைரஸின் பரவல் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்.

Loading